Monday, March 21, 2016

பகத்சிங் (அ) இன்னும் தேவை பகத் சிங்கின் சேவை ‍ கவிஞர் தணிகை

பகத்சிங் (அ) இன்னும் தேவை பகத் சிங்கின் சேவை ‍ கவிஞர் தணிகை






வெள்ளைக் கோடாரிகள்
பாரத விருட்சத்தின்
ஆணிவேரையே அசைத்து
இந்தியர்களின்
ஜீவிதத் துளிகளை
ஜீவிக்க நீரென எடுத்து
பார்த்தீனிய செடிகளாய்
வியாபித்த நேரத்தில்

இரும்பு துப்பாக்கிதனை
இரவல் வாங்கி
இந்தியாவின் இதயம் காக்க‌
மருந்து தோட்டாவின்
விருந்துக்குப் போனான்
ஓர் படித்த இளைஞன்
வெடித்து புலமை வடித்த கலைஞன்




காந்தி
அ‍ஹிம்சை ஏந்தி
வரும் முன்னே
களம் கண்டவர்கள்
சரித்திரப் பட்டியலில்
சிவப்புக் கோடிட்ட பெயர்
பகத்சிங்!

1857லிலேயே
பரிணமித்திருக்க வேண்டிய‌

வீர சுதந்திரம்
அன்று தடைப்பட்டது
தைரியமிழந்த
சுதேசி சிற்றரசர்களாலே.

அதன் பின்
எழுந்த ஆதவன்களில்
அரும்பும்போதே
அழிக்கப்பட்டவை அளவிலாதன‌
அவற்றையும் மீறி
சில வேணில் மலர்கள் மலர்ந்தன.

அவற்றில்
அடிமை எழுத்துக்களை
அகராதியிலிருந்தே
அழித்தொழிக்க
எழுந்ததுதான் பகத் குழு.

ஆதிமூலமாம் ‍ அந்த‌
செந்தழல் பந்தே
அஸ்தமனத்திற்கும்
ஆரவார எழுச்சிக்கும்
ஆங்கிலேயரின் கட்டளைக்காக‌
கட்டுண்டு கிடந்தது.

அன்று
அத்தனையும் அவர் பரப்பு
பூமிக்கே
அவர் புன்னகைதான்
நிழல் விரிப்பு

பேசுமுன்னே
நா அறுபடும் அன்று
பகத் குழு
நீதிமன்றத்திலே எறிந்த‌
வெடிகுண்டின் சத்தம்
வான்வெளிக்காற்றின்
வசதிதனைப் பெற்று
செய்தியென உலகமெலாம் எட்டியது.

அது
அகிலமெங்கும் வியாபித்த‌
ஆங்கிலேயர்க்கு
பயத்தையள்ளி அங்கமெல்லாம் கொட்டியது

அன்று பகத்குழு
சிறையிலே உண்ண நீரையும்
அனுமதிக்க விடாமல்
நீதி கேட்டு
உயிர் துறந்த போராட்டம்
உலகின் நீதி தேவனையே நிந்தித்தது.

அவன் குழு
திட்டமிட்டு சுட்ட‌
வெள்ளைத் துரையின் தலை
பறந்த போதே
வெற்றித்தாயின் சிலை
இந்தியர் விழிகளில் தெரிந்தது
சுதந்திரக் கனவு விரிந்தது
தெறித்து உறங்கிய செங்களரி
பரங்கியர்க்கு பீதியை அள்ளி சொரிந்தது.

அவனால்
தெறிக்கப் பட்ட இரத்தம்
அன்றைய‌
வெள்ளையர்களின்
கைக்கூலிகளாய்
சித்தம் கெட்டு
அசுத்தமான‌
இந்தியர்களை சுத்தப்படுத்தியது

அவன்
சிம்ம சொப்பனமாகத்தான்
தெரிந்தான்
சிறு நரிகளின் கண்களுக்கு

வெறி பிடித்த சொறி நாயை
ஆள் வலை விரித்து தேடுவதற்கு மாறாக‌
வெறி பிடித்த வேட்டை நாய்களே
ஓர் மனிதனை
தேடித் திரிந்த கதை
இங்கே நிகழ்ந்தது....

அப்போது
சொந்த வீட்டிலேயே
அவன்
அன்னியனாக்கப் பட்டான்
தன் சொந்தக் கூட்டிலேயே
அவன் சிறகுகள் சிதைக்கப் பட்டான்

தன்
சொந்த நாட்டிலேயே
வெந்து
வேடங்கள் புனைந்து திரிந்தான்

அவன்
தூக்கிலே தொங்கவில்லை
வெறும் உடல்தான் அதில் தங்கியது

அவனுக்குப் பின்
எழுந்த வீரர்களின்
பாதையெங்குமே
அவன் இருந்தான்,இருக்கிறான்...

இன்றைய பாஷையில் சொன்னால்
அவன் ஒரு நக்சலைட்....
இல்லை
உண்மையில் அவர் ஒரு ரியலிஸ்ட்.

அவனுக்குப் பின்
எத்தனையோ பகத்சிங்குகள்
காந்தியின் கைப்பாவைகளாக்கப்பட்டார்கள்.

அ‍ஹிம்ஸை
அப்போது
வெற்றித் தட்டேந்தியது
ஆனால் இன்றோ அவலமாக இருக்கிறது

மீண்டு வரும்
"காந்தியை"
அடையாளம்
கண்டு கொள்ளுமுன்

அணியணியாய் பகத் சிங்குகள்
எழுந்து வர வேண்டிய‌
அவசியங்கள்
இங்கு நேர்ந்திருக்கிறது

அன்றைய‌
வெள்ளை மதயானைகளுக்குப் பதிலாக
இன்றைய‌
அரசியல் கழுதைகள்
ஆடுகின்ற ஆட்டத்தால்......

அவன் நினைவோடு தூய சிந்தையுடன்
இளம் பகத்சிங்குகளே
நீங்கள் துளிர் விடுங்கள்

எதிர்காலத் துயர் துடையுங்கள்.




மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

இந்தக் கவிதை 1980 களில் அதாவது எனது இருபது வயதுவாக்கில் எழுதப்பட்டது. 1990 ‍ 91ல் மறுபடியும் பூக்கும் என்ற கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றது. இது ஒரு கம்யூனிஸ்ட் மேடையில் பகத் சிங்க் பிறந்த நாளில் அரங்கேறிய கவிதை.இன்றும் பொருந்துகிறது. என்றும் பொருந்தும்.

பகத் சிங்க், ராஜ குரு, சுக்தேவ் மூன்று பேரையும் 1931ல் மார்ச்‍ 23ல் தூக்கிலிட்டனர். காந்தி மகாத்மா ஒரு சொல் சொல்லியிருந்தால் பகத்சிங்க் தூக்கு நிகழ்ந்திருக்காது என்றெல்லாம் விவாதிப்பார் உண்டு. காந்தி ஏன் அதை தடுத்து சொல்லவில்லை என்று எனக்குத் தெரியவில்லை என்ற போதிலும் அதை பகத் சிங் விரும்பியிருக்க மாட்டார் என்றே தோன்றுகிறது.

சுமார் 23 ஆண்டுகள் 6 மாதம் மட்டுமே இந்த மண்ணில் வாழ்ந்த இளைஞர் ஒருவருக்கு அவர் மறைந்து 85 ஆண்டுகள் ஆன பின்னும் நினைவோட்டம் இருக்கிறது. சரியாக 24 வயது கூட நிறையாத இந்த மண்ணின் மைந்தனுக்கும் அவன் தோழருக்கும் அஞ்சலி செலுத்த இந்தக் கவிதை இன்று எமது விழிப்பூவில் இடம் பெறுகிறது.

எனக்கும் அவருக்கும்/அவர்களுக்கும் ஒரு பந்தம் அவர்களின் நினைவு நாளில்  அடுத்த 31 ஆண்டு கழித்து 1962 மார்ச் 23ல் நான் பிறந்திருக்கிறேன்.எனவே எனது பிறப்பையும் அவர்களின் இறப்பையும் ஏனோ என் நெஞ்சம் முடிச்சிட்டுக் கொள்கிறது.

எனது ஒவ்வொரு பிறந்த நாள் வரும்போதும் அவர்கள் தியாகத்திருநாளை இறந்த நாளை நினைவு நாளை எண்ணி இறும்பூதுயெய்துகிறேன்.

இந்த மண்ணின் உண்மையான மைந்தர்களுக்கு எனது உயிர் தீபத்தின் ஆழ்ந்த சுடர் அஞ்சலிகள்...

மேல் சொன்ன கவிதையில் வெள்ளையர் என்று வரும் இடமெல்லாம் இன்றைய கொள்ளையர் அரசியல் நொள்ளையர் என மாற்றிக் கொண்டும் படிக்கலாம், எனவே அவன் போன்ற இளைஞர்களின் சேவை, தேவை இன்றும், என்றும், எதிர்காலத்திலுமே தேவை என்பது உண்மைதானே?

காப்பி/ அவர்களைப் போலவே செய்வதை காப்பி அடிப்பது அல்லது நகல் மாதிரி என்று சொல்லலாம். காந்தி, கலாம், அன்னை தெரஸா, பகத் சிங் போன்ற மனிதர்களி காப்பியடிக்கும்படியான மனிதர்கள் எல்லாம் இந்த மண்ணிற்கு இன்னும் வேண்டும் என பெரிதும் விரும்புகிறேன்.



   உங்களின் கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment