Tuesday, November 17, 2020

உலகின் மிக அழகான கல்லறை தாஜ்மஹால் ஜீவன் இல்லாத போது: கவிஞர் தணிகை

 உலகின் மிக அழகான கல்லறை தாஜ்மஹால்

ஜீவன் இல்லாத போது: கவிஞர் தணிகை




உலகின் அதிசயங்களுள் ஒன்றான பிரமிட் என்பது ஒரு கல்லறைதானே...உடலை உள்ளே வைத்து கட்டிய கட்டடக் கலை எகிப்து உலகுக்கு அளித்த அதிசயம். அங்கே தாம் நேசித்த நபர்கள் இறந்த பின்னே அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் முதற்கொண்டு அவருடைய உடலையும் வைத்து மூடி பிரமிட் முக்கோணத்தை நிற்க வைத்து மூடி வைத்து விட்டனர். ஆனால் அவர்கள் நம்பினார்கள் அந்த உயிர் இன்னும் அங்கே வாழும் என்று...


முதுமக்கள் தாழி என்ற ஒரு புதையலை நமது தமிழ் மண்ணிலேயே பல இடங்களில் அகழ்ந்து கண்டு எடுத்துள்ளனர். அந்த முது மக்கள் தாழியில் இறந்த‌ உடலை மடித்து வைத்து இருந்த நிரூபணங்கள் எல்லாம் நிறைய இருக்கிறது.



ஆதி சங்கரர் என்னதான் துறவு என்ற போதும் தனது தாயின் இறப்பின் போது தனது பூர்விக இடத்துக்கு வந்திருந்து அங்கிருந்த வழக்கப் படி தாயின் உடலை சில பாகங்களாக வெட்டி அறுத்து புதைத்து விட்டு சென்ற வரலாறு உண்டு.


இப்படி உயிர் போன உடலை பல வழிகளிலும் பல வகைகளிலும் மக்கள் சிதைவுற வைத்த காலம் தொடர்ந்த படியே இருக்கிறது.



ஸ்கை பரியல் என்ற ஒரு திபேத்திய  இன மக்கள் இறந்த உடலை தாமே தமது உடலோடு அல்லது தலையோடு கட்டி எடுத்துக் கொண்டு போய் அங்கே அதற்காகவே காத்திருக்கும் கழுகுகளுக்கு (நாம் அதைப் பிணந்தின்னிக் கழுகுகள் என்றும் சொல்வோம்) இரையாக்குகிறார்கள். மேலும் அதற்கு வசதியாக அந்த உடலை பல இடங்களிலும் கிழித்து எலும்புடன் சதையை களைந்து கழுகுகள் கொத்தி எடுக்க  ஏதுவாக்கி வைத்து விட்டு வருவதுடன் எலும்புகளைக் கூட உடைத்து பொடி செய்து போட்டு விடுவார்கள் அதுவும் பிற உயிர்களின் உணவாகும் என்ற செய்திகள் இருக்கின்றன.


கங்கையில் காசிக்குப் போய் இறுதி மூச்சு விட்டாரின் உடலை எரியூட்டுவதும், அப்படியே கங்கையில் எரிந்து விடுவதும் உண்டு. அவை மீனுக்கு உணவாகும் அப்படித்தானே?


 ஹிந்துக்கள் அந்த  உடலை ஒன்று அவர்கள் வழக்கப் படி புதைத்து விடுகிறார்கள். அல்லது எரித்து விடுகிறார்கள் அல்லது பிரபலமான தலைவர் என்றால் பெட்டியில் வைத்து புதைத்து நினைவிடம் செய்து விடுகிறார்கள்...  எரிப்பது புதைப்பது எல்லாம் அவரவர் சாதி, மதம் , அவரவர் இன வழக்கப் படி சடங்கு சாங்கியம், சம்பிரதாயம் எல்லாம் செய்து முடித்து 8 ஆம் நாள், 11 ஆம் நாள் சாஸ்திரம் 30 நாள் அமாவாசை, திதி ஆண்டு நினைவு, இப்படி தொடர்ந்து கொண்டு போகிறார்கள்...



அப்படி எரித்த சாம்பலை நதியில் சென்று கரைத்து விடுவதும் உண்டு. அப்படி கரைத்த அஸ்தி நேருவுடையது மிகவும் பிரபலமானது.


கிறித்தவ மதம் சார்ந்து அவர்கள் பிரார்த்தனை முடித்து வாசனை திரவியங்கள் எல்லாம் தெளித்து சவப்பெட்டியில் வைத்து ஆணி அடித்து மூடி கல்லறையில் வைத்து அதன் மேல் சிலுவை எல்லாம் வைத்து பூ வைத்து வணங்கி விடுகிறார்கள். அது போன்ற சிலுவைகள் பெருகப் பெருக எங்கே வைத்துக் கொள்வது என்று இடம் இல்லாத போது மறுபடியும் அந்த கல்லறைகளை இடித்து அந்த இடத்தை எல்லாம் மீளுருவாக்கம் செய்து மறுபடியும் அதே பணியைத் தொடர்கிறார்கள்...


முகமதியத்திலும் புதைப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர் என்பதை அறிய முடிகிறது



பழங்காலத்தில் பாறை இடுக்குகளில் குகைகளில் எல்லாம் கூட வைத்துச் சென்றிருக்கிறார்கள் என்றும் மிருகங்களுக்கு பறவைகளுக்கு உணவாக அளித்து விடுவார்கள் என்றும் பல்வேறுபட்ட செய்திகள் உண்டு.

வேறு விசித்திரமான இது போன்ற செய்திகள் ஏதும் இருந்தால் என்னுடன் நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம்...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


PS:காகம் சர்வ பட்சிணி: இறந்து கிடக்கும் ஓணான், எலி, பெருச்சாளி, ஏன் இறந்து கிடக்கும் அனைத்தையுமே ஒரு கை இல்லை ஒரு வாய் பார்ப்பதும் அதைக் கொத்தி கொத்தி உண்பதையும் பார்த்ததால் இந்தப் பதிவு...




2 comments: