Saturday, June 4, 2016

மருத்துவம் என்பது சேவை இதை மருத்துவர் அறிந்து கொள்ள வேண்டியது அவசியத் தேவை.: கவிஞர் தணிகை.

மருத்துவம் என்பது சேவை இதை மருத்துவர் அறிந்து கொள்ள வேண்டியது அவசியத் தேவை.: கவிஞர் தணிகை.



 சேலம் இலண்டன் ஆர்த்தோ மருத்துவமனையில் பணி புரியும் ஒரு  நர்சிங் முடித்த நலிந்த‌ இளைஞர் பேருந்தில் பேசி வருகிறார் அழுதபடி, அக்கா எனக்கு காலை 9 மணி முதல் இரவு 12 மணி வரை வேலை. எல்லாம் தப்பித்துக் கொண்டார்கள் நான் மாட்டிக்கினன் அக்கா... அதுவும் குறைந்த ஊதியத்தில் என. அந்த இளைஞர்க்காக இந்த பதிவு சமர்ப்பணம்.

மற்றொரு மருத்துவர் தமது சேவைப் பணியை மாதத்தில் ஒரு 2 மணி நேரம் கூட ஏழை எளியவர்க்கு அவரின் நிறுவனம் தர பணித்த போதும் அதை செய்ய விரும்புகிலார் அவரை சபித்தும் இந்த பதிவு.

உயிர் காக்கும் சேவை,விஷம் கக்கும் பாம்பின் கடிக்கும்,உயிர்க் கொல்லி நோய் போக்கும் அருமருந்துக்கும் அதிபதி நீங்கள் இப்படி அவலமாய் கருணை இன்றி இருக்கலாமா?

ஒரு மாதத்தில் ஒரு சில மணி நேரம் உங்களால் ஏழைக்கும், இல்லார்க்கும் மருத்துவ சிகிச்சை செய்து புண்ணியம் தேடிக் கொள்ள முடியாதா?

உயிரை காக்கும் உங்களை தெய்வம் என்கிறார்கள். தெய்வம் என்றால் கருணை உள்ளது. எனவேதான் மருத்துவர் அனைவரும் கருணை உள்ளத்துடன் இருக்க இருப்பதிலேயே புனிதத் தொழில் எனக் கருத்தில் கொண்டு வெண்ணிற ஆடையை சமூகம் உங்களுக்கு தந்தது.

ஆமாம் இந்த இந்தியா அசுத்தம் நிறைந்தது, அழுக்கு நிறைந்தது, துர் நாற்றம் மிகுந்தது, பிச்சைக்காரர் நிரம்பியதுதான் அதற்காக நீங்கள் எதுவும் செய்யாமலே வாழ்ந்து முடிந்து விடுவீரா? கொஞ்சமாவது ஒரு துளியாவது சுயநலம் மறந்து துயர் துடைக்க வர மாட்டீரா?

நீங்கள் இலட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் உங்கள் பெற்றோர் செலவு செய்த பணத்தில் தான் படிக்கிறீர் அதற்காக செல்வம் செழித்தோருக்கு மட்டும் கட்டணத்துக்கு மட்டுமேதான் சிரித்து முகம் கொண்டு சிகிச்சை செய்வீரா? ஏழைக்கு இரங்க மாட்டீரா?


அட உங்களுக்கு உதவி புரியும்  ஒரு நண்பர் தாதியர் படிப்பு படித்து விட்டு இப்படி இரவும் பகலுமாய் அல்லல் பட வேண்டுமா குறைந்த ஊதியத்துக்கு இது சரியா? இதற்கா அந்த ஊழியர் நர்சிங் படிப்பு முடிக்க வேண்டும் என்கிறீர்? காலை முதல் நள்ளிரவு வரை இருந்து கணக்கு முடித்தால் தான் பணி முடிகிறதாமா? இது என்ன கால அட்டவணை? எட்டு மணி நேர வேலை மேதின விழா உலக தொழில் நிபந்தனைகள் எல்லாம் என்னவாயிற்று?

இந்த நாடு நிறைய துறைகளில் எல்லாம் உலகின் முன்னணியில். இன்னும் நிறைய துறைகளில் எல்லாம் உலகின் முன்னணியாக வரவேண்டும்.

படித்தோர் அதிலும் மருத்துவம் படித்தோர் கிராமங்களில் பணி புரிய விரும்புவதேயில்லை. இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என இந்த நாட்டின் தந்தை சொல்லி சென்று சுடப்பட்டு இறந்தபோதும்.எவருக்குமே சுயநலப்பற்று தவிர வேறு பற்றே இல்லை.

சீனா என்னும் நமது நாட்டை விட மக்கள் தொகை அதிகமான பெரிய நாட்டை பேர் புட் மெடிகல் ஒர்க்கர் ( கால் நடை மருத்துவ தாதியர்)என்று சொல்லிய பயிற்சி அளித்த தாதியர் மூலம் காடு மேடு எல்லாம் நாடு நகரம் எல்லாம் பரப்பி அந்த நாட்டு மக்களின் சுகாதாரம் மேம்பட மாவோ (மா சே துங்க்) என்னும் மனிதர் முயன்றார் வென்றார். இங்கு நாடு என்பது கிராமம்.

இங்கும் கூட அரசு மருத்துவ மனைகளும், சுகாதார மையங்களும் தம்மால் ஆன சேவை ஆற்றிட அரசு பணித்திருக்கிறது. ஆனாலும் அவை தேவையை பூர்த்தி செய்ய அந்தளவு வளர்ச்சியுடன் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

ஒவ்வொரு கி.மீ தொலைவிற்கும் ஒரு துவக்கப்பள்ளி என்கிறார். இன்றைய ஆட்சி காலை சிற்றுண்டியும் தர நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் ஒரு அரசு துவக்கப் பள்ளியில் ஒரே மாணவர் இருப்பதாகவும் இரு ஆசிரியர் கற்றுத் தருவதாகவும் செய்தி புகைப்படத்துடன் வருகிறது அதே போல‌

சேலம் சிறப்பு சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனையில் இரவு நேரத்தில் விளக்குகளே முன் புறம் எங்கும் எரிவதில்லை நிலை பாரீர் என தேர்தல் விதியை மாற்றிய‌ அதே ஊடகங்கள் தெரிவிக்கின்றன. என்ன ஒரு நிர்வாகம் பாருங்கள்.


சுருக்கமாக சொல்ல விரும்புவது: அரசு ஊதியத்தில் பணி புரியும் அனைவரும், மருத்துவம் படித்து மருத்துவத் தொழிலில் ஈடுபடும் அனைவரும் மருத்துவத்தை தொழிலாகக் கருதாமல் சேவையாக என்று தொடர்வது? தெரஸாவாக வேண்டாம். ஒரு சிறந்த சீர்மிகு மருத்துவராக இருப்பது உங்களுக்கும் உங்கள் அடுத்த தலைமுறைக்கும் நல்லதில்லையா?

அரசு: அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கி பள்ளிகள் மாதிரி 2 கி.மீ சுற்றளவுக்கு ஒரு மருத்துவமனை பேர் என்ன வேண்டுமனாலும் இருக்கட்டும் அது சுகாதார மையம் அல்லது அரசு பொது மருத்துவமனை எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் கண், பல். எலும்பு, பொது, பிரசவம் மற்றும் குழந்தை நலம்,கண்,காது, தொண்டை , அறுவ சிகிச்சை மையங்கள், சித்தமருத்துவம், ‍ஹோமியோபதி, இன்னும் பல துறைகளுடன் பரிசோதனை மையங்கள் அது எம்.ஆர்.ஐ, சிடி ஸ்கேன் போன்ற நவீன தொழில் நுட்ப மருத்துவ வசதிகளுடன் மனிதரின் உயிர் காக்கும் 24 மணி நேர சேவையும் தர வேண்டியது நோக்கி நகர்ந்து செல்ல வேண்டியது அவசியம்.

இந்த பாம்பு கடி, நாய்க்கடி, விஷக்கடி மருத்துவம் பெற‌ சென்றோம் மருந்து இல்லை என்று திரும்பினோம் என்றெல்லாம் இல்லாமல் எல்லா உயிர்களுக்கும் சம வாய்ப்பு, சம முக்கியத்துவம் தந்தாக வேண்டும். அது தான் சிறந்த நாடாக இருக்க முடியும். அப்படிப்பட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு அவர்கள் மட்டுமே அந்த பணிகளில் நியமிக்கப்பட வேண்டியது அவசியம்.அல்லாமல் சுயநலப் பிண்டங்களுக்கும் பொது சேவை என்றால் என்ன என்றே தெரியாத முண்டங்களும் அந்தப் பணியில் இருப்பது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஆளும் வர்க்கத்துக்கும் கேடு.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment