Sunday, April 16, 2017

Easter 2017.கிறித்தவம் எனக்கு உறுதுணையானது: கவிஞர் தணிகை

கிறித்தவம் எனக்கு உறுதுணையானது: கவிஞர் தணிகை

Image result for easter 2017


ஈஸ்டர் திருநாள் கிறித்தவருக்கு, ஏசு உயிர்த்தெழுந்த நாள் என்ற பெருநாள்,இது உண்மையா பொய்யோ என்றெல்லாம் நானறியேன் நான் எல்லா மதங்களிலும் இருக்கும் நல்லதை நாடுபவன் அல்லதை சாடுபவன் மதங்களைக் கடந்தவன் என்று சொல்லிக் கொள்வதுமுண்டு. ஆனால் எனது வாழ்வில் கிறித்தவம் உறுதுணையானதில் சில துளிகள் மட்டும் நீங்கள் பருக.

காட்சி 1:

6 ஆம் வகுப்பு படிக்கிறேன். என்.சுந்தரம் என்ற பிராமணப் பிரிவு சார்ந்த தலைமை ஆசிரியர்.அந்தப் பள்ளியே பிராமணப் பிரிவு அடிப்படையில் அமைந்தது. சமஸ்கிருதம் எல்லாம் கற்றுக் கொடுக்க தனிப் பள்ளியும் அங்கு உண்டு.

எனக்கு வகுப்பாசிரியை மேரி சந்திரா. எனது 2 ஆம் வகுப்பு ஆசிரியை : குழந்தை திரேசா அந்த நினைவு கூட என்னுள் இன்னும் அப்படியே பசுமையாக...(ஒரு வேளை தெரஸா என்ற பேர்தான் அப்படியோ).மதர் தெரஸாவைத் தந்த மதம். அவரை விட புனிதமான மனிதம் இருக்கிறதா?
சரி வருகிறேன் கருப்பொருளுக்கு:(Even while in my Tribal development career one doctor certified my work is just like the works of Mahatma Gandhi and Mother Teresa ..those are different and we can see it some times afterwards...)

எனக்கு அரிவாள் மனை பின் பக்கத்துக்காரன்  அதாவது எந்த கால்சட்டை அணிந்தாலும் விடாமல் விளையாடி தேய்த்து கிழித்து விடுகிறேன் என்று வீட்டில் சொல்வதுண்டு.

எட்டு பேர் + பெற்றோர். மொத்தம் 10 பேர் அடங்கிய குடும்பம்.ஒரு மில் தொழிலாளி என் தந்தை. அவரது வருவாயில் 10 வாயும் வயிறும் நிரம்பியாக வேண்டும். இயற்கையை எண்ணி வியக்கிறேன் வியந்து கொண்டே இருக்கிறோம்.சிறு வயது பெற்றோர் திருமணம்.ஆரம்பத்தில் இளமையில் ஒரு குழந்தை கூட இல்லை நீ மறுகல்யாணம் பண்ணிக்கொள் என்ற உறவுகள், ஊர் , நட்பு, தந்தை இப்படி எல்லாம் சொன்னார்களாம் என் தந்தையிடம். தாயைக் கைவிடவில்லை . கட்டியவளைக் கைவிட மாட்டேன் என்ற இறுமாப்பு.

 எவர் பேச்சையும் கேட்காமல் இருந்த என் தந்தைக்கும் தாய்க்கும் நாங்கள் 8 பேர் மக்கள் .ஒரு குழந்தை இறந்ததாகவும் ,பிறர் சொல்லக் கேட்டதுண்டு.அந்தக் காலத்தில் எந்தவித குடும்பக் கட்டுப்பாடு, அறிவியல் ஆணுறை, பெண்ணுறைகள் ஏதும் இல்லாத காலம். நான் ஆண்மக்களில் கடைசி. பெண் மக்களில் கூட எனக்கு 4 பேர் அக்கா, ஒரு தங்கை மட்டும்.

சில கருக்கள் புறம் தள்ளப் பட்டிருக்கவும் வாய்ப்புண்டு. அதில் இன்னொரு வியப்புக்குரிய விஷயம் என்னவெனில்: என் தாய் சற்று மாநிறம், தந்தை நல்ல சிவப்பு. பிறந்த மகள்கள்  5 பேரும் தந்தை நிறத்துடன் நல்ல சிவந்த நிறம் நாங்கள் 3 மகன்களும் அம்மாவின் நிறத்தில். தாயைக் கொண்டு பிள்ளைகளும், தந்தையைக் கொண்டு பெண் மகள்களும் எனச் சொல்வார்களே அது எவ்வளவு சரியாக...

சரி சிறியதாக சொல்லி முடிக்கலாம் என்றாலும் இதெல்லாம் சொல்வதும் அதையெல்லாம் கெட்பதும் உங்களுக்கும் பயன் இருக்கும் பலன் இருக்குமோ என்பது தெரியாது.

 6 ஆம் வகுப்பில் ஆரம்பத்தில் என்னிடம் காக்கி கலர் கால் சட்டை இல்லை. மேல் உள்ள வெள்ளை சட்டை மில்லில் கொடுத்த எம்.எஸ். 55 லாங்க் கிளாத் போன்றவற்றில் இருந்து கொடுப்பதை தைத்துக் கொடுத்து விடுவார்கள். ஆனால் காக்கித் துணி கடையில் எடுத்துத்தான் தைத்தாக வேண்டும். அப்போது எடுக்க முடியவில்லை. எனவே வேறு கலரில் அரைக்கால் சட்டை அணிந்து கொண்டே பள்ளி சென்று வந்தேன்.கடைசியில் 11ஆம் வகுப்பு என நினைக்கிறேன் ஒரு வெளிறிய எனது மூத்த சகோதரின் மஞ்சள் டெரிலின் சட்டையை வெள்ளை சட்டை என்று அணிந்து சீருடை என்று ஏமாற்றியது எல்லாம் உண்டு அது எல்லாம் அப்புறம்.

மேரி சந்திரா எனது 6 ஆம் வகுப்பு ஆசிரியை, அப்போதுதான் நான் அந்தப் பள்ளிக்கு 6 ஆம் வகுப்பில் புதிதாக சேர்ந்துள்ளேன். நன்றாக அப்போது படிப்பேன் 3 ஆம் ரேங்க் வாங்கிய நினைவு. முதல் ரேங்க் கால் ஒடிந்ததால் தேறத் தவறிய பாலசுப்ரமணியம் இரண்டாம் ஆண்டில் அதே 6 ஆம் வகுப்பில் இருந்து படித்து முதல் ரேங்க் வாங்கி விடுவான், எஸ்.டி. ராஜன் டீச்சரின் பையன் 2 ஆம் ரேங்க். பள்ளி செல்லாத என் பெற்றோரின் பிள்ளையான நான் 3 ஆம் ரேங்க். எனவே இந்த ஆசிரியைக்கு என் மேல் பிரியம் அதிகம். எனவே சீருடை அணியாமலே கூட பிரேயருக்கு அனுப்பாமலே என்னை வகுப்புக்கு வந்து அமர்ந்து கொள்ளச் செய்து விடுவார். இப்படியே சில பல நாட்கள் பள்ளியை ஏமாற்றி வந்தோம்.ஆம் அந்த டீச்சரும் எனக்கு உடந்தை ஏன் அவர்தான் அந்த ஏமாற்றை கற்றுக் கொடுத்ததே. நல்ல உயரம், சிவந்த நிறம் திட சரீரம்  தக தகவென மின்ன..அப்பா அவர்களைப் பார்த்தாலே ஒரு மரியாதை வரும். இன்றும் அந்த 6 ஆம் வகுப்பு ஆசிரியை மேரி சந்திரா என் கண்களில். அதன் பின் அவரது கணவர் உயர் நிலைப் பள்ளி அசிரியர் டேவிட் அவர்களும் எனக்கு நட்பு.

இப்படி சென்று வருகையில்...

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பதற்கேற்ப , பள்ளி வகுப்பு நடந்து வரும் நேரம் இடையில்  ஒரு நாள் நான் சிறு நீர் கழிக்க டாய்லட் செல்லும்போது என்.சுந்தரம் தலைமை ஆசிரியரும் வந்து விட்டார்.. எங்கே சீருடை யூனிபார்ம் எனக் கேட்டு போட்டு வரச் சொல்லி துரத்த ஆரம்பித்து விட்டார்.

 வந்து வகுப்பில் ஆசிரியை இடம் நடந்தது பற்றிச் சொன்னேன், உடனே யாராவது இவனுக்கு ஒரு அரைக்கால் சட்டையை கொடுங்கள் என்றார், உடனே குள்ளமான எனக்கு மிகவும் உயரமான சரியாக படிக்காமல் வகுப்பில் தேறாமல் அங்கே அதே வகுப்பில் அப்போதும் படித்த ஐ. சார்லஸ் அவர் தந்தை பேர்: இஸ்ரேல்.அவர் அதன் பின்  பள்ளியில் கிர்க்கெட் வீரர், அதன் பின் கவுன்சிலர் என பல பரிமாணங்களிலும் ஒரு ஆளும் கட்சிக்காரர் என்றெல்லாம் எனது பார்வையிலும் என்னுடன் வளர்ந்து வந்தவர். எனது புத்தக வெளியீட்டின் போதெல்லாம் அவருக்கு ஒரு பிரதி சென்று சேர்த்த அனுபவம் எல்லாம் எனக்கு அப்புறம்.

இப்போதும் எனது ஊரிலிருந்து இரண்டு மூன்று கி.மீ தள்ளித்தான் வாழ்ந்து வருகிறார். அப்போதும் அவர்தான் அந்தப் பள்ளியின் மிக அருகே உள்ள அவரது வீட்டுக்கு சென்று ஹாஸ்டல் பகுதியில் கெமிகல் லைனில் உள்ள அவர் வீடு சென்று ...

எனது அரைக்கால் சட்டை இவருக்கு சரியாக இருக்காதே என்று சொல்லி விட்டு அவரது தம்பியின் கால் சட்டையை எடுத்து வந்து கொடுத்து அடுத்த புதுக் கால் சட்டையை எனது வீட்டில் எடுத்துத் தருமுன் அந்த இடைக்காலத்தில் போட்டுக் கொண்டு பள்ளி வரச் செய்தார்.அதன் பின் நான் பல ஆண்டுகள் வளர்ந்து நன்னிலையில் இருக்கும்போது ஒவ்வொரு கிறிஸ்மஸ் இரவிலும் அனாதை சாலையோரப் பிச்சைக்காரர்களுக்கு போர்வை கொடுத்து கொடுத்து கடைசியில் 2000 ஆண்டில் எவரின் துணையின்றி இரு சக்கர வாகனத்தில் சென்று கொடுத்து திரும்பி வந்து இடது கையை அதன் முழங்கை மூட்டை இடம் பெறச் செய்த நிகழ்வுடன் அந்த போர்வை வழங்கும் நிகழ்வை நிறுத்திக் கொண்டதுமுண்டு.

Image result for easter 2017

காட்சி : 2

எனது நிறுவனத்தில் இருந்து கேரளா எர்ணாகுளம் கொச்சினுக்கு ஒரு 15 நாள் கான்ப்ரன்ஸிக்கு சென்று வர பரிந்துரை செய்யப்பட்டேன் .அப்போது நான் திட்ட அலுவலர் மலை வாழ் மக்கள் மேம்பாட்டுத் திட்டத்துக்கு. என்னுடன் சுமார் 30 பேர் 4 தென்னிந்திய‌ மாநிலத்திலிருந்து. 29 பேர் மாமிச உணவு உண்பார், நான் ஒருவன் மட்டும் மரக்கறி உண்ணும் நெறியாளனாக.
அது நடந்த இடம் கிறித்தவ மதம் சார்ந்த ஒரு நிறுவனம். அங்கு உணவு தயாரிப்பு பொறுப்பு ஒரு கன்னியாஸ்திரி கையில். அந்த வளாகத்தில் ஒரு பெரிய தேவாலயமும் இருந்தது.

அவர்களுக்கு எல்லாம்( அந்த 29 பேருக்கு) எப்படி விருந்தாளிகளுக்கு உரிய முறையில் மாமிசத்தில் கட்லட், சிற்றுண்டி, உணவு எல்லாம் தந்தாரோ அதே போல எனக்கும் மரக்கறி உணவில் தனிப்பட்ட கவனத் தயாரிப்பில் எனக்கு வெஜிடபுள் கட்லட், சூப், உணவு வகைகள், ஏன் குடிநீரில் கருங்காலி எல்லாம் போட்டு..இராஜமரியாதையுடன். நாமாக இருந்தாலோ, நம் வீட்டில் இருந்தாலோ கூட ஒருவருக்குத்தானே இந்தப் பொறியலுடன் ,இந்த இரசத்துடன், இந்த சட்னியுடன் சமாளித்துக்கொள்ளுங்கள், ஒருவருக்கு எவ்வளவு என்று செய்வது என தாயாக இருந்தாலும் கூட சிறு கவனிப்புக் குறைவுடன் நடந்து கொள்வதை நாம் குறையென்று ஏற்க முடியாது நிலை அப்படித்தான் இருக்கும்.

ஆனால் அந்த கன்னியாஸ்த்ரி பெண் அவரை நாம் தேவதை என்றே சொல்ல வேண்டும் எப்படி அப்படி அந்தளவு கவனம் எடுத்துக் கொண்டார்கள் என்று இன்றளவும் எண்ணி எண்ணி மகிழ்கிறேன். இப்போது அந்த நிகழ்வு நடந்து25 ஆண்டுக்கும் மேல் ஆனபோதும் கூட மறக்க முடியாமல் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஒரு நாள் மட்டுமல்ல தங்கியிருந்த அத்தனை நாட்களிலும் அதே மரியாதை கலந்து உபசாரம், அதே அளவு மாறாத நெகிழ்வுடன்...

இது போல கிறித்தவத்தில் தான் வெண்ணுடை அணிந்த தேவைதைகள் நிறைய உலாவுகிறார்கள்.
Image result for easter 2017



காட்சி 3:

இது நடப்பு. என்னிடம் இருக்கும் திறம் அறிந்து என்னை தமது தலைமையின் கீழ் உள்ள கல்லூரியில் முகாம் அலுவலராக நியமித்து விட்டார். இன்று அவர் மூலம் ஒரு இலட்சத்து இருபதாயிரம் ரூபாய் ஈட்டியிருக்கிறேன் இதுவரை. இது எனது 10 மாத சம்பளம். இதில் இருபதாயிரம் வழிச்செலவு இன்ன பிறவற்றுக்கு போனாலும் ஒரு இலட்ச ரூபாய் எனது பொறியியல் படிக்கும் மாணவரான‌ எனது மகனுக்கு முதலாமாண்டு கட்டணச் செலவுகளுக்கு சரி கட்டியது. என்னடா செய்வது எப்படி சமாளிக்கப் போகிறோம் என்றிருந்த நிலையில் இந்த நிகழ்வு நடந்தது. நடந்து கொண்டிருகிறது.அவரும் ஒரு கிறித்தவரே . குழந்தை யேசுவின் கருணை பெற்ற குழந்தை ஜான் என்பது அவரது பெயர்.

இப்படி என்னால் நிறைய சொல்லிக் கொண்டே போக முடியும். நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு...ஆனால் உங்களுக்கு இதையெல்லாம் படிக்க நேரமிருக்கிறதா என்ன? இருக்க வேண்டும். மனிதம் மேம்பட..

சேலம் சந்திப்பில் நடைமேடையில் என்னுடன் நடைப்பயிற்சி செய்யும் ஒரு முகமதிய நண்பர் ஒரு ஆதார் அட்டையை ஒரிஜினல்தான் எடுத்தார். அது 18 வயது அஜிமுதீன் கள்ளக்குறிச்சி என்ற விலாசத்தில் இருந்த ஒரு இளையவருடையது. என்னிடம் கொடுத்தார், இதை ஒரு தபால் பெட்டியில் போட்டு விட்டால் தபால் துறையே உரியவருக்கு அனுப்பி வைக்குமே என்று சொன்னேன். அட, இந்த தகவலே எனக்கு இப்போது உங்கள் மூலம்தான் தெரியும் என்றார். ஆம், எந்த அரசு ஆவணமாயிருந்தாலும் அதை எங்கே எவர் தொலைத்திருந்து சென்றிருந்தாலும், நீங்கள் கண்டெடுத்தால் உங்களால் அவர்களுக்கு சேர்க்க முடியவில்லை எனில் ஒரு தபால் பெட்டியில் போட்டு விடலாம். அதை அஞ்சலகம் உரியவரிடம் ஒப்படைக்க முயலும் பொறுப்பெற்கும்.

ஆனால் என்னிடம் நண்பர் கொடுத்த அந்த ஆதார் அட்டையை நானே உறையிலிட்டு அதில் உள்ள விலாசமெழுதி அஞ்சல் வில்லை (5 ரூபாய்க்கு இல்லாததால்) 6 ரூபாய்க்கு ஒட்டி எனது துணைவியாரிடம் அந்த வெயிலில் எமது ஊரில் உள்ள அஞ்சலகத்திற்கு சென்று அஞ்சல் செய்யச் சொல்லி அஞ்சல் செய்தோம். ஏன் எனில் சுமார் 2 கி.மீ வரை தொலைபேசிக்கட்டணம் (இணையக் கட்டணம்தான்...நெட்பில்) கட்டச் சென்று பார்க்கும்போது எந்த அஞ்சல் பெட்டியுமே கண்ணுக்கு தென்படவேயில்லை என்பதும் மறுபடியும் வந்து எமது ஊரிலேயே அஞ்சலிடக் காரணம்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment