Wednesday, September 2, 2026

உயிரின் வேகம்: கவிஞர் தணிகை

 உயிரின் வேகம்: கவிஞர் தணிகை



நேற்றைய தொடர்ச்சி இன்று இன்றின் தொடர்ச்சி நாளை நாளையின் தொடர்ச்சி..

இப்படியாக காலம் நகர்ந்து செல்கிறது நிறைய கூட்டிக் கொண்டு நிறைய விட்டு விட்டு


இதில் பழையது புதியது என்றேதுமில்லை, இதில் பழையது புதியது என்பது எல்லாவற்றிலும் இருக்கிறது...


உயிர்கள் அணுக்கள் புதுப்பித்தல் துவங்கி பழைய அணுக்கள் இறப்பது முதல், இரவு பகல் மாறுவது வரை


உயிர்கள் பழையதாகி பசி தாகம் தீர்த்து வளர்ந்து இயல்பாக மறைவது இயற்கை


ஆனால் ...


விபத்துகள் தாம் எத்தனை எத்தனை எப்படி எப்படி எவ்வளவோ?


ஒரு இளைஞர் எந்தவித இடையூறும் இல்லாத காலியான சாலையில் என்ன ஆயிற்று ஏது ஆயிற்று என்று சரியாக சொல்ல வாய்ப்பின்றி சாலையின் வாகனத்தில் சென்றவர் கீழே விழுந்து பின் மண்டையில் அடிபட்டு இறந்தார் இது ஒரு அண்மைச் செய்தி எங்கள் பக்கத்தில்...


சில காலத்திற்கும் முன், வீட்டில் நிறுத்தி வைத்திருந்த இரு சக்கர வாகனத்தை கியரிலேயே விட்டு விட்டு தந்தை இருந்திருக்கிறார். ஒரு ஏழெட்டு வயது சிறுமி அதில் ஏறி சாவி அப்படியே இருப்பதைக் கூடத் தெரியாமல் கியரை முறுக்கி அந்த வண்டி அவர்கள் வீட்டு சுவற்றிலேயே ஸ்டேண்ட் எடுபட்டு மோதி மண்டையில் அடிபட்டு இறந்தார். இதுவும் எங்கழ்ள் குடியிருப்புக்கு அருகாமையில் நடந்த செய்தி...


இப்படி உயிரின் வேகம் கடல் அலையின் வேகத்தோடு, ஆறுகளின் அடங்காமையின் வடிவத்தோடு, மலையாக இறுகிய பனிப்பாறைகள், பனிக் குன்றுகள், பனி மலைகள் உருகுதலோடு, எரிமலை வெடிப்புகளோடு, நிலநடுக்கத்தோடு, சுனாமிகளோடு,காட்டுத் தீ வடிவத்தோடு இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்...


அதில் நீங்களும் உங்களைச் சார்ந்தோரும் நலத்தோடு வாழ எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம்.எனவேதான் பெரியோர்கள் பிள்ளைகளை அதைச் செய்ய வேண்டாம் இதைச் செய்ய வேண்டாம் அப்படி இருக்க வேண்டாம் இப்படி இருக்க வேண்டாம் என கட்டுப்படுத்துவது மட்டுப்படுத்துவது எல்லாம்...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

Monday, August 31, 2026

கவனக் குறைவுக்கு அளவே இல்லையா? கவிஞர் தணிகை

 கவனக் குறைவுக்கு அளவே இல்லையா? கவிஞர் தணிகை



செரித்துக் கொள்ள முடியா இரு மரணங்கள்:


அவர் ஒரு சமூகத்தில் முக்கியமான நபர்,ஒரு பேரூராட்சியின் உதவிப் பெருந்தலைவராகவும் இருந்தவர், கம்பீரமான தோற்றம். அதற்குத் தக்க பெயர் போரில் மன்னன் என...அவர் ஒரு ட்ராக்டர் வண்டி வீட்டில் அதற்குண்டான கூடாரத்தில் நிறுத்தி இருந்தார் .அதற்கு இயக்கத்தில் பிரச்சனை எனவே அதை முன் நாளில் வந்து ஒரு பழுது பார்ப்பவர் பார்த்துப் போய் இருக்கிறார்.


மறு நாள் காலை இவர் அந்த வாகனத்தை சோதித்துப் பார்க்க முயல அது கியரில் இருந்து ஓட ஆரம்பித்து இவரை இவரது வாகன அறையின் சுவற்றிலேயே தேய்த்து இடுப்புக்கும் கீழ் அரைத்து இல்லாமல் செய்து உயிரைப் பறித்தது. 


இந்த நினைவே இன்னும் மறக்க முடியாதிருக்க நேற்று ஒரு செவி வழிச் செய்தியில்:

எண்ணெய்ச் செக்கு மோட்டாரில் ஒரு நடுத்தர வயது பெண் சிக்கி அவரது உடலே துண்டுகளாகி வீட்டுக் கூரைக்கும் மேல் எல்லாம் தெறித்து விட்டதாகவும் உடலே இல்லாது பாதிக்கும் மேல் துண்டுகளாகிப் போனதாகவும் காரணம் அவரது கட்டிய சேலை அந்த மோட்டாரில் சிக்கியதே காரணம் என்று பேசப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 


மனிதர்கள் மேலும் மேலும் வளர ஆசைப்படுவதில் தவறில்லை. அத்தனைக்கும் ஆசைப்படு என்றவர் கண்ணீர் வடிப்பது போல...ஆனால் நாம் நம் நிலையை என்றும் உணரத் தலைப்பட வேண்டும். தூக்கக் கலக்கத்தில் ஒரு போதும் பணி புரியவே கூடாது. உடல் இரும்பாயிருந்தாலும் துரு ஏறத்தானே செய்யும்.


பிறப்பின் வழி ஒன்றாயிருந்த போதும் மரண வழிகளில்தாம் எத்தனை வகைகள்.  முகலாய மன்னன் ஹுமாயுனின் மரணம் விசித்திரமாய் நிகழ்ந்ததாக வரலாறு சொல்கிறது. 1556ல் கையில் நிறைய புத்தகங்களுடன் நூலகத்தில் இருந்து வருகையில் தொழுகைக்கான அறிவுறுத்தல் குரல் கேட்க இவர் அப்படியே  அதற்காக பணிந்து (தொழுகைக்கு நேரமாகி விட்டதே என்ற பதற்றத்தில்)  தமது நீளமான அங்கியில் காலை வைத்து தடுமாறி படிகளில் விழுந்து உருண்டு சுவற்றுக் கல்லில் தலை அடிபட்டு 3 நாட்கள் உயிருடன் இருந்து மறைந்ததாக சொல்கிறது ஒரு வரலாற்றுச் செய்தி.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

Saturday, August 29, 2026

யோகி: கவிஞர் தணிகை

 யோகி: கவிஞர் தணிகை



பாம்புடன் உரையாடி விளையாட்டு,சுண்டெலியுடன் செல்லம் கொஞ்சுதல், வீடா அது அல்ல ஒரு மனிதனின் கூடு அதில் எல்லா உயிர்களுக்கும் அடைக்கலம்.ஒரு குழந்தையும் வந்து சேர்ந்து கொள்கிறது அந்த கொலைகார‌ கொள்ளைக்காரத் திருடனுக்கு. இரவு வேட்டையாடி பிழைக்கும் ஒரு கொடும் பிழைப்பு. அதில் குழந்தைக்கு தாய்ப்பால் கேட்டு ஒரு பெண் பிள்ளையை மிரட்டிப் பணிய வைப்பது அந்தப் பெண்பிள்ளை இளகிய மனம் படைத்தவளாய் இருப்பது, அவள் இவனின் அதிர்ஷ்ட வாய்ப்பாய் துணையின்றி குழைந்தையுடன் தூளி கட்டிக் கொண்டு பொம்மை விற்று பிழைப்பது இப்படியாகச் செல்கிறது கதை


கொடுமைக்கார அப்பனை முதலில் ஈவு இரக்கமின்றி தள்ளிக் கொண்டு சென்ற வண்டியை அப்படியே சாலையில் செல்லும் பெரிய வாகனத்தில் தள்ளி காவு வாங்கி விடுகிறான் ஆனால் அந்த தள்ளு வண்டியில் கட்டி இருக்கும் நாயை கருணை கொண்டு அவிழ்த்து விட்டு விடுகிறான்.


அந்தச் சிறுவன் நல்லவனாகவே இருக்கிறான் தாயை மருந்து வாங்கி காப்பாற்ற நினைக்கிறான் தமக்கு கிடைக்கும் பிச்சையில்...எல்லாம் பிச்சைதான்...அதையும் அனுமதிக்க மறுக்கும் தந்தை அவனது தாயை மிகவும் சொல்ல முடியா அளவு கொடுமைப்படுத்தி கடைசியில் அவள் தூக்கிலிட்டுக் கொண்டு இறக்க அந்த தந்தை இந்தச் சிறுவனை மிரட்டி பிச்சை எடுத்து சொகுசாய் வாழ எண்ணுகிறான். 


பார்க்கவே அருவருக்கத் தக்க கதா பாத்திரமாய் அந்தச் சிறுவனின் சினைப்பன்றி போன்ற தந்தை.அந்தச் சேற்றில் இருந்து முளைத்த செந்தாமரையாய் இந்தச் சிறுவன்...எவ்வளவு கீழ்த்தரமாய், கீழாய் இருக்கும் இடத்தில் இருந்து உருவாகும் இந்தச் சிறுவன் இளைஞராய் எதற்கும் அஞ்சாமல் மாறி நிற்கிறான்.


சாவுக்குத் துணிந்து விட்டால் எதுதான் தடை?எவ்வளவு கீழாக இருந்தானோ அவ்வளவு மேலாக உயரத்தில் நின்று அந்தக் குழந்தைக்காக அதன் உயிர் காக்க தம் உயிரைத் தியாகம் செய்கிறான் அந்தக் குழந்தையின் தாயின் கையால் மடிகிறான், அவளிடம் தாம் அவளிடம் அந்தக் குழந்தையை நல்லபடியாக சேர்க்க எண்ணியதை சொல்லக் கூட முடியாமல்...பார்க்கும் நமக்கு தெரிய வைத்து விடுகிறார்கள் இவனது கதையை, ஆனால் அந்தக் குழந்தையின் பணக்காரத் தாய் எதையுமே தெரியாமல் இருக்குமாறு தமது கணவன் கூட ஒரு கயவனே என்பதை அறியமுடியாமலே இந்தக் கதை முடிவுக்கு வந்து விடுகிறது.


இதுதான் யோகி என்ற 2009ல் வந்த திரைப்படம். ஏற்றிருக்கும் எல்லா பாத்திரத்தை எல்லா நடிகர்களுமே நன்றாக  செய்திருக்கிறார்கள் கயல் செல்வராஜ் என்பவர் எல்லாரும் வெறுக்குமளவிலான ஏய்த்துப் பிழைக்கும் பிச்சைக்காரத் தந்தையாக வருகிறார். இந்தப் படம் ஏனோ நான் கடவுள் போன்று மிக அடிமட்டத்தையும் மனிதம் என்ற‌ மிக உயர் உச்சி சிகரத்தையும் கதையின் மூலம் தொடுவதாய் இருக்கிறது.


கல்லுக்குள் ஈரம், என்பார்களே அப்படி குழந்தை என்றால் தெய்வமும் இரங்கும் பேயும் இரங்கும் என்பது போல....ஒரு அமீர் கேரக்டர். அமீர் நல்லப் பக்குவப்பட்ட ஒரு குற்றப் பின்னணி உள்ள சிறுவன் எல்லா அனுபவங்களையும் பெற்ற ஒரு ரௌடி, கொலைகார, கொள்ளைக்கார பயமில்லா இளைஞரை நம் முன் கொண்டு நிறுத்தி இருக்கிறார்.

இந்த சினேகன் என்ற நபரை அவரின் குரலை வைத்துதான் அடையாளம் காண வேண்டி இருக்கிறது அப்படிப்பட்ட  தத்ரூபமான ரௌடியாக, ரௌடியின் நயவஞ்சக தோழராக வருகிறார்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


Friday, August 28, 2026

சொல்லாமல் இருக்க முடியவில்லை: கவிஞர் தணிகை

 சொல்லாமல் இருக்க முடியவில்லை: கவிஞர் தணிகை



42 ஆண்டுகளாக அடியேனும் தியானப் பயிற்சியில் இருக்கிறேன்.


விரல் விட்டு எண்ணக் கூடிய அற்புத மனிதர்கள் அடியேன் மூலமும் தியானம் கற்றுக் கொண்டு நற் தொடர்பில் இருக்கின்றனர் ஒரு மருத்துவர் சில பொறியாளர்கள் உட்பட...


தியானம் என்பது கற்றுக் கொடுக்க முடியாதது, கற்றுக் கொள்வது என்பதே நியதி

கண்களை மூடி உலகைக் காணவும், கண்களைத் திறந்து உலகை மறக்கவும் சேதி சொல்லும் அற்புதக் கலை இது.

ஒரு ராத்திரியில்

ஒருவர் என் அருள் பெற தமிழக மக்களே  எனது ஒரு ருத்திராட்சத்தை இலவசமாகப் பெறுங்கள் என்றவர் மூளையில் ஒரு அறுவை சிகிச்சை தலைநகர மருத்துவ மனை ஒன்றில் எடுத்துக் கொண்டவர் இப்போது தமது வெளி நாட்டு சீடர்கள் நேபாள வெள்ளத்தில் காணோம் என்று கண்ணீர் வடித்துள்ளார்.


இவர் அருள் மூலம் இவரது சீடர்களைக் காப்பாற்றி இருக்கலாம்


இவனோ அவனோ எவனோ எதுவும் செய்ய முடியாது...இயற்கை என்பதில் யாவும் அடங்கும் அடக்கும்...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

Tuesday, August 25, 2026

பகாசூரன் 2023 தமிழ் திரைப்படம்: கவிஞர் தணிகை

 பகாசூரன் 2023 தமிழ் திரைப்படம்: கவிஞர் தணிகை





செல்வ ராகவன், நட்ராஜ் ஆகியோர்  கதையின் இரு நாயகர்கள்


மஹாபாரதம் பீமராஜா, கூத்து, 


சினிமா பற்றிய பார்வையை எல்லாம் விட்டிருந்தேன். இந்தப் படத்தை பார்க்க வேண்டி வந்தது ஒரு தொலைக்காட்சியில் அதன் பிறகு இன்று பார்த்தால் அதை யூ ட்யூபிலேயே பார்த்திருக்கலாம் 2023லேயே வந்த படம் என்று தெரிந்தது.


செல்பேசியின் நச்சுத் தனம் பற்றி கடைசியில் நடராஜின் அறிவுரையுடன் பீமராஜுவின் வேண்டுகோளுக்கு இணங்க முடிகிறது. 


பகாசூரன் என்பது தொடு திரை செல்பேசி என்று அரியவகையில் சொல்லி இருப்பது ஏற்புடையதாகவே இருக்கிறது.


முழு திரைப்படமுமே பெண்களை தவறான வழியில் பிளாக்மெய்ல் செய்து பயமுறுத்தி தம் இச்சைக்கு பயன்படுத்துவார் மற்றும் அதன் தொடர்பில் இருக்கும் பெண்கள் ஆண்கள், பாலியல் தொழில், பணம் சம்பாதித்தல் பற்றியதாகவே இருக்கிறது. அதில் நிறைய பருவ வயதுப் பெண்களும், கல்லூரி பெண்களும் எப்படி பழி ஆகிறார்கள் என்று தெளிவாகச் சொல்கிறது.


அந்த தீயவர்கள் எப்படி ஒரு வலைப்பின்னலுடன் செயல்படுகின்றனர் வாழ்கின்றனர், அதில் நட்ராஜ் எப்படி ஒரு யூ ட்யூபராக அவற்றை வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறார், செல்வராகவன் தனது பெண்ணுக்கு நடந்த கொடுமைக்கு எப்படி பழி வாங்குகிறார், என்பதெல்லாம் படத்தை நம்மைப் பார்க்க வைக்கிறது. 


அதில் ஒரு கல்லூரி நிர்வாகமும் அதன் தாளாளரும் , விடுதி காப்பாளரும், ஒரு காவல்காரரும் எப்படி எல்லாம் ஈடுபடுகிறார்கள் என்பதையும் அவர்க‌ளை எப்படி பீமராஜி(செல்வராகவன்) தண்டிக்கிறார் என்பதுமே படம். ராதாரவிக்கு இனிமேலும் இப்படிப்பட்ட வில்லத்தனமான பாத்திரங்கள் தேவையா என்று கேட்கத் தோன்றுகிறது.


எல்லாக் கதையையும் சொல்லி விட்டு கடைசியில் எதைத் தின்றாலும் பசி ஆறாத பகாசூரன் இந்த செல்பேசி என்று முடிக்கிறார் நட்ராஜ் அதற்கு மஹாபாரத கதைகள் அங்கு தூவப்பட்டுள்ளன சில அத்தியாயங்களை அடையாளப்படுத்தி,கீசக வதம் இல்லை, ஜராசந்தன் வதம், பகாசூரன் வதை இப்படி....


சதுரங்க வேட்டை நட்ராஜ் தமது சித்தப்பா ஒருவர் புதிதாக கட்டிய வீட்டில் பளபளப்பான டைல்ஸ் வழுக்கி விழுந்து இறந்து விட‌ இனி வீடுகளில் டைல்ஸ் போடாதீர்கள் என ஒரு காணொளி வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கதே...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


Monday, August 24, 2026

நாய்க் கதை: கவிஞர் தணிகை

 நாய்க் கதை: கவிஞர் தணிகை



நாய்கள் ஜாக்கிரதை(எச்சரிக்கை வாசகம் உள்ள வீட்டைப் பார்த்திருப்பீர்கள்...இப்போதெல்லாம் அதெல்லாம் கூட இல்லை.எல்லாருமே நாய் வளர்க்க எண்ணுகிறார்கள் ஆனால் எவ்வித அடுத்தவர் பற்றிய எண்ணமுமின்றி.இந்த நாய் ஒன்னும் பண்ணாது, கடிக்காது என்கிறார்கள் அது நாய்க்கும் நமக்கும் தெரிந்தால் தானே...


ஜப்பானிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய ஒழுக்கங்களுள் இதுவும் இருக்கிறது. அவர்கள் நாயை வெளியே நடைப்பயிற்சிக்கு கொண்டு வரும்போது வாயை மூடி, அதே நேரத்தில் மலக் கழிவை ஒரு பையில் வைத்து பொது இடச் சுகாதாரம் நேசித்தபடி எடுத்துச் சென்று அதை அப்புறப் படுத்தி விடுகிறார்கள்.


இங்கு எச்சமிடா பறவை வேண்டும் , வெளிக்குப் போகாத நாய் வேண்டும் வீட்டுவளர்ப்புக்கு என நினைக்கிறார்கள் இல்லையேல் அடுத்தவர் அல்லது சுற்றுப் புறம் பற்றிய கவலை எல்லாம் இல்லை, எங்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும்...


தம்முடைய நாயை விட அடுத்தவர் வீடு, உடல், உயிர் ,எல்லாமே தரக்குறைவு என்ற எண்ணத்தில் நிறைய பேர் ஜம்பம் பாராட்டுகிறார்கள். நாய்க்குப் பிறந்த நாள் கொண்டாடி கேக் ஊட்டுவது வெட்டுவது, நாயை வாகனங்களில் அழைத்துச் செல்வது, படுக்கையில் உடன் படுத்துக் கொள்ளச் செய்வது...இப்படியாக செல்லப் பிராணி அபாயப் பிராணியாக மாறும் வரை எல்லாமே நல்லதுதான் என்று நினைக்கிறார்கள். விவேகானந்தரிடம் ஒருவர் சென்று பசு வதை, கோ சாலை பற்றி எல்லாம் பேசிட எதிர்பார்த்திட மனிதர்க்கு அப்புறம் தான் அவை எல்லாம் என அவரை வெறும் கையுடன் நரேந்திரர் திருப்பி அனுப்பியதான ஒரு நிகழ்வை படித்த நினைவு இப்போது என்னுள்.


தெரு நாய்கள் ஏராளம், கால்நடைகளில்(ஆடு மாடுகளில்) பெண் வேண்டும், ஆனால் நாய் பூனைகளில் பெண் வேண்டாம் என எடுத்து பொது இடங்களில் போட்டுச் சென்று விடுகிறார்கள்...


எங்கள் புது வீட்டருகே நிறைய தெரு நாய்கள் ...அவை சாலையின் நடுவிலேயே படுத்துக் கொண்டு உறங்குவதும்,மலம் கழித்து விடுவதும், சிறு நீர் கழிப்பதுமாய்...  அவற்றை துரத்தி விடுவது சிறந்தது ...அடிப்பது அல்ல‌...


இப்போது விலங்குகளை துன்புறுத்துவது குற்றம் எனவே நாய்களை பிடித்துச் சென்று தடுப்பூசி போட்டு திரும்ப கொண்டு வந்து விட்டு விடுகிறார்கள். மேலும் கடந்த காலத்தில் பிடித்துச் சென்று இவர்கள் விட்டு விட்ட இடங்களில் இருந்து அவை மறுபடியும் அதே இடத்துக்கு அதனதன் இடத்துக்கே வந்து சேர்ந்து விட்டன.


சில நாட்களுக்கும் முன் எங்கள் வீட்டு முன் ஒரு கழுத்திலே குடத்தின் வாய் மாட்டப் பட்டிருந்த பெண் நாயை பிடித்துச் சென்றார்கள். ஆனால் அந்த நாயும் இன்னொரு நாயும் சேர்ந்து 9 குட்டிகளை ஈன்றிருக்க...அக்கம் பக்கத்தினர் குட்டிகள் பாலின்றி இறந்து விடுமோ என பிரார்த்திக்க வேண்டியதாயிற்று. 


நல்ல வேளை அந்த நாயை திரும்ப கொண்டு வந்து விட்டு விட குட்டிகள் தப்பின பசியிலிருந்து.இப்போது அந்த குட்டிப் போட்ட நாயை துரத்தக் கூட மனசு வரவில்லை. எப்படியோ போகட்டும் நம்மை பாதிக்காதவரை என்ற நிலை வந்து விட்டது. ஆனால் நாய்க்கடி பட்ட ஒரு நபர் இறந்து போன செய்தியும்  உள் புகுந்து நிம்மதியை குலைக்கத்தான் செய்கிறது.மாட்டிய கழுத்துக் குடம் அப்படியேதான் இருக்கிறது.


எது காருண்யம் என்றே தெரியவில்லை, கட்டெறும்புகளும் , சிற்றெறும்புகளும், அதனினும் சிறு எறும்புகளும், கரையான்களும் வீட்டை துளையிட்டு வாழ்ந்து வருவதை சரி செய்தாலும் பாவம் தானே... ,பாம்பு, பல்லி, பூரான், தேள், பூச்சிகள், கரப்பான்கள், குளவிகள், கொசுக்கள் இப்படி எவற்றையுமே அழிக்காமல் எப்படி மனித அமைவிடங்கள் இருக்க முடியும்? 


ஒன்று இராமலிங்க அடிகளார் போல சித்தர்கள் போல வீடு வாசல் ஏதுமின்றி பிச்சை வாங்கி உண்டு விட்டு பரதேசம் என்று அலைய வேண்டும் அல்லது விவசாயக் குடியானவர்கள் உயிர்களை எல்லாம் அழித்து பயிர் பச்சைகளை செழிக்கச் செய்து உணவளிப்பதில் எவ்வித பாவமுமில்லை புண்ணியமே என்றெண்ண வேண்டும், படை வீரர்கள் பிறரைக் கொல்வதெல்லாம் என்ன கணக்கு? கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்கிறார்கள் தினமும் நடைப்பயிற்சியின் போது எங்களுக்கு கோபுர தரிசனம் உண்டு...இடுக்குப் பிள்ளையார் வழியில் திருவண்ணாமலையில் உயிர் நீத்த உயிருக்கு புண்ணியம் கிட்டி இருக்குமோ? அட திருவண்ணாமலை மண்ணை மிதித்தாலே முக்தி என்கிறார்களே அது எந்தளவு உண்மையாயிருக்கும்? காசியில் உயிர் நீத்தால் புண்ணியமாமே இது என்ன சொல்ல வருகிறது...இப்படி நிறைய கேள்விகள்..நான் நமது கருப் பொருளிலிருந்து விலகி சிந்தித்து விட்டேன் மறுபடியும் விட்ட இடத்திற்கே வந்து சேர்கிறேன் நமது நாய்க் கதைக்கு...


நடைப் பயிற்சியின் போது ஒரு முறை அருகே குரைத்தபடி வந்த ஒரு பெண் நாயை விரட்ட கற்களை வீசினோம் அது முதல் அது கடிக்கமுடியுமளவு அருகே வராமலே சிறந்த ஒரு வரவேற்பாளராக எங்களைக் கண்டுவிட்டால் இடைவெளி விட்டு  வரும்  போதும் போகும்போதும் பிறர் அது உங்களை மட்டும் ஏன் குரைத்தபடி  பின் தொடர்கிறது என்று கேட்கும்படி குரைத்தபடியே இருக்கும் பார்க்கும் போதெல்லாம்.  வரவேற்று பின் தொடரும், வழியனுப்பி பின் தொடரும்...வெல்லம் கூட ஒரு முறை வைத்துப் பார்த்தோம். அது எடுக்கவில்லை. ஒரு வேளை வெல்லம் தரம் கெட்டதாக இருந்திருக்குமோ...


நாய் குரைக்கிறது, குலைக்கிறது என்பதற்கு மாறாக சிலர் உழைக்கிறது என்றே சொல்கிறார்கள். முப்பத்து ஐந்து என்பதற்கு பதிலாக நுப்பத்து ஐந்து என்பது போல... முப்பத்து மூன்று பத்து நுப்பத்து ?

வீட்டு நாய்கள் கூட வீட்டை எஜமானர் பூட்டிச் சென்று தனிமைப் படும்போது உளையிடுகின்றன.


நிலவொளி இரா வானம், முழு நிலவு வானம் இரண்டிலுமே கவனியுங்கள் நாய்களின் உணர்வலைகள் அதிகமாகவே இருக்கின்றன...இது ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் பட வேண்டிய ஒரு விடயம்.


மேலும் எமன் வருவது நாய்க்குத் தெரியும் என்கிறார்கள், சாக்குருவி வீச்சு என சப்தமிடுவது போல, ஆந்தை என்கிற கோட்டான் அனத்திக் கொண்டு சப்தமிடும் போதெல்லாம் மனித இனத்துக்கு தீங்கு என எவராவது இறந்து விடுகிறார்கள் என்பதெல்லாம் அனுபவப் படி எடுத்துக் கொள்ளலாம்.


 மனித நடமாட்டத்தின் போது அருகே தென்னை மட்டை விழுவது, பனம்பழம் விழுவது...


கடைசியாக ஒன்று: நாங்களும் நாய்கள் வளர்த்தியிருக்கிறோம், அடுத்தவர்க்கு தொல்லை இன்றி, எங்கள் நாய் எச்சங்களை நாங்களே எடுத்து அப்புறப் படுத்தி துப்புரவு செய்தபடி,ஏன் வெளியே அவை சென்று ஏதும் அசுத்தம் செய்யாதபடிதான் வளர்த்தி இருக்கிறோம். அதை குளிப்பாட்டி வாரம் சில முறை, அதற்கு நோட்டிக்ஸ் எனும் பவுடர் போட்டு, நல்ல உணவிட்டு, நகங்களை எல்லாம் சீராக வெட்டி ,நோய் வந்த போதெல்லாம் மருந்தளித்து,  வயதான போது ஐவர் மெக்டின் என்ற ஊசி மருந்து செலுத்தி, அது கண் குருடாகி சாக்கடை எது என்று கூட தெரியாத வயது வரை எல்லாம் வளர்த்தி அதன் வாழ்வை வளம் பெறச் செய்திருக்கிறோம். எனவே ஒரு வாரிசு, நாய் வேண்டும் , பிரியம் செலுத்த நாய் வேண்டும்  நாய் வளர்க்க வேண்டும் என இன்னும் வேண்டுகோள் வைத்தபடியே இருக்கிறது...

PET CARE பத்திரிகை அப்போது தொடர்ந்து வந்து கொண்டிருந்தது பல ஆண்டுகள். அதன் பின் என்ன காரணத்தாலோ நின்று போய்விட்டது. சந்தா புதுப்பிக்காததாலோ அல்லது இனி அது தேவைப்படாது என்பதாலோ!


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


Tuesday, August 18, 2026

தமிழ் வழிச் சமுதாயத்தின் ஒரு கேட்காத குரல்: கவிஞர் தணிகை

 தமிழ் வழிச் சமுதாயத்தின் ஒரு கேட்காத குரல்: கவிஞர் தணிகை



இரண்டாயிரம் ஆண்டுகள் அல்லது இருபது நூற்றாண்டுகள் அல்லது அதற்கும் மேலான‌ ஆண்டுகள்...நூல்கள்...திரித்தவை...


விலங்குகள், பறவை இனத்திற்கு ஒலி உண்டு ஆனால் மொழி இன்றி... ஆனால் அவற்றின் சோகம், மகிழ்வு,யாவும் அவற்றின் உணர்வுடனான‌ ஒலி வெளிப்பாட்டுடன்...


மனிதம் மொழி வழி வாழ்கிறது உயர்கிறது உன்னதம் தொடுகிறது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னே  தமிழில் திருக்குறள், பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, பதிணெண்கீழ்க்கணக்கு நூல்கள்,காவியங்கள், காப்பியங்கள்,... முதல் சங்கம், இடைச் சங்கம், கடைச்சங்கம் என சங்கம் வளர்த்த தமிழ் அதன் பின் மிகவும் பிற்காலத்தில் விவிலிய மறை, குரான் தர்ஜமா, பகவத் கீதை போன்ற எல்லா மதம் சார்ந்த நூல்களிலுமே நல்ல தமிழ் காண முடியும்.  

இடை இடையே சித்தர்களும் யோகிகளும் சிந்தனையின் ஞானியரும் பன்னிரு ஆழ்வார்களும், 63 நாயன்மார்களும் எப்படி எல்லாம் போட்டி பொறாமைகளிடையே தமிழ் வளர்க்க பாடல் இயற்றினார்கள் என்பதெல்லாம் வரலாறு.


மகாத்மா காந்தி அஹிம்சை தேடும் போது ரஸ்கின் கடையனுக்கும் கடைத்தேற்றம் என்று சொல்ல, டால்ஸ்டாயிடம் அஹிம்சை என்பதை எங்கிருந்து கற்றீர் எனக் கேட்கும் போது அது தமிழ் கொடுத்த கொடை, திருக்குறளில் "இன்னா செய்தாரை...ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்தல்...தமிழகத்தின் சீதனம் என்றறிந்து தமிழ் கற்றே தீர்வது என ஒரு ஆசிரியரை நியமித்துக் கொண்டு தமிழ் கற்கிறார், மதுரை வந்து மேலாடை துறக்கிறார்.


மகாத்மாவிற்கு உலகெலாம் நல்ல அங்கீகாரம் இருந்தது.


கல்லணை, தஞ்சைப் பெரிய கோயில் என தமிழ் வளர்த்த  தொழில் நுட்ப சான்றுகள் எண்ணிறந்தன...என்றும் கொண்டாடப் பட வேண்டியவையாய்...மேலும் ராஜேந்திர சோழனால் கடல் கடந்து சென்ற கோலாகலம் எல்லாம் சொல்லி மாளா. அவ்வளவு யானைப்படையின் யானைகள், அவ்வளவு நாவாய்கள்...


சரி இரண்டாயிரம் அதன் பின் சரிந்து ஒரு கட்டத்தில் நம் முன்னோர் படிப்பறிவற்றவராக போய் விட்டனர். இப்போது மூன்றாம் முன் தலைமுறை முதல் படிப்பை நுகர ஆரம்பித்த இந்த இனத்துக்காக மொழிக்காக சுதந்திரப் போர் தியாகிகளைப் போல் தம்மை விதைத்தவர் நிறைய...


வெடி மருந்தும் , தோட்டாவும், துப்பாக்கி, பீரங்கி, டாங்குகள், அணு ஆய்தம், இரசாயன ஆயுதம் போன்றவற்றை ஐரோப்பியர் கண்டுபிடித்தலால் உலகப் போர்களால் உலகு கெட்டது...அறிவியல் நம்மை வசதி படைத்தவர்களாகச் செய்துள்ளது ஆனால் வாழ்வைக்கிறதா என்றால் அதெல்லாம் கலந்துரையாடி விவாதித்து முடிவுகள் எட்டப்பட வேண்டியதாகிறது. அனால் அவர்கள் விஞ்சி விட்டார்கள் காலனி ஆதிக்கம் நமை மிஞ்சி விட்டது.


இப்போது ஒரு கலவையாக அவர்களோடு கலந்து பயணம் செய்து வருகிறோம். மொழியறிவு அழிந்து வருகிறது. உலகமயம், தனியார் மயம், தாரளமயம் என....


எது நன்மை பயக்காதோ அவற்றை எல்லாம் பின் பற்ற ஆரம்பித்திருக்கிறோம்...இனி யாம் சொல்ல இப்போதைக்கு ஒன்றுமில்லை, எல்லைக்கு வந்து விட்டோம்...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை