Wednesday, April 29, 2026

74 வயது முதியவர் ஓடும் பேருந்தில் கொலை: கவிஞர் தணிகை

 நன்றி: பிபிசி தமிழ்

APRIL 28

 

74 வயது முதியவர் ஓடும் பேருந்தில் அடித்துக் கொலை: கவிஞர் தணிகை



காரணம் வாக்குவாதம் என்பது சரி  அல்ல, மது, போதை, ஆட்சி, அதிகாரம்,வீரியமில்லா மக்கள், மக்கள் உயிர்கள் மேல் அக்கறையின்மை. இந்த சம்பவத்தைப் படித்துப் பார்ப்போர்க்கு எனது கோணம் சரி என்று விளங்கும். பாரதியின் நெட்டை மரங்களென நின்றார் என்ற வரிகள் ஏனோ வந்து மொய்க்கிறது.


நதிகள் நீரை இணைத்திருக்க வேண்டும்  ,இந்தியா ஒரு நரகப் படுகுழி நாடு என்பதற்கு வெகுண்டு எழுந்திருக்க வேண்டும்,இந்திய மக்களை அகதி என்ற பேரில் கை கால் இரும்பு சங்கலி கொண்டு கட்டி கொண்டு வந்து சேர்த்ததற்கு மன்னிப்பு கேட்கச் செய்திருக்க வேண்டும், அப்படி செய்ய விடாமல் தடுத்திருக்க வேண்டும். ...உயிரின் எடை எவ்வளவு?  


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

  • பதவி,பிபிசி தமிழ்
    • எச்சரிக்கை: இக்கட்டுரையில் உள்ள சில விவரிப்புகள் சங்கடம் தரலாம்.
      • எனக்குப் பக்கவாத பாதிப்பால் கை, கால் செயலிழந்துவிட்டது. அவர்தான் எனக்குப் பணிவிடை செய்து வந்தார். இனி என்னை யார் பார்த்துக் கொள்வார்கள். அந்தப் பையன் எனக்கு எமனாக வருவான் எனக் கனவிலும் நினைக்கவில்லை" எனக் கூறி அழுகிறார் கலைச்செல்வி.

        தாம்பரத்தில் அரசுப் பேருந்து ஒன்றில் கலைச்செல்வியின் கணவர் சந்திரசேகரன் மீது சக பயணி ஒருவர் நடத்திய கொடூர தாக்குதலில் அவர் உயிரிழந்துவிட்டார்.

        முதியவரைக் கொன்றதாகக் கைதான அமர்நாத் என்ற 25 வயது இளைஞர் மீது 'ஆபாசமாக பேசுதல், கொலை' உள்ளிட்ட பிரிவுகளில் குரோம்பேட்டை காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

        ஞாயிறு காலை சுமார் 11 மணியளவில் நடந்த 'திடீர்' தாக்குதல் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அன்று காலை கூடுவாஞ்சேரியில் இருந்து வடபழனி நோக்கிச் செல்வதற்காக தாம்பரம் வந்த அரசு பேருந்தில் ஏறிய இளைஞர் ஒருவர், "இந்தப் பேருந்து கோயம்பேடு செல்லுமா?" எனக் கேட்டுள்ளார். அதற்கு நடத்துநர், "வடபழனி வரை மட்டுமே செல்லும்" எனக் கூறியுள்ளார்.

        தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிறுத்தம் அருகே பேருந்து வரவே, அப்போது படப்பையை சேர்ந்த சந்திரசேகரன் என்ற 74 வயது முதியவர் ஏறியுள்ளார். அவருக்குப் பின் சீட்டில் தாம்பரத்தில் ஏறிய இளைஞர் அமர்ந்திருந்தார்.

        "பஸ்ஸில் முதியவர் ஏறி அமர்ந்ததும், 'இந்த பஸ் எங்கே போகுது?' என அந்த நபர் கேட்டுள்ளார். அவர் பதில் அளித்தும் தொடர்ந்து கேள்விகளை கேட்டுள்ளார்" என்கிறார், குரோம்பேட்டை காவல்நிலைய ஆய்வாளர் முகமது பரக்கத்துல்லா.

        ஒருகட்டத்தில் நடத்துநரிடம் கேட்குமாறு முதியவர் பதில் அளித்தபோது 'உன்னால் பதில் சொல்ல முடியாதா?' எனக் கேட்டு அந்த நபர் வாக்குவாதம் செய்ததாகவும் காவல் ஆய்வாளர் கூறுகிறார்.

        "ஒருகட்டத்தில் முதியவரை அந்த நபர் அடித்துள்ளார். அப்போது நடத்துநரும் அருகில்தான் இருந்துள்ளார். இருவரையும் பிரித்துவிட்டு முதியவரை மட்டும் தனியாக அமர வைத்தார்"எனவும் அவர் கூறினார்.

        இந்தத் தாக்குதலில் முதியவரின் தலை, முகம், மார்பு உள்ளிட்ட இடங்களில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது.

        "சக பயணிகளில் இருந்த நர்ஸ் ஒருவர் பரிசோதித்துவிட்டு, முதியவருக்கு பல்ஸ் இறங்கிக் கொண்டிருப்பதால் உடனே மருத்துவமனைக்குச் செல்லுமாறு கூறியுள்ளார்" என்கிறார் சந்திரசேகரனின் மகள் மகேஸ்வரி.

      • "அந்த இளைஞன் பேருந்தில் ஏறும்போது கடும் போதையில் இருந்துள்ளான். என் அப்பாவை அவதூறான வார்த்தைகளில் திட்டியுள்ளான். இதனைக் கவனித்த நடத்துநர், 'என்னுடைய சீட்டில் வந்து அமர்ந்து கொள்ளுங்கள்' என அப்பாவிடம் கூறியுள்ளார்" என்கிறார் மகேஸ்வரி.

        இதையடுத்து, நடத்துநரின் இருக்கையில் அமர்வதற்கு தனது அப்பா சென்றதாகக் கூறிய அவர், "அப்போதும் அந்த நபர், 'எனக்குப் பதில் சொல்லாமல் பயந்து ஏன் ஓட வேண்டும். இவ்வளவு வயதுக்கு மேல் நீ வாழ்ந்து என்ன செய்யப் போகிறாய்?' எனக் கூறி கடுமையாக தாக்கியுள்ளான்" எனக் கூறினார்.

        "சுமார் அரை மணிநேரத்துக்கு இந்த வாக்குவாதம் நடந்துள்ளது. என் அப்பா அந்த நபரிடம் சித்ரவதையை அனுபவித்துள்ளார். அவர் மயங்கி விழுந்ததைப் பார்த்ததும் அந்த நபர் பேருந்தில் இருந்து ஓடியுள்ளார். அனைவரும் சத்தம் போடவே, எதிர்முனையில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர்தான் அவனைப் பிடித்துள்ளார்" என்கிறார் மகேஸ்வரி.தாக்குதலுக்கு ஆளான முதியவரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சக பயணிகள் கூட்டிச் சென்றுள்ளனர்.

        "அங்கு பரிசோதித்தபோது முதியவர் இறந்துபோனது தெரியவந்தது. இருவருக்கும் இடையில் வாக்குவாதம்தான் பிரதானமாக இருந்துள்ளது" என்கிறார், காவல் ஆய்வாளர் முகமது பரகத்துல்லா.

        இந்த வழக்கில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதான அமர்நாத் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர் சென்னை பாரிமுனையில் தங்கி கட்டட வேலை செய்து வந்துள்ளார்.

        "பேருந்தில் இருந்த சாட்சிகளிடம் விசாரித்துள்ளோம். அவர்களும் வாக்குவாதம் நடந்த தகவலைக் கூறியுள்ளனர். பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறோம்" என காவல் ஆய்வாளர் முகமது பரகத்துல்லா கூறுகிறார்.

        தாக்குதலில் இறந்துபோன முதியவருக்கு மனைவியும் நான்கு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். அனைவரும் திருமணம் முடிந்து பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். சென்னையை பூர்வீகமாகக் கொண்ட சந்திரசேகரன், எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வந்துள்ளார்.இவரது மனைவி கலைச்செல்விக்கு கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு பக்கவாத பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவருக்கு ஒரு கையும் காலும் செயலிழந்துவிட்டது. கணவரும் மனைவியும் மட்டுமே வசித்து வந்ததால் கலைச்செல்விக்கு சந்திரசேகரன் பணிவிடைகளை செய்து வந்துள்ளார்.

        "எனக்கு சோறு ஊட்டுவது, தலைவாரிவிடுவது என எல்லா வேலைகளையும் அவர் தான் செய்து வந்தார். அவருக்கும் வயதாகிவிட்டதால் எங்காவது வேலை இருந்தால் கூப்பிடுவார்கள். அவரும் சென்று வருவார். அப்படித்தான் அன்று வடபழனிக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்றார்" என்கிறார் கலைச்செல்வி.

        பிபிசி தமிழிடம் தொடர்ந்து பேசிய அவர், "கிளம்பும்போது எனக்கு உதவிக்கு ஒருவரை துணைக்கு அமர்த்திவிட்டு, 'சிறிய வேலை தான். இரண்டு மணிநேரத்தில் வந்துவிடுவேன்' எனக் கூறிச் சென்றார். அப்போதும் எனக்குக் காபி கொடுத்துவிட்டு காலுக்கு ஒத்தடம் கொடுத்துவிட்டுக் கிளம்பிப் போனார்" எனக் கூறுகிறார்.

        "அவர் சென்ற ஒரு மணிநேரத்தில் போன்கால் வந்தது" எனக் கூறும் கலைச்செல்வி, "அவரைவிட்டால் எனக்கு வேறு ஆதரவு இல்லை. தாம்பரத்தில் அந்தப் பையன் எனக்கு எமனா வருவான் என நினைத்துப் பார்க்கவில்லை" எனக் கூறி கலங்கினார்.

        தாம்பரத்தில் விபத்து ஒன்றில் சந்திரசேகரன் சிக்கிவிட்டதாகவே குடும்பத்தினருக்கு முதலில் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சந்திரசேகரனின் உறவினர்கள் சென்றபோது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

        "அவருக்கு எந்தக் கெட்ட பழக்கங்களும் இல்லை. நான் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதால் என்னைவிட்டு எங்கேயும் நகர மாட்டார்" எனக் கூறியபடியே கதறியழுதார் கலைச்செல்வி.

        "வெளியில் போகும்போது ஆட்டோ, காரில் தான் அழைத்து செல்வார். அவ்வளவு ஒற்றுமையாக இருந்தோம். அவர் இல்லாமல் சோறு சாப்பிடக் கூட முடியவில்லை. மே 2-ஆம் தேதியன்று எங்களுக்கு ஐம்பதாவது கல்யாண நாள். அதற்குள் இப்படி நடந்துவிட்டது " எனக் கூறி அவர் வேதனைப்பட்டார்.

        'தடுப்பதற்குக் கூட யாரும் வரவில்லை'

        இருபது வயதில் இருந்தே தனது கணவர் கடுமையாக உழைத்து வருவதாகக் கூறிய கலைச்செல்வி, "அவரது உடலில் உள்ள காயங்களைப் பார்த்தால் கொடுமையாக இருக்கிறது. ஒரு பெரியவரை இப்படியெல்லாம் ஒருவரால் அடிக்க முடியுமா?" எனவும் கேள்வி எழுப்பினார்.

        "பேருந்தில் அவ்வளவு பேர் இருந்துள்ளனர். ஒரு பெரியவரை போதையில் ஒரு நபர் தாக்கும்போது அதைத் தடுப்பதற்குக்கூட யாரும் முயற்சிக்கவில்லை. அந்த நபர் தப்பி ஓடும்போது, 'தங்களுக்குப் பாதிப்பு வரும்' எனக் கருதி நடத்துநர் பிடிப்பதற்காக ஓடியுள்ளார்" என்கிறார், சந்திரசேகரனின் மகள் மகேஸ்வரி.

        "பேருந்தில் இருந்த யாராவது அந்த நபரைத் தடுத்து எனது அப்பாவைக் காப்பாற்ற முயற்சி செய்திருந்தால் அவர் இன்று எங்களுடன் உயிருடன் இருந்திருப்பார்" எனவும் அவர் வேதனைப்பட்டார்.


Friday, April 24, 2026

நீலக் கிரகத்தின் பெரும் பீடை அமெரிக்கா: கவிஞர் தணிகை

 நீலக் கிரகத்தின் பெரும் பீடை அமெரிக்கா: கவிஞர் தணிகை



டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவை இந்தக் கிரகத்தின் நரகப் படுகுழி என தேவையின்றி விமர்சித்ததற்கான‌  பதில் பதிவு இது. பைத்தியங்கள் எப்படி வேண்டுமானாலும் பிதற்றும் விட்டு விடலாம் என விடாமல் இதை ஒரு இந்தியனான நான் நின்று பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.


டொனால்ட் ட்ரம்ப், டொனால்ட் ட்ரம்ப் பெட்ரோல் பம்ப் ஆண்டு வரும் அமெரிக்கா வியட்நாமில் அடி வாங்கி வாலை சுருட்டி வந்ததை உலகே அறியும்,கியூபா நாட்டின் தலைவரான பிடலை எத்தனை முறை கொல்ல நினைத்து படு தோல்வி அடைந்தது வரலாறு. இப்போது ஈரான், கொலம்பியா, கனடா, வெனிசுலா, கியூபா என உலக நாடுகள் எல்லாவற்றுக்கும் அச்சுறுத்தல் மேலும் உலகின் எல்லா மனிதர்களுக்கும் தீங்கு செய்யல் எந்தக் கணக்கு? 


இவர்கள் நாடான பெரும்பீடை அமெரிக்கா ஒரு நாடு மட்டும் தான் உலகில் இருக்க வேண்டுமா என்ன? வேறு எந்த நாடும் உலகில் தலை எடுத்து விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் எப்போது பார்த்தாலும் இந்த நாடு இதன் தலைவர்கள் பெரிய அண்ணன்களாக வாலாட்டுவது சட்டாம்பிள்ளைத் தனம் பண்ண நினைப்பது அற்பத்திலும் அற்பத்தனம்.


 உலக நன்மைக்கு கம்யூனிசம் என்ற தத்துவத்தை நடைமுறையில் தந்த சோவியத் ரஷியாவை ஒழித்து துண்டாக்கி உக்ரேன் ரசியா போரில் கொண்டு வந்து நிறுத்த இவர்கள் எல்லாம் பின்னால் உள்ளதே காரணம். உக்ரேன் ரசியா சண்டை என்கிறான் இங்கே சிமென்ட் விலை ஏறுது என்கிறார். ஈரான் சண்டை என்கிறார் இங்கே எரிவாயு உருளை சாதாரண மனிதர்க்கு 60 ரூ ஏற்றி உள்ளார் இப்படி உலகில் அத்தனை மனிதர்க்கும் இந்த மனிதன் எதிரிடையாக இயங்கும் துரோகி. சூடானில் அதன் இராணுவத்துக்கும், துணை இராணுவத்துக்கும் சண்டையில் சுமார் 2 கோடி பேர் உணவின்றி மாட்டுத் தீவனங்களையும், இலை தழைகளையும் உண்டு வாழ்கிறார்களாமே அங்கே சென்று உங்கள் நீதி செய்யலாமே? இந்தியாவைப் பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது? இந்த நரகப் படுகுழியில் நீங்கள் எவ்வளவு வீயாபாரம் செய்து கொழுத்து வருகிறீர்கள்?


சண்டையிட்டாலும் நாம் சகோதரரன்றோ, ஆயிரம் உண்டிங்கு சாதி எனில் அன்னியர் வந்து புகல் என்ன நீதி என்பான் பாரதி, பாரத சமுதாயம் பாரத சமுதாயம் வாழ்கவே என்பான்...அப்படி இருக்கும் நாட்டின் ஒரு மண்ணின் மைந்தனாக மார் தட்ட வேண்டிய கட்டம் இது. வாயை விட்டு வாங்கிக் கட்டிக் கொண்டான் ஒரு நாட்டின் தலைவன். இந்த அந்த நாட்டிலேயே குற்றம் சாட்டப் பட்டு நிரூபணமான குற்றவாளி நீலப்பட நடிகைக்கு இழப்பீடு வழங்கிய உத்தமன்,அந்த நாட்டு மக்களாலேயே 51% வேண்டாம் எனச் சொல்லப்படும் துரோகி,...


சுந்தர் பிச்சை முதல் அங்கிருக்கும் இந்தியர்கள் உண்மையிலேயே இந்த மண்ணில் தாம் பிறந்தீர் என்றால் அந்த நாட்டை விட்டு இப்போதே மீண்டும் நம் நாட்டிற்கே குடி பெயர வேண்டும். அங்குள்ள இந்தியர் 40 சதம் இங்கே திரும்ப நினைக்கின்றனர் என்ற செய்தி இருக்கிறது அது 100% ஆக வேண்டும்.


இங்குள்ள அந்த நாட்டின் தூது அமைப்புகள் திருப்பி அனுப்பப் பட்டு, அங்கிருக்கும் நமது இந்தியாவின் தூதரகங்கள் மூடப் பட்டு திரும்ப அழைக்கப் பட வேண்டும்... நரகப் படு குழி நாடு அவர்களுக்கு இனி எந்த வகையிலும் பயன்படக் கூடாது. நாமே நரகப் படுகுழி நாடான போது இந்த சொர்க்க‌ புரிக்காரர்களுக்கு இங்கு வேலை என்ன? இவர்களுடன் தொடர்பு என்ன?


வாஜ்பாய் பிரதமராக இருந்த போது கலாமை வைத்து அணு சோதனை செய்தபோது இந்த நரகப் படுகுழி நாடு இந்தியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்து என்ன சாதித்து விட்டார்கள்? இந்திராவை நிக்சன் கேலி செய்ய நினைத்து வாங்கிக் கட்டிக் கொண்டதெல்லாம் சரித்திரம். இவர்கள் ஒரு நாடுதான் அணு சக்தி வைத்திருக்க வேண்டுமா என்ன? மற்ற நாடுகள் எல்லாம் இவர்களுக்கு மறுபடியும் கப்பம் கட்ட வேண்டுமா என்ன? இந்த தகுதி இல்லா மனிதரை வேறு எந்த நாடுமே ஆதரிக்கவில்லை என்பதில் இருந்தே இவர்கள் நாடிருக்கும் கேவலம் தெரியவில்லையா?இந்த இலட்சணத்தில் நோபெல் பரிசு வேண்டுமாம்?


இந்த ஒரு விசியத்தில் பாரதப் பிரதமரும் அனைத்து மக்களும் ஒரே கருத்தில் நிற்க வேண்டும், நிற்போம் அந்தப் பெரும் பீடை நாட்டுக்கு உலக நாடெல்லாம் சேர்ந்து ஒரு நல் வழி காட்ட வேண்டும், உலக மாந்தர் எல்லாம் துக்கமின்றி வாழ தூக்கத்துடன் நிம்மதியாக வாழ வழி வகை செய்தாக வேண்டும்...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை




Thursday, April 23, 2026

நக்கீரன் பேசுகிறேன்:என் நாடு வீடு மனைவி மகன் மக்கள்: கவிஞர் தணிகை

 நக்கீரன் பேசுகிறேன்

என் நாடு வீடு மனைவி மகன் மக்கள்: கவிஞர் தணிகை


 ஈன்றாள் பசி காண்பான் ஆயினுஞ் செய்யற்க

 சான்றோர் பழிக்கும் வினை.



இந்த குறளுக்கேற்ப வாழ்க்கை 65ஆம் வயதில்...

இவனுக்கு மட்டுமென்ன ஸ்பெசல்? என்றார்கள், என்பார்க்கு:


இது வரை வாக்களிக்க மறுத்தும் கூட இருந்திருக்கிறேன் என்றாலும்

வாக்களிக்க காசு வாங்கியதே இல்லை...

இலஞ்சம் வாங்கியதும் கொடுத்ததும் இல்லை அதற்கெதிரான போராட்டத்தில் சுய வாழ்வு பெரிதும் பாதித்த போதும்...

மதுவுக்கு எதிராக போராடி இருக்கிறேன் பல்வேறு வழிகளில்

42 ஆண்டு கால தியானப் பயிற்சி தொடர‌

மாலை சுமார் 8 கி.மீ நடைப் பயிற்சியில் திரும்புகையில் தெரு விளக்கு ஏற்றுவதை தொடர்ந்து செய்து வருகிறேன்.

மழைக்காக தினமும் எனது தியான நேரத்தில் பிரார்த்திக்க சில நிமிடம் அல்லது சில நொடிகள் நினைவால் துதிக்கிறேன்.

எனது சீடர்கள், எனது உண்மையான சகோதர உறவுகள் , அவர் தம் குடும்பங்கள், நல்லவர்கள் நீடித்த காலம்  இந்த மண்ணில் நல்லபடியாக வாழ வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்


சில கோயில்கள் உருவாகவும், 11 புத்தகங்கள் சமூக மேம்பாட்டிற்காகவும் வெளியிட்டு சுயநலத்தை தாண்டி ஆயிரக்கணக்கான இலட்சக்கணக்கான மக்களுக்கு உதவியிருக்கிறேன்...


கலாம் போன்ற மகான்கள் எனக்கு தனிப்பட்ட முறையில் மக்கள் குடியரசுத் தலைவராக இருந்தபோதே கடிதம் எழுத காரணமாக இருந்திருக்கிறேன்

இப்போதும் எப்போதும் நாட்டில் எனது வரிசைப்படி நின்று உரிமைகளைப் பெறப் போராடுகிறேன்.

கீழ்த் தட்டு மக்களின் பிரச்சனை தீர நாட்டின் உச்ச நீதி மன்றத் தலைமை நீதிபதி அவையில்  எனது 24 ஆம் அகவையின் போதே அரசு அலுவலர்களின் நடப்பு எப்படி இருக்கிறது மக்களுடனான‌ அணுகுமுறை என சில நிமிடங்களில் விளக்கிச் சொல்லும் வாய்ப்பை பெற்றிருக்கிறேன்...இப்படி நிறைய ஸ்பெஷல்ல்கள் என்னிடம் உண்டு எனவே நான் ஸ்பெஷல் தான்...


தாய்க்கும், வீட்டுக்கும் என்னால் முடிந்ததை செய்து முடித்திருக்கிறேன் அதே போல இந்த மண்ணின் இளம் சிறார்களுக்கும்,ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கும் என்னால் முடிந்ததை செய்த பின் தாம் சொந்த வாழ்வில் அடி எடுத்து வைத்தேன்.


இனி மகனுக்கும் மனைவிக்கும் மட்டுமே செய்ய வேண்டிய நிலை ஏதாவது செய்ய முடிந்தால்...


 சட்டம், நீதி, நிர்வாகம் என்கிறார்கள் ஊடகம் என்கிறார்கள் யாவும் அவற்றின் பண்பு கெட இலக்கணம் இல்லாமல்...


ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து செய்யப் பட்ட பெரும் தியாகத்துக்கு துளி கூட எவருமே மதிப்பளிப்பதாய் இல்லை. பெண்கள் அதிக எண்ணிக்கை இருக்கையில் இப்போதுதான் 33% சதவீதம் என்கிறார்கள் 50% இருப்பது நியாயம் எனும்போது.


மீச்சிறு மானிடமோ மாபெரும் மகாத்மாவாகவோ இல்லாமல் ஒரு தனி மனிதம் எவ்வளவு இந்த உலக முன்னேற்றத்துக்கு பாடுபட முடியுமோ அவ்வளவு பாடு பட்டிருக்கிறேன்.


சுதந்திரத்துக்கு வயது 78, குடியரசுக்கு 75 என்னையும் எனது சகோதரத் தோழர்கள் சில இயக்க வழிகளில் கொண்டு சென்றனர்: அவை: 1. நவ இந்திய நிர்மாணிகள் இயக்கம்,2, காந்திய வழியில் ஊருக்குப் பத்துப்  பேர் இயக்கம், 3.தமிழக இலட்சியக் குடும்பங்கள்.4. அன்பு வழி அறப்பணி மன்றம்.அவை பெரிய அளவுகோல்களைத் தொட முடியவில்லை.


சசிபெருமாள், சின்ன பையன், பொறியாளர் மணி போன்றவர்கள் அதில் துடித்த இதயங்கள்.


 சில நாடுகளின் தலைமைகளைப் பார்க்கும் போது அவர்களின் சர்வாதிகாரத்தனத்தை பார்க்கும்போது அவர்கள் பைத்தியக்காரத் தனத்தை பார்க்கும்போது இந்த வாழ்க்கைத் தேவையா? முடிந்து விட்டது போலுள்ளதே என்ற விரக்தி நிலைக்குத் தள்ளப் படுகிறேன்.


உக்ரேன் ரசியா, ஈரான்,யு.எஸ். உலக கொந்தளிப்பு, சூடான் பசிக் கொடுமை இதெல்லாம் மனிதகுலத்தின் பெரும் தோல்வியைக் குறிப்பிட, உள் நாட்டிலோ அப்பட்டமான பொய்களை மக்களை நம்பவைக்க தலைமைகள் முயல்வது பார்க்க அசிங்கமாக இருக்கிறது. 


அரசுகளிடம் பணம் இல்லை, ஆனால் கட்சிகளிடம் பணம் அதன் தலைவர்களிடம் பணம் இலட்சக்கணக்கான கோடிகள் இருப்பதை தேர்தல்கள் உணர்த்துகின்றன, வெளிப்படைத்தன்மையுடனேயே தொலைக்காட்சிகளும், பண்பலைகளிலும் தேர்தல் மக்கள் பணம் பற்றி பேசுகின்றன, விமர்சிக்கின்றன.ஆனாலும் எந்த மாறுதலும் இல்லை.


எனவே தேர்தல் என்பது கேலிக்கூத்தாகவும் வெறும் மாய விளையாட்டுகளாகவும் இருப்பதற்கு பக்குவப்படாத ஆட்சிகள், கட்சிகள், தலைவர்கள், மக்கள் ஆட்சி நிர்வாக அமைப்புகள் யாவும் காரணமாக இருப்பதைக் காணமுடிகிறது


தேர்தல் வழிமுறைகள் இன்னும் மாபெரும் உலகின் முதல் மக்கள் தொகை உள்ள நாடான இந்தியாவில் விகிதாச்சார முறை, சரி இல்லா வேட்பாளரை திரும்ப அழைக்கும் முறை போன்றவைக்கு வழி செய்யப் படவில்லை.

ஜனநாயகத்தின் அடுத்த கட்ட நகர்வுக்கு சென்றாக வேண்டிய மிக முக்கிய நிர்பந்தத்தில் இந்திய ஜனநாயகம் சென்று கொண்டிருக்கிறது.


அமெரிக்க ஜனநாயகத்தில் கூட 51% தலைமை மேல் எதிர்ப்பிருந்தும் துணைத் தலைமையும் செனட் என்னும் மந்திரிசபையும் ஏற்காமல் தலைவரை இறக்க முடியாத நிலை உள்ளதை மாற்ற வேண்டிய நிலை உள்ளது.


தேர்தல் நேரத்தில் பெரும் பணம் பிடிபட்டிருக்கிறது. எல்லாம் டிஜிட்டல் மயம் என்று சொல்லப் பட, பணக்கற்றைகள் எப்படி இப்படி வெள்ளமாகப் பாய்ச்ச வாய்ப்புகள் என்ற கேள்விகள் நிறைய உள்ளன...தடி எடுத்தவன் தண்டல்காரன், கோல் எடுத்தவன் கொண்டைக்காரன் என்ற ஆட்சி முறை முற்றிலும் ஜனநாயகத்துக்கு எதிராக உள்ளது.


மக்கள் தொகை கணக்கெடுப்பு , தேர்தல் தொகுதி மறு வரையறை, மகளிர் இட ஒதுக்கீடு என 3 மசோதாக்களையும் ஒரு சேர இந்தியப் பாராளுமன்ற ஆளும் கட்சி நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு எண்ணிக்கை அல்லது கூட்டு மன்றத்தில் பாதிக்கும் மேல் எண்ணிக்கை இல்லை என்ற போதும் நாலைந்து மாநிலங்களில் தேர்தல் நடந்து வரும் நிலையில் நிறைவேற்ற எத்தனித்து மண்ணைக் கவ்வி உள்ளதை இந்த தோல்வியை இந்திய ஜனநாயகம் வெற்றி எனக் கொண்டாடலாம், நிலை அப்படி இருக்க அதை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக திசை திருப்பும் உத்தி அல்லது தேர்தலில் முளை விட வேண்டிய யுக்தி சக்தி என பிரச்சாரங்கள் போய்க் கொண்டிருக்கின்றன ஒரு சார்பாகவே...


ஊடகங்கள் நிறைய பக்கங்களை ஊதிப் பருக்க வைத்து உடைத்த படி இருக்கின்றன காற்றில்லா பலூன்களாக.

இந்தியத் தலைமைக்கென எப்போதுமே உலக அரங்கில் ஒரு உயரமான அங்கீகாரம்(அந்தஸ்து) இருந்திருக்கிறது, இருக்கிறது அது சரியாக செயல்பட்டிருந்தால் உள்ளரங்கில் நதிகள் இணைப்பு செய்திருக்கலாம் வெளி உலகில் உக்ரேன் ரசியா, ஈரான், யு.எஸ் போன்ற உலகை உலுக்கும் கொதிநிலைகளை அமைதிப்படுத்தி இருக்கலாம். சூடான் போன்ற நாட்டு மக்களின் பசி போக்கவும் முடியும் பேச்சு வார்த்தை வழி காந்திய நெறி உலகை வெல்ல எப்போதும் கையில் உள்ளது. ஆனால் அதற்கு  நாடெல்லாம் நாமே இருக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லா வீடுகளிலும் நானே, எல்லா தொகுதிகளிலும் நானே எல்லா உயிர்களிலும் நானே இருக்கின்றேன் என்று கீதையில் சொல்லப் பட்டது போல இருக்கத் தோன்றுவது போலுள்ளது.


முடிந்த வாழ்க்கை என்றே தோன்றுகிறது... எனவே இறந்தது பேசியதாக இதை நீங்கள் கொள்ளலாம். இந்த வலைப்பூவின் எழுத்துப் பதிவுகள் உலகெலாம் பரவுகிறது எனவே இந்த மனித இதயத்தின் அந்தரங்க சங்கீதத்தை வடிவம் தந்து பாட முடியாத போதும் முனகல்களாகவாவது கேட்க முடியும் என்பதற்காகவே இந்தப் பதிவு, எதையோ எதை எதையோ சொல்ல வேண்டும் என பல தூக்கமிலா இரவுகள், இன்றும் கூட விடியல் மூன்று மணி முதலே வார்த்தைத் தூறல்கள் ஆரம்பித்து விட்டன என்றாலும் ஏதோ இப்போது இதையாவது உங்களுடன் பகிர்ந்த நிலை இருக்கிறதே என குறைவான நிறைவைப் பெறுகிறேன். இடது கை சுட்டு விரல் மை அடையாளத்துடன்.


இந்த 4 வேட்பாளர்களில் இவர் சரியானவர், உயரமாக இருக்கிறார் என்றால் உடனே நீங்கள் அந்தக் கட்சியா என்கிறார்கள், பணம் கொடுக்க வில்லை என சண்டை செய்து வருகிறார்கள் கட்சிக்காரர்களுடன் இந்தியக் குடிமக்கள், இந்திய வாழ் பெருங்குடி மக்கள். தமிழகம் உலகுக்கே வழி செய்த தமிழ் நாடாகவும் வள்ளுவனை உலகுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ் நாடாகவும் என வாய் கிழிய பேசிய முழக்கமெல்லாம் அவமானமாகத் தெரிகிறது.

பாதகம் செய்பவரைக் கண்டால் மோதி மிதித்து விடு பாப்பா

அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா என்றான் பாரதி

அதற்கு ஸ்ட்ரெந்த்(strength) வேணுமே ...


எனது வாழ்வெல்லாம் முடிந்து போனதாகவே யோசிக்கும் போது நினைக்கத் தோன்றுகிறது. இந்த கூத்துகளில் நான் எங்கே இருக்கிறேன் எனக் கேட்கும்போது இருப்பதாகவேத் தெரியவில்லை.


எங்காவது உங்கள் உள்ளங்களிலாவது ஒரு சிறு ஓரத்தில் இருப்பேன் கண்டு கொள்ளுங்கள்

உண்மையுடன்,பெருங்குணங்களுடன் நேர்மையுடன்  அன்பு நெஞ்சங்களே...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

THERE IS NO FREEDOM WITH OUT RESTRICTIONS.

THERE IS NO INDEPENDENCE WITH OUT DISCIPLINE

THERE IS NO ACHIEVEMENTS WITH OUT SACRIFICE

            BY DR.S.RADHA KRISHNAN

P.S:

சாலையில் நடப்பார் வலது பக்கத்தில் வாகனம் இடது புறத்தில்

செல்ல வேண்டுமென்பது இந்திய சாலை விதி...எவர் கேட்கிறார்

எவர் செய்கிறார் கடைப்பிடிக்கிறார், நானும் இன்னும் சில பேரும் மட்டுமே...

கடைசியில் நான் ஒருவன் மட்டுமே கடைபிடிப்பதாக, இருப்பதாகப் படுகிறது...

எனவே விதி சட்டம் இவற்றை மீறாமல் கடைபிடிப்பார்க்கு கடுக்கா கொடுப்பது அரசு


ஆங்கிலத்தில் லா மேக்கர்ஸ் ஆர் லா பிரேக்கர்ஸ் LAW MAKERS ARE LAW BREAKERS என்ற பழமொழிக்கேற்ப‌

அரசியலாளர்களே மக்களை குற்றவாளிகள் ஆக்கி வைக்கிறார்கள்.

எனவே இலஞ்சம் கொடுத்த அனைவர்க்கும் எமது பகுதியில் பட்டா கொடுக்கப் பட்டு விட‌

இலஞ்சம் கொடுக்காத எனக்கு இது வரை கொடுக்கப் படவில்லை பல்லாண்டுகளாக...

கேட்டால் எல்லாம் சட்டப்படி, ரூல்ஸ்படிதான் நடக்குமாம்.....

இலஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் எந்த விதியில் சட்டத்தில் வருகிறது\என்பதைத்தான்

சட்டம் அறிந்தார் சொல்ல வேண்டும்...


வாக்குகளுக்கு பணம் கொடுப்பதும் வாங்குவதும் அதே நடைமுறையில் தாம் வருகிறதோ?








Wednesday, April 8, 2026

எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் ஓர் விலை எல்லோரும் பூலோக மன்னர்: கவிஞர் தணிகை

 


எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் ஓர் விலை எல்லோரும் பூலோக மன்னர்: கவிஞர் தணிகை


இரு பெரும் சம்பவங்கள் மனக்குளத்தை பாதிப்புக்குள்ளாக்கி விட்டன.பூமி திரும்பி வர முடியாத ஊறு விளைவுகளுடன் பயணம் செய்த படி இருக்கிறது. அதன் பயணத்தில் இன்னும் பாதி கால‌ அளவே பாக்கி இருக்கிறது.


உடல் சொல்லொணா அதிசய அமைப்புகளுடன் இயங்கி வருகிறது அதன் இயக்கம் (உயிர்) இருக்கும் வரை.


52% இந்த  வாக்களிப்பு மூலம் வந்த தலைவன் வேண்டாம் என்று சொன்ன பிறகும் அமெரிக்காவின் துணைத்தலைமையும், மந்திரிசபையும் முடிவுக்கு வந்தாலன்றி அந்த இரத்தக் காட்டேறி காட்டுமிராண்டித் தனமான தலைமையை மாற்ற வழி இல்லையாம்.அது அந்த நாட்டின் சட்ட திட்டம். அது பூமிப் பந்தையே ஒரு புரட்டு புரட்டிக் கொண்டிருக்கிறது.


அரசுப் பணி, ஆட்சி அதிகாரம் என்பதில் எல்லாம் மக்களுக்கு என்று சொல்லப் பட்டாலும் அதை நடைமுறைக்கு கொண்டு வருவதில் ஏகப்பட்ட இடியாப்பச் சிக்கல்கள் இருக்கிறது.


சாத்தான் குளம் தீர்ப்பை அனைவரும் பாராட்டி வருகையில் அதில் ஒளிந்துள்ள அந்த குற்றவாளிகள் எனச் சொல்லப்பட்ட இரைகளைப் பார்க்காமலேயே சிறைக்கு கொண்டு சென்று ரிமான்ட் செய்க எனக் கருத்தளித்த அரசு மருத்துவரின் பொறுப்பின்மையையும், சரியாக பணி புரியாமையையும், பார்க்காமலேயே கொரானா எனப் பயமுறுத்தி பார்க்க விடாமலேயே அந்த நீதிபதியையும் குழப்பி இரைகளை சிறைக்கு கொண்டு சென்ற போது அதன் மேல் கவனம் செலுத்தி தமது பணியை ஒழுங்காக பணி செய்யாத மாஜிஸ்ட்ரேட் மற்றும் அதிலிருந்து தொடங்கி இந்த சம்பவம் உடல் நலக் குறைவால் ஏற்பட்டது காய்ச்சலால் ஏற்பட்டது என மாநிலம் ஆண்ட முதல் மந்திரி வரை அப்படிப் பட்ட அரசுகளைத் தோற்றுவிக்கும் மக்கள் இன்ன பிற தேர்தல் ஆணையம், நீதி, நிர்வாகம் சார்ந்த அமைப்புகள் வரை யாவுமே கறைபட்டதாகவே இருப்பதை இது போன்ற நிகழ்வுகள் வலியுறுத்துகின்றன. அனைவரையும் தண்டிப்பதென்றால் யார் தாம் இவர்களை எல்லாம் தண்டிப்பது...சிந்தித்தபடி கேட்டுப் பாருங்கள்...


அதில் ஜான் மைக்கேல் டி குன்ஹா போன்று பாரதி தாசன், மற்றும் முத்துக் குமரன் நீதிபதிகள் இந்த தற்போதைய 5 ஆண்டு 9 மாத வழக்கில் பெருமை பெற்றுள்ளார்கள். ரேவதி போன்ற காவலர்கள் உண்மையைச் சொல்லத் தான் முடிந்ததே அல்லாமல் சம்பவத்தை தடுக்க முடியவில்லை அப்பேர்ப்பட்ட அமைப்பு.அவர்கள் கொண்டு சென்ற சிறை மருத்துவர் தம் பணியை நிறைவு செய்து மருத்துவ மனையில் அனுமதிக்கச் சொல்லி அறிவுறுத்தி அவரது செம்மையை உறுதி செய்தும் இருக்கிறார்.


இதற்கு மேலும் இவர்களுக்கு உயர் நீதிமன்ற , உச்ச நீதிமன்ற மேல் முறையீடுகள் தேவையா ? தாமதிக்கப் பட்ட நீதி, மறுக்கப் பட்ட, மறைக்கப் பட்ட நீதி என ஒருபுறம் சொல்லி நீதியின் நேர்மையை பாராட்டிக் கொண்டு மறுபுறம் அதற்கு அடி வெட்டு வெட்டிக் கொண்டிருக்கும் அமைப்புகள் அதில் வேறு அம்பேத்கார் நீதியைக் குறை சொல்லும்...


எனவே நமது கருத்து யாதெனில் ஒருவர் எப்படிப்பட்ட பதவி, அதிகார அமைப்புகளில் இருந்த போதும் அவரவர் செயல்கள் தாம் அவர்களுக்கு மதிப்பு கூட்டுவதாக இருக்க வேண்டுமேயன்றி பதவிகள் அல்ல.எனவே மக்கள் என்ற வட்டத்தில் அனைவரும் அடக்கம். எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் ஓர் விலை ஆம் எல்லோரும் பூலோக மன்னர். பட்டத்துக்கும் பதவிக்கும் எப்படி வேண்டுமானாலும் வந்து விடுகிறார்கள். பாவிகள்.


அந்த நிலையை,பதவிகளில் இருந்தாலே அவர்கள் பெரியோர்,அமைப்புகளில் இருந்தாலே அவர்கள் உயர்ந்தோர், தேர்ந்தெடுக்கப் பட்டு விட்டாலே அவர்கள் கடவுள் என்ற‌ கருத்தை மக்கள் கொண்டு மாந்தர்களை மதிக்கும் வரை எதுவுமே நடக்கும் இப் புவியில்.


அரசுப் பணியில் இருந்து விட்டாலே அரசுப் பணிக்கு சென்று விட்டாலே அவர்கள் மக்கள் அல்ல அந்த வட்டத்தில் வருவோர் அல்ல என்ற கோடுகள் இருக்கும் வரை எந்தக் கேடுகளும் தொடரும் இதற்கு மாநிலமோ, நாடோ, உலகோ விலக்கல்ல. புவியின் பரப்பு என்ன செய்யும்?ஆள்வோர் செயல் அல்லவா யாவும்?


காவல் நிலையமா? கொலைக் களமா?

காவல் துறை நண்பனா? பகைவனா?

காவல் துறை பாதுகாக்கவா? பாதகம் செய்யவா?


எதைச் சொல்லி நாம் நமது இளந் தலைமுறைக்கு கற்றுக் கொடுப்பது?



உன்னையே நீ அறிவாய்! உண்மையை யார் அறிவார்?


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.




Monday, March 30, 2026

ஆனந்த விகடனில் நாகசந்திரனின் மேட்டூர் அணை ஓசை: கவிஞர் தணிகை

 ஆனந்த விகடனில் நாகசந்திரனின் மேட்டூர் அணை ஓசை: கவிஞர் தணிகை



அன்பு நண்பர் தோழர் நாகு என பெயர் சுருக்கம் உடைய நாகசந்திரன் மேட்டூரை சொந்த ஊராக கொண்டவர். அந்த தாம் பிறந்த ஊருக்கு தமது வாழ்நாளின் அடையாளமாக ஏதாவது செய்ய வேண்டுமென எண்ணி மிக்க முயற்சியுடன் சென்னை ஆவணக் காப்பகத்தில் எல்லாம் தேடல் நடத்தி ஒரு தொடரை அணை ஓசை என வியழக்கிழமைகளில் வெளிவருமாறு பல வாரங்களாக செய்து வருகிறார், நல்ல புள்ளி விவரங்கள், கட்டுரை மிக முக்கியமான ஆவணமாகும் மேட்டூர் அணை அல்லது ஸ்டேன்லி அணை பற்றி தேடல் நடத்துவோர்க்கு எதிர்காலத்தில்.


ஆனந்த விகடனின் இணையப் பக்கத்தில் அந்தப் பதிவு பெறும் இடத்திற்கு சென்று தமது கருத்துகளை பதிவு செய்யச் சொல்லுகிறார். ஆனால் பாருங்கள் நாகு அதில் சற்று சிரமம் இருப்பதாக எனக்குப் பட்டது எனவே இந்தப் பதிவு.


இவர் கல்லூரி கால நண்பர், எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லா மனிதர். நெசவுத் தொழிலை அடிப்படையாக வைத்த குடும்பத்தின் வாரிசு இப்போது இந்த நூல்களையும் நெய்து பார்க்க ஆரம்பித்திருக்கிறது. ஏற்கெனவே சில  நூல்களையும் செய்துள்ளார்.


கல்கியின் அலை ஓசை போல இந்த நாகுவின் அணை ஓசையும் என்றும் சுவாசிக்கட்டும் புகழ் பெறட்டும்!


வாழ்த்துகள் அன்பரே. ஆசிகள்.வாழ்க வளர்க.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


Monday, March 23, 2026

MAR.23.2026 பிறந்த நாள் கொண்டாட்டம் இரத்து: கவிஞர் தணிகை

 பிறந்த நாள் கொண்டாட்டம் இரத்து: கவிஞர் தணிகை


மார்ச்:22 உலக தண்ணீர் தினம், மார்ச்:23 பகத்சிங் நினைவு தினம் மற்றும் தணிகை தினம்.



ஒன்றுமறியா அப்பாவிக் குழ‌ந்தைகள் ஈரான் பள்ளியில் கொன்று குவிக்கப் பட்ட ஈனச் செயல் புரிந்த மனித குலத்தின் அற்ப நிகழ்வுகள், உலகே அபாய விளைவுகள் சந்தித்து வரும் வேளையில் தனி மனித கொண்டாட்டத்திற்கு ஒரு தேவையுமே இருப்பதாகத் தெரியவில்லை.


அட இத பார்ரா, கவிஞர் (தணிகை) கூட தமது 65 ஆம் வயதில் அடி எடுத்து விட்டாரே என்று அவரே ஆச்சரியப் பட வேண்டியதிருக்கிறது ஏன் எனில் அது ஒரு தனிப்பட்ட விசை, சமூகத்தின் நல்லொழுக்க நல்வழிக்கு வித்திடும் விதை.

வணங்குவது, நன்றி தெரிவிப்பது, சிறப்பு செய்வது யாவுமே எளிமையே

இந்த நாளின் ஒரு சிறு கூறாக பிறப்பித்த சுப்ரமணிய (முதலியார்) ஊருக்குள் அப்படிச் சொல்லித்தான் வழக்கம் அதை சாதியக் குறியீடாக கொள்ளத் தேவையில்லை, அவருக்கும் தெய்வானை(தெவானை) அம்மாவுக்கும் இந்த நாளில் அஞ்சலி மற்றும் நன்றி செலுத்த வேண்டியிருப்பதை குறியிடவே இந்தப் பதிவு.மற்றபடி மேற்கத்திய கலாச்சார மூழ்குதலில் கேக் வெட்டி எப்போதுமே கொண்டாடிய நிகழ்வெல்லாம் அவரிடம் இல்லை, அவர் விரும்புவதில்லை. தந்தை தமது 65 ஆம் வயதில் உயிர் நீத்து இயற்கை எய்த, தாயுடன் அவர் அதன் பின் 20 ஆண்டு வாழ்ந்து அதன் பின் 2006ல் அவரும் விடைபெற்றுச் சென்று விட‌ அதன் பின்கூட 20 ஆண்டுகள் ஓடி விட்டன. எனவே குறிப்பிடப் பட வேண்டிய வாழ்வு அவர் வாழ்வில் 1986,2006,இப்போது 2026.


இந்த நாளில் உலகு மீண்டும் அமைதி அடைய வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் தமது 42 ஆம்  ஆண்டு தியான வாழ்வில் இதுவும் ஒரு நாள் அவ்வளவே என்று முடித்துக் கொள்ள வேண்டியதிருக்கிறது. நல் மழைப் பொழிவு இருக்கட்டும், புவியெலாம் விளைச்சல் பெருகி இந்தக் கொடும்பாவிகள் எல்லாம் சாகட்டும் கொல்லை/கொள்ளை மழை பேயட்டும் என்று வேண்டி விடை பெற வேண்டிய தருணத்தில் உலகெலாம் எல்லா பொருட்களும் விலை ஏறி மக்களுக்கு கடும் பஞ்சத்தை இந்த நாசகாரப் பேய்கள் ஏற்படுத்தி விடுவார்கள் என்ற அச்சம் மக்களுக்கு மத்தியில் நிலவுவதை இயற்கை சீர் செய்யும் என்று நம்புவோமாக!


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


Friday, March 20, 2026

மழை நேற்று நள்ளிரவில் இரண்டாம் கோடை மழை 19/20.03.2026 :கவிஞர் தணிகை

 மழை  நேற்று நள்ளிரவில் இரண்டாம் கோடை மழை 19/20.03.2026 :கவிஞர் தணிகை



நானும் விவசாயிதான்.தம்பி கார்த்தி வெள்ளையன் சொன்ன மாதிரி களை எல்லாம் பிடுங்கினால் அந்த செடிகள் பரப்பிலேயே இட்டு விடுகிறேன் அப்போது நீர் ஆவியாவது தடுத்து, நீர் தேவையைக் குறைத்து நமது நீர் கொடுக்க வேண்டிய பணியை சற்று மெத்தனப் படுத்தலாம் என்ற யோசனை நன்றாக இருந்ததால் அப்படியே செய்துள்ளேன்.


மேலும் சாம்பல் பை நிறைய சேர்த்து நம்மாழ்வார் மற்றும் இந்த தம்பி சொன்ன மாதிரி கோலம் போடும் தகரத் குப்பியின் வாயில் வைத்து தெளிக்கிறேன் அதனால் அந்த துவாரங்களில் இருந்து நன்கு வீசப்படும் சாம்பல் எரு பயனளிக்கிறது. கை கொண்டு வீசினாலும் நன்றாகவே பரப்பப் படுகிறது.


எனது தியான வாழ்வுக்கு இது 42 ஆம் ஆண்டு. சில பல நாட்களாக கடும் கோடை, எனவே வேண்டாம் என்கிற அளவு மழை பொழிவு வேண்டு(ம்) என எமது தியான மைய சுவர் எழுத்துகளிலும் தியான நேரத்திலும் பிரார்த்தனை வைத்தோம், காக்கா ஒக்கார பனம்பழம் விழுந்த கதை என்று வைத்துக் கொண்டாலும் சரி 

...ஆனாலும் மற்றொரு ஆசிரியையின் தந்தை படுத்த படுக்கையாய் மரண விளிம்பில் இருந்த போது அந்த உயிர் பட்ட வேதனை சகிக்காது விரைவில் செல்ல வேண்டும் என கடந்த அமாவாசை நாட்களில் இரு முறை தியானத்தில் பிரார்த்தனையில் வைத்தோம் அதுவும் நடந்தது. அட வேற யாரும் சொல்லலைன்னாலும் நாம்பளாவது நம்ம பெருமையை சொல்லி வைப்போமே... ஆக 2 பிரார்த்தனைகள் இது வரை பலித்து விட்டது.


வயது முதிர முதிர மழையின் பெருமை, ஆவல், மகத்துவம் எல்லாம் தெரிந்து மகிழ்வு, சிறப்பு, நன்றி என்று சொல்லத் தோன்றுகிறது. கொண்டாடத் தோன்றுகிறது.நேற்று முன் தினம் இரவில் இரண்டு உழவு அல்லது இரண்டு வள்ளம் பெய்தது பேசு பொருளானது.


ஆனால் நேற்று நள்ளிரவு 11.57க்கு ஆரம்பித்தது பாருங்கள் ஒரு ஊழித்தாண்டவக் காற்று அதிசயமாக இரண்டு வாழை வைத்திருக்கிறேன் அந்தக் குலை வாழை எல்லாம் பிய்த்து தலையாட்டி தூக்கி விசிறி எறியப் போகிறேன்  பார் என சுழட்டி சுழட்டி அப்படி ஒரு பெரும் காற்று.ஆனால் நள்ளிரவில் தாம். எவருக்குமே தொல்லையில்லாமல் தாம், கண்ணாடி ஜன்னல்களை மூடினால், ஊய், ஊய் என எதற்கு மூடினாய் என ஒரே சத்தம் வேறு....


அது மட்டுமல்ல அது பெரும் மழையை இந்தக் கோடையில் இரண்டாம் முறையாக பெய்ய வைத்து விட்டது. விவசாயிகளுக்கு பெரும் கொண்டாட்டம் எனக்கும் தான்.


எனது துணைவியார் வண்டி நிறுத்தும் இடத்தில் இருந்த கோலப்பொடி எல்லாம் நனைந்து விட்டது,துணி மிதி அடிகளை எல்லாம் தூக்கி எறிந்து விட்டது,கடலை மாவுக் கிண்ணத்தை தூக்கி விசிறி வேறு இடத்தில் வைத்து அதில் நீர் நிரப்பி விட்டது,காய வைத்திருந்த துணிகளை எல்லாம் நனைத்து தூக்கி எறிந்து விட்டதே.... இப்படி அவருக்கு ஆயிரம் கவலை


அவரவரக்கு ஆயிரம் கவலை ஆனால் மழையும் நீரும் அத்தனையும் நீக்கும்.


நிலத்தடி நீர் பெருகும், தாவரங்கள் செழிக்கும், புவிச் சூடு தணியும் எமக்கு பெரு மகிழ்வு...நேற்று அடித்த வெயில் உணர்த்தியது இன்று இரவுக்குள் மழைப் பொலிவு இருக்கும் என...அது பொய்க்கவில்லை. இயற்கை பொய்ப்பதில்லை, மனிதர்கள்தாம்....


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.