Monday, July 11, 2016

சென்னையில் ஒரு சிட்டுக் குருவிகள் கூட்டில்: கவிஞர் தணிகை

சென்னையில் ஒரு சிட்டுக் குருவிகள் கூட்டில்: கவிஞர் தணிகை



அண்ணாப் பல்கலைக் கழகத்திற்கு சென்றிருந்தேன். மிகவும் பிடித்த ஒன்று இரண்டு மூன்று எனச் சொல்லச் சொன்னால் அவை அந்த மரங்கள், மரம், மரக்கூட்டம்.அந்த மரங்களில் வெகு காலத்துக்கும் பின் பார்த்த தூக்கணாங்குருவிக் கூடுகள், பறவைகளின் ஒலி வந்த வேலையும் வரும் வேளையும் மறந்து போனது மனிதத்துக்கு.

தாம்பரத்துக்கு முக்கிய சாலையிலிருந்து ஒரு பிரிவின் உள்ளார்ந்து ஒரு பள்ளி, ஒரு தெப்பக் குளம், ஒரு அம்மன் கோவில், ஒரு முருகன் கோவில், ஒரு சிறார் பள்ளி இப்படி எல்லாம் அமைந்த இடம் எல்லா ஊர்களிலுமே இருப்பது கடினம். ஆனால் அது போன்ற தெருக்கள் ஊர் குறிப்பிடாமல் எல்லா ஊர்களிலுமே இருக்கின்றன.

அங்கு இரண்டாம் மாடியில் ஒரு குருவிக் கூட்டில் 3 குருவிகள். விருந்தினராக நாங்கள் இருவர். மிக நன்றாக அமைந்து விட்டது அந்த பயணம்.ஏறத்தாழ அதன் மர நிழலில் நாங்கள் இருந்தது என்னவோ 22 மணி நேரம் இருக்கலாம். ஆனால் அது வாழ்வில் மறக்க முடியாத தருணங்களை கொடுத்தன. கொடுக்கப் போகின்றன.

ஒரு குழந்தையாய் நான் கையில் எடுத்து பார்த்த ஒரு பெண் குழந்தை நங்கையாய் ஒரு குழந்தையை கையில் வைத்து எடுத்து பார்த்து வருகிறாள் பார்த்து  பார்த்து வளர்க்கிறாள் . ஒரு சுற்றுப் புற பொறியாளர்  பட்டப் படிப்பு படித்தவர் என்ற அடையாளம் ஏதுமே இல்லை.

அந்தக் குழந்தையோ படு சுட்டி. ஒரு கணமும் நிலை கொள்ளாமல் அப்படி ஏதும் அழாமலே தாம் செய்ய நினைப்பதை செய்தபடி, பெருவிழிகளுடன், நாட்களை நேரத்தை பறக்கடித்தபடி..நாங்கள் சென்றது முதல் திரும்பியது வரை நிலையுணர்ந்த உபசரிப்புகள். உரிமையான நம் வீட்டில் இருப்பது போல்.

சிறிது நேரம் தியானம் செய்யவும் வாய்த்தது. வீடு நல்ல காற்றோட்டமாய் தேவையான அளவில். போதும் அந்த சிட்டுக் குருவிகளுக்கு அந்தக் கூடே.

இரண்டாண்டு போய்ப் பார்க்காத நினைவைப் போக்கி விட்டது இந்தப் பயணம் இரண்டு ஆண்டு அழைத்தும் வராமல் இருந்தார்கள், இப்போது வந்து நிறைத்து சென்றார்கள் விதைத்தும் சென்றார்கள் நினைவை என்று அவர்களுக்கும் இருக்கும். நெருடல் உரசல் ஏதுமில்லாத தெளிந்த நீரருவி...பொங்கி வழிகிறது ஒரு ஊற்று பாரம்பரியக் காற்று. வாழட்டும் என்றும் என்றும் எம் பேர் சொல்லி...



சொல்ல மறந்தது: ஏன் இன்னும் சென்னை ஊதிப்புடைத்தே வருகிறது? எங்கும் ஜனத்திரள் எந்த வண்டியிலுமே ஏற முடியவில்லை .திரும்ப அடைக்கலாமாகும் இடம் நோக்கி வர நேரம் குறிப்பிட முடியாமல்...அதிலும் ஒரு கிண்டி வழியே தாம்பரம் செல்லும் மின் தொடர் வண்டி எவருமே இறங்கும் முன்பே விரைந்து எடுத்து பயணிகள் வயிற்றில் புளியை கரைத்து சென்றது. குறிப்பிடும்படியாக அபாயத்தை அள்ளி ஊட்டிட...




மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment