Monday, February 26, 2024

இருபதாம் நூற்றாண்டு சிறு கதைகள் நூறு:கவிஞர் தணிகை

 இருபதாம் நூற்றாண்டு சிறு கதைகள் நூறு:கவிஞர் தணிகை



சீர் வாசகர் வட்டத்தின் முதுகெலும்புடன் வீ. அரசு என்னும் பதிப்பாளர் மலிவு விலையில் தமிழ் சிறு கதை  வட்டத்தை நிமிர்ந்தெழ வைத்திருக்கிறார்.அதற்கு என தமிழ் ஆர்வலர்கள் பலர் நிதி உதவி செய்துள்ளனர். இல்லையேல் பரிசுக்குரிய நூல்களாக முதலில் ரூ.300 விலையிலும் அதை அடுத்து ரூ.500 விலையில் 1064 பக்கங்கள் தொகுத்து 100 சிறுகதைகளை அற்புதமாக வழங்கி உள்ளனர்.2016 ஆம் பதிப்பில் 1214 பக்கங்கள் விலை ரூ.599 என தற்போது இணையத் தேடலில் இருக்கிறது.


இதைப் பற்றி சில வார்த்தைகள் சொல்ல வில்லை எனில் எனக்கு அது நெடு நாட்கள் நெருடலாக இருக்கும். இப்போதே சில நாட்கள் ஓடி விட்டன. மிக அரிய பணி . பாராட்ட வாய் வார்த்தைகள் போதா. கை எழுத்துகளும் போதா. என்னாலும் சில சிறு புத்தகங்களை தமிழ் உலகுக்கு கொடுத்தருள இயற்கை உதவி இருக்கிறது என்பதாலே இந்த நேர்த்தியான பெரிய நூலை இவர்கள் கொண்டு வர எவ்வளவு பாடுபட்டிருக்கிறார்கள் என என்னால் உணர முடிகிறது.


ஹோமம் , நாயனம், போன்ற கதைகள் நெஞ்சிலிருந்து மறையவே மறுக்கின்றன. சில கதைகள் பெயர் மறந்த போதும் அதன் மாந்தர்கள் என்னுள் இன்னும் பேசிக் கொண்டே இருக்கின்றனர். அதைப் பற்றி நிறைய சொல்ல வேண்டும் ஆனால் நீங்கள் படிக்க முனைவதே சிறந்தது.


புதுமைப் பித்தன் முதல் ஜெயகாந்தன் மற்றும் அந்தந்தக் காலக் கட்டத்தில் அவரவர் கைவண்ணத்தில் நேர்த்தியாக வடிவமைந்த‌ கை தேர்ந்த சிறுகதைகள் நூறை தெரிவு செய்து தொகுத்துள்ளனர். சில கதைகள் நேரம் பொழுது போக்க, சில கதைகள் படித்த மனதிலிருந்து கனத்தை எடுத்து வெளி எறிய முடியாமல், சில எரியம் விளக்கெனவும், வெளிச்சம் பரவச் செய்கின்றன.


சில கதைகள் ஏற்கெனவே படித்தவையும் இருக்கின்றன. எ.கா: ஜெயகாந்தன், புதுமைப் பித்தன், தி.ஜ.ர, மௌனி. நிறைய கதைகள் நான் மேலும் படிக்காதைவயே. முடிந்தவரை எல்லா எழுத்தாளர்களையும் கொண்டு வந்திருக்கின்றனர். அல்லது கொண்டு வர முயன்றிருக்கின்றனர் இருபதாம் நூற்றாண்டு சிறுகதைகள் பங்கெடுப்பில். எஸ். ரங்கராஜன் என்னும் சுஜாதாவின் கதைகள் ஏதும் இடம் பெறவில்லை என்பதில் எனக்கு சிறு குறையே.


காலத்தை 10, வருடம், 20 வருடம் எனப் பிரித்து வைத்து இருபதாம் நூற்றாண்டின் கதை கொண்ட பூ மாலை ஆக்கியுள்ளனர். நிறைய இது பற்றி எல்லாம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற அவா மிகையுறினும் எழுதும் மகிழ் இழைகள் அதிகம் மலராத ஒரு காலக்கட்டத்தில் எனது வாழ்வுப் பிரதேசம் மூழ்கி இருப்பதால் இத்துடன் இந்த பகிர்வுப் பதிவை நிறைவு செய்திருக்கிறேன்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


Tuesday, February 20, 2024

எளிய வீடு மருத்துவம் தேடு: கவிஞர் தணிகை

 எளிய வீடு மருத்துவம் தேடு: கவிஞர் தணிகை



கடந்த சில நாட்களுக்கும் முன் நண்பர்களுக்காக மருந்து என்ற தலைப்பில் சில கருத்துகளை பதிவு செய்திருந்தேன். அவை யாவும் புதியதல்ல. நம் நடைமுறையில் ஏற்கெனவே உள்ளவைதான். அது பற்றி மறுபடியும் பூக்கும் வேர்ட்பிரஸ் வலை தளம் மூலம் பல ஆண்டுகளுக்கும் முன்பே நான் பகிர்ந்தவைதாம்.


அன்றைய பதிவில் சில விடுபட்டவை:

1. வாய்வுத் தொல்லை அதிகம் உள்ளோர் காலை எழுந்தவுடன் பழைய நீராகாரம் அருந்திய பின் பச்சை உருளைக்கிழங்குச் சாறு ( ஜூஸ்) ஒரு டம்ப்ளர் அருந்தி வர தினமும் வாய்வுத் தொல்லை இராது.

பொதுவாக உருளைக்கிழங்கு சார்ந்த உணவு வகை வாய்வுதான். ஆனால் இங்கு கணிதம் போல மைனஸ் இன்டு மைனஸ் ப்ளஸ் ஆகிறது.


2. கற்றாழை சோற்றுக் கற்றாழை மிக அரிய தாவரம். இது நல்ல மலமிளக்கி. நோய் எதிர்ப்புத் தன்மை உள்ளது

தினமும் கூட உண்டு வரலாம். சர்க்கரை + தேன் கலந்து. அல்லது அப்படியே...இது பற்றி நான் எனது யூ ட்யூப் வலையத்தில் கூட வெளியிட்டதுண்டு. இன்றைய பிரதமர் நமோ அன்றைய முதல்வர் ஜெவுக்கு இதை பரிந்துரை செய்ததாகக் கூட நான் கேள்விப் பட்டதுண்டு. நண்பர் பாலு ஆகாஷ் உடனே இதிலும் அரசியல் இருக்கிறது என கோபித்துக் கொள்ள மாட்டார் என நம்புகிறேன். மேலும் பெண்களுக்கு பெரிதும் பயனாகும் அழகு சாதனப் பொருட்களில் பதனப் படுத்தும் முறைகளில் இந்த கற்றாழை பெரிதும் பயனாகிறது.


3. சுண்டைக் காய் / சுண்டை வத்தல்: என்பார் மோரில் கலந்து காய வைத்தது. வாரம் ஒரு முறையாவது வறுத்து உணவுடன் உண்டு வர உணவால் ஏற்பட்ட நச்சு வெளியேறும்.(புட் பாய்சன்)


4. சளி பிடித்தார்க்கு: கொள், ஆங்கிலத்தில் ஹார்ஸ் கிராம் நல்ல மருந்து. இரசம் வைத்து உணவுடன் உண்ண நல்ல குணம் இருக்கும்.


5. பிரண்டைக் கொடி, ஓமவள்ளி அதிலும் கற்பூரவள்ளி போன்றவை மிளகு சீரகத்துடன் சளி போன்றவைக்கு நல்ல மருந்து.


6. ஆவாரை, வெந்தயம் போன்றவை சர்க்கரை அல்லது நீரிழிவு வியாதிக்கு நல்ல மருந்து.


7. சிறியா நங்கை விஷ முறிவு


8. வேம்பு, மஞ்சள்,, இஞ்சி, மிளகு,சீரகம் போன்றவை  உடல் நலத்துக்கான அருமருந்து...


இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்...ஆனால் இதை எல்லாம் அவரவர் உடலுக்கு உகந்தால் நீடித்த காலம் பயன்படுத்தலாம் அல்லது பின் விளைவு வேறுபடின் நிறுத்தி ஆராய வேண்டும். ஏன் எனில் மிகுதியான சூடு கூட உடலுக்கு கேடாய் முடியும்.


தினம் 2, வாரம் 2, மாதம் 2, ஆண்டுக்கு 2 பற்றி எல்லாம் உங்களுக்கும் தெரியும் ஆனால் இவை எல்லாம் எந்த எந்த குடும்பங்களில் கடை பிடிக்கிறீர்கள் என்பதுதான் நம் முன் உள்ள கேள்வி.


நல்லா தண்ணீர் குடியுங்கள், உகந்த பழம் சேர்த்துக் கொள்ளுங்கள் கோடை வந்து விட்டது.


மறுபடியும்  பூக்கும் வரை

கவிஞர் தணிகை

Sunday, February 18, 2024

மருந்து: கவிஞர் தணிகை

 மருந்து: கவிஞர் தணிகை



செயலே புகழ் பரப்பும் வாய் அல்ல...அயர்லாந்து பழமொழி


தாயின் மாரில் பால் சுரந்து குழந்தை வாய்க்குச் சென்று புகட்டப் பட்ட பின் அந்த சிறு உதடுகளை தாய் ஒரு மெல்லிய துணியை வைத்து துடைத்து விடுகிறாளே எறும்பு ஈ கடிக்காமல் மொய்க்காமல் அங்கிருந்து ஆரம்பித்து விடுகிறது மருத்துவம்.


நீங்கள் : இரா. முத்து நாகு எழுதிய சுளுந்தீ என்னும் நாவல் படிக்க வேண்டும் பாண்டுவ மருத்துவம் பற்றி தெரிய.


இன்னும் கைவசம் இருபதாம் நூற்றாண்டு சிறுகதைகள் நூறு...மலிவு விலைப் பதிப்பு பக்கம் 1064 உட்பட கைவசம் 11 நூல்கள் பாக்கி முன் முற்கொண்ட வேலையாக இருக்க‌ அதற்குள் இந்தப் பதிவு அவசியமென உட்புக...


எனது "நேசமுடன் ஒரு நினைவதுவாகி" என்னும் 2006 பதிப்பு நூலில்: 43,ஆம் பக்கத்தில்: 

நிலை மாற்றம் என்ற தலைப்பில்:

மின்சாரம் மருந்து

காற்று மருந்து தீ மருந்து

மண் மருந்து மலை மருந்து

ஒளி மருந்து வெயில் மருந்து

இலை மருந்து நிழல் மருந்து

விஷ(ம்) மருந்து வேர் மருந்து

யாவும் மருந்து

குளிர் சூடாய்

ஒரு நேரத்தில்

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின்!

இனி பொருந்துமா? என்று ஓர் கருத்துப் பகிர்வு இருக்கும்.


அவரவர் உடலுக்கு முதல் மருத்துவர் அவரே. காந்தி வழி நூல்களைப் படித்து மண் சிகிச்சை, நீர் சிகிச்சை,பிரமசாரிய விரத கூனே முறை பற்றி எல்லாம் அறிந்து கொள்க.ஆனால் அந்த மண்ணும், அந்த தூய நீரும் தேடிப் பயன் பெறுக.( இப்போது அந்த மாசு படா நீரும் மண்ணும் இல்லை)


ஆங்கில அல்லோபதி எனும் மருத்துவம் அவசர அவசியமாக சில நேரங்களில் தேவை. ஆனால் அவை பக்க விளைவு இல்லாமல் இல்லை. அங்கேதான் வந்து பெரிய வேள்வியின் பயனாக நிற்கிறது: மூலிகை மருத்துவம், நாட்டு மருத்துவம், பாட்டி வைத்தியம், வீட்டு வைத்தியம்,இயற்கை வைத்தியம் ஆயுர்வேதம்,  சித்த மருத்துவம் யுனானி ஹோமியோபதி இப்படிப் பட்ட மாற்று மருத்துவங்கள்.


நல்லதை எல்லாம் படிக்க கற்றுக் கொள்ள‌ மனிதத்துக்கு  நேரமோ ஆர்வமோ இல்லை. எனவே மிகவும் சுருக்கமாகவே சொல்லப் புகினும் இது சற்று நீளமானதுதான் என் சொந்த அனுபவமும்.


கிணற்றுப் பூண்டு தழை...சாதாரண வெட்டுக் காயங்களுக்கு போதுமான மருந்தே.

குப்பை மேனி : சரும அதாவது தோல் வியாதிகளுக்கு மருந்தே

முடக்கறுத்தான் கீரை: மூட்டு வலிக்கு மருந்தே

அகசுத்திக் கீரை என்பதே: அகத்திக் கீரை

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.


அதில் ஒன்று: முருங்கை: வீட்டில் முருங்கை இருந்தால் முதுமையில் கோலின்றி நடக்கலாம் என்கிறது மருத்துவ மொழி ஒன்று.எங்கள் வீட்டில் அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை முருங்கை உள்ளதுதான்.முருங்கை சுலபமாக எளிமையாகக் கிடைப்பதுதான் என்பதும் இதன் சிறப்பு

எலும்புக்கு, முடி வளர்ச்சிக்கு பயன்படும் இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து , விந்து வீரியம் போன்றவைக்கு முருங்கைக் கீரை, முருங்கைக் காய் நல்ல மருந்து.


எனவே மகிழ்ச்சி என்னும் சமூக ஊடக பயன்பாட்டில் எனது தொடர்பில் இருக்கும் தோழர் ராஜேந்திரன் சொல்லிய முருங்கைக் கீரை + நாட்டுச் சர்க்கரை பற்றிய செய்தியை நான் பகிர்ந்திருந்தேன். அது அனைவர்க்கும் பயன்படும் என்பதால்.


எனக்கு எனது சேவைக் காலத்தில் கையில் வெண் அல்லது சிவப்பு படலங்கள் தோன்ற ஆரம்பித்திருந்தன. அப்போது நான் எனது வட இந்திய சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு பாலமலையில் சிறிது காலச் சேவையுள் மூழ்கியபடி இருந்தேன்.


அந்த தேடலின் போது: பெருமருந்துக் கொடி அல்லது வண்டுக் கடி மருந்து என்ற ஒரு கொடியில் உள்ள இலை பற்றி வழிகாட்டப் பட்டேன். வைத்தீஸ்வரா பள்ளியின் பின்  உள்ள தேசாய் நகரில் வெள்ளாட்டுப் பட்டி ஒன்றில் அவ்வப்போது எனக்கு வெள்ளாட்டுப் பால் மருந்துக்கு என்பதால் இலவசமாகவே தருவார்கள், பல முறை தந்தார்கள். இந்த இலையை அரைத்து அந்த வெள்ளாட்டுப் பாலில் கலந்து உள்ளுக்கும் குடித்து, மேலுக்கும் தடவி வர சில மாதங்களில் அந்த தேமல்கள் அல்லது வெண் அல்லது சிவப்பு படைகள் அல்லது படலங்கள் மறைந்து சருமம் சரியாகி ரோமக்கால்களும் தோன்றி சரியாகியது. அதற்கு சைவம் அவசியம். மாமிசம், புளி போன்றவற்றை எடுத்துக் கொள்ளவும் கூடாது என்ற நிபந்தனைகள் உண்டு.  ஏன் எனில் அப்போது எனது வயது சுமார்25. AT those times I am Very Serious about the Future.Think about the proverb:our Exit might be  more graceful than our Entry.


இந்த பதில் மிக எளிதாக சொல்லி விட்டேன். ஆனால் இந்த மருத்துவத்துக்கு உதவியவர்களும், வழிகாட்டியவர்களும் நான் வணங்கத் தக்க குடும்ப நண்பர்களும் சிலர். அவர்கள் எப்போதும் நான் நன்றி செலுத்த தகுதி உள்ளோர்.


அவ்வளவு ஏன்? கொரானோ 19 தாக்கிய போதும், அதற்கும் முன்பிருந்தும் பல ஆண்டுகளாக‌ எனக்கு வயிற்றுப் போக்கு அடிக்கடி நிகழும். அப்போதெல்லாம் மாதுளையை விட சப்போட்டா பிஞ்சுகளை நன்கு  நைய அரைத்து மோர் அல்லது தயிரில் இட்டு காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் வயிற்றுப் போக்கு நின்று விடும் இப்போதும் கூட அந்த முறை எனக்கு பயனாகி வருகிறது. உடன் தேவையெனில் எலக்ட்ரால் பவுடர் வாங்கி நீர்ச்சத்தை சேர்த்துக் கொள்ள குடித்தால் போதும்.Food Diet is also very important.


அதற்காக கெமிகல் லைன் ஹாஸ்டல் வரை, எங்கள் ஊரின் பலபகுதிகள், மால்கோ பகுதிகளில் சப்போட்டா பிஞ்சுகளுக்கு அலைந்த காலம் கண்டு எனது தங்கை ஒரு சப்போட்டா செடியைக் கொண்டு வந்து எங்கள் வீட்டில்  வைக்க அது வணங்கத் தக்க மரமாகி இன்றும் எனக்கு நோய் தீர்த்து வருகிறது மேலும் கனி கொடுத்தும் வருகிறது பலருக்கும் பறவைகளுக்கும், அணில்களுக்கும் உணவாகி. I pray that Tree.


 ஏன் என் உடலில் மலேரியா ஆந்திரா ஒரிஸ்ஸா பகுதி பணியில் இருந்த போது , கல்வராயன் பகுதிகளில் இருந்த போது டைபாய்ட் போன்ற வியாதிகளும், அதன் பின் எப்போதும் இப்போதும் உணவுக் குழல் தளர்ச்சி, நிறமி அணுக் குறைபாடு, மூலம், குடற்புண், கொஞ்சம் ஏமாந்தால் சர்க்கரை, உப்பு, இரத்த அழுத்தம் யாவும் உண்டு...ஆனால் அவற்றுடன் எல்லாம் எனது பயணம் சென்று கொண்டுதான் இருக்கிறது சுய மருத்துவ முறைகளைக் கையாள்வதால் எல்லாவற்றிலும் மிக்க பயன்பாடு.


அப்பிள் சைடர் வினிகர்(original) + பூண்டுச் சாறு + இஞ்சிச் சாறு+ எலுமிச்சைச் சாறு + தூய தேன் திரவம் தயாரித்து அருந்து வாருங்கள் பாருங்கள் எந்த கொழுப்பு சார்ந்த அடைப்புகளும் இரத்த நாளத்தில் இராது.


சிறு தானியப் பயிர் அடங்கிய கூழ் தயாரித்து எப்போதும் காலையில் உடல் நோய் வாய்ப்பட்டிருந்த போதும் விடாமல் அருந்துங்கள்.


தினமும் பழைய சோற்று நீர் அருந்துங்கள் உறங்கி விழித்ததும்...


இப்படி என்னால் பல சோதனை முயற்சிகளின் வெற்றியை சொல்ல முடியும். கேட்கத் தயாராக இருந்தால்.

வாழ்வு ஒரு அற்புதச் சுரங்கம் நுனிப்புல் மேயாமல் வார்த்தைகளை வீணாக்காமல் வாழ்ந்து பாருங்கள்.


இராமலிங்கர் சொன்னபடி அறிவியல் சொல்லும் படி அவரவர் உடல் பற்றியே இன்னும் முழுமையாக எவரும் அறிந்த பாடில்லை


 In Human body மேலும் மூன்று கோடிக்கும் மேல் இருக்கும் வியர்வைத் துவாரங்களையும் 72ஆயிரத்துக்கும் மேல் இருக்கும் நாடி  நரம்புகளையும் இட்டுக் கட்டப் பட்டிருக்கும் with so many inner and outer parts with wonder of organs உடல் பற்றி இராமலிங்கர் போன்றோர் குறிப்பிடுகின்றனர். உடல் வளர்த்தோம் உயிர் வளர்த்தோமே என்கிறார் திருமூலர்.


உள்ளம் பெருங் கோயில் ஊனுடம்பு ஆலயம்

வள்ளல் பிரானார்க்கு வாயதுவே கோபுர வாசல்

தெள்ளத் தெளிந்தார்க்கு சீவனே சிவலிங்கம்

கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே.... திருமூலர்.


உனக்குள் உறையும் உயிரே கடவுள் என்கிறார் திருமூலர்.உடலே கோயில் என்பதையும் காண்க‌



வாய் சுத்தம், ஆசன வாய் சுத்தம் உடலின் 50% நோய் தீர்க்கும் மருந்துகள் அவை பற்றி நிறைய பள்ளிகளில் கல்லூரிகளில் அடியேன் உரையாற்றியதுண்டு பல்வேறு நிகழ்வுகளில் அவை இங்கு மிகையாகும் என்பதால் இத்துடன் இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன். நன்றி வணக்கம்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.










Thursday, February 15, 2024

அதிசய மனிதன்: சாதத் ஹசன் மண்ட்டோ தமிழாக்கம்: ராமானுஜம்

 

அவமானம் என்ற சிறு கதைத் தொகுப்பிலிருந்து

 


அதிசய மனிதன்:

 

கொள்ளை அடிக்கப்பட்ட பொருட்களை மீட்பதற்காகப் போலீஸ் பல வீடுகளைச் சோதனை செய்தார்கள்.

 

பயந்து போன மக்கள், கொள்ளையடித்து வந்த பொருட்களை நடு இரவில் ஜன்னல்களுக்கு வெளியெ விட்டெறிந்தார்கள். சட்டத்தின் முறையற்ற நடவடிக்கைகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக நேர்மையாக வாங்கிய பொருட்களைக்கூட சிலர் விட்டெறிந்தார்கள்.

 

ஒருவனுக்கு மட்டும் பிரச்சனை இருந்தது. ஒரு மளிகைக் கடை சூறையாடப்பட்ட போது எடுத்து வந்த இரண்டு பெரிய சர்க்கரை மூட்டைகள் அவனிடம் இருந்தன. ஓர் இரவு அவன் எப்படியோ அதை அந்த வட்டாரத்தில் இருந்த கிணற்றுக்கு இழுத்துச் சென்றான். ஒரு மூட்டையைச் சுலபமாகக் கிணற்றுக் குழிக்குள் தூக்கிப் போட்டான். ஆனால் இரண்டாவதைத் தூக்கிப் போடும்போது

அதோடு சேர்த்து அவனும் கிணற்றுக்குள் விழுந்தான்


அவனின் அலறல் எல்லோரையும் எழுப்பி விட்டது. கயிறு கிணற்றுக்குள் இறக்கப்பட்டாலும் பயன் ஏதும் இல்லை. இறுதியாக இரண்டு வாலிபர்கள் உள்ளே இறங்கி விழுந்தவனை வெளியே இழுத்து வந்தார்கள். ஆனால் அவன் அடுத்த சில மணி நேரங்களில் இறந்து போனான்.


அடுத்த நாள் காலை அந்தக் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து குடித்த போது அது மிகவும் இனிப்பாக இருந்தது.


அன்று இரவிலிருந்து அந்த அதிசயமனிதனின் சமாதியில்,விளக்குகள் ஏற்றப்பட்டு பிரார்த்தனை செய்யப் பட்டது.


Wednesday, February 14, 2024

இல்லற இணை ஏற்பு விழா வாழ்த்து

                              இல்லற இணை ஏற்பு விழா வாழ்த்து

                                                     தாரமங்களம்

          22.02.2024  வியாழன் நேரம்: காலை 9.00 மணிமுதல் ‍ 10.00 மணிக்குள்

                      பொன்னுசாமி முதலியார் திருமண மண்டபம்


மணமகள்: பொறி:கி.நன்னிலா,B.E,       மணமகன்: பொறி:B.அர்னேஷ்,B.E,.

                                                  


          எஸ்.எஸ். பெருமாள் மாரியம்மா தம்பதியின் பெண்ணிலா

           உனக்கு பேரறிஞர் அண்ணா பேர் சூட்டினார் "பூங்கோதை"


          பூங்கோதை கிருஷ்ணராஜ் தம்பதி உங்களின் பொன்னிலாவுக்கு

                                  நான் பேர் சூட்டினேன் "நன்னிலா" ,

    என்னதான் விண்மீன் தொகுதியில் விந்தை கோடி விளையினும் "நிலா"

     புவியின் பிள்ளை நிதமும் வெள்ளை கடல் கொள்ளத் துடிக்கும் கிள்ளை


      நன்னிலா அர்னேஷ் உடன் இணையும் இந்த ஓர் அற்புதத் திருநாளில்

     ஒரு குடும்பத்து உறவாய் நாங்களும் இணைந்திருக்கிறோம் உங்களுடன்

       உங்கள் குடும்பம் எங்கள் குடும்பத்தின் நிகழ்வுகளில் உடன் நின்றது

     சகோதர உறவுக்கு உங்கள் பெருமாளும் அர்ச்சுனனும் முன் மாதிரி


      நன்னிலா அர்னேஷ் இணையர் இல்லற வாழ்வில் முன் மாதிரியாய்

        என்றும் குலம் விளங்க குடி பேர் விளங்க குடும்ப சீர் விளங்க‌

      நற்குல விளக்குகளாய் நற்பேர் ஈட்டி சீரிய வழிகாட்டிகளாய் கை

      காட்டட்டும், கை கொட்டட்டும், கை தட்டட்டும் மெய் இணைய‌


      பதினாறு செல்வங்களும் பெற்று பெரு வாழ்வு வாழ என்றும்

      நாங்களும் எங்கள் குடும்பமும் வாழ்வாங்கு வாழ்த்துகிறோம்.


                                            என்றும் அன்புடன்

                                          கவிஞர் தணிகை

                                சண்முகவடிவு தணிகாசலம்

                                    த.க.ரா.சு. மணியம்.B.E.,

                         


Tuesday, February 13, 2024

1801 துரோகத்தில் கருகிய சுதந்திர மலர்கள்: கவிஞர் தணிகை

 


1801 துரோகத்தில் கருகிய சுதந்திர மலர்கள்: கவிஞர் தணிகை


எத்தனை மொழிகள்,எத்தனை நூல்கள், எத்தனை நூலாசிரியர்கள், எத்தனை மதங்கள் எத்தனை கடவுள்கள் ஒரு ஜென்மம் போதாதே.

1801 இந்த நூலை முனைவர் மு. ராஜேந்திரன். இ.ஆ.ப அவர்கள் எழுத 2016ல் வெளியிட்டுள்ளனர் முதல் பதிப்பாக அகநி பதிப்பகத்தார் விலை ரூ.500 சுமார் 544 பக்கங்கள்.

முனைவர் இறையன்பு, முனைவர் பாலகிருஷ்ணன், முனைவர் பாலச்சந்திரன், முனைவர் மு. ராஜேந்திரன் போன்றோர் தமிழுக்கு நல்ல இலக்கிய‌ பணியாக இந்தியர் ஆட்சியர் பணியில் இருந்தபடியே செய்திருப்பது குறிப்பிடத் தக்கது.


1801...இந்த நூலைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும்.


சில உறுதி மொழிகள், சில சலுகைகள், கொஞ்சம் பணம் கொடுத்தால் இந்த மண்ணில் துரோகிகள் கிடைப்பார்கள் நாங்கள் எல்லா நேரங்களிலும் ஆய்தம் ஏந்தி போர் புரிய வேண்டிய தேவையில்லை என்கிற வெள்ளை ஏகாதிபத்தியம்.


ஆசிரியர் நிறைய உழைத்திருப்பது இதில் வரும் எண்ணிறந்த மனிதர்களின் உள் வாங்கல் மூலம் தெரியவருகிறது. எப்படிப் பெற்ற சுதந்திரம்? என அறிய விரும்பும் அனைவரும் இந்நூலைப் படித்தாகவேண்டும்.


வாழ்வதே மானத்திற்காகத்தான்...என்ற ஒற்றை மருது சகோதரர்களின் வரி இந்த நூலின் ஒரு அடையாளம்.


பங்காளிச் சண்டை, மாமன் மைத்துனர், பத்து மனைவிகள் இருந்தும் ஆண் வாரிசு இல்லாமை, ஐந்துடன் ஒன்று சேர்த்து 6 மனைவிக்ள் ஆனாலும் அண்ணார் மகன் ஆட்சிக்கு வரவேண்டிய நிலை, ஒரு மன்னர் இறப்புக்கு 49 மனைவிகள் உடன் கட்டையேறி தீயில் விழுந்து இறத்தல்


மன்னரின் மணம் சாதிக்கு அப்பாற்பட்டது


எத்தனை சாம்ராஜ்ஜியங்களும், அதன் கனவுகளும் , முரண்களும் இப்படி துரோகத்தால் வீழ்ந்துள்ளன என்பதை தெளிவாக்குகிறது. மேலும் முகமதியர்கள், ஆங்கிலேயர்கள்,போர்த்துக்கீசியர்கள், பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள் எல்லாம் இந்த திராவிட அல்லது தமிழ் இனப் பெண்களுடன் சேர்ந்து எப்படி ஒரு கலப்பினம் உருவாகக் காரணமானது... ஒரு ஆண் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் வேறுபாடுகள் இருந்தாலும் மணக்கலாம் என்ற காலத்தின் பாகுபாடு நன்கு தெரிகிறது ஆண் பெண் என்ற இரண்டே இனம் தான் என்பதை அவை சொல்கின்றன.


எல்லாம் போராளிகள் எல்லாம் தோற்கடிக்கப்பட்டு தூக்கில் இடப்படுகின்றனர். அதிகம் செலவின்றி பனைகள் நடப்பட்டு கயிறுகள் கட்டப்பட்டு தொங்க வைக்கப் படுகின்றனர் தியாகக் கொடிகளாக அவர்கள் பிணங்கள் ஆடிக் கொண்டிருக்க வெள்ளை வெறியர்கள் கொக்கரித்தபடி ஆளுகின்றனர் கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவை காலனி ஆதிக்க நாடாக முழுமையாக தந்திரத்தால் மாற்றிக் கொள்கிறது. வீரம் எடுபடவில்லை. ஆய்தம் அறிவியல் சில காரணக் கூறுகள்.


"வெள்ளையர்களிடம் நம்மைக் காட்டிக் கொடுத்து, நம்மவர்கள் நமது தோள்களிலும் மார்புகளிலும் மாட்டிக் கொண்டு திரிகிற பட்டங்களும், பதக்கங்களும் எமது மறைவிடங்களில் வளரும் மயிருக்குச் சமமானவை. அவர்கள் உண்ணும் உணவு மலம்தான். அவர்களுடைய பெண்டாட்டியும் பிள்ளைகளும் மற்றவர்களுக்கு உரியவர்கள். கூட்டிக் கொடுத்த இந்த இழிபிறவிகளுக்குப் பிறந்தவரகளாக அவர்கள் கருதப்படுவார்கள்.ஆகையால் ஆங்கிலேயருடைய ரத்தத்தால் ரத்த நாளங்களிலும் யார் யார் மாசுபடவில்லையோ அவர்கள் எல்லாம் எங்களோடு ஒன்றிணையுங்கள்...இப்படிக்கு பேரரசுகளின் ஊழியன் சின்ன மருது பாண்டியன்... என திருவரங்கம் கோயில் உட்பட எல்லா இடங்களிலும் இந்த பதாகை ஒட்டப்பட்டிருக்கிறது. எனவே ஆங்கிலேயர்கள் சீற்றமுறுகிறார்கள் சின்ன மருதை தீர்த்துக் கட்ட‌

கான் சாகேப் கான், சின்ன மருது, பெரிய மருதுவின் தலை தனியே முண்டம் தனியே என வெவ்வேறு ஊர்களுக்கு சென்று புதைக்கப்படுகிறது.  ஆயிரக்கணக்கான பேர் தூக்கிலிடப் படுகிறார்கள். 5 வயது உள்ள பாலர்கள் எல்லாம் நாடு கடத்தப்பட்டு மலேயே போன்ற கண் காணா இடத்துக்கு 40 நாள் கப்பல் பயணத்துடன் குற்றுயிரும், கொலையுயிருமாய் சோறு தண்ணி இன்றி அனுப்பப் படுகிறார்கள். அதிலும் மருது சகோதரர்களின் பேரர்கள் கூட தூக்கிலிடப்படுகிறார்கள்

மரங்களும், மிருகங்களும் துரோகம் செய்யாது, காட்டிக் கொடுக்காது மனிதர்களில் தாம் துரோகிகளை உருவாக்க முடியும். வெள்ளைக்காரன்கள் அவன் படையில் வீரர்களை உருவாக்கிறான்களோ இல்லையோ துரோகிகளை உருவாக்கி விடுவான்கள்..

வாழும் போதே சரித்திரமானவர்கள், வீழ்ந்த பிறகு சரித்திரமானவர்கள் என இரு பிரிவினரைக் குறிப்பிடுகிறார் ஆசிரியர். அதில் வாழும் போது சரித்திரமானவர்கள் பற்றி எம் போன்றோர் ஏற்பதற்கில்லை ஏன் எனில் அவர்கள் வெள்ளை ஏகாதிபத்தியத்தின் வேலைக்காரர்கள். வீழ்ந்த பிறகு சரித்திரமானவர்கள் மட்டுமே இந்திய சரித்திரத்தின் தியாகப் பக்கங்களின் அத்தியாயங்கள்.

கனமாகிப் போன இதயத்தின் சுமையை என்ன சொன்னாலும் என்னால் தூக்கி வெளியே வைக்க முடியவில்லை. இந்த நூலைப் படித்துப் பாருங்கள் இந்திய சரிதத்தின் துடைத்தெறிய முடியா, விலக்கி வைக்க முடியாப் பக்கங்கள். கறைகளுக்கும் தியாக வேள்விகளுக்கும் இடையே நடந்த ஒரு யூகிக்க முடியா யுத்தம் இதை நன்கு பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். பாராட்டுகள்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


பி.கு: அன்புச் சகோதரர் சிவக்குமார் தலைமை ஆசிரியர் அளித்த 

       1. ஃபிடல் காஸ்ட்ரோ எழுச்சியூட்டும் நூல்,

       2. 1801. அவசியமாக தென்னக சுதந்திர வேட்கை பற்றி அறிய வேண்டியது

       3. இரண்டாம் இடம்: வாசுதேவன் நாயர்...ஏற்கெனவே அறிந்த மஹாபாரதம்.

       4. அருந்ததி ராயின் சின்ன விஷியங்களின் கடவுள் நாவல் சிறப்பாக இல்லை (என்னளவில் குறைந்த பட்சம் )

5. ஓஷோ மறைந்திருக்கும் உண்மைகள் இரண்டும் கெட்டான்.


       இரண்டாம் இடம்: குந்தி தேவி சொல்கிறாள்: அது திரௌபதி என்று தெரிந்தேதான் நான் ஐவரையும் பங்கிட்டு பிரித்து வைத்துக் கொள்ளச் சொன்னேன் ....பீமனின் மனந்திறந்த கதையாக... எம்.டி. வாசுதேவன் நாயர் மலையாள நாவல் கதையை குறிஞ்சி வேலன் மொழி பெயர்த்துள்ளார்.  நன்றாகவே இருக்கிறது என்றாலும் தெரிந்த கதை பல முறை கடந்து சென்ற கதை என்பதால் மேலும் சொல்ல பெரிதாக சிறப்பாக ஏதுமில்லை என்றாலும் கிருஷ்ணனும் தோற்றவன் தான் என்பது, கடோத் கஜன் ஒரு காட்டு மனிதன் எனவே அவனுக்கு வீரனுக்கு உரிய சத்திரியனுக்கு உரிய கடைசி மரியாதை எல்லாம் தேவையில்லை என்பது போன்ற நிறைய கேள்வி எழுப்ப காரணமாகும் நூல்.

thanks to

Siva Kumar

Head master

Amaraththaanoor middle school







Monday, February 5, 2024

ஃபிடல் காஸ்ட்ரோ பேருரைகள்:உலக மானுடத்துக்காக அன்பை விதைத்த ஒரு ஆய்த எழுத்து. .கவிஞர் தணிகை

 ஃபிடல் காஸ்ட்ரோ பேருரைகள்: கவிஞர் தணிகை



672 பக்கமுள்ள பெரிய புத்தகம். தமிழ் படுத்தியது: கி. ரமேஷ் என்பவர்.சி.ஐ.டி.யூ 12 ஆம் மாநில மாநாட்டின் சிறப்பு வெளியீடாக பாரதி புத்தகாலயம் முதல் பதிப்பாக 2013ல் வெளியிட்டுள்ளது.


நெல்சன் மாண்டேலா பேச்சு, ஆப்ரஹாம் லிங்கன், மார்ட்டின்லூதர் கிங் உரை, அறிஞர் அண்ணா ராஜ்யசபா உரைகள்,இப்படி நிறைய தலைவர்கள் உரைத்தன யாவுமே வரலாற்றுப் பதிவுகளில் இடம் பெற்றவைதான். அதில் இதென்ன ஃபிடல் காஸ்ட்ரோ பேருரை மட்டும் உயர்ந்தது என்கிறீர்களா? 


ஆம் உண்மையில் உயர்ந்ததே. ஒரு நாட்டை கட்டி உருவாக்கிய தலைமை. அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் 600 முறை இவரை கொல்ல யத்தனிப்புகள், அத்தனையும் தோற்றுப் போக 2016ல் இயல்பாக உயிர் நீத்த உன்னத தலைமை.


சே வின் மரணம் 32ஆம் வயதில் நிகழ்ந்தது போல இந்த மனிதரையும்  துப்பாக்கி முனை குத்தி எழுப்பிய நிகழ்வு பற்றி அவரே குறிப்பிடுகிறார்: நாங்கள் தரையில் வேர்கள் மீது பாறைகள் மீது தூங்குவதில் சோர்வடைந்து தென்னை இலைகளால் மறைக்கப் பட்ட தற்காலிகக் கூடாரங்களில் உறங்கி விட்டோம். எங்கள் நெஞ்சை நோக்கி துப்பாக்கிகள் குறி பார்த்திருக்க கண் விழித்தோம். 

ஒரு கறுப்பான லெப்டினன்ட் எதிரி வீரரால் 3 முறை காப்பாற்றப் பட்டதாகச் சொல்கிறார்,அவர் அவருடைய வீரர்களிடம், சிந்தனைகளை உங்களால் கொல்ல முடியாது, சிந்தனைகளை உங்களால் கொல்ல முடியாது என கறுப்பு லெப்டினன்ட் கூறி மற்ற வீரர்களிடமிருந்து முதலில் காப்பாற்றியதில் இருந்து , கழிப்பதை விட கூட்டுவது நல்லது என அந்த லெப்டினன்ட் புரட்சியின் வெற்றிக்கும் பின் அமைந்த கியூபா நாட்டின் குடியரசுத் தலைவருக்கு சிறப்பு பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப் படுவதையும் சொல்கிறார்.


இந்த புத்தகம் பற்றி நிறையக் குறிப்பிட வேண்டும் அவை உங்களுக்கு சலிப்பு ஏற்படுத்தும் என்பதால் மிகவும் சுருக்கமாக சொல்ல விழைகிறேன்.7 வீரர்கள் 8500 வீரர்களை வென்ற வரலாறு என்கிறார். எப்படி எல்லாம் நிகழ்ந்ததோ. முனைவர் மு.வவின் எழுத்துகள் போல சற்று வறட்சியான எழுத்துகள்தாம் என்றாலும் யாவும் ஃபிடல் பேசியவை என்பதாலும் முடிவிற்கு செல்லச் செல்ல மயிர்க்கூச்செரிய எதையாவது நாமும் இந்த உலகுக்கு செய்ய வேண்டுமே என்ற எண்ணமும் எழாமல் இல்லை. அந்த அளவு வீரியமுள்ளவை இவை. மேலும் மொழிபெயர்ப்புக் கவர்ச்சி இல்லாத போதும்.


நான் சொல்ல முற்படுவது:

 பாலர் கல்வி முதல் முனைவர் கல்வி வரை கியூபாவில் கல்வி இலவசம்.

ஒன்பதாம் வகுப்புக்கு கீழ் கல்வி பயிலாதவர் எந்த வயதிலும் இல்லை. 103 வயதுடைய புதிதாக கல்வி கற்றவரை புத்தகம் எழுதச் சொல்கிறார் ஓரிடத்தில் ஃபிடல். 20 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் எனும் வகுப்புகள்.


அனைவர்க்கும் மருத்துவம் இலவசம். அமெரிக்க நாட்டை அதன் தலைமை புஷ் போன்றோருக்கு எழுதுகிறார் , ஒரு ஐந்தாண்டுத் திட்டத்தில் 3000 புற்று நோய் நோயாளிகளைக் கூட ஒரு உதவியாளருடன் அனுப்புங்கள் இலவசமாக மருத்துவம் செய்து அனுப்புகிறோம் என்கிறார்.


சராசரி கியூபர்களின் ஆயுள் 76.13.


வேலையின்மை 2.3%


85% சொந்த வீடு, 15% பெயரே வாடகை வீடு, அதிலும் வாடகை வருவாயில் 10%


ஒரே ஆண்டில் கல்வி அறிவின்மையை ஒழித்தது, 

தொழில் கல்வி நுட்பத்தில் 64% பெண்கள்.


அவர்களின் வானொலி, தொலைக்காட்சி அழுகிப் போன சமூக மதிப்புகளை தொழவோ உயர்த்தியோ பிடிப்பதில்லை. தலைவர்களின் படங்களும், சிலைகளும் அனுமதிக்கப் படுவதில்லை. இந்த நாட்டின் தலைவர்கள் மனிதர்கள்தாம் கடவுள் அல்ல. வணிக விளம்பரங்கள் அதில் இடம் பெறுவதில்லை. மாறாக‌ சுகாதாரம், கல்வி, கலாச்சாரம் சுற்றுச் சூழல் சிந்தனைகள்  போதைப் பொருள் ஒழிப்பு போராட்டம், விபத்துகள் போன்ற பொதுச் சேவை அறிவிப்புகள் இடம் பெறுகின்றன‌


உயிர் வாழுகின்ற எந்த புரட்சியாளர்க்கும் தனி மனித துதி, சிலை வடிவிலோ, அலுவலக புகைப்படமோ, தெருக்களுக்கு, நிறுவனங்களுக்குக்கும் பெயர் வைப்பதன் மூலமோ செய்யப் படுவதில்லை.


மிக முக்கியமான ஒன்று: மக்களுக்கெதிராக ஒரு போதும் தாக்குதல் நடத்தப்பட்டதில்லை.


உலகின் அனைத்துப் புகழும் ஒரு பிடி சோளத்திற்குள் அடங்கி விடும்...என அவரின் முன்னோரான மார்த்தி என்ற வரலாற்று ஆசிரியரை நினைவு கூர்கிறார். 


இன்று உலகம் ஒரு போர்க்களம் என்றும், உலக மயம் ஒரு வரலாற்று விதி என்றும் குறிப்பிடும் ஃபிடல் தினமும் 40,000 குழந்தைகள் பசி பஞ்சம் வளர்ச்சியின்மையாலும் ஊட்டச்சத்து குறிபாட்டாலும் இறந்து கொண்டிருக்கிறது இது 3 நாளுக்கு ஒரு ஹிரோசிமா மேல் குண்டு போட்டு அழிப்பது போல என்கிறார்.


மனிதாபிமானம் எனது தாய் நாடு என்கிறார் மார்த்தி ஃபிடலின் முன்னவர்

ஃபிடல் பாணியில் சொல்லப் புகின் புரட்சி என்பது எல்லையற்ற மனித நேயமே.

ஒரு மனிதனின் சிந்திக்கும் திறனும் பகுத்தறிவு(ம்) திறனும் பாதிக்கப் பட்டால் அவன் ஒரு சமூக விலங்கே என்கிற ஃபிடல் நமது தமிழில் சொல்லப் போனால் உலக மானுடத்துக்காக அன்பை விதைத்த ஒரு ஆய்த எழுத்து.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


பி.கு:கி.பி: 2006 ஆம் ஆண்டில் ஃபிடலில் 80 வது பிறந்த நாளில் கியூபாவின் வெளியுறவுத் துறை அமைச்சர்ஃபிலிப் பெரோஸ் ரோக்  ஃபிடலிடம் இருந்த  பண்புகளாக சிறந்த 15 பற்றி குறிப்பிடுகிறார்:

1. ஒற்றுமை,2. அறநெறி, 3. பாராட்டு, பொருள் பரிசுகளை ஏற்காமை,4. சீரான தன்மை, 5. சுய உதாரணம்

6. உண்மை,7. பரிவுணர்ச்சி, 8.பாசாங்கு பகட்டுத்தன்மை இல்லைமை, 9. தொடர்ந்து கற்றல் 10.தம்மிடம் பேசுபவர் எதைக் கோருகிறார் என்ற உணரல் 11.தோல்வியை ஏற்க மறுப்பது 12 அனைவர்க்கும் நீதி, 13.சிந்தனை வலிமை சுய உறுதிப்பாடு.14.மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் தன்மை.15. யார் மீதும் எந்த வெறுப்பும் கொள்ளாமல் இருப்பது.

Friday, February 2, 2024

இலக்குகள் பெரிது. அதனால் அடையும் இழுக்குகள் அதிகம்.:கவிஞர் தணிகை

 மலட்டுத் தன்மையுடனான‌ வீரியமற்ற நச்சு விதைகள்: கவிஞர் தணிகை



கற்பனையோ, காவியமோ, கவிதையோ அதன் சொற்சித்திரத்தின் அடர்வில் பாஞ்சாலி சபதத்தில் திரௌபதியைத் துகிலுரிய முடியைப் பிடித்து இழுத்து அத்தினாபுரத்து வீதிகளில் செல்லும் போது அனைவரும் நின்று வேடிக்கை பார்த்ததாக புராணம் பற்றிய செறிவுடன் பாரதி "நெட்டை மரங்களென நின்றார்" எனச் சுடர் கொடுத்திருப்பான் ஒரு இருளுக்கு.


சிந்திக்கும் திறனும், பகுத்தறியும் திறனும் அற்ற மனிதர்கள் சமூகத்தில் விலங்குகளே என தற்போது பிடல் காஸ்ட்ரோவின் மொழி பெயர்ப்பு சொற் கோர்வை ஒன்றை கடக்க வேண்டி வந்தது.


மலட்டுத் தனம் அல்லது குழந்தைக்கான கரு உறாமை பல் வேறுபட்ட காரணங்களுடன் இருந்தன அப்போதும்.

அவர்கள் தத்து எடுத்துக் கொண்டனர்.இப்போது அறிவியல் செயற்கை கருவூட்டல் பெரும் வியாபாரமாகிவிட்டது


ஆனால் அது பற்றி நாம்பெரிதாக சொல்ல விரும்பவில்லை.

மாறாக அந்நாளில் இருந்து இந்நாள் வரை வீரியமற்ற விதைகளை, விதைகளற்ற பழங்களை, காய்கறிகளை நமது மண்ணுக்குள் காலப் போக்கு கொண்டு வந்து இறக்கி விட்டிருக்கிறது.அவற்றை விலக்கப் பழகாமல் உள் வாங்கி விட்டது இன்றைய நாடும் மனிதமும். எல்லாவற்றிலும் ஒரு அதி வேக அவசரம்.(வீட்டைப் பற்றி மட்டுமல்ல நாட்டைப் பற்றியும் தாம் சொல்கிறேன்.)


அதன் பலன் ஆண்மையற்ற, வீரியமற்ற உற்பத்திகள். யாரும் கேள்வி கேட்பதில்லை. கேள்வி கேட்டால் அவர் எதிரி எனக் கருதப் பட்டு விலக்கி வைக்கப் படுகிறார் அல்லது ஒதுக்கி வைக்கப் படுகிறார். அல்லது புறக்கணிக்கப் படுகிறார். அவர்களை மேல் எழ விழ முடியாமல் அழித்தொழிக்கப் பார்த்து அடக்கி அமுக்கி நிர்கதியாக்கி விடுகிற வாழ்வின் முறை நிகழ்கிறது.


எதோடு வேண்டுமானாலும் இயைந்து செல்லத் தலைப்படுகிற சமூகச் செறிவு அடையாளமின்றி அழிந்து போகும்.


அமெரிக்காவையும், ஐரோப்பிய மேற்கத்திய இழிவுகளையும் ஏந்தும் ஒரு குப்பைக் கூடையாகிக் கொண்டிருக்கின்றன நாகரீகத்தின் தொட்டில்களான பாரம்பரியமிக்க நிலப்பரப்புகள்.விவசாயம், மருத்துவம், கல்வி போன்றவற்றில் கவனம் முழு கவனம் செலுத்தாமல் திசை திருப்பப் பட்டிருக்கும் பார்வைச் சோரங்கள்


எண்ணத்தால் அடிமைகளாகவே இன்னும் வாழத் தலைப்படும் நேர்மையற்ற குணாம்சங்கள்.


கலை, அரசியல், பொருளாதாரம்,கல்வி , வேளாண்மை , மேலும் பல்லுயிர்த்தொழில்கள் யாவற்றிலும் விழிப்படைய வேண்டிய தேவை இன்னும் இருக்கிறது.


மலட்டுத் தனம், வீரியமில்லா விதைகள், நச்சு விதைகள் என எல்லாத் தரப்பிலும் நிறைந்து கொண்டிருக்கின்றன. இவை சரியான பாதையில் செல்லவே இல்லை.


கார்கி, சித்தா  போன்ற படங்கள் கூட தமிழ் மண் கலாச்சாரத்தோடு தொடர்புடையதாக இல்லை.இவை எங்கிருந்தோ இங்கு வந்து புகுந்து கொண்ட நச்சு விதை தூவும் விடயங்களாகவே இருக்கின்றன. இவை எல்லாம் உள் வராதிருந்தாலும் கூட நல்லதே.


உள்ளீடற்ற உப்பிப் பெருக்கும் சமூக பலூனாய் சென்று பெருத்துக் கொண்டிருக்கும் கூட்டத்தில் நாம் இல்லாதிருப்போமாக.


எதையோ ஒன்றைச் சொல்ல வந்து சொல்லாமல் இருப்பது போல் தெரிகிறதா? எனக்குள்ளும் அப்படித்தான் இருக்கிறது. சொல்லியும் சொல்லாமல் இருந்து உங்களைச் சிந்திக்கச் செய்வதும் ஒரு வகை எழுத்து முறை.


தாய் தந்தையரை பராமரிப்பு விடுதிகளில் கொண்டு விடுவது பற்றிய பதிவுகளைக் கூட படிக்க மறுக்கிற விரும்பாமை முகில்க்கிற‌ சிந்தை நமது. தந்தைக்கும் பின் தாயுடன் 20 ஆண்டு காலம் ஒருங்கே இணைந்து வாழ்ந்ததால்.சகோதர சகோதரிகள் என்ற குடும்ப நிறுவன அமைப்புக்கு உறுதுணையாக இருந்ததால் மேலும் துணை செய்ததால் அதன் வேர்களுடன் மேலும் வளர்கிற முறையை உட் கொண்டு இருப்பதால் நண்பர்களே நான் ஒரு பழங்கால மனிதன்.


எனக்கு மாபெரும் மனிதராய் உயர்ந்தோர் பற்றிய எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. அவர்கள் எல்லாம் என்னுள் கேள்வி எழுப்புகின்றனர். அவர்களால் எல்லாம் எப்படி முடிந்தது? என்னால் ஏன் முடியவில்லை? எனது இலக்குகள் பெரிது. அதனால் அடையும் இழுக்குகள் அதிகம்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை