நாய்க் கதை: கவிஞர் தணிகை
நாய்கள் ஜாக்கிரதை(எச்சரிக்கை வாசகம் உள்ள வீட்டைப் பார்த்திருப்பீர்கள்...இப்போதெல்லாம் அதெல்லாம் கூட இல்லை.எல்லாருமே நாய் வளர்க்க எண்ணுகிறார்கள் ஆனால் எவ்வித அடுத்தவர் பற்றிய எண்ணமுமின்றி.இந்த நாய் ஒன்னும் பண்ணாது, கடிக்காது என்கிறார்கள் அது நாய்க்கும் நமக்கும் தெரிந்தால் தானே...
ஜப்பானிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய ஒழுக்கங்களுள் இதுவும் இருக்கிறது. அவர்கள் நாயை வெளியே நடைப்பயிற்சிக்கு கொண்டு வரும்போது வாயை மூடி, அதே நேரத்தில் மலக் கழிவை ஒரு பையில் வைத்து பொது இடச் சுகாதாரம் நேசித்தபடி எடுத்துச் சென்று அதை அப்புறப் படுத்தி விடுகிறார்கள்.
இங்கு எச்சமிடா பறவை வேண்டும் , வெளிக்குப் போகாத நாய் வேண்டும் வீட்டுவளர்ப்புக்கு என நினைக்கிறார்கள் இல்லையேல் அடுத்தவர் அல்லது சுற்றுப் புறம் பற்றிய கவலை எல்லாம் இல்லை, எங்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும்...
தம்முடைய நாயை விட அடுத்தவர் வீடு, உடல், உயிர் ,எல்லாமே தரக்குறைவு என்ற எண்ணத்தில் நிறைய பேர் ஜம்பம் பாராட்டுகிறார்கள். நாய்க்குப் பிறந்த நாள் கொண்டாடி கேக் ஊட்டுவது வெட்டுவது, நாயை வாகனங்களில் அழைத்துச் செல்வது, படுக்கையில் உடன் படுத்துக் கொள்ளச் செய்வது...இப்படியாக செல்லப் பிராணி அபாயப் பிராணியாக மாறும் வரை எல்லாமே நல்லதுதான் என்று நினைக்கிறார்கள். விவேகானந்தரிடம் ஒருவர் சென்று பசு வதை, கோ சாலை பற்றி எல்லாம் பேசிட எதிர்பார்த்திட மனிதர்க்கு அப்புறம் தான் அவை எல்லாம் என அவரை வெறும் கையுடன் நரேந்திரர் திருப்பி அனுப்பியதான ஒரு நிகழ்வை படித்த நினைவு இப்போது என்னுள்.
தெரு நாய்கள் ஏராளம், கால்நடைகளில்(ஆடு மாடுகளில்) பெண் வேண்டும், ஆனால் நாய் பூனைகளில் பெண் வேண்டாம் என எடுத்து பொது இடங்களில் போட்டுச் சென்று விடுகிறார்கள்...
எங்கள் புது வீட்டருகே நிறைய தெரு நாய்கள் ...அவை சாலையின் நடுவிலேயே படுத்துக் கொண்டு உறங்குவதும்,மலம் கழித்து விடுவதும், சிறு நீர் கழிப்பதுமாய்... அவற்றை துரத்தி விடுவது சிறந்தது ...அடிப்பது அல்ல...
இப்போது விலங்குகளை துன்புறுத்துவது குற்றம் எனவே நாய்களை பிடித்துச் சென்று தடுப்பூசி போட்டு திரும்ப கொண்டு வந்து விட்டு விடுகிறார்கள். மேலும் கடந்த காலத்தில் பிடித்துச் சென்று இவர்கள் விட்டு விட்ட இடங்களில் இருந்து அவை மறுபடியும் அதே இடத்துக்கு அதனதன் இடத்துக்கே வந்து சேர்ந்து விட்டன.
சில நாட்களுக்கும் முன் எங்கள் வீட்டு முன் ஒரு கழுத்திலே குடத்தின் வாய் மாட்டப் பட்டிருந்த பெண் நாயை பிடித்துச் சென்றார்கள். ஆனால் அந்த நாயும் இன்னொரு நாயும் சேர்ந்து 9 குட்டிகளை ஈன்றிருக்க...அக்கம் பக்கத்தினர் குட்டிகள் பாலின்றி இறந்து விடுமோ என பிரார்த்திக்க வேண்டியதாயிற்று.
நல்ல வேளை அந்த நாயை திரும்ப கொண்டு வந்து விட்டு விட குட்டிகள் தப்பின பசியிலிருந்து.இப்போது அந்த குட்டிப் போட்ட நாயை துரத்தக் கூட மனசு வரவில்லை. எப்படியோ போகட்டும் நம்மை பாதிக்காதவரை என்ற நிலை வந்து விட்டது. ஆனால் நாய்க்கடி பட்ட ஒரு நபர் இறந்து போன செய்தியும் உள் புகுந்து நிம்மதியை குலைக்கத்தான் செய்கிறது.மாட்டிய கழுத்துக் குடம் அப்படியேதான் இருக்கிறது.
எது காருண்யம் என்றே தெரியவில்லை, கட்டெறும்புகளும் , சிற்றெறும்புகளும், அதனினும் சிறு எறும்புகளும், கரையான்களும் வீட்டை துளையிட்டு வாழ்ந்து வருவதை சரி செய்தாலும் பாவம் தானே... ,பாம்பு, பல்லி, பூரான், தேள், பூச்சிகள், கரப்பான்கள், குளவிகள், கொசுக்கள் இப்படி எவற்றையுமே அழிக்காமல் எப்படி மனித அமைவிடங்கள் இருக்க முடியும்?
ஒன்று இராமலிங்க அடிகளார் போல சித்தர்கள் போல வீடு வாசல் ஏதுமின்றி பிச்சை வாங்கி உண்டு விட்டு பரதேசம் என்று அலைய வேண்டும் அல்லது விவசாயக் குடியானவர்கள் உயிர்களை எல்லாம் அழித்து பயிர் பச்சைகளை செழிக்கச் செய்து உணவளிப்பதில் எவ்வித பாவமுமில்லை புண்ணியமே என்றெண்ண வேண்டும், படை வீரர்கள் பிறரைக் கொல்வதெல்லாம் என்ன கணக்கு? கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்கிறார்கள் தினமும் நடைப்பயிற்சியின் போது எங்களுக்கு கோபுர தரிசனம் உண்டு...இடுக்குப் பிள்ளையார் வழியில் திருவண்ணாமலையில் உயிர் நீத்த உயிருக்கு புண்ணியம் கிட்டி இருக்குமோ? அட திருவண்ணாமலை மண்ணை மிதித்தாலே முக்தி என்கிறார்களே அது எந்தளவு உண்மையாயிருக்கும்? காசியில் உயிர் நீத்தால் புண்ணியமாமே இது என்ன சொல்ல வருகிறது...இப்படி நிறைய கேள்விகள்..நான் நமது கருப் பொருளிலிருந்து விலகி சிந்தித்து விட்டேன் மறுபடியும் விட்ட இடத்திற்கே வந்து சேர்கிறேன் நமது நாய்க் கதைக்கு...
நாய் குரைக்கிறது, குலைக்கிறது என்பதற்கு மாறாக சிலர் உழைக்கிறது என்றே சொல்கிறார்கள். முப்பத்து ஐந்து என்பதற்கு பதிலாக நுப்பத்து ஐந்து என்பது போல... முப்பத்து மூன்று பத்து நுப்பத்து ?
வீட்டு நாய்கள் கூட வீட்டை எஜமானர் பூட்டிச் சென்று தனிமைப் படும்போது உளையிடுகின்றன.
நிலவொளி இரா வானம், முழு நிலவு வானம் இரண்டிலுமே கவனியுங்கள் நாய்களின் உணர்வலைகள் அதிகமாகவே இருக்கின்றன...இது ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் பட வேண்டிய ஒரு விடயம்.
மேலும் எமன் வருவது நாய்க்குத் தெரியும் என்கிறார்கள், சாக்குருவி வீச்சு என சப்தமிடுவது போல, ஆந்தை என்கிற கோட்டான் அனத்திக் கொண்டு சப்தமிடும் போதெல்லாம் மனித இனத்துக்கு தீங்கு என எவராவது இறந்து விடுகிறார்கள் என்பதெல்லாம் அனுபவப் படி எடுத்துக் கொள்ளலாம்.
மனித நடமாட்டத்தின் போது அருகே தென்னை மட்டை விழுவது, பனம்பழம் விழுவது...
கடைசியாக ஒன்று: நாங்களும் நாய்கள் வளர்த்தியிருக்கிறோம், அடுத்தவர்க்கு தொல்லை இன்றி, எங்கள் நாய் எச்சங்களை நாங்களே எடுத்து அப்புறப் படுத்தி துப்புரவு செய்தபடி,ஏன் வெளியே அவை சென்று ஏதும் அசுத்தம் செய்யாதபடிதான் வளர்த்தி இருக்கிறோம். அதை குளிப்பாட்டி வாரம் சில முறை, அதற்கு நோட்டிக்ஸ் எனும் பவுடர் போட்டு, நல்ல உணவிட்டு, நகங்களை எல்லாம் சீராக வெட்டி ,நோய் வந்த போதெல்லாம் மருந்தளித்து, வயதான போது ஐவர் மெக்டின் என்ற ஊசி மருந்து செலுத்தி, அது கண் குருடாகி சாக்கடை எது என்று கூட தெரியாத வயது வரை எல்லாம் வளர்த்தி அதன் வாழ்வை வளம் பெறச் செய்திருக்கிறோம். எனவே ஒரு வாரிசு, நாய் வேண்டும் , பிரியம் செலுத்த நாய் வேண்டும் நாய் வளர்க்க வேண்டும் என இன்னும் வேண்டுகோள் வைத்தபடியே இருக்கிறது...
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.