Thursday, September 10, 2026

தாரமங்கலம் மாரப்பன் கணேசன்: கவிஞர் தணிகை

 தாரமங்கலம் மாரப்பன் கணேசன்: கவிஞர் தணிகை




 வ‌சந்தம் அது ஒரு வசந்தம் எந்நாளும் வாசம் வீசும் சுகந்தம்

டி.எம்.ஜி T.M.G என்று மரியாதையுடன் பிரபலமாக அழைக்கப்படும் T.M.கணேசன் ஒரு முன்னாள் இராணுவ வீரர் என்பதை விட எந்தவிதக் கெட்ட பழக்கமும் இல்லா இந்திய‌ இராணுவ வீரர் என்பதே சரியாக இருக்கும்.


இளமையில் படிப்பு மேல் ஆர்வம் இல்லை. ஆசிரியர்கள் சித்ரவதை செய்வதாக உணர்ந்த சிறுவன் அடிக்கடி பள்ளியை விட்டு தாரமங்கலத்தில் உள்ள பிரபலமான கைலாய நாதர் ஆலயத்தில் அமர்ந்திருந்து விட்டு பள்ளி விடும் நேரத்தில் வீட்டுக்கு வந்து விடுவது வழக்கம். (இந்தக் கதை எல்லாம் அவர் வாயிலிருந்தே "மாமா நீங்க எப்படி மிலிட்டிரிக்கு போனீங்க என்று கேட்டதற்கான பதிலில் இருந்து")


வீட்டுக்கு இது பற்றி எல்லாம் தெரிய வர தந்தையை இளமையிலேயே இழந்தவராதலால் இவரது மாமா அந்த ஊரின் பெரிய மனிதரான T.P.அண்ணாமலை முதலியார் என்பவர் இவரைத் தத்துப் பிள்ளையாக வளர்த்திருக்கிறார்.இவர் அந்த ஊரின் செங்குந்தர் பள்ளியின் தாளாளராகவும் இருந்தார். நிறைய சொத்து காடு கழனி தோட்டம், மளிகை இப்படி...


என்னடா கணேசா பள்ளிக்கூடம் போகாம இப்படிப்  பண்றே , என்ற சொல் பொறாமல் இராணுவத்துக்கு ஆள் சேர்க்கிறார்கள் என்று கேள்விப் பட்டு தேர்ந்தெடுக்கப் பட்டு இராணுவ வீரரான கதை எல்லாம் வேறு.  அடியேன் சிறுவனாக இருந்து பார்க்கும் நிலையில்: ஆள் 6 அடிக்கும் மேல் நல்ல உயரம்,அழகு. நல்ல பலசாலியானத் தோற்றம், வசீகரமான முகம், சுருள் முடி.இது போன்று ஆட்களைப் பார்ப்பது அரிது என்றபடிதான் இருந்தார்.


எங்களுடைய ஒன்று விட்ட சித்தப்பாS.S பெருமாள் என்பவர் நிறைய பொது காரியங்களில் முன் நிற்பவர், எங்கள் வீட்டுப் பெண்களுக்கு முன் நின்று திருமணம் செய்து வைத்தார். அதில் ஒன்று...இவருடைய மணமும்.


ஒரு நாள் சித்தப்பா வீட்டுக்கு வரும்போது மதிய உணவு வேளை. அவருடன் ஒருவர் வருகிறார். இருவருக்கும் எனது மூத்த சகோதரி மல்லிகேஸ்வரி உணவு பரிமாறுகிறார். பெண்ணைப் பிடித்துவிட்டது. அவரையே மணமுடிப்பேன் எனத் தெரிவித்து மணம் நடைபெறுகிறது.சோதிடம் எல்லாம் பார்த்து செய்தார்களா என்று நினவில்லை. அவர்களுக்குM.G.R எம்.ஜி.ஆர் அதாவது மாரப்பன் கணேசன் இராஜ்குமார் என்னும் மகனும் , ஹேமலதா பழனிவேல்(நல்லாசிரியர் விருது பெற்ற பழனிவேல்தாம்) என்னும் மகளும் இன்று ஐம்பதை விஞ்சிய வயதில் பேரன் பேத்தி எடுத்த நிலையில் வளமாக வாழ்ந்து வருகிறார்கள்.


ஏன் இந்த மனிதரை காலத்தின் முன் பதிய வைக்க வேண்டுமெனில், அவ்வளவும் நல்லெண்ணம், பெருமுயற்சி, எடுத்த காரியத்தில் பெரும் ஈடுபாடு,ஈடு செய்ய முடியா கடின உழைப்பு என்பதற்காகத்தான்.


இராணுவ வீரராக இருந்த காலத்தில் ஜமால் பூர், காஷ்மீர், பட்டன்கோட் இப்படிப் பட்ட இடங்களில் இருப்பதாகச் சொல்வார் கடிதம் எழுதுவார்  சகோதரியை அழைத்துச் சென்ற காலமும் உண்டு, வீட்டில் விட்டுச் சென்ற காலமும் உண்டு. அவர் வந்தால் சுருக்கமாகச் சொன்னால் எங்கள் வீட்டில் திருவிழாதான்.விதவிதமான தின்பண்டங்கள் எல்லாம் செய்து அவரது நண்பர்களுக்கு என்று எடுத்துச் செல்வார், அதில் எங்களுக்கும் ருசிக்க வாய்ப்பிருக்கும்.அசைவ விருந்துகள், வரும்போது பெட்டி பெட்டியாக அங்கு வாங்கி சேர்த்து வைத்திருந்த கேண்டீன் பொருள்கள், காஷ்மீரிலிருந்து வந்த போது ஒரு பெட்டி நிறைய காஷ்மீர் ஆப்பிள்கள், தேயிலை பெரிதாக இருக்கும் தேநீர் போடும்போது இலை சுருங்கி இருப்பது விரியும். தூள் அல்ல இலை.அவ்வளவு மணம் தரம்.


ஒருவாறாக 16 ஆண்டுகள் இராணுவத்தில் இருந்து முடித்து ஓய்வு பெற்ற இராணுவ வீரராக வெளிவந்தவர்க்கு சேலம் இரும்பு உருக்கு ஆலையில் பணிக்கு வாய்ப்பு. நிராகரித்து விட்டு வளர்ப்புத் தந்தை காட்டிய கடையில் ஒரு உணவகம் ஆரம்பிக்கிறார்.அதன் பேர் அண்ணா ஹோட்டல்.( வளர்ப்புத் தந்தை வாழ வைத்த அண்ணாமலை மற்றும் அறிஞர் அண்ணா என்ற பேர்களை இருவாறாக குறிக்கும்).


அடியேன் எப்போதுமே ஒரு எழுத்தாளனாகவே இருக்கிறேன். அப்போது சிறுவனாக இருந்த போதும் அவரை அவரது வாழ்வை உற்று கவனித்திருக்கிறேன். படு சுறுசுறுப்பு சுமார் 10 பேருக்கும் மேல் அவரிடம் பணியில் இருந்தாலும் இவரே எவராவது பணிக்கு வரவில்லையெனில் அந்தப் பணியை தயக்கமின்றி கூச்சமின்றிச் செய்வார், இலை எடுப்பதிலிருந்து, டீ போடுவதிலிருந்து சப்ளை எல்லாமே ஆல் இன் ஆல்,பள்ளிக்கு என்.எஸ்.எஸ் மற்ற நிகழ்வுக்கெல்லாம் இங்கிருந்துதான் உணவு விநியோகம் நடக்கும்.காலையில் தயிர் வடை,சுண்டல் , மசால் வடை, பஜ்ஜி எல்லாம் ஓரிரு மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்து போகும், டிபன், சாப்பாடு, இரவு வரை தொடரும்.


காலையில் டீ போடுவார் வரவில்லையெனில் சைக்கிள் எடுத்துக் கொண்டு அந்த விடியற்காலையில் அவனுக்கு என்ன ஆயிற்று எனப் பறப்பார், பிறகு இவரே போடுவார் பாய்லர் காலம். தாரமங்கலத்தில் காலையில் சொம்பும் டம்ளர் கையுமாக எல்லாக் குடும்பத்திலிருந்தும் தறி நெய்யும் குடும்பத்தார் அனைவருமே டீக்கு வருவார்கள். டீக்கு ஒரே கூட்டமாக இருக்கும். அங்கேயே தேநீர், காப்பி வாங்கி குடிப்பாரும் உண்டு. 


நாயர் குக் உணவு தயாரிப்பாளர், அவருடன் எங்கள் சகோதரியும் மன்றாடுவார், எல்லா வித உணவுகளும் அவ்வளவு தூய்மையுடன் , தரத்துடன் இருக்கும், கல்லுக் காட்டுக்காரக் கூட்டம் என்று ஒன்று உண்டு அது தை மாதம் தருவாயில் கர்நாடகாவிலிருந்து சொந்ந்த ஊருக்குத் திரும்பும் அவர்களுக்கு எல்லாம் இந்த உணவகமே மருந்து விருந்து எல்லாம். சகோதரியின் கைப்பக்குவத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் அசைவ உணவு உண்டு. அது உரிய நேரத்தில் வருவார்க்கு கிடைக்கும் இல்லையேல் தீர்ந்திருக்கும். அண்ணா ஹோட்டலின் சுவை ஊரறிந்தது பேரறிந்தது.


எனது பள்ளிப் பிராயம்  . உதவிக்காக‌ வெள்ளிக் கிழமை மாலை அங்கு சென்று திங்கள் காலை எல்லாம் கூட திரும்பி வந்து பள்ளி சென்றதுண்டு. பள்ளித் தேர்வு விடுமுறைக் காலங்களில், தந்தை விடமாட்டார் ஆடி ஓடிப் பாடி சுற்றித் திரிய ...அங்கே சென்றால் அவர்களுக்கு உதவிகரமாக இருக்குமே என அங்கே செல்லப் பணித்து விடுவார்கள் எம் குடும்பத்தார். அதிக காலம் இருந்தால்  சகோதரியும் மாமனும் துணி மணியுடன் அனுப்பி வைப்பார்கள்...ஓ! அந்த நாட்கள் கண்ணீர் வரவழைக்கும் நினைக்கும்போதே...அப்போது அதன் வண்ணம் தெரியவில்லை, இப்போது எண்ணம் தெரிகிறது.



குதிரை மாதிரி ஒரு அல்சேசன் நாய் அதற்கு கறி வாங்கி சமைத்துப் போடுவார் தம் கையாலேயே.சேலம் வியாபார நிமித்தம் சென்று வரும்போது ஹென்றி உல்சியில் கேக் பிரட், மல்கோவா மாம்பழம் என வாங்கி வருவார், இப்போதும் கிடைக்கிறது என்றாலும் அந்த ருசியில்லை. மனிதர் எல்லாவற்றிலும் உச்சம் தொட்டவர் அன்பு காட்டுவதிலும் பிறர்க்கு செய்வதிலும் மனம் கோணாமல், வருடத்தில் ஓரிரு முறையாவது கெடா விருந்து என 2 அல்லது 4 கெடாய்களை வெட்டி கறி விருந்து கொடுப்பார் அனைவரையும் அழைத்து குல தெய்வம், சாமி, மாரியம்மன் பண்டிகை விருந்து என...

ஒரு கட்டத்தில் ஹோட்டல்  நடத்தியதைக் கை விட்டு மளிகைக்கு மாறிவிட்டார்கள்...காடு, தோட்டம், தொளசம்பட்டி சாலையில் நாகர் கோயில் எல்லாம் இவர்களுடையது. ஒரு ஓய்வு பெற்ற இராணுவ வீரர் ஒழுக்கத்துடன் இருந்தால் என்னவெல்லாம் எப்படி எல்லாம் வாழ முடியும் என்பதற்கு இவர் வாழ்வு ஒரு எடுத்துக் காட்டு, கார், வீடுகள், நிலம் தோட்டம் இப்படி யாவும் உண்டு. இவர்களின் சந்ததியினர் எல்லாம் நன்கு வாழ செழுமை செய்து விடுகிறார்கள். இவரின் அன்பு மகன் M.G.R எம்.ஜி.ஆர்(எம்.ஜி.ராஜ்குமார்) அவர்களும் எனது அக்கா பையன் எனது கைகளில் தவழ்ந்தவர் அவருடைய கடமையை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார்.


எனக்கும் கூட திருமணம் தமது செலவில் பண்ணி வைக்க வந்து கேட்டார் மாமா, போங்க ஒங்க வேலையைப் பார்த்துக்கிட்டு போங்க என் வேலையை நான் பார்த்துக்கிறேன் என முகத்தில் அறைந்தாற்போல பேசிவிட்டு அதற்காக இன்னும் வருத்தப் பட்டுக் கொண்டிருக்கிறேன் என்றால் பாருங்கள் அந்த மனிதர் எப்படிப்பட்ட நல்லவராய் இருந்திருப்பார் என.... நமக்கு யார் யார் எதற்கு எதற்கு பேசுகிறார்கள் என்பதே புரிவதில்லையே.


அவர் இல்லாது போயினும் அந்த மனிதரின் மணம் இன்னும் என்னுள், என்றும் என்னுள் வீசியபடியே இருக்கும், இருக்கிறது...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை



Wednesday, September 9, 2026

அளவற்ற நூல்களைப் படிப்பதால் பயனில்லை: கவிஞர் தணிகை

 அளவற்ற நூல்களைப் படிப்பதால் பயனில்லை: கவிஞர் தணிகை



இசை பேசியது

அந்த கறுப்புப் பூனையும் நானும் விழித்தபடி இரை தேடிக் கொண்டிருந்தோம்

உலகெலாம் ஒரு குடையின் கீழ் வந்திருந்தது

உறக்கம் வர்ல கனா வந்தது


எல்லாமே நல்லாய்ட்ட மாதிரி

எல்லோருமே நல்லவங்க ஆயிட்டாங்க‌

இனிமேல் கெட்டதே நடக்காது,

எல்லோருக்குமே நல்லது நடக்குது

 

உலகிலெங்குமே பசியே இல்ல,

 தண்ணீ(ர்) எல்லாத்துக்கும் எல்லோருக்கும் கெடைக்குது

விலைவாசியா அப்படீன்னா?

இலஞ்ச ஊழல் ஏதுமில்ல‌

கேட்டதெல்லாம் கெடைக்குது

வரியா அப்படி ஏதுமில்லையே!


அட அமெரிக்காக்காரங்க கூட ஈரானை நட்பு கொண்டாடறாங்க‌

உக்ரேனும் புடினும் ஒன்னாய்ட்டாங்க‌

அல்லாவும் ஜீஸசும் சிவ கிருஷ்ணனும் விநாயக முருகனும் ஒன்னாய்ட்டாங்க‌

ஒரே உருவாத் தெரியறாங்க!


நாத்திகம் ஆத்திகம் எல்லாமே ஒன்னாய்டுச்சி

பூமியே போதும். நிலா, செவ்வாய் எல்லாம் எதுக்கு...சோதிடம் அதுக்கு

ஒடம்பு ந‌ல்லாய்டுச்சி, அல்சர் அதிகாலை வயிற்று காந்தள் கூட இல்ல‌


கொசுக்களை எல்லாம் ஒழிக்கனும் வாங்க சேரலாம்

சினிமா, மது போதை எல்லாம் போயிடுச்சி

காத்து, தண்ணி, நிலம், ஆகாசம், நெருப்பு எல்லாமே தூய்மை ஆயிடுச்சி

70 வயதுக்கும் மேலானா கூட சுஜாதா  கேட்ட மாதிரி வெளிக்கு எல்லாம் நல்லா போவுது


இனி இங்க எப்பவுமே தீமை இல்ல‌

தீய சக்தி என்பதே இல்லை

பிறந்த குழந்தையாட்டம் எல்லாமே ஆயிட்டாங்க‌

சிதைந்த வழியெலாம் சித்திரமா பூ பூத்து ஒளியாச்சு,

சிந்தை தெளிவாச்சி


நேபாள, பீகார், அஸ்ஸாம் வெள்ளம் எல்லாம் இனி பாதிக்காது

தமிழ் முனை வரை ஒரே பாசனம், இந்திய நதியெல்லாம் இணைஞ்சிடிச்சி

3 ஆம் வகுப்பு குழந்தை  தப்பில்லாம தமிழ் எழுதுது, பேசுது

உச்சரிப்பில் சிகரம் போகுதுங்க‌

வள்ளுவரும் பாரதியும்  இராமலிங்கரும் , அவ்வையும் இனி தேவையே இல்லை

தமிழும் காந்தியும் இன்னா செய்யாமை  சொல்ல வேண்டியதில்லை


சித்தர்களும் யோகிகளும்

சிந்தனையில் ஞானியரும்

புத்தரும் யேசுவும்

உத்தமராம் காந்தியும்

எத்தனையோ உண்மைகளை

எழுதி எழுதி வைச்சாங்க

எல்லாந்தான் படிச்சீங்க‌

என்ன பண்ணிக் கிழிச்சீங்க...

என்ற பட்டுக் கோட்டையின் சிந்தை தெறிப்புக்கு எல்லாம் அவசியம் இல்ல‌


எல்லாம் படிச்சாச்சு, படிச்சி முடிச்சாச்சி,

பண்ணிப் பண்ணிக் கிழிச்சாச்சி

இனி எலாம் ஏகாந்தம், 

படிக்க ஏதும் பாக்கி இல்ல!

SHUT DOWN 

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை




Wednesday, September 2, 2026

உயிரின் வேகம்: கவிஞர் தணிகை

 உயிரின் வேகம்: கவிஞர் தணிகை



நேற்றைய தொடர்ச்சி இன்று இன்றின் தொடர்ச்சி நாளை நாளையின் தொடர்ச்சி..

இப்படியாக காலம் நகர்ந்து செல்கிறது நிறைய கூட்டிக் கொண்டு நிறைய விட்டு விட்டு


இதில் பழையது புதியது என்றேதுமில்லை, இதில் பழையது புதியது என்பது எல்லாவற்றிலும் இருக்கிறது...


உயிர்கள் அணுக்கள் புதுப்பித்தல் துவங்கி பழைய அணுக்கள் இறப்பது முதல், இரவு பகல் மாறுவது வரை


உயிர்கள் பழையதாகி பசி தாகம் தீர்த்து வளர்ந்து இயல்பாக மறைவது இயற்கை


ஆனால் ...


விபத்துகள் தாம் எத்தனை எத்தனை எப்படி எப்படி எவ்வளவோ?


ஒரு இளைஞர் எந்தவித இடையூறும் இல்லாத காலியான சாலையில் என்ன ஆயிற்று ஏது ஆயிற்று என்று சரியாக சொல்ல வாய்ப்பின்றி சாலையின் வாகனத்தில் சென்றவர் கீழே விழுந்து பின் மண்டையில் அடிபட்டு இறந்தார் இது ஒரு அண்மைச் செய்தி எங்கள் பக்கத்தில்...


சில காலத்திற்கும் முன், வீட்டில் நிறுத்தி வைத்திருந்த இரு சக்கர வாகனத்தை கியரிலேயே விட்டு விட்டு தந்தை இருந்திருக்கிறார். ஒரு ஏழெட்டு வயது சிறுமி அதில் ஏறி சாவி அப்படியே இருப்பதைக் கூடத் தெரியாமல் கியரை முறுக்கி அந்த வண்டி அவர்கள் வீட்டு சுவற்றிலேயே ஸ்டேண்ட் எடுபட்டு மோதி மண்டையில் அடிபட்டு இறந்தார். இதுவும் எங்கழ்ள் குடியிருப்புக்கு அருகாமையில் நடந்த செய்தி...


இப்படி உயிரின் வேகம் கடல் அலையின் வேகத்தோடு, ஆறுகளின் அடங்காமையின் வடிவத்தோடு, மலையாக இறுகிய பனிப்பாறைகள், பனிக் குன்றுகள், பனி மலைகள் உருகுதலோடு, எரிமலை வெடிப்புகளோடு, நிலநடுக்கத்தோடு, சுனாமிகளோடு,காட்டுத் தீ வடிவத்தோடு இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்...


அதில் நீங்களும் உங்களைச் சார்ந்தோரும் நலத்தோடு வாழ எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம்.எனவேதான் பெரியோர்கள் பிள்ளைகளை அதைச் செய்ய வேண்டாம் இதைச் செய்ய வேண்டாம் அப்படி இருக்க வேண்டாம் இப்படி இருக்க வேண்டாம் என கட்டுப்படுத்துவது மட்டுப்படுத்துவது எல்லாம்...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

Monday, August 31, 2026

கவனக் குறைவுக்கு அளவே இல்லையா? கவிஞர் தணிகை

 கவனக் குறைவுக்கு அளவே இல்லையா? கவிஞர் தணிகை



செரித்துக் கொள்ள முடியா இரு மரணங்கள்:


அவர் ஒரு சமூகத்தில் முக்கியமான நபர்,ஒரு பேரூராட்சியின் உதவிப் பெருந்தலைவராகவும் இருந்தவர், கம்பீரமான தோற்றம். அதற்குத் தக்க பெயர் போரில் மன்னன் என...அவர் ஒரு ட்ராக்டர் வண்டி வீட்டில் அதற்குண்டான கூடாரத்தில் நிறுத்தி இருந்தார் .அதற்கு இயக்கத்தில் பிரச்சனை எனவே அதை முன் நாளில் வந்து ஒரு பழுது பார்ப்பவர் பார்த்துப் போய் இருக்கிறார்.


மறு நாள் காலை இவர் அந்த வாகனத்தை சோதித்துப் பார்க்க முயல அது கியரில் இருந்து ஓட ஆரம்பித்து இவரை இவரது வாகன அறையின் சுவற்றிலேயே தேய்த்து இடுப்புக்கும் கீழ் அரைத்து இல்லாமல் செய்து உயிரைப் பறித்தது. 


இந்த நினைவே இன்னும் மறக்க முடியாதிருக்க நேற்று ஒரு செவி வழிச் செய்தியில்:

எண்ணெய்ச் செக்கு மோட்டாரில் ஒரு நடுத்தர வயது பெண் சிக்கி அவரது உடலே துண்டுகளாகி வீட்டுக் கூரைக்கும் மேல் எல்லாம் தெறித்து விட்டதாகவும் உடலே இல்லாது பாதிக்கும் மேல் துண்டுகளாகிப் போனதாகவும் காரணம் அவரது கட்டிய சேலை அந்த மோட்டாரில் சிக்கியதே காரணம் என்று பேசப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 


மனிதர்கள் மேலும் மேலும் வளர ஆசைப்படுவதில் தவறில்லை. அத்தனைக்கும் ஆசைப்படு என்றவர் கண்ணீர் வடிப்பது போல...ஆனால் நாம் நம் நிலையை என்றும் உணரத் தலைப்பட வேண்டும். தூக்கக் கலக்கத்தில் ஒரு போதும் பணி புரியவே கூடாது. உடல் இரும்பாயிருந்தாலும் துரு ஏறத்தானே செய்யும்.


பிறப்பின் வழி ஒன்றாயிருந்த போதும் மரண வழிகளில்தாம் எத்தனை வகைகள்.  முகலாய மன்னன் ஹுமாயுனின் மரணம் விசித்திரமாய் நிகழ்ந்ததாக வரலாறு சொல்கிறது. 1556ல் கையில் நிறைய புத்தகங்களுடன் நூலகத்தில் இருந்து வருகையில் தொழுகைக்கான அறிவுறுத்தல் குரல் கேட்க இவர் அப்படியே  அதற்காக பணிந்து (தொழுகைக்கு நேரமாகி விட்டதே என்ற பதற்றத்தில்)  தமது நீளமான அங்கியில் காலை வைத்து தடுமாறி படிகளில் விழுந்து உருண்டு சுவற்றுக் கல்லில் தலை அடிபட்டு 3 நாட்கள் உயிருடன் இருந்து மறைந்ததாக சொல்கிறது ஒரு வரலாற்றுச் செய்தி.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

Saturday, August 29, 2026

யோகி: கவிஞர் தணிகை

 யோகி: கவிஞர் தணிகை



பாம்புடன் உரையாடி விளையாட்டு,சுண்டெலியுடன் செல்லம் கொஞ்சுதல், வீடா அது அல்ல ஒரு மனிதனின் கூடு அதில் எல்லா உயிர்களுக்கும் அடைக்கலம்.ஒரு குழந்தையும் வந்து சேர்ந்து கொள்கிறது அந்த கொலைகார‌ கொள்ளைக்காரத் திருடனுக்கு. இரவு வேட்டையாடி பிழைக்கும் ஒரு கொடும் பிழைப்பு. அதில் குழந்தைக்கு தாய்ப்பால் கேட்டு ஒரு பெண் பிள்ளையை மிரட்டிப் பணிய வைப்பது அந்தப் பெண்பிள்ளை இளகிய மனம் படைத்தவளாய் இருப்பது, அவள் இவனின் அதிர்ஷ்ட வாய்ப்பாய் துணையின்றி குழைந்தையுடன் தூளி கட்டிக் கொண்டு பொம்மை விற்று பிழைப்பது இப்படியாகச் செல்கிறது கதை


கொடுமைக்கார அப்பனை முதலில் ஈவு இரக்கமின்றி தள்ளிக் கொண்டு சென்ற வண்டியை அப்படியே சாலையில் செல்லும் பெரிய வாகனத்தில் தள்ளி காவு வாங்கி விடுகிறான் ஆனால் அந்த தள்ளு வண்டியில் கட்டி இருக்கும் நாயை கருணை கொண்டு அவிழ்த்து விட்டு விடுகிறான்.


அந்தச் சிறுவன் நல்லவனாகவே இருக்கிறான் தாயை மருந்து வாங்கி காப்பாற்ற நினைக்கிறான் தமக்கு கிடைக்கும் பிச்சையில்...எல்லாம் பிச்சைதான்...அதையும் அனுமதிக்க மறுக்கும் தந்தை அவனது தாயை மிகவும் சொல்ல முடியா அளவு கொடுமைப்படுத்தி கடைசியில் அவள் தூக்கிலிட்டுக் கொண்டு இறக்க அந்த தந்தை இந்தச் சிறுவனை மிரட்டி பிச்சை எடுத்து சொகுசாய் வாழ எண்ணுகிறான். 


பார்க்கவே அருவருக்கத் தக்க கதா பாத்திரமாய் அந்தச் சிறுவனின் சினைப்பன்றி போன்ற தந்தை.அந்தச் சேற்றில் இருந்து முளைத்த செந்தாமரையாய் இந்தச் சிறுவன்...எவ்வளவு கீழ்த்தரமாய், கீழாய் இருக்கும் இடத்தில் இருந்து உருவாகும் இந்தச் சிறுவன் இளைஞராய் எதற்கும் அஞ்சாமல் மாறி நிற்கிறான்.


சாவுக்குத் துணிந்து விட்டால் எதுதான் தடை?எவ்வளவு கீழாக இருந்தானோ அவ்வளவு மேலாக உயரத்தில் நின்று அந்தக் குழந்தைக்காக அதன் உயிர் காக்க தம் உயிரைத் தியாகம் செய்கிறான் அந்தக் குழந்தையின் தாயின் கையால் மடிகிறான், அவளிடம் தாம் அவளிடம் அந்தக் குழந்தையை நல்லபடியாக சேர்க்க எண்ணியதை சொல்லக் கூட முடியாமல்...பார்க்கும் நமக்கு தெரிய வைத்து விடுகிறார்கள் இவனது கதையை, ஆனால் அந்தக் குழந்தையின் பணக்காரத் தாய் எதையுமே தெரியாமல் இருக்குமாறு தமது கணவன் கூட ஒரு கயவனே என்பதை அறியமுடியாமலே இந்தக் கதை முடிவுக்கு வந்து விடுகிறது.


இதுதான் யோகி என்ற 2009ல் வந்த திரைப்படம். ஏற்றிருக்கும் எல்லா பாத்திரத்தை எல்லா நடிகர்களுமே நன்றாக  செய்திருக்கிறார்கள் கயல் செல்வராஜ் என்பவர் எல்லாரும் வெறுக்குமளவிலான ஏய்த்துப் பிழைக்கும் பிச்சைக்காரத் தந்தையாக வருகிறார். இந்தப் படம் ஏனோ நான் கடவுள் போன்று மிக அடிமட்டத்தையும் மனிதம் என்ற‌ மிக உயர் உச்சி சிகரத்தையும் கதையின் மூலம் தொடுவதாய் இருக்கிறது.


கல்லுக்குள் ஈரம், என்பார்களே அப்படி குழந்தை என்றால் தெய்வமும் இரங்கும் பேயும் இரங்கும் என்பது போல....ஒரு அமீர் கேரக்டர். அமீர் நல்லப் பக்குவப்பட்ட ஒரு குற்றப் பின்னணி உள்ள சிறுவன் எல்லா அனுபவங்களையும் பெற்ற ஒரு ரௌடி, கொலைகார, கொள்ளைக்கார பயமில்லா இளைஞரை நம் முன் கொண்டு நிறுத்தி இருக்கிறார்.

இந்த சினேகன் என்ற நபரை அவரின் குரலை வைத்துதான் அடையாளம் காண வேண்டி இருக்கிறது அப்படிப்பட்ட  தத்ரூபமான ரௌடியாக, ரௌடியின் நயவஞ்சக தோழராக வருகிறார்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


Friday, August 28, 2026

சொல்லாமல் இருக்க முடியவில்லை: கவிஞர் தணிகை

 சொல்லாமல் இருக்க முடியவில்லை: கவிஞர் தணிகை



42 ஆண்டுகளாக அடியேனும் தியானப் பயிற்சியில் இருக்கிறேன்.


விரல் விட்டு எண்ணக் கூடிய அற்புத மனிதர்கள் அடியேன் மூலமும் தியானம் கற்றுக் கொண்டு நற் தொடர்பில் இருக்கின்றனர் ஒரு மருத்துவர் சில பொறியாளர்கள் உட்பட...


தியானம் என்பது கற்றுக் கொடுக்க முடியாதது, கற்றுக் கொள்வது என்பதே நியதி

கண்களை மூடி உலகைக் காணவும், கண்களைத் திறந்து உலகை மறக்கவும் சேதி சொல்லும் அற்புதக் கலை இது.

ஒரு ராத்திரியில்

ஒருவர் என் அருள் பெற தமிழக மக்களே  எனது ஒரு ருத்திராட்சத்தை இலவசமாகப் பெறுங்கள் என்றவர் மூளையில் ஒரு அறுவை சிகிச்சை தலைநகர மருத்துவ மனை ஒன்றில் எடுத்துக் கொண்டவர் இப்போது தமது வெளி நாட்டு சீடர்கள் நேபாள வெள்ளத்தில் காணோம் என்று கண்ணீர் வடித்துள்ளார்.


இவர் அருள் மூலம் இவரது சீடர்களைக் காப்பாற்றி இருக்கலாம்


இவனோ அவனோ எவனோ எதுவும் செய்ய முடியாது...இயற்கை என்பதில் யாவும் அடங்கும் அடக்கும்...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

Tuesday, August 25, 2026

பகாசூரன் 2023 தமிழ் திரைப்படம்: கவிஞர் தணிகை

 பகாசூரன் 2023 தமிழ் திரைப்படம்: கவிஞர் தணிகை





செல்வ ராகவன், நட்ராஜ் ஆகியோர்  கதையின் இரு நாயகர்கள்


மஹாபாரதம் பீமராஜா, கூத்து, 


சினிமா பற்றிய பார்வையை எல்லாம் விட்டிருந்தேன். இந்தப் படத்தை பார்க்க வேண்டி வந்தது ஒரு தொலைக்காட்சியில் அதன் பிறகு இன்று பார்த்தால் அதை யூ ட்யூபிலேயே பார்த்திருக்கலாம் 2023லேயே வந்த படம் என்று தெரிந்தது.


செல்பேசியின் நச்சுத் தனம் பற்றி கடைசியில் நடராஜின் அறிவுரையுடன் பீமராஜுவின் வேண்டுகோளுக்கு இணங்க முடிகிறது. 


பகாசூரன் என்பது தொடு திரை செல்பேசி என்று அரியவகையில் சொல்லி இருப்பது ஏற்புடையதாகவே இருக்கிறது.


முழு திரைப்படமுமே பெண்களை தவறான வழியில் பிளாக்மெய்ல் செய்து பயமுறுத்தி தம் இச்சைக்கு பயன்படுத்துவார் மற்றும் அதன் தொடர்பில் இருக்கும் பெண்கள் ஆண்கள், பாலியல் தொழில், பணம் சம்பாதித்தல் பற்றியதாகவே இருக்கிறது. அதில் நிறைய பருவ வயதுப் பெண்களும், கல்லூரி பெண்களும் எப்படி பழி ஆகிறார்கள் என்று தெளிவாகச் சொல்கிறது.


அந்த தீயவர்கள் எப்படி ஒரு வலைப்பின்னலுடன் செயல்படுகின்றனர் வாழ்கின்றனர், அதில் நட்ராஜ் எப்படி ஒரு யூ ட்யூபராக அவற்றை வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறார், செல்வராகவன் தனது பெண்ணுக்கு நடந்த கொடுமைக்கு எப்படி பழி வாங்குகிறார், என்பதெல்லாம் படத்தை நம்மைப் பார்க்க வைக்கிறது. 


அதில் ஒரு கல்லூரி நிர்வாகமும் அதன் தாளாளரும் , விடுதி காப்பாளரும், ஒரு காவல்காரரும் எப்படி எல்லாம் ஈடுபடுகிறார்கள் என்பதையும் அவர்க‌ளை எப்படி பீமராஜி(செல்வராகவன்) தண்டிக்கிறார் என்பதுமே படம். ராதாரவிக்கு இனிமேலும் இப்படிப்பட்ட வில்லத்தனமான பாத்திரங்கள் தேவையா என்று கேட்கத் தோன்றுகிறது.


எல்லாக் கதையையும் சொல்லி விட்டு கடைசியில் எதைத் தின்றாலும் பசி ஆறாத பகாசூரன் இந்த செல்பேசி என்று முடிக்கிறார் நட்ராஜ் அதற்கு மஹாபாரத கதைகள் அங்கு தூவப்பட்டுள்ளன சில அத்தியாயங்களை அடையாளப்படுத்தி,கீசக வதம் இல்லை, ஜராசந்தன் வதம், பகாசூரன் வதை இப்படி....


சதுரங்க வேட்டை நட்ராஜ் தமது சித்தப்பா ஒருவர் புதிதாக கட்டிய வீட்டில் பளபளப்பான டைல்ஸ் வழுக்கி விழுந்து இறந்து விட‌ இனி வீடுகளில் டைல்ஸ் போடாதீர்கள் என ஒரு காணொளி வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கதே...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை