Wednesday, August 16, 2017

இலட்சுமணன் என்ற எனது முற்காலத்திய அமைப்பாளர்: கவிஞர் தணிகை

இலட்சுமணன் என்ற எனது முற்காலத்திய அமைப்பாளர்: கவிஞர் தணிகை

Related image


இருந்தால் அவருக்கு இப்போது 40 வயதுக்குள்தான் இருக்கும். காலம் அவரை மறைத்து விட்டது. நானும் மறந்து இருந்து விடக்கூடாதே என்பதற்கான பதிவு மட்டுமல்ல...மோடி அரசு, தமிழக அரசின் நிலைகளால் எவருக்குமே ஈவு இரக்கம் கூட பார்க்காத வாழ்வு வாழ பொருளாதார நிலை அனைவரையும் பிணைத்திருப்பது எண்ணி அழுவதா சிரிப்பதா?

பேருந்து நிலையங்களிலும், இரயில் நிலையத்திலும் கை ஏந்துவாரிடம் இப்போது கவனித்துப் பார்த்தால் 10 பேரில் ஒருவர் கூட காசு போடுவதில்லை. அவ்வளவுதான் இந்த நடுத்தர வர்க்கத்தின் பொருளாதர நிலை.

அந்த 1 ரூபாய், 2 ரூபாய் சேர்ந்தால் அதுவும் ஒரு செலவை சந்திக்க உதவுமே என என் போன்றோர் கூட இருக்கும் நிலை இன்றைய பொருளாதாரம் தந்த பாடத்தில்

நிலை இப்படி எல்லாம் சென்று கொண்டிருக்க, யார் இந்த இலட்சுமணன் போன்ற சாதாரண மனிதரின் மரணத்தை, இறப்பை எல்லாம் கவனித்து இருக்கப் போகிறார்கள்?

அவன் அப்போதுதான் மேனிலைப்பள்ளி படித்து முடித்து விட்டு வந்திருந்தான். கருகருவென ஒரே நிறம். கண்கள் மட்டும் பள பளக்கும்.
சாதாரண உடைதான் அணிவான் அதிகம் லுங்கி வெள்ளை சட்டையில் பார்த்த  நினைவு.

1986ல் இருந்து நான் கல்ராயன் மலைக்கு சென்று கொண்டிருந்தேன். இவன் நாகலூர் அல்ல அடியனூர் என்று நினைக்கிறேன். என்னிடம் அமைப்பாளராக  பணி புரிய வந்து சேர்ந்தான். அப்போது அவனுக்கு மாத சம்பளம் ரூபாய் 300தான்

எனக்கு கிராமங்களுக்கு கூட்டிச் செல்லும் உதவியாளராக, ஏன் எனது ஒயர் கூடையை பேருந்திலிருந்து நான் இறங்கியதும் பெற்று சுமந்து வரும் எனது இலட்சுமணனாகவும், நல்ல பொறுமை சாலியாக, நல்ல அமைதியான சுபாவமுடையவனாகவும் இருந்தான்.

இரவு பகலாக எனது மலை வாழ் மக்கள் மேம்பாட்டுத் திட்டத்துக்கான பணிகளிலும் முகாம் பணிகளிலும் உறுதுணையாக இருந்தான். ஒரு நாள் பார்க்கும்போது கடுக்காயை பிடுங்கிக் கொண்டு கீழ் வளவில் ஒரு பெண்ணும் இவனும் விளையாடிக் கொண்டிருந்தனர் எல்லா கடுக்காய்களையும் கீழே சிந்தி சிதறியபடி இருந்ததை இருவரும் கட்டுப்படுத்த முடியாமல்...அதைப் பார்த்த நான் திருமண ஆசை வந்து விட்டால் திருமணம் செய்து கொள் என அறிவுறுத்தினேன்.

கொஞ்ச காலம் மாமனார் வீட்டில் அடிமை வேலை செய்து ஆம், ஆண்கள் பெண்கள் வீட்டில் எல்லா வேலைகளையும் அப்படி செய்து விட்டுத்தான் அவர்கள் பெண்ணை மணப்பது வழக்கம். அப்படி மணந்து கொண்டு வாழ்ந்தான் இடையில் கொஞ்ச நாள் பணிக்கு வராமல் வேறு ஏதோ பணி செய்ய முயற்சி செய்து விவசாயம் எல்லாம் செய்து பார்த்து விட்டு மறுபடியும் அவை ஒத்து வராமல் என்னிடமே பணிக்கு சேர்ந்தான்.

அதன் பிறகு நான் அவர்களை எல்லாம் பிரிந்து 20 ஆண்டுக்கும் மேல் ஆகிவிட்டது. திடீரென அவன் இடத்தில் இருந்து வந்த மற்றொரு உதவியாளர் அவன் சிறு நீரகப் பிரச்சனையால் இறந்து விட்டான் அவன் இறந்து 2 மாதம் ஆகிறது என்றார்.

Related image

என்ன செய்ய முடிகிறது? இந்த மனிதர்களால்? மற்ற மனிதர்களுக்கு...
எதுவுமே செய்ய முடிவதில்லை என்பதுதான் உண்மை...

Related image




அவனுடன் நான் கைகளை கோர்த்தபடி முடவன் கோயில் பிரிவிலிருந்து சேத்தூர் செல்கிறேன் இடையே ஒரு சிறு நதியின் குறுக்கீடு. அந்த நதியின் பேர் எனக்கு இப்போது முழுதும் நினைவில்லை, சரபங்கா நதி என இப்போது சொல்லிக் கொள்ளலாமே, இறந்த பின் இவனுக்கு எப்படி பேர் இல்லையோ அது போல எல்லா நதிகளிலுமே நீர் தானே இருக்கிறது அது வெள்ளமாக அப்போது ஆர்ப்பரித்துக் கொண்டு ஓடியபடி இருந்தது. எந்த துணிச்சலில் நீச்சல் தெரியாத நான் சென்றேன் என்பதும் இப்போது நினைத்தாலும் விளங்கவில்லை...அன்று எங்களிருவரையும் அடித்துச் சென்றிருந்தால் நான் ஏது, இன்று அவனை கால வெள்ளம் அடித்துச் சென்று இருந்தாலும் நான் இங்கு ஒரு ஏதுவாக ஏனமாக இருக்கிறபடியால் இந்தப் பதிவையாவது எழுதிக் கொண்டிருக்க முடிகிறது...

Related image




எத்தனை முறை நள்ளிரவிலும் நடு ஜாமத்திலும் காடு மேடு மலை எல்லாம் சுற்றி எத்தனை பாம்பு எத்தனை மிருகங்களை கடந்தும் பயணங்களை மேற்கொண்டோம் அப்போதெல்லாம் வராத மரணம் இப்போது பார்த்து பல்லிளித்து விட்டது...அதுதான் காலம்... அதுதான் நேரம்...அதுதான் வாழ்க்கை...

Related image


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Related image

2 comments: