Saturday, August 3, 2024

நீ கடவுள்(காவிரி வெள்ளத்திடை நாய்க்கு உணவளித்த நீதான்: கவிஞர் தணிகை

 நீ கடவுள்(காவிரி வெள்ளத்திடை நாய்க்கு உணவளித்த நீதான்: கவிஞர் தணிகை



நமது சகோதரர்களுக்கு, தோழர்களுக்கு, நண்பர்களுக்கு எல்லாம் இது பற்றி நான் எழுதக் கடன்பட்டுள்ளேன். அந்த வெள்ள நீரிடையே தனித்த இடத்தில் இருந்த அந்தக் கறுப்பு நாயை பார்த்த நேரத்தில் இருந்து அதைப் பற்றி மறக்கவே இல்லை. மறக்கவே முடியவில்லை. அதைப் பற்றி எழுத முனையும் போதெல்லாம் ஏதோ ஒரு காரணம் பற்றி அதைச் செய்யாமலே இருந்தேன். 


இப்போதெல்லாம் பேசுவதையும் எழுதுவதையும் ஒத்திப் போடுவது அல்லது செய்யாமல் விடுவது என்ற போக்கில் எனது வாழ்வு சென்றபடி இருக்க சில நாட்களில் கண்நோய் வந்ததற்கும் கூட மருத்துவம் பார்க்காமலேயே அதை விரட்ட முனைந்து வருகிறேன். உடல் வளர்த்தோம் உயிர் வளர்த்தோம் என்பார் திருமூலர். உடலை நலமாக வைத்துக் கொள்ள முயலுங்கள். கடந்த மாதத்தில் புனிதப் பணி என்ற நோக்கத்தில் எனது சக்திக்கும் மீறி வாழ்வின் நடையை சற்று மாற்றிப் போட்டுதான் பார்க்கலாமே என வம்பை விலைக்கு வாங்கி இருந்தேன். 3 மாதங்கள் பணி செய்து சாவின் விளிம்பைத் தொட்ட பின் அதில் இருந்து பின் வாங்கி உடலை சீராக வழக்கம் போல வைத்துக் கொண்டு இந்த மாதம் முதல் மறுபடியும் நடைப்பயிற்சி ஏற்ற உணவு தியானப் பயிற்சி என சீர் படுத்த முனைந்து வருகிறேன்.


செயலே புகழ் பரப்பும் வாயோ வார்த்தையோ அல்ல.


இரண்டு மூன்று நாட்களில் எந்த புண்ணியவான் பெற்ற பிள்ளைகளோ சிலர் ட்ரோன் மூலம் அந்த நாய்க்கு உணவளித்து தங்களது கருணை உள்ளத்தின் எண்ணத்தை செயலாக்கி இருந்தனர்.அந்த வீடியோவும் சமூக ஊடகத்தில் வலம் வந்தது.Long Live Dear Friends those who did that action.


கடவுள், காதல், இயற்கை இது போன்ற கருத்துருவாக்கத்திற்கு எல்லாம் அவரவர் ஒவ்வொரு விளக்கம் சொல்கின்றனர் அல்லது நம்புகின்றனர். நம்புவதுமில்லை. அதற்கு எல்லாம் தெளிவான பிசிறில்லாத வரையறையுடனான பதில் கிடையாது.



ஒருவர் பாலில் உள்ள வெண்ணெய், தயிர், மோர் என்பர் பலர் இதைப் பற்றி எல்லாம் தமக்குத் தாம் அதிகம் தெரியும் என்பது போல பேசி, எழுதி, ஏமாற்ற முனைவர்.


உயிர் காக்கும் மருத்துவரை அவரால் காப்பாற்றப் பட்ட நோயாளி நீங்கள் தாம் கடவுள் என்பர்

அப்படி கடவுளின் தன்மைகள் இடத்துக்கேற்ப நடக்கும் சம்பவத்திற்கேற்ப உருப்பெற்றபடி இருக்கும். உருவமாகவும் உருவமற்றதாகவும். வடிவமாகவும் வடிவமற்றதாகவும்.


சிறுமி வன்புணர்ச்சிகளில் கேரள இயற்கை பேரிடர், சுனாமி, நில நடுக்கம், எரிமலைச் சீற்றம் இன்ன பிற கோள்களின் பெருக்கம், விண்மீன்களில் சிதைவு இதில் எல்லாம் எங்கே கடவுளின் பங்கைக் காணோமே என்றெல்லாம் சிந்தித்தபடி இருக்கலாம்.


பிறர் கண்ணீர் துடைக்க உனது கரங்கள் நீளுமானால் நீதான், நீங்கள்தாம் கடவுள். கடவுளின் பிரதிகள்தாம்.கடவுளின் பிரதிநிதிகள்தாம்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


பி.கு: ஒலிம்பிக்ஸில் இது வரை நீச்சல் போட்டிகளில் உலக சாம்பியன்சிப் என‌ 21 பதக்கங்கள் 8 தங்கம் உட்பட 13 ஒலிம்பிக் பதக்கங்கள் பெற்ற கேட்டி ஜெனிவீவ் லெட்ச்சிக்கி என்ற அமெரிக்கப் பெண்ணை விட அவரது உடலை அவர் பயன்படுத்தியதை விட நீங்கள் செய்த செயல் எனை அதிகம் இரசிக்க வைத்துள்ளது தோழர்களே.


No comments:

Post a Comment