Sunday, July 26, 2026

உமிழ் நீர் ஒரு சிறந்த மருந்து: கவிஞர் தணிகை

 உமிழ் நீர் ஒரு சிறந்த மருந்து: கவிஞர் தணிகை



அறு சுவை உணவை உட்கொண்ட நமது முன்னோர் கொடுத்து வைத்தவர்கள். அன்றாடம் நமது உணவில் அறுசுவை உணவு இருக்கும் பட்சத்தில் நோய் நொடிகள் அண்டாது என்பது பேருண்மை


உணவை எவ்வளவு கடினமானதாக இருந்த போதும் அதை நன்றாக கடித்து மென்று உமிழ் நீருடன் கலந்து உள் செலுத்தும் போது செரிமானம் சார்ந்த நோய்கள் வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏதும் நேராது என்பதும் உண்மை அது அனைவரும் அறிந்ததே.


முன் சொன்னவற்றில் எல்லாம் உமிழ் நீருக்கு பெரும் பங்குண்டு.


அடுத்து நான் அனுபவித்ததை கற்றுக் கொண்டதை தாயிடமிருந்து அறிந்ததை தற்போதும் அது எனக்கு உதவிகரமாக மருந்தானதை சொல்கிறேன்.நம்பிக்கையிருப்பின் நீங்களும் பின் பற்ற.


எமது அன்பின் மருத்துவர் அரவிந்தசாமி அவர்கள் மகனது ஒரு பிரச்சனைக்கு சில காரணிகளைச் சொல்லும் போது சர்வாங்காசனம் செய்யுங்கள் நல்லது என்றார்.


சர்வாங்காசனம் இரத்த அழுத்தம் இருப்பார் செய்யக் கூடாது. மகனது மருத்துவ யோசனைகளில் இதை மீண்டும் அடியேனும் பின் பற்றலாமே என சுமார் ஒரு வார காலம் தியானம் முடிந்த பின் தியானம் முடித்த பின் சில நிமிடங்கள் செய்து வரலானேன்


அதன் விளைவாக அல்லது கடுமையான வெயிலின் உஷ்ணத்தின் விளைவாக காதருகே தலையில் ஒரு சிறு கொப்புளம், தலையில், மற்றும் மூக்கின் நுனியில் ஒரு கொப்புளம் உருவாகி இருந்தது.


காதருகே மற்றும் தலையில் உள்ளதை எண்ணெய் போன்றவற்றால் குளிர்படுத்தியதால் தணிந்தது என எண்ணுகிறேன் அதைப்பற்றி சொல்ல ஒன்றுமில்லை.


மூக்கின் நுனியில் நன்றாக பெரிதான கொப்புளத்தின் மேல் இடது கை மோதிர விரலில் சிறிய அளவில் உமிழ் நீரை எடுத்து ஓரிரு நாட்கள் சில முறை தடவி வந்தேன். அப்படியே அது பொடிந்து போய்விட்டது எந்தவித சுவடும் செய்யாமல். பொருக்கை எடுத்து விட்டேன்.


பொதுவாகவே முகம் தொடர்பான முக்கிய இடங்களில் ஏதாவது கட்டிகள், ,

 கொப்புளங்கள், கண்கட்டிகள் வரும் போது தாய் எச்சில் தொட்டு வையுங்கள் சரியாகிவிடும் என்பார் அது நூற்றுக்கு நூறு சரியாகிவிட்டது. இதற்காக வேறு ஆங்கில மருத்துவம் ஏதாவது செய்திருந்தால் வீண் செலவும் வேறு விளைவும் ஆகி இருக்கலாம்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


Friday, July 24, 2026

அறிவியல் ஆசிரியர் சந்திரசேகரன் சாரின் புகழுடம்பு இருக்கிறது: கவிஞர் தணிகை

 அறிவியல் ஆசிரியர் சந்திரசேகரன் சாரின் புகழுடம்பு இருக்கிறது: கவிஞர் தணிகை



உயர் பள்ளி வகுப்புகளுக்கு அறிவியல் சொல்லித் தந்த ஆசிரியர். எளிமையாகவே இருப்பார் இந்த ஜென்டில்மேன்.

மாணவர்களின் மனதை (அதிகம்) பேசாமலே புரிந்து கொள்ளும் ஞானம் பெற்றிருந்தார்.பார்த்தவுடன் இவரின் பூஞ்சிரிப்பு எங்கள் உள்ளத்தில் ஒரு இனிய மலரின் பூப்பு, தூண்டு உணர்வின் நெருப்புப் பொறி.


மெதுவாகவே நடந்து செல்வார், எவரையுமே கடிந்து பேச மாட்டார், சிரித்துக் கொண்டேதான் பேசுவார். ஓய்வறியா ஒரு நல்லாசிரியர். ஓய்வுக்கும் பின்னும் ஆசிரியப் பணியைத் தொடர வாய்ப்பு பெற்றிருந்தார் கற்றவர்க்கு சென்றவிடமெல்லாம் சிறப்பேயல்லவா! தோழர் ராஜு சொன்னது போல இது ஒரு மேல் தூக்கி விடும் சக்தி.


அனேகமாக 9 ஆம் வகுப்பு என்றே நினைக்கிறேன் புதிதாக ஒரு அறிவியல் பாடம் புகுத்தப்பட்டு தேர்வு வினாத்தாள் மாதிரிகள் மாற்றப்பட்டு திறனாய்வு செய்யும் வண்ணம் இருந்தன. அதாவது ஒரு மதிப்பெண் கேள்வுகள் 40, இரண்டு மதிப்பெண் கேள்விகள்:15 ஐந்து மதிப்பெண் கேள்விகள் 6 என. அதில் பின் இரண்டுக்கும் சாய்ஸ்கள் அதாவது தெரியாததை விட்டு விட்டு அல்லது தெரிந்ததை மட்டுமே எழுதமளவு கூடுதல் கேள்விகள் 15 என்றால் 20, 6 என்றால் 10.


எனக்கு நன்கு நினைவிருக்கிறது அத்தனையும் சரியாக எழுதி விட்டேன், ஆசிரியருக்கு ஒரே புளகாங்கிதம். அது முதல்தாம் அறிவியல் போன்ற பாடங்களுக்கும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் போடலாம் என்ற நிலை அந்த ஆண்டு முதல் அமல்படுத்த நேர்ந்திருக்கலாம் என நினைவு.


சரித்திர பூகோளம், தமிழ், அறிவியல் , ஆங்கிலத்தின் முதல் தாள், இரண்டாம் தாளின் சாதனைக் கட்டுரைகள்,போன்றவை இவர் போன்ற ஆசிரியர்களாலே தாம் எமக்கு பிடித்துப் போய் வாழ்வில் ஒன்றாகிவிட்ட ஒன்றாய் இணைந்திருந்தன.


வி.ஹெச்.எஸ்.எஸ் VHSS பள்ளிக் குழுவினர் அவரின் பூத உடலுக்குத் தகுந்த மரியாதை செய்வார்கள் என நம்புகிறேன். எனக்கும் உடல் நிறைய உபாதை, மற்றும் செய்ய வேண்டிய முக்கிய கடமைக்காக காத்திருப்பு இருக்கிறது.எனினும் எவராவது கலந்து கொள்வதை தெரிவித்தால் அவர்களுடன் நானும் ஒருவனாக இணைந்து கொள்ள அவா.


ஆசிரியர்கள் முன் செல்வார்கள், நாமும் ஒரு நாள் பின் செல்வோர்தாமே! அதற்கிடையே புகழுடம்பு அகலாதிருக்க எதையாவது செய்து வைப்போம். இந்தப் பதிவு இந்தியாவில் இருந்து படிப்பாரை விட  உலகெங்கும் உள்ள மற்ற நாடுகளில் படிப்பார் அதிகம் உள்ள வலைப் பூ. 


இந்த செய்தியை எனக்குத் தெரியப்படுத்திய தோழன் ராஜீ, மற்றும் பள்ளி வாட்ஸ் அப் குழு நண்பர்களுக்கு எனது நன்றிகள்.இவர் மறைந்த செய்தி எனை முதியவனாக்கிவிட்டது.


அய்யாவுடைய ஆன்மா எப்போதும் அவருக்கு நாம் செய்யும் அஞ்சலிகளை ஏற்றுக்கொள்ளும், ஆசீர்வதிக்கும் என்று உளமார உண்மையாகவே நம்புகிறேன்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


Wednesday, July 22, 2026

அன்னை தெரஸாவின் அடுத்த வாரிசு: கவிஞர் தணிகை

 அன்னை தெரஸாவின் அடுத்த வாரிசு: கவிஞர் தணிகை



ஸ்விட்சர்லாந்து‍‍‍ ‍- துபாய் -கார்ப்ரேட் - சான்ட்ரா...மேற்கு வங்க மாநில குக்கிராமம் - பள்ளிகள்-- குழந்தைகள் மேம்பாடு



ஸ்விட்சர்லாந்தில் பிறந்து வளர்ந்து படித்து துபாயில் பல ஆண்டுகள் கார்ப்ரேட் கம்பெனிகளில் பணி புரிந்து விட்டு வாழ்க்கையில் இலட்சியம் என்பது வேண்டும் என்ற முடிவில் வேலையைத் துறந்து இரண்டு மேல் சட்டைகள், இரண்டு கால்சட்டைகளுடன் புறப்பட்டு வந்து தீர்மானத்திலிருந்து பின் வாங்காமல் மேற்கு வங்கத்தில் சாகர் என்ற ஒரு தீவுக் கிராமத்தை தேர்ந்தெடுத்து அங்கு சுமார் 350 பள்ளிக் குழந்தைகளுக்கு பெறாத தாயாக விளங்கும் இந்த மங்கை இன்னொரு தெரஸா.



குழந்தை மணத்தை தடுப்பது, குழந்தைகளைக் கடத்துவதை தடுப்பது, மற்றும் குடும்ப வன்முறைகள் சமூக வன்கொடுமைகளைத் தடுப்பது ஆகியவற்றை இந்தப் பள்ளிகள் மூலம் கொண்டு செல்கிறார்.


பொருளாதாரங்களை சம்பாதிப்பதும் குவித்துக் கொள்வதும், அதை சொந்தமாக்கிக் கொள்வதும் வாழ்வின் இலக்கல்ல. எனது வாழ்வின் இலக்கு கிராமிய மேம்பாடும் பள்ளிக் குழந்தைகளின் படிப்புமே  என்று இவர் இந்தியப் பள்ளித் திட்டம் என்று ஒரு திட்டத்தை ஆரம்பித்து இங்கு மேற்கு வங்காளத்தில் எவரும் எளிதில் சென்றடைய முடியாத ஒரு குக்குராமத்தை தேர்ந்தெடுத்து அங்கு குழந்தைகளை என் பள்ளியில் சேருங்கள் என்று கோரிக்கை செய்ய இவரை அப்போது எவருமே நம்பவில்லை என்றும் இப்போது இவரை நம்பி சுமார் 350 குழந்தைகளின் வளர்ச்சியும் அவர் குடும்ப வாழ்வும் உள்ளன என்று ஆங்கில பத்திரிகைகள் எழுதியுள்ளன. 



இது போன்ற நல்ல செய்திகளை தமிழில் செய்தி ஏடுகளில் எங்கும் படித்த நினைவில்லை.இவர் அந்தக் குழந்தைகளுக்கு கற்பிக்கிறார், அவர்களுடனேயே உண்டு உறங்கி தமது வாழ்வை அர்ப்பணித்து வருவது மிகவும் நல்ல விதையாக விருட்சம் எழுவதன் அறிகுறியாகத் தெரிகிறது.


2012 ஆம் ஆண்டு முதலில் இவரது  சொந்த சுய சேமிப்பை இந்த திட்டத்துக்கு செலவிட்டார் என்பதும் குறிப்பிடப்படுகிறது.



இது போல சில ஆசிரியர்களும், சில நல்ல உள்ளங்களும் தங்களது வாழ்வை சமுதாய மேம்பாட்டுக்கு செலவிடுகிறார்கள் என்றாலும் வெளி நாட்டிலிருந்து சுக போக வாழ்வைத் துறந்து இந்த வாழ்வுக்கு அடித்தளமிட்டதற்காக சாண்ட்ரா லவி கோஜ்கோவிக் என்னும் இலட்சுமியை நாம் போற்றுகிறோம் வாழ்த்துகிறோம்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

Friday, July 17, 2026

SPOTIFY.COMல் தணிகையில் குரலில் மாக்ஸிம் கார்க்கியின் தாய்: கவிஞர் தணிகை

 ஸ்பாட்டிவை டாட் காமில் தணிகையில் குரலில் மாக்ஸிம் கார்க்கியின் தாய்: கவிஞர் தணிகை



600 பக்கமுள்ள மாக்ஸிம் கார்க்கியின் தாய் நாவலில் 400 பக்கங்களுக்கும் மேல் படிக்கப் பட்டு ஸ்பாட்டிவை டாட் காமில் சேர்க்கப்பட்டுள்ளது.


கேட்டுப் பாருங்கள்.


உலக இலக்கிய வரிசையில் மிக முக்கிய இடத்தில் இருக்கிற இந்த நாவலை இப்படிச் செய்ய வேண்டுமென ஒரு இளைஞரின் வேண்டுகோள் எனைச் செய்ய வைத்துள்ளது.


படிப்பதுதான் குறைந்து விட்டது கேட்டாவது பாருங்களேன்., பொன்னியின் செல்வன், வேள்பாரி இப்படிப்பட்ட வீரம் செறிந்த நாவல்களை ஒலி வடிவத்தில் கேட்டு வருகிற சமுதாயத்தில் இந்த மாக்சிம் கார்க்கியின் தாய் சற்று வித்தியாசமானது.


மேலை நாட்டு இலக்கியங்கள், மொழி பெயர்ப்புகள், உள் நாட்டு வேறு மொழி இலக்கியங்களின் மொழி பெயர்ப்புகள் போன்றவற்றை வெகுவும் அதிகமாக படித்து நுகர்ந்து அனுபவித்த காரணத்தினால் இதை இப்போது செய்து வருகிறோம்.


ஒரு இளைஞர் தமது வேண்டுகோளாக கவிஞர் தணிகையின் புத்தகங்களையுமே இப்படி செய்யக் கூடாதா ? என விரும்பிக் கேட்டிருக்கிறார். அதன் முயற்சி இனி தொடரலாம். டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பு, மகாத்மாவின் சத்தியசோதனை, இப்படி செல்லலாம் என நினைத்த எமக்கு இதுவும் கூட ஒரு நல்ல யோசனையாக இருக்கவே அதையும் போதிய அளவு அல்லது தேவையான அளவு செய்து விட்டு அதன் பின் உலக இலக்கிய நூல்களுக்குள் செல்லலாம் என்ற அவா.


இறந்த பின்னும் சாதனை செய்யும் குரல்கள் ஜீவிதம் செய்கின்றன.அப்படி கூட இந்த முயற்சியும் இருக்கட்டுமே..


இந்த குரல் பதிவுகளை தினமும் ஸ்பாட்டிவை டாட் காமில் ஏற்றிய இணைப்பை வாட்ஸ் அப் இணையத்தின் வழியே தொடர்பில் உள்ள சில குழுக்களுக்கும் தெரியப்படுத்தி வருகிறோம். ஆர்வம் உள்ளார் இணைந்து கொள்ளலாம். இணைப்பு உங்களுக்கும் அனுப்பி வைக்கப் படும் . கேட்டுப் பாருங்கள் நன்றாக தமிழ் இருக்கும். நன்றி. வணக்கம்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


Friday, July 3, 2026

கூ(ட்)டு கண்டேன்: கவிஞர் தணிகை

 கூ(ட்)டு கண்டேன்: கவிஞர் தணிகை



அகந்தைக் கிழங்கை அகழ்ந்து எடு விண்ணில் வீசு!


திரு விளக்கை ஏற்றுவதை விட தெரு விளக்கு ஏற்றுவது சிறந்தது!


பயன்படுத்தா பொருள் பரண் மேலே ...பழமொழி

பயன்படுத்தா பொருள் வண்டிக்காரருடன் ...புது மொழி


ஒழுக்கமிலா ஆட்சியின் கீழ் ஒழுக்கமிலா மக்களுக்கு வாழ்வது பிடிக்கும்


சேற்று நிலத்தில் பட்ட மயிலின் தோகையை கழுவி விட ஆசை...


குயிலுக்கு மனிதர் மேல் நம்பிக்கையில்லை


மயிலுக்கு மனிதர் மேல் நம்பிக்கையில்லை


பறவைகளுக்கு மனிதர் மேல் நம்பிக்கையில்லை


விலங்குகளுக்கும் மனிதர் மேல் நம்பிக்கையில்லை


மனிதர்களுக்கும் மனிதர் மேல் நம்பிக்கையில்லை


மனிதர்களுக்கு கடவுள் மேல் நம்பிக்கை...


நம்பிக்கை வை நம்பி கை வை...

நம்பியவர்க்கு நடராஜன் நடராஜன் தான்

நம்பாதவ‌ர்க்கு எமன் ஒரு தூதுவன் தான்

நம்பாதவ‌ர்க்கு எமன் ஒரு தூது வந்தான்

நம்பாதவர்க்கும் நம்புபவர்க்கும்

கவிஞர் மகிழ்வதற்கும் கோபத்திற்கும் காரணங்கள் வேண்டியதில்லை

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


Sunday, June 28, 2026

குருவிகளின் நேசம் மயில்களின் வாசம்: கவிஞர் தணிகை

 குருவிகளின் நேசம் மயில்களின் வாசம்: கவிஞர் தணிகை



புதிய வீட்டின் சாளர வழியே வந்து அலமாரியில் இருக்கும் மின் சலவைப் பெட்டியில் கிண்ணக் கூட்டைக் கட்டி முட்டை இட்டிருந்தது ஒரு குருவி.அடை காத்தது காற்று, மழை, மனிதர்கள், பூனை குறுக்கீடு ஏதுமில்லை. ஏன் எனில் அது எமது வீட்டின் கணினியுடனான‌ காலியாக இருக்கும் படுக்கை அறை.என்னையெல்லாம் ஒரு மனிதனாக அது மதிக்கவே இல்லை. அது பாட்டுக்கு எப்போதும் திறந்தபடியே இருக்கும் சாளரங்கள் வழியே வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருந்தன நான் அந்த அறையிலேயே அமர்ந்து கணினி வழியே செய்திகளைப் படித்துக் கொண்டிருந்த போதும் ஏதாவது தட்டச்சு செய்து கொண்டிருந்தாலும்...


அது ஒரு கலப்புத் திருமணத் தம்பதிக் குருவிகள்.

கருங்குருவி ஆண்

நமது ஊர்க்குருவி பெண்.


அதற்கு ஒரு குஞ்சும் வந்திருந்தது அந்த முட்டையில் இருந்து.

சில நாட்களிலேயே அதன் பெற்றோர் கொடுத்த புழு பூச்சிகளின் கவனிப்பால் குஞ்சுக் குருவி பெரிதாகி இருந்ததோடு மட்டுமல்ல பறக்கவும் ஆரம்பித்தது.



அந்த தம்பதி குருவிகள் ஓசைகள் எனக்கு புதிதாக இருந்தன.ஒரு புறம் கீச்சென்ற ஒலி, மற்றொரு முறை கர் கர் கர்ர் எனக் கிறீச்சிடல்...முதலில் எட்டி எட்டிப் பார்த்தேன் வெவ்வேறு குருவிகள் ஆக இருக்கும் என... ஊன்றிப்பார்க்க ஒரே குருவியின் வழியேதான் இந்த மாறுபட்ட குரல்கள். ஆச்சரியமானதாக இருந்தது.


வாழை மரத்தில் இளைப்பாற வந்த செம்போத்துப் பறவைகளைக் கூட இவை விரட்டிக் கொண்டிருந்ததாக துணை சொல்லியது...


 ஒரு நாள் காலை அதாவது இன்று காலைதான்,திடீரென ஆண், பெண் இரண்டு குருவிகளும் எங்களிடம் நிறைய புகார்களைச் சொல்லிக் குற்றம் சாட்டியது, என்னவென்று பார்த்தால் அந்தப் பெட்டியில் இருந்த குஞ்சைக் காணோம். தேடல் நடத்தும் முன் நான் அதை மேலோட்டமாக பார்க்க, பெரிய குருவியாக இருக்கும் என நினைத்து பீரோ சந்தில் இருந்ததை அதுவும் சிறிய குருவியைத் தேடிக் கொண்டிருக்கிறது என நினைத்து விட்டேன்.



ஆனால் அந்த பெற்றோர் குருவிகளின் ஆர்ப்பாட்டம் தாங்காமல் சமையல் கட்டிலிருந்து வந்து பார்த்தேன் அதுதான் பீரோ சந்தில் இருந்த அந்தக் குருவிதான் அந்த முட்டையிலிருந்து வந்த புது சிறு குருவி, துணையை அழைத்து அதை பெற்றோர் குருவிகளுடன் விட்டு விடச் சொன்னேன். செய்தாயிற்று.


சலவைப் பெட்டி இருக்கும் அட்டைப் பெட்டியை எடுத்து  பால்கனியின் தூண் அருகே வைத்து விட்டேன். இனி கண்ணாடி ஜன்னல்களையும் தேவைப்படும் போது சாத்தி விடலாம் எனத் தீர்மானித்து விட்டோம்.கோவிட் பேரமைதி இந்த சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கையைப் பெருக்கி இருந்ததை நாம் மறந்து விடக் கூடாது. 


பழனியில் மட்டுமே சிறுவயதில் கண்ட மயில்கள், இப்போது எங்கள் பகுதியில் பல நூறுகளாக பெருகி சுற்றித்திரிகின்றன, எவரும் அவற்றை துன்புறுத்தாததால் அவை பாட்டுக்கு காடுகளில், தோட்டங்களில் , மலைகளில், மலைக்குன்றுகளில் இரையெடுத்து இளைப்பாறி மனமகிழ்வுடன் வாழ்ந்து வருகின்றன. கல்லூரி பணிக்குச் சென்ற காலைகளில் எமது கல்லூரி வளாகத்தில் பார்த்தோம். அதன் பின் எங்கள் ஊரிலேயே இவ்வளவு மயில்களைப் பார்ப்போம் என கனவிலும் கருதவில்லை.


தினமும் எங்கள் நடைப்பயிற்சியில் தவறாத‌ மயில்களின் தரிசனம், அவ்வப்போது தோகை விரித்தபடியும்...


மறுபடியும் பூக்கும் வரை


கவிஞர் தணிகை.


Thursday, June 25, 2026

கர்மா VS இயற்கை: கவிஞர் தணிகை

 கர்மா VS இயற்கை: கவிஞர் தணிகை





சில நாட்களுக்கு முன்பு ஒரு நண்பர் பகிர்ந்தார் கர்மா பற்றி முக நூலில். அதன் அதிர்வலைகள் இன்னும் இருப்பதால் அது பற்றி நமது பதிவும்...


புத்தர் சொல்லிச் சென்றது: வினை தொடரும் என்பது

கணியன் பூங்குன்றனார்: நன்மையும் தீமையும் பிறர் தர வாரா...

இயற்பியல் கோட்பாடு: ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது ஒரு வகையில் மறையுமாயின் பிறிதொரு  வகையில் வெளித் தோன்றும்...


மொத்தத்தில் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது கர்மா என்பது வினைப் பயன். தொடரும் ஒரு வினைச் செயல்.(வினை என்பது செயல் என்பதாக எடுத்துக் கொள்ளப் பட வேண்டியதாகிறது பொதுவானது) அது இதிலிருந்து விலகி நிற்கிறது இலக்கணப்படி. எண்ணம், சொல், செயல் எல்லாவற்றிற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது தொடர் ஓட்டம் இருக்கிறது இதனுள்.


இது வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான் என்பது பழமொழி போல்   போன்று(ம்) தோன்றும் எக்காலத்திற்குமான மொழி.விதை ஒன்னு போட்டா சுரை ஒன்னா (வேறா) முளைக்கும் என்றும் ஒரு சொல்லடை உள்ளது.


அன்றாட வாழ்வில் நாம் செய்யும் செயல்களிலிருந்து அடுத்தவருடன் நமக்கேற்படும் அனுபவங்கள் வரை இவை அடங்கும்


சரி மனிதர்க்குத் தான் கர்மா, எல்லாமா என்றால் அப்படித்தான் இருக்கும் போலிருக்கிறது.விலங்கு போராடி உணவைப் பெறுகிறது அடுத்த விலங்கைக் கொன்று...பறவைகள் உணவைத் தேடிப் பெறுகின்றன, சில வகை விலங்கைப் போலவும் கொன்று தின்கின்றன.இந்த வாழ்வா சாவா போராட்டம் அனு தினமும் தொடரவே செய்கிறது...


எங்களது வாழ்விலேயே ஒரு மனிதர் வேட்டியைப் போட்டு தாண்டிவிட்டார் தன் மூத்தவரிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட வீட்டுப் பணத்தை இல்லையென்று சொல்லி, முதுமையில் கால்களை இழந்து மிகவும் வேதனை அனுபவித்ததை கண்கூடாக யாம் கண்டதுண்டு.


அறம், தர்மம், நீதி, நியதி, யமம் இப்படி எல்லாம் இருக்கிறது என்பாரும் இல்லை என்பாரும் இங்கு உண்டு. கடவுள் கட உள் கடந்து பார் கர்மா இருக்கலாம், கடவுள் இருக்கிறதோ இல்லையோ கர்மா இருக்கலாம்.


இது போல் எண்ணிலடங்கா நிகழ்வுகள் மனித வாழ்வில் இருக்கலாம், இருக்கும்...ஆனால் எம் கேள்வி எல்லாம் அதல்ல...


ஒரு திரைப் படத்தில் வண்ணத்துப் பூச்சியின் சிறகசைவுக்கும், சுனாமிக்கும் தொடர்பிருக்கிறது என்ற ஒரு கருத்தை சொன்னார்கள்...எப்படி என்பதை முழுதுமாக விரித்துப் பார்த்தால் அஞ்ஞானமும், விஞ்ஞானமும், மெய்ஞானமும் இருக்கும்.இருக்கலாம்.


பூகம்பங்கள், எரிமலை வெடிப்புகள், புயல், காற்றின் சீற்றங்கள்,போர்கள், மனிதப் பிழைகள், அறச்சீற்றங்கள், மறைச்சீற்றங்கள், அணு வெடிப்புகள், ஆயுதக் கலாச்சாரங்கள், வேதியல் நிகழ்வுகள் வேதியியல் விபத்துகள் இப்படி பல இயற்கை மற்றும் செயற்கை நிகழ்வுகள் பூமியை அலைக்கழிக்க, உயிர்கள் அழிவு ஒரு புறம்,ஆக்கம் உணர்ச்சியால் ஒரு புறம் இருக்க‌ பூமிக்கே ஒரு ஆயுள், விண்மீனான சூரியனுக்கும் ஒரு ஆயுள் என விண்ணியல் விரிந்தபடி இருக்க இதில் மனிதர்களும் கர்மாவும் இயற்கையில் இருக்கிறதா என்பதை நாம் கலந்துரையாடி தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமாகிறது.


 வாயேஜர்1,2 வேறு நிறைய விண்ணியல் புள்ளி விவரங்களைத் தந்த படி சென்று கொண்டே இருக்கிறதாம் ...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை