Friday, May 17, 2019

தீவிரவாதிகளுக்கு மதமும் இல்லை ஆன்மீகவாதிகளுக்கும்: கவிஞர் தணிகை

தீவிரவாதிகளுக்கு மதமும் இல்லை ஆன்மீகவாதிகளுக்கும்: கவிஞர் தணிகை


Image result for bjp pragya thakur

தீவிர வாதிகளுக்கும் ஆன்மீகவாதிகளுக்கும் மதம் என்பதே இல்லை. என்னடா இப்படி சொல்கிறோமே என்று வியப்படைய ஒன்றுமில்லை. இரண்டுக்குமே சமய நெறி தழுவிய கோட்பாடுகளும் வரையறைகளும் எல்லைகளும் இல்லைதான் . ஆனால் இரண்டுக்கும் மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு உண்டு. தீவிரவாதிகள் எந்தக் கோட்பாட்டையும் கடைப்பிடிப்பதாக இருந்தால் வன்முறையை கையால் கூடத் தொட மாட்டார்கள். உயிர்ப்பலிகளும் மதம் என்ற பேர் சொல்லி நடைபெறாது. ஏன் கூட்டம் கூட்டமாக இலட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் ஓரிடத்தில் கூடி வழிபடும் தேவை கூட இருக்காது.

ஏன் எனில் எந்த மதத்திலுமே அன்பு நெறியே போதிக்கப்பட்டிருக்கிறது. அடுத்தவர் நலமும் கணக்கெடுத்துக் கொள்ளப்படுகிறது. எதிரியாக எவரையுமே கருத வேண்டிய அவசியங்கள் இல்லை. எல்லா மதத்திலுமே பிற உயிருக்குத் தீங்கு செய்யாதிருத்தல் என்ற அமைதி வழி பிறர் பொருள் மேல் ஆசைப்படாதிருத்தல் போன்றவை சொல்லப்பட்டிருக்கின்றன.

அப்படி இருக்கும்போது அதைத் தீவிரமாக கடைப்பிடிக்கும் ஒருவர் எப்படி ஆய்தமாக மனித வெடிகுண்டாக மாறுவதும் ஆய்தத்தை கையில் எடுத்து மதத்தின் இனத்தின் பேர்சொல்லி மற்றவரைக் கொல்வதுமாக இருக்க முடியும்...எல்லாம் மனித மன பேதங்கள்.


அதே போல ஆன்மீகம் என்றாலும் உயிரும் அதை ஒட்டிய உறவுமே. இந்த நெறிகளில் ஆழ்ந்தவர்கள் எந்த மதம், இந்த மதம், அந்த மதம் என்று வேற்றுமை பாராட்ட மாட்டார்கள்..

நடக்க விட மாட்டோம், நாக்கை அறுப்போம், கொல்வோம், செருப்பறிவோம்  என்றெல்லாம் சொல்லித் திரிய மாட்டார்கள். அப்படி செய்ய மாட்டார்கள்...

ஆன்மீகவாதிகள் மதங்களைக் கடந்தவர்கள், மதங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் மதம் என்பது நல்நெறி காட்டும் வரை நல் வழி கூட்டும் வரை நல்ல பசுமாடாகவே இருக்கிறது. ஆனால் அதில் வெறி வந்து சேரும்போது மதம் பிடித்த யானையாக மாறி எல்லாவற்றையும் துவம்சம் செய்து விடுகிறது. புயலடித்த ஓய்ந்த பகுதியைப் போய்ப் பார்த்தால் அதில் ஒரு ஓலத்தின் ஒலியும் தொனியும் ஊடுருவி இருக்கும்  பார்க்கவே கோரதாண்டவமாடிய காட்சிகள் கண்களை  பனிக்கச் செய்யும்.

எனவேதான் உலகை திருத்த முனையும் உத்தமர்கள் அனைவரும் சாதி மத, இன மொழி பாகுபாட்டில் எல்லாம் மூழ்கி விடாமல் உலகில் உள்ள வெறுமையை வறுமையை பசியை, நீர் வறட்சியை, உயிர் படும் துன்பத்தை  மருத்துவம் உணவு மற்றும் கல்வி வழியே போக்க முனைந்தார்கள்...
சேவையை விட ஒரு உயர்ந்த மார்க்கமோ மதமோ இல்லை.

உணவு உற்பத்தி குறைந்து கொண்டு போகும்போது

தண்ணீருக்காக  மற்றுமொரு உலகப் போர் கூட மூளும் அபாயம் இருப்பதாக மாமனிதர்கள் குறிப்பிட்டு கவலைப்பட்டுக் கொண்டிருக்கும்போது ஒரு தேர்தலும் பிரச்சாரமும் வாக்குகளும் வாள் வீசி வருகின்றன வாய் வீசி வருகின்றன..

இந்த நிலையில் ப்ரக்யா தாகூர் கோட்ஸே பற்றிபேசிய கருத்துக்கு   மன்னிப்புக் கோர வேண்டும் என்று அவர்கள் பாரதிய ஜனதா கட்சியே கோரி இருப்பது வரவேற்கத் தக்கது. கமல் ஹாசனுக்கு மோடி இந்தியப் பிரதமராக இருப்பவர் பதில் சொல்லி இருப்பது ...எல்லாம் கவனிக்கத்தக்கவையே.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


No comments:

Post a Comment