Sunday, July 31, 2016

தணி கை தூவிடும் வாடா பா இதழ்கள் தெய்வா(னை) தாய்க்கு.




சேர்க்கை
_________

நீங்கள் யார்

என்று கேட்காத அடைக்கலம்

பறவைக்கு


தேவைப்படும் எல்லாமே

ஓர் நாள்

தேவைப்படாது

மனிதர்க்கு


சண்டையிட்டால் மட்டுமே

உணவு

வன விலங்குக்கு


மழை

இயற்கை


மகசூல்

செயற்கை


இதில்

நீ, நான், அவன், அவள் , அது

குடும்பம், பகை

நட்பு , உறவு

எல்லாம் வேடிக்கை.


‍‍‍___ கவிஞர் சு. தணிகை.



பொற்காலத்துக்கு
____________________



எல்லாமே

ஒரு நாள் குப்பை


எந்த வாழ்வுக்குமே

ஒரு நாள் குட்பை



மிருகம் பறவைகளை விட‌

மனிதர்க்கு அறிவதிகமே!

எனினும்

ஆயுளும் அமைதியும்

குறைவே.



கற்க வேண்டியது

இயற்கையே!

பேராசைப் பயணம் போதும்


திரும்பச் செல்வோம்

புறப்பட்ட இடம்


கற்காலத்துக்கல்ல.

____ கவிஞர் சு. தணிகை



நீ மட்டுமென்ன அதிசயமா?

___________________________

நீ மட்டுமென்ன அதிசயமா?

என்று

 காலம்

உன் கையை ஒடிக்கும்


நீ மட்டுமென்ன அதிசயமா?

என்று

காலம்

உன் பொருள்களை

இழக்கச் செய்யும்


நீ மட்டுமென்ன அதிசயமா?

என்று கேள்வி கேட்கும் காலம்

உன் உறவுகளைப் பிரிக்கும்


நீ மட்டுமென்ன அதிசயமா?

என்று

காலம்

உனையும்

உள் வாங்கிக் கொள்ளும்.



நீ மட்டுமென்ன அதிசயமா?

என்று கேள்வி கேட்கும்

காலத்தின் முன்

விதி விலக்கின்றி

நாம் அனைவரும்.



 அவ்வப்போதைய‌

உண்மைகளை

உணர முடியாமலே

போய் விடுவதுதான்


வாழ்க்கை.

வாழ்

கை.

 ___ கவிஞர் சு.தணிகை.


மறுபடியும் பூக்கும் வரை
 கவிஞர் தணிகை



ஆகஸ்ட்.9 .2016 என் தாய் தெய்வா(னை)10 ஆம் ஆண்டு நினைவு நாளுக்கு: போகிற போக்கில் என்ற கவிதைத் தொகுதியிலிருந்து.


Saturday, July 30, 2016

ஆடி 18 மேட்டூர் அணையின் பெரும்சிறப்பு வாய்ந்த தன்னிகரில்லாத் திருவிழா: கவிஞர் தணிகை


ஆடி 18 மேட்டூர் அணையின் பெரும்சிறப்பு வாய்ந்த தன்னிகரில்லாத் திருவிழா: கவிஞர் தணிகை



1934ல் கட்டி திறந்து வைக்கப் பட்ட மேட்டூர் அணை எனப்படும் ஸ்டேன்லி அணை எப்போதிருந்து ஆடிப் பெருக்கு 18 ஆம் நாள் திருவிழாவாக‌ குதூகலம் கொண்டிருக்கும் என எனக்குத் தெரியாத போதிலும் கடந்த 50 ஆண்டாக இதன் திருவிழா சாட்சியாக நான் இருந்து வருகிறேன்.

57 அடி மட்டுமே நீர் உள்ள நிலையில் நீர்த்தேக்கம் இந்த ஆண்டு பெரிய திருவிழாவை சந்திக்காது வழக்கம் போன்ற பிரம்மாண்டத்துடன் என்று எண்ண சாத்தியம் உள்ளது. ஆனாலும் நமது மக்கள் சாதாரணமானவர்கள் அல்ல எப்படி நீர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வந்து குவிய வேண்டியவர்கள் குவிந்தே தீர்வார்கள். அதை மதுபான அதிக விற்பனை சாதனையுடன் மாற்றி விடுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.



நீரின் அளவு மிகவும் குறைந்து கிடப்பதாலும், ஆங்காங்கே எல்லா இடங்களிலும் மழை பெய்து இருப்பதாலும், பெய்து வருவதாலும் ஆடி 18க்க்காக திறந்து விட்டு கொண்டிருந்த 5000 கன அடி நீரை 3000 கன அடி நீராக குறைத்திருக்கிறார்கள்.

இந்தப் பிரதேசத்தின் மிகப்பெரும் மக்கள் கூடும் திருவிழா.பெரும்பாலும் வெளியூர் ஜனங்கள் அதிகாலை முதலே வந்து குவிந்து விடுவார்கள். நீராடுவார்கள், முனியப்பன் கோவிலில் சாமி கும்பிடுவார்கள், நேர்த்திக் கடன் செய்வார்கள், இங்கு அணையோடு ஒட்டிக் கிடக்கும் லால் பகதூர் சாஸ்திரி பூங்காவில் உள்ள மான்கள், மீன் பண்ணை, பாம்புகள், வெள்ளை எலி, முயல்கள், முதலை , குருவி இனங்கள், லவ்பேர்ட்ஸ் எல்லாம் பார்த்து பெரு மரங்கள் அதனடியில் உள்ள இருக்கைகளில் அமர்ந்து ஓய்வெடுத்து, குழந்தைகளுக்கான சறுக்கல்கள்,பெரியவர் சிறுவர்களுக்கான ஊஞ்சல் விளையாட்டுகள், இப்படி பொழுது போக்கி சமைத்த அசைவ‌ உணவுண்டு இளைப்பாறி மகிழ்ந்து மாலையில் கலைந்து செல்வார்கள். எல்லாவற்றுக்கும் அடிப்படை பொங்கிப் பிரவாகமாய் சுழித்தோடும் காவிரியும் அதன் நீரும்.

ஆனால் இப்போதெல்லாம் அப்படி நிகழ்வதில்லை. காவிரியில் நீர் இல்லை. தமிழகத்தின் நதி காவிரி என்று சிறுபிள்ளைகளுக்கு பாடத்தில் ஆசிரியைகள் சொல்லிக் கொடுத்தாலும் அது கர்நாடகத்தின் நதியாகவே ஆகிவிட்டது.

இதில் என்ன ஒரு பெரிய விஷயம் என்றால் இப்போதெல்லாம் அணையை நெருங்கவே வழியில்லை. அணைக்கு நெருங்காதபடி கம்பி வேலியும் பல அடுக்கு கம்பெனி செக்யூரிட்டி ஃபோர்ஸ் காவலும் ... வெடிகுண்டு மிரட்டல் எதிரொலியாக அணைக்கு பாதுகாப்பாக.



ஆனால் நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது குடும்பத்துடன் அணை மேல் நடந்து செல்வோம், அதில் ஒரு ரயில்வே இருப்புப் பாதை காணப்படும் ட்ராம் வண்டிகள் போனதன் அடையாளமாக. கார் எல்லாம் செல்லும். அப்போதிருந்த மலைப்பாதை மிகவும் கடினமாக மயிர்க்கூச்செறியும் வண்ணம் ஒரே வண்டி கீழ் அல்லது மேல் செல்வது மட்டுமாகவும் அது வந்த பிறகே அடுத்த வண்டி மேலோ கீழோ செல்ல முடியும். இப்போது சேலம் கேம்ப் 24 மணி நேரமும் இணைக்கப் படாமலே போக்குவரத்து பாலத்திலும் ,மலைப்பாதையிலும் நடைபெற்றுவருவது கவனத்தில் கொள்ள வேண்டியது. பாலம் பெரிதாக்கப்பட்டு விட்டது எப்போதும் வாகனப் போக்குவரத்துக்கு ஏற்ப.வெள்ளைக்காரர்கள் கட்டியதற்கு பின்னால் ஒரே சாட்சியாக நமது கொள்ளைக்காரர்கள் கட்டியதாக...




கூட்டம் பெருகப் பெருக உள்ளூர் மேல் மேட்டூர்க்காரர்கள் பெரும்பாலும் கீழ் மேட்டூர் செல்வதேயில்லை. மாலை ஒரு நடைப்பயிற்சி வழியே 16 கண்மாய் பாலம் எல்லீஸ் டங்கன் பாலம் வரை சென்று தமது ஆடிப் பெருக்குத் திருவிழா நிகழ்வை முடித்துக் கொள்ள ஆரம்பித்து பல ஆண்டுகள் ஆகி விட்டன.

அதிலும் முக்கியமாக நீரைத் தொட அனுமதிக்காமல் அரசு பொதுப்பணித்துறை தடை விதித்ததால் எந்த மனிதரும் சென்று இப்போதெல்லாம் நீராடுவதும் கன்னி மார் கும்பிடுவதும் குறைந்து விட்டது. அதையும் மீறி சிலர் மட்டுமே என்ன கட்டுப்பாடு இருந்த போதும் கடைசி வரை சென்று நீரைத் தொட்டுவிட்டு ஆறுதல் அடைந்து திரும்பி வருகிறார்கள். மலையின் கடைசிக் கோடி வரை சென்று. சீத்தா மலைத் தொடர் மட்டும் திப்பு சுல்தான் கரடும் அதன் சார்ந்த மலையும் தேங்கி நிற்கும் நீர்த்தேக்கத்துக்கு அரணாக அமைந்துள்ள இந்த நீர்த் தேக்கம் கீரைக்காரனூர், திப்பம்பட்டி, கூனாண்டியூர் வரை அமைந்துள்ளது.



அதாவது மேட்டூரின் மேற்குப் பகுதியில் ஒரு அரை வட்டம் வரைந்த அளவின் அமைப்புடன் நீர் தேங்கி இருக்கும் என்பது குறிப்பிடத் தக்கது. கோம்பூரான் காடு சீமாட்டு முனியப்பன் கோவிலில் இருந்து பார்த்தால் போதும் மால்கோ கெம்ப்ளாஸ்ட் பின்னணியில் உள்ள ஆற்று நீரைப் பார்க்க முடியும்.

அப்போதெல்லாம் வெளியூர் சுற்றி உள்ள அத்தனை கிராமம் சார்ந்த கோயில்காரர்கள் அனைவருமே காவடி எடுத்தும், தமது கோவில் சார்ந்த கத்தி, ஈட்டி போன்றவற்றை எடுத்து வந்து காவிரியில் கழுவி எடுத்துச் செல்வது வழக்கம். மகாபாரத யுத்தம் 18 நாளாக நடந்து முடிந்த பிறகு அந்த ஆய்தங்களை போர் முடிந்து வந்து கழுவிச் செல்வதாக பொருளாம்.

இரவு முழுதும் அடுத்த நாளைப் பற்றி கனவாய் விரியும். சகோதர சகோதரர்களுடன் கை கோர்த்து கூட்டத்தில் சென்று தொலைந்து விடாத பயணம். பெரும்பாலும் பொறி, பேரிக்காய், போன்ற தின்பண்டங்களுடன் அந்த அந்த வருடம் ஏதாவது புதிதாக வரும் ஒரு விளையாட்டுச் சாமான் வீடு வந்து சேரும். மேலும் வீட்டுக்காக ஆகும் ஒரு பொருளும் இருக்கும். பெரும்பாலும் அங்கு வருடா வருடம் வாங்கி வரும் உண்டியல் தவறாது. அந்த நாளுக்காக இந்த நாளிலும் ஏங்குகிறோம். ஆனால் அந்த சகோதரிகள் எல்லாம் பேரன் பேத்தி எடுத்து விட்டார்கள். நிறைய பேர் மறைந்து விட்டார்கள். அந்த நாளும் மறைந்து விட்டது . இனி வரப் போவதேயில்லை.

மண் சட்டி செய்து அதற்கு கறுப்பு சாயம் பூசி, அந்த சட்டி கறுப்பாகவே இருக்கும். பார்க்க அவ்வளவு அழகாக. மாட்டு வண்டிகள் நிறைய அந்த மண் சட்டிகளாகவே  இருக்கும். அந்த வண்டிகளின் பக்கக் குச்சிகளில் எல்லாம் கூட மண் சட்டிகள் மாட்டப்பட்டு மாடுகளின் கழுத்தணி, மணி யாட ஜல் ஜல், கலீர் கலீர் சத்தத்துடன் இரவு முழுதும்  சாலையில் வண்டி போகும் சத்தம் எங்கள் ஊரிலும் தூங்காமல் படுத்துக் கொண்டு விழித்துக் கொண்டே இருக்கும் எம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும். அதெல்லாம் இப்போது இல்லவே இல்லை. இனி எப்போதும் அந்த நாள் வரவே போவதில்லை.

அப்போதெல்லாம் பெரிய குடும்பங்கள். நீர்க் குழாய் குடி நீர் பற்றி எல்லாம் பெரிய கவலை உண்டு . ஆனாலும் ஆரம்ப நாட்களில் வாரம் ஒரு முறை வீட்டில் உள்ள எல்லா அழுக்குத் துணிகளையும் எடுத்துக் கொன்டு பெண்கள் எல்லாம் சேர்ந்து கொண்டு ஆற்றங்கரைக்கு குளிக்க துவைக்கச் சென்று துவைத்து வருவார்கள். நாங்கள் என்றால் எம் போன்ற சிறுவர்கள் நீச்சல் தெரியாதவர்கள் எல்லாம் கரையில் நின்று தூரத்தில் நின்று துணி காயவைத்ததை பார்த்துக் கொண்டே இருப்போம் அலுக்காத சலிக்காத வேடிக்கையை, ஆற்றை ,நீரை, மாபெரும் அணையை, இயற்கையும் செயற்கையுமான சூழலை.



அப்போதெல்லாம் எப்போதும் ஒரே விளையாட்டுதான். சண்டைதான் காலில் விரலில் முட்டியில் எல்லாம்  கீழே விழுந்த அடிபட்ட காயம் இருக்கும் அதை நீரில் மூழ்க்கி வைத்தால் கொஞ்ச நேரத்தில் எங்கிருந்ததோ அந்த மீன்கள் எல்லாம் புறப்பட்டு தேடிவந்து அந்த புண்ணை அதன் அழுக்கை புரையை எல்லாம் கடித்து தின்று சுத்தம் செய்து செல்லும். அதன் பின் பார்த்தால் அந்தக் காயம் நன்றாக சிவந்து நிற்கும் சீக்கிரம் ஆறிவிடும்.மீன் கடிக்கும்போது ஒரு வலி இருக்கும் அதை அனுபவித்திருக்கிறீர்களா? சுறீர் என, வெடுக் வெடுக் என கடித்து, கடித்து இழுக்கும் . ஆனாலும் அது ஒரு இன்பமான வலி. நிறைய குழந்தைகள் அதை ஏற்க மாட்டார்கள். அழுவார்கள்.

எல்லாவற்றையும் விட பாலி போடுவார்கள். அதுதான் மிகவும் பிரதானம். கன்னி மார் கும்பிட காதாளக் கருக மணி கறுப்பு வளையல், சிவப்பு சாயம் பூசப்பட்ட பனை ஓலை எல்லாம் சேகரித்து மாவு இடித்து மாவிளக்கு இட்டு...7 நாள், 9 நாள் , 11 நாள், 14 நாள் என கணக்கிட்டு அதற்கு முன்பிருந்தே ஒரு தாம்பாளத்தில் அல்லது ஒரு குண்டா  என வாயகன்ற‌ ஒரு வீட்டுப்பாத்திரத்தில் நவ தானியத்தை முளை விட்டு வளர்ப்பார்கள். பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் கன்னிப் பெண்கள் இருப்பதால் இதை தவறாமல் செய்வார்கள். அது முளை விட்டு பச்சை முளை விட்டு பசுமை இலைகளுடன் ஆடாமல் நிமிர்ந்து வளையாமல் நேராக நிமிர்ந்து
   உயரமாக வளர்ந்து நிற்கும். ஒவ்வொரு வீட்டின் பாரம்பரியமாகவே இதை வளர்த்தெடுத்து ஆடிப் பெருக்கன்று அதை ஆற்றில் சென்று விடுவார்கள். பார்க்க கண் கொள்ளாக் காட்சிதான் போங்கள்...அதெல்லாம் இனி .இல்லை. அந்த பாலி நன்றாக வளர்ந்திருந்தால் அந்த ஆண்டு முழுதும் நன்றாக இருக்கும் என ஒரு மகிழ்வு நம்பிக்கை. அந்த நாட்கள் எல்லாம் இனி வரவே போவதில்லை.

அந்த அக்கறையுடன் வீட்டில் வளர்க்கப் பட்ட பாலியை(பாலிகை என்றும் சொல்வார்கள்) அப்படியே பெயர்த்து எடுத்து நீரில் விடுவார்கள், அது காவிரி நீரில் மிதந்து மெல்ல மெல்ல அசைந்து அலைக்குத் தக்கவாறு ஒரு பயணம் செய்து நீரில் அமிழும் அதில் சிலர் வெற்றிலைப் பாக்கை வைத்தும் கற்பூரம் ஏற்றி அனுப்பி வைத்து காவிரித் தாயை வணங்குவதுடன் கன்னிமார் என்றும் கும்பிடுவார்கள்.அதை எல்லாம் பார்க்க என்ன ஒரு அழகு...அதை எல்லாம் இரசிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்...

இப்போதெல்லாம் ஆற்றங்கரை மட்டுமல்ல, எங்குமே தனியிடங்களுக்கு குடும்பத்துடன் செல்லவே முடியாது. குடித்து விட்ட போட்ட எச்சில் மது பான பாட்டில்கள் இருப்பதை பார்க்காமல் வரமுடியாது மேலும் மனிதக் கழிவுகளும் எச்சங்களும் புனிதத் தலங்களை ஆற்றங்கரை வாசங்களை மனிதரின் சுவாசங்களை சகித்துக் கொள்ளவே அறவே முடியாத வீச்சங்களாக மாற்றி விட்டன என்பது நாம் ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மை ஒப்புக் கொள்ள வேண்டிய நிகழ்காலம்.



எப்படியாப் பட்ட கல் கட்டடங்கள், அதில் மாளிகை நிலவரைகள், தோரண வாயில்கள், உப்பரிகைகள் எல்லாம் சென்று நின்று அணையில் உள்ள நீரை இரசிக்கலாம் அழகிய வளவு நெளிவுடைய விளிம்புகள் உடைய அவற்றின் அழகு சொல்லி மாளாது ஆனால் அதில் நமது இந்தியன் சிறுநீர் கழித்து மலம் கழித்து எச்சில் உமிழ்ந்து எச்சமிட்டு துர் நாற்றம் அடிக்க வைத்து விடுவதால் அதனுட் புக வழி அடைத்து முட்களை போட்டு தடுத்து வைத்திருக்கிறார்கள்.

அந்த 16 கண் மாய் பாலத்தின் மேல் விதானத்தின் மேல் கதவின் தூக்கி இரும்பு பெட்டிக்கடியிலும், கற் விதானங்களிலும் கட்டி

 இருக்கும் தேன் கூட்டை ஆயுளில் வேறெங்குமே பார்க்க முடியாது... எல்லாம் காவிரி நீரின் கொடை.

இன்னொரு முக்கியமான செய்தி சொல்ல மறந்து விட்டேனே...எம்.ஜி.ஆர், சிவாஜி, ஏன் கமல் , ரஜின் படங்கள் வரை எல்லாமே எல்லாத் தியேட்டர்களிலும் அப்போது மிக அதிகமாக சினிமா மோகம் கொண்டிருந்த நாளில் மேட்டூரை சுற்றி 6 சினிமாத் தியேட்டர்கள் கொட்டகைகளுடன் சேர்ந்து இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அத்தனை தியேட்டர்களிலும் நாலைந்து காட்சி நடத்தி காசாக வாரிக் கொள்வார்கள். எந்த பேருந்திலுமே ஏற இறங்கமுடியாது எல்லாம் எங்கு பார்த்தாலும் வாகன மயம், மக்கள் கூட்டம்...மேட்டூர் திணறும். ஆண்டுக்கொரு முறை பொலிவு பெறும்.ஆனால் அந்த நாள் இனி திரும்பி வரவே போவதில்லை.




காவல்துறை தமது கடமையை நன்றாகவே செய்யும். ஏன் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் கூட நிறைய மக்களை சாலைகளில் ஒழுங்கு படுத்தும் பணி செய்வார்கள். நீர்மோர், இரசிகர் மன்றம், கட்சி பேனர் எல்லாம் கொடி கட்டிப் பறக்கும். இடையே புல்லுருவிகளின் கை வேலைகளும் நடக்கும் மாட்டிக் கொண்டவர்க்கு பாடமும் புகட்டப்படும்... இப்படியாக....இந்த ஆடி18 அன்று அனேகமாக எனக்கது வேலை நாளாக இருக்கும் நான் கலந்து கொள்ளாத சில ஆடி 18 களில் இதுவும் ஒன்றாக இருக்கலாம்.

வெள்ளைகாரனை நேசிக்கிறார்கள் இதையெல்லாம் கண்ட மனிதர்கள்..ஏன் எனில் அதன் பின் எந்த நீர்த் தேவைத் திட்டங்களும் இந்த தமிழகத்தில் மிகவும் பெரிதாக இந்த மேட்டூர் அணைத் திட்டத்தையும் மீறி செய்யப் படவே இல்லை..என்பதால்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.




பி.கு: மறுபடியும் பூக்கும் வேர்ட்பிரஸ் டாட் காமில் 1350 பதிவுகளை இழந்த பிறகு இது 100 வது பதிவு.


இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் சொல்ல மறக்கக் கூடாதது: அன்றைய தினம் மெதுவாக 16 கண்மாய் நோக்கி நடந்து சென்றால் நாம் நிறைய நமது பழைய கால நண்பர்களை எல்லாம் சந்திக்கலாம்  வெளியூர் சென்று வாழ்வோர் எல்லாம்  கூட எதிரும் புதிருமாக வருவார்கள் பார்க்கலாம் சந்திக்கலாம்.







Wednesday, July 27, 2016

அப்துல் கலாமின் இழப்பு இந்த நாட்டுக்கு கேடு,மாணவ மாணவியர்க்கு ஒர் பேரிழப்பு: கவிஞர் தணிகை

அப்துல் கலாமின் இழப்பு இந்த நாட்டுக்கு கேடு,மாணவ மாணவியர்க்கு ஒர் பேரிழப்பு: கவிஞர் தணிகை




மனிதர் பம்பரமாய் சுழன்று திரிந்து உடலை வருத்திக் கொண்டார்.இவரின் மரணம் கடந்த ஆண்டு இதே நாளில் நிகழ்ந்தபோது உலகமே வியப்பெய்தியது இந்தியா ஒரு மாபெரும் தலைவனை இழந்தது.

என்னை நேசிப்பவராய் இருந்தால் எப்போதையும் விட இன்னும் அதிகமாக உழையுங்கள் என்றார்....தமது இழப்பை இறப்பை எப்படி சம்பவ சரித்திரமாக்க வேண்டும் என்று தெரிந்த மனிதர்... நன்கு தெளிந்த மனிதர்.

ஒரு நாட்டின் குடியரசுத் தலைவராய் இருந்தவர் அம்பாசிடர் காரில் கோவையிலிருந்து ஈரோடு புத்தகக் கலைவிழாவிற்கு இதே போன்ற ஆகஸ்ட் நாளில் இரண்டாண்டுக்கும் முன்பு வருகை புரிந்திருந்தார். இந்த நாட்டில் எப்படி எல்லாமோ வாழ்கிறவர்கள் தனி விமானத்தையும் ‍ஹெலிகாப்டரையும் பயன்படுத்தி வரும்போது...

மிகவும் நாணயமான குடும்பத்தைச் சார்ந்தவர்... பொருளாதார விஷய‌த்தில் பண விஷயத்தில் மிகவும் சரியாக நடந்து கொண்டவர். குடியரசுத் தலைவராக இருந்தபோதும்...

எனக்கு ஒரு ஆசை இருந்தது அது அவரால் கற்பனைக்கும் எட்டாது இருந்தபோதும் : அது இந்த நாட்டின் முப்படைத் தலைவராய் இருந்தபோது இந்திய நாட்டின் கட்சீ அரசியலுக்கு ஓரம் கட்டி தாமே ஆட்சியை கையில் எடுத்துக் கொண்டு நதி நீரை இணைத்து இந்த நாட்டுக்கு ஒரு மாவோ, லெனின், ‍ஹோசிமின், பிடல் போன்று ஒரு என்றும் அழியா மாபெரும் தலைவராக ஆகி எல்லாத் தலைவர்களையும் ஓரம் கட்டி விட வேண்டும் என்று...
Former President APJ Abdul Kalam's Statue Unveiled In Rameswaram


எவ்வளவோ ஆசைகள் நிறைவேறாமலே...அதில் இதுவும் ஒன்று...

அன்னாரது ஆன்மா இந்த நாட்டுக்கு நல் ஒளி காட்டி, நல் வழி காட்ட..என்றும் பிரார்த்திக்கிறேன்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Tuesday, July 26, 2016

"மூச்சுக் காற்று" - கவிஞர் தணிகை...

21 ஆம் நூற்றாண்டில்
_______________________

வணிக வளாகங்களாக‌

தொழுகைக் கூடங்கள்

கல்விச் சாலைகள்

மருத்துவ மனைகள்

அரசு அலுவலகங்கள்

கட்சிகள்

சட்ட மன்றங்கள்

நீதி மன்றங்கள்

பாராளுமன்றம்

மக்கள்?...

மக்கள் எவ்வழி மன்னன் அவ்வழி
மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி

குடி எவ்வழி படை அவ்வழி
படை எவ்வழி குடி அவ்வழி...

==== கவிஞர் தணிகை.




உன்னைக் காண:
________________

திருப்பதி சென்றேன்
திருவண்ணாமலை சென்றேன்
திருவரங்கம் சென்றேன்
பழநீ சென்றேன்
சமயபுரம் சென்றேன்

சிருங்கேரி சென்றேன்
மூகாம்பிகை சென்றேன்
தர்மஸ்தலம் சென்றேன்
சுப்ரமண்யா சென்றேன்
காசி இராமேஸ்வரம் சென்றேன்

அமிர்தசரஸ் சென்றேன்
ஜெரூசலேம் சென்றேன்
பெத்லகேம் சென்றேன்
வாடிகன் சென்றேன்.




மெக்கா, மதீனா சென்றேன்
___________________________,,

________________________________,,

_____________________________,,,,,

நீ
இங்கிருப்பது அறியாமலே
எங்குமிருப்பது புரியாமலே!





 ____ கவிஞர் தணிகையின்

"மூச்சுக் காற்று" கவிதைத் தொகுதியிலிருந்து.....


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை...

Monday, July 25, 2016

30 ஆண்டுகளுக்குப் பிறகு பாலமலையில்: கவிஞர் தணிகை.

30 ஆண்டுகளுக்குப் பிறகு பாலமலையில்: கவிஞர் தணிகை.
வாழ்வில் எப்போதுமே நினைத்துப் பார்க்க முடியாத விஷயங்களும் நடந்தேறிவிடுகின்றன.நடந்த பின் தான் இப்படி எல்லாம் நடக்குமா என்ற வியப்பு மேலிடுகிறது, நெருங்கியவரின் இறப்பு,நடக்காது என்று நினைத்த விஷயம் நடப்பது இதையே நடக்கும் என்பார் நடக்காது நடக்காது என்பார் நடந்து விடும் என்பார்.



30 ஆண்டுகளுக்கும் பிறகு அதே பாலமலையில் கால் வைப்பேன் என்று எப்போதாவது யாராவது சொல்லி இருந்தாலும் நம்பி இருக்க மாட்டேன். ஆனால் நேற்று மறுபடியும் பாலமலைக்கு சென்றேன் ஆம் 30 ஆண்டுகளுக்கும் பிறகு. அதே போன்ற ஆடி மாதத்தில்.

ஆடி மாதத்தில் காலடி வைத்தால் அடியோடு கெடும் என்பார் எம் தாய். அவர் இறந்த நாளும் இந்த ஆடி மாதத்தில்தான் ஆகஸ்ட் 9 அன்று வருகிறது. வேலைக்குத்தானே என மலைமேலே சமைத்து சாப்பிட்டபடி அரிய பல பணி செய்தேன் அதை எப்போதாவது தேவை ஏற்பட்டால் மறுபடியும் சொல்லலம். ஆனால் 3 மாதம் மட்டுமே அங்கு பணி புரிய முடிந்து, பிணி ஒரு பக்கம், கொல்லும் சதி ஒரு பக்கம் எனவே அங்கிருந்து வந்தவன் மறுபடியும் திரும்பவில்லை. இப்போது 30 ஆண்டு கழித்து அங்கே பணி பொருட்டு செல்ல நேரிட்டது என்னை வாழ்வில் ஏதோ சில புள்ளிகள் நாமறியாமலே நம்மை இட்டுச் செல்வதை மட்டும் உணர முடிந்தது.

ஆனால் முன்பு தனிமனிதனாய் சென்று சாதிக்க நினைத்து பின் வாங்கியவன் இன்று மருத்துவம் செய்யும் 2 பல் மருத்துவர்களுடன் பயணம் மேற்கொண்டேன்.



மருத்துவர் இருவரும் சேலத்தில் இருந்து வந்த அதே பேருந்தில் நான் எமது பிறந்த ஊர், இருக்கும் ஊரிலிருந்து ஏறி மேட்டூர் சென்றோம். அங்கு ஒரு நண்பர் நாங்கள் கண்ணாமூச்சி சென்று அதன் பிறகு ஜீப்பில் ஏறி பாலமலை செல்லலாம் என அறிவுறுத்தினார்.

ஜீப் வெகு நேரம் கண்ணாமூச்சியில் எங்களை காத்திருக்க வைத்தது. அதை ஓட்டும் ஒரு இளைஞர் அந்த பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த ஒரு பெண்ணிடம் கொஞ்சம் நேரம் செலவு செய்து விட்டார் அதற்கு ஜீப்பில் இருந்த ஒரு பெண் கமெண்ட்...அந்தப் பிள்ளை பஸ் ஏறும் வரை இவன் வந்து வண்டி எடுக்கப் போவதில்லை என்றார்.

அதன் பின் அந்த ஓட்டுனர் வீட்டிற்கு சென்று சாப்பிட்டு வருவதாக சொன்னார். அதன் பின் சிறிது நேரம் கழித்து வந்தவர் இன்னொரு பஸ் பார்த்து விட்டு செல்லலாமே என்றார். ஜீப்பில் இடம் இன்னொருவருக்கு இல்லாத படி 16 பேர் அமர்ந்திருக்க நெருக்கியடித்தபடி நிறைந்திருந்தது.

ஒரு வழியாக ஜீப்பை எடுத்தவர், உடனே உப்பு(உரம்) வாங்க வேண்டும் என ஒரு மலைவாழ் முதியவள் குரல் கொடுக்க, அவரிடம் இருந்து பணத்தை பெற்று ஜீப்பை வளைத்து ஓட்டு ஒரு உரக்கடை முன் நிறுத்தி உரத்தை வாங்கி ஜீப்பில் போட்டார் ஒரு மருத்துவர் சரியாக கால் வைக்க முடியாதபடி. மூட்டை மேல் கால் வைத்துக் கொள்க என்றார். ஆனால் வலைத்து காலை வைக்க முடியவில்லை



உரத்துக்கு போனது போக மீதம் இருந்த பணத்தை அந்த முதியவள் உரம் வாங்கச் சொன்னவளுக்கு உடனே தராமல் வண்டி டேஷ்போர்ட் முன் போட்டுக் கொண்டு வண்டியை கிளப்ப...காதடைக்கும் பாடல் சத்தம், காது செவிடாகிறது ஒலி அளவை குறை என குரல் கொடுத்தேன்,

சுமார் 40 நிமிட பயணம். வெறும் மண் சாலைதான் எல்லா சாலை வழியுமே மகாத்மா காந்தி 100 நாள் பணி மூலம் செய்யப்பட்டது. மழை வரும்போது அரித்து செல்லாதிருக்க ஆங்காங்கே நிறைய வேகத்தடைகள்...மழை நீர் சாலையை அரிக்காமல் ஓரம் செல்ல குழி வெட்டப்பட்டுமிருந்தது.

மிகவும் கடினமான சாலை...லாவகமாக நிறுத்தி, வளைத்து, பின் புறம் செலுத்தி பிறகு முன் எடுத்து வளைத்து இப்படியாக எல்லா வித்தைகளும் செய்து மட்டுமே வாகனம் ஓட்ட முடியும். நாலைந்து ஜீப்கள் இருக்கின்றன. மாறி மாறி மேலிருந்து கீழும் கீழிருந்து மலைக்கும் சண்டிங்க்.

கீழிருந்து மேல் செல்ல மிகவும் கடினம். கரணம் தப்பினால் மரணம் என்பது போல எங்கள் உயிரை ஓட்டுனர் கையில் கொடுத்து விட்டோம். மலை 3924 அடி கடல் மட்டத்திலிருந்து உயரம். 23 கிராமங்கள் உள்ளது. திம்மம் பொதி முதல் பாத்திர மடுவு, கெம்மம்பட்டி, இராமன் பட்டி இப்படி நிறைய கிராமங்கள்.


நாங்கள் சென்றது புல்லம்பட்டி. இதற்கு நியாயமாக 30 ரூபாய் மட்டும் பெற்றுக் கொண்டார் எங்களுக்கு தெரியாததால் நாங்கள் முன் வண்டியில் ஒருவரை விசாரித்தபடி தலைக்கு 40 ரூபாய் கேட்டிருந்தாலும் எடுத்துக் கொண்டிருந்தாலும் எங்களால் ஒன்றும் செய்திருக்க வழி இல்லை.

ஆனால் அந்த இளைஞர்களிடம் அவ்வளவு பேராபத்தை சமாளித்து வாகனம் ஓட்டும்போதும் ஒரு நேர்மை.

கீழ் இறங்குவது ஏறுவதை விட சுலபம். வாகனம் 20 நிமிடத்தில் கூட இறங்கி விடும்.

நாங்கள் போன அப்போது மின்சாரம் இல்லை பி.எஸ்.என்.எல் லேன்ட் லைன் ஏதும் வேலை செய்யவில்லை. மின்சாரம் இருந்தால் மட்டும் போனும் வேலை செய்யுமாம். செல்பேசிக்கு டவர் ஏதும் கிடைக்கவில்லை.

எங்களை அந்த அங்கிருந்து சேவையாற்றும் கிறித்தவ  தம்பதிகள் இரு நேரம் உணவளித்து தங்கள் திருப்தியை மகிழ்வை வெளிப்படுத்தினார்கள்/ அவர் தம் சிறு குழந்தைகளுக்கு எமது அன்பின் வெளிப்பாடாக மாம்ஸ் மேஜிக் பிஸ்கட் பாக்கெட் ஒன்றை அன்பின் பரிசாக அளித்தேன். அந்த பிஸ்கட் நன்றாக இருக்கிறது.

எப்படியோ நேற்று மாலை முதல் ஒலிபெருக்கியில் சொல்லி இருந்தோம் என்றார்கள். சொன்னது உண்மைதான் ஆனால் அத்தனை வரவேற்பில்லை மனிதம் அதன் ஆரோக்கியம் முக்கியம், மதமல்ல என்பது அங்கே இன்னும் தெளிவு படுத்தப் படவில்லை. பேட்டரி மின் விளக்கின் உதவியுடன் பணி புரிந்தோம்.

11 பேருக்கு சிகிச்சை அளிக்கப் பட்டது 4 பெரியவர்கள், 7 சிறுமிகள். ஆனால் அனைவருக்கும் பல் முக்கியத்துவம், பாதுகாப்பு, ஆலோசனை பற் பராமரிப்பு பற்றி ஒவ்வொருவராக தனித் தனியாக சிறப்பாக சேவை யாற்றி கவனித்தோம்.

இயற்கை அன்னை இன்னும் கூட கொஞ்சம் காயப்படுத்தப் பட்ட போதும் கொலுவிருக்கிறாள். நல்ல காற்று இருக்கிறது. நல்ல குடி நீர் இருக்கிறதா எனப் பார்க்க வில்லை. நாங்களே குடி நீர் கொண்டு சென்றுவிட்டதால். சுற்றிப் பார்க்க வில்லை. ஆனால் சூழலை தெரிந்து கொண்டோம். மலை மலைதான். பேருந்தில் ஏறும்போது கவனித்தோம் சில இளைஞர்கள் ரூ.15க்கு ஒரு சிறிய பலாப்பழத்தை வாங்கி இருந்ததை. பலாப் பழ சீசன் முடிந்து விட்டது என்றும் முடியவில்லை என்றும் இரு வேறு கருத்துகள்...மலை, பலா முள், பயணம் எல்லாவற்றிலும் ஒரு தொடர்பு இருக்கிறது...இருப்பது போலப் படுகிறது.. வாழ்வோட்டத்திலும் கூட...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Friday, July 22, 2016

கபாலி: திரை விமர்சனம்: கவிஞர் தணிகை

கபாலி: திரை விமர்சனம்: கவிஞர் தணிகை



Kabali pistol back fired....
எப்படி இதை விமர்சனம் செய்வது என்றே விளங்கவில்லை.உங்களுக்காக பார்த்தேன். எனவே பகிர்ந்து கொள்ள கடமைப் பட்டுள்ளேன். ரஜினி இரசிகர்களுக்கு மட்டும். என்று விளம்பரம் செய்ய வேண்டிய படம். மகிழ்ச்சி ரஜினிகாந்துக்கும் நமக்கும் இல்லை கபாலி சொல்வது போல.லிங்காவே பரவாயில்லை என லிங்காவை நல்ல படமாக்கிய படம் இந்தக் கபாலி.

அட்டக் கத்தி, மெட்ராஸ் எல்லாம் எடுத்த இரஞ்சித் என பெருமை பேசும் நபர்கள் எல்லாம் இதைப் பார்த்து விட்டு என்ன செய்வார்கள் என்றே தோன்றவில்லை...

வெறும் ஸ்டில், டீசர், ட்ரெய்லர் சாதனை என்றெல்லாம் சொன்னார்கள் அதை வைத்தே படத்தை ஓட்டி விடலாம் என கனவு கண்டிருந்தால் அது பொய்யாப் போன கனவு. தியேட்டரை விட்டு வெகு விரைவில் இந்தப் படம் ஓட்டி விடுவார் மக்கள் என்று நம்புவோமாக.

இதை எடுத்த இதன் தயாரிப்பில் ஈடுபட்ட அத்தனை நபர்களையும் இந்த படத்தை முழுமையாகப் பார்க்கச் சொல்லலாம்.ரஜினிகாந்த் உட்பட. ரஜினிகாந்துக்கு இனி சங்கரின் 2.0 எப்படி இருக்கும் என்ற கனவை ரஜினியின் இரசிகர்கள் காணலாம். சங்கர் அவ்வளவு ஏமாற்ற மாட்டார் என நம்புவோமாக.

இந்த படத்திற்காக ஒரு மலேய இரசிகர் டிக்கட் கிடைக்கவில்லையே என தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் . என்ன சொல்வதென்றே விளங்கவில்லை. இந்த படத்திற்காக 500, 1000 , 1500 ரூபாய் என டிக்கட் விற்பனையும், ஒரு அலுவலகம் டிக்கட் கொடுத்து விடுமுறை அளித்து பார்க்கச் சொல்வதும், இதை உலகெங்கும் 5000 திரையரங்குகளில் வெளியிட்டு கல்லா கட்ட நினைத்ததும் முத்தூட் நிதி நிறுவனம் கடனுதவி வழங்க பார்க்கச் சொல்ல முயன்றதும் இதை வியாபாரம் என்று நம்பி வாங்கி வெளியிட்ட தியேட்டர்களும்...ஆம் இதெல்லாம் இல்லை எனில் இந்தப் படத்தை எவருமே பார்க்க விரும்ப மாட்டார்கள்.

ஒரு நல்ல படத்தை விரும்பி அனைவருமே பார்ப்பார்கள்.அதற்காக இத்தனை ஆரவாரம் தேவையில்லை.ஆனால் இனி இந்தப் படத்தை ரூபாய் 1500 கொடுத்து பார்க்கச் சொன்னால் கூட முடியும் வரை பார்ப்பது இயலாத காரியமே.

வெறும் ஒரு சூப்பர் ஸ்டார் இமேஜ் வைத்துக் கொண்டிருந்தால் மட்டுமே போதுமா? ஒரு சினிமாவை பார்க்க முடியுமா ஒன்றுமே சொல்லத் தகுதி இல்லாமல்....

சொல்ல ஒன்றுமே இல்லை. சொன்னால் ரஜினி ரசிகர்கள் கோபித்துக் கொள்வார்கள். அவர் உருவம் திரையில் தோன்றினாலே போதும் இரசிகர்கள் கூச்சலிட்டு ஆரவாரப் படுத்தி விடுகிறார்கள். மற்றபடி இந்தப் படம் அவர்களுக்கு மட்டுமே.

கதை என கஷ்டப் பட்டுத் தேடிச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு கேங்க்ஸ்டர் . மனைவி, இறந்ததாக நினைப்பவர்க்கு மனைவியும் மகளும் கிடைக்கிறார்கள். கேங்க்ஸ்டர் நடவடிக்கையால் பாதிக்கப் பட்ட குடும்பத்தின் குழந்தைகளுக்கு பள்ளி நடத்துகிறார். மலேயாவில் ஆரம்பித்து தமிழகம் வந்து மனைவியைத் தேட வருகிறார் இடையில் பாண்டிச்சேரி, பிரான்ஸ், அமெரிக்கா என்றெல்லாம் சொல்கிறார்கள்....

இது போன்ற படத்தை பார்ப்பது முழுதாக பார்ப்பது மிகவும் கடினம். மேலும் அது நேர விரயமும் கூட. மேலும் சொல்ல வேண்டுமெனில் இந்தப் படத்தை பார்ப்பதற்கு மாறாக யாம் முன்பே சொன்னபடி ஆயிரம் முறை அப்பா படத்தை பார்த்து விடலாம்.

என்ன செய்வது இது தான் தமிழ் பட உலகின் அவலத் திணிப்பாக இருக்கிறது. இதை எல்லாம் பேசப்போனால் எனது மதிப்பு மிகுந்த நண்பர் யானை இருக்கும் காட்டில்தான் எறும்பும் இருக்கிறது என்கிறார். எறும்புக் கூடினால் யானை கதி அதோகதிதான்...

ஆனால் இங்கு எறும்புகள் கூடுவதென்பது துர்லபமாக இருப்பதால் இதை எல்லாம் சகித்துக் கொண்டே போகவேண்டியதிருக்கிறது. நான் சொல்வதை சொல்லி விட்டேன் இனி பார்ப்பதும் பார்க்காமல் விடுவதும் உங்கள் விருப்பம். இரஜினியும் ரஜினி இரசிகர்களும் மன்னிப்பார்களாக. இப்படி இரஜினி படம் கொடுப்பதற்கு ஓய்வெடுக்கலாம். அது அவருக்கும் நமக்கும் தமிழகத்துக்கும் நல்லது. இந்த மகாராஸ்ட்ராவில் பிறந்த சிவாஜி கெய்க்வாட் தமிழர் முன்னேற்றம், கோட் அணிவது பற்றி எல்லாம் பேசி  தமிழ் பேசத் தெரியாத ஒரு ஜப்பான்கார/மலேயாக்கார வில்லன் நடிகரிடம் டையலாக் எல்லாம் டெலிவரி செய்து தமிழ் படத்தை ஓட வைக்க முயன்றுள்ளார்.

ஒரு நாள் வசூல் கூட இவர்களுக்கு போதும் என்பதால் போட்ட முதலை எடுத்துக் கொள்வார்கள். படம் வெற்றி என்றும் சொல்வார்கள். நம்பிப் போய் விடாதீர்கள். வெம்பிப் போய்விடாதீர்கள். பார்த்து விட்டு வெதும்பி விடாதீர்.

நன்றி
வணக்கம்.

பி.கு: ரஜினிகாந்துக்கு பரம  எதிரி  நானல்ல. உள்ளது உள்ளபடி சொல்லியே பழக்கம் எந்த எதிர்ப்பு வரினும் என்பதால் ரஜினியும் ரஜினி இரசிகரும் மன்னிப்பார்களாக.

Wednesday, July 20, 2016

கபாலியில் ரஜினிகாந்த் ரோலே இல்லையாமே? கவிஞர் தணிகை

கபாலியில் ரஜினிகாந்த் ரோலே இல்லையாமே? கவிஞர் தணிகை



ஐ மீன் கபாலி ரிலீஸ், தமிழகத்தில் அந்த படத்தின்  விற்பனை தியேட்டரில் வெளியீடு ஆகியவற்றில் படம் எடுத்த தாணு, நடித்த ரஜினிகாந்த், இயக்கிய ரஞ்சித் ஆகிய அனைவரின் உழைப்பும் மூட்டை கட்டி விலைக்கு வாங்கப்பட்டு ஜாஸ் நிறுவனம் விழுங்கி விட்டதாக செய்திகள் அடிபடுகின்றன.

இது எந்த அளவு உண்மை என்பதை தேடிப் பாருங்கள் . எனது தேடலுக்கு அது சரியான தகவல் என்றே தெரிய முடிந்திருக்கிறது.தாணுவுக்கு ஒரு இரட்டிப்புத் தொகை வழங்கப்பட்டு, தமிழ் நாடு தவிர வேறு எங்கும் எப்படியும் செய்து கொள்ளுங்கள் இங்கு நாங்கள்தான் என தமிழகத்தின் ஒரு மாபெரும் சக்தியின் கைக்குள் சென்று படம் அடங்கி விட்டதாமே...

இருக்கும் இருக்கும் இல்லையென்றால் எதற்கிந்த வரலாறு காணாத ஆர்ப்பாட்டங்கள், வேடிக்கைகள், எப்போதும் இல்லாதவாறு...அது சினிமாய்யா சினிமா, எல்லா இடங்களிலும் சினிமாவை சினிமாவாகப் பார்க்கும்போது இங்கே வாழ்க்கையாக பார்க்க ஆரம்பித்ததும் அந்த தலைவன் வருவான் வாழ்வை மலரவைப்பான் என ஏங்குவதும் கனவு காண்பதும் எவ்வளவு அபத்தம்.



அந்த கனவு பொய் பிம்ப நாயகர்கள் தங்கள் தொழிலை, தங்கள் குடும்பத்தை, தங்கள உடமைகளை காப்பாற்றிக் கொள்ளவே அரசுகளை மத்தியில் மாநிலத்தில் ஆள்வோரை அடி வருடிக் கொண்டு  அந்த அவார்ட் இந்த வெங்காயம் என ஓடி நாடிக் கொண்டிருக்கும்போது பொது மக்களை எப்படி எந்த சினிமா, எந்த நாயகன் காப்பாற்ற வருவான்?


சுதந்திர நாடு....மதுவின் கேடு, நல்லது செய்ய நினைப்பவர்க்கு சிறை அடி உதை கேட்பாரற்ற அவலம், அதில் வேறு இந்த சினிமா ஓலம்...

இதில் எனது ஒரு அரிய நண்பர் சொல்கிறார். ரஜினி சினிமா வெளியிடும் போது தியேட்டர்கள் எல்லாம் புதுப்பிக்கப்படும் ஏராளமான ஏழை பாலைகளுக்கு வேலை/தொழில் கிடைக்கும் அது தவறா? என்றார் என்னால் அவரிடம் என்ன பேசுவது என்றே தெரியவில்லை. அறிவில் மிக்கார் அவர். சினிமாவை விட ஒரு நல்ல தொழில் ஏற்படுத்த முனைவதை ஒர் நல்ல அரசு செய்யாததால்தானே ஒரு நல்லரசு நமது மக்களுக்கு நல்ல வாழ்க்கை தரத்தை கொடுக்க முடியாததால் தானே இந்த கனவில் வாழும் வாழ்க்கையும், தவறான பாதையில் செல்லும் வாழ்க்கை எல்லாம் உயர்ந்த வாழ்க்கை என்றும் கற்பித்து வழி மாற்றிச் செல்லப் படுகிறான்..

இது எப்படி இருக்கு? என்று கெட்டவராகவும் சிகரெட்டை தூக்கி வாயில் போட்டும் தானே இந்த கபாலி சினிமா வாழ்வை உருவாக்கிக் கொண்டார். அது தவறு என சொல்வோர் எல்லாம் விதி விலக்காக போய் விட்டதால் தானே இந்த உலகில் நல்லவற்றின் குரல் எடுபடாமல் போய்விடுகிறது.



சங்கரின் எந்திரன் பற்றி எழுதும்போதே யார்ரா இந்த ரஜினி என முழங்கினோம்....குறுகிய நேரத்தில் 2600 பேருக்கும் மேல் படித்த அந்த பதிவே இன்றும் எனது பதிவுகளில் அதிகம் படித்த பதிவாக காணப்படுகிறது.மேலும் இந்த 2600 பேரும் நமது நாட்டை மட்டுமே சார்ந்தார் அல்ல உலகெங்கும் இவர்கள் 5000 பிரிண்ட் போடுவது போல போட்டது.

இது போல அடம் பிடித்து எமது விவரம் தெரியா மக்களின் தலையில் கட்டப் படும் படம் எதுவுமே நன்றாக ஓடக்கூடாது, வசூலும்  இருக்கக் கூடாது . ஒரு நல்லரசுக்கு மக்களுக்கு எதிராக எது இருந்தாலும் அதை முடக்கும் ஆற்றல் வேண்டும். இல்லையேல் மக்களுக்காவது வேண்டும் இங்கு இரண்டும் இல்லை.
சமுத்திரக் கனியின் அப்பாவை ஆயிரம் முறை பார்க்கவும். இந்த கபாலியை ஒரு முறை பார்ப்பதற்கு மாறாக.அல்லது சூடு ஆறிய பின் பார்த்துக் கொள்க. இவர்களுக்கு நம் உழைப்பில் இருந்து ஒரு பைசா கூட போய்ச் சேரக்கூடாது.

இதே ரஜினி காந்த் முன்பெல்லாம் இவர் நடித்த படத்தின் பல மாவட்ட உரிமைகளை எல்லாம் தமது சம்பளத்தின் ஒரு பகுதியாக பெற்றுக் கொண்டதும்,சில நேரம் படம் சரியாக ஓட வில்லை எனில் நஸ்டத்தை ஈடுகட்ட சர்ச்சைக்கிடையிலும் ஓரளவு நஷ்ட ஈடு கொடுத்தையும் நாம் மறக்கக் கூடாது...ஆனால் இப்போது இந்த மனிதருக்கு இந்த ரிஸ்க், சவால் எல்லாம் இல்லை.



அடுத்து சங்கரின் 2.0 பற்றி மட்டுமே இவரது கவலையாய் இருக்கும். ஆனால் ரஜினிகாந்த் படம் எப்போதும் மிகப் பெரும் மனிதராய் இருந்தவர் கேவலமாக சிறுத்துப் போன மனிதமாக மாறி அதன் பழி வாங்குவாரை பழி வாங்கு வாங்கு என்று வாங்கி உயரமாக ஏறுவார் என்ற ஒரே வரிக் கதை தான் எல்லாப் படங்களிலும் பெரும்பாலும் சொல்லப் பட்டிருக்கும். நல்ல பாடல், நல்ல இசை, தத்துவம், நிலையாமை, பிரும்மாண்டமான பொருட் செலவு பின்னணி, மிகுந்த பொருள் செலவு செட் அல்லது வெளி நாட்டுப் பயணம், அத்துடன் அதிகமான செலவை ஊதியத்தை பெறும் தொழில் நுட்பக் கலைஞர்கள்...இவை யன்றி எதற்காக இந்த மனிதருக்கு பத்ம விபூஷன் விருது என்றால் இவர் பாரதீய ஜனதா கட்சிக்கும் பிரதமர் மோடிக்கும் வேண்டப்பட்டவர்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.



Tuesday, July 19, 2016

தேவை இத்தருணம் ப்யூஸ் மனுஸ் விடுதலை கபாலி பட டிக்கட் அல்ல: கவிஞர் தணிகை.





தேவை இத்தருணம் ப்யூஸ் மனுஸ் விடுதலை கபாலி பட டிக்கட் அல்ல: கவிஞர் தணிகை.

இந்தி தேசிய மொழி என்கிற நாட்டில் ஏன் இந்தியில் பேசக் கூடாது ஒரு கணவனும் மனைவியும் என்கிற கேள்விக்கு என்ன பதில் சொல்லப் போகிறது இந்த நாடு? உண்மையிலேயே இவர் பற்றி இன்றுதான் அறிந்தேன் ப்யூஸ் மனுஸ் என்கிற பேர் வித்தியாசமாக இருக்க இவர் உண்மையிலேயே மனுசர்களுக்கு ப்யூஸ் போட்டு எரியவிடுபவர்தாம் ஆனால் இவர் பேர் ப்யூஸ் மனோஜ் என்றும் தெரிகிறது.

ராஜஸ்தான் மாநிலத்துக் குடும்பம் தமிழ் நாட்டில் சேலத்தில் தங்கி குடும்பம் நடத்தும் காலத்தில் சேலம் சிட்டிஜன் பார்மை நடத்த ஆரம்பித்து நீர் வளம், நிலவளம், காட்டு வளம் எல்லாம் செய்ய ஆசைப்பட்டு எரிசக்தியை எளிமையாக கையாளலாம் எனத் துடித்த ஒரு இதயம் தமது குடும்பத்துக்காக அழுகிறது. தம்மை அழித்து விடுவார்களே என்று பயந்து கொண்டிருக்கிறது.

காரணம்: மக்கள் சார்ந்த நலத்துக்காக குரல் கொடுத்தது.ரெயில்வே முள்ளுவாடி கேட் கட்டுவதற்கு முறைப்படி நில அளவை எல்லாம் செய்து செய்யக் கூடாதா என இன்னும் சிலரோடு சென்று பிரதிநிதித்துவம் செய்ததுதான்...

இவர் மனைவியே சொல்லி இருக்கிறார் ஏன் இந்த நல்ல மனிதரை பூமியின் மைந்தனை இப்படி காவல்துறை அல்லது சிறைத்துறை அல்லது இந்த அரசு சித்திரவதை செய்கிறது? ஏன் எனில் இவர் ஒரு தலைவர் ஆகி இருக்கிறார். உண்மையிலேயே ஒரு தலைவர் ஆகி விடுவார் மக்கள் செல்வாக்கை பெற்றுவிடுவார் அதை முளையிலேயே கருவறுக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
( இந்த சினிமா அடிமைகளும், மதுக் குடியர்களும் இந்த சம்பவத்துக்காக அனுதாபம் கொள்வார்களா? எனக்கே இன்றுதான் தெரிந்திருக்கிறது. எப்படி இத்தனை நாள் இந்த மேகம் என் கண்ணில் படாமல் மறைந்திருந்தது என்றுதான் எனக்கே தெரியவில்லை...)


மேலும் இந்த பூமிக்கும் மனிதர்களுக்கு நல்லது செய்தததும்...மேலும் வினுப்ரியா என்ற பெண் அதாங்க மார்பிங் செய்த தன்னுடைய‌ படம் வெளியானதால் அவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் காவல் துறை சார்ந்த உயரதிகாரி ஒருவரை அந்த பெண்ணின் பெற்றோர் சார்ந்த ஊரடங்கிய கூட்டத்தில் ஏற்கெனவே புகார் அளித்தும் நாங்கள் காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தவறியது தவறுதான் என மன்னிப்பு கேட்க வைத்ததுதான்..என அவர் சொல்வது...ஆனால் இவர் உண்மையான விதையாக இருக்கிறார் விருட்சமாக மாறிவிடுவார் எனவே இவரை இவரது வீரியத்தைக் கிள்ளி விட வேண்டும் என ஆளும் வர்க்கம் கருதுவதை இன்று நான் காண முடிகிறது.

இப்பேர்ப் பட்ட ஒரு மனிதரை இன்றுதான் நான் அறிய முடிந்திருக்கிறது ஒரு அரிய மனிதரும் நண்பரும் விழி திறந்து காட்டி இருக்கிறார். அவரை துன்புறுத்துவது எந்த அரசுக்கும் நாட்டுக்கும் சிறப்பு சேர்ப்பதாக இல்லை. 

இவர் போன்றவர் நாட்டுக்கே சி.என்.என்/ஐ.பி.என் வழியாக எல்லாம் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறந்த இந்தியராக விருது வழங்கப்பட்டிருக்கிறார். இவருக்கு ஏன் இந்த கதி? இந்த நாட்டில் சுதந்திரம் இல்லை என்பதற்கு இந்த கைது ஒரு அடையாளம்.

வெறும் சுதந்திரம் தினம் விழா என்று கொண்டாடி என்ன பயன்?
சட்டபூர்வமாகவும் நீதிபூர்வமாகவுமே அரசு அதன் முடியாமையை இவருக்கு விளக்கலாமே, இப்படி ஒரு கொலைகாரனை, குற்றவாளியை தாக்குவது போல தாக்குவது எந்த நீதிப் புத்தகத்தில் உள்ளது?\

உண்மையிலேயே குற்றவாளியே ஆனாலும் நீதி சொல்வதை செய்ய வேண்டியே காவல்துறை சிறைத்துறை உள்ளது ...என சட்டம் சொல்வதை அரசின் ஆணையை நிறைவேற்றுவதாக சொல்லி, மக்களை அடிமைப்படுத்தும் இந்த அரசும் அதன் துறைகளும் இந்த நல்ல மனிதரை வாழ விட வேண்டும்.இல்லாவிட்டால் எந்த குற்றமும் செய்யாத இந்த மனிதரை துன்புறுத்தும் அவலம் இந்த அரசுக்கு பெரும் அவப் பேராக முடியும்...

இது இந்த நேரத்தில் அந்த அரிய குடும்பத்துக்கு எமது ஒத்துழைப்புக் குரலான பதிவாகும்.போதும் அரசுகளே செய்த பாவம் எல்லாம்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.



Monday, July 18, 2016

நான் கபாலீஸ்வரன்டா: கவிஞர் தணிகை

நான் கபாலீஸ்வரன்டா: கவிஞர் தணிகை



நகைச் சுவை: நீ கபாலின்னா நான் கபாலீஸ்வரன்டா என்றான் கனகு.சினிமாவை சினிமாவாப் பாருங்கடா என்றான் செல்வம்.அமெரிக்காவில் 400 தியேட்டர்கள், இந்தியாவில் ஆயிரக்கணக்கான தியேட்டர்கள் என 5000 , 10,000 தியேட்டர்களில் என ஏகப்பட்ட செய்திகள்...டிக்கெட் கிடைக்கவில்லையாம் ஆன் லைன் புக்கிங்கில்.

நீ கபாலின்னா நாந்தான்டா உண்மையான கபாலீஸ்வரன்,ஏன் கபாலீஸ்வரனைக் கோயிலைக் கட்டியவன் என்றான் சுந்தரம்.எது எப்படியோ 22 ஆம் தேதி தமிழகத்தில் மட்டும் 120 ரூபாய் டிக்கட்டாம் மற்ற இடங்களில் 1500 வரை செல்கிறதாம். டிக்கட் கிடைக்கவில்லையாம் முதல் 10 நாட்களுக்கு. அதுக்கு மேல் அதில் என்ன இருக்குன்னு எல்லாருக்கும் தெரிந்து விடப் போகிறதே !

...என்னடா நடக்குது நாட்டில? நகைச் சுவை செய்ய நேரமாடா இது? தங்க விலை 24000 என்றும் எல்கேஜி குழந்தையை சேர்த்த 35000 என்றும் மருத்துவம் படிக்க கோடிகள் என்றும் நன்கொடை கேட்கும் நாட்டில் பயணம் எல்லாம் கடும் சிரமமாகிக் கொண்டிருக்கும் நாட்டில் எங்கு நோக்கினும் நாற்றமும், காலை 7 மணி ஆகும் முன்னே காமரஸம் காதல் பாடும் பாட்டு கேட்கும் பேருந்தில், அந்த பேருந்தில் பரட்டை,அழுக்கு, நாற்றம், குடியின் போதையின் ரேகை செருப்பில்லாமல் ஒரு இந்தியனை பார்த்த பின்னும் ஏது நகைச் சுவை? எப்படி வரும் நகைச் சுவை...சினிமா பார்த்தேதான் குட்டிச் சுவரானது இந்த தமிழ் நாடு இன்னுமா?...

நான் ரெயில்வேக்காரன்டா என்று ஒரு பொது இடத்தில் பீடி குடித்தபடி இருக்கும் போதை நாயகன் சொல்கிறான் பயணிகள் ரயிலில்..என்னை எவனுமே ஒன்றும் செய்ய முடியாது என ஆணவத்தில்...அது போலத்தான் இந்த கபாலியும்...நாட்டு மக்களின் எந்த பிரச்சனையும் தீர்க்க முடியாத திரைக்கபாலி, டிஜிட்டல் கபாலி. வெறும் பொம்மை. வெறும் பிம்பம். உண்மையில் இதற்கு இல்லை ஒரு கட்சிக் கம்பம் கொடி அவ்வளவுதான். விஜய்காந்த் டப்பா கழன்ட மாதிரி இதுவும் ஏதாவது செய்து பார்க்க மனைவி லதா அம்மையார் விட்டிருந்தால் இந்த தியான குரு விலாசமும் அப்படித்தான் போயிருக்கும்...

கிராம முன்னேற்றத்திற்காக 10 ஆண்டு உழைத்து பசிப்பிணியை சம்பாதித்துக் கொண்டவர்க்கு இருக்கும் இடம் தெரியா கூடு, இந்த போலி சினிமா நாயகர்களுக்கு எத்தனை எத்தனை விளம்பர ஏடு, ப்ளக்ஸ் போர்டு.?இதற்காக 160 வலைதளங்களில் இந்தப் படத்தை வெளியிட்டு விடாதவாறு தடுத்து வைத்திருக்கிறார்களாம்.

முத்தூட் பைனான்ஸ் வேறு இந்தப் படம் 22 ஆம் தேதி வெளியாவதை எண்ணி இதன் இரசிகர்களுக்கு பணத்துக்குப் பஞ்சம் என்ற தேதியில்...1000 ரூபாயை கடனாக கொடுத்து தவணைகளாக வட்டி போட்டு வாங்கிக் கொள்ளவும் தயாராம்...



தியேட்டர்கள் அல்லாமல் நட்சத்திர ‍ஹோட்டல்களில் வேறு 1300 ரூபாய்க்கு காண்பிக்கும் எண்ணம் வேறு உள்ளதாம். பலித்தால்....

பை, டப்பா, வெங்காயம் எல்லாவற்றிலும் கபாலிதானாம்.அப்படி ஒரு வியாபாரமாம். எல்லா சினிமா சாதனைகளையும் இது மூழ்கடித்து விட்டதாம். அடுத்து சங்கர் எடுக்கும் 2.0 2017ல் எப்படி வெளியிடுவது என இந்த பழாய்ப்போன பழசான பழி வாங்கல் கதை
இப்போதே சங்கருக்கு கிலி ஏற்படுத்துகிறதாம்.

அண்ணன் அமெரிக்காவில்...இங்கு இரசிகர்கள் அடி தடி தகராறில்...டிக்கட்டுக்கு.

அரை வேக்காடுகளுக்கு ஒரு அரிய செய்தி: மாத்திரை வாங்க 5 ரூபா பத்தாம எத்தனை தாய்மார்கள் இருக்காங்க தெரியுமாடா? ஒரு ரூபா காசுக்காக பிச்சை எடுக்கும் எத்தனை கொடுமைகள்...அவர்களுக்கு எல்லாம் அன்போடு கருணையோடு எப்போதாவது நீ தர்மம் செய்திருப்பாயா? நினைத்து பார் இரசிகா ஓ ரசிகா...இவன் காலை எடுத்து வைத்தா நெருப்பு, பூகம்பம் எல்லாம் இருக்கும் சினிமாவில் ...ஆனால் உண்மையில் நாட்டுக்கு என்ன செய்தார் என்று கேட்டுப் பாருங்கள் அதன் பின் இவருக்கு பத்ம விபூசன், கடன் நிலுவை வழக்குகள் எல்லாம் தள்ளுபடி ஆன கதை எல்லாம் மோடிக் கதைகளாகத் தெரியலாம்.

ஆளும் கட்சிக்கார இந்த கதா நாயகனை மலேசிய மந்திரிகள் வந்து பூங்கொத்து கொடுத்து படம் எடுக்கும்போது வந்து பார்த்த கதை எல்லாம் உண்மை....தமிழ், தெலுங்கு, மலாய் மொழிகளில் ஒரு வெறும் பிரமையை உருவாக்கி காட்சி பிம்பமாக்கி இருப்பார்கள் அதனால்தான் இது எங்கே இணையத்தில் வெளியாகி விட்டால் படம் லிங்கா கணக்கில் மார்க்கும் வசூலும் அள்ளி விடும் என ஏகக் கெடுபிடி.

முந்தா நேத்து வந்த முட்டாப்பயல்களுக்கு எல்லாம் சினிமாவில் வந்து விட்டால் கட் அவுட் பிளக்ஸ், மாலை மரியாதை கோடி கோடியாக வருவாய்...

மது மக்கள் மான்மியம் இவர்கள் பின்னே சென்று கொண்டே இருக்கிறது ...ஆக்கபூர்வமான கருத்துகளுக்கும் நாட்டை செப்பனிடத் துடிக்கும் உயிர்களுக்கும் என்னடா செய்திருக்கிறீர். எல்லாவற்றையும் மீறித்தானே கலாமும், தெரஸாவும் காந்தியும் பகத்தும் தோன்றினார்கள்...

கல்லூரியில் படிக்கிறோம் என இந்த பொய்களின் பின் இன்னும் எத்தனை காலம் தான் ஓடும் இந்த தமிழகம்? பிள்ளைகளை நெறிப்படுத்தாமல், நேரிய வழி செலுத்தாமல் இன்னும் எத்தனைக் காலம் பெற்றோர் சென்றபடி இருப்பர்...? நாட்டுக்கு எது தேவை என இன்னும் எத்தனை காலம்தான் சொல்லாமல் ஆசிரியர் குழாம் இந்த வேஷக்கார்கள் பின்னே பிள்ளையை அலைய வைக்கும்? வெட்கம்...



டேய் நான் கபாலீஸ்வரன் கோவிலைக் கட்டியவன்டா, அதனுள் இருக்கும் கபாலீஸ்வரனையும் தெரியும் இந்த கபாலியையும் தெரியுன்டா...எல்லாம் பொய், பொய்களின் மேல் எந்த கட்டடத்தையும் எழுப்ப முயலாதீர்...உண்மையை உரக்கச் சொல்வோம் உலகத்துக்கு அது கசப்பு மருந்தாகும்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

பி.கு: இந்த படத்தை செலவு செய்யாமல் பெரும் செலவு செய்யாமல் பார்க்க முயல்வோருக்கு எல்லாம் என் வணக்கமும் நன்றிகளும் உரித்தாகட்டும்.

அல்லது பார்க்காமல் இருப்போர்க்கு அதை விட உத்தமமான வணக்கங்கள்.

எல்லாம் 10 நாள் விட்டுப் பிடியுங்க கபாலி எல்லாம் கால் தூசு, உங்க காசு மிச்சமாச்சு. வெளியே தெரியாமலே விற்று விட நினைக்கிறார்கள். ஒர் ப்யூஸ் போன பல்பை எரிய வைப்பதாக வேடிக்கை காட்டி. கவர்ச்சி சினிமா நுரையில் மூழ்கிடச் செய்து... போதையின் பின் போகும் இளையவர்கள் இந்த சினிமா போதையின் பின்னே அலைய வேண்டாம் எனச் சொல்வது எமது கடமை. போதி மரத்து புத்தரின் போதனையைக் கூட கேட்க வேண்டும் எனச் சொல்லவில்லை உங்க பெற்றவர்களுக்கு மனம் குளிர ஒரு ஆடை, ஒரு வேளை சோறு, உங்கள் சொந்த சகோதர சகோதரிகளுக்கு உபயோகமாக ஒரு செருப்பு, ஒரு முழம் பூ வாங்கிக் கொடுங்கள் அதன் பின் கபாலிடா, நெருப்புடா நெருங்குடா எல்லாம் பார்க்கலாம்.



Sunday, July 17, 2016

பகல் 12 மணிக்கு கடைத் திறப்பதால் டாஸ்மாக்கில் வியாபாரம் குறைந்து விட வில்லை: கவிஞர் தணிகை

பகல் 12 மணிக்கு கடைத் திறப்பதால் டாஸ்மாக்கில் வியாபாரம் குறைந்து விட வில்லை: கவிஞர் தணிகை



உண்மை வெறும் வார்த்தையில்லை. தொடர்புடைய நண்பர் ஒருவருடன் பேசித் தெரிந்து கொண்டதிலிருந்து:சேலம் மாவட்டத்தில் ஒரு கடைகூட எண்ணிக்கையில் குறைக்கப்படவில்லை,இடம் மாறுதல் செய்யப்படவில்லை. எடுக்கப்படவில்லை.காந்தி ஜெயந்தி அன்றும் கூட கடை அரை நாள் இருக்கிறது என்கிற செய்தி காந்தியவாதிகளுக்கு ஒரு கெட்ட செய்தி போதை வாதிகளுக்கு ஒரு நற்செய்தி.

பட்டதாரிகள் எப்போது இதற்காக பயன்படுத்தப் பட்டார்களோ, அந்த வேலையாவது வேண்டும் என அதற்குள் சென்று சேர்ந்தார்களோ அந்த பட்டதாரிகள் இனி எப்போதும் வேறு வேலைக்கு செல்லாதவாறு பிடித்துப் போய் விட்டதாம். ஒரு நாட்டிற்கு இதைவிட பெரிய கேடு என்னவாக இருக்க முடியும்? படித்தவர் நாட்டை வழி நடைப்படுத்துவார்கள் என்பதற்கு மாறாக டாஸ்மாக்கை மதுவிற்பனை செய்து கொண்டு இருக்க...நாட்டின் முக்கிய வருவாய்த் துறை அலுவலர்களும் மாவட்ட ஆட்சித் தலைவர்களும் இதற்கு ஊழியம் செய்ய...இதெல்லாம் எங்கோ சென்று முடியப் போகிறதோ?

ஏன் எனில் இவர்களுக்கு அலுவலக ரீதியாக கிடைக்கும் அரசு மாத ஊதியம் சுமார் 8,500ரூபாய் ஆனாலும் ஒரு நாளுக்கு சராசரி கணக்கில் இல்லாமல் வரும் கிம்பளம் குறைந்த பட்சம் 500ரூபாயாம். ஒரு நபருக்கு ஆசிரியர் பணி டி.ஆர்.பியில் கிடைத்தும் கூட போக மறுக்கிறாராம் காரணம் அவ்வளவு ஈர்ப்பு.கவர்ச்சி.பணியில் ஒரு நெளிவு சுளிவு. இந்தப் பணியில் இருப்பார் எவருமே வேறு பணிக்கு கிடைத்தாலும் செல்ல மாட்டார்களாம். காரணம் அவ்வளவு பேருக்குமே இது பிடித்துப் போன வேலையாக மாறி விட்டதாம்.

இப்படி அலுவலக ரீதியாக வரும் வருவாயை விட வேறு வழியில் வரும் வருவாய் அதிகம் இருப்பதாலும், மேலும் மிச்சம் மீதி என ஒரே கோலகலமாய் சரக்கெல்லாம் கிடைக்குமாம். எந்த நண்பர் வேண்டுமானாலும் வாருங்கள் இலவசமாகவே தாக சாந்தி செய்து கொள்க என்ற அழைப்பு படு ஆர்வத்துடன்....ஆனால் எம்மிடம் பேசிய நபர் மதுக்குடிப் பழக்கம் இல்லாதாராக இருப்பது கவனிக்கத் தக்கது



சில வேலைகளில்(சூபர்வைசர் அதாவது மேற்பார்வையாளர் போன்றவை) வேலைக்குப் போனாலும் போகவில்லை என்றாலும் மாதா மாதம் சம்பளமும் பங்கு பாக பிரிவினைகளும் மிகச் சரியாக வந்து சேர்ந்து விடுமாம். எனவே அட்டண்டன்ஸ், பயோமெட்ரிக், இந்த பாட்சா எல்லாம் அங்கே பலிக்காதாம். யார் புகார் அடிப்படையில் வந்து ஆய்வு நடத்தினாலும் அவருக்கு இலட்சம் அல்ல இலட்சங்கள் சரியாக சென்று விடுகிறதாம் பார்த்து நடந்து கொள்க எனச் சொல்லி விட்டு , அதென்ன புதுசா இருக்கு அதை எடு ம்...அந்த மேல இருக்கே அந்த பிராண்டையும் 2 எடு என வங்கிச் சென்று விடுவதால் எந்த தொல்லையுமே இல்லையாம்...



மேலிருந்து கீழ் வரை எல்லாமே ஒரு அட்ஜஸ்ட்மென்ட் இருப்பதால் ஒன்றும் யாரும் யாரையும் செய்ய முடியாது, செய்து விடுவதில்லையாம். அரசுக்கும் எல்லா விவரமும் தெரியும் என்றாலும் அவ்வளவு வருவாய் இந்த டாஸ்மாக் சுரங்கத்திலிருந்து கிடைப்பதால் எந்த நடவடிக்கையும் எதிராக இல்லையாம்...மேலும்  ஊழியர்களுக்கு சம்பளம் எல்லாம் ஏற்றமாட்டார்களாம். ஏனெனில் அவர்களுக்கு கிம்பளம் எவ்வளவு வரும் என்று தெரியுமாம். சங்கம் எல்லாம் கேட்டுக் கொண்டே இருப்பது ஊழியத்தை நிரந்தரம் செய்ய வேண்டி அரசுப் பணியாக மாற்ற வேண்டிதானாம்.

நாலைந்து கடையிலிருந்து மட்டும் வங்கியில் ஒரு கோடிக்கும் மேல் இருபதாயிரம் வரை மாதா மாதம் வசூல் வந்து கொட்டுமாம்...வங்கியில் இந்தப் பணத்தை எல்லாம் எண்ணி அத்தாட்சி செய்யவே வெகு நேரம் பிடிக்குமாம். கட்டி விட்டு வந்து விட வேண்டியதுதானாம் அதன் பிறகு வங்கியிலிருந்தே கூப்பிட்டு எண்ணி முடித்து ஒப்புகை ரசீது தந்து விடுவார்களாம். எப்படிதான் கிடைக்கிறதோ இந்த இவ்வளவு பணமும் நமது குடிமக்களுக்கு என வியப்படைய வேண்டியதிருக்கிறது. நடக்கும் கொலை,கொள்ளை, நகை பறிப்பு, திருட்டு யாவும் இதன் அடிப்படையில் தானே நடக்கிறது அது மட்டுமின்றி கல்யாணம், கருமாதி, குடும்ப நிகழ்வு, கேளிக்கை யாவும் பள்ளி மாணவர்கள் வரை இதல்லாமல் இல்லையே...

தமிழனின் மானம் எல்லாம் போதையில் போய்விட்டதாம். இனி இவனையும் அதையும் பிரிக்கவே முடியாதாம்.அதன் எதிரொலிதான் தேர்தல் முடிவுகள் இவை அனைவரும் அறிவர்.



பணம் எண்ண முடியாத அளவு சென்று அங்கே கொட்டுகிறது...இனி அந்தத் துறையை தமிழகத்தின் அரசுத் துறைகளிலிருந்து நீக்கவே முடியாது...

இதனால் பாதிக்கப்பட்ட, விபத்தில் சிக்கிய , சீரழிந்த குடும்பங்கள் பற்றி எல்லாம் பேசினால் எழுதினால் எவருக்கும் பிடிக்காது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

தமிழக அரசு கண் விழிக்குமா? அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் உடன் ஒத்துழைப்பார்களா? ‍போகிற போக்கில்... கவிஞர் தணிகை

தமிழக அரசு கண் விழிக்குமா? அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் உடன் ஒத்துழைப்பார்களா? ‍போகிற போக்கில்... கவிஞர் தணிகை




நீதி தேவதையின் கண்கள் தான் கட்டுடன் இருக்கும் கண் தெரியாமல்.இன்னும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு‍~~` வருவாய்க்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் இன்னும் வரவேயில்லை விசாரணை முடிந்த நிலையிலும்,அனேகமாக அது இன்னும் 5 ஆண்டுகள் தள்ளி வந்தாலும் அதில் வியக்க ஒன்றுமில்லை. மது போதையில் முழு வருவாய் கண்டு தள்ளாடும் அரசு ....பேருந்து, பயணிகள் ரயிலிலும் மக்கள் பிதுங்கி வழிந்து சென்றாலும் கண்டு கொள்ளாமலே இருக்கிறது

 இங்கு நான் சொல்ல வந்தது அன்றாடம் போக்குவரத்தில் ஈடுபட்டு வாழ்வு நடத்தி வரும் பொதுமக்களின் அல்லல் பற்றியது.ரயில், பேருந்து என வேறுபாடு இல்லாமல் எந்த போக்குவரத்தானாலும் நிலை ஒன்றாகவே காணப்படுகிறது.

இது பிரசவ வலியில் பிள்ளை பெற்ற கதை போல் அல்ல.அன்றாடம்
இந்த போக்குவரத்து நெரிசலில் வாழ்க்கை நடத்தி வரும் பொது மக்களின் அவலம் பற்றியது.



போக்குவரத்து என்பதே வேண்டாம் என அமைதியான சூழல் வாழ்வை தேர்ந்தெடுத்து பல்லாண்டுகள் வாழ்ந்து வந்த எனக்கு மறுபடியும் போக்குவரத்தை நம்பிய வாழ்வை எனது கடமையை செய்ய இயற்கை பணித்து விட்டது. எனவே நானும் அன்றாடம் பயணிகள் ரயில் மற்றும் பேருந்துகளை பயன்படுத்தும் பட்டியலுக்குள் வந்து விட்டேன்.

ஆனால் இதெல்லாம் கூட பரவாயில்லை கடந்த ஒரு வாரத்துள் ஒரு முறை சென்னை, ஒரு முறை கோவை சென்று வந்தாக வேண்டி இருந்தது. விடுமுறை, வேலை நாள் என்ற கணக்குகளை எல்லாம் மீறி நகர்களில் எங்கு நோக்கினும் ஜனத்திரள்.போதிய வாகன வசதிகள் இல்லாமல், எல்லா வாகனங்களிலுமே நெருக்கியடித்தபடி ஒருவரின் மூச்சுக் காற்றை மற்றொருவர் சுவாசித்தபடி, ஒருவர் உடலை மற்றவர் தொட்டபடி, நெருக்கியபடி, காலை மிதித்தபடி, இப்படி எத்தனையோ படிகளுடன் எப்படி எப்படியோ?உரிய நேரத்துள் வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பெல்லாம் வீண். அன்றைய பொழுதுக்குள் சென்று சேர்வோமா என்பதே கேள்வி.

இதை எல்லாம் சீர்படுத்த வேண்டிய அரசும் அலுவலர்களும் ஏன் அப்படியே தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். நான் அரசெல்லாம் சரியில்லை எனச் சொல்ல, நண்பரோ நாம் எல்லாம் சரி இல்லை என்கிறார். அதாவது மக்கள் எல்லாம் சரி இல்லை, எனவே அரசு சரி இல்லை, எனவே நிர்வாகமும் சரி இல்லை எனவேதான் இத்தனை துன்பம் யாவும். இதற்கெல்லாம் அடிப்படை நல்ல ஜனநாயகம் சார்ந்த முறைகள் வேண்டும். இங்கு தான்...

மதுவை அகற்றி விடுவார்களோ என்ற பயத்திலே போட்டுத் தள்ளிய ஓட்டுகளில் முதல்வர் ஆகும், ஆளும் கட்சி ஆகும் யோகம் இருக்கிறதே...பின் எப்படி தொல்லை இல்லாமல் மக்கள் பயணம் செய்ய முடியும்?

போதிய வசதியான போதுமான எண்ணிக்கையில் வாகனங்கள் ஏற்பாடு செய்து நிர்வாகம் நடத்த முடியாதது அரசின் குற்றம் என்றால் அதை விட இந்த பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களின் கொடுமை வேறு... வாகனத்தை நிறுத்தாமல் செல்வது, ஒரு சில நொடிகள் மட்டுமே நிறுத்தி எவர் ஏறினால் என்ன எவர் இறங்கினால் என்ன எனப் பார்க்காமலே வாகனத்தை கிளப்புவது, நகர்த்துவது, விரைவாக ஓட்டுவது... சாவு கிராக்கி சீக்கிரம் இறங்கேன் என்பது., வீட்டில் சொல்லி விட்டு வந்து விட்டாயா என்பது...இறங்கி சக்கரத்தில் விழுந்தாலும் பரவாயில்லை என வண்டியை நகர்த்துவது, முதியவர்கள், நோயாளிகள், குழந்தைகள், எனப் பாராமல் வாகனத்தை நடத்துவது இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். எல்லாம் எந்திர மயம், இதுதான் நகரமயமாதலின் விளவு.




பொது மக்களின் உயிருக்கும் உடலுக்கும் உடமைக்கும் வீடு வந்து சேரும் வரை உத்தரவாதமில்லை. இந்த பயணிகள் வாகனங்களை இயக்கும் நபர்கள் அனைவருக்கும் முதலில் அரசு பயிற்சி அளித்து  பொதுமக்களிடம் எப்படி நடந்து கொள்வது எனத் தேற்ற வேண்டும்.

ரயிலும் அப்படித்தான் பஸ்ஸும் அப்படித்தான். மேலும் கார்களின் இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கையும் பெருத்து விட்டன, சாலையில் நகர்ப் புறச் சாலைகளில் புகுந்து வெளி வருவது இனி குறித்த நேரத்தில் முடியாத காரியமே.எல்லாமே நகர்புறம் சார்ந்த மையப்படுத்தலாகவே இருக்கிறது அது கல்வி, கலை, மருத்துவம், தொழில் சார்ந்த எல்லாமே...

இந்நிலையில் அவர்கள் எல்லாம் ஏன் அப்படி நடந்து கொள்கிறார்கள் என அலசினால், தொழிற் சங்கம், கோரிக்கை, எரிபொருள் சிக்கனம், நிர்வாக சீர்கேடுகள், குறித்த நேரம் காத்தல் இப்படி ஏகப்பட்ட காரணங்கள் சொல்லப்பட்டாலும் இங்கு தலைமை சரி இல்லை எனவே அதன் கீழ் இயங்குவார் எல்லாமே அப்படித்தான் இருக்க முடியும். போராட மாட்டேன் ஆனால் போராட்ட வெற்றி மட்டும் தவறாமல் எட்டி விட வேண்டும் என எதிர்பார்க்கும் நடுத்தர வர்க்க சித்தாந்தம் இதன் பெரும் தடை. எவருக்கும் சமுதாயக் கடமை இல்லாமல் சுயநலம் சார்ந்தே எண்ணுவதால் வரும் நிலையே அதிகம்.நோவாமல் நோம்பி கும்பிட வேண்டும் என எண்ணும் மனப்பக்குவம்...வேலை செய்வதானாலும், பிரச்சனைகளை கையாள வேண்டிவந்தாலும்...

இவர்கள் யாவருமே கீழ் இருக்கும்போது மக்கள் நலம் சார்ந்து சிந்தித்து கோரிக்கை எழுப்பியவர்கள் தான். அதாவது பதவிக்கு வரும் முன்பு அதை செய்வோம், இதை செய்வோம் என முழங்கி ஆட்சிக் கொட்டையை சாரி ஆட்சிக் கோட்டையை (தமிழ் எவருக்குமே இப்போது சரியாக எழுதத் தெரியவில்லை என்ன செய்வது..)பிடிப்பவர்கள்தான், கட்சிகள்தான், மேலும் வேலை கிடைக்கும் முன்பு சமுதாய நோக்கத்துடன் இருந்தவர்கள்தான், வேலை அதுவும் அரசு வேலை கிடைத்து விட்டால் சொல்லவும் வேண்டுமா?


இந்த நெருக்கடிகளை பயன்படுத்திக் கொண்டு இடைத்தரகர்கள், தனியார், புல்லுருவிகள், ஈனர்கள், குடிகேடர்கள், குடிகார‌ர்கள் எவருமே பெண்களை பயணத்தின் போதே கையாண்டு படுக்கை மொழி பேசிடலாம் என முயல்வது...பேருந்தில் அதிகாலையிலேயே காதல், காமரசம் ததும்பும் பாடல்களை ஒளி‍ ஒலி பரப்பை கூட்டத்தில் அதிக சத்தத்தை எழுப்புவது....ஆனால் இது போன்ற நெருக்கமான தனியார் வாகனத்தில் தான் கூட்டம் நிறைய ஏறுகிறது என்பதும் உண்மை...அதற்கு காரணங்கள் பல...

அப்படிப்பட்ட ஜன்னல் ஜாக்கெட்களும், எல்லாப் பெண்களும், எல்லா ஆண்களும் அப்படித்தான் என்றெண்ணும் விடலைக் கூட்டமும் இருப்பதையும் எவரும் மறுப்பதற்கில்லை.

இந்நிலையில் கேடு கெட்ட சமுதாயமாக்க அரசும் அரசு ஊழியர்களும், பொதுமக்களும் துணை புரிந்து கொண்டிருக்கிறோம். இங்கு ரௌத்ரம் பழக எல்லாம் நேரம் இல்லை...கண்டும் காணாமல் மென்மையாக போனால் சகிப்புத்தன்மையுடன் நடந்து கொண்டால் வீடு வந்து சேரலாம், கடமையை நிறைவேற்றலாம். இல்லாவிட்டால் பெண்டு பிள்ளைகளும் நமை தூற்றும் வாழத் தெரியாதவர் என ஏசும்...எனவே...போற்றுவார் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும் என சில செய்தும், பல செய்யாததுமாக எம் வாழ்வு சென்று கொண்டிருக்கிறது ...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


Wednesday, July 13, 2016

நேற்றைய தடைகள் இன்றைய விடையுள்: கவிஞர் தணிகை

நேற்றைய தடைகள் இன்றைய விடையுள்: கவிஞர் தணிகை





ஒரு கல்வி நிறுவனத்தில் ஊடகப் பிரிவை கையில் ஏந்தியுள்ளேன். ஒரு முகாம் பற்றி செய்தியை பத்திரிகைகளுக்கு தர முயன்றேன். அதன் முன் 3 நாள் ஓடியதால் விரைந்து அனுப்ப முடிவு செய்தேன். அதற்கு புகைப்படமும் தேவை எனவே புகைப்படம் கை வந்து சேர்ந்தவுடன் தபால் அனுப்பிவிடலாம் என்றே சில நாட்கள் ஓடின.

ஒரு திங்கள் நாளில் ஏறத் தாழ மதியம் 3.20 மணி சுமாருக்கு புகைப்படங்கள் கை வந்தன. ஒரு கடிதத் தலைப்புடன் உள்ள தாளை கேட்டு வாங்கிக் கொண்டு முகாம் செய்தியை எழுதி ஏற்கெனவே அங்கீகாரம் பெற்று வைத்திருந்தேன் முதல்வரிடம்.  பண்டசாலையில் 10 கடித உறைகளும் பெற்று வைத்திருந்தேன்.

கல்லூரி மாலை நேரம் 3.30 மணியோடு முடியும். எனவே அனைத்து அலுவல்களும், அலுவலர்களும் அந்த நேரத்தோடு தம் பணிகளை முடித்துக்கொள்வர்.

கடிதத்தை அஞ்சலிட பொறுப்பைப் பார்க்கும் பெண் அலுவலரிடம் சொல்லி அதற்குரிய தபால் தலைகளையும் பெற்றுக் கொண்டேன். நானே அதை அஞ்சலிட்டுக் கொள்வதாக. மணி ஓடிக் கொண்டே இருந்தது...

அனைவரும் சென்று விட்டனர். எனக்கும் சேலத்துக்கு இட்டுச் செல்ல கல்லூரிப் பேருந்து வந்து விடலாம் எந்நேரமும் என்ற நிலை. ஓடினேன் நகல் எடுக்க அங்கே 2 வெள்ளைத் தாள் மட்டுமே நகல் எடுக்கும் இயந்திரத்தில். கீழ் இறங்கி வந்து ஏற்கெனவே உள்ள எனது கோப்பில் வைத்திருந்த ஏ‍ 4 வெள்ளைத் தாள்களை எடுத்து நகல் எடுத்துக் கொண்டேன் முதல் தடை தாண்டி விட்டேன்.

 பத்திரிகைகளின் விலாசத்தை உறைமேல் எழுதி புகைப்படத்தையும்
கடிதத்தையும் உள் வைத்தேன். அதை ஒட்ட வேண்டுமே...ஒட்ட பசைக்கு சென்று காசாளர் அறையில் இருந்த பசை டப்பாவை எடுத்தால் அதில் பசை இல்லை...இரண்டாவது தடை...அஞ்சலகத்தில் ஒட்டிக் கொள்ளலாம் என ஸ்டேப்ளர் வாங்கி பின் அடிக்கலாம் என நண்பரும் காசாளருமான அந்த அன்பரிடம் ஸ்டேப்ளர் கேட்டேன். கொடுத்தார்.

அதில் ஒரு சில பின்களே இருந்தன. எனவே அந்த ஸ்டேப்ளரில் பின்களை லோடு செய்தேன். எல்லாக் கவரையும் பின் செய்தேன். மூன்றாம் தடை தாண்டி..

அடுத்து பேனாவால் எழுதலாம் என்றால் பேனாவில் மை தீர்ந்திருந்தது., பக்கத்தில் இருந்த பணியாளரிடம் பேனா கேட்டு வாங்கி எழுதி முடித்தேன்.

எழுதி முடிக்க முடிக்க,,, கல்லூரிப் பேருந்து எங்களை எல்லாம் அழைத்துச் சேலம் செல்ல வந்து விட்டது. எனவே பயோ மெட்ரிக் விரல் சான்றை பதியவில்லை, வருகைப் பட்டியலில் மாலை செல்லும் போதும் கையெழுத்துச் சுருக்கமும் செய்ய வில்லை.அதை அடுத்த நாள் காலை தான் உணர்ந்தேன். அவ்வளவு வேலை நெருக்கடி, பணிச் சுமை, இந்த தபால்களை அனுப்பியே ஆகவேண்டும் என்ற விரைவான வேலை உன்மத்தம்.

சேலம் சந்திப்பில் உள்ள சூரமங்கலம் அஞ்சலகத்தில் வெளியே இருந்த பசையில் தபால் தலைகளை ஒட்டி தபால் பெட்டியில் போட்டுவிட்டேன் நான் வீட்டுக்கு வரும் பயணிகள் ரயில் ஏறும்முன்.

சில நாட்கள் சென்றன. எந்த பத்திரிகையிலும் செய்தி வந்ததாகத் தெரியவில்லை. ஒரு வேளை நாம் அனுப்பிய தபால் போதிய தபால் தலைகள் இல்லாமல் போயிருக்குமோ என்றெல்லாம் சந்தேகக் கீற்று.

ஆனால் இன்றைய தினத் தந்தியில் ஒரு முகாம் புகைப்படத்துடன் செய்தி வெளியானதாக உதவி நூலகரும் வாகன பொறுப்பு மற்றும் கணினி செயல்பாட்டளருமானவர் கூறி அதன் நகலை எடுத்து அறிவிப்புப் பலகையில் இட அன்புடன் அவருக்கு ஒத்துழைக்க மறுத்த அச்சடிக்கும் இயந்திரம், மற்றும் நகல் எடுக்கும் எந்திரத்தை காலையிலேயே எனக்காக சரி பார்த்து எடுத்துத் தந்தார்.



அன்றைய ஒரு நாளில் நான் பட்ட கஷ்டம் எல்லாம் பனியாய் பஞ்சாய் பறந்திருந்தது. காரணம்...சமீப காலத்தில் வெறும் செய்திகள் மட்டும் முகாம் செய்திகளாக, நிகழ்வுகளை குறுஞ்செய்தியாக அனுப்பிக் கொண்டிருந்த தினத் தந்தி ஏடு அன்று மாவட்டச் செய்திப் பிரிவில் வழக்கமாக சுருக்கமாக எழுத்துகளில் மட்டும் போடுமே அது போல அல்லாமல் பக்கம் 7ல் பள்ளிப் பிள்ளைகளுக்கு பற் பரிசோதனை செய்யும் காட்சிப் படத்துடன் எமது செய்தியை வெளியிட்டிருக்க அன்றைய தடைகளுக்கு யாவும் இன்று விடை கிடைத்த திருப்தி இருந்தது. கஷ்டப் படுவது வீண் போவதில்லை என்ற நம்பிக்கை ஒளிக் கீற்று சற்று படர்ந்திருக்க...
அவ்வளவு தடைகளையும் சோர்வின்றி தாண்டியதால் பெற்ற சிறு வெற்றி இது என்பது போல இந்த நிகழ்வுகளின் தொடர்ச்சி...

ஊடகத்தில் இடம்பெறுவது அவசியம்தான். அதை அனைவரும் விரும்புகின்றனர். சசிபெருமாள் அதிகம் அதை விரும்பி விட்டார் என்பதும் எமக்குத் தெரியும்.

thanks: thinath thanthi.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Tuesday, July 12, 2016

விகடன் விதி விலக்கல்ல: கவிஞர் தணிகை.

விகடன் விதி விலக்கல்ல: கவிஞர் தணிகை.




முரண்பாடான பத்திரிகை தகவல்கள் படிப்பார்க்கு தவறான எண்ணத்தை ஏற்படுத்தும். விகடன் நல்ல பத்திரிகைதான் ஆனால் அவசரடியான அறிக்கை தரும் முயற்சியில் அதுவும் தமது தகுதியை தக்க வைத்துக் கொள்ளவில்லை என்பதற்கு பின் வரும் இந்த கோர்ட்டில் தந்தை மணி மாறனை அவரது மகன் வெட்டினார் என்ற செய்தி சான்றாகும்.

 ஒரு இடத்தில் மற்றொரு சீனியர் ‍ மூத்த வழக்கறிஞர் ஒருவரை மதியம் சந்தித்து விட்டு வரும் வேளையில் வெட்டப்பட்டார் என்கிறது. இன்னொரு இடத்தில் மதிய உணவு அருந்திய நிலையிலேயே வெட்டப்பட்டார் என்கிறது... இதில் எது சரி. எதுவோ ஒன்று மட்டுமே சரியாக இருக்க முடியும். எனவே மற்றொன்று தவறான தகவல்.

கிடைக்கும் தகவல்களை சரிபார்க்காமல் , ஏன் எழுதியதை படித்துப் பார்க்காமலே கூட இப்படி எல்லாம் பிரசுரிப்பது பத்திரிகை வெளியீட்டின் அவசர நிலை அள்ளித் தெளித்த கோலத்தை தெளிவாக காட்டுகிறது.

அப்படி இப்படி என்று இட்டுக் கட்டி விட்டு கடைசியில் வெட்டியவர் சிக்கிக் கொண்டார் அவர் அந்த வழக்கறிஞரின் மகன் என்றும் ஏதோ குடும்பப் பிரச்சனை என்றும் சொல்லி முடித்துள்ளது.

நா.பா.சே என்பவர் இந்த அறிக்கையை கொடுத்ததாக குறிப்பு உள்ளது. பத்திரிகை தகவல் தருவது யாவும் உண்மை என்ற காலம் மலையேறி வெகுகாலம் ஆகிறது. ஊடகத்தை உல்டா செய்து அரசுக் கட்டிலே அமைக்க முடியும் என்னும் போது இதெல்லாம் சுஜிபி என கபாலி சொல்வது காதில் விழுகிறது...

இனி செய்தியை கவனியுங்கள்

வெட்டப்பட்ட வழக்கறிஞர்...கேள்விக்குறியான சென்னை ஹைகோர்ட் பாதுகாப்பு !




சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட் வழக்கறிஞராக இருப்பவர் மணிமாறன். இன்று (12.7.2016) பகல் 1.30 மணியளவில் வழக்கறிஞர்கள் சேம்பரில் சீனியர் வழக்கறிஞர் ஒருவரை பார்த்து விட்டு வர சென்ற போது, அங்கே சேம்பரில் வைத்தே சரமாரியாக வெட்டப்பட்டார்.
படுகாயமடைந்த அவரை நோக்கி, அங்கிருந்த சக வழக்கறிஞர்கள், கொலை முயற்சி ஆசாமியை நோக்கி குரல் கொடுத்தபடி ஓடிவரவே, அந்த இளைஞர் வழக்கறிஞர்களிடம் சிக்கிக் கொண்டார். அதன் பின் அவசர உதவிக்காக 108- ஐயும், போலீஸ் உதவிக்காக 100-ஐயும் வழக்கறிஞர்கள் தொடர்பு கொண்டனர்.ரத்தப் போக்கில் துடித்துக் கொண்டிருந்த வழக்கறிஞர் மணிமாறனை காப்பாற்ற ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையின்   தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்துள்ளனர்.

சென்னை ஹைகோர்ட்டில் போலீஸ்- வழக்கறிஞர்கள் மோதல் சம்பவத்திற்கு பிறகு கூடுதல் பாதுகாப்பு கொடுப்பது தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கோர்ட்டில் நீதிபதிகளின் சேம்பர், வழக்காடும் பகுதி உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு சி.ஐ.எஸ்.எஃப் (மத்திய தொழிற் பாதுகாப்புப் படை) படையினர் ஆயுதம் ஏந்திய நிலையில், 24 மணி நேர பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டனர்.
சி.ஐ.எஸ்.எஃப் படையினர் நிற்கும்  பிரதானப் பகுதியைத் தவிர, மற்ற பகுதிகள் மாநில போலீசின் வழக்கமான பாதுகாப்பில் கொண்டு வரப்பட்டது. ஆவின் கேட், ஃபயர் சர்வீஸ் கேட் என்றழைக்கப்படும் பகுதிகளில் சென்னை சிட்டி போலீஸ் பாதுகாப்புப் பணியை மேற் கொண்டு வருகிறது.
ஃபயர் சர்வீஸ் கேட் எனப்படும் சென்னை போலீஸ் கண்காணிப்பில் உள்ள பகுதியில்தான் வழக்கறிஞர்கள் சங்க ஐந்துமாடி (சேம்பர்) கூடுதல் கட்டடம் இயங்கி வருகிறது. இந்த கட்டடத்தில் தான் மதிய உணவருந்திக் கொண்டிருந்த நிலையிலேயே வழக்கறிஞர் மணிமாறன்,  வெட்டப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில், " கொலைமுயற்சியில் ஈடுபட்டவர், வழக்கறிஞரின் மகன் ராஜேஷ் என்று தெரியவந்துள்ளது. குடும்பப் பிரச்னை காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது" என்கிறார்கள்.
பட்டப் பகலில் கோர்ட்டிலேயே நடந்துள்ள இந்த சம்பவம், கோர்ட்டுக்கு வந்து போகும் அனைத்துத் தரப்பினரின் பாதுகாப்பை மேலும் கேள்விக் குறியாக்கியுள்ளது.

-ந.பா.சே

No thanks to you vikatan.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Monday, July 11, 2016

சென்னையில் ஒரு சிட்டுக் குருவிகள் கூட்டில்: கவிஞர் தணிகை

சென்னையில் ஒரு சிட்டுக் குருவிகள் கூட்டில்: கவிஞர் தணிகை



அண்ணாப் பல்கலைக் கழகத்திற்கு சென்றிருந்தேன். மிகவும் பிடித்த ஒன்று இரண்டு மூன்று எனச் சொல்லச் சொன்னால் அவை அந்த மரங்கள், மரம், மரக்கூட்டம்.அந்த மரங்களில் வெகு காலத்துக்கும் பின் பார்த்த தூக்கணாங்குருவிக் கூடுகள், பறவைகளின் ஒலி வந்த வேலையும் வரும் வேளையும் மறந்து போனது மனிதத்துக்கு.

தாம்பரத்துக்கு முக்கிய சாலையிலிருந்து ஒரு பிரிவின் உள்ளார்ந்து ஒரு பள்ளி, ஒரு தெப்பக் குளம், ஒரு அம்மன் கோவில், ஒரு முருகன் கோவில், ஒரு சிறார் பள்ளி இப்படி எல்லாம் அமைந்த இடம் எல்லா ஊர்களிலுமே இருப்பது கடினம். ஆனால் அது போன்ற தெருக்கள் ஊர் குறிப்பிடாமல் எல்லா ஊர்களிலுமே இருக்கின்றன.

அங்கு இரண்டாம் மாடியில் ஒரு குருவிக் கூட்டில் 3 குருவிகள். விருந்தினராக நாங்கள் இருவர். மிக நன்றாக அமைந்து விட்டது அந்த பயணம்.ஏறத்தாழ அதன் மர நிழலில் நாங்கள் இருந்தது என்னவோ 22 மணி நேரம் இருக்கலாம். ஆனால் அது வாழ்வில் மறக்க முடியாத தருணங்களை கொடுத்தன. கொடுக்கப் போகின்றன.

ஒரு குழந்தையாய் நான் கையில் எடுத்து பார்த்த ஒரு பெண் குழந்தை நங்கையாய் ஒரு குழந்தையை கையில் வைத்து எடுத்து பார்த்து வருகிறாள் பார்த்து  பார்த்து வளர்க்கிறாள் . ஒரு சுற்றுப் புற பொறியாளர்  பட்டப் படிப்பு படித்தவர் என்ற அடையாளம் ஏதுமே இல்லை.

அந்தக் குழந்தையோ படு சுட்டி. ஒரு கணமும் நிலை கொள்ளாமல் அப்படி ஏதும் அழாமலே தாம் செய்ய நினைப்பதை செய்தபடி, பெருவிழிகளுடன், நாட்களை நேரத்தை பறக்கடித்தபடி..நாங்கள் சென்றது முதல் திரும்பியது வரை நிலையுணர்ந்த உபசரிப்புகள். உரிமையான நம் வீட்டில் இருப்பது போல்.

சிறிது நேரம் தியானம் செய்யவும் வாய்த்தது. வீடு நல்ல காற்றோட்டமாய் தேவையான அளவில். போதும் அந்த சிட்டுக் குருவிகளுக்கு அந்தக் கூடே.

இரண்டாண்டு போய்ப் பார்க்காத நினைவைப் போக்கி விட்டது இந்தப் பயணம் இரண்டு ஆண்டு அழைத்தும் வராமல் இருந்தார்கள், இப்போது வந்து நிறைத்து சென்றார்கள் விதைத்தும் சென்றார்கள் நினைவை என்று அவர்களுக்கும் இருக்கும். நெருடல் உரசல் ஏதுமில்லாத தெளிந்த நீரருவி...பொங்கி வழிகிறது ஒரு ஊற்று பாரம்பரியக் காற்று. வாழட்டும் என்றும் என்றும் எம் பேர் சொல்லி...



சொல்ல மறந்தது: ஏன் இன்னும் சென்னை ஊதிப்புடைத்தே வருகிறது? எங்கும் ஜனத்திரள் எந்த வண்டியிலுமே ஏற முடியவில்லை .திரும்ப அடைக்கலாமாகும் இடம் நோக்கி வர நேரம் குறிப்பிட முடியாமல்...அதிலும் ஒரு கிண்டி வழியே தாம்பரம் செல்லும் மின் தொடர் வண்டி எவருமே இறங்கும் முன்பே விரைந்து எடுத்து பயணிகள் வயிற்றில் புளியை கரைத்து சென்றது. குறிப்பிடும்படியாக அபாயத்தை அள்ளி ஊட்டிட...




மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

ஜீவ ஒளி: கவிஞர் தணிகை

ஜீவ ஒளி: கவிஞர் தணிகை




இந்தியாவில் எம்மதமும் சம்மதம், அல்லது மத நல்லிணக்கம், அல்லது மத சமரசப் போக்கு இருப்பது வரவேற்கத் தக்கதாகவே இருக்கிறது. கடந்த ரம்ஜான் அன்று ஒரு நாள் அரசு விடுமுறை என அறிவிப்பு வந்து பணிக்கு செல்லாதபோது இந்த ஞானோதயம் ஏற்பட்டது என்ன புத்தருக்கு ஏற்பட்டது போதி மரத்தடியில் நமக்கு ஏற்படுவது விடுமுறை நாட்களில்.

இப்படி எல்லா மதங்களும் கலந்திருப்பதால் இந்தியாவில் அந்த அந்த மதங்களின் முக்கியமான நாட்களுக்கு எல்லாம் ஒவ்வொரு நாள் அரசு விடுமுறை கிடைப்பதால் பணியில் அதன் நெருக்கடியில் இருப்பார் எல்லாம் மகிழ்கிறார்கள் என்பது உண்மைதான்.

அதை எல்லாம் விடுங்கள், எங்களது வீட்டில் குரான், பைபிள், பகவத் கீதை எல்லாம் உண்டு. எல்லா மதங்கள் பாலும் பற்றும் உண்டு புத்தம், ஜைனம், சீக்கியம் ,இப்படி எல்லா தத்துவங்களிலும்
 நம்பிக்கையுண்டு ஆனால் அவை அபினாக மாறி வெறியேற்றும் போது மார்க்ஸ் சொன்ன வார்த்தையை நினைத்து அது எவ்வளவு சரியான வார்த்தை என ஏற்றுக்கொள்வதும் உண்டு.




மதங்களை , அதன் கோடுகளை அதன் கேடுகளை எல்லாம் கடக்க வேண்டும். ஓரளவு கடந்தாகி விட்டது. அப்போதும் சில நேரங்களில் கொஞ்சம் நஞ்சம் பிடிப்பு இருப்பதாகவும் காணப்படுகிறது.

எந்த மதச் சின்னங்களையுமே அணிவதில்லை. எல்லா மதங்களுமே நல்ல போதனையை மானுட குலத்துக்கு வழங்கியபோதும் எவரும் அதன் பால் பின் தொடர்ந்து நடக்காத போது அதெல்லாம் எதற்கு எனத் தோன்றுவதும் உண்டு

ரமலான் உண்ணா நோன்பு கஞ்சி குடித்த அனுபவம் உண்டு. ஆனால் இந்த முறை ஒரு குடும்பத் தோழியின் கணவர் ரம்ஜான் அன்று சரியாக நண்பகல் 2 மணிக்கு உணவுப் பாக்கெட்டுடன் நின்றார். நானும் மகனும் மரக்கறி உண்பாரே ஆயினும் குடும்பத் தலைவி ஊன் தின்னும் வழக்கமுடையாரே எனவே அவருக்காக இந்த முகமதிய பர்தா போடும் பழக்கமுள்ள குடும்பத்தார் உணவை கொண்டு வந்து கொடுத்து அன்பை வெளிப்படுத்த உடனே இதுவரை சில முறை அவர்கள் குடும்ப நிகழ்வுக்கு அவர்கள் அழைத்த போதும் நாம் சென்று கலந்து கொள்ளத் தவறி விட்டோம். இன்றாவது சென்று அவர்களுக்கு ரம்ஜான் வாழ்த்து சொல்வோம் என இனிப்புகள் வாங்கி எடுத்து அவர்கள் வீட்டுக்கு சென்றுக் கொடுத்துப் பேசி மகிழ்ந்து வந்தார்.



அதென்னவோ அன்று அந்த நினைவே அந்த நாள் முழுதும் மிதந்து கொண்டிருந்தது எல்லா இயக்கங்கள் மேலும்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Friday, July 8, 2016

மறுபடியும் பூக்கும் என்பதற்கேற்ப மத்திய ரயில்வேத் துறை மந்திரி சுரேஷ்பிரபுவின் மெயிலும் எனது பதிலும்: கவிஞர் தணிகை

மறுபடியும் பூக்கும் என்பதற்கேற்ப மத்திய ரயில்வேத் துறை மந்திரி சுரேஷ்பிரபுவின் மெயிலும் எனது பதிலும்: கவிஞர் தணிகை

புதுசாம்பள்ளியில் ஏன் பயணிகள் ரயிலை ஏன் நிறுத்தக் கூடாது என ஒர் பதிவை 06.07.2016ல் இட்டிருந்தேன். அன்றுதான் பார்த்தேன் மத்திய மந்திரி சுரேஷ் பிரபுவின் ஒரு மெயில் எனக்கு அனுப்பப் பட்டிருந்தது. ஆனால் அது ரெயில்வே மேம்பாட்டுக்காக தங்கள் யோசனையிருந்தால் தெரியப்படுத்தலாம் என்று கோரியது.



சேலம் கோட்ட ரயில்வே மேலாளருக்கும்,சென்னை தென்னக ரெயில்வே மேலாளருக்கும் நமது கோரிக்கையை தெரியப்படுத்தி இருந்தோம். அதையே மத்திய மந்திரிக்கும் அனுப்பி இருக்கிறோம்.

பார்வைக்கு:

sureshprabhu@irctc.co.in

Jul 5 (3 days ago)
to me
Dear Friends,

It is our Honorable Prime Minister's firm belief that Indian Railway has the potential to become
the backbone of India's progress and economic development. This is the vision we all are
working for at Indian Railways with you as our partner.
18 months ago, when I took over the reigns of this great organization called Indian Railways, I
was faced with many challenges. I had the option of making small incremental changes or go
beyond business as usual. I chose the latter
Bringing in systemic changes was the need of the hour. It was important to change the perception
of Indian Railways from a slow moving behemoth to a responsive modern organization. It is
satisfying for me to note that we have made some progress. A lot is still to be done.
Our Prime Minister has asserted many times that our Government's priority is the commonest of
common man of the country and it is with this in mind, we worked on improving the travel
experience for our people. We launched a host of initiatives aimed at this.
An E-book on two year achievements of Indian Railways:
htt p://www.indianrailways.gov.in/railwayboard/uploads/directorate/prd/downloads/Two_Years_
Performance_Report.pdf

Some of the important achievements are:

  • Commissioned record 2828 kms of broad gauge lines which is 85% higher than 2009-14
        average annual commissioning. 7.7 kms lines commissioned per day against 2009-14
        average of 4.3 kms

  • Capital expenditure in 2015-16 was about Rs. 94,000 Cr which is almost double
        the average annual capital expenditure over the previous five-year period of 2009-14

  • Electrification of 1730 kms done in the last year is a huge jump over 2009-14 annual
        average of 1184 kms

  • A responsive 24x7 complaint resolution mechanism employed through the use of social
        media

  • Cleanliness: Swachh Rail, Swachh Bharat campaign, Clean my Coach Service launched,
        third party cleanliness audits conducted for stations

  • E-catering, E-wheelchair, E-bedroll facilities launched to ensure seamless availability and
        access to these facilities

  • Ticketing: IRCTC capacity increased, Automatic ticket vending machines installed,
        cancellation of PRS tickets through cell phone launched, Vikalp scheme launched

  • Speed: India's first semi high speed train Gatimaan Express launched, trial run of Talgo
        coaches underway

  • N-E Connectivity: Barak Valley of Assam, Agartala, Mizoram and Manipur connected to
        broad gauge

  • High speed Wi-Fi launched at various stations with a target of 400 stations by 2018

  • Environment: A provision of 1% of total project cost made in all future projects to spend
        on environment protection measures, major thrust on solar and wind energy provided,
        traditional lights replaced by environment friendly LED lights

  • 100% E-tendering implemented resulting in transparent and accountable procurement
        process
  • While I continue my journey on this noble mission of `Transforming India' through
    `Transforming Railways,`I seek your increased participation and support. Together we can make
    the Indian Railways better.
    Yours Sincerely,

    Suresh Prabhu

    thanigai maniam deivapublisher@gmail.com

    Jul 6 (2 days ago)
    to sureshprabhu
    thanks sir.
    vanakkam
    We are very much proud about our biggest department in the world.
    Try to avoid bad smell in all Railway stations in India.
    Make necessary steps to reach 100% cleanliness in our stations.
     with Honest
    Kavignar Thanigai.

    Please do this favour which I sent already to the concerned officials of Southern Railway at Chennai and Salem.I am forwarding this letter to take favourable action for the welfare of the people and young college students and office goers from Mettur To Salem.

    From                                                                                                        METTUR DAM
    Passengers of Pudusamballi                                                                05.07.2016.
    Mettur -  Salem passenger Train
    Mettur Dam – 636 403

    To
    1.      Respected.Vashishta Johri
    General Manager
    Southern Railway
    CHENNAI.600 003.

    2.Sri. Hari Shankar Verma IRTS
    Salem Divisional Railway Manager.
    Salem Division.

    Respected Sir, Madam
     Sub: Request to Salem –Mettur passenger train stop at pudusamballi in evening trip at 5-30pm to 6.30 pm regarding….
           Vanakkam.Namasthey.
    We are travelling Salem to Mettur passenger train daily to fulfill our needs by the way of going colleges and offices. While return home, usually the train slowing to signal before reaching Mettur R.S. But nearly 50 passengers include college students getting down in this stage with high risk at pudusamballi-without stop.
                 So; we are requesting you to kindly give order to stop the train at least 30 seconds to facilitate us to get down safely and easily in our pudusamballi stage.
    With honest and Thanks:
    The passengers of Pudusamballi.
    Encl: Names and signatures of passengers.

     I am requesting you to kindly make necessary action to stop the train in our place to avoid dangerous kickbacks due to non stop here. only while return trip 30 seconds stopping is enough.

    thanks

    with Honest
    Kavignar Thanigai.

    Letter forwarded to: Sri.Suresh Prabhakar Prabhu
    Honourable Minister
    Indian Railways


    மறுபடியும் பூக்கும்
    கவிஞர் தணிகை.