Sunday, March 26, 2023

வாக்காளர் தினம் பற்றி சோனா எப்.எம் பண்பலையில் எனது சிற்றுரை: கவிஞர் தணிகை

 வாக்காளர் தினம் பற்றி சோனா எப்.எம் பண்பலையில் எனது சிற்றுரை: கவிஞர் தணிகை



ஜனவரி: 25 ஒவ்வொரு ஆண்டுமே வாக்களர் தினம் என்று கடைப் பிடிக்கப் படுகிறது. கடந்த வாக்களர் தினத்தில் சேலம் சோனா எப்.எம். எனது சிற்றுரையை அன்றைய தினத்தில் ஒலி பரப்பினர். அந்தப் பதிவை என்னால் இந்த வலைப்பூவில் ஏற்றி காத்து வைக்க போதிய தொழில் நுட்ப அறிவு என்னிடம் இல்லாததாலும், அல்லது அது போன்ற வசதி  படக் காட்சிகளை சேமித்து வைப்பது போல ஒலிப் பதிவை ஏற்றி காத்து வைக்க இல்லாததாலும் அல்லது எனக்குத் தெரியாததாலும் ஆக்கபூர்வமாக நேரத்தை செலவு செய்ய வேண்டி இப்போது இதை நான் பதிவு செய்கிறேன். ஏற்கெனவே கேட்ட எனது நட்புறவுகள் மறுபடியும் படிக்க வேண்டிய நிர்பந்தம் ஏதும் இல்லை.

ஊடகங்கள் எப்போதுமே அவரவர்க்குரிய கட்டுப்பாடுகளை வைத்தே தணிக்கை செய்தே எதையும் வெளிப்படுத்துகின்றனர்.

சிலவற்றை மட்டுப் படுத்துகின்றனர், சிலவற்றை வெட்டி விடுகின்றனர், சிலவற்றை வெளியே விடுவதும் இல்லை.

1. அடியேன் வாக்களிக்க அதன் பிரதியாக‌ எப்போதுமே பணம், பொருளை வாங்கி அதற்கு மாற்றாக  வாக்குகளை விற்றதில்லை. எனச் சார்ந்த குடும்பத்தாரும் அப்படித்தான். ( எனது 21 வயது முதல் 61 வரை)

2. பல முறை 49 ஓ என்ற விதியை பயன்படுத்தி வாக்குச் சாவடிக்குச் சென்று மறுப்பு தெரிவித்தும் இருக்கிறேன்.

3. தேர்தல் ஆணையம் செய்யும் மாபெரும் பணி இது.

இது பற்றி நான் பேசியவற்றிலிருந்து நினைவுக்கெட்டிய வரை:

சாக்ரடீஸ் கிரேக்க மேதை கி.மு: 4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அறிஞர். கையில் பகலிலேயே கைவிளக்கேந்தி மனிதரைத் தேடுகிறேன் என்று சுற்றி அலைந்த ஞானி, இளைஞர் பட்டாளத்தை அநீதி, மற்றும் அநியாயத்துக்கு எதிராக திருப்பி எதிர்க்க முனைந்தவர். அன்றைய அரசிடம் இவர் பற்றி அவதூறாக இவர் நாட்டுக்கு எதிராக கலகம் செய்கிறார் என பொய்யுரை பரப்பப் படுகிறது. 

அப்போது அந்தப் பிரச்சனையை எப்படி தீர்ப்பது என அரச குடும்பம் இவரால் பெரிய அரச துரோகம் ஏதும் இல்லை என முடிவை மக்களுக்கே விட்டு விட ஒரு வாக்கெடுப்பின் மூலம் பிரச்சனையை தீர்க்க முயல்கிறது. இதனிடையே சிறை செய்யப் படும் சாக்ரடீஸை காக்க இவரது ஆதரவு இளைஞர்கள் இரவோடு இரவாக தப்பிக்கலாம் என யோசனை தெரிவிக்கிறது அப்படி ஒன்றும் கடுங்காவல் இல்லை என்றும் ஆளும் வர்க்கம் அப்படி ஒன்றும் பழி வாங்கும் நோக்கில் இல்லை என்றும் சொல்ல, 

வாக்கெடுப்பில் 20 வாக்குகள் அதிகம் இவர் கொல்லப் பட வேண்டும் என விழுந்ததை அடுத்து மாமேதை சாக்ரடீஸ் விஷக் கோப்பை ஏந்தி மக்களின் வாக்களிப்பு மாண்பை மனதில் கொண்டு அதன் விழுமியத்தை உயர்த்திப் பிடிக்க  விஷம் அருந்தி தன்னுயிரை மாய்த்துக் கொள்வதாக வரலாறு.

நமது நாட்டிலேயே கூட முதலில் அனைவர்க்கும் வாக்களிக்க உரிமை அளிக்கப் படவில்லை, படிப்படியாக, படித்தவர்களுக்கு என்றும் அதன் பின் பெண்களுக்கு என்றும் 21 வயது ஆனவர் அதன் பின் 18 வயது நிரம்பியோர் தகுதி படைத்தவர் என்றும் வளர்ந்தது.

ஆரம்பத்தில் பெண்களுக்கு வாக்களிக்க வைக்க ஒரு கணக்கெடுப்பு நிகழ்த்தப் பட்ட போது பெண்கள் தங்கள் பெயரை, குறிப்பிட்டுக் கொள்ள விரும்பாமல் தமது குடும்பத்தில் தந்தையின் பெயரைக் குறிப்பிட்டு இன்னாரின் மகள், அல்லது இன்னாரின் மனைவி என்றே தெரிவித்திருந்த நிலை நிறையக் காணப்பட்டதாக புள்ளி விவரங்கள்  கூறின.

சுகுமார் சென் என்ற தேர்தல் தலைமை ஆணையர் முதல் ஆணையராக இருந்தது, நமது டி.என்.சேசன் போன்றோர் அப்படி ஒரு அமைப்பு இருக்கிறது என்பதை வெளிக்காண்பிக்க நிறைய செயல்பட்டது அது முதல் தேர்தல் ஆணையம் என்ற அமைப்பின் ஒரு முக்கிய பங்கு வெளிப்பட ஆரம்பித்தது. இப்போது வரை இந்தியா போன்ற பெரிய உப கண்டத்தில் இந்த அமைப்பு சிறப்பாக பணி செய்து தேர்தல்களை மாநில அளவிலும் மத்தியிலும் உள்ளாட்சி அமைப்புகளிலும் வெற்றிகரமாக நடத்தி வருகிறது.

அதனிடையே கிராமப் புற ஊரகப் பகுதிகளில் மற்றவர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு கிடைப்பது போல எங்களுக்கு இல்லையே அதனால் அன்றைய தினம் அன்றாடம் கிடைக்கும் கூலி போகிறதே அதனால் அதற்கு மாற்றாக நாங்கள் ஏன் எங்களுக்கு கொடுக்கப் படும் பணம், பொருள் போன்றவற்றை பெற்றுக் கொள்ளக் கூடாது என்று கேள்வி எழுப்புவதை குறிப்பிட வேண்டியே இருக்கிறது.

இதற்கெல்லாம் வளர்ந்து வரும் தேர்தல் ஆணையம் திட்டம் வகுத்து மேலும் வாக்குகளின் முக்கியத்துவத்தை வளர்த்து விட வேண்டும். ஏன் எனில் நாட்டில் ஊரக பகுதிகளில் உள்ளாரே பெரும்பாலும் தவறாமல் வாக்களிக்கிறார்கள் நகர் புறம் சார்ந்தாரை விட...மேலும் நகர் புறம் சார்ந்த மேட்டுக் குடி மக்கள் பெரும்பாலும் வாக்களிப்பதில்லை என்ற செய்திகளும் உண்டு.

ALL PARTY PARTICIPATION :

எல்லாக் கட்சியினரும் மக்களுக்கு நல்லாட்சி, நல்லரசைத் தர வேண்டும் என்ற நோக்கத்துடனேயே கட்சியை ஆரம்பித்து நடந்தி வருவதால் ஏன் ஆட்சியில் விகிதாச்சார முறை கொண்டு வந்து செய்யக் கூடாது? அதாவது வேட்பாளர் நிறுத்துவதற்கு மாறாக ஒரு கட்சிக்கு எவ்வளவு வாக்களிக்கப் பட்டுள்ளது என்ற அதன் அடிப்படையில் அவரவர் கட்சியின் பிரதிநிதிகளை நியமித்து அனைவரையும் சேர்த்து ஏன் அமைச்சரவை , மக்கள் மாமன்றங்களில் பங்கெடுத்து சேவையாக‌ அரசியல் செய்யக் கூடாது அதற்கான வழிமுறைகளை தேர்தல் ஆணையம் கையில் எடுக்க வேண்டிய காலம் கனிந்து விட்டது அதன்படி செய்தால் அது மக்களுக்கு நல்லது செய்யும் தேர்தல் ஆணையப் பணியாக குறிப்பிடும்படியாக இருக்கும் என்பதை வெகு நாட்களுக்கும் முன்பே எனது அன்பு சகோதர நண்பர் சமூக மேம்பாட்டு சிற்பி கொ.வேலாயுதமும் அடியேனும் ஜனநாயக மறு சீரமைப்பு என்ற சிற்றிதழில் காந்தி படத்துடன் வெளியிட்டோம்.

RE CALLING POWER

மேலும் சரியாக செயல்படாத மக்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைக்கும் உரிமையை பயன்படுத்தி திரும்பவும் அவருக்கு மாறாக நன்றாக செயல்படும் பிரதிநிதியை அனுப்பவும் அமைப்பு முறையில் உறுதிப் படுத்த வேண்டிய தேர்தல் முறையை ஏற்படுத்த வேண்டும் அது இந்த அறிவியல் சார்ந்த காலத்தில் கடினமான காரியமல்ல என்பதையும் குறிப்பிட்டேன்.

மறைந்த எழுத்தாளர், அறிவியல் அறிஞர்: சுஜாதா ரங்கராஜன் வாக்களிக்கும் இயந்திரத்தை உருவாக்கிய குழுவுக்கு தலைமையாக இருந்து இந்த நாட்டில் இப்போது நடப்பில் இருக்கும் வாக்களிக்கும் முறைக்கு தமது வாழ்நாளின் மாபெரும் சாதனையை செய்ய காரணமாக இருந்திருக்கிறார் என்பதையும் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்

ஒரு முறை சட்ட மன்ற உறுப்பினர் அல்லது பாராளுமன்ற உறுப்பினர் ஆகி இருந்தாலுமே அவருக்கு வாழ்நாள் முழுதும் ஓய்வூதியம் தருவது அல்லது ஊதியம் கொடுப்பது சரிதானா என்பவை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் படுவதுடன் சேவை என்று வரும் அனைத்து மக்கள் பிரதி நிதிகளுக்கும் பராமரிப்பு செலவுக்கு என்று உண்மையான செலவினங்களை ஏற்கலாம் ( அதாவது தகவல் தொடர்புக்கு, போக்குவரத்துக்கு, தங்குவது, உண்பது அவசியமான கூட்டம் போன்றவற்றுக்கு) அதற்காக ஒரு பெரும் தொகையை அரசு ஊழியர்களுக்கு சம்பளமாக ஊதியமாக தருவது போல தந்து மக்களின் பணத்தை செலவு செய்யத்தான் வேண்டுமா?

அதைப் பற்றி எல்லாம் ஆலோசிக்க வேண்டும்... தேர்தல் ஆணையம் என்றெல்லாம் குறிப்பிட்டேன். எனினும் அவை ஒலிபரப்பில் தணிக்கையில் வெளித் தெரிய வரவில்லை.

மேலும் இந்த நாட்டில் ஆக்ஸ்பார்ம் என்ற உலகளாவிய நிறுவனம் ஏறத்தாழ 40 சதவீத செல்வ வளம் யாவும் 1 சதவீதம் பேர் கையிலும் கீழ் உள்ளோர் 40 முதல் 50 சதவீத மக்களின் செல்வ வளம் சொல்லத் தரமில்லாமல் இழிந்து போய்க் கொண்டிருப்பதாகவும் பணம் படைத்தார் மேலும் பணம் சேர்த்தும், நலிவடைந்தார் மேலும் நலிவு பெற்று வருவதுமான சூழல் நிலவி வருவதைக் குறிப்பிட்டுள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தின் பணி மூலம் தான் இது போன்ற இடைவெளிகள் சீர் செய்யப் பட்டாக வேண்டும்...வேறு மார்க்கம் இருப்பதாக கைக்கருகே தற்போதைக்கு தெரியவில்லை.

இது பற்றி பொருளாதார அமைப்பு இந்தியா என்பது பற்றி நாங்கள் எங்களுக்கு அளிக்கப் பட்ட ஒரு பயிற்சியின் போது 1980களிலேயே அறிந்திருந்தும் இப்போது ஆண்டுகள் 43 ஆண்டுக்கும் மேல் ஆகியும் ஏதும் செய்ய வழியில்லாமல் அப்படியே போய்க் கொண்டிருக்கிறது.

உத்திரமேரூர் சோழர் கால கல்வெட்டில் குடவோலை முறை பற்றி தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளது.யார் யார் வேட்பாளராக நிற்பது என்பது பற்றி எல்லாம் அதை விட முக்கியமாக இந்தக் களத்தில் வருவார் இலஞ்சம் ஊழல் ஏதாவது செய்தார் எனில் அவர் குடும்பம், குலம் ஏதுமே அரசுப் பணிகளில் மக்கள் பணிகளில், ஈடுபடக் கூடாது, முடியாது என்பதும், அவர்கள் வேட்பாளர்களாக முடியாது என்றும் தெளிவுபடக் கூறி இருக்கின்றனர் அப்போதே...நாம் அவற்றை எல்லாம் கையில் எடுப்பது தேர்தல் சீர்திருத்தத்திற்கு அவசியமான மைல்கற்களாய் இருக்கும்.

மற்றபடி வாக்களிக்க நல்ல வசதி வாய்ப்புகளை நேரம் காலம் கருதி செய்வதில் எல்லாம் தேர்தல் ஆணையத்தை குறை சொல்வது போல இல்லாமல் நல்ல ஏற்பாடுகளை செய்து வருகிறது எனவே அனைவரும் பங்கெடுத்து மதிப்புணர்ந்து வாக்களித்து ஒரு நல்லாட்சியை நல்லரசை அமைப்பது மக்கள் ஒவ்வொருவர் கடமையாகவே காலம் காலமாக இருந்து வருகிறது. இனியும் அப்படித்தான் இருக்கப் போகிறது.விழித்தெழுக என்றார் விவேகானந்தர், 2020 கனவு என்றார் கலாம்...ஒன்றும் நடக்கவில்லை. மக்களே விழித்துக் கொள்ளுங்கள், பசித்திரு தனித்திரு விழித்திரு என்பார் இராமலிங்கர். இந்த 3 பதங்களில் உள்ள முதல் எழுத்தை சேருங்கள் அது ப த வி . அபிராம பட்டர் 16 செல்வங்களுள் ஒன்றாய் கோணாத கோல் என்கிறார். குறள் ஆட்சி, அரசு பற்றி நிறைய சொல்லி இருக்கிறது. படிக்க வேண்டுமல்லவா? காபி கடைக்கு போனது போல நமது மனிதர்கள் மதுக்கடைக்கு போகும் நிலை வந்து விட்டதோ என எண்ணும்படியாக ஒவ்வொரு நாளும் சென்று கொண்டிருக்க நமது ஜனநாயகத்தை யார் தான் காப்பாற்ற வேண்டிய பொறுப்பை எடுத்துக் கொள்வது?

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.









Friday, March 24, 2023

பா.மூவேந்திரபாண்டியனின் திருக்குறள் உரை: கவிஞர் தணிகை

 பா.மூவேந்திரபாண்டியனின் திருக்குறள் உரை: கவிஞர் தணிகை



 காபி டீ பழக்கம் கிடையாது, இவருக்கு தோன்றின் புகழொடு தோன்றுக ...குறள் தாம் முதல் குறளாய் பிடிக்கும், இவரும் சாதி மதங்களைக் கடந்தவன் என்றெல்லாம் சொல்லச் சொல்ல‌ இப்படி நிறைய இவருக்கும் அடியேனுக்குமான ஒற்றுமை நிறைய‌ இருப்பதால் ஒட்டிக் கொண்டோம்.புதிய மனிதராய் அறிமுகமாகி இருந்த போதும் பூர்வீகத் தொடர்பில் சகோதர நண்பராய் இருந்திருப்போம் என்றே எண்ணிட இப்போது அது தொடர....

 இவர் அரசுப் பொறுப்பில் இருந்தும் கூட வெட்டி பந்தா எல்லாம் இல்லை,ஒரு முறை பார்த்தால் அப்படியே நினைவில் கொள்ளும் நினைவாற்றல். இவர் போன்றோரை பார்ப்பது அரிது. பாரதி பற்றி காந்தி சொன்னது போல இது போன்ற மனிதரையெல்லாம் காலம் அதிகம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். இவரெல்லாம் அபிராமி அந்தாதியில் சொல்வது போல பதினாறு செல்வங்களும் பெற்று மக்களுக்கு நீண்ட சேவையாற்றிட நீண்ட காலம் வாழ எல்லாம் வல்ல இயற்கை அருள் செய்யட்டும் என்ற பிரார்த்தனையுடன்...

வான் புகழ் கொண்ட வள்ளுவத்தை மீண்டும் படிக்க ஒரு வாய்ப்பு பா.மூவேந்திரபாண்டியன் அவர்கள் மூலம் எனக்கு கிடைத்தது. இவர் 1. சிகரங்கள் தொடுவதற்கே,2. வார்தா என்ற சிவப்பு ரோஜா பேசுகிறேன் என்ற இரண்டு கவிதை நூலையும் ஏற்கெனவே செய்துள்ளவர்.

இவருடைய பெயரே  தனிச் சிறப்பாய் இவரை அடையாளப்படுத்தி விடுகிறது.பெயர் வைத்ததில் ஒரு பெருமிதம் இருக்கிறது சேர சோழ பாண்டிய மூவேந்தர்களுக்கும் இவர் பாண்டிய மன்னர் என பேர் வைத்தாரை பாராட்டத்தான் வேண்டியதிருக்கிறது.

சிகரம் தொடுவதற்கே என்ற இவருடைய‌ புத்தகத்தின் பெயரைக் கேட்டறிந்தவுடன் ஒரு பிடிப்பு ஏற்பட்டு விட்டது.

சரி திருக்குறள் உரைக்கு வருவோம்.

3 ஆண்டுகள் மனிதர் உண்மையாய் உழைத்து உள் நுழைந்து வாழ்ந்திருக்கிறார் 1330 குறள்களுக்குள்ளும் என்பதை இவருடைய நூலின் வெளிப்பாடே நமக்கு பறை சாற்றி விடுகிறது. ஒரு உள்ளங் கைக்குள் அல்லது ஒரு சட்டைப் பைக்குள் அடங்குமளவான நூலை எவ்வளவு பெரிய அளவாக்க வேண்டுமோ அவ்வளவு பெரியதாக ஆக்கிக் காட்டி இருக்கிறார்.அதிலிருந்து குறளின் பால் குறளோனின் பால் இவரின் நேசம் எவ்வளவு என்று புரிகிறது

 இதற்காக நிறைவு செய்ய காசி பாரதி  சில காலம் வாழ்ந்த சிவமடத்துக்கே சென்று அமர்ந்து பணி நிறைவு செய்திருக்கிறார். வாழ்வில் இவருக்கு  ஒரு உயரிய‌ நோக்கம் இருக்கிறது. இந்த நூலை பல்கலைக் கழகத்திற்கும் பள்ளிக் கல்லூரிகளுக்கும் தமிழ் பாடமாக வைக்கலாம் அதில் ஒன்றும் குறை இருக்காது.


கீழடி அரசு மேனிலைப் பள்ளியோடு வேறு தொடர்புடையவர் என்கிறார்.கற்றவர்க்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு எனவே அரசுப் பணி இவரை அதிகம் பந்தாடாமல் வைத்திருந்தால் இவர் இன்னும் இவரது வாழ்நாளில் நிறைய செய்வார் என எதிர்பார்க்கலாம்.


சுமார் 300 பெரிய அளவிலான பக்கங்களுடன், ஒவ்வொரு பக்கத்துக்கும் பெரிய எழுத்துகளில் 5 குறள்களும் அதனடியில் இவருடைய எளிய சிறப்பான சுருக்கமான உரையும். நேரடியாக பளிச்சிடுகிறது பொருள். இவரது எழுத்தின் எளிமை எனக்கு கண்ணதாசனை நினைவுபடுத்துகிறது.


நூல் நல்ல படைப்பாக்கம் மிக நல்ல உருவாக்கம்.


பரிமேலழகர், மணக்குடவர்,போன்ற ஆரம்ப கால உரையாசிரியர்களுடன், டாக்டர் மு.வ உரை அதன் பின் கலைஞர், சாலமன் பாப்பைய்யா, இப்படி நூற்றுக்கு மேற்பட்டார் குறளுக்கு உரை எழுதிட அவ்வரிசையில் இவரும் சேர்ந்து கொள்கிறார். அடியேன் மு.வ உரை காலத்தவன்.

இவருடைய முயற்சியைக் காணும் போது: அடியேனும் கூட உரை எழுதியிருக்கலாம் என்ற நினைப்பு வருகிறது. 2004 வாக்கில் :" தணிகையின் பார்வையில் தலையாய குறள்கள் 100" என்ற குறள் சிறு நூலை நான் கொண்டு வந்த போது செல்வம் பிரஸ் மா. துரைசாமி பெரியவர் என்னையும் உரை செய்யக் கேட்டுக் கொண்டார் அதை செய்தால் இன்னும் செலவு அதிகமாக இருக்குமே என தவிர்த்துவிட்டேன், அதற்கென்று நிறைய உரை இருக்கிறது அவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளட்டுமே மேலும் அவை எல்லாமே மிகவும் பிரபலமடைந்த குறள்கள் தாமே என்று தவிர்த்து விட்டேன்.

தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு சுமை தரக்கூடாது, சுகம் தர எண்ணினேன். ஆனால் சகோதரரின் முயற்சியைப் பார்க்கும் போது அடியேனும் செய்திருக்கலாமே என உண்மையாகவேத் தோன்றுகிறது. மேலும் ஒவ்வொரு வார்த்தைகளையும் அவரவர் அனுபவ ஆற்றல் சிறப்பு செய்து எடுத்துரைக்கும் என்ற நம்பிக்கை ஊட்டும் உழைப்பு இந்த மனிதருடையது.

எடுத்துக்காட்டாக: கேடில் விழுச் செல்வம்...கேடில்லா(குற்றமில்லா) விழுச் செல்வம், கெட்ட நிலையிலும் உதவி கை தூக்கி விடும் விழுச்செல்வம் கல்வி...இப்படி சில பொருள் வேறுபாட்ட்டில் பொருள் கொள்ள வழி இருக்கிறது. பூரணத்தை பூரணமாக எடுத்துக் கொடுத்தாலும் பூரணம் பூரணமாகவே இருக்கும் என்பது கல்விக்கு மட்டும் தானே?

காலத்தின் பதிவுகளில் தமது பெயரும் இடம் பெற வேண்டும் எனில் குறளுக்கான உரை எழுதுவது என்பது ஆன்றோரிடம் குறிப்பிட்ட ஒரு செயலாக காணப்பட்டுள்ளதை கலைஞர் உரை, சாலமன் பாப்பைய்யா உரை போன்றவற்றின் மூலம் கண்டோம். அது போல இவரும் அந்த பட்டாளத்துடன் சேர்ந்து கொள்கிறார். அந்த நாடியை இவரும் பிடித்து விட்டார். ஆனால் இவரின் உழைப்பு இவரது சிறப்பு. இவரின் நூலை கல்விக் கூடங்களில் சேர்க்கும் என்று நம்புகிறேன்.

தேடிப் பார்த்தாலும் தென்படாத எழுத்துப் பிழைகள்...மிகச் சிறப்பாக செய்திருக்கிறார். வாழ்க என்றும் வாழ்த்துகிறேன்

குறள் என்றுமே நமக்கு வழிகாட்டும் , விடை தரும் , சிறப்புரையாற்ற கைகொடுக்கும், தெரியாத போது அதை துணைக்கு அழைத்து தெரிந்து கொள்ளலாம் தெரியாதவற்றை...

 ஆனாலும் எனைப் பொறுத்தவரை எழுத்து என்று வந்து விட்டாலே படைப்பு என்று வந்து விட்டாலே இலக்கியம் என்று சொன்னாலே யாவுமே விமர்சனத்துக்கு உட்பட்டதுதான். வேறு தெய்வத்தை வணங்காது கணவனை மட்டுமே வணங்கும் வாழ்க்கைத் துணை பெய்க‌ மழை என்றால் பெய்யும் என்பது,புலால் மறுத்தாரை உலகு வணங்கும் என்பது,புலால் உண்பாரை நரகத்தில் சிக்க வைக்கும் என்பது, யாக்கைக்கு மருந்தெனெ வேண்டாவம் என்பது (இக்காலத்தில் பொருந்தவில்லை பிறக்கும் குழந்தைக்கே நோய்கள் இருக்குமளவு உலகு கெட்டுவிட்டது)

 குறள்:1121 பாலும்தேனும் கலந்தது போன்றது காதல் பெண் உமிழ் நீர் என்பது இது போன்ற குறள்கள்...கவிதைப் பொய்கள் என்றே காமத்துப் பாலில் உள்ளன.

 இந்த காலத்தில் சில குறள்கள் பொருந்தாமல் போனது பற்றி நாம் தாம் வெட்கப் பட வேண்டும். மனித குலம் தாம் தரம் தாழ்ந்தது பற்றி யோசிக்க வேண்டும். ஆனாலும் அவை குறளுக்கு சிறுமை அல்ல ஆனாலும் இந்த காலத்துக்கு பொருந்த வில்லையே என்பது போன்ற கருத்துகள் குறள்களில் உள்ளது பற்றி முரண் அல்லது மாறுபட்ட கருத்துகள் எனக்குள்ளும்  உண்டு.

புலால் மறுப்பு பற்றி இவர் மற்றும் இராமலிங்க வள்ளலார் போன்றோர் போற்ற விவிலியம், முகமதியம் போன்ற நெறிகள் ஏற்கவில்லை.

அடியேன் புலால் மறுப்பாளன் என்றாலும் உலகு அப்படி செல்லவில்லை என்றே ஆதங்கப் படுகிறேன்.

வாழ்த்துகளும் வணக்கங்களும் நன்றிகளும் அன்பு சகோதரர்: உரையாசிரியர் பா.மூவேந்திரபாண்டியன் அவர்களுக்கு...நூல் விலை மதிப்பற்றது என்பதுவும் உண்மைதான்.


வணக்கங்கள் மற்றும் நன்றிகளுடன்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

பி.கு: 133 அதிகாரத்தில் 3 அதிகாரம் இடைச் செருகல் என்றெல்லாம் கேள்வி, உண்மையை யாரால் ஆராய முடியும் ?









Thursday, March 23, 2023

23.03.23 மாவீரன் பகத் சிங் நினைவு நாளுடன் கவிஞர் தணிகையின் 62 ஆம் பிறந்த நாளும் கூட:கவிஞர் தணிகை.

 23.03.23 மாவீரன் பகத் சிங் நினைவு நாளுடன் கவிஞர் தணிகையின் 62 ஆம் பிறந்த நாளும் கூட:கவிஞர் தணிகை.



திரும்பிப் பார்க்கிறேன்

அட! 61 ஆண்டுகள் போனதே தெரியவில்லை.

'62ல் பிறந்து இன்று 62ல் அடி எடுத்து வைக்கிறேன் 


தூங்க விடவில்லை கனவு


ஜிட்டு.கிருஷ்ணமூர்த்தி சொல்வது போல இன்றும் புத்துணர்வுடன், இளமையுடன்,அறியத் துடிக்கும் குழந்தைத்தனத்துடன் இருக்கிறேன்.


சில மைல்கற்களைத் தொட்டிருக்கிறேன்.

மனிதமாய்த் தழைத்திருக்கிறேன்.


அதில் மகனை பொறியாளராய் செய்ததும், தாயை அவருடைய கடைசி 20 ஆண்டுகள் தாலாட்டியதும் அடங்க எனது வாழ்வு பொருள் பொதிந்ததாய் ஆனது. மனம் நிறைந்து போனது.


இதற்குள் வந்த நட்பு, பகை, உறவு, சுற்றம் எல்லாமே அந்த அந்த தருணத்து வேடிக்கையாகப் போனது.


நிறைய நினைத்துப் பார்க்க இருக்கிறது அதற்காக உங்கள் நேரத்தை நான் எடுத்துக் கொள்வது தவறாகும்.


எனது முதல் புத்தகமான மறுபடியும் பூக்கும் முன்னுரையில் சொன்னதையே மீண்டும் சொல்ல வேண்டியதாக இருக்கிறது:


நானே கருவாகி தானே உருவாகி உங்கள் உள்ளத்தில் ஒரு சிறு பகுதியை தொட்டுச் செல்ல நான் எடுத்துக் கொண்ட காலமும் சிரமமும் மிக அதிகம்


நான் பாரதி, தாகூர் போன்ற மகாக் கவியில்லை


என்னால் உலகு உய்யப் போகிறது என்று சொல்லுமளவு நான் முட்டாளுமில்லை


என்னால் இந்த நாடு சுபிட்சம் அடையப் போகிறது என எண்ணிக் கொள்ளுமளவு நான் பெரிய தியாகியுமில்லை


என் பின்னோடு எந்த மதமும் தொடர்ந்து வரப் போவதில்லை என்பதையும் நானறிவேன் என்றாலும்


நான்/ அடியேன் கால எல்லையை குறுகிய சாதி, மதக் கோடுகளை வாழ்வின் நடமுறை யதார்த்தத்திலும் பிடிவாதத்துடன் கடக்க ஆசைப்படும் ஓர் சாதாரண மனிதன். கொள்கை எனைக் கொன்று தீர்த்து விடும் போலிருக்கிறது.


சக மனிதரின் துன்பம் கண்டு துயரம் கொள்பவன்


நிறைய ஏமாற்றங்கள் என்னிடமும் உண்டு


ஆனாலும் என்னால் எவருமே என்றுமே ஏமாற்றப் பட்டு விடக் கூடாது என்று பிரார்த்திப்பவன்.


பல முறை மரணத்தின் விளிம்பைத் தொட்டு மீண்டிருக்கிறேன் அது மரணத்தின் பிடிதான் என்பதை அறியாமலேயே...


எனது வாழ்வு விடைபெறும் முன்பே என்னால் முடிந்த அளவு எனது வீட்டுக்கும் எனது நாட்டுக்கும் நான்/அடியேன் செய்ய வேண்டிய கடமையை செய்து முடித்து விட்டதாகவே உணர்கிறேன். அந்த திருப்தி எனக்கு எப்போதுமே உண்டு. அதன் அடையாளமாகவே எதையாவது எப்போதாவது எழுதுகிறேன். நான்/ அடியேன் இனி எப்போது இறந்தாலுமே எனக்கு மகிழ்வே ( அதை முதல் புத்தக முன்னுரையிலேயே 1990களிலேயே குறிப்பிட்டு விட்டேன் அதற்கு பின்னும் இன்னும் மீதம் தொடரும் எனது வாழ்வு யாவுமே இயற்கை எனக்கு அளித்த கருணைக் கொடை)


என் குடும்ப உறுப்பினர்களைக் கூட உலகின் அங்கமாகவே எடுத்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு முகம் தெரிந்த தெரியாத இவ்வுலகின் எல்லா மனிதர்களையுமே என் குடும்ப உறுப்பினர்களாகவே நினைத்துக் கொண்டிருக்கிறேன் அதன் எதிரொலியாகவும் எதிரொளியாகவுமே எப்போதாவது எழுதுகிறேன்.

எத்தனையோ சிகரங்களையும் தொட்டதுண்டு,மலை மடுவுப் பள்ளத்தாக்குகளிலும் வீழ்ந்து எழுந்ததுமுண்டு....வாழ்க்கையில் எத்தனை அனுபவப் பாடங்களைப் பெற்றபோதும் மனிதர்களை நம்பி ஏமாந்தே போவதிலிருந்து இன்னும் விடுபட முடியாத சுழல் சூழல். தவறான வழிகாட்டல் மூலம் கற்றவை ஏராளம் பட்டவையும்...


ஈயிக்கு தலையில், தேளுக்கு கொடுக்கில், பாம்புக்கு பல்லில்,மனிதர்க்கு உடலெல்லாம் விஷம் ...என்பதை மாற்றிக் கொள்ளாத மனிதர் உள்ள உலகிடையே பட்ட பாடுகளும் ஏராளம்... உண்மை, தூய்மை,சுயநலமின்மை இவற்றுக்கு எல்லாம் விலை இல்லை மதிப்பும் இல்லை.


ஆனாலும் மனிதாபிமானமும் அன்பும் இவற்றை எல்லாம் துடைத்தெறிந்து விடுகின்றன...


அன்புப் பிரவாகத்தின் சுழலில் அகப்பட்டு மீளத் தெரியாத எனது அவ்வப்போதைய மீறிய துக்கமும், பீறிய மகிழ்வுமாக ஒரு கவிதையாகவே வாழ்கிறேன்.


பல கோணங்களுடைய வாழ்வின் ஒரு பரிமாணம் மட்டுமே எப்போதும் பார்வைக்குத் தெரிகிறது.



மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.




Tuesday, March 14, 2023

படித்ததில் பிடித்தது:ஸ்விஸ் நாட்டின் மனித மலத்தை சேமிக்கும் வங்கி எதெற்கு பயன்படும்? கவிஞர் தணிகை

 நன்றி: பிபிசி தமிழ்

அனைவரும் படித்தறிய வேண்டிய அரிய கட்டுரை 




உலகளவில் பல வகையான பாக்டீரியாக்கள் அழிவின் விளிம்பில் உள்ளதால், அவற்றை பாதுகாப்பதற்காக மனித மலங்களின் மாதிரிகளையும் மற்றும் பிற உயிரியல் பொருட்களையும் சேகரிப்பதற்கான முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு மிகப்பெரும் ஆய்வு கூடத்தில் இதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இது பல ஆராய்ச்சியாளர்களின் கூட்டு முயற்சி என்றும், இதற்கான வேலைகள் ஏற்கனவே துவங்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்தகைய முயற்சி மிகவும் அவசியமானது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நம்முடைய உடல் ஆரோக்கியத்தில், பல்வேறு நுண்ணுயிரிகள் எவ்வளவு முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை புரிந்து கொள்வதற்கு இந்த ஆராய்ச்சி உதவும் என அவர்கள் கூறுகின்றனர்.

இந்த புதிய ஆராய்ச்சிகாக, எதிர்காலத்தில் உலகெங்கிலும் செயல்பட்டு வரும் பல்வேறு பல்கலைக்கழகங்களை ஒன்றிணைக்கும் முயற்சியும் நடைபெற்று வருகிறது. நாள்பட்ட நோய்களாக கருதப்படும் ஆஸ்துமா மற்றும் உடல்பருமன் போன்ற நோய்களுக்கு இந்த ஆராய்ச்சிகளின் மூலம் தீர்வு காணமுடியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஆனால் மனித மலங்களை சேகரிப்பதற்காக வங்கி உருவாக்க வேண்டிய அவசியம் என்ன? உலகெங்கிலும் சில வகையான பாக்டீரியாக்கள் ஏன் அழிந்து வருகிறது?

விதைகள் முதல் பாக்டீரியாக்கள் வரை

பாக்டீரியாக்களின் அழிவை பாதுகாக்க

பட மூலாதாரம்,GETTY IMAGES

விதை சேகரிப்பு பற்றி நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட வகை தானியங்களோ அல்லது காய்கறிகளோ அழியும் நிலைக்கு சென்றால், நாம் சேகரித்து வைத்திருக்கும் விதைகளைக் கொண்டு நம்மால் மீண்டும் அந்த தானியங்களையோ, செடிகளையோ பயிரிட முடியும். இதே போன்று பாக்டீரியாக்களை பாதுகாப்பதற்காக தற்போது மல வங்கி உருவாக்கப்படுகிறது.

சர்வதேச அளவில் இதற்கான முயற்சியை முன்னெடுத்த நுண்ணுயிரியலாளர் மரியா குளோரியா டொமிங்குஸ்-பெல்லோ, பிபிசி நியூஸிடம் இதுகுறித்து பேசும்போது, ” இந்த நுண்ணிய உயிரினங்களின் பன்முகத்தன்மை சமீபத்திய ஆண்டுகளில் வெகுவாக குறைந்து வருகிறது” என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, “அமேசான் பழங்குடி மக்களிடம் நாங்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியின்போது நாங்கள் கண்டறிந்தது என்னவென்றால், அமெரிக்க மக்களின் குடல்களில் காணப்படும் பல வகையான பாக்டீரியாக்களை விட, இரண்டு மடங்கு அதிகளவில் பல்வேறு வகையிலான பாக்டீரியாக்களை அமேசான் பழங்குடிகள் தங்களது குடல்களில் கொண்டிருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டார்.

நகரத்தில் வாழும் மக்களுக்கு மருத்துவ சேவை எளிதாக கிடைப்பதால், அவர்கள் தங்களுடைய உடல் பிரச்னைகளுக்காக அதிகளவிலான ஆண்டிபயாடிக் மருந்துகள் எடுத்துக் கொள்கிறார்கள். அதன் விளைவாக அவர்கள் தங்களது உடலில் இருக்கும் பல வகையான நல்ல பாக்டீரியாக்களை இழக்கிறார்கள்” என்று அமெரிக்காவின் ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தில் பேராசியராக இருக்கும் மரியா குளோரியா தெரிவிக்கிறார்.

அழிந்து வரும் பாக்டீரியா இனங்கள்

நமது செரிமான அமைப்பில் இயங்கும் ’மைக்ரோபயோட்டா’ (microbiota) உடலில் இருக்கும் பல்வேறு வகையான நுண்ணியிரிகளுக்கு முக்கியமான இடமாக இருக்கிறது.

நமது ஆரோக்கியத்திற்கு தேவையான சுமார் 100 பில்லியன் வகையான பல்வேறு நுண்ணுயிரிக்களை ’மைக்ரோபயோட்டா’ கொண்டிருக்கிறது என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

எனவே நமது வயிறானது இத்தனை பல்வேறு உயிரினங்கள் வாழும் ஒரு சிறிய நகரமாக செயல்படுகிறது.

இந்த நிலையில், இந்த பல்லுயிர்கள் சமீபத்திய ஆண்டுகளில் சிறிது சிறிதாக அழிந்து வருகிறது என சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.

இதை பற்றி நாம் ஆழமாக சிந்திக்கும்போது, மனிதர்களிடம் அதிகரித்து வரும் பல வகையான நாள்பட்ட வியாதிகளுக்கு இந்த நுண்ணியிர்களின் அழிவே காரணமென தெரியவருகிறது. குறிப்பாக நகரங்களில் வாழும் மக்களிடையே இது மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது.

இந்த ஆராய்ச்சியில் பிரேசில் நாட்டிலிருந்து ஒரே ஒரு பிரதிநிதியாக நுண்ணுயிரியலாளர் கிறிஸ்டியன் ஹாஃப்மேன் மட்டுமே பங்கெடுத்திருக்கிறார். அவர் இதுகுறித்து பேசும்போது,” பாக்டீரியாக்களின் இந்த அழிவு நமது குடலில் நடக்கும் ஒரு மாற்றமாக மட்டும் பார்க்க முடியாது, எதிர்காலத்தில் இதனால் நாம் சில வகையான செடிகள் மற்றும் விலங்குகளை கூட இழக்க நேரிடலாம். ஏனென்றால் நமக்குள் இருக்கும் பாக்டீரியாக்கள்தான் இந்த இயற்கையிலும் கலந்திருக்கிறது” என்று கூறுகிறார்.

இது மிகவும் முக்கியமான பிரச்னை என்றும், மிக விரைவிலேயே இதன் தீவிரம் அதிகரிக்கும் எனவும் அவர் குறிப்பிடுகிறார்.

ஆனால் இந்த பாக்டீரியாக்கள் அழிந்து வருவதற்கான காரணங்கள் என்ன?

நவீன வாழ்க்கை வசதிகளும், அதன் விளைவுகளும்

மலம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

18 மற்றும் 19ஆம் ஆண்டு நூற்றாண்டில் ஏற்பட்ட தொழிற்புரட்சியின்போது, இந்த நுண்ணுயிர்களின் அழிவு தொடங்கியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர் கிறிஸ்டியன் ஹாஃப்மேன் கூறுகிறார்.

உணவுகளை நாம் குளிர்சாதன பெட்டிகளில் வைப்பதும், பதப்படுத்த துவங்கியதும் இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம். அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு தேவையான உணவுகளை சேகரிப்பதற்கு இந்த நவீன முறைகள் உதவி வந்தாலும், இதுவே இந்த பாக்டீரியாக்களின் அழிவிற்கும் காரணமாக அமைந்தது என்று அவர் குறிப்பிடுகிறார்.

கடந்த 20 ஆண்டுகளில் பிரேசில் மக்கள் தங்களது முக்கிய உணவான, நார்சத்து மிகுந்த பீன்ஸ் காய்களை எடுத்து கொள்ளும் அளவு கணிசமாக குறைந்திருக்கிறது என ஹாஃப்மேன் சுட்டிக்காட்டுகிறார். மாறி வரும் உணவு பழக்கங்கள், நமது உடல்களில் பல தாக்கங்களை ஏற்படுத்துகிறது எனவும் அவர் குறிப்பிடுகிறார்.

மனிதர்கள் நார்சத்துகள் மிகுந்த உணவுகளை எடுத்து கொள்வது மிகவும் அவசியம். அதுதான் நமது குடல்களில் உள்ள நுண்ணுயிர்களுக்கு முக்கிய உணவாக இருக்கிறது.

இந்த நார்சத்துகள்தான் நமது குடல்களிலிருந்து, எந்தவொரு தொந்தரவுகளும் இல்லாமல் எளிமையாக மலம் வெளியேறுவதற்கு உதவி புரிகிறது.

அதேசமயம், நாம் எடுத்துக்கொள்ளும் ஆண்டிபயாடிக் மருந்துகளும் நமது உடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை சத்தமில்லாமல் அழித்து வருகிறது என மற்ற சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

1928ல் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டி பயாடிக் மருந்துகள் மனிதர்களின் பல்வேறு விதமான நோய்களுக்கு தீர்வாக அமைந்திருந்தாலும் கூட, மற்றொருபுறம் இது நமது குடலில் உள்ள மைக்ரோபயோட்டாவில் பல மோசமான தாக்கங்களை ஏற்படுத்தி வந்திருக்கிறது.

ஏனென்றால் ஆண்டிபயாடிக் மருந்துகள் என்பது ஒரு அனுகுண்டுகள் போல நமது உடலுக்குள் செயல்படுகிறது. நல்ல பாக்டீரியாக்கள், கெட்ட பாக்டீரீயாக்கள் என்ற பேதம் இல்லாமல், இது அனைத்து வகையான பாக்டீரியாக்களையும் அழிக்கிறது. எனவே இது நமது குடலின் மைக்ரோபயோட்டாவில், ஒரு சமநிலையற்ற தன்மையை உருவாக்குகிறது.

இதன் காரணமாக நல்ல பாக்டீரியாக்கள் நிறைய அழிந்துவிடுகிறது. அதன் இடங்களையும் சேர்த்து கெட்ட பாக்டீரியாக்கள் ஆக்கிரமித்துக் கொள்கின்றன.

சிசேரியன் பிரசவ முறை

மனித மலத்தை சேமிக்கும் வங்கி - எதற்குப் பயன்படும்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதிகரித்து வரும் சிசேரியன் பிரசவ முறைகளும் இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

ஒரு குழந்தை இயற்கையான முறையில் பிரசவிக்கும்போது, அது தனது தாயின் உடலில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களையும் சேர்த்து எடுத்துக் கொள்கிறது. ஆனால் சிசேரியன் முறையில் அறுவை சிகிச்சை மூலம், நேரடியாக வயிற்றுக்குள் இருந்து குழந்தை எடுக்கப்படும்போது, அதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போகிறது.

எனவே இதுவும் அந்த குழந்தைகளின் மைக்ரோபயோட்டாவிற்கு தேவையான பாக்டீரியாக்கள் கிடைக்காமல் போவதற்கு காரணமாக அமைகிறது.

தொழிற்புரட்சி, மாறி வரும் உணவு பழக்கங்கள் மற்றும் சிசேரியன் பிரசவ முறை என இதுவரை நாம் பார்த்த இந்த மூன்று காரணங்களுமே மனிதர்கள் கையாளும் மோசமான விஷயங்கள் என கூற முடியாது. ஆனால் அதேசமயத்தில் இது அனைத்தும் மனிதர்களின் உடலில் உருவாகும் நல்ல பாக்டீரியாக்களின் மீது பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நமது சுற்றுச்சுழலுக்கு ஆதாரமாக அமைவதும் இந்த நுண்ணுயிர்கள்தான்.

இதில் மற்றுமொரு மோசமான விஷயம் என்னவென்றால், நமது மைக்ரோபயோட்டாவில் ஏற்படும் இந்த மாற்றங்களை போலவே, நமது சுற்றுச்சூழலிலும் மண், தண்ணீர் என அனைத்து நிலைகளிலும் இதேபோல பல வகையான நுண்ணுயிரிகள் அழிந்து வருகின்றன என்று கூறுகிறார் ஆராய்ச்சியாளர் டொமிங்குயூஸ் பியூட்டிஃபுல்.

இந்த நுண்ணுயிர்கள் அழிந்துவருவது நமது உடலில் என்ன மாதிரியான மாற்றங்களை உருவாக்கும்?

அதிகரித்து வரும் நாள்பட்ட வியாதிகள்

மாத்திரை

பட மூலாதாரம்,GETTY IMAGES

அழிந்து வரும் இந்த பாக்டீரியாக்களினால், நமது உடலில் இரண்டு வகையான பிரச்னைகள் ஏற்படலாம் என்கிறார் டொமிங்குயூஸ்.

இதில் முதல் சான்றாக நாம் தொற்றுநோய்கள் ஏற்படுவதை பார்க்கலாம். சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கும், அதிகளவிலான ஆண்டிபயாடிக் மருந்துகள் பயன்படுத்துபவர்களுக்கும் ஆஸ்துமா போன்ற வியாதிகள் ஏற்படுவதற்கான தொடர்புகள் அதிகமாக இருக்கிறது என சமீபத்திய ஆய்வுகள் கூறுவதாக டொமிங்குயூஸ் குறிப்பிடுகிறார்.

இதுபோன்ற ஆராய்ச்சிகள் இவைகளுக்கிடையே இருக்கும் தொடர்புகளை கூறுகிறதே தவிர, இன்னும் முழுமையாக ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து எதுவும் கூறவில்லை.

இரண்டாவது சான்றாக விலங்குகள் மீது மேற்கொண்ட பரிசோதனைகளை நாம் எடுத்துக்கொள்ளலாம். மிகவும் சிறிய பன்றி குட்டிகளின் மீது மேற்கொண்ட ஆராய்ச்சியில், அவைகள் மிகவும் பெரிய அளவில் இருப்பதாகவும், அவை தனது வாழ்நாள் முழுவதும் அதிக எடைக் கொண்டதாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இதற்கு அதன் மைக்ரோபயாடடாவில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களே காரணமாக இருக்கின்றன.

ஆனால் ஆரோக்கியமாக இருக்கும் ஒரு விலங்கின் மைக்ரோபயோட்டாவை மற்றொரு விலங்கிற்கு பொருத்தும்போது, அதன் விளைவாக ஆஸ்துமா, உடல் பருமன் போன்ற நாள்பட்ட வியாதிகள் குணமாவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

”இந்த புவியின் வாழ்நாள் என்பது, அதன் மீது வாழும் பல்வேறு உயிரினங்களுக்கிடையே இருக்கும் சமநிலை மற்றும் கூட்டமைப்பின் தன்மையை பொருத்து இருக்கிறது. அதாவது பாக்டீரியாக்கள் மனிதர்களையும், மனிதர்கள் பாக்டீரியாக்களையும் சார்ந்து இருக்கின்றனர்” என்று ஹாஃப்மேன் குறிப்பிடுகிறார்.

நமக்கு தெரியாதவற்றையும் பாதுகாக்க வேண்டும்:

சீஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மைக்ரோபயோட்டாவின் முக்கியத்துவம் குறித்து ஆராய்ச்சியாளர்களுக்கிடையே ஒருமித்த கருத்து நிலவி வந்தாலும், இன்னும் நுண்ணுயிர்களின் ஆழத்தை புரிந்துக் கொள்வதற்கு நிறைய ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

ஆனால் நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல, பல்வேறு வகையான நுண்ணுயிர்கள் அழிந்து வருகிறது என்ற கூற்று மட்டும் உண்மையாக இருக்கிறது.

ஒருவேளை அவைகள் முற்றிலும் அழிந்துபோய், நுண்ணுயிரிகளுக்கான வெற்றிடம் உருவாகும் பட்சத்தில் மட்டுமே, அதுவரை அவைகள் செய்துவந்த முழுமையான செயல்பாடுகள் குறித்து நமக்கு தெரிய வரலாம்.

ஆனால் அப்படியான ஒரு நிலை வந்துவிட கூடாது என்பதற்காகத்தான் தற்போது மனித மலங்களின் மாதிரிகளை சேகரிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்மூலம் பல்வேறு வகையான நுண்ணுயிரிக்களை நம்மால் ஆய்வுகூடத்தில் பாதுகாக்க முடியும்.

உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாட்டைச் சேர்ந்த மனிதர்களின் மலங்களை சேகரிப்பதும்; தயிர், சீஸ் போன்ற புளிக்க வைக்கப்பட்ட உணவு வகைகளை சேகரிப்பதும் என இரண்டு வகையில் இதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. புளிக்க வைக்கப்பட்ட உணவுகளில் நல்ல பாக்டீரியாக்கள் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவிட்சர்லாந்தில் தற்போது இதற்கான ஆய்வுகூடம் தற்போது துவக்கப்பட்டிருந்தாலும், இனி வரும் காலங்களில் கிரீன்லாண்ட் மற்றும் அர்ஜெண்டினா படகோனியா போன்ற பிற இடங்களிலும் இதற்கான கிளைகள் திறப்பதற்கு திட்டமிடப்பட்டு வருகிறது.

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

Saturday, March 11, 2023

சர்வதேச மகளிர் தினத்தில் சோனா எப்.எம் பண்பலையில் கவிஞர் தணிகை

 


சர்வதேச மகளிர் தினத்தில் சோனா எப்.எம் பண்பலையில் கவிஞர் தணிகை



1. எர்ணாகுளத்தில் தென்னிந்திய பிரதிநிதிகள் அடங்கிய 40 பேர் குழுவில் தனியொருவனாய் மரக்கறி உணவாளனாய் நின்றபோது எனக்கென தனிக்கவனத்துடன் வாரக் கணக்கில் சலித்துக் கொள்ளாமல் அன்பான கரிசனையுடன் தாயினும் கனிவாய் உணவு தயாரித்தளித்த கன்னியாஸ்திரி


2. அன்னை தெரஸா: விமானக் கட்டணத்தை பெற்றுக் கொண்டு ரயில் பயணத்தின் வழி சென்று மீதப் பணத்தை தேவையானவர்க்கு செலவளித்து உயிரளித்த, நோபெல் பரிசின் பணத்தையும் அவர்க்கே செலவளித்த உன்னத ஆன்மா, தாயைக் கூட திரும்பவும் அவர் பிறந்த நாட்டில் சென்று காணாத முழுத் தியாகம்


3. படிப்பறிவில்லாவிட்டாலும் மணிக்கணக்கை சரியாகப் பார்க்கத் தெரிந்த, வரவு செலவை நடத்தத் தெரிந்த குழந்தை இல்லை என வேறு மணம் செய்யச் சொன்ன போதும் அமைதி காத்து அதன் பின் 9 குழந்தைகளைப் பெற்றெடுத்த அன்புத் தாய் தெய்வா(னை) ஒன்று தவற 5 பெண்கள், 3 ஆண்களை உருவாக்கிய அன்புத் தாய் நெசவுத் தொழில் செய்யப் பழகிய சிறுமி பெரும் குடும்பத்தின் தாயாக வளர்ந்த வளர்த்த கதை...ஐந்து பெண்கள் பெற்றால் அரசனும் ஆண்டி என்பதை மாற்றி 5 பெண்கள் பெற்றாலும் தமது அரசனை அரசனாகவே வைத்திருந்த அன்புத் தாய்,


4. இரட்டைப் பின்னலிட்டு, குளிக்க வைத்து, ஆடை அணிவித்து மறு தாயாய் இருந்த சகோதரி மல்லிகேஸ்வரி


5. தாயொடு அறுசுவை போம் என்ற பழமொழிக்கும் பின் மனைவி சுவையுடன் உணவு செய்து தந்து கோலம் தெரியாமல் வந்து கோலப் போட்டிகளில் பரிசை வெல்லுமளவு கை வண்ணம் தெரிந்த துணைவி 


இப்படி எனது நினைவிலாடிய சில பெண்களை நேரலையில் பகிர்ந்து பெருமைப் படுத்தினேன்.



மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.