Sunday, November 30, 2025

MILITARY REMINISCENCES BY JAMES WELSHமிலிட்டரி ரெமினிசென்ஸஸ் பை ஜேம்ஸ் வெல்ஸ் (ஆங்கிலம்): கவிஞர் தணிகை

 மிலிட்டரி ரெமினிசென்ஸஸ் பை ஜேம்ஸ் வெல்ஸ் (ஆங்கிலம்): கவிஞர் தணிகை



ஜேம்ஸ் வெல்ஸ் என்ற போர் வீரர் சுமார் 40 ஆண்டுகள் கிழக்கிந்தியக் கம்பெனியில் அடி மட்டப் போர் வீரராக தம் வாழ்வைத் துவங்கி லெப்டினன்ட் கர்னல், மேஜர் ஜெனரல் போன்ற உத்தியோக உயர்வுகள் பெற்று போர் குழுக்களுக்குத் தலைமை தாங்கி பணி புரிவதுடன் அல்லாமல் போர் புரிந்த சாகசங்கள் அல்லது வாழ்ந்த உயிர் போய் நழுவி விடாமல் தமது அனுபவங்களை நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார் 1790 முதல் 1828 வரை.


இந்த நூல் 2 பாகங்களாக அவரின் வாழ்க்கைக் குறிப்புகளை அப்படியே எவ்விதக் கலப்புமின்றி தந்திருக்கிறது.அதில் இந்திய இரத்தம் நிறைய சிந்தியது பற்றிய விவரங்கள் உள்ளன எனவே அது நமது கவனத்திற்கும் உள்ளாகி உள்ளது. மற்றபடி தனிப்பட்ட ஒரு வெள்ளைக்கார போர் வீரரின் சுய வாழ்வு மட்டுமெனில் இது அத்தனை பெருமை பெற்றிருக்காது.


முதல் பாகம் சுமார்:354 பக்கங்கள், இரண்டாம் பாகம் சுமார் 347 பக்கம் எமது கணினி வழியில் 384 பி.டி.எப் பக்கங்கள். எனதருமை பிரவீன்குமார் முதல் பாகத்தை வாங்கி நான் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தினார், அதன் தொடர்ச்சியாக நான் எனது முயற்சியை தொடர்ந்து இந்த எழுத்துகளை முழுமையாக உள் வாங்க முயற்சித்தேன்.


பொதுவாக நான், எனது, என்னுடைய என்ற நடையில் இலக்கியம் இருப்பின் அவை பெரிதாக பாதிப்பலைகள் ஏற்படுத்துவதில்லை என்ற கருத்துக்கு மாறாக இந்த நூலின் வடிவம் எல்லாமே இவரது சுய விவரக் குறிப்புகளாகவே நான் எனது என்ற அழகியலாகவே எழுதப்பட்டிருக்கிறது.


இந்த நூலின் எல்லா விவரங்களையும் தருவது இந்தப் பதிவின் பகிர்வின் நோக்கமல்ல, அது முடியவும் முடியாது. ஏன் எனில் 18- 19 ஆம் நூற்றாண்டில் இருந்த ஆங்கில வார்த்தைகள் பிரயோகம் சற்று கடினமானதாகவே தெரிந்து கொண்டு படிக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி உள்ளது. மொழி நூற்றாண்டுகளில் மாறி விடுகிறது இல்லையா? ஏன் நமது தமிழே கூட 1960க்குப் பின் பிறந்த நம்மிடையே அதன் பின் மாற்றமடைந்து லை, வை, போன்ற உயிர்மெய் மாறியதை குறிப்பிட வேண்டுமல்லவா அது போல அந்த ஆங்கிலம் சற்று கரடு முரடாக இருக்கிறது என்றாலும் மொழி மூலம் என்பது மொழி பெயர்ப்பை விட உயர்ந்தது என்பதாலேயே இந்த நூலை ஆங்கில வழியில்  படிப்பதுவே படிக்கும் ஆர்வமுடையார்க்கு ஏற்றது.


காலம் எவ்வளவு விரைவாக செல்கிறது அதன் கதை சொல்கிறது...480 கோடி ஆண்டுகளாக சுழன்று வரும் புவிச் சுற்றுடன்  பத்தாயிரம் ஆண்டுகளாக உறங்கிக் கிடந்த எரித்ரியா எத்தியோப்பியா எரிமலை இப்போது வெடித்து 4000 கி.மீக்கு மேல் அதன் துகள்கள் கண்டம் விட்டு கண்டம் 25,000 அடிக்கும் மேல் பறந்து வருகிறது என்ற காலப் பதிவை எல்லாம் கவனித்தால் நமது வாழ்வு அதில் எங்கே என்று கேட்கத் தோன்றும்.


இந்த வெள்ளைக்கார ஆங்கிலேய மனிதர் நமது எல்லாத் தரப்பு மக்களிடையேயும் ஊடுருவி நேயம் காட்டி வாழ்ந்த புதிர்கள் இதில் உள்ளன, சின்ன மருதுவுடன் நெருங்கி பழகியதாகவும் குறிப்புகள் சொல்கின்றன.அந்த வம்சத்தின் தொரசாமி பற்றி பதிவு இருக்கிறது.


கொல்கொத்தா , சென்னை என்ற துறைமுகப் பட்டணங்களில் கால் பதித்ததில் இருந்து திரும்பி பணி அல்லது இவரது ஓய்வு ஆரம்பித்து மீண்டும் கொல்கொத்தா துறைமுகத்தில் கப்பல் ஏறி திரும்பி செல்வது வரை இயற்கை , செயற்கை, போர், மரணம், போன்றவற்றில் இருந்து இவரும் இவர், இவரது , குடும்பம், உறவு, நட்பு, சூழல் எல்லாம் உயிருடன்  பயணம் செய்துள்ளன என்பவை நிறைய முரண்களுடன் பதிவு செய்யப் பட்டுள்ளன.


பர்மா, இலங்கை,சீனா, சீனா  உள்ளடங்கிய இந்த ஆங்கில ஏகாதிபத்தியத்தில்  எல்லா இடங்களிலும் இவர் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஊழியராக கிழக்கு மேற்காக வடக்கு தெற்காக வாழ்ந்திருக்கிறார். அதில் தெற்கே ஓமலூர், சங்கரி துர்க், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், பெருந்துறை, ஈரோடு, சேலம் COIMBATORE இப்படி எல்லா இடங்களிலும் இவரது பயணம் நடந்திருக்கிறது. அப்போது மேட்டூர் அணையும் மேட்டூர் என்ற ஊருமே இல்லை. காவிரி நதியும் வெள்ளமும் இருந்திருக்கிறது.


கலிலியோவை அறிவியலில் தந்தை என்பார், அவரை ஐசக் நியூட்டன் சீடராகத் தொடர்ந்தார் என நாடு வேறான போதும், காலம், நூற்றாண்டுகள் வாழ்ந்த காலம் வேறான போதும் முயற்சிகள் தொடர்ந்தன என்பது போல இந்த நபரை நான் தொடர்ந்திருக்கிறேன்.


இது இராமகிருஷ்ணர்,விவேகானந்தர்,நிவேதிதா,பாரதி,பாரதிதாசன்,சுரதா, பட்டுக்கோட்டை போன்ற குரு சீடர் போன்ற தொடர் வாழ்வல்ல பாரம்பரியம் அல்ல. இது வேறு.நானும் அந்த மனிதர் பயணம் செய்த இடங்களில் ஒரு துளி வடக்கே, தெற்கே, கிழக்கே, மேற்கே இந்தியாவில் எனது இளமைப் பருவத்தில் சில இடங்களைத் தொட்டு இயற்கை வாரி இறைத்த இன்ப, துன்ப நிகழ்வுகளில் அனுபவித்த காரணத்தால் இந்த வாழ்வை படிக்க நேர்ந்ததோ என்ற எண்ணம் என்னுள் எழுவதை தடுக்க முடியவில்லை. ஆனால் அது வேறு எனது வாழ்வு வேறு. அதன் ஒப்பீடு துளியும் பொருந்தாது என்றாலும்...


இதை எப்படி படிக்க நேர்ந்தது எனில்: ஊமைத்துரை வரலாறு, அதைக் கண்டு வியந்த மனம், கெட்டி பொம்மு எதிரியை அவர் தம் இடத்திலேயே சென்று சந்தித்து போர் புரிந்து அதன் விளைவை சந்திக்க, அந்த சந்ததியின் ஊமைத்துரை, மருது சகோதரர்கள் எப்படி எதிர்களை எதிர் கொள்கிறார்கள் என்பதில் இருந்தே ஆரம்பித்தது.


இடது உள்ளங் கையில் பதர்களை வைத்து வலது உள்ளங்கை வைத்து அதை தேய்த்து காண்பித்து வாயில் ஒரு விசில் ஒலியை அனுப்பி எதிரிகளை ஊதித் தள்ளுங்கள் என தமது சுற்றத்திற்கு கட்டளை பிறப்பித்த ஊமைத்துரையின் ஆணையை ஏற்று எதிர்களை களம் கண்ட பதிவு, நமது மண்ணிலேயே நம்மை வீழ்த்த எதிரிகளுக்குத் துணை செய்யும் மனிதர்கள் அக்குள் மயிர்களுக்கு சமம் என்ற  பதிவு, ஏன் எப்படி ஒரு பாளையக்காரர் இறப்பான் தெரியுமா என ஒரு முதிய பாளையக்காரரை இறக்கும் தருவாயில் ஒரு பலகையில் வைத்து தூக்கிச் சென்று எதிரிகளிடம் காண்பிக்கையில் தமது இருபக்க மீசையை முறுக்கிக் காட்டிக் கொண்டு இப்படித்தான் வீரமாக சாவான் என்று செத்தும் சாகும்போதும் வீரமாக சாவது...இப்படிப் பட்ட சம்பவங்கள்...


சுமார் மார்ச் இறுதியில் இருந்து மே வரை ஊமைத்துரையை வேட்டையாடிய வரலாறு பதிந்துள்ளது... அந்த வீரியத்துக்காகவே இதைப் படிக்க முனைகையில் அது போன்ற நிகழ்வுகளை முன்னெடுத்த இந்த நூல் அதன் பின் இந்த ஜேம்ஸ் வெல்ஸ் நாட்குறிப்புகளில் அவரது பார்வையில் தனிப்பட்ட பாதையில் புகுந்து செல்கிறது. வேட்டையாடுதல், பல்வேறுபட்ட இயற்கைச் சீற்றம், நோய்கள்,பிணிகள், நட்பு, இப்படி போய்க் கொண்டே இருக்கிறது. கடைசியில் கிழக்கிந்தியக் கம்பெனி உலகின் மிக உயர்ந்த கம்பெனி நான் பணி புரிந்தது பெரிய வாய்ப்பு என்றபடி இந்த எழுத்தாளர் முடிவில் சொல்லிச் சென்றுள்ளார்.  James Welsh (12 March 1775 – 24 January 1861) was a Madras Army officer.[1] 85 ஆண்டுகள் வாழ்வில் சுமார் 40 ஆண்டுகள் இந்தியாவில். தமது 58 ஆண்டு கால பணியில்.


நிறைய குறு நில மன்னர்களை சந்திக்கிறார், அவர்களுடைய சுத்தம், சுகாதரமின்மை பற்றி எல்லாம் குறிப்பிட்டு உள்ளார், மேலும் ஒரு குறிப்பிட்ட இனப் பெண்கள் தாம் போட்ட துணியை அவர்களின் உடல் பாகங்கள் கன்றிப் போகும் வரை கழட்டுவதே இல்லை அவ்வளவு அழுக்குடன் நாற்றத்துடன் வாழ்கிறார் என்றெல்லாம் சொல்லி இருக்கிறார் அதைப் பற்றி எல்லாம் இப்போது அப்பட்டமாக சொன்னால் அவை மதத் துவேசம் என்ற பட்டியல் கீழ் கொண்டு வரப்பட்டு பெரிய பிரச்சனை கூட ஏற்பட்டு விடலாம் எனவே இந்நூலை படிக்க வேண்டிய நூல் தாம் என்ற ஒரே காரணம் பற்றியே இங்கு பதிவு செய்து பகிர்ந்துள்ளேன். ஒரு நல்ல அனுபவம் நல்ல நூல்தாமே.


பி.கு: புலியை, கரடியை,மான்களை , பறவைகளை வேட்டையாடுவது, ஒரே குண்டில் இரு பாம்புகளைக் கொல்வது, இப்படி ஏராளமான நிகழ்வுகள் சொல்லப் பட்டுள்ளன அவை பற்றி படிக்க விரும்புவோர் படிக்கலாம்.மொத்தத்தில் இதில் இந்திய விடுதலைப் போரில் உயிர் நீத்த, நாடு கடத்தப்பட்ட வரலாறுகளின் இடங்களும் இருக்கிறது என்பது தவிர மற்றபடி முழுவதுமான ஒரு வெள்ளைக்கார மனிதரின் வாழ்வுக் குறிப்புகள். படிக்கத் தக்கதுதான். ஆனால் பாரட்டப் பட வேண்டுமானால் இவர் நம் மனிதர் மேல் கொண்டிருந்த நட்பு பற்றியும் எல்லா நடப்புகளையும் சுய விருப்பப் படி மாற்றாமல் அப்படியே காலப் பதிவு செய்ய வேண்டும் போன்றவற்றிற்காக்த்தான்.


அன்றைய தமிழ்க் குடி செய்த வேல்கம்பு 20 அடி முதல் 30 அடி வரை நீண்டிருந்ததும், அதை எதிரியின் உடலை துளைத்து துருவி சென்று மாய்த்த வரலாறு பற்றி படிக்கும் போது 6 அடி கடப்பாரையையே நம்மால் தூக்க முடியவில்லையே இவர்கள் எப்படி இப்படி என எண்ணிக் கொண்டே ஜாவ்லின் த்ரோ, ஈட்டி எறிதல் போட்டி விளையாட்டு பற்றி எல்லாம் நினைவு செல்ல...ஒரு பதிவை முற்றுப் பெறாமலே முடித்துக் கொள்கிறேன்...ஏன் எனில் எண்ணங்கள் நிறைய எழ, எழுதுவது அவை பற்றி எல்லாம் இயலாதது என்பதால்...வாழ்வில் எப்படி எப்படி எல்லாமோ நாளும் நேரமும் செல்கிறது, ஒரு முறை இதைப் படிக்கவும் நேரம் செலவிடுங்கள் அது உங்கள் வாழ்வில் ஒரு நல் அனுபவத்தை ஏற்படுத்தும்...


நான் இதைப் படித்து முடித்ததும்  ஒரு பைத்தியக்கார மனநிலையில் சென்று இன்பம் அடைந்ததாக எமது துணை க் குறிப்பிட்டதும் அதை அப்படியே அதே மனநிலையுடன் இதை யாம் அனுபவிக்க காரணமாக இருந்த மற்றொரு துணைக்கு நான் செய்தி பகிர்ந்து கொண்ட நினவலைகளுடன்....



மறுபடியும் பூக்கும் வரை 

கவிஞர் தணிகை

P:s: In their Military strength STARTS with  warriors  in hundreds, grows in many thousands and ends in lakhs The Military contains Native...Local or Indian sipoys, musselmans,Arabs, English with cavalry, artillery, infantry even with Elephants etc.Selfishness, Money making mind,Poverty,Lot of small kingdoms, India's wealth, and plundering...All makes this history and lot of English men or East Indian company men or England men are also killed in  many thousands  and lakhs...these are also reasons before Gandhi appearance in our Liberation fight  against Whites to  Quit our nation. we lost our sacrificed souls in many crores of numbers to this achievement to make our country free from them ...




Saturday, November 22, 2025

திருமண வாழ்த்து மடல்: கவிஞர் தணிகை

 

திருமண வாழ்த்து மடல்: கவிஞர் தணிகை

 

நாள்: 30.11.2025 ஞாயிறு இடம்: கந்தி குப்பம் விண்ணரசி ஆலயம்

மணமகன்: பொறி:P.சுனில் ஜெரோம்M.E           மரு.A.பிலோமின் பிரிசில்லா.M.B.B.S,

 

கண்டேன் ஒரு நல்மனிதரை அன்றொரு நாள்

 சேலம் குகை  ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்

கலாம் மாமனிதர் பேர் சொல்லி முதல் சந்திப்பிலேயே

ஆயிரக்கணக்கான பள்ளிச் சிறார்களுக்கு எனது உரையை

வழங்கச் செய்தார்.

 

இவரும் சாதரண மனிதரல்ல பள்ளியை விரிவுபடுத்தி

ஆயுளை ஆன்மாவை விதைத்தவர், அன்று முதல்

இன்று வரை அவருடன் கலந்த அந்த மணி நேரங்கள்

என்றும் பசுமையுடன்.

 

நல் ஆசிரியர் விருதைப் பெற தகுதியான இவர் என்றும்

எனது உறவைத் தொடர்வதே எனக்குப் பெருமைஇவர்

நல் ஆசிரியர் விருதைப் பெற்றதால் ஆசிரியர் குலத்துக்கு(ம்) பெருமை

முகாம் நடத்த முகம் சுளிக்காமல் தன்னால் இயன்றதை

செய்த பெரிய உள்ளம் அவர்தான் பனிமேதாஸ் எனும் மேதை.

 

M.பனி மேதாஸ் M.Sc,M.Phil,M.Ed, இணையர் :A எமிலி ஜோன் ஆப் ஆர்க் M.A,Phil,B.Ed

இருவரின் இளைய புதல்வன் பொறியாளர்: சுனில் ஜெரோம்

மருத்துவர் பிலோமின் பிரிசில்லா  இணையவிருக்கும்

திரு நாளில் ஒரு நாளாய் ஞாயிறு வருகிறது.

 

தெய்வம் போற்றுதும், செம்மழை போற்றுதும்

ஞாயிறு போற்றுதும், நானிலம் போற்றுதும்

மதங்களைக் கடந்து அரிய உள்ளங்களை மனித நேயத்துடன்

அரவணைத்து வாழ்த்தை  என்றும் கோர்க்கிறோம்

எமது குடும்பத்தின் மனமலர்களின் மணமாக....


 

அன்பு மனங்கள்

கவிஞர் தணிகை

இணையர்: .சண்முகவடிவு

புதல்வர்:T.G.R.S  மணியம்.B.E,

திருமண(ம்) 01.12,2025 வாழ்த்து : கவிஞர் தணிகை

  

திருமண(ம்)  01.12,2025 வாழ்த்து மடல்

தாரமங்கள கைலாய நாதர் ஆலயம் & கரிகால் நகர்     மண்டபம்

மணமகன்: ரிஷி விக்ரம் B.E,     மணமகள்:  நவீனாB.Tech


 

எனது சுவர் எழுத்துகளை தவறாமல் பெரியவர் ஒருவர் படிப்பார்

அவரும் நானும்  பேசியதாக நினைவில்லை...அவர் S.M.  தனபால்

 

அவரது பெயரன் ரிஷி விக்ரம் நவீனா கரம் கோர்க்கும்

திருமண விழாவிற்கு மகன் நந்தகுமார்

வாழ்த்த அழைக்கும் நேரம் பல சுற்றமும் சூழமும் வந்திணையும் நேரம்

 

உரிய நேரத்தில் கிடைக்கும் சொல் வெள்ளித் தட்டில் வைத்த பொற்கனி

என்கிறது விவிலியம்.

அல்லா கொடுக்க நினைப்பதை எவராலும் தடுக்க முடியாது என்கிறது முகமதியம்

பதினாறும் பெற்று பெருவாழ்வு  வாழச் சொல்கிறது  எமது ஆன்மிகம்

 

மணமக்கள் மன ஒருமைப்பாட்டுடன் ஈருடலும் ஓருயிருமாய் காலமெலாம்

வாழையாக, அருகாக, ஆலாக,மூங்கிலாகஎன்றும் வாழ வாழ்த்துகிறோம்

 

என்றும்

கவிஞர் தணிகை

T.S.வடிவு

T.G.R.S.மணியம் குடும்பத்தார்.


திருமண(ம் )வாழ்த்து மடல் 27.11.2025 தாரமங்களம்

 

திருமண(ம்) வாழ்த்து மடல்

27.11.2025  தாரமங்களம்

கைலாய நாதர் ஆலயம் &  ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி குமரப்ப முதலியார் வகையறா சமுதாயக் கூடம்


 

புவனேஷ்C.A.inter               மகாலட்சுமி/ சுவேதா B.A, B.Ed.

 

அலைகளில் அகடும் முகடும் அடிக்கடி வருவதுதான்  விழுவதுதான் எழுவதுதான்

எம் குடும்ப வாழ்வின் அலைகளில் ஓர் அலையின் அகட்டில் இருந்தோம் தொய்வுடன்

 

எங்கிருந்தோ வந்தான் இடைச் சாதி நானென்றான் இங்கிவனை நான் பெறவே

என்ன தவம் செய்து விட்டேன்.இன்றிவன் உள் வட்டத்தில் வந்து நிற்க

சகோதரன் சங்கரலிங்கம் இணைத்து வைத்தான் அன்றிவனை.

 

பெயரே அப்போதுதான் எனக்கு அறிமுகமானது கழுமலை நாதன்

அப்பெயரில் கடவுள் தென்முகத்தில் உண்டென்றார்

அவரின் செல்வ மகன் புவனேஷ் சுவேதா வாழ்வில்

வந்திணையும் நேரத்துடன் எனது நேரமும் இணைந்து கொள்கிறது இணையத்தில்

 

புவி இருக்கும் வரை அந்த அலை கடல் இருக்கும் வரை

புவனேஷ் சுவேதா தம்பதியரின் வாரிசுகள் கழுமலைநாதன் கோமதி பேர் சொல்லி

வாழ்க வளமுடன்  வாழ்க வையத்தில் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ

எம் வாழ்த்துகள்

என்றும்

கவிஞர் சுப்ரமணியம் தணிகாசலம்

. சண்முக வடிவு

..ரா.சு. மணியம் குடும்பத்தார்

Friday, November 7, 2025

என் வீட்டுத் தோட்ட‌த்தில் இறந்து போன கொடி: கவிஞர் தணிகை

  என் வீட்டுத் தோட்ட‌த்தில் இறந்து போன கொடி: கவிஞர் தணிகை



அந்தப் பீர்க்கங்காய் கொடி எப்படி மண்ணிலிருந்து பிய்ந்து போனதோ தெரியவில்லை,இலைகள் எல்லாம் வாடிக் கொண்டிருந்தன, ஒரு 4 மணி நேரம் அடியேனும் துணைவியாரும் வெளியில் சென்று வந்து திரும்பவும் பார்த்த போது அவர் பார்த்து அதை என்னிடம் தெரிவிக்க, பார்த்தேன்.


இராமலிங்க வள்ளலார் போல வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் மனம் மிக வாடினேன், வாடிக் கொண்டிருக்கிறேன் எனவே இந்தப் பதிவு.


அதை மண்ணில் மறுபடியும் பதித்து வைத்துப் பார்த்தேன் வீண் முயற்சி என்று தெரிந்த போதும்.


வெற்றுப் பூக்களாகவே பூத்துக் காய்ந்து விழுந்து கொண்டிருந்த போதும் அது பலனளிக்கும் என்று பெரிதும் நம்பிக் கொண்டிருந்தேன். கடைசியில் ஒரு பிஞ்சு ஒரு அடிக்கும் குறைவான‌ நீளம் இருக்கும் விட்டிருந்தது. அது இனி பெரிதாக வாய்ப்பில்லை. எனவே அதைப் பறித்து விட்டேன்.


கொத்து அவரைக்காய் (கொத்தவரங்காய்), அவரைக்காய் போன்ற‌ செடிகள் என் வீட்டுத் தோட்டத்தில் பலன் தருகின்றன பலம் தருகின்றன.செடிகளோடு கொடிகளோடு சேர்ந்து நிறைய கண்ணுக்குத் தெரியும் கண்ணுக்குத் தெரியா நிறைய பூச்சி இனம் மற்றும் களைகள் யாவும் பயிர்த் தொழில் எவ்வளவு கடினமானது என எனக்கு விளக்கி வருகிறது.


வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் சொல்லியபடி சுண்டைக்காய் இலைகளை நிறைய எடுத்து அரைத்துப் பிழிந்து சாறு எடுத்து எல்லா செடிகள் கொடிகள் மேல் எல்லாம் தெளித்தேன், உண்மை, அவர் சொல்லியிருந்தபடி அவரைக்காய்களை சிதைத்துக் கொண்டிருந்த அஸ்வினிப் பூச்சிகள் எல்லாம் அறவே இல்லை.


இரு முறை களைச்செடிகளை சுத்தம் செய்யும் போது எனக்குக் கிடைத்த பரிசாக கையில் முழுதும் மூன்று புள்ளிகளுடன் ஏதோ பூச்சி கடித்து வலது கை முழுதும் நமைச்சல், அரிப்புடன் தழும்புகள் கை நிறைய‌ தொடராக விளைந்து தொல்லை தர ஆரம்பித்து விட்டன ஆனாலும் பயிர்த் தொழிலை செய்யவே ஆர்வம் ஆனால் அது ஆர்வக் கோளாறே.


இரத்தம் உடல் உயிர் உடமை குடும்பம் யாவற்றையும் தியாகம் செய்த எண்ணற்ற இந்திய விடுதலை வீரர்கள் பற்றியோ 78 ஆண்டுகளுக்கும் மேலாக சென்று கொண்டிருக்கும் இன்றைய அரசியல் பற்றியோ இந்தப் பதிவில் 

 அடியேன் எதையுமே குறிப்பிடவே இல்லை. ஆற்றாமையால் வந்த பதிவு இது இல்லை. ஆற்றியமையால் வந்த பதிவு.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


Friday, October 31, 2025

திருமணமும் வரவேற்பும்( நவம்பர் 02 & 03 -2025) வாழ்த்து(ம்) மடல்

                                                          மணமிகு மலர்கள்

S.G.குமரன் B.E, P. ஹரிணி பிரியாB.E கரம் கோர்க்கும்

கோபால் கனகம் வீட்டுக் குடும்ப விழாவில்

வாழ்த்தமைத்து அதை விண்வெளி

மண் வழி அனைவர்க்கும் சேர்க்க

ஒரு கருவியாக இந்த இணையம்

நமை இணைத்திருக்கிற வேளை

நற்பொழுது .

 

நடைப் பயிற்சி நண்பர்

கோபால் ஒரு மனிதத்தின் மிகச் சரியான பிரதிநிதி

காலா காலத்தில் தவறாது எல்லாவற்றையும் செய்ய

இயற்கையும் குடும்பமும் அவர் முயற்சியுடன்

உறு துணையாகி இருக்கிறது

 

அவருக்கும் அவர்தம் குடும்பத்தார்க்கும்

மணமக்களுக்கும் எல்லா வளங்களையும்

வழங்கி இயற்கை அருள் புரியட்டும்

பிரார்த்தனையுடன் வாழ்த்தையும் இணைக்கிறேன்

அன்புடன் என்றும்

கவிஞர் தணிகை

..வடிவு

..ரா.சு. மணியம்.





















Friday, October 17, 2025

BALAJI ENTERPRISES 19.10.2025

                                                   பாலாஜி எண்டர்பிரைசஸ்



                                  பிரவீன்குமார் என்ற பேர‌மைதிப் பெருங்கடலும்

                                      தினேஷ்குமார் என்ற செயல்புயலும்

                                   சங்கரலிங்கம் என்ற அளப்பரிய சக்தியுடன்.


                                                 உலகெலாம் ஒளி பெறட்டும்

                                                            வாழ்க வளர்க‌

                                                             வாழ்த்துகள்

                                               சொல்லும் வார்த்தைகளும்

                                                    பெருமை பெறுகிறது 

                                                      ஒளி பெறுகிறது

                                                    என்றும் அன்புடன்

                                                   கவிஞர் சு. தணிகை

                                                        குடும்பத்தார்


Saturday, October 4, 2025

அறிவியல் அவசியம் ஆன்மீகம் மனிதத்துக்கு அத்தியாவசியம்:கவிஞர் தணிகை

 அறிவோம் ஹரி ஓம் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீ ராம் ஹே ராம் சிவா வாசி வாசிவா: கவிஞர் தணிகை



ராம என்ற இரண்டு எழுத்து மந்திரம் என்கிறார்.இந்த ராம என்ற நாமத்துக்கான இரண்டு எழுத்தையும் "ஓம் நமோ நாராயணாய என்ற பேரில் எடுப்பாகத் தெரியும் உச்சரிப்பான‌ ரா என்ற எழுத்தையும் " ஓம் நமசிவாய" என்ற பேரில் எடுப்பான‌ உச்சரிப்பாக‌ இருக்கும் "ம" என்ற எழுத்தையும் சேர்த்து பெயரிட்டார்கள் என்ற செய்தியைப் படித்திருக்கிறேன் அது அதே சமயத்தில் சைவம் வைணவம் இரண்டும் சேர்ந்த ஒன்றே என்பதைக் குறிப்பதாகவும் அதை கையாள்வதாக சொல்லி இருக்கின்றனர்...


எனக்கெப்படி யதேச்சையாக் காந்தி, தெரஸா, கலாம் என்ற மூவரும் வழிகாட்டியாக இருக்கும் நேரத்தில் மூவரும் மூன்று மதத்தை சார்ந்தாராக வாழ்ந்து வந்து அமைந்ததும். இருப்பது போல...


அறிவோம் என்பதில் ஹரி ஓம் என்ற உச்சரிப்பை சற்றே மாற்றினால் இரண்டும் ஒன்றாக‌ இருப்பதாக எனக்குப் படுகிறது.


கம்பராமாயணத்தில் மிகச் சிறந்த பாடல்களில் சில:


நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே

திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே

சென்மமும் மரணமும் இன்றித் தீருமே

இம்மையே "ராம" என்ற இரண்டெழுத்தினால்...


மும்மை சால் உலகெக்கெல்லாம் மூலமந்திரத்தை முற்றும்  

தம்மையே தமர்க்கு நல்கும் தனிப் பெரும் பதத்தைத் தானே

இம்மையே எழுமை நோய்க்கு மருந்தினை 

ராம எனும் செம்மை சேர் நாமம்.


ஜயது ஜயது மந்திரம் ஜன்ம சாபல்ய மந்திரம்

ஜனன மரண விச்சேத பேத கிலேச மந்திரம்

சகல நிகம மந்திரம் சர்வ சாஸ்த்ரைக மந்திரம்

ரகுபதி நிஜ மந்திரம் ராமம் ராமேதி மந்திரம்


என்று சொல்லும் கம்பர்...


நதியின் பிழையன்று நறும்புனலின்மையற்றே

பதியின் பிழைய‌ன்று பயந்து நமைப் புரந்தாள்

மதியின் பிழையன்று மகன் பிழையன்று மைந்த‌

விதியின் பிழை நீ இதற்கெனை வெகுண்டதென்றான்..


என்று சீதையை இராவணன் தூக்கிச் சென்ற பின் இலக்குவன் சகோதரன் ராமனைப் பார்த்து கடிந்து கொண்ட போது ராமன் சொல்வதாக பாடல் அமைந்துள்ளது.


இன்று பிரதோஷம்...சிவனுக்கும், இன்று மூன்றாம் ( புரட்டாசி ) சனிக்கிழமை திருப்பதி ஏழுமலையானுக்கும் ஒரு சேர வந்துள்ளதால் சைவமும் வைணவமும் வணங்கும் சிறப்பு நாள் எனப்படுகிறது.

ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டி வர்த்தனம் உர்வாருகமிவபந்தனாத் ம்ருத்யுர் முச்ய மாம்ருதாத்...என்னும் உயிர் வழங்கும் மந்திரத்தை சிவபெருமானை விபத்துகளில் இருந்து காக்கவும் எல்லா செல்வ வளங்களையும் வழங்க வேண்டி தினமும் வெளியே செல்லும் முன் சொல்லிச் செல்ல வேண்டும் என்ற கருத்து அறிவுரைகளும் உள்ளன...


வாசி என்றால் மனித உடலில் உள் செல்லும் மூச்சுக் காற்று... வாசி அடக்கல் என்பது தியான வழியில் பிராணாயமத்தில் வருகிறது. வாசி வாசி என வேகமாக உச்சரித்துப் பாருங்கள் அது "சிவா" என்று வரும்...சிவம்

உருவமற்றது, வாசி என்றால் குதிரை என்ற பொருளும்  இருக்கிறது தமிழில்: காசினி


காசினி இருளை நீக்கும் கதிரொளியாகி யெங்கும்

பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தை நல்கும்

வாசியேழுடைய தேர்மேல் ஏறி மஹாகிரி வலம் வந்த‌

தேசிகா எனை இரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி போற்றி

 என்ற ஒரு கதிரை வணங்கும் பாடல் உண்டு. பொருளும் அறிவியலும் இதன் முரண்கள் சொல்லியபோதும்...


நேற்றைய செய்தி: அறிவியல் மனித உடலின் தோல் செல்களை எடுத்து சினைமுட்டையில் இணைத்து கருவுறுதல் செய்திருப்பதாக குழந்தையை அப்படி உண்டு பண்ண முடியும் அதற்கு இனி கணவன், மனைவி காமுறுதல், இணைதல் எல்லாம் தேவை இல்லை இது 10 ஆண்டுகளில் வந்தமையும் என செய்தி...


பிரம்மாவின் தொழிலை மனிதம் எடுத்துக் கொண்டதா?

காக்கும் கடவுள்...அழிக்கும் கடவுள் பற்றி எல்லாம் விரிவாக எழுத வேண்டும் என்ற அவா உண்டு...ஆனல் மனிதம் தமது உடலென்னும் விந்தையான அதிசயத்தையே முழுதும் உணர்ந்து கொள்ளாமல், தெரிந்து கொள்ளாமல் உயிர் பிரிதல் ஆன்மீக முறை பற்றி ஆர்வமுறாமல் செவ்வாய் கோளில் நிலம் வாங்க முயற்சித்து நீர் அடையாளத்தை ஆய்ந்து வருகிறது...


அறிவியல் அவசியம் ஆன்மீகம்  மனிதத்துக்கு அத்தியாவசியம் என்பதை நடந்த‌ நடக்கும் சம்பவங்கள் உணர்த்துகின்றன‌


ஹே ராம் என காந்தி கோட்ஸேவால் சுடப்பட்டு உயிர் விடும் முன் முன‌கியதாக உள்ள செய்திகளில் முரண் உள்ளன ஆனல் ஹே ராம் படத்தை எடுத்த  கலை ஞானி அவரது கொள்கையான மதுவே எல்லா பாவங்களுக்கும் அடிப்படை என்றதையும், அரை மணி சர்வாதிகாரியாக வாய்ப்பு இருந்தால் இந்தியாவின் எல்லா மதுக்கடைகளையும் மூடுவேன் என்ற தேசப் பிதாவின் கொள்கைக்காகவும் நிறைவேற்ற‌ எந்த முயற்சியும் செய்ததாக யாமறியோம். அறிந்தது அவரது தந்தை கூட மது,மாது, புகை போன்றவற்றை தொடக்கூடாது என்று சினிமாத்துறைக்கு சென்ற போது வாக்குறுதி செய்ய வேண்டி கேட்டதாக.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

வாசி: படி...மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே...அகத்தியர்

(சிந்தியுங்கள் சொல்லாத விடயங்களும் புரியும்)



Tuesday, September 30, 2025

பிரார்த்தனையா தியானம் உறக்கமா?: கவிஞர் தணிகை

 பிரார்த்தனையா தியானம் உறக்கமா?



தியானப் பயிற்சியில் ஈடுபடுவோரைத் தவிர வெளிப் பார்வையாளர் இதை பிரார்த்தனை, உறக்கம் என்றும் கூட சொல்வதைக் கேட்டதுண்டு. ஏன் கடவுள் மறுப்பு சிந்தையுடையார் கூட தியானம் கற்கலாம். புத்தர் கடவுள் பற்றிப் பேசவில்லை... வினை தொடரும்...என்பதே அவரது சுருக்கமான தத்துவம்... இன்னும் சொன்னால்  ஆசையே அழிவுக்கு காரணம்...தியான வாழ்வு மேற்கொள்ள உடலை வருத்துவது கூடாது. உடல் ஒரு ஓடம். அதைக் கொண்டுதான் வாழ்வுக் கடலை நாமனைவரும் கடந்தாக வேண்டும்.


எனவே உடல் வளர்த்தோர் உயிர் வளர்த்தோரே...உறக்கம், ஒழுக்கம், உணவு, வாழ்வு எல்லாவற்றையும் உள்ளடக்கியது தியான வாழ்வு முறை. அடுத்த உயிர்க்கு ஊறு செய்யாத நெறிகளும், எல்லா நேரத்திலும் உண்மையைக் கடைப் பிடித்தல் போன்ற நெறிகளும் இதனுள் அடக்கம்...


கோபம், பொய்கள், கவலை, ப‌யம், வெட்கம், வேட்கை யாவற்றில் இருந்தும் மீட்க யமம், நியமம்,ஆசனம், பிரணாயமம், பிரத்யாஹாரம்,தாரனை, தியானம், சமாதி அல்லது உள் அடங்கல் மூலம் மனிதத்தை மேன்மைப் படுத்துவதும் மாட்சிமைப் படுத்திக் கொள்வதும்...


ஆற்றலை அழிக்கவோ ஆக்கவோ முடியாது...ஒரு வகையில் மறையுமாயின் பிறிதொரு வகையில் வெளித் தோன்றும்...இயற்பியல் அடிப்படை விதி...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

குடிகாரக் கூத்தாடிகள்: க‌விஞர் தணிகை

 குடிகாரக் கூத்தாடிகள்: க‌விஞர் தணிகை



காமராசர்: கூத்தாடிகளிடம் நாட்டைக் கொடுத்தால் கூத்தியாளிடம் கொடுத்து விடுவர்

காந்தி:  நான் சர்வாதிகாரியாக அரை மணி இருக்க நேர்ந்தால்  இந்தியாவில் மதுக் கடைகளை மூடிவிடுவேன்

பாரதி: எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் ஓர் விலை எல்லோரும் இந்நாட்டு மன்னர்


க்ளாப்: ரோல் காமிரா ஆக்சன்,கட் இயக்குனர் சொல்லியபடி ஆடும் கைப்பாவைகள்

இயக்குனர், கதை வசனகர்த்தாக்கள், பாடல் எழுதுவார், இசை,பின்னணி, ஒளிப்பதிவு,ஒலிப்பதிவு, ஒட்டல் வெட்டல் இப்படி அனைவரும் ஒருங்கிணையும் சினிமாவில் நடிகர்களுக்கு மட்டும் ஊதியம் எதற்கு இவ்வளவு?


பிணம் எரிப்பார்க்கும் அடக்கம் செய்வார்க்கும், தூய்மைப் பணியாளர்க்கும் தானே ஊதியம் அதிகம் இருக்க வேண்டும்?


அரசு விழாவில் மதுவை நுகர்ந்த மாமேதைகளைப் பற்றி கூசாமல் பேசுகிறது தமிழக மேடைகள்... அவர்கள் எல்லாம் மானிடப் பிறவியே அல்ல என்கிற வார்த்தெடுப்புகள், வளர்த்தெடுப்புகள்...


இறந்து போன நம் மண்ணின் மைந்தர்களே அவர்கள் என்ன தேவர்களா? தேவதைகளா? அவர்கள் உடலுக்கும் கழிவு உண்டு, துர்நாற்றம் உண்டு, வியர்வை உண்டு பிறர்க்கு ஊறு விளைவிக்க முயலாதவர் வாழ்வை விட வேறு எந்த வாழ்வும் உயர்ந்ததல்ல. மக்களும், அரசும், கட்சிகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை பின்னிப் பிணைந்தவை.


யாரது கடவுளா? 

கூட்டத்தில் குடிநீர்ப் பாட்டில்களை வீசினால் முண்டியடிக்க மாட்டார்களா என்ற அடிப்படை அறிவற்றார் கூட நமது தலைவர்களா?


மதுவே எல்லா பாவங்களுக்கும் அடிப்படை என்ற  மகாத்மாவின் சிலைக்கு சாயம் ஊற்றி அசிங்கப் படுத்தல் பற்றிய‌ நடந்த செய்திகள் இன்றும் வந்திருக்கிறது


சாலை விதிகளை கற்றுத் தரவேண்டிய கல்விச் சாலைகள்

உடல் ஆரோக்கியம் உடல் உறுப்புகளின் பராமரிப்பு, உடற்பயிற்சி, உட் கொள்ளல், கழிவு, வாய் சுகாதாரம், ஆசன வாய் சுகாதாரம், பற்றி எல்லாம் கற்றுத் தரவேண்டிய பெற்றோர்களும் ஆசிரியர்களும் எதற்கு கூட்டம், எப்படி கூட்டம்....என்ற கட்டுப் பாட்டையும், எவை சிறந்தவை, எவை தாழ்ந்தவை என்பது பற்றி எல்லாம் சொல்லித் தர வேண்டுமல்லவா? உலகுக்கே வழி காட்டும் ,வழி காட்டிய வள்ளுவம் வாழும் நாட்டில் இது யாவர்க்கும் தலைக் குனிவு.


கட்டுப்பாடு இல்லா விடுதலை, ஒழுக்கம் இல்லா சுதந்திரம், தியாகம் இல்லா சாதனை பயனற்றது என்றார் சர்வ பள்ளி இராதாகிருஷ்ணன், தத்துவ ஞானியும் கூட.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

Sunday, September 14, 2025

பேரறிஞர் அண்ணா (துரை): கவிஞர் தணிகை

  பேரறிஞர் அண்ணா (துரை): கவிஞர் தணிகை



டாக்டர் காஞ்சீபுரம் நடராசன் அண்ணாதுரை:

15 செப் 1903 முதல் 03.02.1969


இவரின் பிறந்த நாள் நாளை வருகிறது. அதற்காக ஒரு பதிவு செய்யுங்கள் என என் அன்புத் தம்பி மதியழகன் அவர்கள் கேட்டதற்கிணங்க இந்தப் பதிவு.


அவர் ஒரு திறந்த புத்தகம். அவரைப் பற்றி எவருக்கும் தெரியாத விவரத்தை அடியேன் என்ன சொல்லி விடப் போகிறேன் அவரைப் பற்றி அனைவருக்கும் தெரியும். அவர் ஒரு பேரறிஞர்.அவர் உயரம் மனிதத்தின் உச்சம். அவருக்கு பிரதமர், குடியரசுத் தலைமைப் பதவி எல்லாம் கூட கிட்டி இருந்தாலும் அதை விட உயரமான‌ ஒரு படியாகவே இவர் வாழ்வு இருந்திருக்கும் இவை யாவற்றையும் விட பேரறிவு பெற்றவர். சிறந்த நிர்வாகி சிறந்த தம்பிகள் உடையார். இவர் முதல்வராக இருந்த காலத்தில்தாம் சென்னை மாகாணம் தமிழ்நாடு என்ற பேர் பெற்றது.

 டாக்டர் சி.என் அண்ணாதுரை அவரது மறைவுக்கு கூடிய மனிதக் கடலின்  உலக சாதனையை இன்னும் வேறு எந்த தலைவராலும் மிஞ்சவே முடியாத மறைவு அவரது புகழ் சொல்லும். மக்கள் குடியரசுத் தலைவராக இருந்த  அப்துல்கலாம் படித்த‌ பள்ளிக்கு சிறுவர்கள்தாமே அழைத்திருக்கிறார்கள் என்றெல்லாம் கருதாமல் சென்று அவர் பேசிய பேச்சை கேட்டு உத்வேகம், உற்சாகம் பெற்றதாக மாமனிதர் அப்துல் கலாம் அவர்களே தமது எழுத்துகளில் பதித்து குறிப்பிட்டிருக்கிறார்.


எல்லாவற்றையும் விட தம்பி , தம்பி என எழுதிப் பேசி ஒரு இயக்கத்தை ஏற்படுத்தி தமிழகத்தின் அரசியல் தலைவிதியை மாற்றியவர். வெளிப்பாட்டுத் தன்மை உடைய கண்ணியவான். தமது தவறைக் கூட ஏற்றுக் கொள்பவராகவே இருந்தார். எந்த குயுக்தியும், குள்ள நரித் தனத்தையும் தமது தனிப்பட்ட வாழ்விலும் அரசியல் பொதுவாழ்விலும் துளியும் பயன்படுத்தாதவர். தோல்வி கண்டு துவளாதவர், பள்ளி இறுதித் தேர்வில் தோற்ற இவர்  கல்லூரியில் சென்று இரண்டு முதுகலைப் பட்டம் பெற்றவராக பின்னர் தன்னை மாற்றிக் கொண்டவர்.  நன்கு படித்த மேதை.


கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற தாரக மந்திரத்தை இந்த பூமிக்கு வழங்கி அதன்படியே வாழ்ந்த மாமேதை. எளிமைக்கு காமராசரைச் சொல்வார்கள் அது போலவே இவர் வாழ்வும் மிக எளிமையானதே. மேலை நாடு போகும் போதுதான் கோட், சூட் அணிந்ததாகவும் அதுவும் அன்புத் தம்பி ஒருவர் செலவை ஏற்று தைத்து தந்ததாகவும் குறிப்புகள் உள்ளன.


ஒன்றே குலம் ஒருவனே தேவன் , என உலகெலாம் வாழும் மாந்தர் யாவரும் ஒன்று பட வேண்டும் ஒரே கடவுளைக் கருத வேண்டும் என தமது தலைவர் பெரியார் ஈ.வெ.ரா. அவர்களின் கடவுள் மறுப்பு சிந்தனையிலிருந்து மாறுபட்ட மக்கள் அனைவரும் ஏற்கும் படியான நிலையை எட்டி நாட்டை ஆள பாட்டை போட்டவர்


மேலும் சொல்லிக் கொண்டே போகலாம், நிறைய எழுதியிருக்கிறார். ஒரு சான்று: ஒரே இரவில் ஓர் இரவு என்ற நாடகத்தை எழுதி அது திரைப்படமாகவும் ஆனதெல்லாம் வரலாறு. சூழ்நிலை மறந்து ஆழ்ந்து படிப்பவர் ஒரு அறுவை சிகிச்சைக்கு மயக்க மருந்தே வேண்டாம் ஒரு புத்தகம் கொடுங்கள் என வாங்கி படித்துக் கொண்டே இருக்க அறுவை சிகிச்சையை முடித்துக் கொண்டார் என்பதும், சென்னை கன்னிமாரா (அப்போது மாபெரும் நூலகம் அதுவே) நூலகத்தின் அத்தனை நூல்களையும் படித்து முடித்தவர் என்பதும் எந்த கருப்பொருளைக் கொடுத்தாலும் எந்தவித தயாரிப்பும் இன்றி மேடையில் பேரூரை நிகழ்த்துவார் என்பதெல்லாம் இவரின் பெருமைக்கு சான்று. கல்கிதான் இவரது உரையைப் பார்த்து இவருக்கு முதலில் அறிஞர் அண்ணா என பட்டம் கொடுத்தார் என்பதும் காலத்தின் பதிவு.


இவரது ஆங்கிலப் புலமையை ஆங்கிலம் மெத்தப் படித்தாரும், ஆங்கிலேயரும் கூட வியந்து பார்த்திருக்கின்றனர் என்பது ஒரு பக்கம். 


பேரறிவு என்பதை ஞானம் என்பார் இவர் தமிழுக்கு கிடைத்த ஞானி.ஆங்கில மொழியை தமது சொற்பொழிவில் ஆட்படுத்தி எழுதி அனைவருக்கும் ஒரு வியப்பை ஏற்படுத்தி விடுபவர் என்பதெல்லாம் சொல்ல சுவையானது.என்ன இவர் அதிக நாட்கள் உயிருடன் இல்லை என்பதும், ஆட்சி அதிகாரத்தில் இல்லை என்பதும் இந்த மண்ணின் விதி. நல்ல தலைமைப் பண்பு கொண்ட நல்ல தலைவர். இவரின் ராஜ்யசபை பேருரை ஆங்கிலத்தில் மிக நல்ல நூல் அடியேனும் கூடப் படித்திருக்கிறேன். 

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு அவர்கள் இவர் பேச ஆரம்பித்தால் மெய் மறந்து கேட்டுக் கொண்டே இருப்பாராம் பாராளுமன்றத்தில்.எவரையும் தடுக்க அனுமதிக்க மாட்டாரம். தலைமையால் மெச்சத் தக்க பெருந்தலைமை.அறிவு செறிந்தார்க்கு அறிவு செறிந்தாரையே பிடிக்கும். சமய நெறிக்கு விவேகானந்தர் எவ்வளவு பங்களித்தாரோ அதே போல அரசியலில் இவர் பங்களித்திருக்கிறார் மக்கள் வாழ்வு நல்வாழ்வாக மலர தம்மால் ஆனதை எல்லாம் தமது குறுகிய வாழ்நாளில் அரிய உழைப்பால் செய்து சென்று விட்டார்.


பிறந்த நாள் நினைவு நாள் என்பதெல்லாம் இருக்கும் நாம் இவர்களின் சிறப்பு இயல்பை எண்ணிப் பார்ப்பதற்காகத்தானே கொண்டாடுகிறோம் அப்படிப் பார்த்தால் இந்த தமிழகத் தலைவரை உலகெலாம் இவர் தமிழுக்காகவும், ஆங்கிலத்துக்காகவும் கொண்டாடலாம்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை




Saturday, September 13, 2025

பூமிக்கு வெளியே உயிரின் முதல் தடயமா?

 நன்றி: பிபிசி தமிழ்

பூமிக்கு வெளியே உயிரின் முதல் தடயமா? செவ்வாயின் 'சிறுத்தை' தடத்தில் நாசா தீவிர ஆய்வு

செவ்வாய், சிறுத்தை தடம், உயிர் வாழும் சாத்தியம், நாசா

பட மூலாதாரம்,NASA/JPL

படக்குறிப்பு,பாறைகள் சிறுத்தைப் புள்ளிகள் போல் தோற்றமளிக்கும் வித்தியாசமான குறிகளால் மூடப்பட்டுள்ளன.
    • எழுதியவர்,ரெபேக்கா மோரல்
    • பதவி,அறிவியல் ஆசிரியர்

செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வித்தியாசமான பாறைகள், அந்த செந்நிற கிரகத்தில் கடந்த காலத்தில் உயிர்கள் இருந்ததற்கான மிகவும் ஆர்வமூட்டும் ஆதாரங்களை கொண்டிருக்கின்றன.

நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர் ஒரு தூசி நிறைந்த ஆற்றுப் படுகையில் கண்டறிந்த மட்ஸ்டோன் பாறைகளுக்கு, 'சிறுத்தை தடம்' (Leopard Spots) மற்றும் 'பாப்பி விதைகள்' (Poppy Seeds) எனப் புனைப்பெயர் சூட்டப்பட்டன.

இந்த அம்சங்கள், பழங்கால செவ்வாய் நுண்ணுயிரிகளுடன் தொடர்புடைய ரசாயன எதிர்வினைகளால் உருவாக்கப்பட்ட தாதுக்களை உள்ளடக்கியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

இந்த தாதுக்கள் இயற்கையான புவியியல் செயல்முறைகளால் உருவாக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இந்த அம்சங்கள் இதுவரை உயிர்கள் இருப்பதற்கு கண்டறியப்பட்ட மிகத் தெளிவான அறிகுறிகளாக இருக்கலாம் என ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் நாசா கூறியது.இந்த கண்டுபிடிப்புகள், நாசாவின் 'சாத்தியமான பயோசிக்னேச்சர்கள்' அதாவது (Potential Biosignatures) என்று அழைக்கப்படும் அளவுகோல்களை பூர்த்தி செய்யும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை.இவை உயிரியல் தோற்றம் கொண்டவையா என்பதை உறுதிப்படுத்த கூடுதல் ஆய்வு தேவை என்பதே இதன் பொருள்.

"இதுவரை இப்படி ஒரு விஷயத்தை நாங்கள் பெற்றதில்லை, அதனால் இதுதான் முக்கியமான விஷயம்," என்று லண்டன் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த கிரக விஞ்ஞானி பேராசிரியர் சஞ்ஜீவ் குப்தா கூறினார். இவர் இந்த ஆய்வின் இணை ஆசிரியர்களில் ஒருவர், இந்த ஆய்வு நேச்சர் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

"நாங்கள் பாறைகளில் கண்டறிந்த அம்சங்களை ஒருவேளை பூமியில் பார்த்தால், உயிரியல் - நுண்ணுயிரி செயல்முறைகளால் விளக்க முடியும். எனவே, நாங்கள் உயிரைக் கண்டறிந்தோம் என்று கூறவில்லை, ஆனால் இது உண்மையிலேயே எங்களுக்கு பின்தொடர வேண்டிய ஒரு விஷயமாக உள்ளது" என்று அவர் கூறினார்.

"இது ஒரு எஞ்சிய புதைபடிவத்தைப் பார்ப்பது போன்றது. ஒருவேளை இது ஒரு எஞ்சிய உணவாக இருக்கலாம், ஒருவேளை நாம் பார்த்தது வெளியேற்றப்பட்ட கழிவாக கூட இருக்கலாம்" என்று நாசாவின் அறிவியல் பணி இயக்குநரகத்தின் இணை நிர்வாகி நிக்கோலா ஃபாக்ஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

செவ்வாய், சிறுத்தை தடம், உயிர் வாழும் சாத்தியம், நாசா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பாறைகளுக்கு 'சிறுத்தை தடங்கள்' மற்றும் 'பாப்பி விதைகள்' என புனைப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த தாதுக்கள் நுண்ணுயிரிகளால் உருவாக்கப்பட்டவை என்பதை முழுமையாக உறுதிப்படுத்த ஒரே வழி, பாறைகளை பூமிக்கு கொண்டு வந்து ஆய்வு செய்வது மட்டுமே.

நாசாவும் ஈசாவும் (ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்) செவ்வாயிலிருந்து ஒரு மாதிரியை எடுத்து வரும் திட்டத்தை முன்மொழிந்துள்ளன, ஆனால் அதன் எதிர்காலம் மிகவும் நிச்சயமற்றதாக உள்ளது. அதிபர் டிரம்பின் 2026 பட்ஜெட்டில், அமெரிக்க விண்வெளி முகமையின் அறிவியல் பட்ஜெட் மிகவும் குறைவாகவே முன்மொழியப்பட்டுள்ளது. இதனால் மாதிரிகளை எடுத்து வரும் திட்டம் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது.

இன்று, செவ்வாய் ஒரு குளிர்ந்த மற்றும் வறண்ட பாலைவனமாக உள்ளது. ஆனால் பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, அது வளிமண்டலத்தையும் நீரையும் கொண்டிருந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன. இது கடந்த காலத்தில் வாழ்ந்த உயிரைத் தேடுவதற்கு ஒரு நம்பிக்கைக்குரிய இடமாக உள்ளது.

2021இல் செவ்வாய் மேற்பரப்பில் தரையிறங்கிய பெர்சிவரன்ஸ் ரோவர், உயிரியல் அறிகுறிகளைத் தேட அனுப்பப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக இது ஜெஸிரோ பள்ளம் என்ற பகுதியை ஆராய்ந்து வருகிறது, இது ஒரு காலத்தில் ஒரு நதி பாயும் ஏரியாகவும் இருந்தது.

கடந்த ஆண்டு பிரைட் ஏஞ்சல் ஃபார்மேஷன் என்ற பகுதியில் ஆற்றால் உருவான ஒரு பள்ளத்தாக்கின் அடிப்பகுதியில் சிறுத்தை தடம் என்ற பாறைகளை ரோவர் கண்டறிந்தது. இவை சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகள் பழமையானவை மற்றும் களிமண்ணால் உருவான பாறைகளான 'மட்ஸ்டோன்' என்று அழைக்கப்படும் பாறை வகைகள்.

"இந்த பாறைகளில் சில சுவாரசியமான ரசாயன மாற்றம் நடந்திருப்பதை அறிந்தோம், இதனால் நாங்கள் மிகவும் உற்சாகமடைந்தோம்," என்று நியூயார்க்கில் உள்ள ஸ்டோனி ப்ரூக் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜோயல் ஹுரோவிட்ஸ் கூறினார். இவர் பெர்சிவரன்ஸ் திட்ட விஞ்ஞானியும், ஆய்வின் முதன்மை ஆசிரியரும் ஆவார்.

செவ்வாய், சிறுத்தை தடம், உயிர் வாழும் சாத்தியம், நாசா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பாறைகளில் உள்ள தாதுக்கள் ஆய்வு செய்யப்பட்டன.

ரோவர் அதன் உள்ளக ஆய்வகத்தில் உள்ள பல கருவிகளைப் பயன்படுத்தி பாறைகளில் உள்ள தாதுக்களை ஆய்வு செய்தது. இந்த தரவு பின்னர் விஞ்ஞானிகள் ஆய்வு செய்வதற்காக பூமிக்கு அனுப்பப்பட்டது.

"நாங்கள் கண்டறிந்தவை, ஒரு ஏரியின் அடிப்பகுதியில் படிந்த மண்ணில் நடந்த ரசாயன எதிர்வினைகளுக்கான ஆதாரம் என்று நினைக்கிறோம். இந்த ரசாயன எதிர்வினைகள் மண்ணுக்கும் கரிமப் பொருளுக்கும் இடையே நடந்ததாகத் தோன்றுகிறது. இந்த இரண்டு பொருட்களும் எதிர்வினையாற்றி புதிய தாதுக்களை உருவாக்கியுள்ளன," என்று ஹுரோவிட்ஸ் விளக்கினார்.

பூமியில் இதே போன்ற சூழ்நிலையில், தாதுப் பொருட்களை உருவாக்கும் ரசாயன எதிர்வினைகள் பொதுவாக நுண்ணுயிரிகளால்தான் நிகழ்கின்றன.

"இந்த அம்சங்கள் இந்த பாறைகளில் எவ்வாறு உருவாயின என்பதை விளக்க இது ஒரு சாத்தியமான விளக்கமாக இருக்கும்," என்று ஹுரோவிட்ஸ் கூறினார். "நாம் இதுவரை கண்டறிந்தவற்றில் இதுவே வலிமையான மற்றும் மிகவும் உறுதியான பயோசிக்னேச்சர் எனத் தோன்றுகிறது"

விஞ்ஞானிகள் இந்த தாதுக்கள் நுண்ணுயிரிகள் இல்லாமல் எவ்வாறு உருவாகியிருக்கலாம் என்பதையும் ஆய்வு செய்தனர். இயற்கையான புவியியல் செயல்முறைகளும் இந்த ரசாயன எதிர்வினைகளுக்கு பின்னால் இருக்கலாம் என்று முடிவு செய்தனர்.

ஆனால் இவற்றிற்கு மிக அதிக வெப்பநிலை தேவைப்படும், ஆனால் பாறைகள் சூடாக்கப்பட்டவை போல் தெரியவில்லை.

"உயிரியல் அல்லாத சாத்தியங்களுக்கு சில சிரமங்களை நாங்கள் கண்டோம். ஆனால் அவற்றை முற்றிலும் நிராகரிக்க முடியாது," என்று ஹுரோவிட்ஸ் கூறினார்.

செவ்வாய், சிறுத்தை தடம், உயிர் வாழும் சாத்தியம், நாசா

பட மூலாதாரம்,NASA/JPL

படக்குறிப்பு,பெர்சிவரன்ஸ் பாறைகளின் அற்புதமான மாதிரிகளை சேகரித்துள்ளது.

பெர்சிவரன்ஸ் செவ்வாய் கிரகத்தை ஆராயும் போது பிரைட் ஏஞ்சல் ஃபார்மேஷனில் கண்டறியப்பட்ட பாறைகள் உள்ளிட்ட மாதிரிகளையும் சேகரித்து வருகிறது. இவை குப்பிகளில் சேமிக்கப்பட்டு, பூமிக்கு திருப்பி அனுப்பக் கூடிய விண்கலத்திற்காக செவ்வாய் மேற்பரப்பில் வைக்கப்படும்.

நாசாவின் இத்தகைய முயற்சிக்கான திட்டங்கள், டிரம்பின் பட்ஜெட் குறைப்பு அச்சுறுத்தலால் நிலுவையில் உள்ளன. அதேநேரத்தில், மாதிரிகளை எடுத்து வரும் ஒரு திட்டத்தை 2028ஆம் ஆண்டில் தொடங்க சீனாவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

நாசா பட்ஜெட் குறைப்பு முடிவு விவாதத்திற்கு உள்ளாகியிருக்கும் நிலையில், விஞ்ஞானிகள் இந்த பாறைகளை தங்கள் கைகளில் பெற ஆவலாக உள்ளனர்.

"இந்த மாதிரிகளை நாம் பூமியில் வைத்து பார்க்க வேண்டும்," என்று பேராசிரியர் குப்தா கூறினார்.

"உண்மையான நம்பிக்கையை பெற, பெரும்பாலான விஞ்ஞானிகள் இந்த பாறைகளை பூமியில் பார்த்து ஆய்வு செய்ய விரும்புவார்கள். இது பூமிக்கு எடுத்து வர வேண்டிய மாதிரிகளில் அதிக முன்னுரிமை கொண்ட மாதிரிகளில் ஒன்றாகும்." என்றார்

.மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை