Sunday, March 25, 2018

கொஞ்சம் கீதை கொஞ்சம் பைபிள் கொஞ்சம் குரான்:- கவிஞர் தணிகை.


கொஞ்சம் கீதை கொஞ்சம் பைபிள் கொஞ்சம் குரான்:- கவிஞர் தணிகை.
Image result for gita bible quran

கொஞ்சம் கீதை,கொஞ்சம் பைபிள்,கொஞ்சம் குரான் என்று  மூன்று பிரதானமான மதங்களின் சிறு துளிகள் உங்கள் பார்வைக்கு.இதை நேர்மறையாக பார்ப்பதும், எதிர்மறையாக பார்ப்பதும் அவரவர் அறிதல் புரிதல்,தெளிதல் உணர்தல் அகம் புறம் சார்ந்தது.



கீதை:

எது தொடக்கத்தில் விஷத்தை ஒத்ததும் விளைவில் அமிர்தம் ஒப்ப மாறுவதோ,அந்த இன்பமே சாத்விகம் ஆகும். அது தன் மதியின் விளக்கத்திலே பிறப்பது.

 விஷியங்களிலே புலன்களைப் பொருத்துவதனால் தொடக்கத்தில் அமுதைப் போலிருந்து விளைவில் நஞ்சு போன்றதாய் முடியும் இன்பம் ராஜசம் எனப்படும்.

தொடக்கத்திலும் இறுதியிலும் ஒருங்கே ஆத்மாவுக்கு மயக்கம் விளைவிப்பதாய்,உறக்கத்தினின்றும் சோம்பரினின்றும் தவறுதலின்றும் பிறக்கும் இன்பம் தாமசம் என்று கருதப்படும்.

இயற்கையில் தோன்றும் இம் மூன்று குணங்களினின்றும் விடுபட்ட உயிர் மண்ணுலகத்திலும் இல்லை. வானுலகத்திலும்  இல்லை.

குரான்:

பாகம் 10.ஸுரத்துத் தவ்பா அத்தியாயம்:9 ருகூஃ 10.

77. அல்லாஹ்வுக்கு - அவனுக்கு வாக்களித்ததில் - அவர்கள்  மாறு செய்த காரணத்தினாலும், அவர்கள் பொய்யுரைத்துக் கொண்டிருந்த காரணத்தாலும் ; அவனை அவர்கள் சந்திக்கின்ற (கியாமத்து) நாள் வரை அவர்களுடைய நெஞ்சங்களில் நிபாக்கை (நயவஞ்சகத் தன்மையை)அவர்களுக்கு இறுதி முடிவாக ஆக்கிவிட்டான்.

78. நிச்சயமாக அல்லாஹ் அவர்களுடைய இரகசியத்தையும், அவர்களின் இரகசிய ஆலோசனையையும் அறிவான் என்பதையும்,நிச்சயமாக அல்லாஹ் மறைவானவற்றை எல்லாம் மிக்க அறிந்தவன் என்பதையும் அவர்கள் அறியவில்லயா?

79. (ம்முனாபிக்கான)வர்கள் எத்தகையோரென்றால்,முஃமின்களில் தாரளமாக தருமங்கள் செய்கிறவர்களையும்,இன்னும் தங்களுடைய உழைப்பைத் தவிர (வேறு எதனையும் தானம் செய்வதற்குக்) காணமாட்டார்களே (அதாவது இயலாது இருக்கின்றார்களே)அத்தகைய (எளிய)வர்களையும் குறைகூறி,அவர்களைப் பரிகாசம் செய்கின்றனர்.அல்லாஹ் அவர்களைப் பரிகசிக்கிறான் - மேலும் ,நோவினைத் தரும் வேதனையும் அவர்களுக்கு உண்டு.

பைபிள்:

லூக்கா 8.இரத்தப் போக்குடைய பெண் நலம் பெறுதல்
மத்9:18 - 26; மாற் 5: 21 - 43

40. இயேசு திரும்பி வந்தபோது (கெரசேனர் பகுதியில் இருந்து கலிலேயாவுக்கு) அங்கே  திரண்டு காத்திருந்த மக்கள் அவரை வரவேற்றனர்.41.அப்போது தொழுகைக் கூடத் தலைவர் ஒருவர் இயேசுவிடம் வந்தார். அவர் பெயர் யாயிர். அவர் இயேசுவின் காலில் விழுந்து  தம்முடைய  வீட்டிற்கு வருமாறு வேண்டினார். 42.ஏனெனில் பன்னிரண்டு வயதுடைய அவருடைய ஒரே மகள் சாகும் தருவாயில் இருந்தாள் இயேசு அங்குச் செல்லும் வழியில் மக்கள் கூட்டம் அவரை நெருக்கிக்  கொண்டிருந்தது. 43. பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் வருந்திய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் தம் சொத்து முழுவதையும் மருத்துவரிடம் செலவழித்தும் எவராலும் அவரைக் குணமாக்க இயலவில்லை.

44. அப்பெண் இயேசுவுக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையின் ஓரத்தைத் தொட்டார்.  உடனே அவரது இரத்தப்போக்கு நின்று போயிற்று...45.என்னைத் தொட்டவர் யார்? என்று இயேசு கேட்டார். அனைவரும் மறுத்தனர்., பேதுரு,ஆண்டவரே,மக்கள் கூட்டம் சூழ்ந்து நெருக்கிக் கொண்டிருக்கிறதே என்றார்...46. அதற்கு இயேசு "யாரோ ஒருவர் என்னைத் தொட்டார்;என்னிடம் இருந்து வல்லமை வெளியேறியதை உணர்ந்தேன்" என்றார்.47. அப்பெண் தாம் இனியும் மறைந்திருக்க முடியாதென்று கண்டு நடுங்கிக் கொண்டே வந்து  அவர்முன் விழுந்து,தாம் அவரைத் தொட்ட காரணத்தையும் உடனே தமது பிணி நீங்கியதையும் பற்றி மக்கள் அனவரின் முன்னிலையிலும் அறிவித்தார்..  48. இயேசு அவரிடம் "மகளே உனது நம்பிக்கை உன்னை நலமாக்கியது. அமைதியுடன் போ" என்றார்.

கவிஞர் தணிகை
மறுபடியும் பூக்கும் வரை.

No comments:

Post a Comment