Saturday, October 19, 2019

உயிர்க்கு மதிப்பில்லாத நாட்டில் இன்னும் உயிர்ப்போடு இருக்கும் நான்: கவிஞர் தணிகை.

உயிர்க்கு மதிப்பில்லாத நாட்டில் இன்னும் உயிர்ப்போடு இருக்கும் நான்: கவிஞர் தணிகை.
Image result for walking gave a gift of little dog
அன்றும் வழக்கம் போல நடைப்பயிற்சிக்கு சென்றிருந்தேன். லேசான மழை. நல்ல இருள். புதிதாக போடப்பட்ட சாலையின் பாலப் பகுதியின் ஒரு ஓரம் சென்று சிறு நீர் கழித்தபடி இருந்தேன். என்னருகே வெண்ணிறத்தில் ஒரு சிறு குட்டி நாய் வந்து அண்டியது.

அதன் பிறகு சுமார் ஒரு கி.மீ என்னைத் தொடர்ந்தது.  அது எவருடையாதாக இருக்கும் எவர் வேண்டுமானலும் எப்போது வேண்டுமானாலும் எங்கள் பயணத்தை தடுத்து அதை எடுத்துக் கொண்டு சென்று விடுவார்கள் என என்னை ஒவ்வொரு இரு சக்கர வாகனமும் கடந்து செல்கையில் எல்லாம் எதிர் பார்த்தேன் ஆனால் அப்படி ஏதுமே நடக்கவில்லை.

பிரபு கடையில் வழக்கம் போல் சிலர் அந்நேரத்திலும் கூடி இருந்தனர், என்ன சார் நாயுடன்...எனப் பார்த்து இது பெண் பொட்டை நாய் இல்லைன்னா இதை விட்டுவிடுவார்களா? கொண்டு போய் வளர்த்தினால் ஒரு காலத்தில் வீட்டு சுவற்றில் எல்லாம் ஆண் நாய்கள் எல்லாம் வந்து  சிறு நீர் கழிக்கும் என்றார் இராஜேந்திரன் பிரபு காவலர் மற்றும் இப்போது துணை ஆய்வாளர் தேர்வுக்கு கடுமையாக முயன்று கொண்டிருக்கும் பிரபுவின் தந்தை.

வால் சுருண்ட படி இருக்கிறது அதை கொஞ்சம் வெட்டி சாம்பல் போடுங்கள் ஆறி விடும் என்றார்கள். நாங்களும் முன்னால் குச்சி வைத்துக் கூட கட்டிப் பார்த்து விட்டோம் என அவர்கள் நாய் வளர்த்திய அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்...நாய் வாலை நிமிர்த்த முடியுமா என்ற பழமொழியை இவர்கள் அறியார் போலும். நாய் பூனையாக இருந்தால் பெண் வேண்டாம், கோழி, ஆடு மாடாக இருந்தால் பெட்டைதான் வேண்டும். விவசாயிகளுக்கு எல்லாம் இப்படி வியாபார புத்தி வந்ததால் தான் உலகின் நிலை இப்படியோ. எப்படியோ இந்த ஆண்டு மழை பெய்து அனைவரையும் காப்பாற்றி விட்டது. நிலத்தடி நீரும் நன்றாக உயர்ந்து விட்டதாகவே பேசிக் கொள்கிறார்கள்...

 அதன் பின்னும் அந்த நாய்க் குட்டி புதர் வழியும் எனைத் தொடர்ந்து வந்தது மற்ற  பெரிய நாய்கள் ஏதாவது செய்து விடுமோ என்ற நிலை யாவற்றையும் தவிர்த்து  வீடு வந்தோம்.

வேலை இன்னும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது என்றார் இல்லத்தரசி. என்றாலும் அது ஒரு கி.மீக்குக்கும் மேல் எனைத் தொடர்ந்த கதையைச் சொன்னேன்.

அன்பு எனப் பேர் வைக்கலாமா, சபிதாவின் நினைவாக வந்து விட்டதோ என்றெல்லாம் நினைத்தேன். மகனோ குல்பி எனப் பேர் வைக்கலாம் என்றார். ஏன் எனிலி பனி போன்ற ஒரே வெண்ணிறத்தில் இருக்கிறதாம்.

நாய் வளர்த்த ஆசைதான். ஆனால் அதன் கழிவுகளையெல்லாம் எடுக்க வேண்டுமே...இன்று  எங்கள் பூனை செல்ப் மேல் சுவரில் ஏறி எச்சமிட்டிருந்ததை எடுத்தேன். நாய்களுக்கும் பூனைகளுக்கும் பறவைகளுக்கும் இது போன்ற மழைக்காலம் அடை மழைக்காலம் அவ்வளவு ஏற்புடையதல்ல.

நல்ல வேளை இந்த நாய் நன்றாகவே இருக்கிறது இனி வரும் காலத்தில் எப்படி இருக்குமோ...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment