Sunday, April 8, 2018

திரும்பி வராக் காலமும் திரும்பக் கிடைக்கா அந்த உலகும் : கவிஞர் தணிகை

திரும்பி வராக் காலமும் திரும்பக் கிடைக்கா அந்த உலகும் : கவிஞர் தணிகை

பன்றி மேய்க்கும் அந்த மனிதன் தலைமுடிக்கு ஈயம் என்றுதான் அவன் சொன்னது, அதாவது அலுமினியப் பாத்திரம் தருவதாக வீடு வீடாக வீதி வீதியாக கேட்டுக் கொண்டே சென்று கொண்டிருந்தான். இப்போதுமா இந்த வியாபாரம் இருக்கிறது?
Image result for no time returns no world reverse

எனது நினைவின் வீச்சு விரிந்தது.

அரை நூற்றாண்டு ஓடிவிட்டது.

இதே வீடு, இதே சந்து ...வீட்டில் அம்மாவுடன் 6 பெண்கள் , கெம்ப்ளாஸ்ட் கழிவு நீர் நன்னீர் ஓடையில் வழி அனுப்பப் பட்டதால் முடி எல்லாம் கொட்டுகிறது என ...நீண்ட கூந்தலில் இருந்து உதிரும் தலைமுடியை எடுத்து பத்திரமாக ஒரு மஞ்சப் பையிலும், ராட்டையில் நூல் நூற்று அதற்காக வாங்கிய கதர்ப் பையிலும் போட்டு நிறைய வைத்திருப்பார்கள்.

ஒரு நாள் சவுரி கட்ட என இந்தப் பெண்கள் வருவார்கள்...அன்று முழுதும் வெகுவான வேடிக்கையாக இருக்கும். வாயெல்லாம் வெற்றிலை எச்சில் வழிந்தோட... வீட்டில் சேர்த்து வைத்திருந்த தந்த சொந்த முடியில் சவுரி கட்ட ஆரம்பித்து விடுவார்கள்.

இடையில் அவர்கள் கேட்டாலும் கேட்காவிட்டாலும், நீராகாரம், அதாவது கம்பங் கூழ், களி கரைத்தது, அல்லது நெல்லஞ்சோற்று நீர் ஊறுகாயுடன் அவர்களுக்கு கொடுக்கப்படும்.

அந்த சவுரிகளை கட்டி முடிக்க கொடுக்கும் கூலியில் இதெல்லாம் அடங்காது.

என் அம்மா கூட சிறியதாக நைஸாக ஒரு சவுரியை வைத்து கட்டி சிறியதாக ஒரு குடுமியிப் போட்டிருப்பார்கள். பெரிய பெரிய சவுரி எல்லாம் நல்ல விலைக்கு விற்பனையும் நடக்கும். உடன் அக்கம் பக்கம் பெண்கள் எல்லாம் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு சவுரி கட்டிக் கொள்ள வருவார்கள், அல்லது சவுரி வாங்க வருவார்கள்...


இது உதிர்ந்து விட்ட ரோமம், நெடுஞ்செழியன் அம்மா ஜெ கதை அல்ல...

வளையல் போட என்று இலட்சுமி என்று ஒரு அம்மா வயதுடைய ஒரு பெண் வருவார் ஒரே கூத்தும் கும்மாளமாயும் இருக்கும், அவளே இவளே, அடியே என்றுதான் பேசுவார் கொஞ்சம் முன்னால் துருத்திய பற்கள் மேல் தெரு சுப்ரமணிய சாமி கோவில் வீதி....அதுவே அப்போது மிகத் தொலவில் இருப்பதாகத் தோன்றும்...இப்போது நினைத்தால் அது மிக அருகே இருப்பதாகத் தோன்றுகிறது அங்கேதான் அவர்கள் வீடு....ஆனால் வீடு தேடி வந்து வளையல் போடுவார்...

கண்ணாடி வளையல், ரப்பர் வளையல் என்று விதவிதமாக உயர உயரமான வட்ட வடிவ அட்டைகளில் போட்டு நிற்க வைத்து  கூடை நிறையக் கொண்டு வருவார் அதிலும் கட்டுக் கட்டி கூடை நிறைய வளையல் கட்டுகளும், விலை உயர்வு என அட்டைப்பேட்டிகளிலும் செட் வளையல்கள் இருக்கும்...அதின் உச்சமாக நான் ஹைதராபாத்தில் தலைமை இடத்தில் பணிபுரியும்போது ஹைட்ராபேட் பேங்கல்ஸ் என்று மிகவும் பிரபலமான வளையல்கள் எல்லாம் வாங்கி வந்தது வரை....நினைவுதான்...

ஆனால்...அந்தக் காலத்தில் இலட்சுமி அம்மா அவளும் எங்க வீட்டுப் பெண்கள் போல சிவந்த நிற ராசிப் பெண் தாம். சிவப்பு நிறம் என்றாலே அழகு என்று நம்புகிறார்கள் இன்னும் இந்தியாவில்...அந்த நம்பிக்கையை அவ்வளவு எளிதாகத் தூக்கி எறிய முடியவில்லை அல்லவா...எங்கள் வீட்டிலும் 5 அழகிய பெண்கள்...அழகில் குறைச்சல் என்றால் அது நாங்க 3 பசங்களாகத்தான் இருக்க வேண்டும்..அதிலும் நான் கடைசிப் பையன். எனக்கும் ஜடை போட்டு, நடு வகிடு எடுத்து அழகு பார்த்த குடும்பம் என்னுடையது...அவ்வளவு நீண்ட முடியிருக்கும் எனக்கும்...

எப்போது பார்த்தாலும் ஏதாவது விசேஷம் இருக்கும், யாராவது ஒரு பெண் வயதுக்கு வந்திருப்பது, ஒருவர்க்கு மணம் நிச்சயம், ஒருவர்க்கு திருமணம், ஒருவர் முழுகாமல் இருக்கும் வளைகாப்பு, ஒருவர்க்கு பிள்ளைப் பிரசவம் என எப்படியும் அடிக்கடி ஒரு விஷேசம் வைபவம் வந்து கொண்டே இருக்கும். அல்லது ஆடி 18, தீபாவளி, பொங்கல் என திருவிழாக்கள்...எல்லாமே பெண்கள் அதன் அலங்காரங்கள் என்று பேர் சொல்லத்தானே...

இந்த இலட்சுமி அம்மா வளையல்காரி வளையல் போட்டு விட்டால் அது மறுமுறை அழைத்து போடும் வரை பொலிவு குறையாமல் இருக்கும்... அக்கம் பக்கம் வீட்டுக்காரப் பெண்டு பிள்ளைகள், உறவினர் பெண்கள் எல்லாம் வந்து வளையல் போட்டுக் கொள்வார்கள்.... ஏன் பிரேமா டீச்சர், விஜயா அக்கா, வேடர்பட்டியிலிருந்து சிதம்பரத்தை மணமுடித்து எங்கள் குடும்பத்தோடு ஐக்கியமாக இருந்த தேவகி எல்லாம் கூட வளையல் அணிந்து கொள்ள இந்த வீட்டுக்குத்தான் வருவார்கள்...இவர்களில் பெரும்பாலானவர்கள் இப்போது இல்லை...

Related image


அவரைப் (இலட்சுமி அம்மா செட்டியார் இனத்தை சேர்ந்தார் என நினைக்கிறேன்) பொறுத்த வரையிலும் கூட காசு வாங்குவது கொடுப்பது பெரும் வர்த்தகமாக இப்போது நினைத்தாலும் நினைவுக்கு வர மாட்டேன் என்கிறது அது தான் பிரதானம் என்றிருந்தாலும் அந்த நடைமுறை...அந்த அன்னியோன்யம் அந்த குடும்பப் பாங்கு...இதெல்லாம் தான் முன்னே நினைவில் நிற்கிறது... நிறைய காசு பணத்துக்கு வளையல் வாங்கப்பட்டிருக்கிறது...இப்போது அதன் தேவை எல்லாம் தங்கத்தில் இருந்தாலும் நல்ல முக்கியமான குடும்பத் தேவைக்கு  திருவிழாக்களுக்கு வளையல் இடம்பெறுவது என்பது மட்டும் ஒரு அடையாளமாக இருக்கிறது...

தயிர்க்காரி அல்லது மோர் விற்கும் அந்த சிவந்த நிறப் பெண்ணும் பொட்டனேரி அது மேச்சேரி அருகே இருக்கிறது...அங்கிருந்து வருவார்...மோர் தயிர் விற்று முடித்து வீட்டில் கொஞ்சம் அமர்ந்து அப்படி என்னதான் இருக்குமோ முதலியார் வீட்டம்மா, அதன் பெண்டு பிள்ளைகள்  எனப்  பார்க்காமல் போகவே மாட்டாள்...அவர் எல்லாம் இப்போது இருக்க வாய்ப்பே இல்லை...ஆனால் அவரின் உருவம் அப்படியே தக தக என நினைவில் நின்ற போதும் அவரின் பேர் கூட மறந்து விட்டது...


Image result for milk and butter milk curd

பால்கார ஐத்தா இவர் மாநிறம், வெற்றிலை, புகையிலை போடும் கறை படிந்த பற்கள்,,, புற்று நோய் வந்த பிறகு முடி கொட்டி முடி உதிர்ந்து விட்ட நிலையில் கூந்தலில் முடி குறைவாகவே இருக்கும்... தண்ணீர் கலக்காமல் அவ்வளவு அருமையாக பால் கொண்டு வந்து தவறாமல் ஊற்றுவார், குடும்பத்தோடு அவ்வளவு நெருக்கம், ஒட்டுதல் , தாய் பிள்ளைகளாகவே பழகினர், எப்படி இந்த அந்நிய மக்களோடு எல்லாம் அவ்வளவு ஒட்டுதல் இருந்தது , எப்படி அப்படி ஒரு சொந்தங்கள் எல்லாம் உண்டாயிருந்தது என்று இன்று நினைத்தாலும் நம்ப அரிதாக இருக்கிறாது.

 இவரது கணவரை அவ்வளவு அருமையாக கவனித்துக் கொண்டார்...அவள் தம்மை கவனிக்காமல் விட்டு சீக்கிரமாகவே போய்ச் சேர்ந்து விட்டாள். அவள் கணவன் சரியான கில்லாடி அவள் இறந்த பிறகு வெளியே எங்குமே ஒரு வார்த்தை கூடப் பேசாமல்  ஊமாண்டி (ஊமையாண்டி)   போல இருந்த அவன் சரியான அமுக்கன், இன்னொரு பொண்டாட்டி கட்டி இன்று வரை வசதி வாய்ப்போடு வாழ்ந்து வருகிறான்..

அடுத்து கட்டில் கடைக்காரி இந்த அம்மா பேரும் இலட்சுமிதான்...ஒரு சிறிய கட்டில் போட்டு அதில் சில பாட்டில் மூடிகளில் மிட்டாய், முறுக்கு, போன்ற தின்பண்டங்கள், குச்சிக் கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு போன்றவற்றையும் பருவகாலங்களில் பனங்கிழங்கு போன்றவற்றையும் வேகவைத்து விற்பனை செய்தவர், எப்படியோ ஒரு சாலை போன்ற வீட்டிலேயே காலம் தள்ளி வெகு காலம் வாழ்ந்தார். அந்த கட்டில் கடையில் தாமும் சாப்பிட்டு, தமது மில்லில் வேலை செய்த மகன் குடும்பத்துக்கும் மருமகள் சரியில்லை, மகனை அடித்து விடுகிறார் என கதை கதையாகச் சொல்லிக் கொண்டே தமது செலவுக்குப் போக மீதி ஆகும் காசை தமது மகனுக்கு கொடுத்து உதவுவார்...அவரும் இப்போது இல்லை...ஏன் எனது தாய் தெய்வானை போயே 12 வருடம் ஆகிவிட்டதே...

ஏன் ஆண்டியப்பன் நாவிதர், முடி திருத்தும் கடைக்காரரின் வயதான தந்தை வீட்டுக்கு வந்து பசங்க எங்கள் மூவருக்கும், தந்தைக்கும் முடி திருத்திச் செல்வது அப்போது வழக்கம்...அப்போதிருந்த மரத்தடிகளும் அதன் அடியில் அமர்ந்து முடி வெட்டிக் கொண்டதும், முடி வெட்டும்போது சுருள் சுருளான மயிர்க்கற்றைகளும், முன்பக்கம் தோள்பட்டை இறங்கி நேராக இறங்கும் கால்சட்டையின் நாடாக்களும் பின் முதுகில் ஆங்கில எக்ஸ் X வடிவத்திலான பட்டை செல்வதும் பசுமயான இனிமையான நினைவோட்டம்...

நாளடைவில் அவர் பெரியவர் வராததால், மகன் ஆண்டியப்பன் கடையில் முடி திருத்த எனச் சென்று...சாண்டில்யன் கதை குமுதம், தமிழ்வாணன் கல்கண்டு போன்றவற்றை போட்டி போட்டு படிக்க ஆரம்பித்து, அது ஆனந்த விகடன், கல்கி, குங்குமம், மங்கையர் மலர், தினமணி கதிர் , என வளர்ந்து நிறைய நிறைய எழுத்தாளர்கள்  நிறைய நூலகங்கள், நிறைய மொழிபெயர்ப்புகள், நிறைய நாடுகளின் உலகின் பிரபஞ்ச அளவிலான தொடர்புகளுடன் பரிச்சயமாகி...தொடர்பாகி,,,இன்று அடியவனே....11 நூல்கள்... கொடுத்த நிறைவில்...

அப்போது கிருஷ்ணனும், குட்டியும் ம்க்கூம், பேப்பர் படிக்கத்தான் இங்க வர, முடி வெட்டவோ, டீ சாப்பிடவோ இங்க வர மாட்ட...என அப்போதே என்னுடன் சிலர் சலித்துக் கொள்வார்கள்...என்ன செய்வது நன்றாக முடி  வெட்டுவோர்   அல்லது அவரவர் எங்கு விருப்பமிருக்கிறதோ அல்லது எங்கு மிகவும் நீட்டாக சுற்றுப்புறம் விரும்பும்படியாக இருக்கிறதோ அங்கேதானே அல்லது வீட்டில் பெற்றோர் எங்கு செல்லச் சொல்கிறாரோ அங்கேதானே சென்று முடி வெட்டிக் கொள்ள முடியும் அன்றைய நாளில்...அதேபோல இன்று வரை டீ, காபி அருந்தும் வழக்கம் இன்று வரை கூட என்னிடம் இல்லை என்று சொல்லலாம் என்று பார்த்தால் அவர்கள் இருவரும் இன்று இல்லை...

அவர்களின் தலைமுறைகள் அவ்வப்போது நம்முடன் தொடர்பில் உள்ளார்கள்...ஜெராக்ஸ் காபி எடுத்து கொடுப்பார்களாக...திருமண நிகழ்வில், விழாக்களில் நாகஸ்வரம்  வாசித்து மிக முன்னேறிய அளவில் நாடெல்லாம் தெரியுமாறு பிரபலமாயும் இருக்கிறார்கள்...அவர்களிடம் எல்லாம் இது பற்றி சொல்ல முடியாது...சொல்ல அவசியமும் இல்லை... சொல்ல வேண்டியதும் இல்லை.

Image result for milk and butter milk curd

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.



No comments:

Post a Comment