சாமி யார் அம்மா? சாமியாரம்மா: கவிஞர் தணிகை
எனது அன்பு வாசகர்களுக்கும் அன்பர்களுக்கும், நண்பர்களுக்கும் இன்று நான் எடுத்துக் கொண்டிருக்கும் கருப் பொருள் மகா நுட்பமனது நுட்பமானது, நுணுக்கமானது ஏன் சிக்கலானதும் கூட. எனவே சற்று கூடுதலான கவனம் தேவை இதைப் படித்துப் பரிசீலிப்பதற்கு.
கடவுள் இல்லை என்பாரிலும் கடவுள் உண்டு என்பாரிலும் எவ்வளவோ சக்தி புதைந்து கிடைக்கிறது என்பது மறுக்க முடியா உண்மை.
நான் இல்லை அடியேன் சிறுவனாக இருந்த போதிருந்து பார்த்து அனுபவித்து ருசித்த அனுபவத்தையே இந்தப் பதிவில் தருகிறேன். இதற்கும் முன்பே வேறோ எங்கோ தந்திருப்பதாகவும் நினைவு.இருந்தாலும் இன்று அதை மறுபடியும் தருவதால் எவர்க்காவது பயன்படும் என்ற நோக்கம் உண்டு.
பொதுவாகவே வானொலியில், தொலைக்காட்சியில் மின்பொருளாய் இருக்கும் ட்ரான்ஸ்மீட்டர் வழியே நமக்கு வேண்டும் அல்லது வேண்டாத அலைநீளத்தின் வழியே செய்திகளை, காட்சிகளை ஒலி, ஒளியாகப் பெற்று வருவது அனைவரும் அறிந்ததே. அதே போல் இன்றைய செல்பேசிகள், செயலிகள்,செயற்கை நுண்ணறிவு(ஆர்ட்டிபிசியல் இன்டலிஜென்ஸ் ஏ ஐ) அதே நிலை அதை விட அதிக சக்தியுடன் மனித மூளைக்கும் உண்டு அதை பண்படுத்தி பயன்படுத்திப் பார்ப்பதில் தான் வேறுபாடு. சிலர் அதை ஆன்மீகம் , மனோசக்தி என்றே சொல்ல, சிலர் பலர் அதை பக்தி, மதம் என்று சொல்லி வருவதும் உண்டு. மனோ வேகம் வாயு வேகம் என்பார்களே கேள்விப்பட்டதுண்டா?
மற்ற உயிர்களை விட மனிதர்க்கு நீண்ட காலம் நோய் நொடியின்றி வாழ வேண்டும் உடல் அதனுள் உறையும் உயிர் எப்போதும் வேண்டும் என்ற பேரவா உண்டு.எனவே அறிவியல், ஆன்மீகம் வழித் தேடல் உண்டு கொண்டு தொடர்ந்தபடி...அதி மன உணர்வு, அடி மன உணர்வு, உள்ளுணர்வு என படிமங்கள் நினைவாற்றலாய் சேமித்து வருவதாகவும் அதில் உள்ளுணர்வை ஆன்மா தொட்ட பிறகு அந்த உடலின் உயிருக்கு நிறைய வாழ்வின் வழிகாட்டல்கள் உள்ளதாகவும் அறிவியலும் ஆன்மீகமும் சொல்லி ஏற்றுக் கொள்கின்றன.
எங்கள் ஊர் அருகே இராமன் நகரில் அந்த சாமியாரம்மா அருள் வாக்கு சொல்வதை அனுபவித்து இருக்கிறேன். இப்போது அவர்கள் இல்லை என்றாலும் அவர் பாடிய பாடல்கள் இன்றும் என் காதுகளில் கணீரென ஒலித்தபடியே அந்தக் காட்சிகளும் விரிந்த படியே இருக்கின்றன.
சத்தி சங்கர, சத்தி சங்கர, வேலு முருகனும் வேலு முருகனும், வேலாயுத பண்டிதனும் வேலுமுருகனும்,...நீதி அழியாது, நிச்சயம் தவறாது, கோடு தவறாது, குறிப்பு தவறாது , கட்டு தவறாது, கணக்கு தவறாது, பள்ளிகர தேசத்திலே பள்ளி கொண்டிருக்கும் பட்சம் கள்ளி கர நாட்டிலே கதறிக் கொண்டிருக்கும் பட்சம்,நம்புறவனுக்கு நடராஜன் நடராஜந்தான்,கண்ணே, நம்பாதவனுக்கு யமன் ஒரு தூதுவன் தான்...யமன் ஒரு தூது வந்தான்...என தீப்பந்தம் ஒன்றை எரியும் குத்து விளக்கின் நல்லெண்ணயில் தோய்த்து வாயில் வைத்து 3 முறை செய்து வித்தை போல விதியைச் சொல்லும் விதியைக் கொல்லும் நல்ல சொல்லும்...
அப்பப்பா, அம்மமா சொல்லி மாளாது அதன் முகத்தின் அப்போதைய தேஜஸை அப்போது அந்த சாதாரணமான டிபிகல் கவுண்டச்சியிடம்.க்ளுக் என ஒரு சிரிப்பு சிரிக்கும் பாருங்கள் அதில் தெய்வத்தைக் காணலாம். வாக்கு கேட்க முதலிலேயே போய்விட வேண்டும்.இல்லை தாமதமகும் போது அல்லது நேரம் கடக்கும் போது வேறுபாடு இருப்பதாக எங்கள் வீடுகளில் சொல்வார்.அப்படியானால் அந்த சக்தி கொஞ்ச நேரம் மட்டுமே இருக்கும் அதிக நேரம் நீடித்து இருப்பதில்லை என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியதாகிறது. தெய்வம் காட்டும் ஊட்டாது என்ற சொல்லுக்கேற்ப.
நான் அதற்கு பிடித்த சிறுவன், விருப்பத்துடன் அந்த சாமியாரம்மா, அது பூ மரம் எனச் சொல்லும் அவரது கணவர் வெங்கடாஜலம் என்னும் பெரியவர் அவருக்கு எல்லாம் சிறு சிறு பணி செய்து அந்த அறைக்கே செல்லும் உரிமை பெற்றதுண்டு...வேறு யாரும் அத்தனை சீக்கிரம் அந்த அறையில் காலடி எடுத்து வைக்க முடியாது. ஒரு புறம் முருகன் சிலை, இன்னொரு புறம் வேங்கடமுடையோன் இரு பக்கங்களிலும் வெள்ளிப் பிரம்புகள், வெள்ளி வேல்கள் இப்படி இவரிடம் வரும் பக்தர்கள் கொடுத்த காணிக்கைப் பொருட்கள்.யாரையும் எப்போதுமே காணிக்கை எனக் கேட்டதே இல்லை.அவரவர் மனமுவந்து செய்ததை ஏற்றுக் கொண்டதுண்டு. ஊரின் மிகப் பெரிய பிரபலங்கள்கூட வந்திருந்ததைப் பார்த்ததுண்டு.
ப்யூச்சர் அவுட்லுக் FUTURE OUTLOOK,விஷன் VISION தொலை நோக்குப் பார்வைஎன்றெல்லாம் சொல்வது போல பல காலம் கடந்து நடக்க இருப்பதை முன் கூட்டியே சொல்லும் ஆற்றல் அதை கருத்தாழி சொல்லுகிறேன், கட்டும் உண்டு போடுகிறேன், தடமும் உண்டு ஓட்டுகிறேன் வழியும் உண்டு காட்டுகிறேன்...அந்தப் படிக்காத பாமர விவசாயக் குடும்பத்தில் பிறந்த அந்தப் பெண்ணிடம் என்ன ஒரு வார்த்தை பாருங்கள்: கருத்தாழி, சுனாமியை ஆழிப் பேரலை என்பது போல கடலுள் ஆழ் கடலுள்,ஆழ் கடல் வாழ்வில் கிடக்கும் ஒரு கருத்து முத்தை கொண்டு வந்து கொடுக்கும் ஆற்றல்... நாளுக்கு, நாள், தேதி, எனச் சொல்லி விரல்களில் எண்ணி ஒரு முடிவைச் சொல்லும்...அவை தவறாது... புதன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் வாக்கு சொல்லும்.திங்களும் உண்டா என மறந்து விட்டது.
3 பிரிவாய் வாக்கு சொல்லும். முன் பின் வந்தார் அதற்கே நன்கும் தெரியும் அழைத்து சொல்லும், 1.ஒன்று நடந்து விடும் என்று சொல்லும்2. இரண்டு முயற்சி செய் அல்லது நாள் பட நடக்கும் என்று சொல்லும் வழியும் சொல்லும், 3.மூன்று நடக்கவே நடக்காது வேண்டாம் விட்டு விடு என்று சொல்லி கருத்தை விட்டு விடச் சொல்லும்.அதற்கு அந்த வாயுள் 3 முறை சென்று வரும் எண்ணெய்த் தீப்பந்தம் அணைந்தோ எரிந்தோ வழி காட்டும்,எப்போதோ நடக்க இருப்பதை அப்போது பிட்டு பிட்டு வைத்து விடும் நல்லதோ கெட்டதோ என அறிய வழிகாட்டும்.
எங்கள் குடும்பம் அவர்களுடன் மிக நெருக்கமுடையதானது. எனது தாய் தெய்வா(னை)யும் அந்த அம்மாவும் மிக நெருக்கமான நட்பில் நனி சிறந்தார்.
அங்கு வந்து தீர்க்க முடியா பிணிகளை வெறும் மந்திரித்த திருநீறு எலுமிச்சம் பழங்களை வைத்தே தீர்த்த நிலைகளும் உண்டு....பேய் பிடித்தவர்களை ஓட்டி அவர்கள் முடியை எடுத்து அந்த வீட்டின் முன் இருந்த பெரிய புளிய மரத்தில் வைத்து கட்டியதும் உண்டு அதை எல்லாம் நான் கண் கூடாக கண்டிருக்கிறேன். அந்த இடத்துக்கு வந்து அமர்ந்த நிலையிலேயே இது போன்ற துர்சக்திகள் தங்களை வெளிப்படுத்தியதயும் கண்டிருக்கிறேன்.
இதன் நீளம் அதிகம்... எனக்கென்னா கேள்வி எனில்:முருகன் வெங்கடாஜலபதி என இரண்டு கடவுளா?சரி விட்டு விடுங்கள்
திருப்பதி, திருவண்ணாமலை, பழநி,ஏன் எங்கள் ஊர் நாங்கள் செய்த கபாலீஸ்வரர் ஆலயம்,எங்கள் வீட்டு பிரார்த்தனை அறை, தியான அறை, குளியல் அறை,திருவரங்கம்,சேலம் கேம்ப் பேருந்து நிலையம் இப்படி எல்லா இடங்களிலும் ஆன்மீக வழிகாட்டலை அடியேன் உணர்ந்திருக்கிறேன்.இது 40 ஆண்டுக்கும் மேலாக தியானப் பயிற்சியில் ஈடுபட்டதற்கான பரிசு. இதை சுமார் 10 ஆண்டுகளுக்கும் பின்பிருந்து பெற ஆரம்பித்திருந்தேன். ஒலியற்ற வார்த்தைகள். எனது கணிப்பு சரியாக இருந்தால் கடவுள் சக்தி என்பது எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பது அதை ஒரு சரியான அலை நீளத்தைப் பயன்படுத்தி நாமும், எவரும் , யாரும் பெற முடியும்.அதற்கு உடல் ஒரு கருவி, உயிர் ஒரு ஆன்மாவை அறியும் முயற்சியில் நமக்கு கிடைத்த பரிசு.OMNI POTENT OMNI PRESENT.
அகம் ப்ரம்மாஸ்மி
இங்கு அறிவியல் அண்டப் பெருவெளி, பிரபஞ்சம், கோள்கள், புவி, விண்மீன்கள்,கருந்துளை,ஆகாயம் அதன் துளிகள் இப்படி எல்லாம் விரிக்கும் போது மனிதம் ஒரு சிறு கூறு அது அதற்கே செய்து கொள்ளும் ஒரு சமாச்சாரமே இவை எல்லாம். மற்றபடி விண்ணளந்த ஆற்றல் ஏதுமில்லை
இது போன்ற கொடுப்பினையை வைத்த சிலர் அதை வேறு வழிகளில் கொண்டு செல்கிறார்கள், சிலர் நாம் தாம் பெரியவர் வேறு யாவருமே ஒன்றும் அறியாதார், அல்லது பிறர் யாவருமே தவறான ஆட்கள், நாம் ஒருவர் செய்வதுதான் சரியானது என தப்புக் கணக்கில் வாழ்ந்து வருவதையும் நான் கண்டு வருகிறேன்.
இது ஒரு ஆய்வுக்குரிய கருப்பொருள்.... நகைப்பிற்கிடமின்றி ஆராய்ந்து பாருங்கள் நன்றி வணக்கம்.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.