Wednesday, August 9, 2017

எழுதப் படிக்கத் தெரியாது, கையெழுத்தும் போடத் தெரியாத ஒரு தாய்: கவிஞர் தணிகை.

எழுதப் படிக்கத் தெரியாது, கையெழுத்தும் போடத் தெரியாத ஒரு தாய்: கவிஞர் தணிகை.

Image result for mother 11th year completed anniversary



அவருக்கு பள்ளிப் படிப்பு அறவே இல்லை.ஆனால் மணி பார்க்கத் தெரியும், காசு பணம் கணக்கிட்டு செலவளிக்கத் தெரியும், திட்டமிடத் தெரியும், சீட்டு போட்டு காசை உபரி பண்ணத் தெரியும், தாம் பெற்ற மக்களுக்கு நல்ல வாழ்க்கை அளிக்க என்னவெல்லாம் செய்யத் தெரியுமோ அதெல்லாம் செய்யத் தெரியும் என் தாய் தெய்வா(னை) போல இந்த 130 கோடி பேரில் எவ்வளவோ இருக்கலாம் என்றாலும் அவர்கள் எல்லாம் என் தாய் போல வருமா?

தெய்வா பதிப்பகம், ஆங்கிலத்தில் தெய்வா பப்ளிஷர்ஸ், தெய்வா மக்கள் நல ஆலோசனை மையம், தெய்வா தியானப் பயிற்சி மையம்

என்று பல வகையிலும் தாய்க்கு திருப்பிப் பேர் வர செய்தது= எல்லாம் அவள் சோறூட்டியதற்கே போதாமல் போய்விட...பாலூட்டியதற்கு, ஈ, எறும்பு கடிக்காமல் ஒரு ஆபத்தையும் அணுக விடாமல் காத்ததற்கு எப்படித்தான் நன்றி சொல்ல முடியும்?எப்படித்தான் ஈடு கட்ட முடியும்?

போர்க்குணம், நிறைய முரண்பாடுகள், வார்த்தை மோதல்கள் எல்லாம் நான் மிக வளர்ந்து திருமணமாகி மகனைப் பெற்று குடும்பமான பிறகு...என்றாலும் அந்த மறைவு எனக்கு 2 ஆண்டுகள் பேச சத்தமில்லாமல் செய்திருந்தது

இதே போல அவிட்டம் நட்சத்திரம் இதே போல  பௌர்ணமி நாள் இதே போல ஒரு செவ்வாய்க் கிழமை இரவு சில கோதுமை மாவால் செய்த தோசைகளை சாப்பிட்டு விட்டு , இதே போல சேலம், தாரமங்கலம் மாரியம்மன் திருவிழாக்கள் இருக்க, தாரமங்கலத்தில் இருந்து மாரியம்மன் திருவிழா சிறப்பு உணவை மூத்த சகோதரியின் வீட்டிலிருந்து அனுப்பி வைக்க வேண்டாம் என்று சொல்லி விடு எனச் சொன்னவர், இரவு சுமார் 9 மணிக்கருகே முடியாமல் ஏதோ சத்தம் எழுப்பினார்...

சரியாக 11 ஆண்டுகள் நிறைவு. 2006 ல் நிகழ்ந்த நிகழ்வு நேற்று போல எனக்குள்  பிரிக்க முடியாமல் நிழலாடியபடியே இருக்கிறது.

வாகன வசதி 108 ஆம்புலன்ஸ் என்ற அதிக வசதிகள் இல்லா நேரம். எல்லா வாகனங்களும் திருவண்ணாமலை கிரிவல சிறப்பு பௌர்ணமி நிகழ்வுக்கு சென்றுவிட வாகனத்துக்கு அலைந்து அதை விட மனம் மிக மெலிந்து ஒரு வழியாக ஏற்கெனவே 2 மருத்துவர்களைப் பார்த்த பின்,8 கி.மீ தள்ளிய மருத்துவமனையில் ஒப்படைத்தேன். 2 4 மணி நேரம் காலக் கெடு வைத்தார்கள்

12 மணி நேரம் கூட ஆகி முடிவதற்குள் உயிரும் உடலும் இரு வேறாக பிரிந்து விட்டன.

எனக்கு நேர்ந்திருந்தாலும் கூட அந்த இறப்பு என்னை அந்தளவு பாதித்திருக்காது...ஆனால் ஒரு இறப்பு என்னை அதிகம் பாதித்தது அதுதான்.

குழந்தையே பிறக்காது என்று முடிவு கட்டி வேறு திருமணம் செய்து கொள் என்று நிர்பந்தத்தை தந்தை,உற்றார் உறவுகள் செய்தும் கேளாத தந்தை தமது வருவாயை அப்படியே தம் துணைவியிடம் கொண்டு வந்து தந்து விட அதிலிருந்து உருவானது 10 பேர் அடங்கிய குடும்பம்.அந்தக் குடும்பத்தின் தலைவர் மௌனமான பொறுப்பிலும், அந்தக் குடும்பத்தின் தாய் எனது தாய்  மிகையான பொறுப்பிலும் ஒரு நல்ல குடும்பத்தை உருவாக்கி விட்டார்கள். ஒரு குழந்தை ஏற்கெனவே இறந்ததாம். எனவே சுமார் 9 குழந்தைகளுக்கு மலடி என்றும் பிள்ளைப்பேறு இல்லாதவள் என்றும் பேர் பெற்ற எனது தாயான உண்மைக் கதை என் தாயுடையது.

தந்தை இறந்த 1986க்கும் பின் எனது இல்லை அவளது இல்லை இல்லை நாங்கள் எங்கள் பராமரிப்புக்குள் ஒருவருக்குள் ஒருவராக அடைக்கலமாகி காலத்தை கம்பீரமாக நடத்தி முடித்து விட்டோம்.

இன்று மிகப் பொருத்தமான நாளாக இந்த நாள்... மாரியம்மன் பண்டிகை என மாவட்ட விடுமுறை. எங்கள் கல்லூரிக்கு 1 மணி வரை வேலை நாள் .
எண்ணியபடி 2 மாலைகளுடன் வந்தேன் , தாய் தந்தையருக்கு இட்டேன் மணி 3 மாலைக்குள் துணைவி தயாரித்த சிறு உணவை காலை முதலே கேட்டுக் கொண்டிருந்த காகத்திற்கு வைத்தேன். ஆக முடிந்துவிட்டது. படத்துக்கு முன்பாக ஒரு அகல் விளக்கு, ஒரு இராஜ மின் விளக்கு, இரண்டு பத்திகள், எனது தாயின் நினைவு நாள்....

ஆடி ஓடி முடிந்த ஒரு வாழ்க்கை...எங்களுள் ஆடி ஓடிக்கொண்டிருக்க‌

நான் அவளின் அவரின் அவர்களின் ஒரு விளக்காக எரிந்து கொண்டிருக்கிறேன்
அவர்களுக்கு அஞ்சலி செலுத்திக் கொண்டு...

மா மனிதக் கடலில் ஒரு அலையின் ஒரு துளியாய் நானும் எந்தன் மனிதமும்.... நானும் எந்தன் மணியமும், நானும் எந்தன் துணைவியும்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

2 comments: