Sunday, May 15, 2016

பாலை வனச் சோலையில் கொஞ்சம் கொஞ்சும் சாரல்கள்:கவிஞர் தணிகை

பாலை வனச் சோலையில் கொஞ்சம் கொஞ்சும் சாரல்கள்:கவிஞர் தணிகை




தகித்த வெயிலில் பச்சை செடி கொடி இலைகள் யாவும் தாகத்தில் கிடக்க ஒற்றை ரோஜா மட்டும் சிலிர்த்துக் கிடந்தது.காதலுக்கும் கவிதைக்கும் நிரந்தர ஓய்வு இல்லை.அவ்வப்போது பூக்கிறது நினைவைக் காய்க்கிறது. நடைமுறைக்கு சாத்தியமில்லாதபோதும். நதி ஜீவ நதியாய் வலைந்து வளைந்து வளர்ந்து ஓடியபடியே....

எங்கும் பச்சையாய் இருக்க இளஞ்சிவப்பு நிறம் தனித்துத் தெரிந்தது.விழிகள் சாளரங்கள், இமைகள் கதவுகள். நெஞ்சில் ஓடும் நினைவு மின்சாரம் இருவரையும் உள்ளுணர்வால் இருவரையும் பிணைக்க சுமார் ஒரு மணி நேரம் 60 மணித் துளிகள் 360 நொடிப் பொழுது கண நேரத்தில் இருவரும் சேராமலே சேர்ந்திருந்தார்கள்.

பார்க்காமலே பார்த்து வந்தார்கள். ஓர விழிகளில் பார்த்த அவள் நேர் பார்வைக்கு வருமுன்னே விலக்கிக் கொண்டார் அவர் இது எந்த விதியிலும் சேராத விதையாய் இருக்கிறதே என. பக்கத்தில் கனமான அவள் தாய் பாதுகாப்பாய் அமர்ந்திருந்தார். பல அடிகள் இடைவெளி இருந்தபோதும் இருவருமே மிக அருகே அந்தக் கணங்களில் வாழ்ந்து வந்தனர். அவளது சிரிப்பு, புருவ வலை, முகம் சாயும் கவிதை, இதழ்கள் யாவும் மனப்பாடமாகியிருந்தது இவருக்குள்.மனிதப் பதர்கள் சுற்றி இருக்க ஒரு செடி முளை விட்டிருந்தது.



எண்ண வலிமை என்னவோ செய்ய அடிக்கடி பார்த்துக் கொண்டார்கள். ஆனால் விழிகள் மூலம் பார்வையை கோர்த்துக் கொள்ளாமல் எச்சரிக்கையாக இருந்தார்கள். அங்கே அந்த இருவருக்குள்ளும் ஒரு பொதுப்புலம் ஏற்பட்டிருதது எந்த வித ஒற்றுமையும் இருவருக்கும் இல்லாமலே...

அழகு என்றால் அப்படி ஒரு அழகு. முகம் தானே மனத்தின் முன் வாசல் ...சூரியானாக சுடர் விட்டபடியும் அதே நேரத்தில் ஒரு குளிர்ச்சியுடனும்...இப்படி எல்லாம் பார்க்கக் கூடாதுதான் நெறி இல்லைதான். ஆனாலும் முகமும், விழிகளும் பார்க்க மறுபடியும் பார்க்கத் தோன்றுகிறது .வாய்ப்பு தூண்டுகிறது.





(இதெல்லாம் கேவலமானது என மறைகள் சொல்லும், தம்பியும் சொல்வார், ஆனால் முறைகள் வேறாக சொல்கிறதே. கண்கள் தவறு செய்தால் கண்களைப் பிடுங்க வேண்டும் ஆனால் ஒரு அழகிய பூவை பார்த்து இரசிப்பதில் முறைகேடான தவறுகள் ஏதும் நேர்ந்து எதுவும் முறிந்து விடப் போவதில்லைதான்..இதை எல்லாம் எவருக்கும் புரியவைக்கவோ உணர்த்தவோ வேண்டிய அவசியமே இல்லை.) ஆனால் இதெல்லாம் தான் எழுத்து, இலக்கியம். கவிதை, காவியம். இயற்கை என்றால் அது சரி. மனிதர் என்று வந்து விட்டால் அது தவறு. உறவுக்கு ஊறு விளையாமல் விளைக்காமல் விட்டு விடுவதும் கொச்சைப் படுத்தப் பட வேண்டிய மனித எச்சம்தானா?

ரேபானுக்குள்ளிருந்து அவர் விழிகள் அடிக்கடி அங்கு சென்றதை அருகே நின்று கொண்டிருந்த ஓரிருவர் கவனித்ததை அறிந்த அவர் நாகரீகமாக நடந்து கொள்வதாக பார்வையை விலக்கிக் கொள்வதாக பாசாங்கு செய்து நடித்துக் கொண்டிருந்தார்.


ரஜினிகாந்த்,பார்த்திபன் போன்ற கருத்த நடிகர்களை சிவந்த நடிகைகள் நாயகர்களாக ஏற்றுக் கொண்டது இடைக்காலத்தில்  அதிகமாக அழகிய பெண்கள் நிறமில்லாத ஆண்களை எல்லாம் கூட ஏற்றுக்கொண்டதை சினிமா ஒரு துருப்புச் சீட்டாக்கிக் கொண்டது.சமுதாயத்திலும் நடைமுறையிலும் அப்படிப்பட்ட மாறுதல் நிறைய நேர்ந்து விட்டதாக பேசிக் கொள்கிறார்கள். ஆனால் அது போல இது எதற்கும் உட்பட்டதல்ல.

இந்தியா மேலை நாடுகள் வரிசையில் இனி பருவம், வயது தாண்டியும் காதல் செய்ய ஆரம்பித்துவிட்டது. (காதல் என்ற வார்த்தை சரிதானா? சரியான பொருள் கொண்டதா? இதற்கு என்ன பெயர் தமிழில் உள்ளது?)இவருக்கு இடம் கிடைத்து 15 நிமிடங்கள் ஆகி  வாகனத்திலிருந்து இறங்கி இருப்பிடம் வருமுன் கடைசி இருக்கைக்கும் முன் இருக்கையில் ஜன்னலோரம் அமர்ந்திருந்த‌ அவளை முன் வாசல் வழி இறங்கி பின் வருகையில் ஒரு சிறு பொறி பார்வையில் பார்க்க அவளும் பார்த்தபடியே இருந்து விடைபெற்றுக் கொண்டனர். இனி வாழ்வில் அவர்கள் சந்தித்துக் கொள்ளப் போவதே இல்லை. என்றாலும் நினைத்துக் கொள்வார்கள்.உள்ளுணர்வுக்கு வலிமை உண்டு.




இது வேறு:
எளிமையாகவே இருந்தாள். கைகள் முழங்கை வரை மேல் சட்டை (ஜாக்கெட்) முதுகில் ஒரு சிறு இடம் கூட தெரியாமல் முழுதாக மறைந்திருந்தது ஆண்கள் சட்டை போல...அனேகமாக தமது உடல் முகம் தவிர வேறு ஏதும் தெரியாதபடி அவள் ஆடை அணிந்திருந்ததே அபூர்வமாக இப்படியும் இந்தக் காலத்தில் இருக்கிறார்களா என சிறப்புக் கவனம் அவர் மேல் கொள்ள வழி வகுத்திருந்தது.




 இது வேறு:
எல்லாமே உயர் நிலையில் உள்ள பெண்கள் கூட்டம். அவள் மட்டும் சிகையலங்காரத்தை தொழில் முறைக்கேற்ப எடுத்து வளைத்து இறுக குடுமியாக்கி தினம் வருவதும் அவளுக்கு ஒரு சிறப்புதான்... தனித்துவம் எங்கும் சிறக்கிறது....பொதுவாக இது போன்ற குடுமிகள் வயதானவர்கள் தான் போட்டுக் கொள்வார்கள். என்றாலும் இந்த தனித்துவம் இவளுக்கு மெருகூட்டி இவளது அழகை மேலும் கூட்டி இருந்தது.

பி.கு.: தேர்தல், வாக்குப் பதிவு, பாரதீய ஸ்டேட் வங்கியின் 570 கோடி, மறுத் தேர்தல் அரவக் குறிச்சி தேர்தல் 23க்கு தள்ளி வைப்பு,கடும் வெயில், மேட்டூர் நீர் அளவு 48 அடி எல்லாமே பிரச்சனையாகிவிட அவை எல்லாம் நீக்கி கொஞ்சம் பாதம் பதித்து இருக்கிறோம். மனோமயக்கத்திற்காக, வாழ்வின் இலயத்திற்காக சில நேரங்களில் சந்தனத்தை தொட்ட வாசம் அதை வைத்து விட்ட போதும் கைகளில் எஞ்சியிருப்பது போல, வாசனைத்திரவியங்கள், மகரந்தக்கேசரங்கள், சில பூக்கள், காய்கள்,கனிகளை வைத்துவிட்ட பிறகும் அதன் வாசம் கொஞ்ச நேரம் நம் கைகளில் ஒட்டி இருப்பது போல சற்று நேரம் நம்மை விட்டு நீங்காதிருப்பது போல இந்த மணத்தை (ஃபிராக்ரன்ஸ் Fragrance) உங்கள் மேலும் தெளித்து விட இந்த வடிகாலான எழுத்து)

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


No comments:

Post a Comment