Tuesday, February 3, 2026

சாமி யார் அம்மா? சாமியாரம்மா: கவிஞர் தணிகை

 சாமி யார் அம்மா? சாமியாரம்மா: கவிஞர் தணிகை



எனது அன்பு வாசகர்களுக்கும் அன்பர்களுக்கும், நண்பர்களுக்கும் இன்று நான் எடுத்துக்  கொண்டிருக்கும் கருப் பொருள் மகா நுட்பமனது நுட்பமானது, நுணுக்கமானது ஏன் சிக்கலானதும் கூட. எனவே சற்று கூடுதலான கவனம் தேவை இதைப் படித்துப் பரிசீலிப்பதற்கு.


கடவுள் இல்லை என்பாரிலும் கடவுள் உண்டு என்பாரிலும் எவ்வளவோ சக்தி புதைந்து கிடைக்கிறது என்பது  மறுக்க முடியா உண்மை.


நான் இல்லை அடியேன் சிறுவனாக இருந்த போதிருந்து பார்த்து அனுபவித்து ருசித்த அனுபவத்தையே இந்தப் பதிவில் தருகிறேன். இதற்கும் முன்பே வேறோ எங்கோ தந்திருப்பதாகவும் நினைவு.இருந்தாலும் இன்று அதை மறுபடியும் தருவதால் எவர்க்காவது பயன்படும் என்ற நோக்கம் உண்டு.


பொதுவாகவே வானொலியில், தொலைக்காட்சியில் மின்பொருளாய் இருக்கும் ட்ரான்ஸ்மீட்டர் வழியே நமக்கு வேண்டும் அல்லது வேண்டாத அலைநீளத்தின் வழியே செய்திகளை, காட்சிகளை ஒலி, ஒளியாகப் பெற்று வருவது அனைவரும் அறிந்ததே. அதே போல் இன்றைய செல்பேசிகள், செயலிகள்,செயற்கை நுண்ணறிவு(ஆர்ட்டிபிசியல் இன்டலிஜென்ஸ் ஏ ஐ) அதே நிலை அதை விட அதிக சக்தியுடன் மனித மூளைக்கும் உண்டு அதை பண்படுத்தி பயன்படுத்திப் பார்ப்பதில் தான் வேறுபாடு. சிலர் அதை ஆன்மீகம் , மனோசக்தி என்றே சொல்ல, சிலர் பலர் அதை பக்தி, மதம் என்று சொல்லி வருவதும் உண்டு. மனோ வேகம் வாயு வேகம் என்பார்களே கேள்விப்பட்டதுண்டா?


மற்ற உயிர்களை விட மனிதர்க்கு நீண்ட காலம் நோய் நொடியின்றி வாழ வேண்டும் உடல் அதனுள் உறையும் உயிர் எப்போதும் வேண்டும் என்ற பேரவா உண்டு.எனவே அறிவியல், ஆன்மீகம் வழித் தேடல் உண்டு கொண்டு தொடர்ந்தபடி...அதி மன உணர்வு, அடி மன உணர்வு, உள்ளுணர்வு என படிமங்கள் நினைவாற்றலாய் சேமித்து வருவதாகவும் அதில் உள்ளுணர்வை ஆன்மா தொட்ட பிறகு அந்த உடலின் உயிருக்கு நிறைய வாழ்வின் வழிகாட்டல்கள் உள்ளதாகவும் அறிவியலும் ஆன்மீகமும் சொல்லி ஏற்றுக் கொள்கின்றன.


எங்கள் ஊர் அருகே இராமன் நகரில் அந்த சாமியாரம்மா அருள் வாக்கு சொல்வதை அனுபவித்து இருக்கிறேன். இப்போது அவர்கள் இல்லை என்றாலும் அவர் பாடிய பாடல்கள் இன்றும் என் காதுகளில் கணீரென ஒலித்தபடியே  அந்தக் காட்சிகளும் விரிந்த படியே இருக்கின்றன.


சத்தி சங்கர, சத்தி சங்கர, வேலு முருகனும் வேலு முருகனும், வேலாயுத பண்டிதனும் வேலுமுருகனும்,...நீதி அழியாது, நிச்சயம் தவறாது, கோடு தவறாது, குறிப்பு தவறாது , கட்டு தவறாது, கணக்கு தவறாது, பள்ளிகர தேசத்திலே பள்ளி கொண்டிருக்கும் பட்சம் கள்ளி கர நாட்டிலே கதறிக் கொண்டிருக்கும் பட்சம்,நம்புறவனுக்கு நடராஜன் நடராஜந்தான்,கண்ணே, நம்பாதவனுக்கு யமன் ஒரு தூதுவன் தான்...யமன் ஒரு தூது வந்தான்...என தீப்பந்தம் ஒன்றை எரியும் குத்து விளக்கின் நல்லெண்ணயில் தோய்த்து வாயில் வைத்து 3 முறை செய்து வித்தை போல விதியைச் சொல்லும் விதியைக் கொல்லும் நல்ல சொல்லும்...


அப்பப்பா, அம்மமா சொல்லி மாளாது அதன் முகத்தின் அப்போதைய‌ தேஜஸை அப்போது அந்த சாதாரணமான டிபிகல் கவுண்டச்சியிடம்.க்ளுக் என ஒரு சிரிப்பு சிரிக்கும் பாருங்கள் அதில் தெய்வத்தைக் காணலாம். வாக்கு கேட்க முதலிலேயே போய்விட வேண்டும்.இல்லை தாமதமகும் போது அல்லது நேரம் கடக்கும் போது வேறுபாடு இருப்பதாக எங்கள் வீடுகளில் சொல்வார்.அப்படியானால் அந்த சக்தி கொஞ்ச நேரம் மட்டுமே இருக்கும் அதிக நேரம் நீடித்து இருப்பதில்லை என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியதாகிறது. தெய்வம் காட்டும் ஊட்டாது என்ற சொல்லுக்கேற்ப.


நான் அதற்கு பிடித்த சிறுவன், விருப்பத்துடன் அந்த சாமியாரம்மா, அது பூ மரம் எனச் சொல்லும் அவரது கணவர் வெங்கடாஜலம் என்னும் பெரியவர் அவருக்கு எல்லாம் சிறு சிறு பணி செய்து அந்த அறைக்கே செல்லும் உரிமை பெற்றதுண்டு...வேறு யாரும் அத்தனை சீக்கிரம் அந்த அறையில் காலடி எடுத்து வைக்க முடியாது. ஒரு புறம் முருகன் சிலை, இன்னொரு புறம் வேங்கடமுடையோன் இரு பக்கங்களிலும் வெள்ளிப் பிரம்புகள், வெள்ளி வேல்கள் இப்படி  இவரிடம் வரும் பக்தர்கள் கொடுத்த காணிக்கைப் பொருட்கள்.யாரையும் எப்போதுமே காணிக்கை எனக் கேட்டதே இல்லை.அவரவர் மனமுவந்து செய்ததை ஏற்றுக் கொண்டதுண்டு. ஊரின் மிகப் பெரிய பிரபலங்கள்கூட வந்திருந்ததைப் பார்த்ததுண்டு.


ப்யூச்சர் அவுட்லுக் FUTURE OUTLOOK,விஷன்  VISION தொலை நோக்குப் பார்வைஎன்றெல்லாம் சொல்வது போல பல காலம் கடந்து நடக்க இருப்பதை முன் கூட்டியே சொல்லும் ஆற்றல் அதை கருத்தாழி சொல்லுகிறேன், கட்டும் உண்டு போடுகிறேன், தடமும் உண்டு ஓட்டுகிறேன் வழியும் உண்டு காட்டுகிறேன்...அந்தப் படிக்காத பாமர விவசாயக் குடும்பத்தில் பிறந்த அந்தப் பெண்ணிடம் என்ன ஒரு வார்த்தை பாருங்கள்: கருத்தாழி, சுனாமியை ஆழிப் பேரலை என்பது போல கடலுள் ஆழ் கடலுள்,ஆழ் கடல் வாழ்வில் கிடக்கும் ஒரு கருத்து முத்தை கொண்டு வந்து கொடுக்கும் ஆற்றல்... நாளுக்கு, நாள், தேதி, எனச் சொல்லி விரல்களில் எண்ணி ஒரு முடிவைச் சொல்லும்...அவை தவறாது... புதன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் வாக்கு சொல்லும்.திங்களும் உண்டா என மறந்து விட்டது. 

3 பிரிவாய் வாக்கு சொல்லும். முன் பின் வந்தார் அதற்கே நன்கும் தெரியும் அழைத்து சொல்லும், 1.ஒன்று நடந்து விடும் என்று சொல்லும்2. இரண்டு முய‌ற்சி செய் அல்லது நாள் பட நடக்கும் என்று சொல்லும் வழியும் சொல்லும், 3.மூன்று நடக்கவே நடக்காது வேண்டாம் விட்டு விடு என்று சொல்லி கருத்தை விட்டு விடச்  சொல்லும்.அதற்கு அந்த வாயுள் 3 முறை சென்று வரும் எண்ணெய்த் தீப்பந்தம் அணைந்தோ எரிந்தோ வழி காட்டும்,எப்போதோ நடக்க இருப்பதை அப்போது பிட்டு பிட்டு வைத்து விடும் நல்லதோ கெட்டதோ என அறிய வழிகாட்டும்.


எங்கள் குடும்பம் அவர்களுடன் மிக நெருக்கமுடையதானது. எனது தாய் தெய்வா(னை)யும் அந்த அம்மாவும் மிக நெருக்கமான நட்பில் நனி சிறந்தார்.


அங்கு வந்து தீர்க்க முடியா பிணிகளை வெறும் மந்திரித்த திருநீறு எலுமிச்சம் பழங்களை வைத்தே தீர்த்த நிலைகளும் உண்டு....பேய் பிடித்தவர்களை ஓட்டி அவர்கள் முடியை எடுத்து அந்த வீட்டின் முன் இருந்த பெரிய புளிய மரத்தில் வைத்து கட்டியதும் உண்டு அதை எல்லாம் நான் கண் கூடாக கண்டிருக்கிறேன். அந்த இடத்துக்கு வந்து அமர்ந்த நிலையிலேயே இது போன்ற துர்சக்திகள் தங்களை வெளிப்படுத்தியதயும் கண்டிருக்கிறேன்.


இதன் நீளம் அதிகம்... எனக்கென்னா கேள்வி எனில்:முருகன் வெங்கடாஜலபதி என இரண்டு கடவுளா?சரி விட்டு விடுங்கள்


திருப்பதி, திருவண்ணாமலை, பழநி,ஏன் எங்கள் ஊர் நாங்கள் செய்த கபாலீஸ்வரர் ஆலயம்,எங்கள் வீட்டு பிரார்த்தனை அறை, தியான அறை, குளியல் அறை,திருவரங்கம்,சேலம் கேம்ப் பேருந்து நிலையம் இப்படி எல்லா இடங்களிலும் ஆன்மீக வழிகாட்டலை அடியேன் உணர்ந்திருக்கிறேன்.இது 40 ஆண்டுக்கும் மேலாக தியானப் பயிற்சியில் ஈடுபட்டதற்கான பரிசு. இதை சுமார் 10 ஆண்டுகளுக்கும் பின்பிருந்து பெற ஆரம்பித்திருந்தேன். ஒலியற்ற வார்த்தைகள். எனது கணிப்பு சரியாக இருந்தால் கடவுள் சக்தி என்பது எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பது அதை ஒரு சரியான அலை நீளத்தைப் பயன்படுத்தி நாமும், எவரும் , யாரும் பெற முடியும்.அதற்கு உடல் ஒரு கருவி, உயிர் ஒரு ஆன்மாவை அறியும் முயற்சியில் நமக்கு கிடைத்த பரிசு.OMNI POTENT OMNI PRESENT.

அகம் ப்ரம்மாஸ்மி

இங்கு அறிவியல் அண்டப் பெருவெளி, பிரபஞ்சம், கோள்கள், புவி, விண்மீன்கள்,கருந்துளை,ஆகாயம் அதன் துளிகள் இப்படி எல்லாம் விரிக்கும் போது மனிதம் ஒரு சிறு கூறு அது அதற்கே செய்து கொள்ளும் ஒரு சமாச்சாரமே இவை எல்லாம். மற்றபடி விண்ணளந்த ஆற்றல் ஏதுமில்லை


இது போன்ற கொடுப்பினையை வைத்த சிலர் அதை வேறு வழிகளில் கொண்டு செல்கிறார்கள், சிலர் நாம் தாம் பெரியவர் வேறு யாவருமே ஒன்றும் அறியாதார், அல்லது பிறர் யாவருமே தவறான ஆட்கள், நாம் ஒருவர் செய்வதுதான் சரியானது என தப்புக் கணக்கில் வாழ்ந்து வருவதையும் நான் கண்டு வருகிறேன்.


இது ஒரு ஆய்வுக்குரிய கருப்பொருள்.... நகைப்பிற்கிடமின்றி ஆராய்ந்து பாருங்கள் நன்றி வணக்கம்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.




Monday, February 2, 2026

A.P . RAAJA .A.P. ராஜா : கவிஞர் தணிகை

 A.P. ராஜா : கவிஞர் தணிகை



ஒவ்வொருவருள்ளும் ஒரு நாயகன், நாயகி இருக்கிறார். அதை கண்டு கொண்டால் அவர் வீழ்வதில்லை.கடந்த 40 ஆண்டுக்கும் மேலாக மாலையில் நடைப் பயிற்சியில் 7 கி.மீ கிராமப் புறத்தில் நடந்து வருபவனான எனக்கு ஒரு புது நபர் அறிமுகமானார். அவர் கடந்த கோவிட் 2019 முதல் தமது நடைப் பயிற்சியை துவக்கி உள்ளதாகவும்,காலையிலும் சுமார் 5 கி.மீ செல்வதாகவும் அறிந்தேன். நமது தெரிதல், அறிதல், புரிதல்,உணர்தல் தத்துவம் இவருடன் பயணம் செய்வதாக அமைந்து விட்டது நாளடைவில்.


யார்ரா இது?, நமக்கே சவால் விடுகிற மாதிரி ஒட்டுப் பள்ளம் வந்து திரும்புகிறாரே,தினமும் நமக்கு முன்னரே வந்து செல்கிறாரே நம்மை விட வயது மூத்தவராகவும் இருக்கிறாரே எனப் பார்த்தால் அவரைப் பற்றி பகிர்ந்து கொள்ள நிறைய இருக்கிறது. சற்று பொறுமையாக உற்று கவனித்து படித்துப் பாருங்கள்.


இந்த A.P.ராஜா அப்பாண்ட ராஜா, முதல் முதலாக இந்தப் பேரைக் கேள்விப்பட்ட உடன் தமிழ் அகராதியில் பேருக்கு என்ன பொருள் பார்த்தால் அப்பு நீர் அதை ஆண்ட ராஜா என்றால் பாற்கடலில் பள்ளி கொண்ட திருமால் அல்லது பெருமாள் என்ற பெயர்க் காரணம் வருகிறது என்பதை பகிர்ந்து கொண்டேன் இவ்வளவு நாளும் அதை எல்லாம் அறியாதிருந்தேன் என்றார். தெரிந்தது தெரியாதது என அப்பட்டமாக சொல்லிக் கொள்ளும் ஒரு சிறு குழந்தை இந்த 71 வயது மனிதர்.எல்லாரிடமும் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதை விரும்புகிறார்,ஏதோ ஒரு பேச்சை மூலமாக வைத்து அனைவரையும் சுற்றமாக அமைத்துக் கொள்ள விரும்புகிறார், உங்களால் தாம் அனைவரிடமும் பேசி வருகிறேன், முன்பெல்லாம் எவரிடமும் பேசவே மாட்டேன் என்பார். யாரிடமாவது பேசி விட்டால் போதும் அவர் யார், இவர் யார், எப்படி என விவரம் அறியாமல் விடமாட்டார்.


சரி விடயத்துக்கு வருவோம், பீடிகை முன்னுரை போதும்.இந்த மனிதர் ஒரு ஓய்வு பெற்ற இராணுவ வீரர் , மெட்ராஸ் ரெஜிமென்ட் என்று பெருமையாகச் சொல்வார்,ஆந்திரா வெள்ளத்தின் போது பல நாட்கள் சாப்பிடவே முடியாது அவ்வளவு கொடுமை ரயிலில் ரயிலுடன் மூழ்கியிருந்த பிணங்களை மீட்டோம், மீட்பு பணி எல்லாம் நிறைய செய்தோம் , இப்படி ஆரம்பிக்கும் இவருடைய கதை இந்திய‌ இலங்கை அமைதிப் படையில் 2 ஆண்டுகள் பணி புரிந்து உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு மீண்ட கதை, நாயை விரும்பி உண்ணும் நாகாலாந்து கதை,ஹைதராபாத் பணிக்காலம், பனிச்சிகரமான லே ...லடாக் பனிக் காலம், மூச்சு விடவே சிரமமான காலம், குளிக்காத காலம், சூடான தேநீர் உறை காலம் இப்படி இந்தியாவெங்கும் பயணம்.


 இவரை இலங்கையில் ஒரு முறை மொழிபெயர்ப்பாளர் என்பதற்காக ஒரு மொழி பெயர்ப்பு வேண்டி தனியாக ஹெலிகாப்டரில் வந்து அழைத்துச் சென்ற இராணுவப் பெருமை, அப்போது மொழிபெயர்க்கும் போது சிக்கிக் கொண்ட மனிதரைப் பார்த்து சிரித்துவிட்டால் நாமும் மாட்டிக் கொள்ள வேண்டியதுதான் என்ற விவரம்...


இந்தக் கதைக்கெல்லாம் மயங்குவோம் என்றா நினைத்தீர்கள்? இது போல வரலாறுதாம் நமக்குத் தெரியுமே, என்றால் அங்கு தான் வருகிறார் சிறுவன் அப்பாண்ட ராஜா. நிறைய பேர் அடங்கிய பெரிய‌ குடும்பத்தில் ஒரு கீழ் நிலை அரசுப் பணியில் இருந்த இவரது தந்தை எப்போதும் காரணமின்றியே இவரை தினமும் நையப் புடைத்து விட்ட கதையில் நமக்கும் இவரது தந்தை மேல் கோபம் வரும் அந்த சிறு குழந்தையை எதற்கய்யா அப்படி அடித்தீர் என,இதில் இராமலிங்க வள்ளலார் பக்தர் வேறாம், என்ன பண்றது அப்பன் குடுத்த மூஞ்சி என குணாவில் குணா பாத்திரம் சொல்லி சொல்லி சுற்றி வருமே அப்படி...ஆனால் கேட்காவிட்டாலும் அந்த உடல் நிறம் எல்லாம் அங்கிருந்து இவருக்கு வந்ததுதானே. அது மட்டுமல்ல சரியான துணி மணிகள் செருப்பு கூட இல்லாமல் அந்தச் சிறுவன் மேச்சேரி அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதி வரைப் படித்து தேறி, அதன் பின் மளிகைக் கடையில் பொட்டலம் மடித்துத் தரும் பணியைச் செய்து வந்திருக்கிறார்  சில ஆண்டுகள்... 


இதெல்லாம் கூட கிளைமாக்ஸ் இல்லை, நம்ம கதையில்...மனிதர் மதுவுக்கு அடிமையாக இருந்து உடல் நலம் கெட்டு அதன் பின் அதன் தீமையை நமது தத்துவப் படி தாமே தானே தெரிந்து, அறிந்து, புரிந்து , உணர்ந்து அதிலிருந்து மீண்டு ஒரு துளிகூட நுகராமல் மீண்டு பல ஆண்டுகளாக வாழ்ந்து வருவதுடன் அசைவை உணவைக் கூடத் தவிர்த்து விட்டார் மேலும் உடற்பயிற்சியின் மூலம் சிறு மெல் ஓட்டம் மூலம் ஊதிப் பருத்து வந்த தனது உடலையும் கட்டுக்குக் கொண்டு வந்துள்ளார்...இந்தப் படிதான் எனை இவருடன் சேர்த்துள்ளது.


இந்த சில பல ஆண்டுகளாகவே  நன்றாக அனுபவித்து வாழ்ந்து வருகிறேன் எங்கு பார்த்தாலும் என்னை அடித்து நொறுக்கினார்கள், சிறுவயதில் அப்பா,அதன் பின் இராணுவத்தில், அதன் பின் குடும்ப நிகழ்வுக்கான பிரச்சனையில் சமூகம் இப்படி இந்த உடல் வாங்காத அடி இவ்வளவு அவ்வளவு என்று இல்லை என தமது துன்பியலை படம் பிடித்துக் காட்டுவார்.

மொத்தத்தில் மனிதர் இப்போ ரொம்ப ஜாலி இல்லாத சிறு அப்பியிருக்கும் பின் மண்டை முடிக்கும், நரை விழுந்த மீசைக்கும் டை அடித்துக் கொண்டு தினமும் முகச் சவரம் மற்றும் அடிக்கடி முடித் திருத்தம் செய்து கொண்டு விதவிதமான ஆடை அணிகலன்கள் நிறைய காலணிகள் என மாற்றி மாற்றி தினமும் ஒன்றை அணிந்து கொண்டு நடைப் பயிற்சியே ஒரு தவமாக‌ உண்மையிலேயே ராஜாவாக , நான் அவருக்கு அனுப்பும் செய்திகளை பிறர்க்கு அனுப்பும் பார்வேட் Forward Raajaa  ராஜாவாக,அனைவர்க்கும் தம்மால் ஆன உதவிகளைச் செய்யும் மூத்தவராக, ஜோதிடக் கலை எனை 60 வயதுகளிலேயே இறந்து விடுவேன் என்றது ஆனால் நானோ 71 வயதில் 12 கி.மீ தினமும் நடைப் பயிற்சி செய்து வருகிறேன் என்கிறார்.


இரு சக்கர வாகனத்தில் தமது அரசு ஆசிரியரான துணைவியாரை தினமும் பேருந்து நிறுத்தத்திற்கு அழைத்துச் செல்வதிலிருந்து நிறைய குடும்ப பொறுப்புகள்,மகனையும், மகளையும் நல்நிலையில் நிலை நிறுத்த பாடுபட்ட கதைகளையும் சொல்வார், தாம் இராணுவ ஓய்வு பெற்றவுடன் ஒசூரில் டி.வி.எஸ் பணி புரிந்த  கதை இப்படி இவரைப் பற்றிச் சொல்லச் சொல்ல கதை விரியும் .

 ஒரு பதிவு செய்து பகிர வேண்டிய ஒரு தாமே ஒரு தீய பழக்கத்திலிருந்து மீண்டு பாடுபட்டு அனைவர்க்கும் வாழ்வின் முன் மாதிரியான ஒரு மனிதர் அவரை எனது நடைப்பயிற்சியில் தோழமையாக பெற்றமை இயற்கை செய்த லீலை, மேலும் நடைப் பயிற்சியில் சரியான நேரம் காப்பாளராக இருக்கிறார், மேலும் வராமல் போகும் போது அன்று வரமாட்டேன் என பள்ளிகளில் லீவ் லெட்டர் கொடுப்பது போல (ஐம் சவ்வ்ரிங் ப்ரம் பீவர் சோ ஐ அம் அனேபிள் டு அட்டன்ட் தி வாக்கிங்...என்று தவறாமல் தகவல் கொடுத்தும் விடுவார்),


எப்போது வேண்டுமானலும் திமிறிச் செல்லும் ஒரு அடங்காத கரைக்கடங்காத நதியாய் இருந்த எனக்கு ஒரு வரம்புக்குள் வர, உங்களுடையதும் உடல் தாம் , நேரம் காலம் பாதுகாப்பு அனைவர்க்கும் வேண்டிய காலம் இது எனச் சொல்லாமல் சொல்லி என்னுடன் பயணம் வந்து கொண்டிருக்கும் இந்த மனிதரை உங்களுக்கும் இன்று அறிமுகப் படுத்தி விட்டேன். நன்றி வணக்கம்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.




Sunday, February 1, 2026

வேணு வேலாயுதம்: கவிஞர் தணிகை

 வேணு வேலாயுதம்: கவிஞர் தணிகை



என் தம்பி வேலாயுதம்


வாணியம்பாடி, திருப்பத்தூர் பக்கம் இருந்து மின்சார அலுவலகத்தில் பணி புரிய பிட்டர் (பொருத்துநர்) வேணு மாறுதலாகி வந்து பக்கத்து வீடுகளில் பல ஆண்டுகளாக குடி இருந்தார். அரைக்கால் சட்டையுடன் வெற்றிலை பாக்கு போட்டுக் கொண்டு வாயில் குதப்பியபடியே இருக்கும் நெடிய ஒடிசலான சற்று கூன் விழுந்த உருவம்  4 பெண்கள், ஒரு ஆண்.அந்த ஆண் குழந்தைதான் வேலாயுதம்.


குழந்தை முதலே அவனைப் பார்த்திருக்கிறேன். அந்தப் பிள்ளைகளிடம் சென்று எங்கே அம்மா அல்லது அப்பா? என்று கேட்டால்  "டாக்டர்கட்டிக்கிட்ட" போய் இருக்காங்க என்று மழலையில் சரியாகத் தமிழே தெரியாமல் சொல்வார்கள் அதைக் கேட்டு சிரிக்கவே நாங்கள் கேட்டுப் பார்த்தது இன்றும் என் நினைவில்.


தாயகரம் ஆடுவோம் சளைக்காமல்,ஒரு முறை அவர்(வேணு) தவறாக ஆடிவிட்டு நான் சிறுவனாக இருந்தாலும் எப்போதும் நியாயத்தை பறை சாற்றி வருபவன் என்பதால் அதை சுட்டிக் காட்டி அவர் ஏமாற்றி ஆடுகிறார் என்பதை வெளிப்படுத்தி விட்ட  காரணத்தால் ‍ஆதலால் வேணு எனை சிறுவனான என்னை அடித்துவிட்டார், அப்போதிருந்து நான் அந்த ம‌னித‌ரிடம் பேசவேயில்லை அவர் வாழ்நாள் இறுதி வரை. ஆனால் அந்தக் குடும்பம் எமக்கு மிக நெருக்கம்.


அப்போதெல்லாம் பள்ளி இறுதித் தேர்வுக்கு கட்டணம் உண்டு. எங்க வீட்டு பெரிய புடுங்கிக்கு கட்டணம் கட்ட வழி இல்லாமல் என் தாய் அவருடைய  கொழுத்த கொழுந்த‌ நாறிடம் சென்று கடன் கேட்க அப்போது பிள்ளையில்லாத அவரோ  ஊரறிந்த அடகு கடை நடத்தியவர் பெரிய குடும்பத்துக்குத் தாயான அண்ணிக்கு பணம் தர மறுக்கும் காரணத்துடன் "அடகுக்கு ஏதாவது பொருள் இருக்கிறதா? என்று கேட்க வெறுத்துப் போன எங்கள் தாயிடம் ஆறுதலாக வேணு "அம்மா இதுக்கு ஏம்மா கவலைப் படறீங்க? என்னிடம் 3 பவுனில் செயின் இருக்கிறது (அப்போதெல்லாம் தங்கம் பெரிய விலை எல்லாம் இல்லை ஆனால் அதற்குண்டான மதிப்பு இருந்தது) அதை அடகு வைத்து எனக்கும் கொஞ்சம் பணத் தேவை இருக்கிறது இருவரும் வாங்கிக் கொள்ளலாம் பின்னால் மீட்டுக் கொள்ளலாம் " என்று சொல்லி வாங்கிக் கொடுத்து எங்க வீட்டு சிக்கலைத் தீர்த்து முதல் ஏர் முன் ஏர் தேர்வு எழுத வழி காட்டிய சம்பவம் உண்டு.


இதை ஏன் குறிப்பிடுகிறேன் எனில், இயல்பாகவே அவன் இரத்தத்தில் பிறர்க்கு உதவும் குணம் உண்டு. அவன் எனச் சொல்லும் நிலை கடந்து ஊர் உலகுக்கு இப்போது அவர் ஆகிவிட்டார். எனவே நாமும் அவர் என்றே இந்தப் பதிவில் குறிப்பிட்டாக வேண்டும் இனி அந்த வயது வந்து விட்டது...நிறைய பேருக்கு நிறைய உதவிகள் அதை எல்லாம் சொல்ல இந்தப் பதிவு இடம் கொடுக்காது. சுருங்கச் சொல்ல வேண்டி: பரந்த மனது உதவிடும் ஈர நிலம்.


 வேலாயுதத்துக்கு இரண்டு பெண்கள் சிறந்த அறிவு ஆற்றலோடு படித்து பட்டம் பெற்று பணி, படிப்பு என்று பெருமை பெற வைத்துள்ள இவர் இந்த வட்டார தொழிற்சங்க செயலராகவும் இருந்து பல ஆண்டுகளாக அனைவர்க்கும் நல்லுதவி புரிந்திருக்கிறார்.


இப்போதும் பணியில் பல உயர்வுகள் பெற்று சேவையில் தொடர்கிறார் ஒரு கட்சிப் பிரமுகராகவும் விளங்கி வருகிறார்.அனைவரிடமும் பண்புடன் பாசத்துடனும் நடந்து கொள்பவர். வெகு ஜனத் தொடர்பு அதிகம். நான் ஏதாவது விவரம்  வேண்டுமெனில் இவரிடம் எப்போதும் உரிமையுடன் எங்கிருந்தாலும் அழைத்து கேட்பதுண்டு.இப்போது பெரிய பொறுப்பான மின் ஊழியராக இருந்த போதும் எப்போதும் ஒரே மாதிரியான குணத்தை வெளிப்படுத்தும் நல்ல மனிதர் மேலும் நாம் உயர்ந்து விட்டிருக்கிறோம் என்ற வெட்டி பந்தா எப்போதும் இவருக்குள் வருவதே இல்லை. அலட்டிக் கொள்ள மாட்டார்.


பொருளாதாரத்தில் எத்தனை ஏற்றத் தாழ்வுகள் கண்ட போதும் வந்த போதும் மனிதம் மனிதாபிமானம் அதற்கும் மேல் என்று வாழ்ந்து காட்டி வரும்  நல் மனிதத்தின் அடையாளம். பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ இந்த சகோதரனை இந்தப் பதிவின் மூலம் வாழ்த்து சொல்லிப் பெருமைப் படுகிறேன். நன்றி என்றும் உரித்தாகட்டும்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


Saturday, January 31, 2026

S.N.ராஜன்: கவிஞர் தணிகை

 நான‌றிந்த‌ எஸ்.என். ராஜன்: கவிஞர் தணிகை



ஜனவரி 30 காந்தி அமரத்துவ தினம் என்று தினசரி நாட்காட்டிகள் குறிப்பிட்டிருந்தன, சிரிப்புதான் வந்தது, ஏன் எனில் இயல்பாக அமரராகவேண்டிய வயதான ஒருவரை சுட்டுக் கொன்று போட்டு விட்டு இப்போது வணங்கிக் கொண்டு அமரத்துவ தினம் என்கிறார்களே என்று.


இந்த எஸ்.என் ராஜன் போன்ற சிலர் இன்னும் இருக்கிறார்கள், காந்தி மற்றும் காமராசர் பேர்களை உண்மையாகவே மறவாமல் காங்கிரஸ் கட்சியில், இரண்டு பேர் சேர்ந்தாலும் சரி, இருபது, இருநூறு, இரண்டாயிரம் பேர் ஆனாலும் சரி கொடியைக் கையில் பிடித்துக் கொண்டு பொது இடத்தில் அதற்குரிய அஞ்சலிகளை செய்தபடி...


வருடம் பிறந்தவுடன் தினசரி நாட்காட்டியை எடுத்துக் கொண்டு வீடு வீடாக சென்று கொடுத்து வருகிறார். இவர் பற்றி பதிவு செய்ய வேண்டிய அவசியம் ஏன் எனில், மிதமாக அமைதியாகப் பேசிடும் ஒரு செயல்வீரர் இயல்பில் நல்லவர்.


ஒரு காரியத்தை எடுத்துக் கொண்டால் அதை முடிக்காமல் விடக் கூடாது என்ற வீரியம் மிக்க காந்தியவாதி.இவரது முயற்சி புதுசாம்பள்ளி ஊரில் இடம்பெற்ற உதவி மின்பொறியாளர் அலுவலகம் அமைந்ததில் பெரும் பங்கு இருப்பதை எவருமே மறுப்பதற்கில்லாமல். அதற்காக இவர் அடி கூட வாங்கியது எல்லாம் மறக்க முடியாதது.


சில முறை வார்டு பிரதிநிதியாக மக்களால் தேர்வு பெற்று இருந்திருக்கிறார், இம்முறை வென்றிருந்தால் உதவிப் பெரும் தலைவராகவும் வந்திருக்கலாம் என்ற வாய்ப்பில் இருந்தவர்.நல்லதுக்கும் நல்லவர்களுக்கு எல்லாம் காலம் இல்லை என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 


இவரது துணைவியார் ஆசிரியராக இருந்தவர், எனது நூலை விரும்பி வாங்கிப் படித்து அது  அது பற்றி பேசுவதில் நாட்டமுடையவராக இருந்தவர். உண்மையிலேயே ஒரு நல் ஆசிரியராக ஒரு அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் பணி செய்தார். இப்போது இல்லை. பல ஆண்டுகள் ஓடிவிட்டன. கோவிலுக்கு சென்றபோது விஷப் பாம்பு தீண்டிவிட அரசு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் இறந்து விடுவோம் எனத் தோன்றியதும் காரை நிறுத்தி விட்டு வெளியில் இறங்கி நின்று இவரது(கணவரது) பாதங்களைத் தொட்டு வணங்கி விட்டு உயிர் விட்ட பதி விரதை. ஊரே அது பற்றி வியந்து பேசியது. அது முதல் சில ஆண்டுகள் மனிதர் அடித்து நொறுக்கப் பட்டது போல வீழ்ந்து கிடந்தார்.


அப்போது ஒரு முறை எனை எங்கள் ஊரின் ஆரம்பத்தில் ஊரின் துவக்க முதலே இருந்து  வரும் வடக்கு பார்த்த காளியம்மன் கோவிலில் , நான் அந்தப் பக்கம் போய் வருகையில் அதன் முகம் பார்த்து செல்வது வழக்கம், ஏன் எனில் கண்டவர்கள் பேச்சு, பார்வை எல்லாம் நினைவில் இருந்து போய் ஒரு நல் நினைவு வர அதன் முகத்தைப் பார்த்து செல்வது என்றிருப்பேன், அவர் இதை எல்லாம் ஏன் சார் கும்பிடுகிறீர்கள் என்றெல்லாம் விரக்தியால் பேசினார் அவ்வளவு இயற்கை மேல் கூட பற்றில்லாமல் இருந்தார். காளி என்றால் காற்று. யாதுமாகி நின்றாய் காளி....


அதன் பின் தேறி அனைவர்க்கும் மீண்டும் தமது சேவைகளை  தொடர்ந்து செய்து வாழ்க்கையை செம்மைப் படுத்தி வருகிறார்.


இவருக்கும் எங்கள் குடும்பத்துக்கும் ஒரு நெருக்கம். ஏதாவது ஒன்று என்றால் தேடி வருவார்.அப்படித்தான் ஒரு டிஜிட்டல் சுவர்க்கடிகாரக் கதை(இலக்க முறை நேரம் காட்டி மட்டுமல்ல அதில் வெப்ப நிலை, நாள் , கிழமை பெயர்,காலையா மாலையா என்பது  மாதம், தேதி மணி, நிமிடம், நொடிக் கணக்கு) இப்படி எல்லாம் மின் விளக்கு மூலம் காட்டி வந்தது .அதை எங்களுக்கு அன்பளிப்பு செய்திருந்தார்.அதன் பணி செய்யும் உத்தரவாத அட்டையை ஓராண்டுக்குரியதை எங்கோ வைத்து மறந்து விட்டேன். ஒரு சிறு பல்லி உட் புகுந்து மின் இயக்கத்தில் கோளாறு செய்து இறந்திருக்க‌ அந்தக் கடிகாரம் ஓடாமல் நின்று போக அந்த உத்தரவாத‌ அட்டை கிடைக்கவே இல்லை தேடும் போது.


மனிதர் சலித்துக் கொள்ளாமல், சளைக்காமல் பல முறை அந்த மின் இலக்க சுவர் கடிகாரத்தை எடுத்து சென்று சரி செய்து கொடுத்து இப்போது அவரது நினைவுகளுடன் ஒவ்வொரு நொடியும் நகர எங்கள் வீட்டில் அவரது விடாமுயற்சி பற்றி எடுத்துக் காட்டிக் கொண்டு ஓடிக் கொண்டே இருக்கிறது. அது எங்களுக்கு நினைவில் என்றும் மறக்க முடியாமல்.

 வழக்கம் போல அந்தப் பணி நிறைவு பெற்றது அந்த உத்தரவாத அட்டை கிடைத்து விட்டது வரும் மே மாதம் வரை உத்தரவாத காலம் இருக்கிறது என்பதைக் காட்டிக் கொண்டு.அட அப்போது நமது மாநிலத்துக்கு புது மந்திரிசபை வந்திருக்குமே..மே...மே... (எல்லா ஆடுகளும் மே மே என்றுதான் கத்துகிறது) அதற்கு அந்த ஒரே சொல் தான் தெரிகிறதாம் கத்துமாம். பசு மட்டுமே அம்மா என்று தெளிவாகக் கத்துகிறது.

அடச் சே! இப்படித்தான் எழுதும்போதெல்லாம் கூட எண்ணம் மாற்றம், ஏமாற்றம் எல்லாம் ஏற்பட்டு மடை மாற்றம் நடந்து விடுகிறாது. எங்கே விட்டேன் ஆமாம் மனிதர், புனிதர் எஸ்.என் ராஜன் பற்றி பேசிக் கொண்டிருந்தேன் இல்லையா மறந்து விட்டேன் பாருங்கள்... தொடர்பு அறுந்து விட்டது....

 அவர் பற்றி சுருங்கச் சொல்ல வேண்டுமெனில்... . 


எப்போதும் ஒரு தூய வெண்ணிற கதர் ஆடை மதிப்பு மிக்க தோற்றம், எந்தப் பணியானாலும் அதை சேவையாகக் கருதி விடாமல் செய்து முடிக்கும் ஆற்றல், வயது 70ஐக் கடந்த பின்னும் அவருக்குள் சுடர் விடுவதை பாராட்ட மொழி இல்லை.


மனிதர் நீடூழி வாழ என்றும் வாழ்த்துகளுடனும் நன்றிகளுடனும்


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை




Friday, January 30, 2026

DR.ARAVINDASAMY M.B.B.S.,D.C.H., மரு.அரவிந்தசாமி:கவிஞர் தணிகை

 டாக்டர் அரவிந்தசாமி: கவிஞர் தணிகை



ஒரு நல்ல மருத்துவரைக் கண்டால் என்ன செய்யத் தோன்றும்? வணங்கத் தோன்றும். அவர்கள் கடவுளின் மறு உருவங்களாகவும் பார்க்கிறார்கள் பயன் தெரிந்தார் பயன் பெற்றார். ஏன் எனில் அவர்கள் உயிரை மீட்டுத் தருகிறார்கள், உடல் நலத்தை மீட்டுத் தருகிறார்கள், ஏன் நல் உணர்வை ஏற்படுத்தி விடுகிறார்கள், உலகை இனியதாக மாற்றி விடுகிறார்கள்.


அதிகமாக ஆங்கில மருத்துவம் பக்கம் நான் திரும்புவதேயில்லை அதன் பக்க விளைவு காரணமாக. ஆனால் அத்தியாவசியத்துக்கு செல்லத் தவறியதேயில்லை. ஆங்கில மருத்துவம் பயின்ற (அல்லோபதி) மருத்துவர்கள் எல்லாம் தேவர்கள் போலவும் மற்ற மனிதர்கள் எல்லாம் விலங்குகள் போலவும் அவர்கள் பார்ப்பதை அதிகம் கண்ட எனக்கு இந்த மருத்துவரின்  தீவிரத் தேடல் வித்தியாசமாகப் பட்டது. என்னைத் தேடி வருவார் அரிதானவர்களே.இவர் வசூல் ராஜா எல்லாம் இல்லை உண்மையான(ஆ)சாமி.


ஒரு மருத்துவர் எனை எனது சுவர் எழுத்துகளைப் பார்த்து விட்டு 2 முறை சந்தித்து தியான வகுப்புக்கு வர முயற்சி செய்து முடியாமல் 3 ஆம் முறை எனை சந்தித்து விட்டு தனது கோரிக்கையை வைத்தார்.அவர் ஒரு ஆங்கில இளநிலை மருத்துவம் மற்றும் குழந்தைகள் நலம் படித்து அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவுக்கான மருத்துவராக பணி செய்து வருகிறேன் என்றும் பணி நேரம் தவிர மற்ற நேரங்களிலும் தமது சேவையத் தொடரும் நிலையில் இந்த எழுத்துகளைப் படித்து விட்டு "உங்களிடம் மட்டுமே தியானம் கற்றுக் கொள்ள வேண்டும்" என்ற அவாவை வெளிப்படுத்தினார்.


அப்போது கோவில் பணி காரணமாக உடல் நலம் குன்றி இருந்தது. 2 மாதம் ஆகட்டும் அப்போதுதான் முடியும் என்றேன். அதற்கும் சரி என்றார். காத்திருந்தார். கற்றுக் கொண்டார்.தியானம் என்பதை கற்றுக் கொடுக்க முடியாதது கற்றுக் கொள்வது, என்றும் தியானத்துக்கு முன் தி.மு, தி.பி தியானத்துக்குப் பின் என வாழ்வை பிரித்துக் கொள்ளலாம்.


ஏன் என்னிடம் கேட்டதற்கு: கட உள் என்ற வாக்கியமே காரணம், இதை எழுதியவர் ஞானி என்றார்.கட்டணம் ரூ2000 கட்டினார், குரு காணிக்கை என பழம் பூ என ஒரே ஏக‌ தடபுடல் அன்பின் ஆரவாரம். பிறரிடமிருந்து எதுவும் ஏற்றுக் கொள்ளாதிருத்தல் என்ற தியான கொள்கையில் 5 ஆம் கொள்கை வேறு இடித்தது.


எல்லா தடைகளையும் தாண்டி, இடர்பாடுகளையும் தாண்டி, அவரது பணிச்சுமையையும் தாண்டி மனிதர் சரியாக 10  புகு முக வகுப்புகளுக்கும் வந்து கற்றுக் கொண்டார், இடையில் அவரது மைத்துனர் மணம் வேறு வந்திருந்தது. மகனுக்கு "குருதேவ்" எனப் பெயர் சூட்டி அழகு பார்த்து வருகிறார்.


என்ன சொல்வது மேலும் மேலும் எப்படி சொல்வது எனக்கு கிடைத்த அரிய மனிதர்களுள் இவரும் ஒருவர் இப்போது அந்தியூர் அரசு மருத்துவமனை, அப்போது மேட்டூர் அரசு மருத்துவமனை, துணைவியாரும் மருத்துவர் அவர் அம்மாப் பேட்டையில்  சொந்தமாக ஒரு மருத்துவ ஆலோசனை மையத்தை நடத்தி வருகிறார். இவரை என்ன பாராட்டினாலும் எப்படி பாராட்டினாலும் தகும். சிறந்த தேசப் பற்று.மக்கள் பற்று. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் இருந்து வந்த எனக்கு கிடைத்த‌ ஒரு நல் மணிமுத்து. அலட்டல் இல்லை காரம் இல்லை கசப்பு இல்லை இது ஒரு நல்ல எண்ணம்.மனிதர்  ஒரு மருத்துவர் என்ற பந்தா எல்லாம் இல்லாமல் காட்டிக் கொள்ளாமல் மிக எளிமையாக‌ இருப்பவர். ஆடை அணிகலன் பற்றி எல்லாம் கூட அலட்டிக் கொள்ளாமல்...


அவர் என் குடும்பத்தில் இப்போது ஒருவராக இருக்கிறார். அவர் மூலம் இப்போது கோம்பூரான்காடு ஆரம்ப சுகாதார  மையத்தின் மருத்துவர் திவ்யாவும் எனது மனதில் இடம் கொள்பவராக சேர்ந்திருக்கிறார். அவரிடமும் மக்களுக்கான உண்மையான சேவையாற்றும் நட்பை கவனித்ததால் இந்த வார்த்தை.


மறுபடியும் சில அரிய மனிதர்களுடன்


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


Thursday, January 29, 2026

இருவர்: மருத்துவர் மற்றும் முனைவர் சரவணன்கள்: கவிஞர் தணிகை

 இருவர்: மருத்துவர் மற்றும் முனைவர் சரவணன்கள்: கவிஞர் தணிகை



நீண்ட காலமாகவே ஒரு கரையான் கூட்ட எண்ண அலைகள் எனை அரித்து வருவதை எடுத்தெறிய இந்தப் பதிவு.

1. 2016 முதல் சமூக பல் மேம்பாட்டுத் துறைத் தலைவராக தனியார் கல்லூரியில் பணியாற்றி வரும் பல் மருத்துவர் மற்றும் முனைவர் சரவணன் அவர்களை அறிவேன். அந்தக் கல்லூரியிலிருந்து நான் வெளிவந்து 4 ஆண்டுகள் ஆகி விட்டது.நான் மறவாத நபர்களுள் இவரும் ஒருவர். ஏன் கடந்த இந்த ஆண்டுகளில் எனக்கும் இவருக்கும் எந்த தொடர்பும் கூட இல்லை என்றாலும் இவரைப் பற்றி இந்த அதிகாலை உங்களுக்குள் பகிர நினைக்கிறேன் எனில் அந்தளவு திறம் உள்ள மனிதர். 


எனது பிறந்த நாளை கொண்டாட நினைத்த மனது இவருடையது. நான் அது போன்ற பழக்கங்களை எல்லாம் விரும்புவன் அல்ல என்ற போதும் அந்த நல்ல உள்ளம் அந்தக் கல்லூரியின் கலாச்சார முறைக்குட்பட்டு எனது நாளையும் சிறப்பு செய்ததை நினைத்துப் பார்க்கிறேன் இன்றும்.


ஒரு முறை  எனக்கு மிகக் கடுமையான வேலைப் பளு. முடித்து மதிய உணவு அருந்தி விட்டு அல்லது அதற்கு முன் அவருடைய துறையில் இருந்து அழைப்பு. அவர் நிலை (என்னிலை) உணராமல் ஏதோ பேச, நான் மிகக் கடுமையாக அவரை அன்று மற்றவர் முன்னிலையிலும் பேசி விட்டேன் என்றாலும் கூட பொறுத்துக் கொண்டார் பெரிய மனது.


இருவரும் வேடிக்கையாக  அந்த அந்த கால( தற்கால) அரசியலை ஏட்டிக்குப் போட்டியாக பேசியபடி இன்பம் அடைவோம். அவரை நண்பர் என்று சொல்வதை விட அவர் எனக்கு ஒரு சகோதரராகவே அந்தக் கல்லூரி வாழ்வில் இருந்தார்.அவருக்கு என்றும் எனது அன்பு உரித்தாகும்.


எத்தனையோ முறை இவர் தமது வாகனத்தில் வாய்ப்பு இருக்கும்போதெல்லாம் எனை எங்கு செல்ல வேண்டுமோ அங்கு செல்லத் துணை புரிந்தார்.சொல்லாமல் பிரிவது நட்புக்கழகு என்பார். அப்படித்தான் பிரிந்தேன் அங்கிருந்து ஆனால் நான் எப்போதும் எவரிடமிருந்தும் பிரிவதில்லை.


2. முனைவர் முதல்வர் சரவணன்:

ஒரு தனியார் கலை அறிவியல் கல்லூரியில் பணி புரிகிறார். மிக்க கடின உழைப்பாளி. எனது எழுத்துகளைப் பார்த்து நுகர்ந்து தமது கல்லூரிகளில் பாடம் நடத்தியதாக இவருடைய முகாம்களில் வெளிப்படையாகச் சொல்லி வருவார். நல்ல மனிதர். நல்ல ஆசிரியர். பொறுப்பான அமைதியான அடக்கமான உருவத்துக்கு சொந்தக்காரர்.தற்காலத்தில் பேசி கூட காலம் வெகுவாக ஓடி விட்ட போதிலும் நாங்கள் என்றும் நண்பர்களாகவே இருக்க பல காரணங்கள்  உள்ளன.


தாமறிந்ததை பிறர்க்கு பயனாவதை பகிர்ந்து கொள்ள இவர் என்றுமே தயங்கியதில்லை. நல்ல படிப்பாளி முனைவர் பட்டம் பெற்று வெகு காலம் ஆன பிறகே இவருக்கு முதல்வர் பொறுப்பு கிடைத்தது. நல்ல பொறுப்பான மனிதர் மேலும் மேலும் வளர்வார் வாழ்த்துகள்


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


இருவர்: கிருஷ்ணனும் தணிகையும்: கவிஞர் தணிகை

 இருவர்: கிருஷ்ணனும் தணிகையும்: கவிஞர் தணிகை



முட்டைக்கார கிருஷ்ணனை மேல் மேட்டூரில் தெரியாதார் சிலரே இருக்கக் கூடும். எனக்கும் இந்த நபருக்கும் சுமார் 14 ஆண்டுகள் தொடர்பு இருக்க வாய்ப்பு இருக்கிறது. அது தொடர்கிறது.எப்படி எனில் சகோதரர்கள் போல‌ பங்காளிகள் போல.ஆன்மீகத்தால் அரசியலையும் வென்று எடுக்கும் நோக்கம் அவருடையது. சேவை வழி இதயம் தொடு என்பது எனது.காலம் ஒரு பற் சக்கரத்தின் பற்களாக மேலும் கீழும் பதிந்து சுழற்றியபடியே எங்களையும்  கடத்தி வந்து கொண்டிருக்கிறது.


என்னை விட அவரை எவருமே விவாதப் பொருளுடன் தாக்கி விமர்சித்து இருக்க முடியாது நேருக்கு நேர் நாங்கள் கீரியும் பாம்பும் போல்.மற்றபடி ஒரே நேர்க்கோட்டில் இணையான வழிகளில் பயண‌ம் செய்யும் செயல் கர்ம வான்கள். அவரும் நானும் இரவில் சரியாகத் தூங்காதவரே.ஏன் எனில் இந்த உலகு உய்ய ஏதாவது நம்மால் ஆனதை செய்ய வேண்டுமே என்ற அப்துல் கலாம் போன்றோரின் ஏக்கத்தால்.


இப்போது என்ன இந்த‌ அங்கலாய்ப்பு என்கிறீர்களா? மனிதன் தனியாகவே நின்று எல்லா எதிர்ப்புகளையும் ஊதித் தள்ளி கோம்பூரான் காட்டில் நாங்கள் எல்லாம் சேர்ந்து 2012ல் கட்டி குடமுழுக்கு செய்த‌ அருள் மிகு புவனேஸ்வரி உடனமர் கபாலீஸ்வரர் ஆலயத்துக்கு குடமுழுக்கு நன்னீராட்டு விழாவை வருகிற மாசி 10 தமிழ் அல்லது ஆங்கிலத் தேதி 22.02.2026 ஞாயிறு அன்று நடக்க எடுத்து வரும் அசாத்திய முயற்சி பற்றித் தான். ஈடு இணையிலா உழைப்பு.


மனிதர் எப்படி வேண்டுமானாலும் இரசாயனத் தொழில் நடத்தி வந்த தொழில் அதிபராக இருக்கலாம். ஆனல் இப்போது ஞானம் பெற தமது ஆத்மாவை அலைக்கழித்து வரும் ஒரு நல்ல ஜீவனாக மாற முயற்சித்துக் கொண்டிருக்கிறார். துறவு நிலை கூட.


இதென்ன பெரிய சாதனையா? என்று பலரும் கேட்க வாய்ப்பு இருக்கிறது, செய்து பார்த்தால் தாம் அதில் உள்ள வாய்ப்புகளும், நுட்பங்களும், நுணுக்கங்களும், சிரமங்களும் தெரியும் அனுபவம் மலரும்.


ஒரு தனி ஆளாக நின்று எல்லாப் பொறுப்புக்ளையும் தமது தோளிலேயே தாங்கிக் கொண்டு செய்து வருகிறார்.இந்த குடமுழுக்கு நன்னீராட்டு விழாவிற்குப் பின் செயல் நடவடிக்கை எல்லாம் துறந்து ஓய்வு பெறப் போவதாகவும் சொல்கிறார். ஆனால் இந்த மனித ஆத்மா சுழலும் வரை அந்தக் கோவிலை விட்டுப் பிரிய மாட்டார் , ஏன் உடல் எனும் கருவியை விட்ட பிறகும் கூட அந்தக் கோவிலிலேயே சமாப்தி ஆகி விடுவார் என்றே வெளிப்பாடு எல்லாம் இருக்கிறது.


ஒரு வேளை அப்படித்தான் எல்லாம் புகழ் சொல்லுமோ? அட இந்த மனிதரிடம் நாம் இத்தனை கறாராக உரத்த தொனியில் கருத்து மோதல் செய்திருக்கக் கூடாதோ என்ற எண்ணமெல்லாம் அந்த காலம் கொடுக்குமோ?

சமூக அமைப்பில் எல்லாருக்கும் ஏதோ செய்ய நினைக்கிறார் அது இந்த வழியில் இருக்கிறது.பேர் விளங்கட்டும்.


அனைவரையும் ஒருங்கிணைக்க எல்லா வித்தைகளையும் காட்டி வருகிறார் இந்த கிருஷ்ணனும். எனவே அனைவரும் வந்து புதுசாம்பள்ளி இடுகாட்டருகே உள்ள கோம்பூரான் காட்டில் உள்ள அருள் மிகு கபாலீஸ்வரர் ஆலய குடமுழுக்கு விழாவில் பேதமின்றி கலந்து கொண்டு சிறப்பு செய்வீராக. நன்றி . வணக்கம் .என்றும் அன்புடன் உங்கள் நண்பனாக எனது அழைப்பும். 


இவருடைய செயல்பாடுகளுக்கு மக்கள் ஆதரவும் வெகுவாக இருக்கிறது என்பதை மக்கள் தமது உழைப்பால் கிடைத்த செல்வத்தை நிதியாக, நன்கொடையாக இந்த கோவிலின் வளர்ச்சிக்கும், இந்த நிகழ்வின் வெளிச்சத்துக்கும் வாரி வழங்கி வருவது இவரது வெற்றியையும் இவருக்கான அங்கீகாரத்தையும் மக்களுக்கு கடவுள் பக்தியில் இன்னும் நம்பிக்கையும் நாட்டமும் இருப்பதைக் காட்டுகிறது.


முட்டை முதலா கோழி முதலா என்ற அறிவியல் ஆய்வில் கோழிதான் பரிணாம வளர்ச்சியில் முதலில் என்று தற்கால அறிவியல் விடை சொல்லிய அறிக்கைகள் உள்ளன.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை