Monday, February 9, 2026

மலையும் மடுவும் இலையும் நதியும் சருகும் விறகும்: கவிஞர் தணிகை

 மிஸ்டர் கி: கவிஞர் தணிகை



ஒன்று

கர்வத்தின் சிகரத்தில் ஏறி நிற்கிறாய்

இல்லை

அதல பாதாளத்தில் 

அனைவரின் கால்களிலும் விழுந்து

புழுவாய்த் துடிக்கிறாய்


அட உனக்கு(ம்) கொம்புகள் இல்லை

இங்கே  எண்ணிப் பார்

எனது எழுத்துகளில்

எத்தனை கொம்புகள் என்று,,,


   மறுபடியும் பூக்கும் வரை

   கவிஞர் தணிகை

CRICKETகிரிக்கெட் விளையாட்டு (உலகளாவிய வியாபாரம்) 10 ஓவர் போதுமே: கவிஞர் தணிகை

 கிரிக்கெட் விளையாட்டு (உலகளாவிய வியாபாரம்) 10 ஓவர் போதுமே: கவிஞர் தணிகை



நீண்ட காலத்துக்கும் முன்பே கிரிக்கெட் (மட்டைப் பந்து) 10 ஓவரே போதும், டி20,50 ஓவர், டெஸ்ட் பார்ம் எல்லாம் சுருக்கப் பட்டு 10 ஓவரிலேயே கூட முடித்துக் கொள்ளலாம்,முடித்துக் கொள்ள வேண்டும் அது மற்ற விளையாட்டுக்களைப் போல என்று நமது கருத்தை வலை தளத்தில் வேர்ட்பிரஸ்ஸில் நாம் எழுதிக் கொண்டிருந்த போதே முன் வைத்தோம். குறைந்த பட்சம் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நம் நாட்டிலாவது.


மாலை முழுதும் விளையாட்டு என்றான் பாரதி. ஒவ்வொரு நாளும் நாளின் ஒரு பகுதியான நேரத்தில் தாம் விளையாட்டு அவசியமாக இடம் பெற வேண்டும். நாள் முழுதும், சினிமா, விளையாட்டு என்பவை தவறான வாழ்வின் முறை.


உடற்பயிற்சிக்கான விளையாட்டுகளாகப் பார்க்கப் படும் இந்த விளையாட்டில் முதிர்ச்சி பெறும் நபர்கள் வேண்டுமானால் தம் வாழ்வை அதற்காகவே அர்ப்பணிக்கட்டும், ஆனால் உலகின் பெரும்பாலான மனிதர்கள் அப்படி முழுநேரமும் அதில் ஈடுபட அவசியமில்லை. வியாபாரிகள் பெரும் முதலீடுகளை வைத்து அதிலிருந்து பெரும் பொருள் ஈட்டி வருவது யாவரும் அறிந்ததே.அரசியல் இதில் துளியும் இருக்கவே கூடாது.


விளையாடுவோரில் 3 பிரிவு, சம்பள வேறுபாடுகள்,அரசியல், அதைப் பற்றி ஒன்றுமே தெரியாதார் அதைக் கைகொண்டுவிடுவது இப்படி நிறைய அதில் குறைபாடுகள் உள்ளன. கபில்தேவ், தோனி போன்றோர் மட்டுமே அல்லது நிரூபித்த நபர்கள் மட்டுமே அதை மேலாண்மை செய்ய வேண்டும்...


வைபவ் சூரிய வன்சி போன்ற சிறுவர்கள் வயது காரணமாக இல்லாமல் தேசிய முதன்மை அணியில் இணைக்கப் பட்டு நிரூபிக்கப் படாத வீரர்கள் எல்லாம் அப்புறப் படுத்தப் பட வேண்டும்.


கைப்பந்து/வாலிபால், கூடைப் பந்து/பேஸ்கட் பால், கால் பந்து/ஃபுட் பால் கபடி,தட கள விளையாட்டுகள்,பூப்பந்து, இறகுப் பந்து இப்படி எல்லா விளையாட்டுகளுமே சில மணி நேரங்களே இருக்க, சில மணிகளுக்குள் முடிந்து விட, கிரிக்கெட் மட்டும் பல மணி நேரங்களை ஏன் நாள் கணக்கைக் கூட எடுத்து விழுங்கி வருவது குறைக்கப் பட வேண்டும். அதற்கு 10 ஓவர் மட்டுமே நடத்தப் படும் விளையாட்டுகள் அவசியம். எல்லாருடைய முக்கியமாக‌ இளையோரின் உழைப்பை எடுத்து உறிஞ்சுவது  தடுத்து நிறுத்தப் பட வேண்டும்.


பொதுவாக கிரிக்கெட் என்பது வெள்ளைக்கார இங்கிலாந்து நாட்டவரால் குளிர் காலத்தில் தம் உடலை பயிற்சி செய்து கொண்டு வெம்மைப் படுத்திக் கொள்ள ஏற்படுத்திய விளையாட்டு.அதை விளையாடட்டும் தவறில்லை அவருடைய பாட்டல்/மதுக்குடுவைக் கலாச்சாரத்தோடு இதையும் சேர்த்துக் கொள்வது தவறு.


10 ஓவர் எனும் போது நேரம் நிறைய சேமிக்கப் படும், ஒவ்வொரு ஓவரும் மிக முக்கியம்.(ஒரு ஓவருக்கு 10 பந்துகள் கூட எடுத்துக் கொள்ளட்டும் தவறில்லை).ஆனால் ஒரு ஓவரில் ஒரு விளையாட்டு ஓவர் இடம் பெறச் செய்ய வேண்டும், அதாவது ஒரு ஓவருக்குள் அந்த மட்டை பிடிக்கும் வீரர் அவுட் ஆகவில்லை என்றாலும் அடுத்த ஓவருக்கு அடுத்த வீரரே வந்து மட்டை பிடிக்க வேண்டும்.எனவே எல்லா வீரர்களும் பந்து வீசுவதும், அடித்து விளையாடுவதிலும் பயிற்சி பெற்றாக வேண்டும். ஒரு வீரர் அவுட் ஆகிவிட்டால் மற்ற வீரர் வந்து ஆடலாம் மொத்தத்தில் 10 ஓவர்கள் 10 விக்கெட்டுகள்.அந்தக் காலம் வருவது வெகு தூரத்தில் இல்லை. இப்போது டி 20 மற்ற கிரிக்கெட் வடிவங்களை எல்லாம் எடுத்து விழுங்கி பிரபலம் அடைந்தது போல இதுவும் ஒரு நாள் நடக்கும் பாருங்கள்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


Sunday, February 8, 2026

RAJYA SABHA KAMAL HAASAN'S MAIDEN SPEECH:ராஜ்யசபாவில் கமல்ஹாசனின் கன்னிப் பேச்சு: கவிஞர் தணிகை

 ராஜ்யசபாவில் கமல்ஹாசனின் கன்னிப் பேச்சு: கவிஞர் தணிகை



திரை உலக ஞானி என்றழைக்கப் படும் கமல்ஹாசனின் ராஜ்யசபா பேச்சை புரியவில்லை என்று ஒரு சார்பான நபர்களும், ஊடகங்களும் சொல்லி இருப்பதை பேசி வருவதைக் கவனித்தீர்களா? அறிவிலிகளுக்குப் புரியாது அறிவு இருப்பார்க்கு அது நன்கு புரிகிறது. அதில் புரியாதது ஏதுமில்லை. ஏன் எனில் ராஜ்யசபா என்பது மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட மக்களவை உறுப்பினர்களின் தேர்தல் மூலம் அல்லது கட்சிகளின் சார்பாக போதுமான வாக்குகள் பெற்ற‌ அறிவாளிகள் அல்லது கலைஞர்கள் அல்லது படிப்பாளிகள், படைப்பாளிகள் போன்றோரைக் கொண்டது. பேரறிஞர் அண்ணா பேசியதை  அங்கில உரையை புத்தகமாகப் படித்த நினைவுகளில் இந்தப் பதிவு செய்யவும் எனக்கு அவா.


அவர் (கமல்) ஒரு  நல்ல கவிஞரும் கூட. எனவே தமது கவிதை மூலம் அறம் பாடியிருக்கிறார் இது அனைவர்க்கும் புரியாது வாழ்க ஒழிக என்ற கூச்சல் மட்டுமே இடுவோர்க்கு. ஏன் எனில் வீழ்க வளமுடன், தமிழ் படித்தால் திருடவும், பிச்சை எடுக்கவும் முடியாது என்றெல்லாம் தமது ஆற்றாமையை சொல்லாடி இருக்கிறார்.சுமார் ஏறத் தாழ 12 நிமிடத்துக்கு சற்றேறக் குறைய பேசியதை அடியேனும் கவனித்தேன். ஆங்கிலத்திலும், தமிழிலும் தமது பணியை செவ்வனே செய்திருப்பதாகவே கருதுகிறேன். முடிந்தால் வாய்ப்பிருந்தால் நீங்களும் கேட்டுப் பாருங்கள்.


சட்ட மன்றங்களிலும்கூட‌  யாம் சிறுவயதில் கண்டதுண்டுM.L.C எம்.எல்.சி என ஒரு மேலவைப் பிரதிநிதித்துவம், மேலவை இப்போதெல்லாம் கலைத்து வெகு காலம் ஆகிவிட்டது. அவை எல்லாம் பொது மனிதர்க்கு, படிப்பார்க்கு, படைப்பார்க்கு என இருந்தது. அதெல்லாம் கூடத் தேவையில்லை என விட்டு விட்டார்கள்.


ஒரு நாடு எப்படி இருக்கிறது என்பதற்கு அந்த நாட்டின் ஆட்சியாளர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதே சான்று. அந்த ஆட்சியாளர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை வைத்துப் பார்த்தால் அந்த மக்கள் எப்படிப் பட்டவர்களாக இருந்து இவர்களை எல்லாம் தேர்வு செய்திருக்கிறார்கள் என்பதும் புரியும்.


மக்கள் எவ்வழி மன்னர் அவ்வழி, மன்னர் எவ்வழி மக்கள் அவ்வழி. சாக்ரடீஸ் கிரேக்க தேசத்தில் கி.மு 300 முதல் 400களிலேயே எப்படி இந்த மக்களாட்சி தத்துவம், வாக்கெடுப்பு முறை மூலமே மரணம் தழுவினார் என்பதை நாம் ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். அறிஞர்களுக்கு எப்போதுமே அது விதி. ஆனால் காலத்தை மிஞ்சி சரித்திரம் சொல்லும் அவர் பேர்களை அதுவும் ஒரு விதி.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


பி.கு: WITH THE  CONSIDERATION  OF IN FORMALLY சரியாக பள்ளிப் படிப்பைக் கூட நிறைவு செய்யாத ஒரு நபர் இவ்வளவு பெரிய ஏணியில் ஏறி இருக்கிறார் என்பதில் இருந்து அவரது உழைப்பை  அவரது திறத்தை நாம் கணித்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.Don't try to be neglect it.







Saturday, February 7, 2026

கோழி பாலு (எ) பிகே BK பிராய்லர்ஸ் பாலச்சந்திரன்: கவிஞர் தணிகை

 கோழி பாலு (எ) பிகே BK பிராய்லர்ஸ் பாலச்சந்திரன்: கவிஞர் தணிகை




நம்ப முடியாதவை எவ்வளவோ இருக்கின்றன.நடந்து விடுகின்றன. ஓர் அந்தி சாய்ந்த வேளை, கிராமியப் பகுதி மலையடிவாரத்தில் வேறு ஊருக்கு சென்று விட்டு நமது நாயகன் கால் நடைப் பயணமாக  விரைவாக ஊர் திரும்புகையில் இருட்டில் காலை ஒரு பாம்பின் மேல் வைத்து  விட்டதை உணர்கிறான் கால் பாதத்தின் அடியில் பாம்பு அதுவும் படம் எடுத்து கொண்டு தலை தூக்கி நிற்கிறது, இவனை ஏதும் செய்யவில்லை. இவன் அதிர்ச்சியில் உறைந்து போய் மெதுவாக பதற்றம் உள் இருப்பதைக் காட்டிக் கொள்ளாமல் அசையாமல் கீழிருந்த தனது வேட்டியை கைகளால் உயரத் தூக்கி ஏற்றிக் கட்டியபடி மெதுவாக அசையாமல் அசங்காமல் காலை நகர்த்திக் கொள்ள அந்த நாகம் இவனைத் தீண்டாமல் சென்று விடுகிறது. அதனால் தாம் அதன் பேர் நல்ல பாம்பு. 


இது கதை அல்ல உண்மைச் சம்பவம் இதை மறு நாளில் எனைப் பார்த்து பகிர்ந்து கொண்டார் நான் இன்று  உயிருடன் இருப்பதே பெரும் பேறு,என்னாலேயே இதை நம்ப முடியவில்லை என பெரும் வியப்புடன் கூறி இப்படி ஒன்று நடந்து விட்டது என விவரிக்கும் போதே என்ன உணர்வு என அறிய முடியாமலேயே இன்ப அதிர்ச்சி மறு நாள் காலை வரை குறையாமல் இருந்ததை அப்படியே சொன்னார்.  அந்த உண்மைச் சம்பவத்தின் நாயகன் பாலச் சந்திரன். அதன் பின் இவர் வாழ்வே மிகுந்த செல்வாக்கு மிக்கதாக மாறியுள்ளதைக் கண்கூடாகப் பார்த்து வருகிறேன்.


கோழி பாலு எனச் செல்லமாக என்னால் அழைத்து வரப் படும் பாலச் சந்திரன் மங்கிய கீச்சுக் குரல். நல்ல செயல்வீரர்,மென்மையான குணம் ஆனால் வீரியமுள்ள போர்க்குணமும் கொண்ட நல்ல விவசாயி.அடிப்படையில் இவர் விவசாயி நிலக்கிழார் ஆனாலும் இப்போது பல ஆண்டுகளாக BK பிகே பிராய்லரின் உரிமையாளர்.பெரிதாக படிப்பு ஒன்றும் இல்லை. ஆனால் மகனை எம்.எஸ்M.S பிரான்ஸில் படிக்க வைத்து வருகிறார். பெண் ஒரு பல் மருத்துவர்B.D.S இலண்டன் என்.ஆர்.ஐக்கு மணம் செய்து வைக்கிறார்.


ஒரு காளி கோவிலை தமது விவசாய நிலத்தின் சாலையோரத்தில் கட்டி பராமரிப்பு செய்து வணங்கி வருகிறார், மேலும் பாடம் போடுவதுமுண்டு.இவர் ஈனத்தொழில் புரிவதுதான் இவருக்கு ஏற்றது என இவரது குடும்ப சோதிடர் சொன்னதைப் பின் பற்றி கோழி வெட்டி இறைச்சி கடைக்கு சொந்தக்காரராக இந்தப் பகுதியில் பிரபலமடையக் காரணம் கோழி, காடை, முட்டை போன்றவை எல்லாக் கடைகளையும் விடவும் இவர் கடையில் 5 அல்லது 10 எப்போதுமே  விலைக் குறைவு என்பதுவும் மேலும் எடை நாணயம் போன்றவை.


வாரமொருமுறை வெகுதூரம் தமது சொந்த TEMPO வாகனத்தை எடுத்துக் கொண்டு சென்று பழநி அருகே சென்றேன், ஊத்துக்குளி சென்றேன்,என்று ஏதோ ஒரு தொலை தூர குக்கிராமங்களுக்கெல்லாம் சென்று பறவைகளை டெம்போ நிறைய  வாங்கி வந்து விற்று கை கண்டு விட்டார்.


இவர் நிலை கண்டு இவருக்கு பெண் கொடுக்க மாட்டேன் என்ற இவரது மாமனார் குடும்பம் தேடி வந்து பெண்ணளித்து குடும்பமாக்கிய கதையில் சோதிடம் பங்கு வகித்தது அதை அவரது சோதிடர் அப்படியே சொன்னதாக சொல்வதிலிருந்து அதைக் கேட்பார் மனதில் கூட சோதிடத்தின் மேல் ஒரு நம்பிக்கை வந்து நிற்கும்.


மொத்தத்தில் வளமான பாலு, பலமான பாலு, விவசாயத்தை நம்பி வீண்போகாத பாலு குடும்பத்தை சிறக்க வைத்தும் பிள்ளைகளை வளமுடன் வாழவைக்கும் வழிகள் கண்டு சிறப்பாக வாழ்ந்து வருகிறார். கல்வி ஒரு பொருட்டல்ல  முழு முயற்சியே  வாழ்வின் முன்னேற்றத்திற்கு முழு முதல் காரணம் என. என்றாலும் இவருக்கு இவரது முன்னோர் வைத்து சென்றுள்ள நிலமகள் அத்தனைக்கும் ஆதாரம்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

 பி.கு:‍ இத்தனைக்கும் அடியேன் 40 ஆண்டுக்கும் மேலான‌ தியானப் பயிற்சியிலும், இராமலிங்க வள்ளலார் பற்றும் , சைவ‌ நெறிமுறைகளைப் பின்பற்றும் முயற்சியில் இருந்தாலும் இந்த கசாப்புக் கடைக்கார விவசாயியும் நானும் நல்ல நண்பர்கள்.


Friday, February 6, 2026

செந்தில் குமாரும் செந்தில் முருகனும்: கவிஞர் தணிகை

 செந்தில் குமாரும் செந்தில் முருகனும்: கவிஞர் தணிகை



மேலை நாட்டுக்கு சென்று விட்ட ஒரு ஜென்டில்மேனும் அவருடன் ஒரே கல்லூரியில் படித்த மூத்த தோழரும் எனது நண்பர்களானார்கள்.


செந்தில் குமார் என்னும் செந்தில் எப்படி என்னுடன் நெருங்கினார் என்பதே என் நினைவில் இல்லை. ஆனால் அவருடைய் செயல்பாடுகளும் அளவான சொற்களும் அவரை ஒரு இனிய நபராகவே என்னுள் வைத்திருக்கிறது இனி(யன்), கனி (மொழி) என்ற தீந்தமிழ் சாற்றுப் பெயர் பாரம்பரியப் பெயர் தொடர்ச்சிகளுடன்...


எனது திருமண நாளும் இவருடைய திருமண நாளும் ஒன்றாகும் ஒவ்வொரு ஆண்டும் தவறாத வாழ்த்தை கோர்ப்பது அவரது இயல்புக்கு சான்றாகும். அவர் வாங்கிக் கொடுத்த 2 தொப்பிகள் நினைவு பறை சாற்ற‌

ஒரு முறை முடக்கு அறுத்தான் கீரையை தொடர்ந்து உண்ண (பச்சையாகவே) உடலில் சிறு கொப்புளங்கள் ஊசி முனை அளவு உண்டானதை கிள்ளியதால் அவை பெருத்தன பிரச்சனை உண்டு பண்ண அறுவை சிகிச்ச்சை செய்யுமளவு சென்று அவற்றை மருத்துவம் பார்க்க உடன் இருந்து இவர் செய்தது உதவி.


மூத்த இனியனை இலண்டனில் முதிர் நிலை கல்வி பயிலவும், இளைய கனியை விருப்பம்போல படிக்க வைப்பதும் அவரின் தகுதி . எல்லோருடனும் நல்நட்பு பாராட்டியே உயர்ந்தோரில் இவரையும் நாம் சேர்த்துக்  கொள்ளலாம். நாங்கள் எல்லாம் அவ்வளவு பெரிய் ஆட்களா? எங்களைப் பற்றி எல்லாம் எழுதுவீர்களா? என்றார் பதிலாக எமது கணக்கில் நல்லவர், கெட்டவர் தாம் பெரியவர் சிறியவர் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சொல்லியதால் விளைந்த பதிவு இது...


இவர்தாம் தமது சீனியர் என செந்தில் முருகன் என்னும் சமூக ஆர்வலரை தமது கல்லூரியில் படித்தவர் என்று அறிமுகப் படுத்தினார். அது முதல் இவரை பல நிகழ்வுகளில் இவரை சந்தித்தேன். இவர் நடத்திய நிகழ்வுகளிலும் பங்கு கொண்டேன்.


கெட்டதே பார்க்கத் தெரியாத மனிதம். எல்லாத் தரப்பு மனிதரிடையேயும் சென்று நல்லதை முன் மொழிந்து இருக்கும் இடத்தை இனியதாக்கத் தெரிந்த மானிடம். 


இவர்கள் இருவர்க்கும் இந்தப் பதிவின் மூலம் நன்றி


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


 

Thursday, February 5, 2026

திருவில்லிப் புத்தூர் இரத்தின வேல் அய்யா: கவிஞர் தணிகை

 திருவில்லிப் புத்தூர் இரத்தின வேல் அய்யா: கவிஞர் தணிகை



அரிய இந்த மனிதரைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். இணையத்தில், வலை தளத்தில், முக நூலில் கிடைத்த ஓர் நல் முத்து.இவர் மாதிரி இணையத்தை நல்லதுக்குப் பயன் படுத்தி வரும் நாயகன் எவருமே இல்லை எனச் சொல்லலாம். பெரியவர், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பண்பாளர்.நிறைய அறிவார் சார்புடைய சபைத் தொடர்பு. இவர் போன்ற மனிதரைக் காண்பதரிதிலும் அரிதே.


எல்லாரையுமே மகள், மகன், என்று அழைத்துக் கொண்டு, எல்லோரிடமும் அன்பு மழை எப்போதும் பொழிந்து கொண்டு சூல் கொண்டு உயிர் மேகமாய் வாழ்ந்து வரும் ஒரு ஆற்றல் மிக்க மனிதர்.சொல்லை விட செயலை விரும்பும் செயல் வீரர்.மென்மையான மேன்மையான செயல்பாட்டாளர் பொறுமை நிதானத்துக்கு சொந்தக்காரர் அவர் நீடூழி வாழ இந்தப் பதிவு வாழ்த்துகிறது. முதுமை அல்ல இவருடன் இருப்பது நிறைய அனுபவத்துடனான இளமை.


நானறிந்த வரை எதையுமே, எவரையுமே இவர் புறம் தள்ளுவதே இல்லை. ஆண்டாள் உற்சவம் திருவில்லிப் புத்தூரிலிருந்து இவர் உலகெலாம் தொடர்பேற்படுத்திக் கொள்வதைக் காண முடிகிறது, சிவகாசியில் ஒரு தீப்பெட்டி உற்பத்தித் தொழில் செய்வதாக அறிந்தேன். இவரின் வாரிசுகள் மேலை நாடுகளில் இருக்கிறார்கள். நாங்கள் இது வரை நேரில் சந்தித்ததே இல்லாத போதிலும் மிகவும் அணுக்கமான நண்பர்களாகவே இருக்கிறோம் எப்போதும்.


இவர் வழியாக சில புதிய‌ புத்தகங்கள் எனக்கு கிடைத்தன. அவை பற்றி எனது வலைப்பூவில் எழுதினேன்.எனது நூல்களையும் வாங்கி என்னைப் பெருமைப் படுத்தினார். வெளியே சொல்லக் கூடாது என்று என்னிடம் உறுதி மொழி வாங்கியபடி எனக்கு சில முறை எனது முக்கியமான கட்டங்களில் எனது மகனின் கல்விச் செலவுக்கு உதவிய மாமனிதர்.


சுஜாதா தமது இரத்தம் ஒரே நிறம் நாவலுக்கு இவரிடம் ஆதாரங்கள் பெற்றமை பற்றியும், அவர் எழுதிய கடிதத்தையும் பெருமையாகக் கூறுவார். அவருக்கு சுஜாதாவுக்கு நான் எனது நூல்களை அனுப்பி வந்தமை பற்றியும் அவர் எனை எனது பேரை ஒரு நூலில் (சிறு கதை நாவலில்) கதையின் நாயகனாக வைத்தது பற்றியும், கலாம் எனக்கு எழுதியிருந்தது பற்றி எல்லாம் பகிர்ந்து கொண்டிருந்தேன்.  அவர் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டமையின் போது ஏற்பட்ட இடைவெளியைக் கூட ஏன் உங்களைக் காணவில்லை என்பதற்கு பதிலாக‌ குறிப்பிட்டிருந்தார்.


இவரது விலாச அட்டையில் இவரது தர்மபத்தினி துணைவியுடன் இருப்பது எப்போதும் எம் கண்களில் நிற்கிறது. நட்பு என்பதும், அன்பு என்பதும் உலகின் எந்த மூலையிருந்தாலும் மலர்வதே மணம் பரப்ப, மனிதம் மனித நேயம் எப்போதும் உயிர்ப்புடன்...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.



Wednesday, February 4, 2026

ரைட்டர் சினிமா விமர்சனம் writer Tamil movie:கவிஞர் தணிகை

 ரைட்டர்  சினிமா விமர்சனம்:கவிஞர் தணிகை



எனது மடலேற்றுக் கட்டு , என்ன புரிகிறதா? தன் முகவரி உடைய கடிதத் தாள் கற்றையில் லட்டர் பேடில் ,,ஆங்கிலத்தில் பொயட், ரைட்டர், ப்ரீலேன்ஸ் ஜர்னலிஸ்ட் கம் சோசியல் ஆக்டிவிஸ்ட்(POET,WRITER,FREELANCE JOURNALIST CUM SOCIAL ACTIVIST) என்று எனது உருவம் மற்றும் காந்தி உருவத்தை அச்சடித்து தந்தார் அந்த நண்பர் அவர் தாம் இந்த வலைப்பூவையும் ஆரம்பித்து தந்தார் அதை எல்லாம் மறப்பதே இல்லை.


ரைட்டர் என்றால், எழுத்தாளர் என்றும் சொல்லலாம், எழுதும் பணி புரிபவர் என்றும் பொருள் இருக்கிறது அதுவும் காவல் நிலையங்களில் அந்த பெயர் தொழிலாக முன் வரிசையில் நிற்கிறது. இப்போதெல்லாம் சினிமா பார்ப்பதில் ஆர்வம் நாட்டம் இல்லை. அது பற்றி பெரிதாக அலட்டிக் கொண்டு பேசுவதுமில்லை. சிறை பார்க்க வேண்டும் என நினைத்தேன்,மேலும் வெளி நாட்டு நண்பர் ஊருக்கு வந்திருந்த போது பராசக்தி படத்துக்கு அழைக்கலாம் என்று இருந்து சார் தியேட்டருக்கு எல்லாம் வர விரும்ப மாட்டார் என விட்டு விட்டதாகவும் கூறினார்.


இப்போதெல்லாம் சினிமா பார்ப்பதில்லை நேரம் குறைவு மற்றபடி அவை விரயம் என்றே தோன்றுவதால் செல்வதால்.


ஏன் எனில் ரஜினிகாந்த், கமல், ஏன் இளையராஜா போன்றோர் கூட மது அருந்தும் மானிடர்தாம் என்பது அறிய முடிந்ததால் அவர்கள் தேவர்கள் அனுப்பி வைத்த தூதர்களாக எண்ணி இருந்ததும் உண்டு வெளித்தோற்றத்தை வைத்து அண்ணாந்து பார்த்தபடி...மதுவுக்கு எதிரான போராட்ட களம் கண்ட தோற்றுப் போன காந்திய சிந்தையானர்களில் நானும் ஒருவன்.


1980களில் தொட்டதெல்லாம் கவிதைத்தெறிப்பு என்னிடம் கண்ட எனது தோழர்களும், நண்பர்க்ளும் ஏன் காந்த காந்திய மூத்த‌ இயக்கத் தோழர்களும் கூட சினிமாத் துறைக்குச் செல்லுங்கள் மிகப் பிரபலமான பெரிய ஆளாய் வருவீர் என்பார்கள்...நல்ல வேளை நான் அந்த தவறை செய்யவில்லை. எனது இலக்கு நோக்கி நல்லபடியாக நகர்ந்திருக்கிறேன். என்னால் முடிந்தளவு நாட்டுக்கும் வீட்டுக்கும் செய்து விட்டதாகவே எண்ணுகிறேன்.


இப்போது ஒரு செய்தி பார்த்தேன் சிவாஜி ராவ் கெய்க்வாட் அவர்கள் 45 பவுன் எடுத்து உரியவரிடம் சேர்த்த அந்த பெண் துப்புரவுத் தொழிலாளியை அவர் தம் குடும்பத்தை அழைத்து கட்டி அணைத்து அளவளாவி 2 பவுன் செயினை பரிசளித்ததாக, முதல்வரும் ஒரு இலட்சம் கொடுத்துள்ளார் அது அரசியல் தளம். மற்றபடி ரஜினிகாந்த் என்னும் சிவஜி ராவ் கெய்க்வாட் அவர்களுக்கு விஜய் தேவலை அந்த ஒரே ஒரு விடயத்தில் துணிந்து அரசியலுக்கு தம் நலத்தை பின்னுக்குத் தள்ளி வந்து விட்டதால். மற்றபடி அவருக்குத் அந்தத் தகுதி, அரசியல் எல்லாம் தெரியுமா என்றால் எல்லாம் மைனஸ்.


கடந்த ஞாயிறு அன்று எண்ணுகிறேன், கலர் தொலைக்காட்சி channel , கலைஞர் மு. கருணாநிதி முதல்வராக இருந்தபோது அளித்த அதே தொலைக்காட்சியில்...அதை சிறிது நேரம் நேர்படப் பேசு மற்றும் சிறகடிக்க ஆசைக்காக பயன்படுத்தி வருகிறோம் இணைய வலைதளச் செலவு நீங்கலாக அதற்கு வேறு 130 ரூ செலவு மாதம்...


அதில் சிறிது நேரம் சமுத்திரக் கனி நடித்து, ஜேக்கப் இயக்கி பா இரஞ்சித் தயாரித்த‌ இந்த ரைட்டர் படம். ஒர் சேனலை விளம்பரம் விரும்பாமல் மாற்றி பார்க்க...ஓடிக்கொண்டிருந்ததை விட்டு வெளி வராமல் மனம் தைத்தது.பார்த்து முடிக்கும் போது மணி 11.30 இரவு ஆகி இருந்த்து உறக்கம் குறைந்தது.அப்புறம் தேடலில் அந்தப் படம் 2021லேயே வெளி வந்த படம் அதை யூ ட்யூப் சேனலிலேயே இலவசமாகக் காணலாம் என்றும் தெரிந்தது


எந்தத் துறையையுமே ஒட்டு மொத்தமாக நாம் கெட்டது, நல்லது என பார்க்க முடியாது பொதுவாகவே மனிதர்களுக்குரிய தனித் தன்மையுடன் மட்டுமே எவற்றையும் பார்க்க வேண்டும் என்பதற்கேற்ப இந்த சமுத்திரக் கனி ரைட்டர் கேரக்டர் மிக அருமை. படம் மிக இயல்பாக வந்திருக்கிறது ஆர்ப்பாட்டம் துளியின்றி. அதனால் எவரும் அதிகம் பார்த்திருக்க மாட்டார் என்றே எண்ணுகிறேன். வசூல் பற்றியும் வெற்றி தோல்வி பற்றியும் இந்தப் படம் பெற்றி பெரிதான செய்தி ஏதுமில்லை.


என்ன இது அநியாயம் ஒரு கல்லூரி மாணவனைப் பிடித்து காரணமில்லாமலே சிறையிலடைத்து என்கவுண்டரும் செய்கிறார்களே, என்று பார்க்கப் போனால் அதில் காவல்துறையினரின் தற்கொலை மரணங்கள் பற்றி தமது முனைவர் படிப்புக்காக ஆய்வு செய்யும் மாணவராக அவர் தேடப்பட்ட குற்றவாளி போல சித்தரிக்கப் பட்டு கொலை செய்யப் படுகிறார். அதில் ஒரு நியாயமான சாதுவான இந்த தங்கராஜ் என்னும் சமுத்திரக் கனி ரோல் எப்படி அதை அணுகுகிறது என்பதே படம்...வலையில் அகப்பட்ட எலி போல் காவல் துறைப் பணியில் சிக்கிய இந்த கேரக்டர் அல்லாடுகிறது ஒரு நீதியும் செய்து முடிக்கிறது. எல்லாமே இயல்பாக இருக்கிறது அதிகம், குறைவு என்பதெல்லாம் இல்லை.


முடிந்தால் ஒரு முறை பாருங்கள். மிக நல்ல படம்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.