Thursday, March 5, 2026

காவிரி முதல் தேம்ஸ் வரை ஒரு வாழ்வின் பயணம்: கவிஞர் தணிகை

 காவிரிக் கரையில் பிறந்து வளர்ந்து இணைந்து தேம்ஸ் நதிக்கரையில் வாழப் போகும் தம்பதியர்க்கு:

மண வாழ்த்து

மணமகள்:                                                மணமகன்:

Dr. B. நந்தினி B.D.S.                  Er.V.அருண் ப்ரசாந்த்  B.E,M.S

07. & 08.03.2026         S.M.மஹால் கரிகாலன் நகர்   மேட்டூர் 4.

 

சில நல்லுறவுகள் தாமே வந்து வாழ்வில்

இணைந்து கொள்ளும்

கணக்கிலா தொலைவு வரை ஈடு இணையின்றி

விட்டு விடாமல் படர்ந்து செல்லும்...

 

இணைதல் என்பது செடி கொடிகளிலும்

பறவை விலங்குகளிடமும் கூட

இன்றியமையாத் தேவை


 

ஆனால் உயிர்களின் உச்சம் மனிதம்!

 

அதில் இணைதல் என்பது தேவ இரகசியம்

தேவையின் அதிசயம் சேவையின் அவசியம்

 

அப்படி இங்கிணையும் Dr.B. நந்தினி B.D.S

Er.V. அருண்ப்ரசாந்த் B.E,M.S

இணையர்க்கு

இந்த வாழ்வின் திருப்பு முனையில்

சாட்சிய வேள்வி சாகரத்தில் எனது வார்த்தைகளும்...

 

பாலச்சந்திரன் சாந்தி தம்பதியரின் அருந்தவப் புதல்வி

நந்தினியுடன் அருண் ப்ரசாந்த் ஒன்றிணையும் வாழ்வின்

இந் நன்னாளில்

என்றுமே எம் குடும்பத்தின் வாழ்த்துகள் நிலைத்து நிற்கும்

இவண்:

சு.தணிகை

.சண்முகவடிவு

..ரா.சு. மணியம் B.E,


கூட்டணி தர்மமே வெல்லும் என்ற உணர்வு இருந்திருக்கிறது: கவிஞர் தணிகை

 கூட்டணி தர்மமே வெல்லும் என்ற உணர்வு இருந்திருக்கிறது: கவிஞர் தணிகை



அ.தி.மு.க வாக்கு வங்கி தி.மு.க வாக்கு வங்கியை விட அதிகம் என்று உலகறியும் இதை நன்கு உணர்ந்திருக்கும் தற்போதைய தமிழக முதல்வரும் தி.மு.க‌ கட்சி தலைவருமானவர் கூட்டணியை இறுதியாக உறுதியாக கட்டி அமைத்திருக்கிறார். கூட்டணி தர்மமே வெல்லும் என்று தந்தை மு.கவுக்கும் அவரது குடும்பத்துக்கும் தெரிந்து அமைந்து இருக்கும் போதெல்லாம் அவர்கள் வென்றிருக்கிறார்கள்


அ.தி.மு.க தலைவர் தமது கட்சித் தலைமையைத் தக்க வைத்துக் கொண்டாலே போதும் என்ற நிலையில் அனைவரையும் புறம் தள்ளி இருக்கிறார்.அவருக்கு நிர்பந்தங்கள் பல.


சரித்திரமே தி.மு.க ஆட்சிக்கட்டில் இருந்து மறுமுறை ஆட்சிக்கு திரும்ப வந்தது கிடையாது என த.வெ.க தலைவர் பேசி இருக்கும் போதும் சரித்திரத்தை ஒருவேளை இவர் தேசிய ஜனநாயகக் கூட்டணி பக்கம்  சென்றிணைந்திருந்தால் சோதித்திருக்கலாம்.


ஆனால் இப்போது எதுவும் ஆகும் போது சரித்திரம் ஆகி விடும்.அதுவும் ஆகும் ....


அரசியல் என்பது ஒவ்வொரு மனித, குடும்ப அமைப்புகளிலும் உட்புகுந்து விளையாடும் ஒரு கூறு.அல்லது அம்சம். வேண்டாம் என்று எவருமே ஒதுக்கி விட முடியாது.என்னதான் அது சாக்கடை அதில் இறங்கினால் தாமே சுத்தம் செய்ய முடியும், என்பார் முன் எல்லாம், இப்போது இறங்கினாலும் சுத்தம் செய்ய முடியாது மூழ்கி நீர்க்குமிழி முட்டை விட்டு மூழ்கிப் போக வேண்டியதுதான் என்றாலும்...


மக்களாட்சி, வாக்கு அரசியல் என்ற பேரில் ஒரு தனி மனிதனின் அகங்காரம் உலகையே ஆட்டி வைத்து வருகிறது, எவருமே ஏதுமே செய்ய முடியவில்லை. யூசுப் மலாலா என்ற நோபெல் பெற்ற சிறுமிகூட வெகுண்டெழுந்து பள்ளிக் குழந்தைகள் அழிப்பு எல்லாம் எந்த அரசியல் என்று கேட்டிருக்கிறார்,


ஸ்பெயின் ஒரு நாடுதான் துணிச்சலுடன் அமெரிக்க இராணுவ விமான தளமாக தம் நாட்டை பயன்படுத்தக் கூடாது என்று சொல்லி இருக்கிறது. எங்கு வேண்டுமானாலும் சென்று நிறுத்துவோம்  என்ன வேண்டுமானாலும் செய்வோம் என ஒரு அரக்கத்தனமான மூர்க்கத் தனமான யாரும் எதிர்த்து கேட்க முடியாத பேச்சு உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.


இந்தியாவிடம் 10 நாளுக்கு மட்டுமே எண்ணெய் இருக்கிறதாம்,

அமெரிக்காவிடமோ 10 நாளுக்குத்தான் ஏவுகணை இருக்கிறதாம்...பெண்டகன் அறிக்கை

சீனாவும் ரஷியாவும் ஈரானுடன் கை கோர்த்தால் உலப் போராகக் கூட மாறும் அபாயம் இருக்கிறது...


அமெரிக்க இராணுவத் தளங்களை குறி வைத்து ஈரான் தாக்கி வருவது மக்கள் உயிர்களைப் பற்றிய கருத்துடன் செயல்பாடு இருப்பதாகத் தோன்றுகிறது.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


எனது இந்த வலைப்பூவை சொந்த நாட்டை விட அதிகம் வெளி நாட்டில் வசிக்கும் தமிழ் கூறும் நல்லுலகம் படிக்கிறது என்பதால் எதையாவது எழுதத்தான் வேண்டும் என்று எனக்கும் நிர்பந்தம்.


Thursday, February 19, 2026

அறிவியல் விஞ்ஞானியா? நாகேஸ்வர ராவ் நீ டீம் லீடரா?":கவிஞர் தணிகை.

 இவன் எல்லாம் ஒரு அறிவியல் விஞ்ஞானியா?/ டீம் லீடரா?? கவிஞர் தணிகை





அறிவியல் விஞ்ஞானியா? நாகேஸ்வர ராவ் நீ  டீம் லீடரா?

நாகேஸ்வர ராவ் சந்தியா தம்பதிகள் ஆந்திராவைச் சார்ந்தவர்கள், பெங்களூரில் மிக மேல் தட்டு மக்கள் வசிக்கும் ஒயிட் ஃபீல்டு பகுதியில் வாழ்ந்து வருபவர்கள். மகள் வழக்கம் போல அமெரிக்கக் குடியரசில்.தாம் இன்னும் 3 அல்லது 4 வயதுதான் இருப்போம் என இந்த 76 வயது மனிதன் அதற்கும் பின் சந்தியாவை யார் பார்த்துக் கொள்வார் என சினிமா பாணியில் காலை 10.15 மணிக்கு சமையலறையில் பணி செய்து கொண்டிருந்தவரை பின் பக்கமாகச் சென்று அவரது முகத்தை துண்டை வைத்து  மூடி இறுக்கி கொன்று விட்டு,பக்கத்தில் 20 நிமிடம் மௌனமாக இருந்து விட்டு பக்கத்து வீட்டுக்காரரை உதவிக்கு அழைத்து, அவர் மருத்துவரை அழைத்து, மருத்துவர் ஆம்புலன்ஸ் போன்றவற்றை அழைத்து எல்லா காட்சிகளும் அரங்கேற அந்தக் காவல் துறை அலுவலரிடம் இந்த ஓய்வு பெற்ற இஸ்ரோவில் பணி புரிந்த அதுவும் ஒரு டீம் லீடராக இருந்தவர், தமது நிலை பற்றி விளக்கி அதனால் தாம் கொன்றேன் என காவல்துறையிடம் வாக்கு மூலம் அளித்துள்ளார்.


 இந்த அசம்பாவிதம் நேற்று புதன் காலையில் பெங்களூருவின் ஒயிட் பீல்ட் (வெள்ளை வயல்) என்ற இடத்தில் நடந்த உண்மைச் சம்பவம் பாக்யராஜ் படமல்ல. இதெல்லாம் ஒரு அதிர்ச்சி அறிக்கை. எளிதில் செரித்துக் கொள்ள முடியாததால் இந்தப் பதிவு. இந்தியாவில் மட்டுமல்ல இந்த உலகில் எது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் நடக்குமய்யா!


இப்படியும் இருக்கிறார்கள்...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


நன்றி: டைம்ஸ் ஆப் இன்டியா 19.02.2026 (7 மணி நேரம் முன்பு).


அறி!


p.s:அதே நேரத்தில் தற்போதுதான் கீச்சொலியில் ட்விட்டரில் Dhinakaran ஒரு செய்தி பகிர்வு: தொடர்ந்து 30 நிமிடம் சிபிஆர் (நெஞ்சை மருத்துவ முறையில் அழுத்திக் கொடுத்து)செய்து ஒரு பெண் நோயாளியை ஒரு மருத்துவ தேவதை காப்பாற்றியுள்ளதாக...https://x.com/i/status/2024061286317760908/

Monday, February 16, 2026

திருவாகி:கவிஞர் தணிகை

 திருவாகி



காலப் புத்தகத்தின் தாள்களைத் திருப்பி

காற்று படிக்கிறது

இயற்கை காற்று படிக்கிறது


விந்தை மழை வித்தை புவி யோனி வாங்கி

உயிராக்கி பயிராக்கி உருவாக்கி

கருவாக்கி எருவாக்கி...


புவி சுழற்சி செய்கிறது

கால்கள் இல்லாமலே கவி(தை) வாங்கி

சுழற்சி செய்கிறது

செய்கை சுழற்சி செய்கிறது


சிரிப்போம், அழுவோம்

சிந்தை தெளிவாக...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

Wednesday, February 11, 2026

CINEMA சினிமா சினிமா: கவிஞர் தணிகை

 சினிமா சினிமா: கவிஞர் தணிகை



ஆக்கபூர்வமாக வாழ்வில் சாதிப்பார் பெரும்பாலும் சினிமா பார்க்காதாராகவே இருப்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டு வருகிறேன். பெரும் ஞானிகள், விஞ்ஞானிகள், நிர்வாகிகள்,சாதனை புரிந்தோர் இப்படி எல்லாம் இருப்பார் சினிமா பார்ப்பதில்லை என்றே சொல்கிறார்கள், என்னிடம் என் தனிப்பட்ட கேள்விக்கு பதிலாக தெரிவித்தார்கள். அப்படியும் சினிமா வேண்டுமெனில் இப்போதெல்லாம் நேரம் குறைவாக சில பல நிமிடங்களில் சொல்ல வேண்டியதை சொல்லி விடும் திரைப்படங்கள் நிறைய வந்து விட்டன. சில நாட்களுக்கும் முன் 22 நிமிடத்துக்குள் ஒரு குறும்படம் ஒரு 3 மணி நேர சினிமாவின் உள்ளடக்கத்தைக் கொண்டிருந்ததை சிறுமியர் கடத்தல் ,பாலியல் குற்றம் போன்றவற்றை சிறப்பாக சொல்லி இருந்ததைக் கவனிக்க முடிந்தது.


சினிமா கூட ஒரு போதையாகவே இருப்பதை நான் தனிப்பட்ட முறையில் என் கருத்தாக வைக்கிறேன்.ஆவதும், ஆனதும் சினிமாவாகவே, அது ஒரு தவிர்க்க முடியா சக்தியாக,அது ஒரு தொழிலாக இருப்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் ஒரு நிறைவான வென்றெடுக்க வேண்டிய சமுதாயக் கட்டமைவுக்கு போதை, மது,சூதாட்டம்,சிறுவர் கடத்தல்கள்,பாலியல் குற்றங்கள்,கட்டுப்பாடில்லா இணையத் தேடல்களும் சுதந்திரமும்,சினிமாவும் கூட‌பெரும் தடைகளே. தனிப்பட்ட வாழ்வின் முன்னேற்றமும் நாட்டின் வளர்ச்சியும் கூட இதனால் பாதிப்படைகின்றன.


வரலாற்று முக்கியத்துவம் மிக்க, காந்தி,(அட்டன்பரோ இயக்கியது) ஸிண்ட்லர்ஸ் லிஸ்ட்,குழந்தைகள் பெரிதும் விரும்பும் டைனசோர் போன்ற படங்கள் தவிர, வரலாற்று ஆவணப் படங்கள்,தவிர‌ வணிக நோக்கில் வன்முறையைப் பரப்பும் படங்கள் இருக்கக் கூடாது, அதுவும் பல மணி நேரம் இருக்கக் கூடாது பெரும்பாலான மனிதர்களின் நேரத்தைக் கொல்வதாக இருக்கக் கூடாது.ஆக்க பூர்வமாக மனிதர் இருக்கும் போது இயங்கும் போது நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது நடக்கும்,


 ஒவ்வொரு நொடியும் நம் வாழ்வில் கிடைத்த வாய்ப்பு என்பார் நேரத்தை மிக அரியதான சக்தியாக இழந்தால் அதைப் பெற முடியாத வாய்ப்பாக நினைக்கிறார்கள். பொருளை இழந்தாலும் திரும்ப பெற்று விட முடியும்.நேரத்தை இழந்தால் அதைத் திரும்ப பெற வாய்ப்பே இல்லை என்கிறார்கள். அதை எல்லாம் கேட்ட பின் நான் எவ்வளவு நேரத்தை இப்படி இழந்து விட்டேன் என நினக்கும் போதே எனது குற்ற உணர்வு எனை மென்று தின்கிறது, அவ்வளவு படங்கள் பார்த்திருக்கிறேன் என் வாழ்வில் இளைமையில் இருந்து, ஏன் சிறுவனாக இருக்கும்போதிருந்தே சினிமா, சினிமா என்றே பார்த்து அழிந்திருக்கிறேன். இல்லையேல் இன்னும் கூட சிகரத்தொடல்களுக்கு சென்றிருக்கலாமோ என காலங் கடந்த பின் தோன்றுகிறது.


இதை எல்லாம் சாவின் அருகே அருகே செல்லும் மனிதர்கள் அனைவர்க்கும் சொல்ல வேண்டி இருக்கிறது. எவன் கேட்கப் போகிறான்? யார் படிக்கப் போகிறார்? எவர் இதை பின் பற்றப் போகிறார்? என்றெல்லாம் நினைக்கலாம்.

 கியூபாவின் தொலைக்காட்சி அந்த நாட்டின் விவசாயம், விளையாட்டு,மக்களுக்குப் பயன்படும் கருத்துகள் தவிர வேறு எதையும் ஒளி பரப்புவுதில்லை. ஒளிபரப்ப வில்லை. எனவே அந்த சிறு நாட்டை வல்லரசுகள் எல்லாம் விழுங்கப் பார்த்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை மேலும் அதன் கட்டமைவில் பெரும் பங்கு வகித்த அதன் தலைமைக்கு செய்த கொலை முயற்சி பலிக்கவே இல்லை. சிங்கப்பூர் கூட நல்ல கட்டமைவில். ஏன் இப்போதிருக்கும் அரேபிய நாடுகள் எல்லாம் இது போன்ற நிலை வழியில் பயணம் செய்ய முயன்று வருகின்றன.


அவை எல்லாம் சிறிய நாடுகள் இந்தியா பெரிய நாடு என்பார்க்கு, ரஷியாவும் சீனாவும் முன் நிற்கின்றன.இஸ்ரேலின் ஒவ்வொரு இளைஞரும் அந்த நாட்டின் கட்டமைவுக்கு உறுதுணையாக இருப்பதை செய்திகள் தெரிவிக்கின்றன.கட்டுப்பாடு அவசியம் ஒவ்வொரு தனிமனிதர்க்கும், ஏன் சமூக மாற்றத்திற்கும் நாட்டின் வளர்ச்சிக்கும்.


சொல்லத் தோன்றியதை சொல்லி விட்டேன் மிகச் சுருக்கமாக‌

பிறகு உங்கள் விருப்பம்.


1897ல்(PATENTED)developed between 1889 and 1892,  தாமஸ் ஆல்வா எடிசன் மூவி கேமிராவை ஆக்கபூர்வமான விடயங்களுக்குப் பயன்படுத்தவே கண்டு பிடித்தார் வெடிமருந்தை ஆல்ப்ரட் நோபெல் கண்டறிந்தது போல ஆனால் அவை எல்லாமே காலத்தால் மனிதர்களால் எதிர்மறையாகவே பயன்படுத்துவது அவர்கள் கண்டிருந்தால் இதை எல்லாம் கண்டறியாமலே விட்டிருக்கலாமே என நமது ஜி.டி நாயுடு போல வேதனைப் பட்டிருக்கவும் கூடும்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


Monday, February 9, 2026

மலையும் மடுவும் இலையும் நதியும் சருகும் விறகும்: கவிஞர் தணிகை

 மிஸ்டர் கி: கவிஞர் தணிகை



ஒன்று

கர்வத்தின் சிகரத்தில் ஏறி நிற்கிறாய்

இல்லை

அதல பாதாளத்தில் 

அனைவரின் கால்களிலும் விழுந்து

புழுவாய்த் துடிக்கிறாய்


அட உனக்கு(ம்) கொம்புகள் இல்லை

இங்கே  எண்ணிப் பார்

எனது எழுத்துகளில்

எத்தனை கொம்புகள் என்று,,,


   மறுபடியும் பூக்கும் வரை

   கவிஞர் தணிகை

CRICKETகிரிக்கெட் விளையாட்டு (உலகளாவிய வியாபாரம்) 10 ஓவர் போதுமே: கவிஞர் தணிகை

 கிரிக்கெட் விளையாட்டு (உலகளாவிய வியாபாரம்) 10 ஓவர் போதுமே: கவிஞர் தணிகை



நீண்ட காலத்துக்கும் முன்பே கிரிக்கெட் (மட்டைப் பந்து) 10 ஓவரே போதும், டி20,50 ஓவர், டெஸ்ட் பார்ம் எல்லாம் சுருக்கப் பட்டு 10 ஓவரிலேயே கூட முடித்துக் கொள்ளலாம்,முடித்துக் கொள்ள வேண்டும் அது மற்ற விளையாட்டுக்களைப் போல என்று நமது கருத்தை வலை தளத்தில் வேர்ட்பிரஸ்ஸில் நாம் எழுதிக் கொண்டிருந்த போதே முன் வைத்தோம். குறைந்த பட்சம் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நம் நாட்டிலாவது.


மாலை முழுதும் விளையாட்டு என்றான் பாரதி. ஒவ்வொரு நாளும் நாளின் ஒரு பகுதியான நேரத்தில் தாம் விளையாட்டு அவசியமாக இடம் பெற வேண்டும். நாள் முழுதும், சினிமா, விளையாட்டு என்பவை தவறான வாழ்வின் முறை.


உடற்பயிற்சிக்கான விளையாட்டுகளாகப் பார்க்கப் படும் இந்த விளையாட்டில் முதிர்ச்சி பெறும் நபர்கள் வேண்டுமானால் தம் வாழ்வை அதற்காகவே அர்ப்பணிக்கட்டும், ஆனால் உலகின் பெரும்பாலான மனிதர்கள் அப்படி முழுநேரமும் அதில் ஈடுபட அவசியமில்லை. வியாபாரிகள் பெரும் முதலீடுகளை வைத்து அதிலிருந்து பெரும் பொருள் ஈட்டி வருவது யாவரும் அறிந்ததே.அரசியல் இதில் துளியும் இருக்கவே கூடாது.


விளையாடுவோரில் 3 பிரிவு, சம்பள வேறுபாடுகள்,அரசியல், அதைப் பற்றி ஒன்றுமே தெரியாதார் அதைக் கைகொண்டுவிடுவது இப்படி நிறைய அதில் குறைபாடுகள் உள்ளன. கபில்தேவ், தோனி போன்றோர் மட்டுமே அல்லது நிரூபித்த நபர்கள் மட்டுமே அதை மேலாண்மை செய்ய வேண்டும்...


வைபவ் சூரிய வன்சி போன்ற சிறுவர்கள் வயது காரணமாக இல்லாமல் தேசிய முதன்மை அணியில் இணைக்கப் பட்டு நிரூபிக்கப் படாத வீரர்கள் எல்லாம் அப்புறப் படுத்தப் பட வேண்டும்.


கைப்பந்து/வாலிபால், கூடைப் பந்து/பேஸ்கட் பால், கால் பந்து/ஃபுட் பால் கபடி,தட கள விளையாட்டுகள்,பூப்பந்து, இறகுப் பந்து இப்படி எல்லா விளையாட்டுகளுமே சில மணி நேரங்களே இருக்க, சில மணிகளுக்குள் முடிந்து விட, கிரிக்கெட் மட்டும் பல மணி நேரங்களை ஏன் நாள் கணக்கைக் கூட எடுத்து விழுங்கி வருவது குறைக்கப் பட வேண்டும். அதற்கு 10 ஓவர் மட்டுமே நடத்தப் படும் விளையாட்டுகள் அவசியம். எல்லாருடைய முக்கியமாக‌ இளையோரின் உழைப்பை எடுத்து உறிஞ்சுவது  தடுத்து நிறுத்தப் பட வேண்டும்.


பொதுவாக கிரிக்கெட் என்பது வெள்ளைக்கார இங்கிலாந்து நாட்டவரால் குளிர் காலத்தில் தம் உடலை பயிற்சி செய்து கொண்டு வெம்மைப் படுத்திக் கொள்ள ஏற்படுத்திய விளையாட்டு.அதை விளையாடட்டும் தவறில்லை அவருடைய பாட்டல்/மதுக்குடுவைக் கலாச்சாரத்தோடு இதையும் சேர்த்துக் கொள்வது தவறு.


10 ஓவர் எனும் போது நேரம் நிறைய சேமிக்கப் படும், ஒவ்வொரு ஓவரும் மிக முக்கியம்.(ஒரு ஓவருக்கு 10 பந்துகள் கூட எடுத்துக் கொள்ளட்டும் தவறில்லை).ஆனால் ஒரு ஓவரில் ஒரு விளையாட்டு ஓவர் இடம் பெறச் செய்ய வேண்டும், அதாவது ஒரு ஓவருக்குள் அந்த மட்டை பிடிக்கும் வீரர் அவுட் ஆகவில்லை என்றாலும் அடுத்த ஓவருக்கு அடுத்த வீரரே வந்து மட்டை பிடிக்க வேண்டும்.எனவே எல்லா வீரர்களும் பந்து வீசுவதும், அடித்து விளையாடுவதிலும் பயிற்சி பெற்றாக வேண்டும். ஒரு வீரர் அவுட் ஆகிவிட்டால் மற்ற வீரர் வந்து ஆடலாம் மொத்தத்தில் 10 ஓவர்கள் 10 விக்கெட்டுகள்.அந்தக் காலம் வருவது வெகு தூரத்தில் இல்லை. இப்போது டி 20 மற்ற கிரிக்கெட் வடிவங்களை எல்லாம் எடுத்து விழுங்கி பிரபலம் அடைந்தது போல இதுவும் ஒரு நாள் நடக்கும் பாருங்கள்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை