Monday, March 19, 2018

கந்தன் கருணையும் கீற்றுக் கொட்டாயும் : கவிஞர் தணிகை

கந்தன் கருணையும் கீற்றுக் கொட்டாயும் : கவிஞர் தணிகை

Image result for kandan karunai movie


நடைப்பயிற்சியில் இருந்தேன். ஒரு டெம்போ முன்னால் கந்தன் கருணை என எழுதப்பட்டதைப் பார்த்தவுடன் எனது நினைவு பட்டுத் தெறித்தது 50 ஆண்டுகள் பின்னோக்கிப் பாய்ந்தது.

அப்போது எனக்கு 5 வயதாக இருக்கும். அனேகமாக ஒன்றாம் வகுப்பில்தான் இருந்திருப்பேன். ஆனால் அந்தப்படத்தை பார்த்ததை இன்னும் மறக்க முடியவில்லையே...இப்போது திரையரங்குகளில் சினிமாக் காட்சிகள் இரத்தானது சமூகத்தில் எந்தவித பாதிப்புமே ஏற்படுத்தவில்லையே...அந்தளவு சினிமா இன்று வீட்டுக்குள் வந்து ஒவ்வொரு வீட்டையுமே சினிமா தியேட்டராகவே மாறி உள்ளது...

எனது தாய் தெய்வானையம்மள் இறந்தே இப்போது 12 ஆம் ஆண்டில் இருக்கிறோம். 50 ஆண்டுக்கும் முன் அவருடைய வனவாசி அத்தை , எங்களுக்குப் பாட்டி...ஆனால் பெரியவர்கள் அப்பாவை அண்ணா என்று சொன்னால் நாங்களும் அண்ணா என்பதும் அவர்கள் அத்தை என்றால் நாங்களும் அத்தை என்பதும் அப்போதைய வழக்கம்....

அந்த அத்தைக்கு அதாவது அந்த பாட்டிக்கு கால் விரல் எல்லாம் வலைந்து நெளிந்து கோணலாக இருக்கும், அவர் வீட்டுக்கு வந்திருந்தார். அவர்களுடன் சுப்பி அத்தை  அதாவது தாரமங்களத்திலிருந்து வேறொரு பாட்டியும் இருந்ததாக நினைவு...

எல்லாரும் சேர்ந்து குடும்பத்துடன் கந்தன் கருணை கீற்றுக் கொட்டகைக்கு ஆமாம் அப்பொது அது டென்டுக் கொட்டாயோ தகரக் கொட்டாயோ கூட இல்லை. கொஞ்சம் நடக்கும் தூரம் தான். ஒரே மணல் பரப்பு. சினிமா அப்போதெல்லாம் ஒரு வித்தை, வாழ்விற்கு மாறான ஒரு விந்தை.அந்த நடிகர்கள் எல்லாம் தேவைதைகளாகவே தெரிந்தார்கள்...கமல் இன்று மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று மக்களுள் மக்களாக ஒருவராக வரத் துணிந்தை நாம் பாராட்ட வேண்டும்.

ஆனால் அப்போது  அந்த நடிகர்கள் எல்லாம் விண்ணிலிருந்து வந்த தேவ தூதர்களாகவே இருக்க வேண்டும் என்பது போன்ற ஒரு பெருமை,கற்பனையும் கூட... தொழில் நுட்பம் பெரிதும் மலராத அந்தக் காலத்திலேயே ஏ.பி. நாகராஜன், கே.வி.மகாதேவன், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்ரி, ஜெயலலிதா, கே.ஆர்.விஜயா, குழந்தை ஸ்ரீதேவி, சிவகுமார், நாகேஷ் கே.பி. சுந்தராம்பாள், மனோரமா, கே.பி.சுந்த்ராம்பள் எல்லாம் ஒரு கலக்கு கலக்கி இருப்பார்கள்...

 ஆனால் அதே சிவாஜியை கல்தூண் படப்பிடிப்புக்காக பொள்ளாச்சி சேத்துமடையில் ஒரு நண்பரை அவரது இரசிகர் என நான் அறிமுகப்படுத்தியபோது தலையெல்லாம் கர்வம் தொனிக்க அவர் ஏதும் பேசாது போனபோது அந்த மனிதர் மிகவும் சிறியவராக மாறிப்போனார் நெஞ்சில்...எவ்வளவு பெரிய கலைஞர் ஆனாலும் கர்வம் அவர்களை கீழே இறக்கி விட, எம்.ஜி.ஆர் போன்றோர் மக்களிடையே பழகி மேல் ஏறிப் போனார்

அதற்காக அந்த சிவாஜியை மறக்கவா முடியும், அது அதிக பட்சமான நடிப்பு என்றாலும் கூட அந்த வீரபாகு நடக்கும் நடையும், திருவிளையாடலில் அந்த சிவன், நடக்கும் நடையும் வேடிக்கை பார்க்கும் அளவிலான மிகையான நடிப்பிலேயே இருந்தன...மனிதரை ஒட்டி படங்களில் நடித்தே போலியாக பக்கத்தில் வாழ்ந்த எம்.ஜி.ஆர் கலைஞர் என்னும் நட்பு துரோகத்தில் இருந்து விடுபட்டு ஒரு மாநிலத்தில் இரட்டை இலை என்னும் இருவிரலைக் காட்டி நாடாண்ட முதல்வரானார். அவரின் வெள்ளைத்தொப்பியும், வலதுகை சட்டை மேல் கட்டிய வாட்ச்சும், கையில் எப்போதும் இருக்கும் கைக்குட்டையும் அவரது தலை சொட்டை என ஒன்றிரண்டு புகைப்படங்கள் காண்பித்தாலுமே மக்கள் மனதில் நின்றவை அந்த புஸு புஸுவென்ற தொப்பியும் வேட்டியும் சட்டையும் மன்னனாக ஆண்டு விட்டான் அந்த நாடோடி.Image result for kandan karunai movie

ஜெயலலிதா போன்றோர் அவரிலிருந்து உருவாகி வெளியேறி எப்படி தன்னையும், நாட்டையும் ஆட்டிப் படைத்து இறந்தது எப்போது எனக் கூடத் தெரியாமல் சேர்த்த சொத்துள்ளேயே புதைந்து போனார்...எல்லாமே ஒரு பாடம் மனித வாழ்வில் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

அதே வனவாசி அத்தை பள்ளிப்பளையத்தில் வாழ்ந்தபோது எங்களது குடும்ப த்திலிருந்து மூத்த பிள்ளை ஒருவரை அந்த ஊரில் இருந்த சேஷசாயி பேப்பர் மில் என இப்போதுமிருக்கும் ஆலையில் ஐ.டி.ஐ முடிந்து அரசு பயிற்சிக்கு அனுப்பியபோது மாதா மாதம் ஒரு தொகையையும் வாங்கிக் கொண்டு அந்தப் பிள்ளைக்கு அந்த அத்தை சரியாக உணவளிக்கவில்லை என்பதும் அதன் பின் அங்கு பணியில் இருந்தோர் எல்லாம் சேர்ந்து வேறொரு வீட்டுக்கு குடி பெயர்ந்து ஒரு முதியவளை சாப்பாடு செய்ய ஏற்பாடு செய்த கதையால் அந்த அத்தைப்பாட்டியின் முகம் உரிந்து போன கதையும் மறக்க முடியாமலே பின் தொடருகிறதே...அந்த மூத்தப் பிள்ளை ஒரு காலத்தில் நடக்கவும் முடியாமல் தாயிடம் தேடி வந்து தீவிரமான அம்மை நோயிலிருந்து தப்பிப் பிழைத்த கதையும் அதற்கு வீட்டில் எடுத்துக் கொண்ட அத்தனை முயற்சியும்...இளநீர், வேப்பிலை அரைக்கச் சொல்லிக் குளித்து, என்னன்னவோ தாய் அவரின் சாமியாரம்மாவின் அறிவுரைப்படி செய்த கதையை எல்லாம் தொடராக நினைவுக்கு வருவதை நிறுத்த முடிவதில்லையே...


Image result for kandan karunai movie


சினிமாவைச் சொல்வதாக சொல்லி விட்டு நாடு அரசியல் என்று போய்விட்டது எழுத்தின் நீரோட்டம்.

அந்த முருகனுக்கு வள்ளி தெய்வானை என்னும் இரண்டு மனைவிகள்...ஆனால் அவரின் அப்பாவுக்கு விநாயகர், முருகன் என்னும் இரண்டு பிள்ளைகள்...என்றாலும் முருகனுக்கும் விநாயகனுக்கும் எந்தப் பிள்ளையுமே பிறக்க வில்லை என்று எப்படி சொல்கிறார்கள் எனக் கேட்டுப் பழகும் வண்ணம் மாறிவிட்டாலும் ...அந்தக் காலத்தில் நமது தாய்மார் எல்லாம் எவ்வளவு பக்தியோடு அந்தப் படங்களை எல்லாம் பார்த்தார்கள்...பக்தி காட்டினார்கள்... சொல்லத்தான் வேண்டும்

இப்போது அம்மா என்ற பேரில் மேல் மருவத்தூர் பங்காரு அடிகளார் என்பார் மிகப்பெரிய அறக்கட்டளைக்கு சொந்தக்காரராக செவ்வரி ஆடைக் கூட்டம் அவர் பின் நிற்கிறது என்றாலும் அவரும் இன்ன பிற அனைவருமே ஒரு நாளைக்கு மருத்துவம் தேடி மருத்துவமனை சென்று சித்தி அடைந்த ஜெயேந்திரரைப் போல மறைவார்கள்தானே...உயிராய்ப் பிறந்த அனைவர்க்குமே அது உண்டுதானே...அதற்குள் ஏன் அனைவரும் ஏமாற்றிப் பிழைக்க வேண்டும்...

கீற்றுக் கொட்டாய் டிஜிட்டல் தியேட்டராய் மாறி இன்று சினிமாக்காட்சிகள் ரத்து என்றாலும் நாட்கள் எந்தவித பாதிப்பின்றியும் நகர்ந்து கொண்டேதான் இருக்கிறது

கிழமைகளின் பேரோடு காலம், நேரம் , நாட்கள் போய்க் கொண்டேதான் இருக்கிறது யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இருக்கும் வரை இருக்கும் இடத்தில் இருக்கும் இடத்தை நல்ல படியாக எல்லா உயிர்களும் வளமாக வாழ முயல வேண்டும் அதுதானே வாழ்க்கை...

தமிழ்க் கடவுள் கந்தனின் பேரோடுதாம் இங்கு தமிழ் நாட்டில் நிறைய பேர்கள்: சுப்ரமணி, தணிகை, செந்தில், வடிவேல், பழநி, கந்தசாமி, சண்முகம் இப்படி இன்னும் சொல்லச் சொல்ல இனிக்குதைய்யா முருகா...

மருத மலை மாமணியே முருகைய்யா ஒரே பாடலில் சோமு உச்சம் தொட்டு விடவில்லையா....பாவனைப் பேருணர்வு அவசியம் என்பார் விவேகாநந்தரும் கடவுள் நிலை அடைய...

மதுவும், உயிர்ப்பலியும், பொய்களும், வேட்கை, மற்றும் பிற உயிர்களைத் துன்புறுத்தி இன்பம் காண்பதும் எப்படி பக்தியாக இருக்க முடியும்....எதை எடுத்தாலும்  இந்து மதத்துக்கு எதிராக ....என்றொரு கோஷம் வேறு கேட்க  ஆரம்பித்து விட்டது அபாயகரமாக...

ஒரு ஊழி மழைக்காலத்தில் எனக்கு முதல் முடி எடுக்க பழநி நோக்கி அழைத்துச் செல்லும்போது நான் தான் முருகன் என்றும் நினைத்ததுண்டு...ஒரு ஜட்டி மட்டும் போட்டு, முடியை பின்னால் தொங்கவிட்டு கையில் அப்போதே ஒரு மோதிரம் போட்டு வாட்ச் எல்லாம் கட்டி வெறும் உடம்பில் எடுத்த முருகனைப் போன்ற போட்டோ இன்றும் என் வீட்டில் ஆனால் அது எடுக்கப்பட்ட ஆண்டு: 1967 அல்லது 1968 ஆக இருக்கலாம்
Image result for kandan karunai movie
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment