Tuesday, March 15, 2016

தமிழக சாதி வெறியும் கர்நாடகா இன வெறியும் இந்தியக் கொலை வெறியும் ‍ கவிஞர் தணிகை.




தமிழக சாதி வெறியும் கர்நாடகா இன வெறியும் இந்தியக் கொலை வெறியும் ‍ கவிஞர் தணிகை.

ஒதுங்கி வாழ நினைப்பாரை 3 பேர் இரு சக்கர வாகனத்தில் வந்து பொதுச் சாலையில் வெட்டுகிறார்கள் சாதிமறுத்து திருமணம் செய்ததற்காக, அவர்கள் மாநிலத்தில் மல்லைய்யா மட்டும்தானா செய்தார் என்கிற தேவகவுடாவும் மோகன்லால் பை மணிப்பால் தலைவரும் ஏர் இந்தியா 43ஆயிரம் கோடி நட்டம் செய்யவில்லையா இன்னும் 60 பேர் வங்கிக் கடன் வாங்கி கட்டாமல்தானே இருக்கிறார் விஜய்மல்லையா நல்ல உயர் குடியில் பிறந்த குடிக்கதிபதி கோமான் என்று யார் என்ன செய்தாலும் அது எங்க கர்நாடகா என‌ கர்நாடகாவும், எடுத்ததற்கெல்லாம் கொலை, தலைக்கு 11 இலட்சம் கொடுக்கிறோம் அந்தக் கன்னையா பேசிவிட்டார் என, நாட்டை விட்டே போ என காவிக்கட்சிக் கொலை வெறியுமாய் நாடு அல்லோகலப் பட்டுக் கொண்டிருக்கிறது.

எனக்கு நினைவுத் தெரிந்த 50 ஆண்டுகளாகவே இந்த சாதிமறுப்புத் திருமணத்தின் காட்டு மிராண்டித் தனக் கொலைகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. என்னதான் பெரியார்,அண்ணா, அம்பேத்கார் போன்ற பெரியவர்கள் முதல் என்னளவு சிறியவர் வரை சாதி ஒழிப்புக்கு தன்னால் ஆன உழைப்பை நல்கியபோதும், சாதிமறுப்புத் திருமணமே சாதி ஒழிய ஒரு வழி என்று நன்றாகத் தெரிந்தபோதும் இந்த கொடுந்துயர் நிகழ்ந்த வண்ணமே இருக்கின்றன.

இதற்கு கட்சி, ஆட்சி, நிர்வாகம் எல்லாமே ஒருவகையில் துணை புரிகின்றன என்றே சொல்லலாம். மேலும் ஆளுக்கு ஒரு போலீஸா போட முடியும் என்றும் நக்கல் செய்யலாம். பொதுவாக ஒரு இடத்தில் கூட்டம் இருக்கும்போதும் அவ்வழியே காவலர்கள் சென்றாலும் என்ன ஏது எதற்கிந்தக் கூட்டம் என்று விசாரிப்பதில்லை. அதே அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு, சொந்தக்காரர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் அங்கே வந்து அலுவலகரீதியாக இல்லாமல் நின்று கொண்டு சும்மாவாவது வேறு வேலையாக அவ்வழியே செல்வாரைக் கூட உற்று உற்றுப் பார்ப்பது நமது தமிழக காவல்துறை.மேலும் புகார் வந்தால் மட்டுமே நடவடிக்கை என்பார்கள். புகார் அளித்தால் அரசியல்வாதியிடம் பஞ்சாயத்து நடக்கும். ஒன்றுமில்லாததாக புகார் சி.எஸ்.ஆர், எப்.ஐ.ஆர் எல்லாம் இல்லாமல் போகும். அப்படி இருந்தாலும் கட்சிக்காரர் வழி நடக்கும்.

முன்னேற்பாடு ஏதுமில்லை. அவனவன் பாட்டுக்கு வெட்டி விட்டு சர்வ சுதந்திரமாய் வாகனமேறி சென்று கொண்டிருக்கிறான் சிலர் பலராக பலரக ஆய்தங்களுடன்.

முன் சொன்னது தமிழக நிலை என்றால் கர்நாடகாவில் காவிரியின் நீரை பங்கிட்டு தமிழகத்துக்கு விட வேண்டி மத்திய அரசும், உச்ச நீதிமன்றமே சொன்னாலும் உயிரைக் கொடுத்தாவது அந்த மக்களும், அரசும் அதற்கு எதிராக செயல்பட்டு சாதிக்கிறார்கள்.

அடுத்து ஒரு நைஜீரிய மாணவர் செய்த விபத்துக்கு ஒரு நைஜீரிய மாணவி எப்படி மான பங்கப் படுத்தப்பட்டாள் என்பதையும் சில மாதங்கள் முன் நாம் அறிவோம்.

அடுத்து விஜய் மல்லையா ஏமாற்று நிகழ்வுக்கு முன்னால் பிரதமர் தேவகவுடா, மற்றும் மோகன் தாஸ் பை என்னும் மணிப்பால் தலைவர் பெங்களூரூ இவர் இன்போஸிஸ் உறுப்பினர் ஆகியவர்கள் இதுவரை இதென்ன பெரிய ஏமாற்று ? அவரை கைது செய்யக்கூடாது, தொகையை வேண்டுமானால் திரும்ப பெற ஏற்பாடு செய்து கொள்ளலாம் என வக்காலத்து வாங்குகிறார்கள். ஏர் இந்தியா நிறுவனமே 43,000 கோடி இப்படி நட்டம் ஏற்படுத்தவில்லையா என்கிறார் மோகன் தாஸ். அரசு நிறுவனம் இப்படி நட்டத்தில் சென்றதற்கும் வங்கியை கடன் வாங்கி ஏமாற்றியதற்கும், மேலும் கொடுத்த காசோலை காசில்ல்லாமல் திரும்பி வருவதற்கும் வேறுபாடில்லையா ? ஒரு சாதாரண மனிதர் காசோலைக் கொடுத்து திரும்பி வந்தால் எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறான்? அப்படியானால் இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு எல்லாம் ஆளுக்கொரு நீதியிலா?

அந்த ட்ராக்டர் வாங்கிய கடனை 99 % கட்டி விட்டு ஒரு சதவீதம் கட்டாத நபர்கள் தற்கொலை செய்யுமளவு சோழமண்டலம் நிதி நிறுவனமும், கோடக் மகிந்திரா காவலருடன் வந்து அடித்து இழுத்து ட்ராக்டரை ஜப்தி செய்து எடுத்துச் செல்வதையும் தான் கண்டோமே? 

லலித் மோடி இலட்சக்கணக்கான கோடிகள் சுருட்டிவிட்டு இதென்னடா பெரிய வாழக்காய் கவர்ன்மென்ட் என்கிறான் சொகுசாய் இலண்டனில் இருந்து கொண்டு, இப்போது இந்த மல்லையாவும் ராஜ்யசபா உறுப்பினர் தகவலில் சொத்து ஏதுமில்லை எனக் காட்டி விட்டு இந்த வங்கிகளுக்கு எல்லாம் கொடுக்கும்போதே தெரியவில்லையா? இவ்வளவு ரிஸ்க் இருக்குமென்று என பம்மாத்து பேசி உலகை ஏமாற்றி வருகிறான் செய்தி ஊடகங்கள் வழி இவன் இன்னும் நல்லவன் என்று உலகு நம்ப வேண்டுமாம்?

இவன் ஜனதா தளம், பாரதிய ஜனதா கட்சிகளுக்கு தேவகவுடா, ராமகிருஷ்ண ‍ஹெக்டே போன்றோருக்கு படியளந்து 2002, 2010 ஆகிய காலக்கட்டத்தில் ராஜ்ய சபா மெம்பராகியுள்ளான். அந்தக் கட்சி சார்பாக, மேலும் பாரதிய ஜனதாவில் வாஜ்பாய், அத்வானி போன்றோருக்கும் படியளந்ததாக செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவன் இந்த நாட்டில் சிறிய மீன் தான். மிகப்பெரும் சுறாக்கள் எல்லாம் அரசு பொருளாதாரத்துடன் பின்னிப் பிணைந்துள்ள செய்தி வெளிப்பட்டால் நாட்டின் மிகப்பெரும் தொழில்களில் 10ல் 6 அடியோடு குலைந்து விடும். நாட்டின் பொருளாதாரமே சிதையும். எனவேதான் ரிசர்வ் வங்கியும் அதன் தலைவர் ரகுராம் ராஜனும் அமைதி காக்கின்றனர் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இவன் விஜய் மல்லைய்யா காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகளுக்கு எல்லாம் உதவியுள்ளதால் யாருக்கும் இவனை தண்டிப்பதில் நாட்டுக்கு கொண்டுவருவதில் விருப்பமில்லை, மாறாக அவன் அங்கேயே இருப்பதால் உண்மைகள் வெளிவராமல் இருந்தால் நன்மை என்றும் அது அரசுக்கு நன்மை என்றும் சொல்லப்படுகிறது.

நிலை இப்படி இருக்க இவனையே அரசு கொண்டுவரவில்லை எனில் தாவூத் இப்ரா‍ஹிம் எல்லாம் எப்படி இந்த இந்திய அரசால் கொண்டு வர முடியும் என சிவசேனா கேட்கிறது.

ஆக கர்நாடகா மண்ணின் மைந்தர்களை என்ன செய்தாலும் காக்க விழைகிறது இன வெறியுடன் தேவப்பட்டால் தம் மண்ணில் நல்லது செய்த விதான் சௌதா போன்ற கட்டங்களை கட்டிக் கொடுத்த ,நாட்டில் முப்போகம் செய்ய தமக்கு கற்றுக் கொடுத்த தமிழர்களை வேண்டுமானால் அவ்வப்போது பயமுறுத்தி அடித்து விரட்ட தயாராயிருக்கிறது ஆந்திர அரசு செம்மரக் கட்டை கடத்த வந்ததாக தமிழ் கூலிகளை சுட்டு அடித்து வீழ்த்துவது போல.

அடுத்து பொதுவாகவே இந்த காவிக்கட்சி ஆட்சிக்கு வருமுன் நிறைய எதிர்பார்ப்புகளை காங்கிரஸ் அரசை வீழ்த்த மக்களிடையே எற்படுத்தி விட்டு இப்போது யார் என்ன பேசினாலும் உடனே நாட்டை விட்டு போங்கள் என்பதும் தலைக்கு 10 இலட்சம் 11 இலட்சம் என்பதும் தலைவர்கள் மேல் இங்க் அடிப்பதும், அவர்களை மேடையில் அடிப்பதும் இப்படிப் பட்ட கொலைவெறிப் போக்குகள் அதிகம் காணப்படுகிறது. தலைவர்களே  நாக்கை அறுப்பேன் என்பதும், அப்படி சொன்னவர் என் மகள் மகனாயிருந்தால் வெட்டி விடுவேன் சுட்டு விடுவேன் என்பதுமாய் ஒரே கொலை வெறி இரத்த வாடையாக வீச ஆரம்பித்து அமைதிப்பெரு நாட்டை பயமுடை போர்க்களமாய் எண்ணி மக்களை பீதி கொள்ளச் செய்து வருகிறது.

மேலும் நடக்கவே நடக்கிற பெண் வன்முறைகளும் பாலியல்கொடுமைகளும் கற்பழிப்புக் கொலைகளும் பற்றி சொல்லவே வேண்டாம். இதெல்லாமே நடந்து முடிந்த பின் தான் அரசு கவனம் கொள்வதாக காட்டிக்கொள்கிறது நாட்டை விட்டு மல்லையாவை அனுப்பி விட்டு அவரை மார்ச்.10ல் ஆஜர்படுத்துக என்பது போல... முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை . அவை விபத்தை ஆபத்தை தடுக்கும்.இவை பற்றி எல்லாம் அப்பட்டமாக‌ எழுதியதானால்தான் நமது  வேர்ட்பிரஸ் தமிழ் தளம் முடக்கப்பட்டது. தமிழக அரசும், மாநில அரசுகளும், மத்திய அரசும் மக்கள் நலத்துக்கான மக்கள் நலம் காப்பதான அரசுகளாக இல்லை. மக்களே நீங்கள் உஙக்ளை காத்துக்கொள்ளுங்கள். கட்டுப்பாடாய் இருந்து கொள்ளுங்கள்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை


No comments:

Post a Comment