Monday, April 11, 2022

விலங்கு: கவிஞர் தணிகை

 விலங்கு: கவிஞர் தணிகை



அருளானந்தம் சலித்துக் கொண்டார், எங்கே போகிற எழவு எல்லாம் இங்கேயேதான் வந்து முடிய வேண்டுமா? நானேதான் அதை எல்லாம் செய்ய வேண்டுமா? மிகவும் துக்கமாக இருந்தது அவருக்கு.

அந்த அரை சைஸ் உள்ள பெண் பன்றி ஒன்று அவர் வீட்டருகே பின் புறமாய் ஓடும் கழிவு நீர் ஓடை ஒன்றில் இறந்து கிடந்தது வாயில் வெண்ணிற நுரை தள்ளி இருந்தது.


ஏற்கெனவே ஒரு முறை அப்படி இறந்து கிடந்த‌ ஒரு நாயை இவர்தான் புதைத்து இருந்தார். அக்கம் பக்கம் இருக்கும் எவருமே வேடிக்கைதான் பார்த்தார்களே தவிர அதன் விளைவு என்ன, அதை என்ன செய்ய வேண்டும் சுற்றுப் புறம் அப்படியே விட்டால் துர்நாற்றம் வீசுமே கிருமித் தொற்று ஏற்படுமே என்ற கவலை எல்லாம் எவர்க்கும் இல்லை.


அந்த நன்னீர் ஓடையாய் இருந்த ஓடை, மீன் பிடித்துக் கொண்டிருந்த ஓடை , மனிதர்கள் மீன்களுக்காக கட்டி வைத்திருக்கும் படலில் தேங்கியிருக்கும் மீன்களை பாம்புகள் வந்து இரையாகத் தேடித் தின்று கொண்டிருந்த ஓடை  இப்போது கழிவு நீர் ஓடையாக இருந்தது.கெம்ப்ளாஸ்ட் என்னும் இரசாயன ஆலையால் அதன் கழிவுநீரால் காவிரிக்கரையோரம் இருந்த அந்த சில ஊர்களின் மண் வளம் நீர் வளம் யாவும் இரசாயனக் கழிவாகின, குடிநீர்க்கிணறுகள் மூடப்பட்டு  வீட்டில் ஆளுக்கு ஒரு கிணறு என்று வைத்திருந்த குடிமக்கள் குடி நீருக்காக பிச்சை எடுக்க ஆரம்பித்தது இன்னும் முடிவுக்கே வர வில்லை...அதெல்லாம் வேறு கதை அதில் 60 வருட அரசியல் கழிவு கலந்திருந்தது.

 பன்றிகள் சுத்தம் செய்யும் தொழில் செய்து வந்தன. சிறுவராக இருந்த போது பன்றிகள் மேல் ஒரு அசூயை இருந்த நினைவை வளர்ந்த பின் அருளானந்தம் மாற்றிக் கொண்டார், அவையும் இல்லை என்றால் அவற்றால் ஏற்படும் சுத்தத்தை யார் தான் செய்கிறார் இங்கே... மேலும் பைபிளில் ஜீசஸ் ஒரு இடத்தில் ஆவிகளை பன்றிக் கூட்டத்தின் மேல் ஏவி அவற்றை கடலில் விழச் செய்தார் என்ற செய்தியை விமர்சித்தார் ஏன் அவை மட்டும் உயிர்கள் இல்லையா அவை என்ன பாவம் செய்தன? பாவிகளை இரட்சிக்கவே வந்தார் என்கிறார் இந்த அப்பாவி உயிர்கள் மேல் அவருக்கு கருணை இருந்திருக்கக் கூடாதா? என்றெல்லாம் யோசிப்பார்... 


என்ன செய்வது என யோசித்துக் கொண்டே நடைப்பயிற்சியை மேற்கொண்டார், எப்படி செய்வது ஒரு நீண்ட கடப்பாரையை வைத்து ஓடும் நீரில் நடுப் பள்ளத்தில் தள்ளி விடலாமா? அப்படி தள்ளினாலும் அது நீரால் அடித்துச் செல்லப் படுமளவு அதிக நீர் போகவில்லையே... அதனால் ஏதும் எங்க பக்கம் ஏன் தள்ளினீர் என வம்பு செய்யவே தயாராய் இருக்கும் முனியம்மா வந்து விடுவாளா? சரக் என ஒரு மரக் கிளையை வெட்டினாலும் முருங்கை கிளை ஒடிந்தாலும் போதும் அவள் அந்த ஓடையின் அக்கறையிலிருந்து எட்டிப் பார்த்து பிலாக்கணம் பாடுவாளே...ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்ட வந்த கதையாயிற்றே..முனியம்மா முந்தா நாளில் முளைத்த காளான், இவர் பிறந்து வளர்ந்து 60 வயதாகி அங்கேயே இருந்து வருகிறார், அவரை அந்த பிடாரி விரட்ட ஆரம்பித்த கதை இவரால் செரித்துக் கொள்ள முடியாதது. இரவானதும் எவருக்கும் தெரியாமல் தள்ளி விட முடியுமா?


அல்லது 2 லிட்டர் பெட்ரோல் வாங்கி ஊற்றி எரித்து விடலாமா? வேண்டவே வேண்டாம் வம்பாகிவிடும். நாற்றம் அடிக்குமே...



அந்த தாய்ப் பன்றியின் பல குட்டிகளும் தாய் உயிரோடிருப்பதாக எண்ணி எண்ணி ஒன்றை ஒன்று முட்டிக் கொண்டு பால் மடியைக் கவ்வி உறிஞ்சி குடிக்க முனையும் பரிதாபம்...கண்களில் ஓடியது.


சுமார் ஒன்னரை மணிக்கும் மேல் சுமார் இரண்டு மணி நேரமே இருக்கும்  நடைப்பயிற்சியை முடித்துஇரவின் ஆரம்பத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார் அந்த வளவில் ஒற்றைப் பனையருகே வேலியோரம் எதையோ கருக்கிக் கொண்டிருந்தார்கள்...அருகே நெருங்கினால் பன்றிதான். அன்று சனிக்கிழமை.விடிந்தால்/விடிந்தவுடன்  ஞாயிறு சந்தை நாள். 


என்னப்பா அந்த பள்ளத்தில் கிடந்த பன்னியா? பார்த்துப்பா  வாயில் ஏதோ வெள்ளை நுரை இருந்தது திங்கக் கூடாததை ஏதோ தின்று இருக்கும் போல இருக்கு... எதுக்கும் எச்சரிக்கையாய் இருங்க என்று சொல்லி விட்டு ஒரு பிரச்சனை தீர்ந்தது என்று பெருமூச்சு விட்டபடி வீட்டை அடைந்தார்.


என்னப்பா பன்றியை எடுத்துக் கொண்டு சென்று தீய்த்துக் கொண்டிருக்கிறார்கள்...என வாசுகியைக் கேட்டார். ஆமாம் நீங்கள் அந்தப் பக்கம் போனதும் இந்தப் பக்கம் வந்து எடுத்துச் சென்று விட்டார்கள். அவர்களுக்குத் தெரியும் போல் இருக்கிறது. எண்ணிக்கை கணக்கு மாலையில் பார்ப்பார்கள் போலும்,மேலும் அந்த சிறு குட்டிகள் தாயின்றி தவிப்பதை வைத்தும் தெரிந்து கொண்டிருக்கலாம்.

*****************************************************************************************************


PART II.


ஏனோ இவருக்கு , தொலைக்காட்சியில் சிசி டிவியில் பதிவானது என பிள்ளைத் தாய்ச்சி பெண் தோழியுடன் மருத்துவமனை சென்று பிரசவித்து குழந்தையை கொன்று கழிவறையில் வீசிச் சென்ற காட்சியும்,

ரயில்வே ரோட்டில் உயிருடன் பெண்குழந்தையை பொதுமக்கள் காவலர் உதவியுடன் எடுத்து காவல் நிலையம் சேர்த்ததும், கள்ளக் காதலுக்காக பிள்ளைகளைக் கொடூரமாக கொன்று விடும் செய்தியும்


தாயும், மகனும் மாதக் கணக்காக குடித்தபடியே இருந்து, சோறு இல்லாமலே இருந்து இறந்த செய்தியும்


பீடிக்காக அவனைக் கொன்றேன் என குடிகாரன் தந்த வாக்கு மூலமும்,

 சிறுமியை வன்புணர்ச்சி செய்யும் விடலை, வயோதிகம் பற்றிய செய்தியும்,


 சொந்த தந்தையே மகளை வன்புணர்ச்சி செய்த பின் தங்கை வயசுக்கு வந்ததும் அவளையாவது காப்பாற்றலாம் அவளையும் விடமாட்டான், நமது வாழ்க்கையைத்தான் பெற்ற அப்பனே சீரழித்து விட்டான் என இந்தப் பெண் ஏன் இப்படி இருக்கிறாள் எனக் கேட்ட பள்ளி ஆசிரியைகளிடம் நிலையைச் சொல்லி தங்கையையாவது தந்தையிடமிருந்து காப்பாற்றிவிடலாம் என உண்மையை சொல்லி தந்தைக்கும் தாய்க்கும் தண்டனை பெற்றுக் கொடுத்த‌ (இது தெரிந்த தாய் ஒரு முறை தந்தையை வெளக்கமாறால் அடித்து பயனின்றி விட்டு விட்டதால் அவளும் உடந்தை என அரசு வழி கைதான) செய்திகளும்,


பெற்ற தந்தையே தனயனை, பேரன் பேத்திகளை, மருமகளை வீட்டில் பூட்டி விட்டு , நீர்த் தொட்டியைக் காலி செய்து, மின்சாரத்தை துண்டித்து, தப்ப முடியாமல் படுக்கையறைக்குச் சென்றதும் பெட்ரோல் ஊற்றி கொளுத்திய செய்தியும்



மேலை நாடுகளில் இருந்தபடி குழு பாலியல் உறவை மேற்கொண்ட நாடு தழுவிய செய்தி கடவுளின் தேசத்தில் இருந்து புறப்பட்டிருந்த செய்தியும், எப்போது பார்த்தாலும் பெண்களின் நிர்வாணப் படங்களை இணையத்தில் போட்டு விடுவேன் என பயமுறுத்தி வன்கொடுமை செய்வதும் பணம் பறிக்கும் செயல்கள் செய்தி வரும் நாளிதழ்களும்,


அனைவரிடமிருந்துமே மாற்றம் என்பது வர வேண்டும்

ஒவ்வொருவரிடமிருந்துமே அது துளிர் விட வேண்டும்...

அப்போதுதான் ஒரு சமுதாய மாற்றம் சாத்தியம்

 அதற்கு உழைப்பை நல்க வேண்டும்...

THERE IS NO ACHIEVEMENT WITH OUT SACRIFICE ...DR.S.RADHAKRISHNAN


அந்த ஓடையை புதிதாக பொறுப்பேற்றிருக்கும் பஞ்சாயத்து சுத்தம் செய்து மராமத்து, பராமரிப்பு, சுற்று சுவர், நீர் ஓடைக்கு கான்க்ரீட் நீர்ப்பரப்பு எனச் செய்வதாக சொல்லி இருக்க....மக்கள் மறுபடியும் குப்பைகளை அதில் வந்து கொட்டாதீர் என சொல்லியும் எவரும் கேட்பதாக இல்லை. பாலத்தின் மேல் சிசிடிவி வைத்து கண்காணித்து அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கும் காலமும் வருமோ?


சுத்தம் செய்யும் ஜுவன்கள் அசூயை படைத்ததா?

அவற்றைக் கூட சாகடிக்கும் நச்சு மரங்கள் பெருமை படைத்ததா?

அருளானந்தத்தின் கேள்விகளுக்கு பதிலே கிடைப்பதில்லை பதில் ஒன்றே என்றிருந்த போதும்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.







No comments:

Post a Comment