Saturday, December 4, 2021

பேரறிஞர் டாக்டர் சி.என்.அண்ணாதுரையின் சத்ரபதி சிவாஜி:கவிஞர் தணிகை






பேரறிஞர் டாக்டர் சி.என்.அண்ணாவின் சத்ரபதி சிவாஜி:
எனது வாழ் நாளில் எனைத் தொடர்ந்து வரும் இந்த வீர வசனம் எங்களது கல்லூரியின் இந்த ஆண்டு மாணவர்களின் கலை இலக்கிய விளையாட்டு விழாவில் இடம் பெற்றது

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

Thursday, November 4, 2021

ஜெய் பீம்: சினிமா சிலிர்க்க வைக்கிறது: கவிஞர் தணிகை

 ஜெய் பீம்: சினிமா சிலிர்க்க வைக்கிறது: கவிஞர் தணிகை




சினிமா என்றாலே நவரசங்களையும் சேர்த்து ஜனரஞ்சகமாக அல்லது ரஜினி படம் போல மாஸ் காண்பித்தால் மட்டும் போதும் என்ற பார்முலாவை விட்டு விலகி உண்மையைச் சரியாகச் சொல்லி இருக்கும் படம் இந்த ஜெய் பீம்.


சூரியாவின் திரைப்பட வரலாற்றில் மட்டுமல்ல, தமிழ் சினிமா வரலாற்றிலும் இது தடம் பதிக்கும் படமாக விளங்கும்.


நீதி நாயகம் சந்துரு அவர்கள் இருளர் என்னும் பாம்பு பிடிக்கும் ஒரு பழங்குடி இனத்தினர்க்கு சாதித்துக் கொடுத்ததை பார் அறிய (பார் : உலகு) சூரியா ஜோதிகா ஞானவேல் குழுவினர் பறை சாற்றி இருக்கின்றனர்.


உண்மையை நிதர்சனமாக கூட்டல் கழித்தல் ஒட்டல் வெட்டல் எல்லாம் இன்றி மிக அழகாக படமாக்கி அனைவரையும் விழிப்புணர்வூட்டி இருக்கின்றனர். உண்மை எப்போதும் கற்பனையை விட வலுவானது.


காவல் துறை உங்கள் நண்பன், தமிழக காவல் துறை உலகின் ஸ்காட்லாண்ட் யார்ட் போல என்பதெல்லாம் எந்தளவு உண்மை எனச் சொல்லப் பட்டு இருக்கிறது...உண்மை என்பதால் யார் கோபமும் அதை எதிர்க்கவும் வழி இல்லை அதே நேரத்தில் நீதித் துறையின் சந்து பொந்துகளிலும் நீதி நாயகம் சந்துரு எந்தளவு புகுந்து வரவேண்டியிருக்கிறது என்றும் பதிவாகி இருக்கிறது.

நாட்டுக்கும் மக்களுக்கும் காவல் அரணாக இருக்க வேண்டிய காவல் துறையும் இராணுவமும் அதில் இருப்பவர்களும் எவ்வளவு பொறுப்புணர்வோடும், விழிப்புணர்வோடும், கடமை உணர்வோடும் மட்டுமல்ல தூய்மையாகவும்  ஒழுக்கமாக இருக்க வேண்டும் அது அவசியம் அப்போதுதான் அந்த நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை விளையும். அப்படிப்பட்டவர்களையே தேர்வு செய்ய வேண்டிய நிலைக்கு நாடும் அரசும் ஆட்சியும் இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த நாட்டு மக்களின் அன்றாட வாழ்வின் சுமைகள் குறையும். இதை உரத்துச் சொல்ல வேண்டிய நிலை...


மணிகண்டன் ராசாக்கண்ணுவாகவும், லிமோஜோஸ்(லிஜோ மோல் ஜோஸ்) செங்கேணியாகவும், சூரியா சந்துருவாகவும் பிரகாஷ்ராஜ் விசாரணை செய்யும் ஐ.ஜியாகவும் வாழ்ந்து காட்டி இருக்கின்றனர். அத்துடன் அந்த காவல்துறை வேடம் ஏற்றிருப்பவர்களும் ...


சுமார் பத்தாண்டு காலம் அடியவனாகிய நானும் மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியினர்க்காகவும் பணிச் சேவை ஆற்றியவன் என்ற முறையில்  இந்தப் படத்தைப் பற்றி பதிவு செய்வது எனது கடமையாகிறது.


அப்போது 1995 எனச் சொல்கிறது இந்தப் பதிவு. ஆனால் அதற்கும் முன்பே நான் கல்ராயன் மலைப் பகுதிகளில்

தீர்த்தன் என்ற முடவன் கோவில் சார்ந்தவரின் அரை பவுன் மோதிரத்தை ஏன் காய்ச்சவில்லை கள்ளச் சாராயம் , நீ காய்ச்சினாலும் காய்ச்சாவிட்டாலும் எனக்கு சேர வேண்டிய மாமூல் வந்து விட வேண்டும் என காசில்லாவிட்டாலும் பரவாயில்லை என கைவிரலில் இருந்த மோதிரத்தை பிடுங்கிச் சென்ற தங்க மோதிரத்தை காவலரிடமிருந்து மீட்டுத் தந்தது


சாராயம் காய்ச்சுகிறார் அவர் கிடைக்கவில்லை என ஒருவருடைய  மனைவியை குன்னூர் என்ற ஊரில் அடித்து அடைத்து வைத்துக் கொண்டு கயிற்றுக் கட்டிலில் அமர்ந்த படி சாராயத்தைக் குடித்துக் கொண்டிருந்த ஒரு தலைமைக் காவலர் இரு காவலர்கள், அவர்களுக்கு வழி காட்ட வந்த இரு ஆத்தூர் செல்லியம்பாளையத்து இளைஞர்கள் குழு எங்களிடம் பாடம் கற்றுச் சென்றது... இது போன்று இன்னும் சில காவல்துறை வெர்சஸ் மலைவாழ் மக்கள், பழங்குடியினர் வாழ்வின் பதிவுகள் என்னுள்ளும் இருந்து அலைபாய்ந்ததால்


அந்தப் படத்தை என்னால் அழாமல் அழுகையை நிறுத்த முயன்றும் முடியாமல் மட்டுமே பார்க்க முடிந்தது... இயல்பான நிஜமான சம்பவங்களை இப்படி திரைவடிவுக்கு கொண்டு வரும்போது மிகுந்த கவனம் பெறுகின்றது மிகுந்த கவனம் கொண்டும் செய்திருக்கிறார்கள்.


சூரியா, ஜோதிகா, சிவகுமார் குடும்பம் மக்கள் பிரச்சனையின் மிக அருகாமைக்கு இடைவெளியை குறைத்து வந்து கொண்டிருக்கிறது என்பதன் அடையாளமே இந்த ஒரு அரிய தமிழ்ப் படம்...இது பல மொழிகளிலும் வெளியிடப்படுவதை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு ஹெச் ராசா அணுகி அதற்கு ட்வீட் செய்திருக்கிறார் என்ற செய்தியும் இருக்கிறது.



திரைப்படம் 2 நவம்பரில் வெளி வந்துள்ளது, நேற்று 3 அன்றே பார்க்க வாய்த்தது...தயவு செய்து அனைவரும் பார்க்கவும் அரிய அற்புதமான படம்...வழக்கமாக சுவை சேர்ப்பதற்காக மிகவும் கீழே சோகத்துக்காக நாயக நாயகியர்க்கான சம்பவங்களைக் கோர்த்து அதன் பின் கொடூரமாக பழி வாங்குவது போன்ற நியாயம் சொல்லும் படமாக இல்லாமல் மிக நேர்த்தியாக தேவையானவற்றை மட்டும் சொல்லி நெஞ்சை கசக்கிப் பிழிந்து யதார்த்தம் என்றால் என்ன என உணரவைத்திருக்கிறார்கள்...


முதல்வர் ஸ்டாலின் போன்றோரும் இன்னபிற பிரபலங்களும் வாழ்த்தி பாராட்டி இருக்கின்றனர். எனது பதிவும் இதில் சேர்கிறது ஒரு கரம் குவிதலுடன்...

KEEP IT UP SURIYA...80+ /100

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை



பி.கு: நானும் சட்டம் பயின்றிருந்தால் சூரியா வேடம் போல, சந்துரு போல ஒரு வழக்கறிஞராக இருந்திருக்கலாம் என அவா கொள்ளும் படமாக இருக்கிறது ஆனாலும் சட்டம் பயிலாமலே அவர்களுக்காக நான் உழைத்திருக்கிறேன் என ஒரு பெருமிதமும் நிம்மதியும் சாந்தியும் மகிழ்வும் இப்போதும் எனக்கு இருக்கிறது.

Saturday, October 23, 2021

தமிழக அரசை பாராட்டுகிறோம்: கவிஞர் தணிகை

 













 thanks to (News Sharing by) Divya Darsan

கடந்த 20.10.2021 அன்று தினத் தந்தி 9 ஆம் பக்கத்தில் நான் சரியாகப் பார்க்காமல் விட்டு விட்ட ஒரு செய்தியை எனது மூத்த சகோதரியின் பேரன்  இவர் கல்லூரி மாணவர்...எனக்கு வாட்ஸ் ஆப் தகவல் மூலம் பகிர்ந்திருந்தார். அது எனக்கு இந்த பதிவு ஏற்படக் காரணமாக இருக்கிறது.

கீழ் மட்டத்தில் இருக்கும் படிக்காத பாமரர்களை மட்டுமல்ல மெத்த படித்த சமூகத்தில் பெரும் பொறுப்பில் உள்ளவர்கள்கூட‌ செய்யும் அல்லது செய்து வரும் அல்லது செய்யத் தூண்டும் சமுதாய வழக்கமாக விளங்கும் இலஞ்சம் கொடுப்பது, இலஞ்சம் வாங்குவது போன்ற செயல் பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கும் : வருவாய்த் துறையின் அமைச்சர் அறிவிப்பை சொல்வதாக இருந்தது அந்த செய்தி அறிவிப்பு... அந்த ஈன நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வரும் சுடராக...
 
வருவாய்த் துறை மட்டுமல்ல,
 பத்திரப் பதிவுத் துறை,
 வாகனப் பதிவு மற்றும் போக்குவரத்துத் துறை, 
போக்குவரத்துத் துறை,
 நீதித்துறை,
பள்ளிக் கல்வித் துறை
கல்லூரி மற்றும் மேற்படிப்புத் துறையான உயர்கல்வித் துறை
 இப்படி முக்கியமான துறைகளில் மட்டுமல்ல எல்லாத் துறைகளிலுமே மேலிருந்து கீழ் வரை ஒரு நல்ல மாற்றத்தைக் கொண்டு வர இந்தப் பதிவின் மூலம் நாம் மறுபடியும் பூக்கும் வலைப்பூவின் மூலம் தனிப்பட்ட முறையிலும், தமிழ் நாடு அன்பு வழி அறப்பணி மன்ற இணைத் தலைவர் என்ற முறையிலும் இந்த வேண்டுகோளை வைக்கிறேன்.

இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள  தமிழக அரசு, மேன்மைமிகு முதல்வர் ஸ்டாலின்,தலைமைச் செயலர்  துறை சார்ந்த அமைச்சர் சாத்தூர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் ஆகிய அனைவரையும் பாரட்ட கடமைப்பட்டுள்ளோம்.

இதில் என்ன சொல்லப் பட்டிருக்கிறது எனில் : இனி பட்டா தொடர்பான பரிமாற்றங்களுக்கு முகாம் மூலம் தீர்வு காணப்படும் என்றும் குறிப்பிட்ட காலத்தில் செய்து முடிக்க வேண்டும் என்றும் குறிப்பாக காலம் தாழ்த்தக் கூடாது என்றும் இதை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் வலுவாக இலஞ்ச ஒழிப்புக்கு ஆதரவாக வடிவமைத்திருக்கிறார்கள்...

சத்துணவு நேராக பள்ளி மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும் எனச் செயல்பட்டது போல...இலஞ்ச இலாவண்யங்கள் தடைப் படுத்தும் முகமாக...

என்னதான் இருந்தாலும் இந்த அரசுப் பணியாளர்கள் அரசின் ஊதியம் வசதி வாய்ப்புகளைப் பெற்றுக் கொண்டு மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பெரும் பணத்தை இலஞ்சமாகப் பெறாமல் இதுவரை செயல் பட்டதாக பெரும்பாலும் இல்லை...அதற்கு விழுந்திருக்கிறது இந்த சம்மட்டி அடி...

அது மட்டுமல்ல இது போன்ற நடவடிக்கைகளில் கட்சி சார்ந்த கட்சி வேறுபாடின்றி முன்னிலையாளர்களில் சிலர் அறியாத மக்களை பெரும்பாலும் ஏமாற்றி இடைத்தரகர்களாக மாறி இவர்களும் அரசு அலுவலர்களும் பாரதி தாசன் வரிகளில் சொல்லப் போனால் பொறுக்கித் தின்றுவந்தார்கள்... பொறுக்கித் தின்றுவருகிறார்கள் அதற்கு விழுந்திருக்கிறது இந்த அறிவிப்பு அடியாக... 
எங்களுக்கு விரைவாக பணி முடிய வேண்டும் என்பதற்காக கொடுத்தோம், வாங்கிக் கொண்டு செய்து கொடுக்கிறோம் என்ற நொண்டிச் சாக்கு போக்கு எல்லாம் வெட்டி எறியப் பட வேண்டியவை..
.அதில் எல்லாம் ஒரு ஒழுங்கு முறை ஏற்படுத்தப் படல் வேண்டும் எந்த வித சமரசமும் இருக்கக் கூடாது முதலில் வருவார்க்கு முதலில் என்ற ஒழுங்கு முறையில் வரிசையாக பணி முடிக்கப் பட வேண்டும். தகுதி உள்ளார்க்கு விதிகளைக் கடைப்பிடிப்பார்க்கு பணிகள் நிறைவடைய அரசும் அரசுப் பணியாளர்களும் உழைத்தே ஆக வேண்டும்...அதற்குத் தான் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். அதற்குத்தான் பெரும் ஊதியத்தை அரசு தருகிறது. எனவே...

இது போன்ற வேர்ப்புழு நடவடிக்கையால் சில தினங்களுக்கும் முன்பு கூட ஒரு நபர் ஒரு கிராம நிர்வாக அலுவலரையும் மற்ற ஒருவரையும் குறிப்பிட்டு எழுதி வைத்து விட்டே எனக்கு பட்டா கொடுக்க இலஞ்சம் கேட்கிறார்கள் எனத் தற்கொலை செய்து கொண்டதும் செய்தியாக வந்திருந்தது நினைவு கொள்ள வேண்டி இருக்கிறது

கோழி முதலில் வந்திருக்கலாம் முட்டையும் வந்திருக்கலாம் ஆனால் இலஞ்சத்தை எந்த வடிவத்தில் இருந்தாலும் அதை தடுத்து விட்டாலே அரசின் பெரும்பயன்கள் சுலபமான வழியில் மக்களைச் சென்றடைந்து விடும் என்பதை மறுப்பதிற்கில்லை...

கொடுக்கிறார்கள் அதனால் வாங்குகிறோம், வாங்குகிறார்கள் அதனால் கொடுக்க வேண்டியதாகிறது என்ற சமரசப் போக்கும் சமாதானப் போக்கும் அரசின் நிலையை அல்ல மக்களின் பொறுப்பற்ற போக்கையே காட்டுகிறது.

எனவே இது போன்ற அரசின் நடவடிக்கைக்கு தலை வணங்கி வரவேற்கிறோம் இதய பூர்வமாகப் பாராட்டுகிறோம்.

இவண்

கவிஞர் தணிகை
இணைத் தலைவர்
தமிழ் நாடு அன்பு வழி அறப்பணி மன்றம்

மறுபடியும் பூக்கும் வரை.

பி.கு: எல்லாப் பொருட்களும் சாதாரண மக்கள் எட்ட முடியாத உயர விலையில் சென்று கொண்டே இருக்கின்றன இதையும் தடுக்க மத்திய மாநில அரசு செயல்பட்டாக வேண்டும் 1. எரிபொருள் சமையல் எரிவாயு, 2.வாகன எரிபொருள்,3. கம்பி, சிமென்ட்,மணல் போன்ற கட்டுமானப் பொருட்கள்,3. காய்கறிகள் போன்ற அத்தியாவசிய அன்றாடம் தேவைப்படும் உணவுப் பொருட்கள் இன்ன பிற...



Sunday, October 10, 2021

அந்த இளைஞர்: கவிஞர் தணிகை

 அந்த இளைஞர்: கவிஞர் தணிகை



அவர் ஒரு மருத்துவராக பயிற்சியில் இருப்பவர், இந்திய ஆட்சியர் பணியில் தேர்வு பெறுவேன் என்றும் கூறினார். அவர் கொஞ்சம் தாறுமாறு என்ற கருத்து இருக்கிறது. ஆனால் அவருடன் சுமார் 20 கி.மீ காரில் பயணம் வர நேர்ந்தது. சற்று பயமாகவே இருந்தது அவரது காரை இயக்கிய முறையில்.தப்பித்தது தம்பிரான் புண்ணியம் என்பார் நான் வீடு வந்து சேர்ந்தது நான் செய்த புண்ணியம்தான்.


கார் கியர்களை எல்லாம் ஹேக் செய்து விடுகிறார்கள். கியர் சரியாக விழவில்லை, பாருங்கள் அதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றார். மேலும் இரு சக்கர வாகனத்தார் செல்லும் போது அவர்களை பயமுறுத்தியே சென்றார். அவரது ஓட்டும் தன்மை எனக்கு சாதாரணமாக சாதகமாகத் தெரியவில்லை.


அவர் பேருந்து பயணத்தை எல்லாம் செய்யாமல் சுமார் 70 கி.மீ தொலைவு இரு சக்கர வாகனத்தில் கல்லூரி வருபவர். அவர்கள் வீட்டில் அவருடைய பெற்றோர் அடிக்கடி அவர் பற்றி (தினமும் கேட்டால் பொறுப்பான பதில் கிடைக்குமோ என்ற அச்சத்தில் அவ்வப்போது கேட்டு விசாரிப்பார்கள்)...


அன்று அவரது தாய் பைக் ரிப்பேர் என காரை எடுத்து வந்திருக்கிறார் சற்று பாருங்கள் சார் என்றார் நான் அவரை அவர் தற்போது இருக்கும் துறைக்குச் சென்று பார்த்த போது சுமார் 7.30 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டவர் 9 மணி அளவில் வந்து சேர்ந்ததாகக் கூறினார். அவர் வரவேண்டிய நேரம் 8.30 மணிக்கு துறைக்குள் பணியில் இருக்க வேண்டும் என்பது வேறு.


அவர் என்னுடன் பயணம் செய்யும் போது நாட்டு நடப்பு , மஹாபாரதம் ஆகியவை முக்கியத் தலைப்புகளாக பேசப்பட்டன. குதிரை ஓட்டியும் குதிரை ஓட்டியும் தான் கடைசியாக மோதிக் கொண்டார்கள் என்றார் ஆம் கண்ணன் அர்ச்சுனனின் தேர் ஓட்டிதான் தேர் அல்லது ரதத்துக்கும் குதிரைகள் தாம் இழுக்க வேண்டும் கர்ணன் கூட ஒரு தேரோட்டி மகனாக வளர்ந்தவன் தானே...அவர் சொல்லியது சரிதான்  என வீட்டிற்கு வந்த பின் நினைத்துக் கொண்டேன்.


அவருடைய பெரியப்பா ஒரு முக்கிய அரசு அலுவலராக இருந்தவர், இலஞ்ச ஊழலில் சிக்கி கடைசியில் ஓய்வூதியம் இன்றி போனவர் என்றும் ஆனால் அவர் மிகவும் விரைவாக சிறப்பாக ஒரு கோவில் கட்டி விட்டார் என்றும் அதை விட என்ன வேண்டும் என்றார்.


 அரசு என்பதெல்லாம் மெதுவாகத்தான் நடக்கும் இவனுங்க சீக்கிரம் அவசரம் என்று இவனுங்களா கொண்டு  போய் பணத்தை இலஞ்சமாகக் கொடுத்து விட்டு அவங்க எல்லாம் வாங்கறாங்க வாங்கறாங்கன்னா ஏன் சார் வாங்க மாட்டாங்க...?அப்படித்தான் பழக்கப் படுத்திட்டானுங்க...அப்புறம் கொடுத்தாதான் செய்வேன் என்கிற நிலைமையும் வந்து விட்டது... அப்படித்தான் என் பெரிய அப்பா வாழ்க்கையும் ஆகிவிட்டது 


இந்த பைக் ஓட்டறவனுங்களைப் பாருங்க ஒருத்தனுக்கும் ஒழுங்கா ஓட்டத் தெரியாது ஆனால் இலஞ்சம் கொடுத்து பைக் ஓட்ட லைசன்ஸ் வாங்கிடாறானுங்க...முறுக்கத் தெரிந்தா பைக் ஓட்டத் தெரியும்னு அர்த்தமா எங்க எப்ப எப்படி முறுக்கணும்னு தெரிய வேண்டுமே...


(அப்படிப் பார்க்கும் போது இவனுங்க  எல்லாம் இலஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் குற்றம் என இந்திய தண்டனைச் சட்டம் சொல்வதால் மக்களில் பெரும்பாலானவர் உள்ளே இருக்க வேண்டியவரே என்பது சரியானது தானே...)


பாருங்க சார் ஹார்ன் அடிச்சாக் கூட ஒதுங்க மாட்டேங்கறாங்க ...இவனுங்களை எல்லாம் அடிச்சுத் தூக்கனும் சார் அப்புறம் நாம இல்ல மாட்டனும் என்ற எனது பதிலுக்கு மாட்டலாம் சார் அதல என்ன தப்பு...என்னை எவனுமே ஒன்னும் செய்ய முடியாது சார் நான் கண்டு பிடிச்சுக் கொடுத்த வாழ்க்கை சார் இது... இவனுங்க வாழ்க்கை எல்லாம்  என்ன பெரிய...எங்கிட்ட எல்லாம் தப்பு செய்றவன் தப்பிக்கவே முடியாது, நல்லவங்களுக்கு ஏதாவது நல்லதை நானும் செய்திருவேன்...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை








Sunday, October 3, 2021

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது: கவிஞர் தணிகை.

 


நேற்று நடந்த காணொளிக் காட்சியின் வாயிலாக தமிழ்நாடு அன்பு வழி அறப்பணி மன்றத்துக்காக இடம் பெற்ற 9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக  எனது உரையின் சில முக்கிய அம்சங்கள்:

அக்டோபர் 2

 

எல்லோரும் இன்புற்றிருக்க ....சேவை வழி இதயம் தொடு.

 

ஐன்ஸ்டீன் நாக்கு

கை தட்டல்

காதை அசைத்தல்,இமையசைக்காமை , முடி வண்ணம்

 

வாயு தூசி விண்மீன் பூமி, நீர், தேங்கல் உயிர்...பாசி

புல்லாகி,பூடாகி, பறவையாய், மிருகமாய், பாம்பாய், மனிதராய்...

ஐங்கரன்,சாணிப் பிள்ளையார்...ஐம்பெரும் பூதங்கள் குறீயீடாய்...

 

எத்தனை வாசனை திரவியங்களாலும் போக்க முடியா உடல் நாற்றம்

அழுக்கு, மலம், மூத்திரம், குடல், நிண நீர்,பீளை,வியர்வை...

உடல் வளர்த்தோரே உயிர் வளர்த்தாரே...

 

தலைப்பு பல...காந்தி 151,காந்தியம் ஒரு இயற்கை தத்துவம்,காந்தியம் 21 ஆம் நூற்றான்டில்

                காந்தியம் சொல் அல்ல செயல்,காந்தியக் கல்வி...கரு ஒன்றுகடல்களின் பெயர்கள் வேறு வேறு நீர் ஒன்றே

 

பிற தத்துவங்களில் பிற உயிர்களை அழிக்கும் முறை ஏற்கப் பட்டிருக்கிறது

காந்தியத்தின் அஹிம்சை வழியில் கொள்கைக்காகநின்று இன்னுயிரையும் தியாகம் செய்வதன்றி எந்த உயிர்க்கும்  எண்ணம் சொல் செயல்களால் தீங்கு செய்யாமல் இருப்பது...

சிந்தனையின் சிறந்த அழகு (செயலில்).செயலே

உலகின் துப்பாக்கி குண்டுகளால் காந்தியத்தை ஒழிக்க முடியவில்லை

உலகின் வல்லரசு பீரங்கி குண்டுகளால் காந்தியத்தை அழிக்க முடியவில்லை

உலகின் நாடுகளின் எல்லா நல்ல தலைவர்களாலும் அங்கீகரிக்கப் பட்டவர் காந்தி

 


காந்தியம் தன்னிலிருந்து விழைவது: இஃப்  யூ வான்ட் டு சேஞ்ச் தி வோர்ல்ட் யூ மஸ்ட் சேஞ்ச்(IF YOU WANT TO CHANGE THE WORLD YOU MUST CHANGE)

கலாம் எனக்கு எழுதிய கடிதத்தில் நல்ல குடும்பங்கள் பெருகப் பெருக நாடு வளம் பெறும் என்றார்

எங்களது அன்புச் சகோதரர் சிற்பி.கொ.வேலாயுதம் அவர்கள்: தமிழக இலட்சியக் குடும்பங்கள் என்றார்நவ இந்திய நிர்மாணிகள் இயக்கம், காந்திய வழியில் ஊருக்குப் பத்து பேர் இயக்கம், தமிழக இலட்சியக் குடும்பங்கள், இப்போது தமிழ் நாடு அன்பு வழி அறப்பணி (மா)மன்றம

 


கலாமின் தங்க முக்கோணம்.

தனி மனிதம், குடும்பம்,வீதி, ஊர், மாவட்டம் , மாநிலம், நாடு , உலகு

என தனி மனித ஆற்றல் விரிகிறது சுடராக..மகாத்மாவின் சுடர் என்றும் அணையா ஜோதிச் சூரியனாய்...

பாரதி நினைவு நூறாண்டு ஆன பின்...

காந்திய சிந்தனை 150 ஆண்டு ஆன பின்...

 


எல்லாப் பக்கங்களிலும் கூர்மையாயான ஆய்தமான சத்யாக்கிரஹம் கண்டவர் காந்தி

காந்தி எனும் மனிதர் ஒரு வரையறைக்குள் அடங்காத மகாத்மியம்

 

வி.நந்தா: ஃபெயித் ஃபெயித்...Faith Faith in ourselves Faith Faith in God this is the secret of   Greatness

காந்தியம் ...அம்மாவுக்கு கொடுத்த சத்தியம் முதல் ஆரம்பம்...

மது, மாமிசம், விலை மாதர்



வி.நந்தா ,காந்தி போன்றோர் கடவுளை வாழும் போதே காண உச்சத்தில் முயன்றவர்கள்

அதன் வழிப்போக்கில் நிகழ்ந்தவையே யாவும் என அவர்களே தங்கள் வாழ்க்கையைப் பற்றி விமர்சனம் கொள்கிறார்கள்.

எழுதியது ஏராளம், படித்தது ஏராளம், படைத்தது ஏராளம், உழைத்தது ஏராளம்...

நெஞ்செலும்பெலாம் தெரியும் மெலிந்த உருவம், மதுரையில் மாற்றிக் கொண்டஅரையாடை,தென் ஆப்பிரிக்காவில் நடுச் சாலையில் இரத்தம் வழிந்தோட அடிக்கப் பட்ட போது உதிர்ந்து போன பற்களால் ஏற்பட்ட பொக்கை வாய், இது தான் காந்தியின் உருவம் ஆனால் இவர் வாழ்க்கைப் பயணம் ஓட்டமும் நடையுமாக பலரால் ஈடு கொடுக்க முடியாத வேகத்துடன்...

இவரது சொல் செயல் கவர்ந்த அளவு இந்த உலக வரலாற்றில் வேறு எந்த தலைவரது சொல்லும் செயலும் மாபெரும் எண்ணிக்கை யில் மக்களைக் கவர்ந்ததாகசரித்திரம் இல்லை . இவர் வேறு எவராலும் ஏறமுடியாத செயல் அழகின் உச்சம். மனித சிகரம்.

9,10,11,12 வாழ்வின் மிக முக்கியமான காலம்...கல்வி கரையில...

இறப்பு, பெற்றோர்... இருப்பு

 


காமப் பூக்கள் பூக்கும் பருவம், அரும்பும் மீசை,பெரிய மனுஷி...

காமப் பூக்கள் பூக்கும் பருவம்,அரும்பும் மீசை,பெரிய மனுஷி....

காந்தி தனது 13 வயதில் 14 வயது கஸ்தூரிபாவை மணந்தவர்

தாசி வீடு 2 முறை, பீடி சிகரெட், பாட்டி காப்பு, தீய நட்பு...

ஆனால் நேர்மை பள்ளி ஆய்வு... ஹரிசந்திரா, சிரவணன் கதை...

 

தாய் தந்தைக்கு 4 ஆம் மனைவி இவர் 4 ஆம் பிறப்பு

முடி திருத்தம், துணி சலவை,சமையல், அச்சகம்,பண்ணை,ஆஸ்ரமம், பத்திரிகைகள்,போராட்டங்கள்

என்னதான் செய்யவில்லை என்றுதான் கேட்க வேண்டும்...

அந்நிய நாடு கடல் கடந்து போவது ...காந்தி, வி.நந்தா விலக்கு

ரயிலில் இருந்து தூக்கி வெளியே வீசப்பட்டது ஆரம்பம்...சுயத்திலிருந்து ஆரம்பம்

 

தூசி, குழந்தை, கூசுவது மகாத்மா என்ற அழைப்பு

காமத்தை பேருணர்வை, பெருங்கடலை நீந்தக் கற்பார் சாதனை படைப்பார்..

 

மனிதரை உருவாக்குவதே கல்வி என்றவர்... வினோபாவின் கல்விச் சிந்தனைகள்

உயிர்களை உருவாக்குவதே காந்தியக் கல்வி எனலாம்

 

பாவத் தளைகளிலிருந்து விடுபடுவதுதான் விடுதலை

ஒழுக்கமற்ற அறிவு அபாயகரமானது

உலகின் எல்லா பாவங்களுக்கும் அடிப்படை மதுவே

ஆன்ட்ராய்ட் போனும்

நுகர் பொருள் கலாச்சாரம் சைத்தான் கலாச்சாரம்

கிராமங்களே இந்தியாவின் இதயம் என்றவர்...

1934 காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறியவர்...குறிப்பு: தினத்தந்தி...காந்திதான் காங்கிரஸை தோற்றுவித்தவர் என்ற  செய்தி...கலாம் பேரில் போலிச் செய்திகள்...இன்ன பிற

 

ஆட்சி மாற்றம் அரசியல் மாற்றம் போலவே கல்வி மாற்றத்தையும் எண்ணினார்

எழுதிய பக்கங்கள் ஒரு இலட்சம் பக்கங்கள் அருகே வந்து விட்டது திரட்டில்

மகாத்மாவின் முழுப் பெயர்: மோகன் தாஸ் கரம் சந்த் காந்தி மலிகண்டா

80க்கும் மேற்பட்ட நாடுகளில் 250 தபால் தலைகளுக்கும் மேல் இவருக்காக வெளியிடப்பட்டுள்ளது

வேறு யாருக்கும் கிடைக்காத சிறப்பு.

இவருக்கு நோபெல் பரிசு இல்லை

நோபெல் பரிசு பெற்றார் எல்லாம் இவரை பின் தொடர்ந்தவர்கள்...இவரை சந்திக்க விரும்பியவர்கள்...

இந்திய நாட்டின் தந்தை...சுடப்பட்ட பின்னும் வாழும் ஆன்மா...

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்.



மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


Saturday, October 2, 2021

மகாத்மா காந்தி பற்றி பேசுகிறேன்: கவிஞர் தணிகை

 மகாத்மா காந்தி பற்றி பேசுகிறேன்: கவிஞர் தணிகை



மகாத்மா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி பிறந்த நாளும் கர்மவீரர் காமராசரின் நினைவு நாளுமான இன்று:


மகாத்மா காந்தியின் 152 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று அவரைப் பற்றி பேசும் வாய்ப்பை தமிழ் நாடு அன்பு வழி அறப்பணி(மா)மன்றம் வழங்கி உள்ளது.


இன்று சுமார் இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் இந்நிகழ்வு காணொளிக் காட்சி வழியே நடைபெறுகிறது. இணைப்பை வழங்கி உள்ளனர்.


கடந்த 5 ஆண்டுக்கும் மேலாக ஆண்டுக்கு நூற்றுக்கு மேலான  பல் மருத்துவர்களை  உருவாக்கித் தரும் கல்லூரியில் சுமார் 600 மாணவர்கள் மற்றும் 200க்கும் மேலான ஆசிரிய அலுவலர்களுடன் எனது பணியும் அர்ப்பணிப்பாய் மாறி உள்ள காரணத்தால் நிறைய எழுத வேண்டும், பேச வேண்டும் என்ற செயல்பாடுகளை மேற்கொள்வதில் தடைகள் ஏற்பட்டுள்ளன. அதுவும் ஆக்க பூர்வமான பணி என்பதால் நிறைவே.  இன்னும் நிறைய பேரைப் பற்றி எழுத வேண்டிய பேச வேண்டிய கடமைகள் எல்லாம் மனமெனும் சுரங்கத்துள் ஊறியபடியே கிடக்கின்றன. என்றுதான் அவை வெளிச்சம் பெறுமோ?


இந்தக் காலக் கட்டத்தில் 9,10,11,12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் சுமார் 400 பேர் அடங்கிய 500க்கும் மேலானவர்களுக்காக இன்று காந்தியம் பற்றி பேசுகிறேன்.


வாய்ப்பு இருந்தால் வாருங்கள் சேர்ந்து கொள்வோம், சேர்ந்து செல்வோம்.



மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

Sunday, September 12, 2021

பாரதியின் நூற்றாண்டு நினைவு நாள்: கவிஞர் தணிகை

 பாரதியின் நூற்றாண்டு நினைவு நாள்: கவிஞர் தணிகை



நாகப் பாம்பு செய்தி எனக்கே வியப்பூட்டுவதாக இருந்தது ஆனால் உண்மை பொய் அல்ல‌

மின் கசிவின் காரணமாக மழை நீரில் இறந்ததும்,

துணி காயவைக்கச் சென்ற குடும்பத்தில் இருவர் இறந்ததும்

ஒருவர் தூக்கி விசிறப்பட்டதும் செய்திகள்


மேலும் சாலையில் ஒருவரை அடித்தே கொன்றதும் காணொளிக் காட்சி வடிவிலான ஊடகச் செய்தி


மதம், மொழி, இனம், பேதம் இருக்கும் வரை

எல்லோரும் ஓர் நிறை, எல்லோரும் ஒர் விலை என்பது சாத்தியமில்லை


நீங்கள் யார் ?

மனிதர் என்ற நிலையில்

எல்லா உயிர்க்கும் நன்மை செய்த போதுதான் அது நிறைவுக்கு வரும்

இராமலிங்க வள்ளலாரும் பாரதியும் பார்த்த பார்வை ஞானம்


எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே...தாயுமானவர்



மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

Sunday, August 15, 2021

75 ஆம் ஆண்டு விடுதலை நாள் விழா வாழ்த்துகள்: கவிஞர் தணிகை

 75 ஆம் ஆண்டு விடுதலை நாள் விழா வாழ்த்துகள்: கவிஞர் தணிகை 

THERE IS NO INDEPENDENCE WITH OUT DISCIPLINE: DR.S.RADHAKRISHNAN



தர்மபுரி மோட்டுப்பட்டி கிராமத்தில் பிறந்து 7 நாட்களே ஆன பெண் சிசு பாட்டியால் எருக்கம்பால் கொடுத்து கொல்லப் பட்டு புதைக்கப் பட்டிருக்கிறது... தாய்பெயர் தேன்மொழி. தாய் தேன்மொழிக்குப் பிறந்த 3 வது பெண்குழந்தை அது செய்தி: இந்து தமிழ் திசை, இந்து ...



இராமனாதபுரம் முதுகுளத்தூர் அருகே பொதிகுளம் புகை போதை மது அற்ற கிராமம் . 500 குடும்பங்கள் ஆனந்தமான வாழ்க்கை வாழ்கிறார்கள்...செய்தி



ஒரிஸ்ஸாவில் கடித்த பாம்பை கடித்து கடித்தே கொன்ற விவசாயி உயிருடன் இருக்கிறார். பாம்பின் விஷம் பாதிக்கவில்லை... செய்தி ஒருவேளை விஷமில்லாத அல்லது விஷம் குறைவான பாம்போ?


மது, சாதி, கட்சி, மத ஒருங்கிணைப்பு மனித குல வரலாற்றின் பாவச் சின்னங்கள்..


மாவோ விவசாயம் மேம்பட சிட்டுக்குருவி, வெட்டுக்கிளி, கரப்பான், எலி வேட்டை...

கல்வி மேம்பாடு, விளையாட்டு, விவசாயம், தொழில் சீனா உலகின் முன்னணி நாடாக...


மகாத்மா இலக்கு மட்டுமல்ல பயணம் செய்யும் பாதையும் தூய்மையாக இருக்க வேண்டும் என்கிறார்

தியாகம் மதிப்பின்றி

கணேசன் என்னும் நானறிந்த ஒரு சுதந்திரப் போராட்ட தியாகி நாடு விடுதலையான பின்னும் எந்தவித சுயசலுகைகளையும் உதவித் தொகையையும், நாட்டின் பட்டயத்தையும் ஏற்கவில்லை அவர் போன்ற எண்ணற்ற தியாகிகளுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.


அடடா...இந்த சுதந்திர தினம் ஞாயிற்றுக் கிழமை வார விடுமுறை நாளில் வந்து விட்டதே...மதுக்கடை விடுமுறையில் குடிமகன் வருத்தப் படுவது போல ....



மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


Sunday, July 25, 2021

Meera bai Chonu: Manippur Olympic Champion: thanks BBC: Kavignar Thanigai.

 

மூங்கில் கொண்டு பளு தூக்குதல் பயிற்சி

ஆகஸ்ட் 8, 1994 இல் மணிப்பூரில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்த மீராபாய் குழந்தை பருவத்திலிருந்தே மிகவும் திறமையானவர். சிறப்பு வசதிகள் இல்லாத அவரது கிராமம் தலைநகர் இம்பாலிலிருந்து 200 கி.மீ தூரத்தில் உள்ளது.

மீராபாய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அந்த நாட்களில், மணிப்பூரைச் சேர்ந்த பளுதூக்கும் வீரர் குஞ்சுராணி தேவி நட்சத்திரமாக இருந்து ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் விளையாடச் சென்றார்.

அதே காட்சி சிறிய மீராவின் மனதில் குடியேறியது மற்றும் ஆறு உடன்பிறப்புகளில் இளையவரான மீராபாய் ஒரு பளு தூக்கும் வீரராக மாற முடிவு செய்தார்.

2007 ஆம் ஆண்டில் அவர் பயிற்சி செய்யத் தொடங்கியபோது, முதலில் அவரிடம் இரும்பு பார் இல்லை, எனவே அவர் மூங்கில் கொண்டு பயிற்சி செய்தார்.


பட மூலாதாரம்,VINCENZO PINTO/AFP VIA GETTY IMAGES

படக்குறிப்பு,

வெள்ளிப் புன்னகை...

கிராமத்தில் பயிற்சி மையம் இல்லையென்பதால், அவர் பயிற்சிக்காக 50-60 கி.மீ தூரம் செல்வார். உணவில் தினமும் பால் மற்றும் கோழி தேவைப்பட்டது, ஆனால் சாதாரண குடும்பத்தின் பிறந்த மீராவுக்கு அது சாத்தியமில்லை.

11 வயதில் அவர் 15 வயதுக்குட்பட்ட சாம்பியனாகவும், 17 வயதில் ஜூனியர் சாம்பியனாகவும் ஆனார். குஞ்சுராணியைப் பார்த்த மீராவுக்கு சாம்பியன் ஆக வேண்டும் என்ற கனவு இருந்தது. 2016 ஆம் ஆண்டில் 192 கிலோ தூக்கி குஞ்சுராணியின் தேசிய சாதனையை முறியடித்தார்.

உலக சாம்பியன்ஷிப்பைத் தவிர, கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகளிலும் மீராபாய் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

பளுதூக்குதல் தவிர, மீராவுக்கு நடனமாடுவது பிடிக்கும். பிபிசிக்கு அளித்த பேட்டியில், "நான் சில நேரங்களில் பயிற்சிக்குப்பிறகு என் அறையை மூடிவிட்டு நடனமாடுவேன். எனக்கு ஹிந்தி நடிகர் சல்மான் கான் மிகவும் பிடிக்கும்," என்றார்.

Hellow We too start our Radio> Good Article thanks :Indu Tamil Disai: Kavignar Thanigai

 

நீங்களும் வானொலி தொடங்கலாம்!

podcasting

தங்க.ஜெய்சக்திவேல்

கரோனா காலகட்டம் எவ்வளவோ நெருக்கடிகளைக் கொண்டுவந்திருந்தாலும், இந்தக் காலகட்டத்தைப் பயன்படுத்தி இன்று பலரும் பல்வேறு முன்முயற்சிகளை எடுத்துவருகின்றனர். அதுவும் வீட்டில் இருக்கும் குழந்தைகள் புதிது புதிதாகப் பலவற்றையும் கற்றுவருகின்றனர். இந்த வரிசையில் சேர்ந்திருப்பதுதான் ‘பாட்காஸ்டிங்’ (Podcasting). இதன் மூலம், பல நாடுகளிலும் இன்று குழந்தைகளும் வானொலி அலைவரிசைகள் தொடங்கி நடத்திவருகிறார்கள். இளைஞர்கள் மத்தியிலும் இது நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, இணையதளம் என்ற வரிசையில் புதிதாக இணைந்திருக்கும் ‘பாட்காஸ்டிங்’, உண்மையில் ஒரு நல்வாய்ப்பு. காரணம், யார் வேண்டுமானாலும் எளிதாகத் தொடங்கக்கூடிய ஊடகம் இது. ‘யூடியூப்’க்குத் தேவைப்படும் அளவுக்கு இன்டெர்நெட் டேட்டாவும் இங்கே விரயமாகாது.

‘பாட்காஸ்டிங்’ என்றால் என்ன?


ஆப்பிள் நிறுவனம் ‘ஐபாட்’ அறிமுகப்படுத்தியபோது அதில் ‘பாட்காஸ்டிங்’கையும் இணைத்து அறிமுகப்படுத்தியது. அதன் பிறகுதான் இந்த வார்த்தை பரவலாகத் தெரியவந்தது. டிரிஸ்டன் லூயிஸ் 2000-ல் இந்தத் தொழில்நுட்பத்தை எழுத்து வடிவத்தில் அறிமுகப்படுத்தினார். அதற்குச் செயல் வடிவம் கொடுத்தவர் டேவ் வின்னர். ‘பிபிசி’யின் செய்தியாளரும், ‘தி கார்டியன்’ இதழின் பத்தி எழுத்தாளருமான பென் ஹாமெர்சுலி இதைப் பற்றி 2004-ல் ஒரு கட்டுரை எழுதினார். அதில் ‘பாட்காஸ்டிங்’ எனும் வார்த்தையை முதன்முறையாகப் பயன்படுத்தினார். ‘ப்ராட்காஸ்டிங்’ என்பது அனைத்து வகை ஒலி/ஒளிபரப்புகளையும் குறிக்கும். ‘ஜபாட்’ இதை அறிமுகப்படுத்திய பின் இதற்கு ‘பாட்காஸ்டிங்’ என்ற பெயர் வந்தது.

வழக்கமான வானொலியிலிருந்து இது எப்படி வேறுபடுகிறது?

‘பாட்காஸ்டிங்’ ஒலிபரப்புக்கும் வானொலி ஒலிபரப்புக்கும் மிக முக்கிய வேறுபாடே, நமக்குத் தேவையான நேரத்தில் தேவையான நிகழ்ச்சிகளைக் கேட்க முடியும் என்பதுதான். வானொலி நிகழ்ச்சிகளை, ஒலிபரப்பும்போது மட்டுமே கேட்க முடியும். தவறும் பட்சத்தில் அந்த நிகழ்ச்சிகளைக் கேட்பதற்கு வாய்ப்பே இல்லை. ‘பாட்காஸ்டிங்’ அப்படியல்ல; தேவையான வானொலியைப் பின்தொடரும் பட்சத்தில், உங்கள் செல்பேசிக்கே அந்த ஒலிபரப்பின் தகவல்கள் வந்துவிடும். தேவையான நேரத்தில் அந்த ஒலிபரப்பைக் கேட்டுக்கொள்ளலாம்.

யாரெல்லாம் ‘பாட்காஸ்டிங்’ தொடங்கலாம்?

தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் மட்டுமே ‘பாட்காஸ்டிங்’கைத் தொடங்க முடியும் என்றில்லை. யாரெல்லாம் ஃபேஸ்புக், வலைப்பூ, வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றைப் பயன்படுத்துகிறார்களோ அவர்களெல்லாம் மிக எளிதாக ‘பாட்காஸ்டிங்’ வானொலியைத் தொடங்க முடியும். வலைப்பூவை எப்படி இலவசமாகத் தொடங்க முடிகிறதோ, அதே போன்று ‘பாட்காஸ்டிங்’கையும் இலவசமாகவே தொடங்க முடியும். தனியாக நாமே ஒரு பக்கத்தை அமைப்பதற்குப் பெரிய சர்வர்கள் தேவைப்படும்; அதனால், முதலில் ஏதேனும் ஒரு ‘பாட்காஸ்டிங்’ வழங்குநர் பக்கத்தை நாடலாம். இதற்குப் பல்வேறு இணையதளங்கள் உதவுகின்றன. மேலும், செயலியை செல்பேசியிலும் பதிவிறக்கிக்கொள்ள முடியும். நம் செல்பேசியிலேயே நிகழ்ச்சிகளை ஒலிப்பதிவு செய்து, அதிலேயே எடிட்செய்யும் வசதியும் உள்ளதால், குழந்தைகள் உட்பட அனைத்துத் தரப்பினரும் இன்று ‘பாட்காஸ்டிங்’ தொடங்குவது மிகவும் எளிதாகியுள்ளது.

எதுவும் கட்டுப்பாடுகள் இருக்கின்றனவா?

இணைய வசதி கொண்ட, ஸ்மார்ட்போன் வைத்துள்ள யார் வேண்டுமானாலும் ‘பாட்காஸ்டிங்’ வானொலியைத் தொடங்க முடியும். இதற்கு யாரிடமும் அனுமதி வாங்கத் தேவையில்லை. இதற்காக ‘ஆங்கர்’ (anchor.fm), ‘ஸ்பாட்டிஃபை’ (open.spotify.com), ‘கூகுள் பாட்காஸ்ட்’ (google.com/podcasts), ‘ஆப்பிள் பாட்காஸ்ட்’ (podcast.apple.com), ‘பிரேக்கர்’ (breaker.audio), ‘காஸ்ட் பாக்ஸ்’ (castbox.fm), ‘ஓவர் காஸ்ட்’ (overcast.fm), ‘பாக்கெட் காஸ்ட்’ (pca.st), ‘ரேடியோ பப்ளிக்’ (radiopublic.com) போன்ற இணையதளங்கள் இலவசமாகவே இடம் தருகின்றன. ஆனால், திரைப்படப் பாடல்களை ஒலிபரப்ப வேண்டுமாயின் முறையான அனுமதி பெற வேண்டும். மேலும், ஒலிபரப்புக் கொள்கைகளுக்கு உட்பட்டே ‘பாட்காஸ்டிங்’ ஒலிபரப்பும் இருக்க வேண்டும். ஒலிபரப்புக் கொள்கைகளை ஒன்றிய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் இணையதளத்துக்குச் (mib.gov.in/broadcasting/air-broadcast-code) சென்று பார்த்துக்கொள்ளலாம்.

பணம் சம்பாதிக்க முடியுமா?

முடியும். உதாரணமாக, ஆங்கர் (Anchor) செயலியை எடுத்துக்கொள்வோம். இதன் உதவியுடன் உங்களின் ‘பாட்காஸ்டை’ இலவசமாக உருவாக்குவதோடு மட்டுமல்லாது, அதைப் பல்வேறு செயலிகளின் ஊடாக விநியோகிக்கவும் முடியும். இதன் மூலம், ‘யூடியூப்’பைப் போல ‘பாட்காஸ்டிங்’ வழியாகவும் பணம் சம்பாதிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

சில உதாரண வானொலிகள்

இந்த கரோனா காலத்தில் நான் தொடங்கிய வானொலி ‘தமிழ் சிறுகதைகள்’ (https://anchor.fm/tamilsirukathaikal). இந்த வானொலியில் இதுவரை தமிழின் மிக முக்கியமான 100-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் கதைகள் பதிவேற்றப்பட்டுள்ளன. இந்த கரோனா காலத்தில் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஒலிபரப்பாகிவரும் மற்றுமிரு ‘பாட்காஸ்டிங்’ வானொலிகள் ‘பொன்னியின் செல்வன்’ (http://anchor.fm/uma-chari), ‘மழலையர் உலகம்’ (http://anchor.fm/aysha-thameem5). இந்த இரண்டு வானொலிகளும் தொழில்நுட்பம் தெரிந்த புலிகளால் தொடங்கப்பட்டதல்ல; ஆர்வம் கொண்டவர்களால் தொடங்கப்பட்டதாகும். ‘பொன்னியின் செல்வன்’ உமா சாரியால் திருச்சியிலிருந்தும், ‘மழலையர் உலகம்’ கோவையிலிருந்து தஸ்லீமா பர்வீனாலும் ஒலிபரப்பப்பட்டுவருகிறது. கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ என்றாலே பலர் அது பெரிய புத்தகம் என்று பயப்படுவார்கள். ஆனால், அதை மிக அழகாகவும் எளிமையான தொனியிலும் வாசித்துள்ளார் உமா சாரி. ‘மழலையர் உலகம்’ வானொலியை, கொஞ்சும் தமிழில் ஒலிபரப்பிவருகிறார் தஸ்லீமா. இவர்களைப் போல உங்கள் பகுதியில், உங்கள் மக்களுக்காக நீங்களும் ஒரு ‘பாட்காஸ்டிங்’ வானொலியைத் தொடங்கலாம்!

- தங்க.ஜெய்சக்திவேல், உதவிப் பேராசிரியர், இதழியல் மற்றும் தொடர்பியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம். தொடர்புக்கு: bbcsakthi@gmail.com