Friday, December 26, 2025

FACEBOOK:முக நூலில் ஒரு நல்ல செய்தி கண்டேன்: கவிஞர் தணிகை

 அனைத்துலக விண்வெளி நிலையத்தில் (International Space Station) 178 நாட்கள் செலவிட்ட பிறகு, விண்வெளி வீரர் ரான் காரன் பூமிக்குத் திரும்பினார். அவர் கொண்டு வந்தது விண்வெளி உபகரணங்கள் அல்லது பணி தரவுகளைவிட மிகவும் கனமான ஒன்று — மனிதகுலம் பற்றிய மாற்றப்பட்ட புரிதல்.





சுற்றுப்பாதையிலிருந்து, பூமி நாடுகள், எல்லைகள் அல்லது போட்டி நலன்களின் தொகுப்பாகத் தோன்றவில்லை. அது இருளில் தொங்கும் ஒரே ஒரு பிரகாசமான நீலக்கோளமாகத் தெரிகிறது. கண்டங்களைப் பிரிக்கும் எந்தக் கோடுகளும் இல்லை. எந்தக் கொடிகளும் பிரதேசத்தைக் குறிக்கவில்லை. பூமியின் மேற்பரப்பிலிருந்து 250 மைல்கள் உயரத்தில், ஒவ்வொரு மனித மோதலும் திடீரென சிறிதாகத் தோன்றுகிறது — மேலும் ஒவ்வொரு மனித இணைப்பும் தவிர்க்க முடியாததாகத் தெரிகிறது.
காரன் மின்னல் புயல்கள் முழு கண்டங்களிலும் வெடிப்பதைப் பார்த்தார், அரோராக்கள் துருவங்களில் வாழும் திரைச்சீலைகளைப் போல அலைவீசுவதைப் பார்த்தார், நகர விளக்குகள் பூமியின் இரவுப் பக்கத்தில் மென்மையாகப் பிரகாசிப்பதைப் பார்த்தார். அவரை அதிகம் தாக்கியது பூமியின் சக்தி அல்ல — அது அதன் பலவீனம். உயிர் அனைத்தையும் பாதுகாக்கும் வளிமண்டலம் காகிதம் போன்ற மெல்லிய நீல வளையமாகத் தெரிந்தது, கிட்டத்தட்ட தெரியாதது, ஆனால் சுவாசிக்கும், வளரும், உயிர் பிழைக்கும் அனைத்துக்கும் பொறுப்பானது.
அந்தக் காட்சி விண்வெளியிலிருந்து பூமியைப் பார்க்கும் பலரால் அறிவிக்கப்பட்ட “மேலோட்ட விளைவு” (overview effect) எனப்படும் ஆழமான அறிவாற்றல் மாற்றத்தைத் தூண்டியது. அது மனிதகுலம் ஒரே ஒரு மூடிய அமைப்பைப் பகிர்ந்து கொள்கிறது என்பதன் திடீர் உணர்தல். காப்புப் பிரதி இல்லை. தப்பிக்கும் வழி இல்லை. இரண்டாவது வீடு இல்லை.
காரன் மனிதகுலத்தின் முன்னுரிமைகளை கேள்விக்குள்ளாக்கத் தொடங்கினார். பூமியில், பொருளாதார வளர்ச்சி அடிக்கடி இறுதி இலக்காகக் கருதப்படுகிறது. விண்வெளியிலிருந்து, அந்த அடுக்குமுறை சரிந்துவிடுகிறது.
அவர் வாதிடுவது: சரியான வரிசை புவிக்கிரகம் முதலில், சமூகம் இரண்டாவதாக, பொருளாதாரம் கடைசியாக — ஏனெனில் ஆரோக்கியமான கிரகம் இல்லாமல், சமூகமோ பொருளாதாரமோ இருக்க முடியாது.
அவர் பூமியை ஒரு விண்கலத்துடன் அடிக்கடி ஒப்பிடுகிறார். பில்லியன் கணக்கான பயணிகளைக் கொண்ட ஒரு கப்பல், அனைவரும் ஒரே உயிர் ஆதரவு அமைப்புகளைச் சார்ந்திருப்பவர்கள். ஆனால் பலர் பயணிகளாகவே நடந்துகொள்கிறார்கள், பராமரிப்பாளர்களாக அல்ல, விஷயங்கள் இயங்குவதற்கு வேறு யாரோ பொறுப்பு என்று கருதுகிறார்கள்.
சுற்றுப்பாதையிலிருந்து, மாசுபாட்டுக்கு தேசியம் இல்லை. காலநிலை அமைப்புகள் எல்லைகளைப் புறக்கணிக்கின்றன. ஒரு பகுதியில் ஏற்படும் சுற்றுச்சூழல் சேதம் முழு உலகிலும் பரவுகிறது. நாம் பூமியில் இவ்வளவு உறுதியாகப் பாதுகாக்கும் பிரிவுகள் மேலிருந்து வெறுமனே இல்லை.
காரனின் செய்தி இலட்சியவாதமானது அல்ல. அது நடைமுறையானது. மனிதகுலம் பூமியை வரம்பற்ற வளமாகவே தொடர்ந்து நடத்தினால், பகிரப்பட்ட அமைப்பாக அல்லாமல், விளைவுகள் உலகளாவியதாக இருக்கும்.
விண்வெளியிலிருந்து பூமியைப் பார்ப்பது அவரை சிறிதாக உணரச் செய்யவில்லை. அது அவரை பொறுப்புள்ளவராக உணரச் செய்தது.
ஏனெனில் நாம் அனைவரும் பிரபஞ்சத்தில் ஒரே பலவீனமான இயற்கை விண்கலத்தில் (பூமி) பயணிப்பதை நீங்கள் உண்மையாகப் புரிந்துகொண்டால், “நாம் எதிராக அவர்கள்” என்ற கருத்து அமைதியாக மறைந்துவிடும் — அதற்குப் பதிலாக ஒரே ஒரு தவிர்க்க முடியாத உண்மை வரும்:
"நாம்" மட்டுமே உள்ளோம்".
பிகு: என்னைப்பொருத்தவரை எலான் மஸ்க், மார்க், ஜெப் பெசோஸ் போன்றவர்களால் இந்த உலகம் சிதைக்கப்படுமேயொழிய வளமடையாது. பல ஆண்டுகளாகச் சொல்லிவருகிறேன்.. பொறுப்பற்ற இயற்கையின் அருமையுணராத அறிவியல் முன்னேற்றங்கள் மனிதகுலத்தை ஒரு முட்டுச்சந்தில் கொண்டுபோய்விட்டு விடும் என்று. - ஓசை செல்லா


மறுபடியும் பூக்கும் வரை கவிஞர் தணிகை

நன்றி: ஓசை செல்லா


Tuesday, December 23, 2025

பாரதின்னா அவன் ஒருவன் தான்: கவிஞர் தணிகை

 பாரதின்னா அவன் ஒருவன் தான்: கவிஞர் தணிகை





மகாக் கவி பாரதியைப் பற்றித் தான் சொல்கிறேன். 

அதிகாலை 3.30 மணி இருக்கும் சிறு நீர் கழிக்க எழுந்தேன். கடும் பனிப் பொழிவு. நல்ல குளிர். (ஆமாம் நல்ல குளிர், கெட்ட குளிர்னு இருக்கா?) உறக்கம் தொடரவில்லை. கைப்பேசிப் பெட்டியைத் திறந்தால்: எனது அன்பின் விழுது ஒன்று தமது குழந்தைகளின் மழலை காணொளிக் காட்சி இரண்டை வெளியிட்டிருந்தது. அதில் ஒன்றும் பெரியது இல்லை எல்லா வீடுகளிலும் இப்போது அதைச் செய்கிறார்கள்தானே. அதைக் கேட்டு விட்டுயாழ் இனிது குழல் இனிது என்ப தம் மக்கள் மழலைச் சொல் கேளாதார் என்ற குறளைச் சொன்னேன் பதிலாக. இந்த விழுதுதான் ஒரு போது சொன்னது திருமணமே வேண்டாம் என்று...அது வேறு கதை.


அதன் பின் தாம் நெறி ஏறியது அது என்னவெனில்...


ஆனால் இது வேறுபாட்டுடன் புதுமையாக : நீங்கள் சொல்லிக் கொடுத்ததுதான், அதை இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் எங்கள் வீட்டின் அனைவரும் சொல்லி விட்டே படுக்கிறோம் என்று ஒரு செய்தியைப் போட்டதும் எனக்கு பிறவிப் பயனை அடைந்தாற் போலாகி விட்டது. அதன் பிறகும் கூட உறக்கம் வருமா என்ன?


எப்போதெல்லாம் சோர்ந்து போய் இருக்கிறேனோ அப்போதெல்லாம் இது போன்ற தேன் துளிர்க்கும் சொட்டுகள் எங்கிருந்தாவது எப்படியாவது வந்து சேர்ந்து கொள்கின்றன.


அது என்ன தெரியுமா? அதை நான் சொல்லிக் கொடுக்கவில்லை....பாரதி நமக்காக விட்டுச் சென்றது:


எண்ணிய முடிதல் வேண்டும், 

நல்லவே யெண்ணல்  வேண்டும்;

திண்ணிய நெஞ்சம் வேண்டும்,

தெளிந்த நல் லறிவு வேண்டும்;

பண்ணிய பாவமெல்லாம் 

பரிதி முன் பனியே போல,

நண்ணிய நின்மு னிங்கு 

நசித்திட வேண்டும்  அன்னாய்! 


முடிந்தால் நமது பிரார்த்தனையில் இதையும் இணைத்துக் கொள்ளலாமே...நல்லதை நாடு கேட்கட்டும்.


எத்தனையோ பேர் பாரதி என்று வைத்திருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம், பாரதின்னா அவன் ஒருத்தன் தான்.

எத்தனையோ பேர் காந்தின்னு இருக்கலாம் , பெயர் இல்லாமலும் இருக்கலாம் ஆனால் காந்தின்னா அவன் ஒருத்தன் தான்.


அனைவர்க்கும் எமது விழாக்கால வாழ்த்துகளும் வணக்கங்களும் நன்றிகளும்:


மறுபடியும் பூக்கும் வரை


கவிஞர் தணிகை.


(பி.கு: எனது வித்து ஒன்று நிறைய எழுதுங்கள் அப்பா என்றது...எனக்கு நினைவுக்கு வர இனி அவ்வப்போது எதையாவது எழுத முனைவதில் எனக்குப் பெருமகிழ்வு.)

Monday, December 22, 2025

RTI தகவல் பெறும் உரிமை:ஆசிரியர் ஹக்கிம்: கவிஞர் தணிகை

 தகவல் பெறும் உரிமை:ஆசிரியர் ஹக்கிம்: கவிஞர் தணிகை



தற்போதுதான் இந்தியப் பிரதமரின் வீடு எவ்வளவு செலவில் கட்டப் பட்டு வருகிறது என்று பிபிசி தகவல் பெறும் உரிமை ‍ 2005 சட்டம் பின்பற்றி கேட்டதற்கு பொதுவாகRs.20,000 கோடியில் என்றும் ஆனால் இரகசியம் காக்கப் பட வேண்டிய நிலையில் மற்ற எந்த தகவல்களும் அறுதியிட்டுப் பெற முடியவில்லை இந்திய மைய அரசிடமிருந்து என்ற ஒரு செய்தியைப் படித்தேன்.


 திரு   RTI ஹக்கிம் அவர்கள் மனிதராய்ப் பிறந்ததன் பலனை செய்து விட்டதாகவே உணர்கிறேன். இந்த 44 வயதேயான இளைஞர் சாதித்துள்ளதைப் பார்க்கும் போது அந்தளவு எல்லையை நாம் தொடவில்லையோ என்ற ஒரு ஆதங்கம் எழுகிறது. (தோன்றின் புகழொடு தோன்றுக...எனக்குப் பிடித்த முதல் குறள்).


மனிதர் மின்னலாய் வெடிக்கிறார், மேகமாய்ப் பொழிகிறார் மழையைப் போல எல்லா இடங்களுக்கும் வேறுபாடின்றி சமமாய் தம் தொண்டு பரவ தம்மால் ஆனதை செய்து வருகிறார். எனக்கும் கூட தனிப்பட்ட முறையில் மாநில அரசிடம் மாவட்ட அலுவலகத்தில், வட்டாட்சியர், கோட்டாட்சியர் தொடர்புடைய பட்டா குறித்தான சில கேள்விகள் என் வாழ்வைக் கரையானாக அரித்து வந்தன. என்றாலும் இதை தனிப்பட்ட சுய இலாப நோக்கத்திற்காக பயன்படுத்த ஆர்வம் வேண்டாம் என்ற இவரது நூல்வழியிலான‌ அறிவுரையை ஏற்று சுய‌ சிந்தனைக்கு எனது அவாவை உள் தள்ளி விட்டு இந்தப் பதிவை மேற்கொள்கிறேன்.


அரசு அலுவலகங்களை பொது அதிகார அமைப்பு என்கிறார். என்னதொரு அரிய வார்த்தை அடியேன் புதிதாக இப்போதுதான் இந்த தகவல் பெறும் உரிமை நூல் மூலம் தான் கடந்து வருகிறேன். 2005 தகவல் பெறும் உரிமையை மக்கள் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் அவர்கள்தாம் இந்தியாவுக்கு சட்ட மசோதா நிறைவேறச் செய்தார் என்பது எனக்குப் பிடித்த செய்தி. ஏன் எனில் அந்த மகான் எனக்கும் தமது கரம் கொண்டு கடிதம் எழுதினார் அல்லவா அதனால்...


நான் இந்தப் பதிவை செய்கிற போது பெரிதும் மெழுகாக உருகிக் கொண்டிருக்கிறேன். இந்த தகவல் பெறும் உரிமை சட்ட வடிவாக மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறிய அந்த நாள் தாம் இந்தியாவுக்கு இந்தியர்க்கு எல்லாம் கிடைத்த இரண்டாம் சுதந்திரம் என்கிறார் ஆசிரியர். எப்பேர்ப்பாட்ட தொலைநோக்குப் பார்வை. இந்த சட்டம் உலகில் 142 நாடுகளில் பயன்பட்டு வருகிறது என்பதை புள்ளி விவரங்களுடன் பட்டியலிட்டு தந்திருக்கிறார்


ஒவ்வொரு நூலகத்திலும் இடம்பெற வேண்டிய , பயன்படுத்தப் பட வேண்டிய அற நூல். எனது நூலகத்தில் இடம் பெற்றுள்ள ஒரு சிறப்பும் இந்த 416 பக்க நூலுக்கு உண்டு. அருமையான தயாரிப்பு மற்றும் கட்டமைவு. தேவையான இடங்களில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புகளுடன் இடம் பெற்றுள்ளன.


எனக்கு நான் கேட்டவுடன் மறு சிந்தனையோ, நேரக் கணிப்போ தாமதமோ இன்றி இரவு செய்தி பரிமாறுகிறோம், மறு நாள் காலையில் புத்தகம் அவ்வளவு நேர்த்தியான பாதுகாப்புடன் எங்கள் வீட்டுக்கு அனுப்பிய கூரியர் விலாசத்துடன்,கூரியர் தொடர்பு எண்களுடன் வந்து சேர்ந்துவிட்டது. ஒரு அலுவலகம் இவருக்காக இயங்கி வருவதை இவர் எனது விலாசத்தை கணினி முறையில் அச்சடித்து ஒட்டியதிலிருந்தே அறிந்து கொண்டேன்.


மற்றபடி இதில் சொல்லப் பட்டுள்ள கனவான்கள்:முன்னால் மத்திய அமைச்சர் சுதர்சனம் நாச்சியப்பன் அவர்கள், சமூக சேவைச் செம்மல் அருணா ராய் இப்படி மற்ற பிற இவர் குறிப்பிட்டுள்ள மனித மாணிக்கங்கள் பற்றி எல்லாம் பாரட்டப் பட வேண்டியவர்கள். ஏன் எனில் இதற்காக அந்தளவு உழைத்துள்ளார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.


1997 ஏப்ரல் 17லேயே தமிழகத்தில் முதல்வர் கருணாநிதி அவர்கள் கொண்டு வந்து விட்டார் என்றும் அதன் பின் சுமார்28 ஆண்டுகளுக்கும் பிறகே இந்தியா முழுமையான‌ நாட்டுக்கும் இந்த சட்ட உரிமை கொடுக்கப்பட்டது என்பதும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கொடுக்கப் பட வேண்டிய செய்தி.


மற்றபடி இந்தப் புத்தகத்திலிருக்கும் புள்ளி விவரம் ஒவ்வொன்றையும் இங்கு குறிப்பிட்டால் புத்தகத்தின் ருசி உங்களுக்கு குறையலாம்...மேலும் எனக்கு திருத்தியமைக்கப் பட்ட 4ஆம் பதிப்பு கிடைத்திருக்கிறது. ஒரு பதிப்பே ஆயிரம் புத்தகம் போட்டால் என்ன ஆகும் நிலை என்பது என் போன்று 11 புத்தகம் வெளியிட்டவர்க்கு நன்கு தெரியும். ஆனால் ஹக்கிம் 4 ஆம் பதிப்புடன் முன்னேறி வருகிறார். சிறப்பு. பெருமகிழ்வு.


இந்த நூல் படித்த ஒவ்வொரு கையிலும் இருக்க வேண்டிய நூல்,ஒவ்வொரு நூலகத்திலும் இருக்க வேண்டிய நூல். பொதுவாக எனது நூல்களை எல்லாம் படிக்க அல்ல பயன்படுத்த என்ற ஒரு வார்த்தைப் பிரயோகத்தைப் பயன்படுத்தி சொல்லி இருப்பேன்.ஆனால் அதை எல்லாம் தாண்டி இந்த நூல் இந்திய அரசு அலுவலகத்திற்கும் மக்களுக்கும் இருக்கும் இடைவெளியைக் குறைக்க வேண்டுமானால் எல்லா இடங்க‌ளிலும் பயன்பட வேண்டும். ஏன் எனில் அவ்வளவு புலைத்தனம் மிக்க நாடு இது. இது  ஒரு சூரிய ஒளி. வினோபா பவே சொல்லியபடி உலகின் மாபெரும் தோட்டி யார் தெரியுமா சூரியன் என்பார். அது போல இந்தக் கதிரவனின் ஒளி இந்த நாடெங்கும் பரவ பயன் தர எல்லா மக்களும் நலம் பெற இந்த மனிதர், நூல் மூலம் கிடைத்திட எல்லாம் வல்ல இயற்கையை வேண்டி பிரார்த்தனை செய்து இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன்.


எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே...பராபரக் கண்ணி. தாயுமனவர்.


அல்லா கொடுக்க நினைப்பதை எவராலும் தடுக்க முடியாது...குரான் (முகமதிய வேதம்)

 என்னிடமும் குரான், பைபிள், கீதை எல்லாம் உண்டு. மதம் கடந்த மனிதர்க்கு யாவும் இனிதே...


RTI ஹக்கிம் M.B.A அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் வணக்கங்களும் வாழ்த்துகளும் ஆசிகளும்...என்றும்


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.






Friday, December 19, 2025

HONEY BADGER தேன் வளைக் கரடி அல்லது தேன் வளைத் தரைக் கரடி: கவிஞர் தணிகை

 வியப்பும் மலைப்பும் தந்த சில‌ செய்திப் பூக்கள்: கவிஞர் தணிகை



1.தேன் வளைக் கரடி அல்லது தேன் வளைத் தரைக் கரடி என்ற ஒரு விலங்குதான்  மிகுந்த அபாயகரமான‌ பயமே இல்லா
விலங்கு.அதன் தோல் காட்டெருமைத் தோலை விட 6 மில்லி மீட்டர் அதிக கனமுடைய தடித்ததாக இருக்கிறதாம். இதை எந்த விலங்காலும் எந்த எதிர்ப்பு விலங்காலும் கடிக்கவே முடியாதாம். மேலும் எந்த பாம்பின் விஷமும் இதை ஒன்றும் செய்ய வழியில்லை.இது கீரியைப் போல ஒரு சிறு விலங்கே ஆனால் இதை எதிர்த்து யானை, சிங்கம் , புலி போன்ற காட்டின் பெருவிலங்குகள் கூட இதைப் பார்த்தால் விலகிச் சென்று விடுமாம்.அப்படி எந்த விலங்காவது இதை எதிர்த்தால் அதன் உயிர் நிலையைக் குறிவைத்தே அதைத் தாக்கி நிலை குலைய வைத்து வெற்றி பெற்று விடுமாம். இதன் உணவு அனைத்தும்.


2. ப்ரிஸ்டல் வேல்ஸ் இங்கிலாந்தில் கான்கார்ட் விமானத்தில் பணி புரிந்த 92 வயது இளைஞர் தினமும் 7 முதல் 10 கி.மீ ஓடுவதாகவும் எல்லா வகையான உடற்பயிற்சிகளையும் மேற்கொள்வதாக ஆதாரப்பூர்வமாக அவரது படத்துடன் வெளியிட்ட செய்தி என்னை பிரமிக்க வைத்தது.அவர் பேர் மறந்து விட்டது. தேடிப் பாருங்கள் வேண்டுமெனில்.


3. ப்ரியன்  ஜான்சன் என்ற அமெரிக்கர் வயதே ஆவதில்லை எனக்கு ஆண்டுகள் செல்வதால் எனது உடல் உறுப்புகளில் எந்த தேய்மானமும் நடக்கவில்லை . நான் அதை அப்படியே வைத்திருக்க முயற்சி செய்கிறேன் அவர் 2036ல் மரணமே இல்லை என்பதை நிரூபித்து விடுவேன் என அவரது நிறுவனத்தின் சார்பாக அந்த ஆய்வுக்காக இது வரை சுமார் 16 கோடி செலவளித்திருப்பதாக ஒரு செய்தி.


4. இதற்கு முரணாக அதிக காலம் வாழ்வெதென்பதே அறிவியல் முயற்சி., மரணம் இல்லை என்ற முயற்சி அழிவை நோக்கிச் செல்வது என்கிறார் மரு. எவி ராய் என்ற அறிவியல் அறிஞர். இந்தியாவில் பிறந்து உலகின் மேல் நாடுகளில் எல்லம் இவர‌து கல்வியை, பணியைத் தொடருபவர்.இவர் மருத்துவர் என  பிணி தீர்க்கும் மருத்துவர்களையும், அவர்களுக்கு வழிகாட்டி மருந்துப் பொருட்களை கண்டறிய முடியும் மருத்துவம் சார்பான அறிவியல் படித்து முனைவர்களான மருத்துவர்களையும் மருத்துவர் என்றே குறிப்பிடுகிறோம் என்கிறார். இவர் மருத்துவர்களை மருத்துவத் துறை நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டிருக்கிறது. சுமார் எனது நினைவு சரியாக இருப்பின் ஓராண்டில் 10 இலட்சம் முதல் 30 இலட்சம் வரை மருத்துவ அறிக்கைகள் மனித மருத்துவத்தை மனித ஆயுளை மனித உடலை மேம்படுத்த வந்து கொண்டே இருக்கின்றன, அதை மருத்துவர்கள் படித்து தங்களை காலத்துக்கேற்ப மேம்படுத்திக் கொண்டு மருத்துவம் செய்ய நேர்ந்தால் இன்னும் மனித வளம் மேம்படும் என தமது இந்தியா டுடே பேட்டியில்  சோனாலி என்பவருடன் பேசியிருக்கும் காணொளி மிக்க கருத்துச் செறிவுடன் அழகாக வடிவமைக்கப் பட்டிருந்தது. பெரும் அறிஞர்கள் அந்த நிகழ்வில் பங்கெடுத்துக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது.


5. இரு கைகளையும் இழந்த பிஹாரி இளைஞர் ஒருவர்க்கு 8 பெண்கள் கொண்ட அரசு மருத்துவர்கள் அடங்கிய பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் வலது இடது கைகளை மாற்றி மொழியறியாத அந்த இளைஞரை சுமார் 4 + 14 நாட்கள்  அரசு மருத்துவமனையிலேயே வைத்து அரிய அறுவை சிகிச்சைகள் மூலம் தமனி, சிறை, நரம்புகள் யாவற்றையும் இணைத்து கரஙக்ளை இணைத்து அவரை வாழ்வைத்திருக்கிறார்கள் அப்படிப்பட்ட அறுவை சிகிச்சைகளில் இது உலகிலேயே 4 முறைதான் செய்யப் பட்டிருக்கிறதாம். இது 4 வது முறை என்ற ஒரு காணொலியை தம்பி வேலாயுதம் அனுப்பிய காணொலி மூலம் அறிந்து கொண்டேன். மிக ஊக்கமுடைய , முயற்சியுடைய பெண் மருத்துவர்கள் மேல் மிக்க மரியாதையை ஊட்டும் காணொலியாக வல்லமையுடைய பெண்கள் என்ற தரத்தில் அது இருந்தது.

* சில நேரங்களில் விண்ணியல் மற்றும் இது போன்ற செய்திகளை உள் வாங்கும் போது நேரம் போதவில்லை. அவ்வளவு ஆர்வத்தை, உடலைக் கூட கெடுத்துக் கொண்டு படிக்க வேண்டிய செய்திகளை அறிவியலும் இணையமும் தந்து வருகின்றன.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

Thursday, December 18, 2025

கட உள்(கள்)

 கட உள்(கள்)



சிவம் (உருவமற்றது) சிவன் ஆனது

சக்தி  (ஆற்றல்)ஈஸ்வரி ஆனது

வெளி (திரு) மால் ஆனது

திரு (செல்வம்) இலட்சுமி ஆனது


கருவுரு(தல்) ப்ரம்மம் ஆனது

கற்றல் கல்விக் கடவுள்(சரஸ்வதி) ஆனது

அழகு முருகு ஆனது

படைத் தலைமை கணபதி ஆனது


காற்று காளி (அம்மன்) ஆனது

மழை மாரி (அம்மன்)ஆனது


எல்லையும் காவலும் அறச்சீற்றங்களும் தெய்வங்களானது...


கதிர்கள் மூலம் ஆனது

சூரிய சந்திரர்களும் கோள்களும் கடவுள்கள் ஆனது

விண்மீன்களும் ஆகாயமும் பிரபஞ்சமும்

பூமியும் கடலும் மலையும் மரமும்

இயற்கையானது...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


Saturday, December 13, 2025

3 கோடி சூரியன்களுக்கு நிகரான பிரமாண்ட கருந்துளை வெடிப்பு

 நன்றி: பிபிசி தமிழ்



ஒரு பிரமாண்ட கருந்துளையில் இருந்து வெளிப்பட்ட, இதற்கு முன் பார்த்திராத அளவிலான பெரும் ஆற்றல் வெடிப்பை, வானியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அந்தக் கருந்துளை 3 கோடி சூரியன்களுக்கு நிகரான அளவைக் கொண்டது.

திடீரென ஒரு பிரகாசமான எக்ஸ்ரே ஒளி வெடித்துச் சிதறியதையும், வெளிப்பட்ட உடனே அந்த ஒளி மிக வேகமாகப் பலவீனமடைந்ததையும் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

அந்த எக்ஸ்ரே ஒளி மங்கிய பிறகு, கருந்துளை தன்னில் இருந்து சில பொருட்களை, விநாடிக்கு 60,000கி.மீ என்ற அதீத வேகத்தில் விண்வெளியில் வீசியது.

கருந்துளையில் ஏற்பட்ட இந்த எக்ஸ்ரே ஒளி வெடிப்பும், அதன் விளைவாக உருவாக்கப்பட்ட வேகமான காற்றும், சூரியனில் நிகழ்வதை ஒத்திருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும், இது பிரபஞ்சம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றி நாம் மேலதிகமாக அறிவதற்கு உதவக்கூடும் என்றும் கூறுகின்றனர்.

இந்த ஆய்வின் முழு விவரமும், அஸ்ட்ரானமி & அஸ்ட்ரோஃபிசிக்ஸ் என்ற ஆய்விதழில் வெளியாகியுள்ளது

கருந்துளை என்றால் என்ன?

கருந்துளை என்று பெயர் வைக்கப்பட்டிருந்தாலும், அவை துளைகள் இல்லை. அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் கூற்றுப்படி, மிகச் சிறிய இடத்திற்குள் மிகப்பெரிய அளவிலான பொருள்களை கருந்துளைகள் கொண்டுள்ளன. அவை மிகவும் அடர்த்தியானவை. அதாவது, அவற்றிடம் இருந்து ஒளி உள்பட எதுவுமே தப்பிக்க முடியாத அளவுக்கு அடர்த்தி மிகுந்தவை.

பேரண்டத்தில் உள்ள மிகவும் மர்மமான வான்பொருட்களில் ஒன்றாக கருந்துளைகள் இருக்கின்றன.

இவற்றில், மிகப்பெரிய, பிரமாண்ட கருந்துளைகள் சில நேரங்களில் சூரியனைவிட பல்லாயிரம் மடங்கு அல்லது பல பில்லியன் மடங்கு அதிக நிறையைக் கொண்டுள்ளன. கிட்டத்தட்ட ஒவ்வொரு பெரிய விண்மீன் மண்டலத்தின்(galaxy) மையத்திலும் இவை காணப்படுகின்றன.

அவற்றைச் சுற்றி, வாயு, தூசு வடிவங்களில் இருக்கும் வான்பொருட்களால் ஆன சுழலும் வட்டுகள் உள்ளன. அந்தப் பொருட்கள் கருந்துளையின் அதிதீவிர ஈர்ப்புவிசை காரணமாக அதற்குள் இழுக்கப்படலாம்.

அப்படி, கருந்துளைகள் தம்மைச் சுற்றியுள்ள வட்டுகளில் இருக்கும் வான்பொருட்களை "விழுங்கும்போது", அந்த வட்டுகள் நம்ப முடியாத அளவுக்குத் தீவிரமாக வெப்பமடைந்து எக்ஸ் கதிர்கள் உள்பட வெவ்வேறு அலைநீளங்களைக் கொண்ட பிரகாசமான ஒளி வெடிப்பை வெளியிடுகின்றன.இரண்டு தொலைநோக்கி

மேலும் இதன்போது, கருந்துளைகள் அதிவேகமாக வாயுக்களை வெளியேற்றுகின்றன. விண்வெளியில் ஏற்படும் தீவிர காற்று போல் இருக்கும் அந்தக் காற்றில் மின்னூட்டம் மிக்க சிறு துகள்களும் இருக்கும்.

இந்தக் காற்று விண்மீன் மண்டலத்தின் வழியாக வீசும்போது, புதிய நட்சத்திரங்களின் தோற்றத்தில்கூட அவை தாக்கம் செலுத்தக்கூடும்.

"ஒரு கருந்துளை இவ்வளவு வேகமாக வெளிப்படும் காற்றை உருவாக்குவதை நாங்கள் இதற்கு முன்பு பார்த்ததில்லை" என்று நெதர்லாந்து விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் முதன்மை விஞ்ஞானி லியி கு கூறுகிறார்.

ஆய்வு செய்யப்படும் இந்த பிரமாண்ட கருந்துளை, பூமியில் இருந்து சுமார் 13 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள ஒரு சுழல் விண்மீன் மண்டலத்தில் அமைந்துள்ளது.

இந்தத் தனித்துவமான விண்வெளி நிகழ்வைக் கண்டறிய, ஒன்றிணைந்து இயங்கிய இரண்டு தொலைநோக்கிகளை விஞ்ஞானிகள் பயன்படுத்தினர்.

அதில் ஒன்று, பிரபஞ்சம் முழுவதும் எக்ஸ்ரே மூலங்களை ஆய்வு செய்யும் ஐரோப்பிய விண்வெளி நிலையத்தின் எக்ஸ்.எம்.எம்-நியூட்டன் தொலைநோக்கி.

மற்றொன்று, ஐரோப்பிய விண்வெளி நிலையம் மற்றும் நாசாவின் ஆதரவுடன் செயல்பட்ட ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் தலைமையிலான திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் எக்ஸ்ரே இமேஜிங் அண்ட் ஸ்பெக்ட்ரோஸ்கோபி மிஷன் (கருந்துளையைச் சுற்றியுள்ள மிகவும் பிரகாசமான பகுதி ஆக்டிவ் கேலக்டிக் நியூக்ளியஸ் (AGN) என்று அழைக்கப்படுகிறது.

ஒரு ரப்பர் பேண்ட் பல முறை முறுக்கப்பட்டு திடீரென விடுவிக்கப்படுவதைப் போல, ஏ.ஜி.என் பகுதியிலுள்ள காந்தப்புலம் முறுக்கப்பட்டு, பின்னர் திடீரென விடுவிக்கப்பட்டபோது, "அது பெரியளவிலான ஆற்றலை வெளியிட்டு, பலத்த காற்றை உருவாக்கியது. இது கிட்டத்தட்ட சூரியனில் நிகழ்வதைப் போலவே இருந்தாலும், கருந்துளையில் சூரியனில் நடப்பதைவிடப் பல மடங்கு, அதாவது கற்பனைகூடச் செய்து பார்க்க முடியாத அளவுக்கு, பெரிய அளவில் நிகழ்கிறது" என்று ஐரோப்பிய விண்வெளி நிலையத்தில் எக்ஸ்ரே இமேஜிங் அண்ட் ஸ்பெக்ட்ரோஸ்கோபி மிஷனின் திட்ட விஞ்ஞானியும், இந்தக் கண்டுபிடிப்பின் இணை ஆசிரியருமான மத்தேயோ குவைநாஸி விளக்கினார்.

இந்த ஆய்வுக் குழுவில் ஒருவரும், ஐரோப்பிய விண்வெளி நிலையத்தைச் சேர்ந்த ஆய்வு மாணவருமான கமில் டியெஸ், இந்த ஏ.ஜி.என்-கள் அவை இருக்கும் விண்மீன் மண்டலங்கள் காலப்போக்கில் எவ்வாறான மாற்றங்களை எதிர்கொள்கின்றன என்பதில் "பெருமளவு பங்கு வகிப்பதாக" கூறுகிறார்.

மேலும், "அவை மிகவும் செல்வாக்கு மிக்கவையாக இருப்பதால், ஏ.ஜி.என்.களின் காந்தத்தன்மை மற்றும் அவை எவ்வாறு காற்றை உருவாக்குகின்றன என்பதைப் பற்றி மேலும் அறிந்துகொள்வது, பிரபஞ்சம் முழுவதும் உள்ள விண்மீன் மண்டலங்களின் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கான திறவுகோலாக இருக்கலாம்," என்றும் அவர் தெரிவித்தார்.

.பேரண்டத்தின் ரகசியங்கள்

கருந்துளையில் காணப்பட்ட இந்த ஆற்றல் வெடிப்பு, சூரியனில் ஏற்படும் பெரிய ஆற்றல் வெடிப்புகளை ஒத்திருப்பதாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

சூரியனில் ஏற்படும் பெரிய ஆற்றல் வெடிப்புகள் கொரோனல் மாஸ் எஜெக்‌ஷன் (Coronal Mass Ejection) என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆற்றல் வெடிப்பின்போது, சூரியனின் வெளிப்புற அடுக்கில் இருந்து மின்னூட்டப்பட்ட துகள்கள் பெருமளவில் வெளியேறுகிறது. இந்த நிகழ்வு பூமியிலும் தாக்கம் செலுத்தக்கூடும்.

சூரியனில், காந்தப்புலங்கள் முறுக்கப்பட்டு திடீரென விடுவிக்கப்படும்போது வெளிப்படும் ஆற்றலின் விளைவாக சூரியப் பிழம்புகள்(Solar Flare) என்றழைக்கப்படும் பிரகாசமான ஒளி வெடிப்பு நிகழ்வு நடக்கும். மேலும், அது நடக்கும் அதே நேரத்தில்தான் கொரோனல் மாஸ் எஜெக்‌ஷன் என்றழைக்கப்படும் வெடிப்பும் நிகழ்கிறது.

அதேபோலத்தான் இந்த பிரமாண்ட கருந்துளையிலும், "முறுக்கப்பட்ட காந்தப்புலங்கள் விடுவிக்கப்படும்போது", ஆற்றல் வெடிப்பு மற்றும் அதைத் தொடர்ந்து பெரும் காற்று உருவாக்கப்படுவது நடக்கிறது.

ஐரோப்பிய விண்வெளி நிலையத்தில் எக்ஸ்.எம்.எம்-நியூட்டன் தொலைநோக்கியின் திட்ட விஞ்ஞானியாக இருக்கும் எரிக் குல்கர்ஸ், இரண்டு விண்வெளித் தொலைநோக்கிகளும் இணைந்து "நாம் இதுவரை பார்த்திராத, புதிய ஒன்றைக் கண்டுள்ளதாக" கூறுகிறார். "கருந்துளையில் இருந்து வெளிப்படும் மிக வேகமான காற்று, ஆற்றல் வெடிப்பால் உருவாக்கப்பட்டது. இது சூரியனில் நிகழ்வதை ஒத்திருக்கின்றது."

மேலும் பேசிய அவர், "இதில் மகிழ்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், சூரியனில் நிகழும் அதேபோன்ற இயற்பியல் செயல்முறைகள், ஆச்சர்யமளிக்கும் வகையில், பேரண்டத்தில் உள்ள மிகப்பெரிய கருந்துகளைகளுக்கு அருகிலும் நிகழக்கூடும் என்பதை இது காட்டுகிறது" என்றும் தெரிவித்தார்.

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


Sunday, November 30, 2025

MILITARY REMINISCENCES BY JAMES WELSHமிலிட்டரி ரெமினிசென்ஸஸ் பை ஜேம்ஸ் வெல்ஸ் (ஆங்கிலம்): கவிஞர் தணிகை

 மிலிட்டரி ரெமினிசென்ஸஸ் பை ஜேம்ஸ் வெல்ஸ் (ஆங்கிலம்): கவிஞர் தணிகை



ஜேம்ஸ் வெல்ஸ் என்ற போர் வீரர் சுமார் 40 ஆண்டுகள் கிழக்கிந்தியக் கம்பெனியில் அடி மட்டப் போர் வீரராக தம் வாழ்வைத் துவங்கி லெப்டினன்ட் கர்னல், மேஜர் ஜெனரல் போன்ற உத்தியோக உயர்வுகள் பெற்று போர் குழுக்களுக்குத் தலைமை தாங்கி பணி புரிவதுடன் அல்லாமல் போர் புரிந்த சாகசங்கள் அல்லது வாழ்ந்த உயிர் போய் நழுவி விடாமல் தமது அனுபவங்களை நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார் 1790 முதல் 1828 வரை.


இந்த நூல் 2 பாகங்களாக அவரின் வாழ்க்கைக் குறிப்புகளை அப்படியே எவ்விதக் கலப்புமின்றி தந்திருக்கிறது.அதில் இந்திய இரத்தம் நிறைய சிந்தியது பற்றிய விவரங்கள் உள்ளன எனவே அது நமது கவனத்திற்கும் உள்ளாகி உள்ளது. மற்றபடி தனிப்பட்ட ஒரு வெள்ளைக்கார போர் வீரரின் சுய வாழ்வு மட்டுமெனில் இது அத்தனை பெருமை பெற்றிருக்காது.


முதல் பாகம் சுமார்:354 பக்கங்கள், இரண்டாம் பாகம் சுமார் 347 பக்கம் எமது கணினி வழியில் 384 பி.டி.எப் பக்கங்கள். எனதருமை பிரவீன்குமார் முதல் பாகத்தை வாங்கி நான் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தினார், அதன் தொடர்ச்சியாக நான் எனது முயற்சியை தொடர்ந்து இந்த எழுத்துகளை முழுமையாக உள் வாங்க முயற்சித்தேன்.


பொதுவாக நான், எனது, என்னுடைய என்ற நடையில் இலக்கியம் இருப்பின் அவை பெரிதாக பாதிப்பலைகள் ஏற்படுத்துவதில்லை என்ற கருத்துக்கு மாறாக இந்த நூலின் வடிவம் எல்லாமே இவரது சுய விவரக் குறிப்புகளாகவே நான் எனது என்ற அழகியலாகவே எழுதப்பட்டிருக்கிறது.


இந்த நூலின் எல்லா விவரங்களையும் தருவது இந்தப் பதிவின் பகிர்வின் நோக்கமல்ல, அது முடியவும் முடியாது. ஏன் எனில் 18- 19 ஆம் நூற்றாண்டில் இருந்த ஆங்கில வார்த்தைகள் பிரயோகம் சற்று கடினமானதாகவே தெரிந்து கொண்டு படிக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி உள்ளது. மொழி நூற்றாண்டுகளில் மாறி விடுகிறது இல்லையா? ஏன் நமது தமிழே கூட 1960க்குப் பின் பிறந்த நம்மிடையே அதன் பின் மாற்றமடைந்து லை, வை, போன்ற உயிர்மெய் மாறியதை குறிப்பிட வேண்டுமல்லவா அது போல அந்த ஆங்கிலம் சற்று கரடு முரடாக இருக்கிறது என்றாலும் மொழி மூலம் என்பது மொழி பெயர்ப்பை விட உயர்ந்தது என்பதாலேயே இந்த நூலை ஆங்கில வழியில்  படிப்பதுவே படிக்கும் ஆர்வமுடையார்க்கு ஏற்றது.


காலம் எவ்வளவு விரைவாக செல்கிறது அதன் கதை சொல்கிறது...480 கோடி ஆண்டுகளாக சுழன்று வரும் புவிச் சுற்றுடன்  பத்தாயிரம் ஆண்டுகளாக உறங்கிக் கிடந்த எரித்ரியா எத்தியோப்பியா எரிமலை இப்போது வெடித்து 4000 கி.மீக்கு மேல் அதன் துகள்கள் கண்டம் விட்டு கண்டம் 25,000 அடிக்கும் மேல் பறந்து வருகிறது என்ற காலப் பதிவை எல்லாம் கவனித்தால் நமது வாழ்வு அதில் எங்கே என்று கேட்கத் தோன்றும்.


இந்த வெள்ளைக்கார ஆங்கிலேய மனிதர் நமது எல்லாத் தரப்பு மக்களிடையேயும் ஊடுருவி நேயம் காட்டி வாழ்ந்த புதிர்கள் இதில் உள்ளன, சின்ன மருதுவுடன் நெருங்கி பழகியதாகவும் குறிப்புகள் சொல்கின்றன.அந்த வம்சத்தின் தொரசாமி பற்றி பதிவு இருக்கிறது.


கொல்கொத்தா , சென்னை என்ற துறைமுகப் பட்டணங்களில் கால் பதித்ததில் இருந்து திரும்பி பணி அல்லது இவரது ஓய்வு ஆரம்பித்து மீண்டும் கொல்கொத்தா துறைமுகத்தில் கப்பல் ஏறி திரும்பி செல்வது வரை இயற்கை , செயற்கை, போர், மரணம், போன்றவற்றில் இருந்து இவரும் இவர், இவரது , குடும்பம், உறவு, நட்பு, சூழல் எல்லாம் உயிருடன்  பயணம் செய்துள்ளன என்பவை நிறைய முரண்களுடன் பதிவு செய்யப் பட்டுள்ளன.


பர்மா, இலங்கை,சீனா, சீனா  உள்ளடங்கிய இந்த ஆங்கில ஏகாதிபத்தியத்தில்  எல்லா இடங்களிலும் இவர் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஊழியராக கிழக்கு மேற்காக வடக்கு தெற்காக வாழ்ந்திருக்கிறார். அதில் தெற்கே ஓமலூர், சங்கரி துர்க், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், பெருந்துறை, ஈரோடு, சேலம் COIMBATORE இப்படி எல்லா இடங்களிலும் இவரது பயணம் நடந்திருக்கிறது. அப்போது மேட்டூர் அணையும் மேட்டூர் என்ற ஊருமே இல்லை. காவிரி நதியும் வெள்ளமும் இருந்திருக்கிறது.


கலிலியோவை அறிவியலில் தந்தை என்பார், அவரை ஐசக் நியூட்டன் சீடராகத் தொடர்ந்தார் என நாடு வேறான போதும், காலம், நூற்றாண்டுகள் வாழ்ந்த காலம் வேறான போதும் முயற்சிகள் தொடர்ந்தன என்பது போல இந்த நபரை நான் தொடர்ந்திருக்கிறேன்.


இது இராமகிருஷ்ணர்,விவேகானந்தர்,நிவேதிதா,பாரதி,பாரதிதாசன்,சுரதா, பட்டுக்கோட்டை போன்ற குரு சீடர் போன்ற தொடர் வாழ்வல்ல பாரம்பரியம் அல்ல. இது வேறு.நானும் அந்த மனிதர் பயணம் செய்த இடங்களில் ஒரு துளி வடக்கே, தெற்கே, கிழக்கே, மேற்கே இந்தியாவில் எனது இளமைப் பருவத்தில் சில இடங்களைத் தொட்டு இயற்கை வாரி இறைத்த இன்ப, துன்ப நிகழ்வுகளில் அனுபவித்த காரணத்தால் இந்த வாழ்வை படிக்க நேர்ந்ததோ என்ற எண்ணம் என்னுள் எழுவதை தடுக்க முடியவில்லை. ஆனால் அது வேறு எனது வாழ்வு வேறு. அதன் ஒப்பீடு துளியும் பொருந்தாது என்றாலும்...


இதை எப்படி படிக்க நேர்ந்தது எனில்: ஊமைத்துரை வரலாறு, அதைக் கண்டு வியந்த மனம், கெட்டி பொம்மு எதிரியை அவர் தம் இடத்திலேயே சென்று சந்தித்து போர் புரிந்து அதன் விளைவை சந்திக்க, அந்த சந்ததியின் ஊமைத்துரை, மருது சகோதரர்கள் எப்படி எதிர்களை எதிர் கொள்கிறார்கள் என்பதில் இருந்தே ஆரம்பித்தது.


இடது உள்ளங் கையில் பதர்களை வைத்து வலது உள்ளங்கை வைத்து அதை தேய்த்து காண்பித்து வாயில் ஒரு விசில் ஒலியை அனுப்பி எதிரிகளை ஊதித் தள்ளுங்கள் என தமது சுற்றத்திற்கு கட்டளை பிறப்பித்த ஊமைத்துரையின் ஆணையை ஏற்று எதிர்களை களம் கண்ட பதிவு, நமது மண்ணிலேயே நம்மை வீழ்த்த எதிரிகளுக்குத் துணை செய்யும் மனிதர்கள் அக்குள் மயிர்களுக்கு சமம் என்ற  பதிவு, ஏன் எப்படி ஒரு பாளையக்காரர் இறப்பான் தெரியுமா என ஒரு முதிய பாளையக்காரரை இறக்கும் தருவாயில் ஒரு பலகையில் வைத்து தூக்கிச் சென்று எதிரிகளிடம் காண்பிக்கையில் தமது இருபக்க மீசையை முறுக்கிக் காட்டிக் கொண்டு இப்படித்தான் வீரமாக சாவான் என்று செத்தும் சாகும்போதும் வீரமாக சாவது...இப்படிப் பட்ட சம்பவங்கள்...


சுமார் மார்ச் இறுதியில் இருந்து மே வரை ஊமைத்துரையை வேட்டையாடிய வரலாறு பதிந்துள்ளது... அந்த வீரியத்துக்காகவே இதைப் படிக்க முனைகையில் அது போன்ற நிகழ்வுகளை முன்னெடுத்த இந்த நூல் அதன் பின் இந்த ஜேம்ஸ் வெல்ஸ் நாட்குறிப்புகளில் அவரது பார்வையில் தனிப்பட்ட பாதையில் புகுந்து செல்கிறது. வேட்டையாடுதல், பல்வேறுபட்ட இயற்கைச் சீற்றம், நோய்கள்,பிணிகள், நட்பு, இப்படி போய்க் கொண்டே இருக்கிறது. கடைசியில் கிழக்கிந்தியக் கம்பெனி உலகின் மிக உயர்ந்த கம்பெனி நான் பணி புரிந்தது பெரிய வாய்ப்பு என்றபடி இந்த எழுத்தாளர் முடிவில் சொல்லிச் சென்றுள்ளார்.  James Welsh (12 March 1775 – 24 January 1861) was a Madras Army officer.[1] 85 ஆண்டுகள் வாழ்வில் சுமார் 40 ஆண்டுகள் இந்தியாவில். தமது 58 ஆண்டு கால பணியில்.


நிறைய குறு நில மன்னர்களை சந்திக்கிறார், அவர்களுடைய சுத்தம், சுகாதரமின்மை பற்றி எல்லாம் குறிப்பிட்டு உள்ளார், மேலும் ஒரு குறிப்பிட்ட இனப் பெண்கள் தாம் போட்ட துணியை அவர்களின் உடல் பாகங்கள் கன்றிப் போகும் வரை கழட்டுவதே இல்லை அவ்வளவு அழுக்குடன் நாற்றத்துடன் வாழ்கிறார் என்றெல்லாம் சொல்லி இருக்கிறார் அதைப் பற்றி எல்லாம் இப்போது அப்பட்டமாக சொன்னால் அவை மதத் துவேசம் என்ற பட்டியல் கீழ் கொண்டு வரப்பட்டு பெரிய பிரச்சனை கூட ஏற்பட்டு விடலாம் எனவே இந்நூலை படிக்க வேண்டிய நூல் தாம் என்ற ஒரே காரணம் பற்றியே இங்கு பதிவு செய்து பகிர்ந்துள்ளேன். ஒரு நல்ல அனுபவம் நல்ல நூல்தாமே.


பி.கு: புலியை, கரடியை,மான்களை , பறவைகளை வேட்டையாடுவது, ஒரே குண்டில் இரு பாம்புகளைக் கொல்வது, இப்படி ஏராளமான நிகழ்வுகள் சொல்லப் பட்டுள்ளன அவை பற்றி படிக்க விரும்புவோர் படிக்கலாம்.மொத்தத்தில் இதில் இந்திய விடுதலைப் போரில் உயிர் நீத்த, நாடு கடத்தப்பட்ட வரலாறுகளின் இடங்களும் இருக்கிறது என்பது தவிர மற்றபடி முழுவதுமான ஒரு வெள்ளைக்கார மனிதரின் வாழ்வுக் குறிப்புகள். படிக்கத் தக்கதுதான். ஆனால் பாரட்டப் பட வேண்டுமானால் இவர் நம் மனிதர் மேல் கொண்டிருந்த நட்பு பற்றியும் எல்லா நடப்புகளையும் சுய விருப்பப் படி மாற்றாமல் அப்படியே காலப் பதிவு செய்ய வேண்டும் போன்றவற்றிற்காக்த்தான்.


அன்றைய தமிழ்க் குடி செய்த வேல்கம்பு 20 அடி முதல் 30 அடி வரை நீண்டிருந்ததும், அதை எதிரியின் உடலை துளைத்து துருவி சென்று மாய்த்த வரலாறு பற்றி படிக்கும் போது 6 அடி கடப்பாரையையே நம்மால் தூக்க முடியவில்லையே இவர்கள் எப்படி இப்படி என எண்ணிக் கொண்டே ஜாவ்லின் த்ரோ, ஈட்டி எறிதல் போட்டி விளையாட்டு பற்றி எல்லாம் நினைவு செல்ல...ஒரு பதிவை முற்றுப் பெறாமலே முடித்துக் கொள்கிறேன்...ஏன் எனில் எண்ணங்கள் நிறைய எழ, எழுதுவது அவை பற்றி எல்லாம் இயலாதது என்பதால்...வாழ்வில் எப்படி எப்படி எல்லாமோ நாளும் நேரமும் செல்கிறது, ஒரு முறை இதைப் படிக்கவும் நேரம் செலவிடுங்கள் அது உங்கள் வாழ்வில் ஒரு நல் அனுபவத்தை ஏற்படுத்தும்...


நான் இதைப் படித்து முடித்ததும்  ஒரு பைத்தியக்கார மனநிலையில் சென்று இன்பம் அடைந்ததாக எமது துணை க் குறிப்பிட்டதும் அதை அப்படியே அதே மனநிலையுடன் இதை யாம் அனுபவிக்க காரணமாக இருந்த மற்றொரு துணைக்கு நான் செய்தி பகிர்ந்து கொண்ட நினவலைகளுடன்....



மறுபடியும் பூக்கும் வரை 

கவிஞர் தணிகை

P:s: In their Military strength STARTS with  warriors  in hundreds, grows in many thousands and ends in lakhs The Military contains Native...Local or Indian sipoys, musselmans,Arabs, English with cavalry, artillery, infantry even with Elephants etc.Selfishness, Money making mind,Poverty,Lot of small kingdoms, India's wealth, and plundering...All makes this history and lot of English men or East Indian company men or England men are also killed in  many thousands  and lakhs...these are also reasons before Gandhi appearance in our Liberation fight  against Whites to  Quit our nation. we lost our sacrificed souls in many crores of numbers to this achievement to make our country free from them ...




Saturday, November 22, 2025

திருமண வாழ்த்து மடல்: கவிஞர் தணிகை

 

திருமண வாழ்த்து மடல்: கவிஞர் தணிகை

 

நாள்: 30.11.2025 ஞாயிறு இடம்: கந்தி குப்பம் விண்ணரசி ஆலயம்

மணமகன்: பொறி:P.சுனில் ஜெரோம்M.E           மரு.A.பிலோமின் பிரிசில்லா.M.B.B.S,

 

கண்டேன் ஒரு நல்மனிதரை அன்றொரு நாள்

 சேலம் குகை  ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்

கலாம் மாமனிதர் பேர் சொல்லி முதல் சந்திப்பிலேயே

ஆயிரக்கணக்கான பள்ளிச் சிறார்களுக்கு எனது உரையை

வழங்கச் செய்தார்.

 

இவரும் சாதரண மனிதரல்ல பள்ளியை விரிவுபடுத்தி

ஆயுளை ஆன்மாவை விதைத்தவர், அன்று முதல்

இன்று வரை அவருடன் கலந்த அந்த மணி நேரங்கள்

என்றும் பசுமையுடன்.

 

நல் ஆசிரியர் விருதைப் பெற தகுதியான இவர் என்றும்

எனது உறவைத் தொடர்வதே எனக்குப் பெருமைஇவர்

நல் ஆசிரியர் விருதைப் பெற்றதால் ஆசிரியர் குலத்துக்கு(ம்) பெருமை

முகாம் நடத்த முகம் சுளிக்காமல் தன்னால் இயன்றதை

செய்த பெரிய உள்ளம் அவர்தான் பனிமேதாஸ் எனும் மேதை.

 

M.பனி மேதாஸ் M.Sc,M.Phil,M.Ed, இணையர் :A எமிலி ஜோன் ஆப் ஆர்க் M.A,Phil,B.Ed

இருவரின் இளைய புதல்வன் பொறியாளர்: சுனில் ஜெரோம்

மருத்துவர் பிலோமின் பிரிசில்லா  இணையவிருக்கும்

திரு நாளில் ஒரு நாளாய் ஞாயிறு வருகிறது.

 

தெய்வம் போற்றுதும், செம்மழை போற்றுதும்

ஞாயிறு போற்றுதும், நானிலம் போற்றுதும்

மதங்களைக் கடந்து அரிய உள்ளங்களை மனித நேயத்துடன்

அரவணைத்து வாழ்த்தை  என்றும் கோர்க்கிறோம்

எமது குடும்பத்தின் மனமலர்களின் மணமாக....


 

அன்பு மனங்கள்

கவிஞர் தணிகை

இணையர்: .சண்முகவடிவு

புதல்வர்:T.G.R.S  மணியம்.B.E,

திருமண(ம்) 01.12,2025 வாழ்த்து : கவிஞர் தணிகை

  

திருமண(ம்)  01.12,2025 வாழ்த்து மடல்

தாரமங்கள கைலாய நாதர் ஆலயம் & கரிகால் நகர்     மண்டபம்

மணமகன்: ரிஷி விக்ரம் B.E,     மணமகள்:  நவீனாB.Tech


 

எனது சுவர் எழுத்துகளை தவறாமல் பெரியவர் ஒருவர் படிப்பார்

அவரும் நானும்  பேசியதாக நினைவில்லை...அவர் S.M.  தனபால்

 

அவரது பெயரன் ரிஷி விக்ரம் நவீனா கரம் கோர்க்கும்

திருமண விழாவிற்கு மகன் நந்தகுமார்

வாழ்த்த அழைக்கும் நேரம் பல சுற்றமும் சூழமும் வந்திணையும் நேரம்

 

உரிய நேரத்தில் கிடைக்கும் சொல் வெள்ளித் தட்டில் வைத்த பொற்கனி

என்கிறது விவிலியம்.

அல்லா கொடுக்க நினைப்பதை எவராலும் தடுக்க முடியாது என்கிறது முகமதியம்

பதினாறும் பெற்று பெருவாழ்வு  வாழச் சொல்கிறது  எமது ஆன்மிகம்

 

மணமக்கள் மன ஒருமைப்பாட்டுடன் ஈருடலும் ஓருயிருமாய் காலமெலாம்

வாழையாக, அருகாக, ஆலாக,மூங்கிலாகஎன்றும் வாழ வாழ்த்துகிறோம்

 

என்றும்

கவிஞர் தணிகை

T.S.வடிவு

T.G.R.S.மணியம் குடும்பத்தார்.


திருமண(ம் )வாழ்த்து மடல் 27.11.2025 தாரமங்களம்

 

திருமண(ம்) வாழ்த்து மடல்

27.11.2025  தாரமங்களம்

கைலாய நாதர் ஆலயம் &  ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி குமரப்ப முதலியார் வகையறா சமுதாயக் கூடம்


 

புவனேஷ்C.A.inter               மகாலட்சுமி/ சுவேதா B.A, B.Ed.

 

அலைகளில் அகடும் முகடும் அடிக்கடி வருவதுதான்  விழுவதுதான் எழுவதுதான்

எம் குடும்ப வாழ்வின் அலைகளில் ஓர் அலையின் அகட்டில் இருந்தோம் தொய்வுடன்

 

எங்கிருந்தோ வந்தான் இடைச் சாதி நானென்றான் இங்கிவனை நான் பெறவே

என்ன தவம் செய்து விட்டேன்.இன்றிவன் உள் வட்டத்தில் வந்து நிற்க

சகோதரன் சங்கரலிங்கம் இணைத்து வைத்தான் அன்றிவனை.

 

பெயரே அப்போதுதான் எனக்கு அறிமுகமானது கழுமலை நாதன்

அப்பெயரில் கடவுள் தென்முகத்தில் உண்டென்றார்

அவரின் செல்வ மகன் புவனேஷ் சுவேதா வாழ்வில்

வந்திணையும் நேரத்துடன் எனது நேரமும் இணைந்து கொள்கிறது இணையத்தில்

 

புவி இருக்கும் வரை அந்த அலை கடல் இருக்கும் வரை

புவனேஷ் சுவேதா தம்பதியரின் வாரிசுகள் கழுமலைநாதன் கோமதி பேர் சொல்லி

வாழ்க வளமுடன்  வாழ்க வையத்தில் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ

எம் வாழ்த்துகள்

என்றும்

கவிஞர் சுப்ரமணியம் தணிகாசலம்

. சண்முக வடிவு

..ரா.சு. மணியம் குடும்பத்தார்

Friday, November 7, 2025

என் வீட்டுத் தோட்ட‌த்தில் இறந்து போன கொடி: கவிஞர் தணிகை

  என் வீட்டுத் தோட்ட‌த்தில் இறந்து போன கொடி: கவிஞர் தணிகை



அந்தப் பீர்க்கங்காய் கொடி எப்படி மண்ணிலிருந்து பிய்ந்து போனதோ தெரியவில்லை,இலைகள் எல்லாம் வாடிக் கொண்டிருந்தன, ஒரு 4 மணி நேரம் அடியேனும் துணைவியாரும் வெளியில் சென்று வந்து திரும்பவும் பார்த்த போது அவர் பார்த்து அதை என்னிடம் தெரிவிக்க, பார்த்தேன்.


இராமலிங்க வள்ளலார் போல வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் மனம் மிக வாடினேன், வாடிக் கொண்டிருக்கிறேன் எனவே இந்தப் பதிவு.


அதை மண்ணில் மறுபடியும் பதித்து வைத்துப் பார்த்தேன் வீண் முயற்சி என்று தெரிந்த போதும்.


வெற்றுப் பூக்களாகவே பூத்துக் காய்ந்து விழுந்து கொண்டிருந்த போதும் அது பலனளிக்கும் என்று பெரிதும் நம்பிக் கொண்டிருந்தேன். கடைசியில் ஒரு பிஞ்சு ஒரு அடிக்கும் குறைவான‌ நீளம் இருக்கும் விட்டிருந்தது. அது இனி பெரிதாக வாய்ப்பில்லை. எனவே அதைப் பறித்து விட்டேன்.


கொத்து அவரைக்காய் (கொத்தவரங்காய்), அவரைக்காய் போன்ற‌ செடிகள் என் வீட்டுத் தோட்டத்தில் பலன் தருகின்றன பலம் தருகின்றன.செடிகளோடு கொடிகளோடு சேர்ந்து நிறைய கண்ணுக்குத் தெரியும் கண்ணுக்குத் தெரியா நிறைய பூச்சி இனம் மற்றும் களைகள் யாவும் பயிர்த் தொழில் எவ்வளவு கடினமானது என எனக்கு விளக்கி வருகிறது.


வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் சொல்லியபடி சுண்டைக்காய் இலைகளை நிறைய எடுத்து அரைத்துப் பிழிந்து சாறு எடுத்து எல்லா செடிகள் கொடிகள் மேல் எல்லாம் தெளித்தேன், உண்மை, அவர் சொல்லியிருந்தபடி அவரைக்காய்களை சிதைத்துக் கொண்டிருந்த அஸ்வினிப் பூச்சிகள் எல்லாம் அறவே இல்லை.


இரு முறை களைச்செடிகளை சுத்தம் செய்யும் போது எனக்குக் கிடைத்த பரிசாக கையில் முழுதும் மூன்று புள்ளிகளுடன் ஏதோ பூச்சி கடித்து வலது கை முழுதும் நமைச்சல், அரிப்புடன் தழும்புகள் கை நிறைய‌ தொடராக விளைந்து தொல்லை தர ஆரம்பித்து விட்டன ஆனாலும் பயிர்த் தொழிலை செய்யவே ஆர்வம் ஆனால் அது ஆர்வக் கோளாறே.


இரத்தம் உடல் உயிர் உடமை குடும்பம் யாவற்றையும் தியாகம் செய்த எண்ணற்ற இந்திய விடுதலை வீரர்கள் பற்றியோ 78 ஆண்டுகளுக்கும் மேலாக சென்று கொண்டிருக்கும் இன்றைய அரசியல் பற்றியோ இந்தப் பதிவில் 

 அடியேன் எதையுமே குறிப்பிடவே இல்லை. ஆற்றாமையால் வந்த பதிவு இது இல்லை. ஆற்றியமையால் வந்த பதிவு.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை