Friday, November 25, 2022

பொய்யா மொழி பொய்த்ததுவோ? கவிஞர் தணிகை

 பொய்யா மொழி பொய்த்ததுவோ? கவிஞர் தணிகை



 மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின்.


உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் 

கல்லார் அறிவிலா தார்


இது போல புலால் மறுத்தல், சூது, கள்ளுண்ணாமை போன்ற குறள்கள் எல்லாம் காலத்தால் பின் தள்ளப் பட்டு விட்டதோ என்ற தற்காலம்...


இது போல முழுத் திருக்குறளையும் அலசிப் பார்த்தால் இன்னும் கூட சில பல‌ குறள்கள் கூட இருக்கலாம்.


பெரும்பாலான மதுப் பிரியர்களோடு நாமும் சேர்ந்து கொள்ள முடியுமா? உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்னும் குறள் படி 100க்கு 99 பேர் புலால் உண்ணுவாராக இருக்கும் போது அப்படியே நாமும் ஆக முடியுமா?


உண்ணுவது செரிமானம் ஆன பிறகு  திரும்ப உண்டால் உடலுக்கு பிணி இல்லை அதற்கு மருந்து தேவையில்லை என்ற குறளை இந்த உலகு பின் தள்ளி விட்டது என்றே சொல்ல முடியும் வண்ணம் எல்லா உணவுமே இரசாயனக் கலவையுடன் இருப்பதுவும், நோய் இல்லா மனிதரோ உயிரோ இந்த உலகில் இருப்பது தற்போதைக்கு இல்லை என்றே சொல்லலாம்...எனவே...


கருத்துகள் வரவேற்கப்படுகின்றன‌


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை




Thursday, November 24, 2022

புரூஸ் லீ மரணம் குறித்த‌ உண்மை 50 ஆண்டுகள் ஆன பின் வெளி வந்துள்ளது: கவிஞர் தணிகை

 

புரூஸ் லீ மரணம் குறித்த‌ உண்மை 50 ஆண்டுகள் ஆன பின் வெளி வந்துள்ளது: கவிஞர் தணிகை

1973ல் மரணம் அடைந்த புரூஸ் லீயின் சாவு குறித்த பல் வேறுபட்ட செய்திகள் அவ்வப்போது வந்த வண்ணம் இருந்தன. அத்தனைக்கும் முற்றுப் புள்ளி வைத்தாற் போல இன்று ஒரு செய்தி வந்து அவருடைய மரணம் இயல்பானதுதான், அவருடைய சிறு நீரக காயம், அதனால் ஏற்பட்ட விளைவு காரணமாக அவருடைய மூளை வீக்கம் சுமார் 175 கிராம்(க‌டுமையான பெருமூளை வீக்கத்தால் 1,400 கிராம் எடை இருக்க வேண்டிய மூளை 1,575 கிராம் எடைக்கு இருந்தது.)

மேலும் அதிக தாக்கம் ஏற்படுத்தும் கஞ்சா, மதுபானப் பழக்கங்கள் அவரிடம் இருந்தன என்றும் புரூஸ் லீ மூளை வீக்கத்தால் ஏற்பட்ட ஹைபோநெட்ரீமியாவால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இறந்த நாளில் கூட அவ‌ருடைய உடலில் கஞ்சா உபயோகத்திற்கான சான்றுகள் இருந்திருக்கின்றன.வயிற்றில் கஞ்சாவின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 

புரூஸ் லீயின் மரணம் எக்வாஜெசிக் மாத்திரைக்கு அதிக உணர்திறன் கொண்டிருந்ததால் ஏற்பட்ட பெருமூளை வீக்கம் தான் காரணம் என்று அதிகாரபூர்வமாகத் தீர்மானிக்கப்பட்டது.சான்றுகள் இருந்திருக்கின்றன. ஆக ஒரு மரணத்திற்கான் உரிய காரணம் வெளி வந்து இருக்கிறது. கடைசி நாளில் அவர் டப்பிங் பணியில் இருந்த போது அவரால் சரியாக நிற்கவும் முடியவில்லை என்றும் அவர் அதிக நீர் குடிக்க வேண்டிய நிலை பற்றி அவரது மனைவி குறிப்பிட்டதாகவும் உள்ளன.

தண்ணீரை அதிகமாகச் சேர்த்துக் கொள்வதற்கு மேற்குறிப்பிட்ட காரணங்கள் போக, “லீயின் மனைவி லிண்டா, அவருடைய அதிக நீர்ச்சத்து கொண்ட உணவுமுறை குறித்தும் கூறியுள்ளார்.

அவர் உயிரிழந்த நாளிலும் போல்லி, அவர் அதிகளவு தண்ணீர் அருந்தியதைப் பற்றி பேசினார்,” என்று குறிப்பிடும் இந்த ஆய்வுக்கட்டுரையில், புரூஸ் லீ மூளை வீக்கத்தால் ஏற்பட்ட ஹைபோநெட்ரீமியாவால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக அரை நூற்றாண்டுக்கும் பின் உண்மை வெளி வந்திருக்கிறது. உண்மை வர பல காலம் தேவைப்படுகிறது.பொய்களும் வதந்திகளும் அரை நொடியில் உலகை வலம் வந்து விடுகின்றன என்பது எவ்வளவு பெரிய உண்மை.

பாரதியிடமும் கஞ்சா பழக்கம் இருந்ததாக சொல்லப் படுகிறது. விவேகானந்தா கூட புகைப் பழக்கத்தில் இருந்ததாக புத்தகங்கள் சொல்கின்றன.

நமது சுபாஷ் சந்திர போஷ் மறைவு பற்றியும் உண்மை என்றாவது ஒரு நாள் வெளிவரும். ஆனால் அது நமது காலத்துக்குள் வருமா என்பதுதான் கேள்விக்குறியே..

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


பி.கு: ஆனால் புரூஸ் லீயின் மகன் பிராண்டன் லீ டம்மி தோட்டாக்களுக்கு பதிலாக திரைப்படத் தயாரிப்பரங்கிலேயே உண்மையான தோட்டாக்கள் போடப் பட்டு சுடப்பட்டு இறந்தது உலகறிந்தது.
thanks:BBC





Tuesday, November 22, 2022

தமிழக அரசே தமிழக அரசே பேருந்து நடத்துனர்களும் மனிதர்கள்தாம்: கவிஞர் தணிகை

 தமிழக அரசே தமிழக அரசே பேருந்து நடத்துனர்களும் மனிதர்கள்தாம்: கவிஞர் தணிகை



மிகவும் சுருக்கமாக:

வழித் தடம் எண்: 37 மேட்டூரிலிருந்து தாரமங்களம் சென்றேன் 21.11.22  மதியம் சுமார் 3 மணி ஓட்டத்தில். பிரச்சனை ஏதுமில்லை. உடனே தாரமங்களத்தில் இருந்து சுமார் 4 மணிக்கு மேட்டூருக்கு எடுத்து விடுகிறார்கள். எனவே என்னால் சில நிமிடங்களில் திரும்ப முடியவில்லை திரும்பி விடலாம் என்று எண்ணிய போதும்.


அன்று அதற்கு முன்பு வரவேண்டிய மதியம் சுமார்.2.50க்கு வரவேண்டிய இலட்சுமி விலாஸ் என்ற தனியார் வண்டி இல்லாததால் அதன் தொடர்ச்சி பெரிதும் எதிரொலித்தது.


மறுபடியும் சுமார் 5.45 அல்லது 6 மணிக்குள் 32 பேருந்து  தாரமங்களத்தில் இருந்து மேட்டூர் திரும்பி வர.

பள்ளிப் பிள்ளைகள் கூட்டம் சுமார் 3 அல்லது 4 பேருந்துகளுக்குள் அடைக்கும் வண்ணம்...எப்படியோ நானும் ஏறி விட்டேன். ஏன் எனில் அதை விட்டால் அடுத்த அந்த தடம் வழியாகப் பேருந்துக்கு சுமார் 7 மணிக்குத் தானாம்.


எனக்கு ஒரு பள்ளிப் பையன் அவனது பள்ளிப் பையை எடுத்துக் கொண்டு எனது வேண்டுகோளுக்கு செவி சாய்த்து இடம் அளித்தான் சன்னலோர இருக்கை அருகே ஒரு பணிக்கு சென்று வந்த பெண். நல்ல வேளை அந்தளவாவது படிக்கும் பிள்ளைகளின் மனதில் ஈரம் இருப்பது பற்றி மெச்சலாம். ஏன் இதைக் குறிப்பிடுகிறேன் எனில் எனது சொந்தப் பிரச்சனைக்கான பதிவு இது இல்லை என்பதை தெளிவு படுத்தவே...


கூட்டம் என்றால் அப்படி ஒரு கூட்டம் எல்லாம் அதிக பட்சம் பெண்பிள்ளைகள் தாம். பையன்கள் கூட்டமும் எண்ணிக்கையும் ஒப்பிட்டால் மிகவும் குறைவுதான்.


மாரிமுத்து என்னும் பையன் எனக்கு இருக்கை அளித்தவன் தாம்...டயர் வெடிக்கப் போவுது, வண்டி கவிழப் போவுது என அபசகுணமாகப் பேசிக் கொண்டிருந்தான்...அங்கிருந்த சில பெண்களும் ஏன் நானும் கூட அப்படி எல்லாம் பேசக் கூடாது என எச்சரித்தபடியே வந்தோம். அதையும் ஒரு பள்ளி பயிலும் சிறு பெண் இரசித்தபடி முகமெல்லாம் பூரிக்க இருந்தாள் அவளுக்கு காதலுக்கு மரியாதை 35 துண்டுகள் என்னும் செய்தி இன்னும் தெரியவில்லை போலும்... சிறு வயது இளம் பருவக் கோளாறு வேறு நிறைய கண்ணில் பட்டது. ஒரு பையன் இன்னொரு பெண்ணை அருகே வந்து நில் என்று கேட்டுக் கொள்ள அந்த பெண்ணும் அதைச் செய்தாள்...


வண்டி ஊர்ந்தது...சாய்ந்தபடியே...சாய்ந்து கொண்டபடி வருகிறது என்றாள் ஒரு பெண்ணும். பாரக்கல்லூர் என்னும் பேருந்து நிறுத்தம் தாரமங்களத்திலிருந்து கூப்பிடு தொலைவு அல்லது ஓரு கிலோமீட்டரும் இருக்காது என்றே கருதுகிறேன். அதற்கும் பேருந்து என பள்ளிப் பிள்ளைகள் காத்திருந்து ஏறி வருகிறார்கள். ஏதாவது ஆபத்து நேர்ந்தால் என்ன ஆவது எதுவும் எவர் கையிலும் இல்லையே....


நான் கல்லூரி பணிக்கு செல்லும் போது கவனித்திருக்கிறேன் காவேரி கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்து இடம் இருக்க இருந்தாலும் கல்லூரி இளைஞர்கள் ஏற மாட்டார்கள், அதுவே தனியார் பேருந்து என்ன கூட்டமிருந்தாலும் அதில் தாம் ஏறி வருகிறார்கள்...பெற்றோர்களே பிள்ளை வளர்ப்பில் நிறைய கவனம் தேவைப்படுகிறது எச்சரிக்கையாக இருங்கள்...


ஏனோ நாங்களும் பள்ளி சென்ற போது தினமும் 4 கி.மீ நடந்து சென்று படித்தது நினைவு வர, நடத்துனரும் நாங்கள் கூட பல மைல் தொலைவு நடந்து சென்றுதாம் படித்து வந்தோம் சார் என்றார்.


இது போன்ற இக்கட்டான தருணங்களில் மற்றும் ஒரு மாற்றுப் பேருந்துக்கு அரசு ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.

ஆனால் நடத்துனர் என்ன சொன்னாலும் எங்கள் மேலிட நிர்வாகிகள் கண்டு கொள்வதில்லை சார், எப்படி சார் நாங்களும் நடந்து கொள்வது என்று என்னிடம் கூற, எனக்கு எழுத மட்டும் தான் தெரியும் முயற்சி செய்கிறேன் சார் என்று எழுதுகிறேன்...


அவரால் முன் பின் எங்கும் வந்து ஆளுமை செய்ய வழி இல்லை...சுமார் 10 கி.மீ வரும் வரைதான் இந்த தள்ளாட்டம் அதாவது பைப்பூர், குள்ளானூர் வரும் வரை. அதன் பின் நங்கவள்ளி நெருங்குகையில் பேருந்து பாதி காலியாக இருக்கும் சூழ்நிலை.


ஆவன செய்யுங்கள் அரசுப் பேருந்து நிர்வாகிகள்...

பேருந்து நடத்துனர்களும் மனிதர்கள்தாம்...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

*பெண்களுக்கு இலவசம் என்று சொன்னாலும் சொன்னீர்கள் நகர்புற கிராமப் புற பேருந்து யாவிலும் பெண்கள் கூட்டமே அலை மோதுகிறது.



Sunday, November 20, 2022

எண்ணூறு கோடியில் ஒருவன்: கவிஞர் தணிகை

 எண்ணூறு கோடியில் ஒருவன்: கவிஞர் தணிகை



லேட் பட் லேட்டஸ்ட் என்றால் அது பிலிப்பைன்ஸ் நாட்டில் பிறந்த எண்ணூறு கோடியைத் தொட்ட குழந்தைதான்.


எமது குடும்பத்தில் அடியேன் கூட எட்டாவது குழந்தைதான்.புதியதாகத் தோன்றிக் கொண்டிருக்கும் அணுக்கள் எண்ணிக்கையில் குறைபடுவதும் உரு சிதை மாற்றமும், வளர் சிதை மாற்றமும் வளர்தலில் தளர்தலும் நிகழும் மனிதம் என்பது இயற்கையின் கொடை, பரிசு, பதிப்பு, வாய்ப்பு.


18.11.22 வ.உ.சியின் நினைவு நாள் மட்டுமல்ல எனது தந்தையின் நினைவு நாளும் கூட. அன்று பெற்றவர்களை ஒட்டு சேர்த்து வணக்கம் செலுத்திய நாள். அன்று மட்டுமா? என்றுமே எப்போதுமே நாம் அவர்தம் பிரதிதானே?மனிதச் சங்கிலி நீள்கிறது விவேகானந்தா சொல்லியது போல மனித அலை ஒன்றின் தொடர்ச்சியாய் மற்றொன்று தொடரும்...


என்னுள் இருக்கும் அணுக்களும் வெடித்துச் சிதறும் முன்னே ஒரு பதிவவசியம். தாயிடம் இருந்து வந்த பிண்டமும் தந்தை கொடுத்த விந்தணுவும் வளர்கிறது உருப் பெருகிறது. பாரதி சொல்லி இருப்பது போல ...


நான் என்றோர் தனிப் பொருள் இல்லை

நானெனும் எண்ணமே வெறும் பொய்.


என்னுள் இருக்கும் பெற்றோர், உற்றார், உறவுகள்,சகோதர சகோதரிகள், வாழ்க்கைத் துணை, நட்பு ஊர்கள் இப்படி எல்லாவற்றின் கலவையும் சேர்ந்தே இருக்கிறது பிறப்பால் விளைந்த இரத்தம் சதை அணுக்களுக்கும் அப்பாற்பட்டு அல்லது உள்ளடங்கியும் குறிப்பிட்டுச் சிலரை சொல்ல வேண்டுமெனில் வேலாயுதம் , மாதவன் , மல்லிகா, மணியம், குகன்,பிரவீன்,இரத்தினவேல்,ஒரே தங்கை இப்படி என்னுயிருக்கு உறுதுணையாக இருந்து பிரிந்து போகாமல் இன்னும் இருக்கும்படி அந்த அந்த காலக் கட்டத்தில் முக்கியமாகத் தெரிந்து அதன் பின் தொலை தூர இடைவெளியுடன் இருந்த இருக்கும் நிறைய முகங்கள் இருக்கின்றன...


எவற்றை நான் விடுவது? எவற்றை எல்லாம் நான் எப்படிக் குறிப்பிடுவது...நினைவோட்டம் உங்கள் நேரத்தை வீணாக்கும் எனவே விட்டு விடுகிறேன்.


இந்தியா மக்கள் தொகையில் இன்னும் சில ஆண்டுகளில் சீனாவை விஞ்சும்...இந்தியாவும் சீனாவும் சேர்ந்தால் எண்ணூறு கோடியில் முன்னூறு கோடிக்கும் மேலாகிவிடுகிறது. இந்த மனிதத்தில் தான் எத்தனை இனம், இரகம், நிறம், மாறுதல்களுடன்...


செயலே புகழ் பரப்பும்... வாய் அல்ல...


தாயைப் போல நிறத்தில் இருக்கும் எனை கிறித்தவன், முகமதியன், தலித், இப்படி நிறைய காலக் கட்டங்களில் கலகக் கட்டங்களில் நிறைய பேர் சொன்னதும் உண்டு நினைத்ததும் உண்டு.ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி நீ யார் என்ற கேள்விக்கு மனிதன் என்றே இருக்க வேண்டும் என்பார் அது போல...நான்.


இந்திய இனம், ஆப்பிரிக்க இனம், இப்படிப் பார்க்கப் போனால் ஐரோப்பிய, ஆஸ்திரேலிய, அமெரிக்காவில் இருக்கும் இனம் யாவற்றின் பிறப்பிடம் பெரும்பாலாக பொதுவாகப் பார்க்கப் போனால் இங்கிலாந்து. அதன்றி மீதி இருக்கும் எல்லா இனத்தின் கூட்டுத் தொகையைக் கணக்கிட்டால் அது மிகவும் குறைவே.


கறுப்பு நிறத் தோலை இன்னும் மனிதம் மகத்துவமாக எளிதில் நினைக்க மறுக்கிறது. மகாத்மா கூட ஒரு கறுப்பர்தாம். எனினும் விதிவிலக்குகளும் அடர்த்தியான அங்கீகாரமும் கவர்ச்சித் தோற்றத்திற்கு இன்னும் சிவப்பு, வெள்ளைத் தோலை நம்பிக் கொண்டிருக்கின்றன.35 துண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த நல்ல நிறக் காதலியை குளிர்பதனப் பெட்டியில் வைத்து பார்க்கிற நிலையில் மனித இனம் இழிந்து போகும் நிலையில் தோற்றத்தில் ஒன்றும் இல்லை செயலில் யாவும் இருக்கிறது என்ற அறிதல் புரிதல் தெரிதல் தெளிதல் பட்டறிவு கூட இல்லாதார் மனிதர்.


மேலை நாடுகளில் இன்னும் கழிப்பிட ஊன் தூய்மை உடல் தூய்மை பாலின இணைதல் தூய்மை, ஏன் திருமூலர் சொல்லியபடி ஊனுடம்பு , உன்னுடம்பு ஆலயம் எனும் நினைப்பு வர வழியே இல்லாதிருக்கிறார்கள்...மேலும் கள்ளப் புலனைந்தும் காணா மணிவிளக்கு, காளா மணி விளக்கு என்பதறியாத படியே மனிதம் பிறந்து மறைந்து வருகிற நிலையில் இராமலிங்கர் போன்ற ஞானிகள் சிலரே திருமூலர் போன்ற சில அரியரே உடல் எப்படிப் பட்டது என்ற உண்மையை உலகுக்களிக்கின்றனர்.


சொல்லப் போனால் தமிழர் என்ற ஒரு இனத்திற்கே அறிவு சார்ந்த தொன்மை சிறப்புகள் நிறைய உண்டு.

எனைப் பார்த்து பழகியவரில் ஒருவர் நான் பள்ளியில் ஒரு முறை பழைய ஆடையை உடுத்த வேண்டிய நிலை வந்தது என்ற உண்மையைக் குறிப்பிட்டதால் பழைய ஆடையை என்றுமே உடுத்துபவன் என்று தப்புக் கணக்கு போட்டு கேட்டதுண்டு... கல்லூரியில் பணி புரிந்த காலத்தில் எனது ஆடைகள் தரட்டுமா என்று? நான் அந்த ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த நாளில் ஏழைகளுக்கு புத்தாடை குளிர் நீக்க வழங்கி உயர்ந்த நிலையிலும்....நாம் பேசும் பலவற்றை செய்யும் பலவற்றை வாய்ப்பாக சிலர் மறந்து விடுகிறார்கள்.அறிவாளிகளா? அறிவிலிகளா?


பிறப்பால் இயல்பாக அமைந்த சகோதரிகளையும்,அவர் தம் நிறத்தையும்( தந்தை வழி பெண்கள் எங்கள் வீட்டின் வண்ணங்கள்) அவர்தம் பொருள் பலத்தையும் காண்பித்தால் மட்டுமே ஓ! இவரும் உயர்ந்த மேனிலையாளர்தாம் பூவோடு சேர்ந்த‌ நாரும் மணக்கும் என்ற புரிதலே சுருக்கமாக சில மனிதர்க்கு வருகிறது போலும்...ஆனால் அந்தக் காலக் கட்டங்கள் எல்லாம் விரைவாக ஓடி மறைந்தன அவை குறிப்பது அவர்க்கு இருக்கும் குறுகிய மனம் பற்றியதே, அறிவின் சுருக்கம் பற்றியதே அன்றி எமை அவை யாவும் பாதிக்காது... விரிவாக அவை பற்றி சொல்ல ஏதுமில்லை...


பூக்களுக்கு விலையுண்டு நார்களுக்கும் வேர்களுக்கும் மதிப்பு இல்லை அவையே  மருந்தாகும் என்ற நிலையை தெரியும் ஞானம் வரும் வரை...


18.11.2022 அன்று துணைவியின் செல்பேசி சீராகி விட்டதா என கடையில் விசாரித்தேன்... அங்கிருந்த கடை சார்ந்த ஒரு பெண் எனக்கு அறிமுகம் இல்லார், நீங்கள் தாமே அந்த சுவர் வாசகம் எல்லாம் எழுதுவது , முட்டைக்காரர் கம்பெனியில் பணிபுரிந்து இப்போது மின்வாரியத்தில் பணி புரியும் வனிதா அக்கா உங்களைப் பற்றி சொல்லி இருக்கிறார்... அந்த கபாலீஸ்வரர் கோவில் உருவாக்கத்திற்கே நீங்கள் தாம் முக்கிய காரணம் என்றும் சொல்லி இருக்கிறார், தொப்பியும், கண்ணாடியும் அணிந்திருப்பார் என்றார், நான் நீங்கள் நடைப்பயிற்சி செல்லும் போது தினமும் ஒரு முறையாவது எங்காவது பார்க்கும் வாய்ப்பு இருக்கும் எனவே கேட்கிறேன் என்றார்.


மேலும் கடையின் உரிமையாளர் பெண்: எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்ததற்கே இவர் தாம் காரணம் இவர் எழுதிய புத்தகமே எங்களுக்கு வழிகாட்டி. நிறைய புத்தகம் எல்லாம் எழுதி இருக்கிறார், வாங்கிப் படித்துப் பார் எல்லாம் தெரியும் என்றார்...


அடியேன் தாம்...அது...கலாம் அவர்கள் தொடர்பில் இருந்திருக்கிறேன்...அவர் எனக்கு கடிதமே கூட எழுதி இருக்கிறார், 


உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அவையில் பேசுமளவு வாய்ப்பெல்லாம் கிடைத்தது.


இந்த நாட்டில் மலை வாழ் மக்கள் மேம்பாட்டுக்காக‌ சுமார்  பத்தாண்டுகள்  உழைத்திருக்கிறேன் திட்ட அலுவலராக என்று சிறு குறிப்பளித்தேன். எனைப் பற்றி சொல்லிக் கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது என்ற போதிலும்...


அவர்கள் எனக்கு பெரும் தொகை எதையும் தரவில்லை, நானும் அவர்க்கு தரும் நிலையில் இல்லை... ஆனால் நான் தொய்வடையும் கால நேரத்தில் எல்லாம் இயற்கை இப்படி எதையாவது காட்டி எனது பிறப்பை இருப்பை வாழ்வை பொருள் பொதிந்ததாக மாற்றி விடுகிறது...


நல்லதை மட்டும் செய்வோம் அடையாளம் தெரியா நபர்களாலும் அடையாளம் காணப் படுவோம்.செல்கையில் எவரும் அறியாமல் சென்று சேர்வோம்... நமது வாழ்வு என்றும் எங்காவது தொடர்ந்தபடியே இருக்க...


அல்லவை தேய அறம் பெருகட்டும்.

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.



 



Tuesday, November 8, 2022

இன்டன்ஸிவ் கேர்/கடைசி ரொட்டித் துண்டு. : கவிஞர் தணிகை.

 எதை எல்லாம் செய்ய வேண்டும் என்பதற்கு பதிலாக எதை எல்லாம் செய்யக் கூடாது என்பதில் தெளிவு வேண்டும்.உண்மைதான்

ஆனால் சில போக்கிரிகளும், குறும்பர்களும் எதை எல்லாம் செய்யக் கூடாது என்று தெளிவு படுத்தப் படும்போது எதை எல்லாம் செய்யக் கூடாது என்பவற்றை செய்து பார்த்து விடுவதும் படிப்பினை என்று செய்யக் கூடும். அதன் பிறகுதான் நாங்கள் அவற்றை செய்வதிலிருந்து விடுபட முடியும் என்றும் செய்வதும் சொல்வதும் உண்டு. Learning process.அப்படித்தான் அறிவியல் விஞ்ஞானிகளும் உருவாகிறார்கள் ஆனால் அது எது வரை எந்த வரையறை எவற்றுக்கு எல்லாம் பொருந்தும் என்பதில் கவனம் வேண்டி இருக்கிறது.



பலர் அப்படி வீழ்ந்து போய் விடுவதும் உண்டு. ஆனால் அதை எல்லாம் மீறி நாம் இங்கு சொல்லப் புகுவது:


வேண்டாத பகுதிகளை வெட்டித் தள்ளும்போதுதானே அழகிய உருவச் சிலைகளும், விக்கிரங்களும், அதே போல குரோட்டன்ஸ் செடிகளும்...உருவம் கொள்கின்றன... சரி சொல்ல வேண்டியதை சொல்லும் கவனத்துக்கு வருவோம்...


முதலுதவி என்ற பேரில் தண்ணீர் தெளிப்பது, தண்ணீர் குடிக்க வைப்பது மயக்க நிலையில் உள்ளவர்க்கு செய்யக்கூடாது என்றது நல்ல செய்தியாக இருந்தது.


 ஒரு சிறு காணொளி மூலம் 1. மயக்க நிலையில் உள்ளவர்களுக்கு, 2.உடலில் அடிபட்டு இரத்தக் காயம் ஏற்பட்டு இரத்தம் வெளிச் செல்லும் நிலையில் உள்ளார்க்கு,3,தலையில் அடிபட்டு இரத்தப் போக்கு உள்ளார்க்கு, 4, தீக்காயம் ஏற்பட்டு தண்ணீர் தண்ணீர் என கத்திக் கொண்டிருப்பார்க்கு,5 மாரடைப்பு ஏற்பட்டு உள்ளவர்க்கு குடிநீர் கொடுக்கக் கூடாது என்று அந்த முதலுதவி பயிற்றுநர் சொல்லியதைக் கேட்டபோது எனக்கு எனது தாய் மாரடைப்பு என சிகிச்சை முனையில் இருந்த போது நாங்கள் அளித்த கடைசித் தண்ணீரும், ஒரு சிறிய ரொட்டித் துண்டு அளித்தது பற்றிய நினைவும் வந்தது. 16 ஆண்டுகள் கழித்து  நாங்கள் செய்த தவறு இப்போதுதான் புரிந்தது.


ஏன் எனில் நுரையீரலுக்குள் நீர் புகுந்தால் உடன் மரணம் என்கிறார் இவர். அப்படித்தன் நடந்தன, நடக்கின்றன.

அதனால் தான் சாப்பிடும் போது பேசாமல் சாப்பிட வேண்டுமென்பார் பெரியார். சுவாசக் குழாய் எப்போதும் தன் வேலையை செய்ய, உணவுக் குழாய் தேவையான போது திறந்து மூட வேண்டும் என்பதால்...அதனால் தான் படுத்துக் கொண்டே சாப்பிடக் கூடாது என்பர்

கட்டில் மேல் நோயாளிதான் அமர்ந்து சாப்பிடுவர் எனவே கட்டில் மேலும் அமர்ந்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்பர் காரணம் தெரியாமலேயே நமது பெரியோர்.


காற்றுப் பைகள் காற்றை நிரப்புவதற்கு பதில் நீரை நிரப்பினால் நடப்பதுதான் அசம்பாவிதம்...


ஆனால் இரைப்பை, வயிறு நிறைய‌ சாப்பிடக் கூடாது, அரை வயிறு உணவு, கால் பங்கு குடி நீர், கால் பங்கு வெற்றிடம்( இந்த வெற்றிடம் என்பது ஆகாயத்தில் காற்றில்லாமல் இருக்கும் இடம் அல்ல) அல்லது காற்றுக்கான இடம்  இவையே செரிமானத்திற்கு ஏற்றது என்பதும் நினைவுக்கு வருகிறது.


சில அரிய காணொளிகள் நமக்கு நல் அறிவைக் கொடுக்கின்றன. என்னதான் மிகப் பெரிய அறிவு சார்ந்தாராக தம்மை கருதுவார் இருந்தாலும் கற்றது கைம்மண் கல்லாதது உலகளவு...காணொளிகள் நிறைய செல்பேசியில் இடம் அடைத்து முடியாமல் போகிறது என்று சலித்துக் கொள்வார் கூட இது போன்ற காணொளிகளால் மேன்மை அடையலாம் பிறர்க்கும் பயனுள்ள தகவல்களை பகிர்ந்து பரிமாறிக் கொள்ளலாம்.


அன்னப் பறவை நீரை விட்டு பாலை பருகும் என தமிழ் இலக்கியம் சொல்வது கற்பனை என்றாலும் கூட அதுபோலத்தான் நாம் கற்க வேண்டும், படிக்க வேண்டும், பார்க்க வேண்டும் என்பது அத்தியாவசியமானது என்கிறார்கள் இரமண மஹரிஷி போன்ற குருமார்கள்.


நல்லது

 நன்றி நண்பர்களே..


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


இன்டன்ஸிவ் கேர்: