Wednesday, June 17, 2026

மனித குலத்தின் நீட்சி வாயேஜர் விண்கலம்: கவிஞர் தணிகை

 நன்றி:

பிபிசி உலக சேவை


ஃபெர்னான்டோ துவார்டே

'மனித குலத்தின் மிகப்பெரிய சாதனை' - சூரியக் குடும்பம் பற்றிய பார்வையை மாற்றிய வாயேஜர் விண்கலம்


1977-ஆம் ஆண்டு நாசா விண்ணில் செலுத்திய இரட்டை விண்கலங்களில் ஒன்றான வாயேஜர் 1 விண்கலம் இந்த ஆண்டு நவம்பர் மாதம் பூமியில் இருந்து ஓர் ஒளி நாளைக் கடந்திருக்கும். ஒளி நாள் என்பது ஒரு நாளில் ஒளி பயணிக்கும் தூரம், அதாவது கிட்டத்தட்ட 26 பில்லியன் கிலோமீட்டர்.

மனிதனால் உருவாக்கப்பட்ட எந்தப் பொருளை விடவும் நீண்ட தூரத்தை வாயேஜர் 1 கடந்துவிட்டது. அதன் மைலேஜை விடவும் அந்த விண்கலத்தில் இருந்து தற்போதும் நாசாவுக்கு தகவல் வந்து கொண்டிருப்பது தான் அசாத்தியமானதாக உள்ளது.

ஐந்து ஆண்டுகள் நிலைத்திருப்பதற்காக உருவாக்கப்பட்ட வாயேஜர் 1 மற்றும் 2 விண்கலங்கள் விண்வெளியில் 50 ஆண்டுகள் கழித்தும் செயல்பாட்டில் உள்ளன.

அவை வானியலாளர்களுக்குப் பிரபஞ்சம் பற்றிய விலைமதிப்பில்லாத தகவல்களை வழங்கி கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும் இன்றைய காலகட்டத்தில் தொன்மையானதாக கருதப்படும் தொழில்நுட்பத்தில் இயங்கி வருவது தான் ஆச்சரியத்தின் உச்சம்.

"உங்கள் காரைத் திறப்பதற்கான ரிமோட் சாவியில் இருக்கின்ற அளவிலான நினைவகம் தான் வாயேஜரில் உள்ள கணினியில் இருக்கின்றன," என்று வாயேஜர் திட்டத்தின் தற்போதைய விஞ்ஞானியான முனைவர் லின்டா ஸ்பில்கர் பிபிசியிடம் தெரிவித்தார்.

"பண்டைய கிரேக்கர்கள் வியாழன் மற்றும் சனி கிரகங்கள் பற்றி அறிந்திருந்தனர். ஆனால் அவை வெறும் ஒளிப் புள்ளிகளாக இருந்தன," என்கிறார் எழுத்தாளரும் விண்வெளி ஆய்வாளருமான ஏமி ஷிரா தெய்டெல்.

ஆனால் வாயேஜர் திட்டத்தால் நாம் கிரகங்கள் பற்றி தெளிவற்ற எண்ணத்தில் இருந்து அனைத்து வகுப்பறையில் இருக்கக்கூடிய பரிச்சயமான வரைபடங்கள் என்கிற நிலைக்கு வந்தோம் என்று அவர் தெரிவிக்கிறார்.

வெளிப்புற கிரகங்களுக்கான நாசாவின் முதல் திட்டமான பயோனியர் 10 (Pioneer) 1973-ஆம் ஆண்டு வியாழன் கிரகத்துக்கு அருகே சென்றது. அதன் மூலம் செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்கள் இடையேயான சிறுகோள் பட்டையை வெற்றிகரமாகக் கடந்து மில்லியன் கணக்கான கிலோமீட்டர்களுக்கு அப்பாலும் பூமியுடன் தொடர்பு கொள்ள முடியும் என்பதை நிரூபித்துள்ளது. அதன் அடுத்த திட்டமான பயோனியர் 11 ஆறு ஆண்டுகள் கழித்து சனி கிரகம் அருகே சென்றது.

வாயேஜர்களுடன் ஒப்பிடுகையில் இந்த இரண்டு திட்டமும் மிகவும் எளிமையானவை.வாயேஜரின் பிரமாண்ட பயணத்துக்கு மாற்றாக வெளிப்புற கிரகங்களில் இரண்டுக்குச் செல்லும் எளிய திட்டம் முன்வைக்கப்பட்டது.

எனினும் திரை மறைவில் செயல்பட்ட விஞ்ஞானிகள் வாயேஜர்கள் அதனையும் கடந்து செல்வதற்காகத் தயார்படுத்தி வந்தனர்.

"அதிகாரப்பூர்வமாக வியாழன் மற்றும் சனி கிரகத்துக்கான ஐந்து ஆண்டு திட்டமாக வடிவமைத்தோம். ஆனாலும் தேவைப்படும் பட்சத்தில் சிறிது காலம் கூடுதலாக நிலைத்திருக்கும் விதத்தில் அதனை வடிவமைத்தோம்," என ஒப்புக்கொள்கிறார் வாயேஜர் திட்டத்தில் தற்போதும் பணியாற்றும் வானியற்பியலாளரான முனைவர் ஆலன் கம்மிங்ஸ்.

ஒரே மாதிரியான விண்கலங்களாக தயாரிக்கப்பட்ட இவற்றில் வாயேஜர் 2 ஆகஸ்ட் 1977-இல் விண்ணில் செலுத்தப்பட்டது. அதற்கு அடுத்த மாதம் வாயேஜர் 1 விண்ணில் செலுத்தப்பட்டது. இரு வெவ்வேறு பாதைகளில் அந்த விண்கலங்கள் சென்றன, வாயேஜர் 1 அதன் இரட்டை விண்கலத்தை அந்த ஆண்டின் இறுதியில் முந்தியது.

புதிய உலகங்களைக் காண்பித்த வாயேஜர்

இறுதியில் இந்தத் திட்டங்களே அதன் மதிப்பை எழுத ஆரம்பித்தன. நமது சுற்றத்தைப் பற்றி தங்களுக்கு தெரிந்தது என வானியற்பியலாளர்கள் நினைத்தவற்றை வாயேஜர் மாற்றி எழுத தொடங்கியபோது உலகமே வியந்து பார்த்தது.

உதாரணமாக வாயேஜர் 1 முதல்முறையாக பூமிக்கு வெளியே முதல் செயல்பாட்டில் இருக்கும் எரிமலையை வியாழன் கிரகத்தின் நிலவான லோவில் (Moon lo) கண்டறிந்தது. அது வியாழன் கிரகத்தில் மின்னலையும் பதிவு செய்தது. நமது கிரகத்துக்கு வெளியே இது பதிவு செய்யப்படுவது முதல்முறை.

வாயேஜர் 2-இல் இருந்து அனுப்பப்பட்ட புகைப்படங்கள், வியாழன் கிரகத்தின் இன்னொரு நிலவான யுரோப்பாவின் பிளவுபட்ட பனிப்படலத்தின் கீழ் ஒரு திரவ நீர்ப் பெருங்கடல் இருக்கலாம் என்பதைச் சுட்டிக்காட்டியது. இது இந்நாள் வரை அங்கு உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கலாம் என வானியலாளர்களை வியாழனின் நிலவான லோவை முதலில் கண்டதை கம்மிங்ஸ் நினைவில் வைத்துள்ளார். அது அவரை மெய்சிலிர்க்க வைத்தது.

"நான் அப்போது வளாகத்தில் இருந்தேன். ஒரு காணொளி பதிவு வந்திருந்தது," என அவர் நினைவுகூர்கிறார்.

மேலும், "அங்கு லோ அதன் முழு மகிமையுடன் அங்கு இடம்பெற்றிருந்தது. என்னால் அதை நம்ப முடியவில்லை. நமது நிலா மிகவும் சாம்பல் நிறத்தில் சுவாரஸ்யமற்றதாக உள்ளது. நிலவுகளில் இவ்வளவு பன்மைத்துவம் இருக்கும் என்பதை நான் உணர்ந்திருக்கவில்லை." என்றும் தெரிவித்தார்.

இந்தத் திட்டம் தொடங்கிய நான்கு ஆண்டுகளில் யுரேனஸ் மற்றும் நெப்ட்யூனை அடையும் முதல் விண்கலமாக வாயேஜர் 2 இருக்கும் என நாசா முடிவெடுத்திருந்தது. 1986 மற்றும் 1989-இல் அருகே செல்வதன் மூலம் பிரமாண்ட சுற்றுலா முடிவுக்கு வரும் எனக் கருதப்பட்டது.

'வெளிர் நீலப் புள்ளி'

வாயேஜர்கள் ஒரு விதமான புத்தாக்கத் திறன் மற்றும் தொழில்நுட்பத்தின் கலவையுடன் தங்களின் இலக்குகளை அடைந்தன.

ஸ்லிங்ஷாட் உத்திகள் என அழைக்கப்பட்ட முறை ஒவ்வொரு கிரகத்தின் புவியீர்ப்பைப் பயன்படுத்தி திசைவேகம் பெற்று அடுத்த இலக்கை அடைவதற்காக திசையை மாற்ற அனுமதித்தது. இது நெப்ட்யூனை அடைவதற்கான பயண நேரத்தை 30 ஆண்டுகளில் இருந்து 12 ஆண்டுகளாக குறைத்தது.

இந்தத் திட்டங்களில் ப்ளுடோனியம் சார்ந்த அணுக்கரு மின்கலங்கள் பொருத்தப்பட்டிருந்தன. அவை ஒவ்வொரு ஆண்டும் 4 வாட் ஆற்றலை இழந்துவந்தன. பெரும்பாலான அறிவியல் கருவிகள் ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்தப்பட்டன.

வாயேஜர் விண்கலம், நாசா, விண்வெளி ஆராய்ச்சி

பட மூலாதாரம்,NASA/JPL-CALTECH

படக்குறிப்பு,இந்த வெளிர் நீலப் புள்ளி என்பது 1990-இல் வாயேஜர் 1 பூமியை எடுத்த புகழ்பெற்ற புகைப்படம் ஆகும். அதன் 30வது ஆண்டான 2020-இல் இந்தப் புகைப்படம் நாசாவால் வெளியிடப்பட்டது.

1990-இல் வாயேஜரின் கேமரா நிறுத்தப்படுவதற்கு முன்பாக, அது நெப்ட்யூனைக் கடந்திருந்த சூழலில் திரும்பி பூமியை புகைப்படம் எடுத்தது.

விண்வெளியின் பரந்த வெளியில் ஒரு சிறிய வெளிர் நீலப் புள்ளியாக பூமி அதில் தெரிந்தது.

அது மறைந்த வானியலாளரான கார்ல் சாகனின் எண்ணமாக இருந்தது.

"இந்த வெளிர் நீலப் புள்ளி தான் இதுநாள் வரையில் வாழ்ந்த மனிதர்கள், இதுநாள் வரையில் நீங்கள் அறிந்த மனிதர்கள்," என கார்ல் சாகன் கூறியதாக ஸ்பில்கர் நினைவுகூர்கிறார். நமது கிரகத்தை நாம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிற உணர்வையும் அவர் குறிப்பிடுகிறார்.

விண்மீன்களுக்கு இடையிலான வெளி (இன்டர்ஸ்டெல்லார் வெளி)

2012-இல் ஹீலியோஸ்பியர் என்று அழைக்கப்படும் சூரிய மண்டல வெளியின் வெளிப்புறத்தை விட்டுவிலகி இன்டர்ஸ்டெல்லார் வெளிக்குள் நுழைந்த மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் பொருளாக வாயேஜர் 1 மாறியது. அதன் இரட்டை விண்கலம் ஆறு ஆண்டுகள் கழித்து அதனை பின்தொடர்ந்தது.

இரண்டும் காந்தப்புலங்களைப் போல பூமிக்கு தரவுகளை தற்போதும் அனுப்பிக் கொண்டிருக்கின்றன. இதற்கு முன்னதாக விண்ணில் ஆராயப்படாத பிராந்தியத்தில் இருந்து புதிய தகவல்களை கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

"தற்போது இன்டர்ஸ்டெல்லார் மீடியத்தில் நேரடி அவதானிப்புகளை மேற்கொண்டு வரும் ஒரே கருவியாக வாயேஜர் இருக்கிறது," என்கிறார் வாயேஜரின் தற்போதைய ஆய்வில் வேலை செய்து வரும் முனைவர் பில் குர்த்.

வாயேஜர் விண்கலம், நாசா, விண்வெளி ஆராய்ச்சி

பட மூலாதாரம்,NASA/JPL

படக்குறிப்பு,1981-இல் சனி கிரகத்துக்கு அருகில் சென்ற வாயேஜர் 2 விண்கலம் அதன் மோதிரங்களைப் புகைப்படம் பிடித்தது.

"பெருங்கடல் என்பது யாது என்பதை அறிந்துகொள்ள பெருங்கடலில் உங்களுடைய பாதங்களை ஈரமாக்குவதைவிட சிறந்தது எதுவும் இருக்க முடியாது," என்றும் அவர் குறிப்பிட்டார்.

2030 வாக்கிலும் இரண்டு விண்கலன்களும் குறைந்தபட்சம் ஒரு அறிவியல் கருவியை இயக்கிக் கொண்டிருக்கும் என நாசா கணித்துள்ளது.

"இந்தத் திட்டம் தொடர்ந்து செயல்பாட்டில் வைத்திருப்பதற்கு தேவையான அனைத்தையும் நாங்கள் தொடர்ந்து செய்ய முயற்சிப்போம்," என உறுதிகூர்கிறார் ஸ்பில்கர். "நாங்கள் ஆஃப் பட்டனை அழுத்தமாட்டோம். மாறாக அதற்கான நேரம் எப்போது என்பதை வாயேஜரே முடிவெடுக்க விடுவோம்." என்றார்.

ஒரு 'வியக்கத்தக்க கண்டுபிடிப்பு'

"மனித குலத்தின் தேடலின் மிகப்பெரிய சாதனையை வாயேஜர் பிரதிபலிக்கிறது. இது உண்மையில் பிரபஞ்சத்தில் தன்னுடைய இடத்தைப் புரிந்துகொள்ள மனிதகுலம் மேற்கொண்ட சாகசம்," என்கிறார் குர்த்.

வெளிப்புற கிரகங்கள் நாம் உண்மையாக நினைத்ததைப் போல எளிமையானவை இல்லையென்று வாயேஜர் காண்பித்ததாகவும் அதன்மூலம் அடுத்தடுத்த திட்டங்களுக்கான வழியை உருவாக்கியதாகவும் அவர் நம்புகிறார்.

நாசாவில் யுரோப்பா க்ளிப்பர் விண்கலம் வியாழன் கிரகத்தில் நிலவான யுரோப்பாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஐரோப்பிய விண்வெளி முகமையின் விண்கலமாக ஜூஸ் அதன் இலக்கான வியாழன் கிரகத்தின் நிலவுகளை 2031-இல் அடையும் எதிர்பார்க்கப்படுகிறது.

வாயேஜரின் திட்டங்கள் பூமிக்குத் தகவல்களை திருப்பி அனுப்புவது மட்டுமில்லை.

வாயேஜர் விண்கலம், நாசா, விண்வெளி ஆராய்ச்சி

பட மூலாதாரம்,NASA/JPL-CALTECH

ஒவ்வொன்றிலும் 12 இன்ச் நீளமுள்ள தங்கமுலாம் பூசப்பட்ட தகடுகள் உள்ளன. அதில் பூமியில் உள்ள மக்கள் 55 மொழிகளில் தெரிவித்த வாழ்த்துகள், 115 புகைப்படங்கள் மற்றும் நமது கிரகத்தின் வெவ்வேறு பிராந்தியங்கள் மற்றும் காலகட்டங்களின் இடி மற்று இசை போன்ற ஒலிகளும் இடம்பெற்றுள்ளன.

இவை அனைத்தும் சாத்தியமான வேற்றுகிரகவாசிகளால் அந்த விண்கலங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் மனிதகுலம் பற்றிய அறிமுகக் கடிதமாக இருக்க வேண்டும் என்பதற்கான இந்தத் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.

இது இதர புத்திசாலி உயிரினங்களுக்கு "ஒரு வியக்கத்தக்க கண்டுபிடிப்பாக" இருக்கும் என்கிறார் ஸ்பில்கர். "அவர்கள் திரும்பி வந்து பூமி எவ்வாறு இருக்கிறது என்று பார்க்கலாம்." என்று அவர் தெரிவித்தார்.

"தங்கத்தால் உருவாக்கப்பட்ட அந்தப் பதிவு பில்லியன் கணக்கான ஆண்டுகள் தாக்குப்பிடித்து மனிதகுலத்தைத் தாண்டியும் நிலைத்திருக்கலாம்," என்கிறார் அவர்.

ஒருவேளை வேற்றுகிரகவாசிகள் வாயேஜரைக் கண்டடைந்தால் அதில் விநோதமான செய்தி ஒன்றையும் காணலாம்.

1970களில் கம்மிங்ஸஸால் தான் உருவாக்க உதவிய உபகரணம் ஒன்றில் அவரது பெயரின் முதல் எழுத்துக்களை பொறிக்கின்ற ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

"அது அனுமதிக்கப்படவில்லை. ஆனால் தற்போது என்னை அவர்களால் என்ன செய்ய முடியும்," என நகைப்புடன் கூறி முடித்தார்.

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை




Saturday, June 6, 2026

முடியவே முடியாது என்ற களங்களில்தான் நம் வெற்றியே: கவிஞர் தணிகை.

 நார்வே செஸ், பிரக்ஞானந்தா, புலியின் குகையிலேயே ...Anand Mahindra


நன்றி: 

பிபிசி தமிழ்.



இந்தப் பக்கம் வைபவ், அந்தப் பக்கம் பிரக்ஞானந்தா ஒன்னும் சொல்லிக்கவே முடியலை போங்க... மிக்க மகிழ்ச்சி. இந்த மாதம் புது மாதம், நல்லா விளையாடுவே...தாய்

நார்வே செஸ் தொடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இறுதிச்சுற்றில் ஜெர்மனி வீரர் வின்சென்ட் கீமரை வீழ்த்தியதன் மூலம் பிரக்ஞானந்தா முதன் முறையாக இந்த தொடரில் சாம்பியன் ஆனார்.

அலிரேசா ஃபிரோஸ்ஜாவை வென்று வெஸ்லி சோ இரண்டாவது இடத்தைப் பிடித்தார். பிரக்ஞானந்தா தனது இறுதிச்சுற்றில் வெற்றி பெற்றிருக்காவிட்டால் வெஸ்லி சோ சாம்பியன் ஆகியிருப்பார். ஃபிரோஸ்ஜா மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

நடப்பு உலக சாம்பியனான இந்தியாவைச் சேர்ந்த மற்றொரு தமிழக வீரர் குகேஷை வீழ்த்தியதன் மூலம் நார்வேயைச் சேர்ந்த முன்னணி வீரர் மேக்னஸ் கார்ல்சன் நான்காவது இடத்தைப் பிடித்தார்.

நார்வே செஸ் தொடரில் ஒரு கட்டத்தில் பிரக்ஞானந்தா ஆறாம் இடத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தார். அதாவது, ஆறாம் சுற்று முடிவில் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த வெஸ்லி சோவை (11.5)விடவும் பிரக்ஞானந்தா 5.5 புள்ளிகள் பின்தங்கியிருந்தார்.அதன் பிறகு தான் விளையாடிய 4 போட்டிகளிலும் கிளாசிக்கல் ஆட்டங்களில் வெற்றி பெற்று 12-க்கு 12 என்ற வகையில் முழுமையான புள்ளிகளை பிரக்ஞானந்தா வென்றார். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக 18 புள்ளிகள் சேர்த்த அவர் சாம்பியன் பட்டம் வென்று சாதித்தார். கடைசி சுற்றுக்கு முன்பு வரையிலும் முதலிடத்தில் இருந்த வெஸ்லி சோவை விட இறுதியில் அவர் ஒரு புள்ளி அதிகம் பெற்று மகுடம் சூடினார்.

இறுதிச் சுற்றில் ஒரே ஒரு ஆட்டத்தைத் தவிர மற்ற அனைத்தும் கிளாசிக்கல் செஸ் முறையிலேயே தீர்மானிக்கப்பட்டன. வெஸ்லி சோ தனது கிளாசிக்கல் ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்தால், பிரக்ஞானந்தாவுக்குப் பதிலாக அவரே பட்டத்தை வென்றிருப்பார்; ஆனால் அவரால் 'ஆர்மகெடன்' (armageddon) சுற்றில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. .

ஆறாவது சுற்றில் வெஸ்லி சோவிடம் தோல்வியடைந்த போது, முதலிடத்தில் இருந்தவரை விட 5.5 புள்ளிகள் பின்தங்கி கடைசி இடத்தில் இருந்த பிரக்ஞானந்தா, அதன்பிசாம்பியன் பட்டம் வென்ற பிறகு பேசிய அவர், "நான் செஸ் விளையாட மட்டுமே விரும்பினேன். ஆனால் எப்படியோ அனைத்தும் எனக்குச் சாதகமாக அமைந்தன. நான் அதிக கட்டுப்பாட்டுடன் விளையாடத் தொடங்கியதாக உணர்கிறேன்; அது எப்போதும் ஒரு நல்ல விஷயமாகும்." என்றார்.

பிரக்ஞானந்தா வேகமாக விளையாட முயன்றாலும், தன் தாயின் நம்பிக்கையையும் கொண்டிருந்தார்.

"அலிரேசாவுடனான ஆட்டத்துக்கு முன், ஜூன் ஒன்றாம் தேதி நான் என் அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர், 'இது ஒரு புதிய மாதம், நீ நன்றாக விளையாடுவாய்!' என்று கூறினார். அம்மா எப்போதும் சொல்லும் வழக்கமான விஷயங்களில் இதுவும் ஒன்று; ஆனால் அதன் பிறகு நான் நான்கு ஆட்டங்களில் வெற்றி பெற்றேன். அவருக்கு ஏதோ தெரிந்திருக்கிறது என்று நினைக்கிறேன்!" என்றார் பிரக்ஞானந்தா.

அதன் பிறகு நடந்த அனைத்துமே செஸ் உலகில் வியக்கத்தக்க ஒன்று. ஃபிரோஸ்ஜா, மேக்னஸ் கார்ல்சன், குகேஷ் மற்றும் கீமர் ஆகியோரை பிரக்ஞானந்தா கிளாசிக்கல் ஆட்டங்களில் அடுத்தடுத்து வீழ்த்தினார். மீண்டு வந்து சாம்பியனானது வியக்கத்தக்கது.

பிரக்ஞானந்தாவுக்கு கார்ல்சன் புகழாரம்

பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றது குறித்துப் பேசிய மேக்னஸ் கார்ல்சன், " இது நம்ப முடியாத ஒன்று! மிக முக்கியமான தருணத்தில் மிகச் சிறப்பாகச் செயல்படுவதற்கான (clutch) ஒரு சிறந்த உதாரணம் இது. இதேபோன்றதொரு சிறப்பான ஆட்டத்தை என்னாலும் வெளிப்படுத்தியிருக்க முடியும் என்பதையே இது காட்டுகிறது; ஆனால் உண்மையில் இது வியக்கத்தக்கது. அவர் ஒரு அற்புதமான போராளி; அதற்கான பலனை அவர் பெறுவதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது." என்று புகழாரம் சூட்டினார்.

மறுபடியும் பூக்கும் வரை

 கவிஞர் தணிகை




Saturday, May 30, 2026

வைபவ் சூரிய வன்சி வரலாற்று நாயகன்: கவிஞர் தணிகை

 வைபவ் சூரிய வன்சி வரலாற்று நாயகன்: கவிஞர் தணிகை




உலகமே கொண்டாடுகிறது, நாமும் கொண்டாடுவோமே. கவாஸ்கர், விஸ்வநாத், கபில்தேவ் போன்ற கனவான்கள் ஆட்டத்தை கேட்டு, பார்த்து இரசித்து அது தொடர வழியில்லாமல் பின் எம்.எஸ்.தோனி வழியாக ஒரு ஆர்வம் ஏற்பட்டு இப்போது மட்டைப் பந்து விளையாட்டைப் பார்க்க ஈர்ப்பு வருகிறதெனில் அது இந்த 15 வயதேயான பால் முகம் கூட மறையாத இந்த வைபவ் சூரிய வன்சியின் ஆட்டம் தான். பார்ப்பது ஒரு வைபவம்தான் இவர் விளையாடுகிறார் என்றாலே அது வைபவம் தான்.


நேற்றும் குஜராத் டைட்டனை வென்று இறுதி ஆட்டத்திலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை வென்றெடுப்பார் என எதிர் பார்த்தேன். அது நடக்கவில்லை. அது தான் மட்டைப் பந்தின் தனித்துவம். நாம் எதிர்பார்க்கிறபடி எல்லாம் இந்த விளையாட்டு நடக்காது.


இந்த விளையாட்டை 10 ஓவருக்குள் கொண்டு வர வேண்டும் என வெகு காலத்திற்கு முன்பிருந்தே எழுதியிருக்கிறேன்.


துளி கூட கர்வம் இல்லாமல் எல்லா பந்தையுமே கோட்டுக்கு வெளியே அடித்துப் பார்க்க வேண்டும் என்ற முடிவிலேயே விளையாடுகிறார். பயமறியா இந்த இளம் கன்று. கிறிஸ் காயல் போன்ற மாபெரும் நெடிய உருவமே இவரை ரன் மெஷின் எனும் போது நாம் என்ன சொல்லிதான் பாராட்டி புகழ வேண்டும் எனத் தோன்றவில்லை.


அவருக்கு தமிழ் தெரியாது என்றாலும் நமது ஆவலை வெளிப்படுத்திக் கொண்டு விட்டேன். அவர் தமது வாழ்நாளில் டான் பிராட்மேன் போன்றோரின் சாதனைகளை எல்லாம் முறியடிப்பார், மேலும் இன்னும் சுமார் 20 அல்லது 30 ஆண்டுகள் வரை கூட‌ இவரால் விளையாட முடியும் என நம்புகிறேன்.


வாழ்க...வைபவ் சூரியவன்சி...இவர் விளையாட்டைப் பார்ப்பதே ஒரு இன்பம்.

நன்றி.

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

Sunday, May 24, 2026

மியாஜகி: கவிஞர் தணிகை

 மியாஜகி: கவிஞர் தணிகை



மியாஜகி ஒரு மாம்பழ வகை. இது ஜப்பான் நாட்டில் இருந்து உலகெங்கும் பரவியுள்ள அரிய இரகம். இது சரியான ஒரு மாம்பழப் பருவ காலம்(சீசன்). அந்தந்தப் பருவத்தில் கிடைக்கும் கனிகளை ருசித்து விடும் மனிதர்கள் கொடுத்து வைத்தவர்கள். பலாப் பழம் சுவைக்க அறுத்து கிலோ கணக்கில் விற்கப்படுகிறது சுளைகளாக...நீண்ட நாள் கழித்து ரஸ்தாளி வாழைப் பழங்களைக் கண்டேன் பெரிய அளவு ஒன்றின் விலை ரூ.10 என்று அது இயற்கை விளைவா அல்லது உரத்தின் விளைவாய் கட்டி கட்டியாய் இருக்குமா என இனி தான் பார்க்க வேண்டும் 5 பழம் மட்டும் வாங்கி வைத்துள்ளேன் இன்னும் முழுதாக பழுக்க வில்லை... தேன் வாழை, பூ வாழை போன்ற பழங்களை குடல் புண் உபாதை உள்ளவர்  உண்ணும் போது வயிறு மேலும் வேதனை செய்யும் என்பதையும் நினைவில் கொள்க.


நிறைய மாம்பழ விளைச்சல், நிறைய விலையாகாமல் அல்லது தரமில்லாமல் கீழே கொட்டுப் பட்டு வரும் நிலை பார்க்கிறேன் நடைப்பயிற்சிக்கு செல்லும் வழித் தோட்டங்களில்.நல்லவேளை ஒரு முக்கியமான வியாபாரி கடந்த காலத்தில் கடந்த ஆண்டில் மாம்பழம் விற்று கெட்ட பேரை சம்பாதித்துக் கொண்ட எங்கள் நடைப்பயிற்சி தோழர் ஒருவர் இந்த வருடம் மாம்பழம் விற்காமல் தான் உண்டு தன் தொழில் வேலை உண்டு என நல்ல பேரை எடுத்திருக்கிறார். விலை கிலோ 28 எனச் சொல்லப்பட்டாலும் இங்கே எல்லாம் கிலோ தோட்டக்காரர்களே ரூ. 50க்கு என விற்பனை செய்கிறார்கள்.


இந்த மியாஜகி மாம்பழம் ஒரு கிலோ ரூபாய் இரண்டு இலட்சத்திற்கும் மேலாம். ஒரிஸ்ஸாவில் மல்க்கங்கிரி பகுதியில் (இந்திரா காந்தி பேசிய கடைசிக் கூட்டம் இந்த ஊரில் தாம் நடந்தது.) ஒரு ஆர்வமிக்க விவசாயி ஒரு சமூக சேவகர் வழங்கிய மரக்கன்றை பல வருடங்களாக அக்கறையுடன் சிரமப்பட்டு வளர்த்து இப்போது கனி கொடுக்க ஆரம்பிக்க அதன் மதிப்பு கருதி 24 மணியும் உறங்காமல் கூட பாதுகாத்து வருகிறாராம் திருட்டு போகாமல்.


ஆனால் பாருங்கள் ஒரு வேடிக்கை இந்தப் பழத்தை இவ்வளவு காசு கொடுத்து யார் வாங்குவார்கள்? இந்தியாவில் இங்கு எவரும் வாங்க வழி இல்லை என்பதால் சாதரணமான பழம் போல் போய் விடுமோ என்ற கவலை அவருக்கு... அப்படி என்னதான் அந்தப் பழத்தில் இருக்கிறது அவ்வளவு விலை கொடுக்குமளவு அதன் தரம் நீங்களும் தேடிப்பாருங்கள்  இணையத்திலாவது...



நாய் பெற்ற தெங்கம்பழம்

சூரிய  முட்டை என்ற ஒரு பேரும் உண்டு. EGG OF THE SUN

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

Tuesday, May 19, 2026

படித்ததில் பிடித்தது மிக அரிய கட்டுரை பிடித்து வைக்கிறேன்: கவிஞர் தணிகை

 நன்றி: பிபிசி தமிழ்

மின்சார வாகனங்களின் எதிர்காலத்தையே இந்திய விஞ்ஞானிகளின் சிறு கண்டுபிடிப்பு மாற்றுமா?



பட மூலாதாரம்,GETTY IMAGES

  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

இந்தியாவின் சாலைகள் எங்கும் மின்சார வாகனங்கள் அதிகரித்து வருகின்றன. அதேநேரத்தில், ஆன்லைன் வங்கிப் பரிமாற்றம், யுபிஐ பரிமாற்றம், வீடியோ ஸ்ட்ரீமிங், சமூக ஊடகங்கள், கிளவுட் ஸ்டோரேஜ் ஆகியவற்றை ஆதரிக்கத் தேவையான தரவு மையங்களும் வேகமாக விரிவடைந்து வருகின்றன.

இந்த இரண்டும் தனித்தனியாகப் பார்க்கையில் இருவேறு உலகங்களாகத் தெரிந்தாலும், இவை ஒரு முக்கியமான தொழில்நுட்பத்தை அடிப்படையில் சார்ந்துள்ளன. அதுதான், வலுவான, நம்பகமான மின்னணுவியல்.

சமீபத்திய ஆராய்ச்சியில், பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள், கேலியம் நைட்ரைட் அல்லது GaN என்றழைக்கப்படும் சக்திவாய்ந்த ஒரு பொருளின் பரவலான பயன்பாட்டிற்குத் தடையாக இருந்த ஒரு முக்கியமான சிக்கலுக்குத் தீர்வு கண்டுள்ளனர்.

அவர்களுடைய ஆராய்ச்சியின் விளைவாக, மின்சார வாகனங்களின் பாதுகாப்பு, ஆற்றல் திறன் ஆகியவை பல மடங்கு அதிகரிக்கும் என்றும், அவற்றை விரைவாக சார்ஜ் செய்ய முடியும் எனவும் இது குறித்து இந்திய அறிவியல் நிறுவனம் வெளியிட்இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கிய, இந்திய அறிவியல் நிறுவனத்தின் மின்னணு அமைப்புகள் பொறியியல் துறையைச் சேர்ந்த மயங்க் ஸ்ரீவஸ்தவா பிபிசி தமிழிடம் பேசியபோது, "இப்போது பயன்பாட்டில் இருக்கும் சிலிக்கானை விட கேலியம் நைட்ரைட் அதிவேகம் மற்றும் அதிக திறனைக் கொண்டது. ஆனால், சில தடைகளின் காரணமாக அது நம்பகமானதாக இதுவரை இருக்கவில்லை. அதை இந்த ஆராய்ச்சியில் நாங்கள் வடிவமைத்துள்ள புதிய கட்டமைப்பு மாற்றுகிறது," என்று கூறினார்.

கேலியம் நைட்ரைட் என்றால் என்ன? அது ஏன் முக்கியம்?

இதைப் புரிந்துகொள்ள முதலில் டிரான்சிஸ்டர் எனப்படும் ஒரு சிறிய, ஆனால் சக்திவாய்ந்த சாதனத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்.

டிரான்சிஸ்டர் என்பது ஒரு சிறிய மின்சார சுவிட்ச் போன்றது. அது இயக்கப்படும்போது, மின்சாரம் பாய்கிறது. அது அணைக்கப்படும்போது, மின்சார ஓட்டம் நிறுத்தப்படுகிறது. இத்தகைய சுவிட்சுகளை நவீன இயந்திரங்கள் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் பயன்படுத்துகின்றன.

இந்த டிரான்சிஸ்டர்கள் பன்னெடுங்காலமாக, பெரும்பாலும் சிலிக்கான் எனப்படும் ஒரு பொருளைப் பயன்படுத்தியே தயாரிக்கப்படுகின்றன. சிலிக்கான் மின்னணு உலகுக்கு மிகச் சிறப்பாகச் சேவையாற்றிக் கொண்டிருக்கிறது. ஆனால் இயந்திரங்கள் அதிக சக்தி வாய்ந்தவையாக மாறி, ஆற்றல் தேவைகள் அதிகரிக்கும்போது, அதற்கு ஈடுகொடுக்கும் வகையிலான ஒரு மாற்றினை விஞ்ஞானிகள் தேடுவதும் தொடங்கியது.

அத்தகைய ஒரு மாற்றுப் பொருள்தான் கேலியம் நைட்ரைட். சுருக்கமாக GaN என்றழைக்கப்படுகிறது. சிலிக்கானுடன் ஒப்பிடும்போது, இதனால் ஒப்பீட்டளவில் அதிக ஆற்றலைக் கையாள முடியும், மின்சாரத்தை வேகமாக மாற்ற முடியும். வழக்கமாக இயந்திரங்களில் ஆற்றல் பயன்பாட்டைப் பொறுத்து, வெப்பமாகக் குறிப்பிடத்தக்க அளவிலான ஆற்றல் வீணாகும். இந்த கேலியம் நைட்ரைட், அப்படி வெப்பமாக வீணாகும் ஆற்றலின் அளவையும் குறைக்கிறது.

இந்த நன்மைகள் இருப்பதால், சிலிக்கானுக்கு பதிலாக கேலியம் நைட்ரைட் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட சாதனங்கள் அளவில் சிறியதாகவும், சில நேரங்களில் மூன்று மடங்கு சிறியதாகவும் இருக்கலாம் என்று இந்த ஆராய்ச்சி கூறுகிறது.

இதன் விளைவாக, மின்சார வாகனங்கள், சார்ஜர்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புகள் மற்றும் தரவு மையங்களில் இவற்றின் பயன்பாடு பல சாதகமான பலன்களை வழங்கும் என்று இந்திய அறிவியல் நிறுவனத்தின் செய்திக் குறிப்பு கூறுகிறது.

இவ்வளவு நன்மைகள் இதன் மூலம் கிடைக்கும் என்றாலும், சிலிக்கானுக்கு பதிலாக அவற்றை முழுமையான மாற்றாக சந்தையில் பயன்படுத்த முடியாமல் இருப்பதற்குக் காரணம் உள்ளது. அதற்கான காரணம், 'கேட்' என்று அழைக்கப்படும் டிரான்சிஸ்டரின் மிகச் சிறிய ஆனால் முக்கியமான பாகத்தில் இருக்கிறது.

'கேட்'டில் என்ன பிரச்னை?

ஒவ்வொரு டிரான்சிஸ்டரின் உள்ளேயும், அந்தச் சாதனம் எப்போது இயக்கப்படும், அணைக்கப்படும் என்பதைக் கட்டுப்படுத்துவதற்கான கேட் என்ற பாகம் இருக்கிறது. அதை ஒரு தண்ணீர் குழாயுடன் ஒப்பிடலாம். குழாயின் பிடியைத் திருப்பும்போது தண்ணீர் பாய்கிறது, அதை பின்புறமாகத் திருப்பும்போது குழாய் மூடப்பட்டு தண்ணீர் வரத்து தடை செய்யப்படுகிறது. இதேபோன்ற வகையில்தான் மின்சார ஓட்டத்தை டிரான்சிஸ்டரில் உள்ள இந்த கேட் கட்டுப்படுத்துகிறது.

ஒரு டிரான்சிஸ்டர் இயக்கப்படுவதற்கு, கேட்டில் குறைந்தபட்ச மின்னழுத்தம் பயன்படுத்தப்பட வேண்டும். இந்தக் குறைந்தபட்ச மின்னழுத்தம் 'கேட் மின்னழுத்தம்' என்று அழைக்கப்படுகிறது. அதாவது ஒரு குழாயைத் திறப்பதற்கு நீங்கள் கொடுக்க வேண்டிய குறைந்தபட்ச அழுத்தமாக இதைக் கற்பனை செய்யலாம்.

தற்போதைய பல கேலியம் நைட்ரைட் சாதனங்களில், இந்த கேட் மின்னழுத்தம் என்பது ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது. அதாவது, சுமார் 1.5 முதல் 2 வால்ட் வரையிலான மின்னழுத்தம் இருந்தாலே, மின்சார ஓட்டத்தை அனுமதிக்கும் கேட் திறந்துவிடுகிறது. இது ஒரு சிக்கலை உருவாக்கியது. மின்சார வாகனங்கள், தரவு மையங்கள் போன்ற பெரிய மின்னணு அமைப்புகளில் உள்ள மின்னழுத்தத்தில் சிறிய தேவையற்ற தொந்தரவுகளை ஏற்படுத்துகிறது. கேட் மின்னழுத்தம் மிகக் குறைவாக இருந்தால், இவ்வாறு ஏற்படும் சிறிய தொந்தரவுகள்கூட தற்செயலாக சாதனத்தை இயக்கிவிடக்கூடும்.

இதில் இருக்கும் மற்றொரு சிக்கல் மின் கசிவுப் பிரச்னை. அதாவது, மின்னணு சாதனம் அணைக்கப்பட வேண்டியிருந்தாலும்கூட, சிறிதளவு மின்சாரம் பாய்ந்துகொண்டிருக்கும். இது ஒரு குழாய் மூடப்பட்ட பிறகும் தண்ணீர் சொட்டிக் கொண்டிருப்பதைப் போன்றது. காலப்போக்கில், இந்தத் தொடர்ச்சியான கசிவு டிரான்சிஸ்டரின் செயல்பாட்டை பாதிக்கக்கூடும்.

இந்தப் பிரச்னைகளின் விளைவாக, மிக அதிக நம்பகத்தன்மை கொண்ட அமைப்புகளில் கேலியம் நைட்ரைட்டை பயன்படுத்துவதில் நிபுணர்கள் எச்சரிக்கையாகவே இருந்தனர். மின்சார வாகனங்கள், தரவு மையங்கள் போன்றவை வெப்பம், அழுத்தம், மாறி வரும் நிலைமைகளுக்கு நடுவில் பல ஆண்டுகளுக்குப் பாதுகாப்பாக இயங்க வேண்டும். அவற்றில் கேலியம் நைட்ரைட் சாதனங்களில் நிகழும் இத்தகைய எந்தவொரு கணிக்க முடியாத நடத்தையாக இருந்தாலும் அது மிகவும் ஆபத்தானது.

தீர்வுக்கு அடித்தளம் அமைத்த நுண்ணிய கண்டுபிடிப்பு

ஆனால், இந்த ஆபத்துகளுக்குத் தீர்வு காணும் வகையில், இந்தச் சிக்கலுக்குப் பின்னாலுள்ள அடிப்படை அறிவியலைப் புரிந்துகொள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் முயன்றனர்.

டிரான்சிஸ்டருக்குள் இருக்கும் சிறிய கசிவுப் பாதைகள், அதன் இயக்கவியல் நடத்தைகளை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை அவர்கள் கவனமாக ஆராய்ந்தனர்.

இதன் மூலம் மின் கசிவுக்கும் டிரான்சிஸ்டர் எவ்வாறு இயக்கப்படுகிறது என்பதற்கும் இடையே ஒரு வலுவான தொடர்பு இருப்பதை ஆய்வுக் குழு கண்டுபிடித்ததாக பேராசிரியர் மயங்க் ஸ்ரீவஸ்தவா விளக்கினார். "அது சீக்கிரமாகவோ அல்லது தாமதமாகவோ இயக்கப்படுமா என்பதில் சிறிய கசிவுப் பாதைகள் தாக்கம் செலுத்தின. இது இதற்கு முன்பு காணப்படாத ஒரு புரிதல்."

சோதனை அளவீடுகளை விரிவான மாதிரிகள் மற்றும் நுண்ணிய பகுப்பாய்வுகளுக்கு உட்படுத்தியதன் மூலம், இந்தச் சிறிய கசிவுப் பாதைகளைக் கட்டுப்படுத்துவது கேட் மின்னழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் என்பதை ஆய்வாளர்கள் நிரூபித்தனர். இந்த நுண்ணறிவு கேலியம் நைட்ரைட்டில் இருந்த பிரச்னைகளுக்கான தீர்வுக்கு அடித்தளம் அமைத்தது.

மின்சார வாகனங்களின் எதிர்காலத்தையே மாற்றக்கூடிய இந்திய விஞ்ஞானிகளின் சிறு கண்டுபிடிப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

விஞ்ஞானிகள் வடிவமைத்த புதிய கேட்

கேலியம் நைட்ரைட் சாதனங்கள் ஏன் நம்பத்தகுந்தவையாக இருப்பதில்லை என்பதற்கான மூல காரணத்தைக் கண்டறிந்த பிறகு, ஆய்வுக்குழு, அதை நிவர்த்தி செய்யும் வகையில் புதிய கேட் கட்டமைப்பை வடிவமைத்தது.

டிரான்சிஸ்டரில் உள்ள p-GaN உடன் அலுமினியம்-டைட்டானியம் ஆக்சைடை பயன்படுத்தி மேம்படுத்தப்பட்ட கேட் அடுக்குகளை உருவாக்கியுள்ளதாக இதுகுறித்து விளக்கிய பேராசிரியர் மயங்க் தெரிவித்தார். "இந்தப் புதிய அமைப்பு தேவையற்ற கசிவை கணிசமாகக் குறைக்கிறது" எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஆய்வாளர்களின் கூற்றுப்படி, இந்தப் புதிய வடிவமைப்பு இதற்கு முன் கேட்களில் நிகழ்ந்த மின் கசிவை 10,000 மடங்கு வரை குறைக்கும். அதேநேரத்தில், இது 4 வால்ட்டுகளுக்கு மேல் தொடக்கநிலை மின்னழுத்த அளவை அதிகரிக்கிறது. அதாவது முன்பு 1.5 வால்ட் மின்சாரத்திலேயே திறக்கப்பட்ட சுவிட்ச் இனி அவ்வாறு தற்செயலாகத் திறக்காது.

"இது முக்கியமானது, ஏனெனில், மோஸ்ஃபெட் (MOSFET) எனப்படும் பாரம்பரிய சிலிக்கான் சாதனங்கள் வழக்கமாக 3 முதல் 3.5 வால்ட்களில் இயக்கப்படும். அதோடு சுமார் 15 வால்ட் வரை கேட் மின்னழுத்தங்களை பொறுத்துக்கொள்ள முடியும். இந்த ஆய்வின் மூலம், கேலியம் நைட்ரைட் சுவிட்ச்களிலும் 1.5 வால்ட்டுகளில் இருந்து 4 வால்ட்டுகளாக அவற்றின் தாங்குதிறனை உயர்த்தி, நிலைத்தன்மையை மேம்படுத்துவதன் மூலம், புதிய GaN சாதனங்கள் நம்பகமான சிலிக்கான் கூறுகளைப் போலவே செயல்படுகின்றன என்பது தெரிய வந்துள்ளது. அதேபோல, கேட் முறிவு மின்னழுத்தமும் சுமார் 15.5 வால்ட்டுகளாக அதிகரித்துள்ளது, அதன் வலுவான தன்மையை மேம்படுத்துகிறது."

பேராசிரியர் ஸ்ரீவஸ்தவா இதுகுறித்துப் பேசியபோது, "குறைவான கசிவுடன், அதிகமான தாங்குதிறன் மின்னழுத்தத்தை அடைவது கேலியம் நைட்ரைட் சாதனங்களைப் பரவலாகப் பயன்படுத்துவதன் அடுத்த கட்டத்திற்கான முக்கிய செயல்படுத்தல்களில் ஒன்று" எனத் தெரிவித்தார்.

"எளிமையாகச் சொல்ல வேண்டுமெனில், கேலியம் நைட்ரைட் சாதனங்களை பொறியாளர்கள் எதிர்பார்க்கும் அமைப்புகளில் பயன்படுத்துவதற்கு மிகவும் கணிக்கக்கூடிய, நிலையான, வசதியான, நம்பகத்தன்மை வாய்ந்த சாதனமாக மாற்றியுள்ளது."

மின்சார வாகனங்களுக்கு இதனால் என்ன பயன்?

மின்சார வாகனங்கள் மின்னணுவியல் சாதனங்களைப் பெரிதும் சார்ந்துள்ளன. இந்த மின்னணு சாதனங்கள், ஆன்-போர்ட் சார்ஜர்கள், டிசி-டிசி மாற்றிகள், இன்வெர்ட்டர்கள், மோட்டார் டிரைவ்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.

சார்ஜரில் இருந்து பேட்டரிக்கும் பேட்டரியில் இருந்து மோட்டாருக்கும் மின்சாரம் பாயும் விதத்தை இவை கட்டுப்படுத்துகின்றன.

சென்னையிலுள்ள வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியின் மின்னணு பொறியியல் பள்ளியின் மின்சார வாகனங்கள் இன்குபேஷன் சோதனை மற்றும் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த பேராசிரியர் முனைவர் ஃப்ளோரன்ஸ் ஞான பூவதி, "மின் கசிவைக் குறைப்பது, மின்னழுத்த தாங்குதிறனை அதிகரிப்பது போன்ற முன்னேற்றங்கள் மின்சார வாகன அமைப்புகளில் செயல்திறனை கணிசமாக மேம்படுத்தும்" என்று விளக்கினார்.

அதோடு, மின் கசிவு குறைக்கப்படும்போது, வெப்பமாக வீணடிக்கப்படும் ஆற்றலின் அளவும் குறைவதாகக் கூறுகிறார் அவர். "இதனால் சிறந்த வெப்ப மேலாண்மை மற்றும் அளவில் பெரிய குளிரூட்டும் கட்டமைப்புகளுக்கான தேவையும் மின்சார வாகனத்தில் குறைகிறது."

இதன்மூலம் பேட்டரியின் செயல்திறன் அதிகரிப்பதால், அதிகமான ஆற்றல் மோட்டாரை அடைய முடியும் என்பதோடு, சார்ஜிங் நேரமும் குறையும், பேட்டரி வேகமாக சார்ஜ் ஆவதற்கு இந்தக் கட்டமைப்பு உதவும் என்று ஃப்ளோரன்ஸ் ஞான பூவதி விளக்கினார்.

அதுமட்டுமின்றி, அவரது கூற்றுப்படி கேலியம் நைட்ரைட் பயன்படுத்துவதால் ஏற்படும் தற்செயல் டர்ன்-ஆன்களை இது தடுப்பதால், சாதனத்தின் மீதான பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை மேம்படுகிறது.

பொதுவாகவே, கேலியம் நைட்ரைட் சாதனங்களைப் பயன்படுத்துவது மின்னணு சாதனங்களின் மொத்த அளவைக் குறைப்பதாக ஏற்கெனவே அறியப்படுகிறது. தற்போது, அவற்றில் இருந்த சிக்கல்களைத் தீர்க்க உதவும் இந்த மேம்படுத்தப்பட்ட கேட் வடிவமைப்பால், மின்சார வாகனங்களால் சிறிய வடிவமைப்புகளைச் செயல்படுத்த முடியும். ஒருவேளை பேட்டரிகள் அல்லது பிற கூறுகளின் அளவு குறைவதால் அதிகமான வெற்றிடத்தை அது விட்டுச் செல்லக்கூடும்.

இத்தகைய மேம்பாடுகள், நடைமுறையில், எதிர்கால மின்சார வாகனங்களில், நீண்ட தூர செயலாற்றல், வேகமான சார்ஜிங், சிறந்த செயல்திறன் ஆகியவற்றை வழங்கக்கூடும் என்கிறார் ஃப்ளோரன்ஸ்.

கரிம உமிழ்வை குறைக்க உதவுமா?

தரவு மையங்கள் அதிகளவிலான மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன. இந்தக் கட்டமைப்புகளுக்குள் ஏற்படும் மின் இழப்புகள் மின்சார கட்டணங்களை அதிகரிப்பது மட்டுமின்றி, அதிக வெப்பத்தையும் உருவாக்குகின்றன. இதனால் அவற்றுக்குப் பெரிய அளவிலான குளிரூட்டும் அமைப்புகள் தேவைப்படுகின்றன.

தரவு மைய மின் விநியோகங்களில் மிகவும் நம்பகமான, திறன் மிக்க GaN சாதனங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால், ஆற்றல் இழப்புகள் குறைக்கப்படலாம் என்கிறார் ஃப்ளோரன்ஸ் ஞான பூவதி.

ஆற்றல் வீணாவது குறைவது, குளிரூட்டும் தேவைகளைக் குறைக்கும். இது கரிம உமிழ்வு அளவைக் குறைக்கும் என்றும் விஞ்ஞானிகள் வாதிடுகின்றனர். ஆயிரக்கணக்கான தரவு மையங்களில் இந்தச் சிறிய செயல்திறன் மேம்பாட்டைச் செய்வது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

இந்தப் புதிய தொழில்நுட்ப முன்னேற்றம், ஓர் அடிப்படை இயற்பியல் சிக்கலைத் தீர்த்து, அதை நடைமுறை பொறியியல் தீர்வாக மாற்றுவதன் மூலம் இந்திய அறிவியல் நிறுவனத்தின் ஆய்வுக்குழு கேலியம் நைட்ரைட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் நிலவிவந்த தொழில்நுட்பத் தடையைச் சரி செய்துள்ளது.

இதோடு, "அரசின் ஆதரவு, தொழில் கூட்டாண்மைகள், உரிமம் ஆகியவற்றின் மூலம் வணிக ரீதியாக இதைப் பயன்படுத்துவதற்கான தொழில்நுட்பங்களை அளவிடும் நிலையில் ஆய்வாளர்கள் இருப்பதாக" இந்திய அறிவியல் நிறுவனத்தின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தக் கண்டுபிடிப்பு வெற்றிகரமாக ஏற்றுக்கொள்ளப்பட்டால், அது மின்சார வாகனங்களில் ஒரு புதிய முன்னேற்றத்தை இந்தியா காண உதவும் எனவும் நிபுணர்கள் கருதுகின்றனர்.

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


Monday, May 18, 2026

பி எஸ்.என்.எல்(BSNL) தகவல் தொழில் நுட்பச் சுரண்டல்: கவிஞர் தணிகை

 பி எஸ்.என்.எல்(BSNL) தகவல் தொழில் நுட்பச் சுரண்டல்: கவிஞர் தணிகை



பி.எஸ்.என்.எல் உட்பட அனைத்து செல்பேசி சேவை வழங்கும் நிறுவனங்களுமே சுரண்டலின் வர்க்கங்கள். இலவசமாக சிம்களை வழங்கினார்கள். இன்று சொல்லாமலே அறிவிக்காமலே கோடிகளில் சுரண்டுகிறார்கள் நுகர்வோரின் அத்தியாவசியத் தேவைகளைக் காரணம் காட்டி 24 மணி நேரமுமே பகற்கொள்ளை அடித்து பணத்தைப் பிடுங்கி வருகிறார்கள்.


கேட்டால் டேட்டா என்பார் டாக் டைம் என்பார், கஸ்டமர் கேரில் அதை அழுத்தவும் இந்த எண்ணை அழுத்தவும் என ஒரே ஒப்பாரி. எளிதில் மேலதிகாரிகளிடம் புகாரைச் சொல்லவே முடியாத வாடிக்கையாளர் சேவையும் மையமும் தகிடுதத்தங்களும்.


முதலில் மாதமொன்றுக்கு 107ரூ கட்டி வந்தேன், அதை கூகுள் பே முலம் செலுத்த அவர்களுக்கு ரூ.1.90 இடைத் தரகு. ஆக 108.90ரூ. 28 நாள் அத்துடன் ஒரு வாரம் கருணைக் காலமாம் மறுபடியும் புதுப்பித்துக் கொள்ள...திடீரென எந்தவித முன்னறிவிப்புமின்றி 28 நாள் 20 நாளாக மாறியது. இப்போது 107க்கும் மாறாக 147 கட்டிக் கொள்ளுங்கள் என தகவல் செல்பேசி வழி... எனவே இனி என்னைத் தொடர்பு கொள்ள வேண்டி எவராவது விரும்பின் வாட்ஸ் அப் அழைப்பு ஒன்றே வழி .இவர்கள் சொல்லியபடி எல்லாம் ஆடிக் கொண்டிருக்க யாமொன்றும் அடிவருடி அல்ல.


ராஜ்யசபாவிலேயே ஒரு உறுப்பினர் உங்களுக்கு மட்டும் எப்படி வருடத்திற்கு 13 மாதம்? எனக் காறித் துப்பியும் இவர்களுக்குள் எவ்வித மாற்றமும் வரவில்லை. நெட் கால் எல்லாம் இலவசம் என்பார் நெட் இணைப்பு உள்ளார்க்கு...ஆனால் ஒரு அழைப்பு கூட செய்ய யோக்யதை இல்லை.


இதில் செல்பேசிக்கு டேட்டா இலவசம் என்பார் காசு கட்டவில்லை என்றால் அன்றே டேட்டாவும் கிடைக்காது, நெட்டும் கிடைக்காது, பேசவும் முடியாது என்ற நிலையை ஏற்படுத்தி மக்களை நிர்பந்தித்து வருகிறார்கள். இவர்கள் மக்களிடம் இருந்து அடிக்கும் கொள்ளைக்கு ஒரு அளவுகோலை நியமித்து ஆராய வேண்டும் என்று அரசுகளை அணுக:


அவற்றின் நிலை என்ன எனில், இலவச எரிவாயு , விறகு வேண்டாம் என்று எல்லாரும் வாங்கிக்கங்க, என்று பாடி விட்டு இன்று பெட்ரோல் ,எரிவாயு எல்லாமே விலை ஏற்றம்...எல்லா விலையுமே பெட்ரோல் பம்ப்பினால் விலை ஏற்றம்.இவை ஏழை மேலும் ஏழையாகி பணக்காரர் மேலும் பணக்காரராகும் சமூக அமைப்பின் நோய் அல்லவா?எல்லாமே உலகெலாம் கீழிருப்போரை இல்லாரை சுரண்டி மேல் எடுத்துச் சென்று கொண்டு அனுபவிக்கும் அமைப்புகளாகி பல்லாண்டுகள் ஆகின.மாற்ற வழி இல்லை. ஜென்மம் போதவில்லை. மக்களிடம் மாயை நிலவிட...


எல்லொரும் ஒரு வங்கிக் கணக்கு என்று சொல்லி விட்டு, வீட்டுக்கொரு மரம் என வீடில்லாரிடம் சொல்வது போல, தண்ணி வராமலேயே தண்ணி விட்டு செடி கொடி மரங்களை காப்பாத்துங்க எனச் சொல்வது போல காசில்லாதார் கணக்குகளிடம் கூட குறைந்த பட்சம் காசு இருக்க கெடுபிடி... வங்கிகள் கட்டுப் படுத்துவது போல...


ஏழைப் பெண்களிடம் இருக்கும் சிறுவாட்டுத் தங்கத்தை எல்லாம் 916 செய்க ஹால்மார்க் என்றெல்லாம் சொல்லி ஏழை பாளைகளிடமிருந்த தங்கம் அப்படியே இருந்தால் செல்லாது எனச் சொல்லி இன்று ஒரு வருடத்திற்கு தங்கம் வாங்க வேண்டாம் என தலைமை...விலையோ என்ன என சொல்ல அவசியமே இல்லை....


நுகர்வோர் நீதிமன்றம் செல்ல வேண்டும்...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை