Sunday, March 5, 2017

சிற்பி கொ.வேலாயுதம்: கவிஞர் தணிகை

சிற்பி கொ.வேலாயுதம்: கவிஞர் தணிகை

Image result for kavignar thanigai


ச.மே.சிற்பி என்று தமது பேரை வைத்துக் கொண்டார் அதாவது சமூக மேம்பாட்டு சிற்பி என்று தம்மை நிறுவிக் கொண்ட எனது அன்பு சகோதரர் கொ.வேலாயுதம் இளைஞர் இணைப்பாளர் பற்றிய பதிவு இது.

1981 _ 1982 வாக்கில் இந்த மனிதரை நான் சந்தித்தேன். அப்போது இவர் சேலம் மாவட்ட நேரு இளையோர் மைய இளைஞர் ஒருங்கிணைப்பாளர்.நல்ல மனிதர்,பண்பாளர்.இவரின் தொடர்பும் நட்பும் இன்று வரை மிகுந்த காலப் புரட்டுதல்களுக்கும் பின்னும் தொடர்கிறது. அப்போது வெறும் கொ.வேலாயுதம்தான் பேர். நான் இவரை எனது சகோதர நண்பர் என்றே எனது எழுத்துகளில் குறிப்பிட்டு வந்துள்ளேன். ஒரு வகையில் சகோதர பாசத்துடன் மேலும் அதை விட நட்பு பாராட்டுதலுடனும் இருப்பவர். இன்று வயது 70க்கும் மேல் ஆகி விட்டது .முதுமை ,நினைவு மறதி எல்லாம் வந்து விட்டாலும் என்னுடன் அவ்வப்போது பேசி வருகிறார். தொடர்பில் இருந்து வருகிறார்.

இவர் அப்போது பெரும்பாலான நல்ல இளைஞர்களின் வழிகாட்டி.இவர்தான் நவ இந்திய நிர்மாணிகள் இயக்கம், காந்திய வழியில் ஊருக்குப் பத்துப் பேர் இயக்கம், தமிழக இலட்சியக் குடும்பங்கள் என்றெல்லாம் பேர் மாற்றி மாற்றி தமது சேவையை இந்த நாட்டுக்கு வழங்கி வந்தார்.அதற்கெல்லாம் இவர்தான் நிறுவனத் தலைவர். இடையில் பிராங்க்ளின் ஆசாத் காந்தி போன்ற எத்தனயோ பேர் வந்து போனார்கள்.

Image result for kavignar thanigai

இவரது தலைமையில் ஒரு இளைஞர் பட்டாளம் இயங்கியது உண்மைதான். ஆனால் அது படையாக உருவெடுக்கவில்லை என்பதுதான் எப்போதுமே எமது தீராத குறையாக இருந்தது. இவரின் குரல் பாடல் வளம் மிக்க குரல். ஆனால் சற்று மங்கிய குரல். எனவே இயக்கத்தில் எனது குரல் வளம் உரை வீச்சுக்கு பெரும் பங்கு பெற்றது.

இந்த இயக்கத்தில் இராமலிங்கம், செம்முனி,இஞ்சினியர் மணி, சின்ன பையன் இவர் மது விலக்கு வேட்பாளராக சேலம் வடக்குத் தொகுதியில் நின்று எண்ணூற்று சில்லறை வாக்குகள் பெற்ற வேட்பாளர்,சசிபெருமாள் , தமிழரசு (ஓமலூரி முன்னால் எம்.எல்.ஏ) செங்கிஸ்கான், காசாம்பு, ஜமுனா, பீபி ஜான் , புகழேந்தி வழக்கறிஞர் தங்கவேல் இப்படி பல இளையோர் உருவாக அடித்தளமாக இருந்தது.



சிந்தனையாளர் அர்த்தனாரி என்ற ஒரு பெரியவர் வருவார். இவர் தொழில் அதிபர், அதே நேரம் கம்யூனிஸ்ட்,என்பார் இவருக்கும் எனக்கும் எப்போதுமே லடாய் உண்டு. இவருக்கு காந்திய மாமனிதர் என்ற பட்டம் தருவதை திருச்சி மாநாட்டில் நான் ஆய்வு செய்த பிறகே தரவேண்டும் எனத் தடுத்து விட்டேன். அப்போது என்னை எட்டிக்காயாக பார்த்த இயக்கத்தினர் மறுபடியும் சற்று காலம் சென்றபின்னே நான் செய்தது மிகச் சரியானது என உணர்ந்து கொண்டனர். நான் தொடர்ந்தேன் .அவரால் முதுமை காரணமாக தொடரமுடியவில்லை, மல்லி ராஜா என்னும் பேராசிரியர் , சோலை அய்யர் இப்போது ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் , வின்சென்ட் இப்படி ஏராளமானவர்கள் வருவதும் போவதுமாக இருப்பார்கள். இயக்கம் ஒரு அறிவார்ந்த சபையாக அதிகமாக நானொரு சண்டைக்காரன் என்ற பேருடன் இயங்கியபடியே இருந்தது.


நான் அப்போதே ஒரு தேசிய சேவைத் தொண்டராக இவரால் மத்திய கல்வி கலாச்சாரத் துறையில் பணியமர்த்தப் பட்டேன். அந்தப் பணியில் சுமார் ஒன்னேமுக்கால் ஆண்டு பணி புரிந்தேன். அதன் பின் கிராமிய விழிப்புணர்வு மற்றும் மேம்பாட்டு இயக்கம் என்ற ஒரு இயக்கத்தின் திட்ட அலுவலராக சேலத்தில் உள்ள மலை வாழ் மக்களுக்கு பணிச் சேவை புரிய ஆரம்பித்தேன் அவரும் நானும் இயக்க ரீதியாக அலுவலக ரீதியாக ஒருவருக்கொருவர் பிணைந்து உதவி புரிந்து கொண்டோம். நல்ல வளமான நாட்கள்.ஆனால் எப்போதும் போல அப்போதும் பொருளாதார பற்றாக்குறை என்னுடன் இருந்தபோதும் அனைத்துக் கூட்டங்களிலும் ஒரு முக்கியமான நிறுவனருக்கு அடுத்த நிலையில் இருந்து பணிச் சேவை புரிந்தேன். கூட்டங்கள் அத்தனையும் எனது பேர் சொல்லியது. அப்போதுதான் நதி நீர் இணைப்பு கட்டுரை வெளியிடப்பட்டது. ஜனநாயக மறு சீரமைப்பு கட்டுரையும் வெளியிடப்பட்டது. ஆனால் மாநிலம் முழுதும் எனது பணி எதிர்ப்பார்க்கப்பட்டது .எனது உடல் நலம் ஒத்துழைக்காததால் ஒரளவுடன் எனது இயக்கப் பணிகளை மட்டுப் படுத்திக் கொண்டேன்.

அச்சமில்லை, பத்திரிகை நடத்தப்பட்டது, மாதம் ஒரு முறை மக்கள் கலைப் பண்பாட்டுக் கழகத்தின் மூலம் கவிதைப் பட்டறை, பட்டி மண்டபங்கள், உரை வீச்சுகள், தர்க்க விவாதங்கள் யாவும் நடத்தப் பட்டன.

ஒரு பக்கம் அலுவலக முறைகளில் இளைஞர்களின் எழுச்சியாக இருந்த இவர் மற்றொரு பக்கம் நாட்டின் ஆட்சி மாற்றம், இளைஞர்களின் விழிப்புணர்வு, தலைமைப் பொறுப்பு பயிற்சிகள், பணி முகாம் ஆகியவற்றை நடத்தியே வந்தார் எமது அனைவரின் சார்பாகவும். நாட்டின் எல்லா முன்னணித் தலைவர்களுடனும் கூட தொடர்பிலிருந்தார்.

அப்போது நினைத்திருந்தால் நல்ல நிலையில் ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவும் அல்லது இராஜ்ய சபா உறுப்பினராகவும் வந்திருக்கலாம். ஆனால் அதை எல்லாம் மீறிய நோக்கமாக நாட்டை கைக்கொள்ள நமது இளைஞர் வீறு கொண்ட படை தயாரிக்க வேண்டும் என்ற முயற்சியே மேலோங்கி இருந்ததால் தம்மிடம் இருந்த ஒரு இளைஞர் சாதியக் கட்சியில் சேர்ந்து எம்.எல்.ஏ ஆன போதும் கூட இவரால் எந்த பதவிக்கும் செல்ல உந்துதல் இல்லை.

இவர் பாட ஆரம்பித்தால் பெண்கள் எல்லாம் கூட்டத்தில் அழுவார்கள். நல்ல பாடல் புத்தகங்களும், இசை ஒலி நாடாக்களும் சேக்ஸ்பியர் என்ற காந்திய மன்றம் இன்னும் நடத்திவரும் அமரகுந்தியை சார்ந்த வன இலாகவில் பணி புரிந்து வரும் நண்பருடன் சேர்ந்து வெளியிடப்பட்டன.

கண்ணன், அருணாச்சலம் போன்ற இளைஞர்கள் அமரக்குந்தியில் இவருக்கு கிடைத்தனர் கண்ணன் இப்போது உதகையில் ஒரு மின் பொறியாளர், அருணாச்சலம் மகள் தாம் படித்த பொறியாளர் பல்கலையில் தங்க மெடல் பெற்ற முதல் மாணவி.

கொ.வேலாயுதம் பற்றி சொல்ல வந்த நான் இவர்களைப் பற்றி எல்லாம் சொல்ல ஆரம்பித்து விட்டேன். வேறு வழியில்லை இவர்களைப் பற்றி சொன்னாலும் வேலாயுதம் பற்றி சொன்னது போல,வேலாயுதம் பற்றி சொன்னால் இவர்களைப் பற்றியும் சொல்வது போலவே. வேலாயுதம் அந்த நாட்களில் படித்த ஒரு முதுகலை கணிதப் பட்டதாரி. கல்லூரியில் விரிவுரையாளராக பணி புரிந்த பின் மத்திய அரசின் கல்வி கலாச்சாரத்துறையில் நேரு யுவக் கேந்திராவின் சேலம் மாவட்டத்தில் பல்லாண்டுகளாக இளைஞர் ஒருங்கிணைப்பாளராக பணி புரிந்தார். கிளஸ் ஒன் ஆபிசர்தான். ஆனால் நமது சகாயம் போல, இறையன்பு போல...நல்ல எளிமையான அனைவர்க்கும் பிடித்த நல் மக்கள் சேவையாளர்தான்.

பணிக்கும் அப்பால் இவர் நிறைய நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் எனச் சொல்வதை விட நாட்டின் தலைவிதியை மாவோ போல, லெனின் போல, மாற்ற வேண்டும் என ஆசைப்பட்டார்.அனைவரையும் தம்பி என்றே அன்பொழுக அழைத்தார்.அழைப்பார். முழுக்கை மேல் சட்டை, சாதாரண கால்சட்டை அதை இன் சர்ட் கூட செய்யாமல் கைகளில் பொத்தானிடாமல் இருப்பார், இவர் குஜராத் வடோதரா பரோடாவுக்கு ரீஜினல் கோ ஆர்டினேட்டராக ஆனபோதுதான் இன்சர்ட் செய்ய ஆரம்பித்தார்.

Related image

அதன் பின் விருப்பப் பணி ஓய்வும் பெற்றார். ஆனல் சேவயை விடவில்லை.
சின்ன பையன் அதன் பின் தான் தேர்தலில் நிறுத்தப்பட்டது, சசிபெருமாள் அதன் பின் தான் செல்பேசி கோபுரத்தின் மேல் சென்று மடிந்து போனது எல்லாம் நடந்து முடிந்தது. சின்ன பையன் மறைந்து சில ஆண்டுகள் ஆகிவிட்டன.

இதில் இடம் பெறும் கேரக்டர் ஒவ்வொன்றையும் தனியாக எழுதலாம் .அதை பின் வைப்போம். இன்குலாப், ஆடிட்டர் ரமேஷ், பீட்டர் அல்போன்ஸ், போன்ற பிரபலங்களை எல்லாம் எமது நிகழ்வுகளின் போது சந்தித்தேன். மேலும் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த எம்.எப். பாரூக்கி அப்போது எமது இருவருக்கும் நல்ல நட்பு பாராட்டி வந்தார்.அன்றைய காலக் கட்டத்தில் இப்போது திராவிடர் கழகத்தின் முன்னணித் தலைவரான அருள் மொழியுடன் கூட எமது நட்பு இருந்தது இன்றும் பசுமையாக இருக்கிறது. அவரும் நானும் அப்போது இளையவர்கள். அவர் பாரதி தாசனையும் நான் பாரதியையும் உயர்த்திப் பிடித்துப் பேசியபடியே அறிவார் விவாதம் செய்து கொள்வோம்.

இராசாராமின் சபாநாயகராகவும் தமிழக அமைச்சராகவும் இருந்த அதே இராசாராம், அவரது மூத்த சகோதரர் ஜெயசீலன் ஆகியவர்களையும் அந்தப் பருவத்தில் சந்தித்தேன்.

இவரின் துணைவியார் இந்த சேலம் மாவட்டத்தில் ஒரு கை தேர்ந்த மகப்பேறு மருத்துவர் டாக்டர் வள்ளி வேலாயுதம் , இவர் அன்பு மருத்துவமனை என்ற ஒன்றை நிறுவி தமது அரசுப்பணியை விருப்ப ஓய்வு கொடுத்து விட்டு வந்து முடிந்த வரை எளிய பொருட்செலவில் மக்களுக்கு மருத்துவம் செய்தார். மேலும் இவர்களது 2 மகன்கள் விமல்ராஜ், சார்த்தி ஆகிய இருவருமே முதுகலை மருத்துவம் பட்டம் பெற்று அவர்களது துணைவியார்களையும் மருத்துவர்களாகவே தேடிக் கொண்டனர். எனவே நான் இவர்கள் குடும்பத்தை சிசுருதர் குடும்பம் என்று செல்லமாக அழைப்பதுண்டு. 5 மருத்துவர்கள்  இவரது குடும்பத்தில். அனைவரும் இப்போது சென்னையில். நான் அளித்த அந்த ஒர்  திருமண வாழ்த்து இப்போதும் அவர்கள் வரவேற்பறையில் இடம் பெற்றிருப்பதாக அவர் சொல்வார்.

சசிபெருமாள் தமது சத்தியாக்கிரக உண்ணா நோன்பு மதுவிலக்குப் போராட்டம் ஆரம்பிக்கும் முன்பே சென்னையில் கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோதே இந்த அணியினர் உண்ணாநோன்பை 30 பேர் அடங்கிய குழுவாக இருந்து சாதிக்க துணை புரிந்தனர். மேலும் ஒகேனக்கல் கூட்டு குடி நீர்த்திட்டத்திற்கு இந்த இயக்கப் பெண்டிர் தான் முதலில் போராடி சிறை சென்றனர்.

இந்த மனிதரை நான் சந்தித்தது ஒரு நல்ல சம்பவம் மூலம் என்றாலும் கூட மற்றொரு போட்டியில் இடது சாரி கருத்தை சிந்தனையை விதைத்த காரணத்தால் ஒன்னும் சரியாக செய்யாத பெண்களுக்கு போட்டியில் பரிசளித்த மாவட்ட குடும்ப நல அலுவலருடன் சண்டை . அப்போது போட்டியில் நான் தோற்றபோதிலும் இந்த அரிய மனிதர் கிடைத்தார்.அதில் இராஜா போன்ற இளைனர்கள் எனது பக்கம், எனது பேச்சை பார்த்து அசந்து போன இளையோர் பட்டாளம் எப்போதும் எல்லா கூட்டத்திலும் எனது பேச்சை கேட்க பேராவல் கொன்டிருந்தது. ஒரு உயர்ந்த நிலையில் உள்ள அரசு அலுவலர் மத்திய அரசுப் பணியில் இவ்வளவு எளிமையுடன் இருக்கிறாரே என அவரை எனக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. அவரும் என்னுள் இருந்த என்னைக் கண்டு முதல் அங்கீகாரம் அளித்து என்னை எல்லா நிலையிலும் தக்க வைத்துக் கொண்டார். நாங்கள் ஒருவருக்கொருவர் சகோதர நண்பர்களானோம், குடும்ப நண்பர்களுமாக இருந்தோம்.இருக்கிறோம் .இன்று அடுத்த தலைமுறை அடுத்த தலைமுறை எனக் காலம் ஓடிச் சென்று எமை எல்லாம் வீழ்த்தியபோதும் வாழ்த்தியபோதும்...

Image result for kavignar thanigai

இயக்கத்தை ஒரு கட்டுப் பாட்டில் வைக்க எண்ணி எவரையும் அநாவசியமாக சிறைக்கனுப்பாமல் இவர் தலைமையில் இயக்கம் சென்றது ஒரு வகையில் பார்த்தால் சரியானது என்றபோதிலும் அதனால் தான் வளரவில்லையோ என்று இப்போது நினைக்கவும் தோன்றுகிறது. சசி பெருமாள் போன்றோர் இயக்க கட்டுப்பாட்டை மீறி பிச்சை எடுத்ததும், குடிகாரர் காலில் விழுந்து குடிக்காதே எனக் கெஞ்சியதும் என்னால் கண்டிக்கப்பட்டது. இவரே ஒரு காலக்கட்டத்தில் ஒரு அரசு மருத்துவரை பணி நேரத்தில் செருப்பால் அடித்து விட்டு சிறை சென்றவராக இருந்தார் என்பது எம் போன்றோருக்கு மட்டுமே தெரியும் காலம் சசியை எப்படி மாற்றி விட்டது...ஊடக விளம்பரங்களும்தான்.

நமது சுதந்தரப் போராட்டத் தியாகிகளில் எத்தனையோ பேர் பேர் தெரியாமலே மறைந்து போயினர். அப்படி இந்த வேலாயுதம் என்ற ஒரு நல்ல மனிதரின் சேவையும் மறைந்து போய் விடக் கூடாதே என்ற கோணத்திலேயே இந்த பதிவு அவருக்குரிய வணக்கத்தை தெரிவிக்கிறது.
Image result for kavignar thanigai


மேலும் இதில் சொல்லாமல் விட்டது நிறைய. சொல்லியது கை அளவு இப்போது நினைவுடன் இருந்தது மட்டுமே... எனக்கு குடி நீர் பிடிக்கும் வேலை...வீட்டில் எவரும் இல்லை ...எனவே அது போன்ற அன்றாட வாழ்வின் தேவைகள் நமது சாதனை சரித்திரத்தை எல்லாம் ஒரு சிறு பதிவாக்கி விட்டு காலத்துள் கரைந்து போக வைத்து விடுகிறது. லெனின் சரித்திரத்தை யெல்ட்சின் என்ற ஒரு புண்ணாக்கு சின்னா பின்னப் படுத்தியதே ரஷியாவில் நமக்கு அது நினைவிலிருக்கிறது.

Image result for kavignar thanigai

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.





4 comments:

  1. சிற்பி கொ.வேலாயுதம்: கவிஞர் தணிகை = அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு Tanigai Ezhilan Maniam

    ReplyDelete
    Replies
    1. thanks for your feedback, comment and sharing of this post sir. vanakkam. please keep contact.

      Delete