சொல்ல முடியா ஒரு இனிய கீதம்:கவிஞர் தணிகை
ஜமுனா ராணி, ஜானகி பாடகிகளின் மறைவல்ல இந்தப் பதிவில் சொல்வது...
செல்வன் பிரஸ் செல்வன் (எ) நாகராஜ் வயது 73 பற்றியது.
மேட்டூரில் ஒரு காலத்தில் செல்வன் பிரஸ் என்பதுதான் முன்னணி அச்சகம்.இன்று காகித தினம் மற்றும் தாய்ப்பால் தினம்.
இரண்டிலுமே இந்த செல்வன் பிரஸ் வாழ்வோடு இணைந்திருந்தது.
ஒரு வாழ்வைப் பற்றி முழுதுமாக சொல்ல ஒரு பக்கம் போதாது.
நிறைய நிறைய சொல்ல உண்டு, ஆனால் எவ்வளவு சொன்னாலும் நிறையாதது இது.
ம.துரைசாமி என்ற பெரியவர் வலது கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த ஒரு சிறந்த தொழிலாளி, மேட்டூர் பியர்ட்செல் என்ற மேட்டூரின் பெரும் பேர் சொன்ன ஆலையில் பணி புரிந்து கொண்டே சிறிதாக தனது ஒரே மகனது செல்லப் பேரில் சிறிதாக ஒரு அச்சுக் கோர்க்கும் அச்சகம் ஒன்றை சிறிதாக ஆரம்பித்தார். கடுமையான உழைப்பாளி என்பதால் அந்த அச்சகம் பேர் சொல்லி விரைந்து வளர்ந்தது. இப்போது இதில் சொல்லப் பட்டுள்ள அச்சகமோ, அவரோ, அவர் பணி செய்த பஞ்சாலையோ, அவரது மகன் செல்வம் என்ற நாகராஜோ இல்லை.
ஓரளவுதான் படிப்பு. பள்ளி வாசலை முடித்தவுடனே கல்லூரி வாசல் வரை சென்றாரா என்பது கூட என் நினைவில் இல்லை. செல்வனை சொந்தத் தொழில் பார்க்க வைத்துவிட்டார் பெரியவர்.சாப்பிட்ட நேரம் தூங்கிய நேரம் போக இவர்களது குடும்பத்தில் அனைவர்க்குமே அச்சகத் தொழிலே வாழ்க்கை. செல்வம் பிரஸ் என்பது விநாயகா கம்ப்யூட்டர் பிரிண்டிங் பிரஸ் ஆகி அதுவும் இல்லாமல் போனதெல்லாம் ஒரு வாழ்க்கை வரலாறு.
எல்லாவற்றையுமே சொல்லும் நோக்கமல்ல நமது. ஆதி முதல் எனது பணி வாழ்க்கையின் அந்தம் வரை இந்த செல்வம் பிரஸ் எனது எழுத்துகளுக்கு ஒரு ஊன்று கோலானது.எனது புத்தக ஆக்கத்திற்கு உறுதுணையாக இருந்தது. தெய்வா பதிப்பகத்தின் அச்சகமாக இருந்தது.
மலிவான குறைந்த தேவையான விலை நிர்ணயம் பெரும் பலம். எனவே உள்ளூர் ஆலைகள் முதல் வெளியூர் நிறுவனங்கள், பள்ளிக் கல்லூரிகள் அனைவருமே இவர்களை நாடிய ஒரு காலம் இருந்தது.
சிவந்த தேகம், சுருட்டை மயிர், எப்போதும் தவழும் புன் சிரிப்பு, எளிய தோற்றம், வெட்டி பந்தா எல்லாம் இல்லை. இருக்காது.அழகிய உருவம். இவர் தந்தை என்னதான் திட்டிக் கொண்டே இருந்தாலும்...செல்வன் எவரிடமும் சண்டையிட்டோ, கோபமுற்றோ நான் பார்த்ததில்லை. அதற்கு அப்படியே எதிர்ப்பதமாக யாம் இருந்ததால் அவரை எனக்கும் என்னை அவருக்கும் மெத்தப் பிடிக்கும். எனது எழுத்துகளின் வடிவத்தை நான் விரும்பியபடி வரும் வரை இருவருமே விட மாட்டோம்.
அது அவரது துணைவியாருக்கு பல சமயம் பெரும் இடைஞ்சலாக எங்கள் இருவருக்கும் சகோதர சகோதரி மோதல்களாகவும் இருந்தது. மனிதர் ஒரு வார்த்தை கூட என்னதான் இருந்தாலும் நீ அப்படி எனது துணையாரிடம் பேசி நடந்து கொள்ளக் கூடாது எனப் பேசியது கிடையாது. அப்படிப்பட்ட கனவான்.பெருந்தன்மை. எனக்கு கர்ணன், துரியோதணன் கதையை நினைவூட்டுகிறது.
ம.து அவர்கள் என்னை வியந்து, எனது ஆற்றலைப் புகந்து, எனக்கிருக்கும் திறத்துடன் ஒரு பத்திரிகை ஆரம்பித்து நடத்தச் சொன்னதுண்டு...ஆனால் அது போன்ற தவறை நான் எப்போதுமே செய்யத் துணியவில்லை.
அவர் எனது மகனுக்கு குழந்தைப் பருவத்தில் சேர்த்து சேமித்து வைத்த காமிக்ஸ், கதைப் புத்தக சேர்க்கைகள் இன்றும் எங்களது குடும்ப நூலகத்தில் இடம் பெற்றுள்ளது. பழைய கால தினமணி எல்லாம் இவர் வழங்கிய செய்திகளில் திருப்பூர் குமரன் ஊர் தாராபுரம் காங்கயம், திருப்பூர் அல்ல அவர் மொய் வைக்காமல் இரவோடு இரவாக அவமானப்பட்டு ஊர் விட்டு ஊர் கிளம்பிய வரலாறு எங்கள் குடும்ப வாழ்விலும் மொய் பழக்கம் வெளியேறக் காரணமானது.
எனது அளவுக்கு மிஞ்சினால் என்ற பாலியல் விழிப்புணர்வு நூல் அவர்கள் குடும்பத்தில் 3 பெண் பிள்ளைகள் வாழ்வில் திருப்பு முனையாக ஆண் வாரிசுகள் வரக் காரணமானது வம்சம் விளங்க.
சில நாட்களுக்கும் முன் தமது பெரிய மகள் வீட்டில் பெங்களூரில் இவர் சாப்பிட முனைந்த சப்பாத்தி மூச்சுக் குழலில் அல்லது தொண்டையில் சிக்கி மரணத்திற்கு காரணமானது . இவரது பெற்றோர் ஆயுள் தொண்ணூறுகளைத் தாண்ட இவர் 73ல்
ஆச்சரியமாக இருந்தது நம்ப வேண்டியும் நேர்ந்தது.
மனிதர் எதைப்பற்றியும் கவலைப் படமாட்டார், சி.பி.யூவை அப்படியே தூக்கிக் கொண்டு சேலம் வரை பேருந்தில் சென்று அதில் இருக்கும் மேட்டரை எடுத்து பணிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தார் ஒரு முறை சேலத்து ஜாப் ஆர்டர் கடைகளில்...எனக்கு அது வித்தியாசமாக இருந்தது...நள்ளிரவில் இருவரும் செவ்வாய்ப்பேட்டைக்கு ஒரு நிறுவனத்துக்கு வேலை செய்ததற்கான தொகையை கொடுக்க முன் செல்லாமல் அவர்களையே வந்து வாங்கிச் செல்லும்படி சேலத்து பேருந்து நிலையம் அருகே காத்திருந்(த)து சேலத்து செம்மையால் தயங்கி தயங்கி பின் வாங்கியது எல்லாம் சொந்த நடைமுறை.
தொழில் முறைக்கும் மேலாக சார்ந்த ஒரு பிணைப்பு எங்களுக்குள் இருந்தது. அப்படிப் பட்ட தோழமை அவருடையது...அவர்களுடைய குடும்பத்துடையது...
இவரது தந்தை நாங்கள் சிறுவர்களாக இருந்த போது ஆரம்பித்து நடத்திய மார்க்ஸ் மன்றத்தின் நூலகத்தில் நிறைய சோவியத் ரஷிய கம்யூனிஸ நாவல்கள் படிக்க நேர்ந்தது.
இவரது தாய் குழந்தையாயிருந்த எனது செல்வனுக்கு நல்லெண்ணெய் விட்டு பிசைந்த சோற்றை ஒரு முறை ஊட்டி விட்ட வாசம் இன்னும் என்னுடன் இருக்கிறது....
மறுபடியும் பூக்கும் முதல் கவிதை நூலை செய்யும் முயற்சியில் சேலத்தில் இவரது அச்சகத்தில் காகிதங்களோடு காகிதமாக இரவு படுத்து கரப்பான் பூச்சி கடித்து கை விரலில் காலையில் இரத்தம் வந்த சுவடு இருந்தது கூட பின் நினைத்துப் பார்க்க இனிமையானது...
ஆனால் இவர்கள் எவருமே இன்று இல்லை...இன்று எதுவுமே இல்லை. நினைவலைகள் தவிர...
காலம் மிக விரைவாக சென்றபடியே இருக்கிறது...ஆக்க பூர்வமாக எதையாவது செய்ய வேண்டியே இந்தப் பதிவும்.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.