Sunday, December 31, 2017

ரஜினிகாந்த் ஆன்மீக அரசியல்?!... கவிஞர் தணிகை

 ஆன்மீக அரசியல்?!... கவிஞர் தணிகை

https://youtu.be/Zr6NCKPyu-E

https://www.youtube.com/watch?v=Zr6NCKPyu-E


Image result for rajinikanth speech on 31 march 2017

ஆன்மீகத்துக்கும் அரசியலுக்கும் தொடர்பு இருப்பதாகச் சொல்ல முடியாது. ஆனால் தொடர்பு படுத்தி ரஜினிகாந்த் என்னும் சிவாஜி ராவ் கெய்க்வாட் சொல்லி இருக்கிறார். நன்று.ஆனால் அபிராம பட்டர் தமது அபிராமி அந்தாதியில் 16 செல்வங்களும் பெற்று பெரு வாழ்வு வாழச் சொல்லும் வாழ்த்தில் கோணாத கோலும் என்ற ஒரு செல்வத்தை சொல்லி இருக்கிறார். அது வளையாத நேர்மையான ஆட்சி என்ற பொருள் படும்.

அதையே ரஜினிகாந்த்

 உண்மையான ஆட்சி, நேர்மையான ஆட்சி, நாணயமான ஆட்சி, வெளிப்படையான ஆட்சி, சாதி சமயமற்ற ஆட்சி என்று

  கூறி 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்று இன்று நெடுநாளைய கேள்விக்கு பதில் சொல்லி முடிவு கட்டி விட்டார். ஒவ்வொரு தனிமனிதருக்குமே அரசியல் ஈடுபாடு இருக்க வேண்டும். தெரிந்தோ தெரியாமலோ அவரவர் தனிப்பட்ட சொந்த வாழ்வில் அரசியல் பங்கீடு இருந்தேதான் ஆகிறது. அதை எல்லாம் உணராமல் மாக்களாக இருந்து மடிந்து போவார் தவிர மற்ற அனைவருமே இந்த தாக்கத்திலிருந்து தப்பித்து விட முடியாது. அல்லது அவர் ஒரு ஆன்மீக வாதியாக இருந்தால் இது பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டியிருக்காது. ஆனாலும் அவர்களுமே கூட மக்கள் நல்வாழ்வில் ஆட்சி புரியும் நல்ல ஆட்சியாளர்களை சந்தித்து குருவாக விளங்கியதுமுண்டு.

ஆனால் இங்கு ஆன்மீகமும் அரசியலும் இணைப்பதாகச் சொல்லி இருக்கிறார் காவலர்கள் வேண்டும் என்றும்...அவர்களின் உழைப்பால் ஆட்சி அமைத்தால் அந்தக் காவலர்கள் மக்களுக்கு எல்லாத் திட்டங்களும் சென்றடைய வைப்பார்கள் என்றும், தட்டிக் கேட்கும் இந்தக் காவலர்களை கண்காணிக்கும் ஆள் தான் நான் என்றும் அந்த ஆட்சி சரியில்லை என்றால்  3 ஆண்டுகளில் வெளியேறிவிடுவதாகவும் சூளுரைத்திருக்கிறார்.

இவர் சென்னை, கடலூர் வெள்ளத்தின் போது பெரிதாக ஏதும் செய்யவில்லை, இலங்கைத் தமிழர் கொலையுண்டபோது என்ன செய்தார் என சீமான் கேட்பது போல குரல் கொடுக்கவில்லை, அன்புமணி ராமதாஸ் எம்.பி சொல்வது போல காவிரி நீர் மேலாண்மை பற்றி குரல் கொடுப்பாரா என்று கேட்பது போல குரலும் கொடுக்கவில்லை.

இப்போதும் கூட தமது இரசிகர் மன்றத்தின் இரசிகர்கள் முன்னிலையில் உரையாற்றி இருக்கிறார். தமது இரசிகர் மன்றத்தை பதிவு பெற்றவற்றுடன் பதிவு செய்யாதவற்றை பதிவு செய்து இணைக்க வேண்டும் என்றும், கட்டுப்பாடு, ஒழுக்கத்துடன், நல்லதே நினைப்போம், நல்லதே பேசுவோம், நல்லதே செய்வோம், நல்லதே நடக்கும் என்பதுதான் நமது கொள்கை,  உண்மை, உழைப்பு, உயர்வு என்ற மந்திரம் என்றெல்லாம் பேசி இருக்கிறார்.

மகாத்மா காந்தியின் சத்யாகிரக இயக்கமே இதில் வெற்றி பெறவில்லை.காந்தியை மீறி வன்முறை வெடித்தது இந்திய சுதந்திரப்போரில்.

ஒவ்வொரு தனிமனிதருக்குமே அரசியல் பொறுப்பு உண்டுதான். ஆனால் ரஜினிகாந்த் சினிமா பிரபலத்தை , அந்த லைம்லைட்டை, விளம்பரத்தை மூலதனமாக்கி அரசியல் பிரவேசம் செய்திருக்கிறார். எம்.ஜி.ஆருக்கு நிகழ்ந்தது இவருக்கு நிகழுமா என்பது கேள்விக்குறிதான்.

வரக்கூடாது என்பதெல்லாம் இல்லை. வரலாம் ஆனாலும் இவராலும் ஒன்றும் செய்ய முடியாது என்பதுதான் என்போன்ற மக்கள் பணியாளரின் கருத்து.

இந்த நாட்டில் சிகரெட்டை தூக்கிப் போட்டு வாயில் கவ்வி, ஸ்டைல் செய்து, தமக்கு டான்ஸ் ஆடத் தெரியாததையும், சோகத்தில் நடிக்கத் தெரியாததையும் மறைக்க காட்சிகள் வைக்கச் செய்ததை அதை வீரம் என்று நம்பிய‌ இரசிகர்கள் கூட்டம் இன்று இவரை நாடாள வர கேட்டுக் கொண்டுள்ளது. இவர் எப்போதுமே இவரது படங்கள் வெளியிடத் தயாராக இருக்கும்போதெல்லாம் இதே போன்றுதான் பேத்தல் நடத்துவார் தம் படங்கள் ஓடுவதற்காக என்றும் அது போல இதுவும் இருந்து விடக் கூடாது என்றும் முணுமுணுப்புகள் கேட்காமல் இல்லை.

இவர் தமது சினிமா வாய்ப்புகளையே தக்கவைக்க ஆன்மீகம் உதவியது. ஒரு கட்டத்தில் மனநிலை குழம்பி இவர் சிதைந்து கொண்டிருந்த நேரத்தில் கை தூக்கி விட்ட தியானமும் ஆன்மீகமும் பெரிதும் உதவியது ஆனால் அதே ஆன்மீகம் இவரை அரசியலில் போற்றப்பட வேண்டியவராக மாற்றுமா என வரும் நாட்கள் சொல்லி விடும்.

இவருக்கு சிஸ்டம் மாற்ற எல்லாம் எந்த பயிற்சியுமே இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

Related image


மிக நல்ல மாந்தர்களை எல்லாம் செத்துப் போனால், செத்துப் போன பின்னால்தான் அங்கீகரிக்கும் இந்த நாடு...பாரதிக்கு இறந்த பின் சிலை, காந்தி சுடப்பட்ட பின் பெரும் புகழ், இன்குலாப் போன்ற கவிஞர்க்கு இறந்த பின்னேதாம் சாஹித்ய அகாடமி விருது, சசிபெருமாள் செத்த பின் தாம் மதுவிலக்குப் போர் கோவன் பாடல் மூலம் எழுச்சி பெற்று இன்று மதுவிலக்குக்கு ஆதரவு...

இப்படி எம் போன்ற உழைப்பாளர்கள், உண்மையாளர்களுக்கு எல்லாமே இறந்து இல்லாமல் போனால்தாம் பெரிதும் போற்றப்பட்டு பேசப்படுகிறார்கள் அங்கீகாரம் பெறுகிறார்கள்.

ஆனால் கருணாநிதிக்கும், ஜெவுக்கும் இருக்கும்போதே சிலை வைத்து விடுகிறார்கள். அப்துல்கலாம் போன்றோர் மேலும் சேவை செய்ய நாட்டுக்கு நல்லது செய்ய நினைத்தாலும் கலைஞர் கருணாநிதி போன்றவர்களால் அரசியல் நிலைப்பாட்டை வைத்து தடுத்து விட முடிந்திருக்கிறது...மேலும் பிரதமர், முதல்வர்கள் ஆகியோரைக் கூட வாக்கு வங்கி அரசியல் மூலம் தடுத்து விட முடிந்து இருக்கிறது.

இன்று இராதாகிருஷ்ணன் நகர் தேர்தலும், ஜெ வின் வெற்றிடமும் இது போன்ற நிகழ்வுகளுக்கு காரணமாகி காலம் கனியவைத்திருக்கிறது. தகுதியான மனிதர்களை எல்லாம் விட்டு விட்டு, தகுதிகளை வளர்த்துக் கொள்ளாத மனிதர்கள் பின் கூட்டம் திரள ஆரம்பித்து விடுகிறது. இது தமிழகத்தின் தலைவிதி. அது எம்.ஜீ.ஆர், கலைஞர், ஜெ இப்படி இவர்கள் எல்லாம் வந்த கதை.

ரஜினி வரட்டும் கமல் வரட்டும், ஏன் விஜய் கூட வரட்டும் வாக்குகள் எல்லாம் பிரிந்து சிதறட்டும், தமிழகத்தின் தலைவிதி தலைவிரி கோலமாக மாறட்டும். அதன் பின்னாவது ஒரு நிலைத்த அரசியல் புரிதல்கள் நிகழட்டும் என் போன்ற சேவையாளர்களுக்கு மட்டுமே அது பொருந்தும் எனத்தெரியவரட்டும் அதுவரை காலத்தின் பயணம் இதே போன்று தொடரட்டும்...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

வெளிப்படைத்தன்மை , புதிய சீரமைப்பு என்ற நிலைப்பாட்டில் ப்ரஸ்த்ராய்க்கோ,கிளாஸ்நாத் என்ற கொள்கையில் கோர்பச்சேவ் நோபெல்பெற்ற ரசிய ஆட்சியாளரே வீழ்ந்த கதை எல்லாம் உலகில் உண்டு. இவர் எவ்வளவு வெளிப்படைத்தன்மை கொண்டிருப்பார் என லாஸ் வேகாஸ் சூதாட்ட கிளப்களும், கட்டிய பல்வரிசை செட்டிலிருந்தும் தெரிந்து கொள்ளலாம் ஆனால் அதை எல்லாம் ஓரம் கட்டி விட்டு நல்லாட்சி தந்தால் எமக்கெல்லாம் மகிழ்ச்சி. யோவ் முதல்ல சிகரெட், மது இதிலிருந்து வெளியே வாங்கப்பா... ஊடகங்களை எல்லாம் கவனிக்க வேண்டும் ஏன் எனின் அவைதாம் இருப்பதை இல்லாததாகவும், இல்லாததை இருப்பதாகவும் பலூனாக ஊதிபுடைக்க வைப்பதே...நல்லதுக்கெல்லாம் ஒரு சிறு பெட்டியளவு கூட ஒதுக்காமல் இது போன்றவைக்கெல்லாம் நாளெல்லாம் முழுப்பக்கமெல்லாம் ஒதுக்குவதுதான் அவற்றில் வியாபார உத்தி.

2 comments: