Friday, January 30, 2026

DR.ARAVINDASAMY M.B.B.S.,D.C.H., மரு.அரவிந்தசாமி:கவிஞர் தணிகை

 டாக்டர் அரவிந்தசாமி: கவிஞர் தணிகை



ஒரு நல்ல மருத்துவரைக் கண்டால் என்ன செய்யத் தோன்றும்? வணங்கத் தோன்றும். அவர்கள் கடவுளின் மறு உருவங்களாகவும் பார்க்கிறார்கள் பயன் தெரிந்தார் பயன் பெற்றார். ஏன் எனில் அவர்கள் உயிரை மீட்டுத் தருகிறார்கள், உடல் நலத்தை மீட்டுத் தருகிறார்கள், ஏன் நல் உணர்வை ஏற்படுத்தி விடுகிறார்கள், உலகை இனியதாக மாற்றி விடுகிறார்கள்.


அதிகமாக ஆங்கில மருத்துவம் பக்கம் நான் திரும்புவதேயில்லை அதன் பக்க விளைவு காரணமாக. ஆனால் அத்தியாவசியத்துக்கு செல்லத் தவறியதேயில்லை. ஆங்கில மருத்துவம் பயின்ற (அல்லோபதி) மருத்துவர்கள் எல்லாம் தேவர்கள் போலவும் மற்ற மனிதர்கள் எல்லாம் விலங்குகள் போலவும் அவர்கள் பார்ப்பதை அதிகம் கண்ட எனக்கு இந்த மருத்துவரின்  தீவிரத் தேடல் வித்தியாசமாகப் பட்டது. என்னைத் தேடி வருவார் அரிதானவர்களே.இவர் வசூல் ராஜா எல்லாம் இல்லை உண்மையான(ஆ)சாமி.


ஒரு மருத்துவர் எனை எனது சுவர் எழுத்துகளைப் பார்த்து விட்டு 2 முறை சந்தித்து தியான வகுப்புக்கு வர முயற்சி செய்து முடியாமல் 3 ஆம் முறை எனை சந்தித்து விட்டு தனது கோரிக்கையை வைத்தார்.அவர் ஒரு ஆங்கில இளநிலை மருத்துவம் மற்றும் குழந்தைகள் நலம் படித்து அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவுக்கான மருத்துவராக பணி செய்து வருகிறேன் என்றும் பணி நேரம் தவிர மற்ற நேரங்களிலும் தமது சேவையத் தொடரும் நிலையில் இந்த எழுத்துகளைப் படித்து விட்டு "உங்களிடம் மட்டுமே தியானம் கற்றுக் கொள்ள வேண்டும்" என்ற அவாவை வெளிப்படுத்தினார்.


அப்போது கோவில் பணி காரணமாக உடல் நலம் குன்றி இருந்தது. 2 மாதம் ஆகட்டும் அப்போதுதான் முடியும் என்றேன். அதற்கும் சரி என்றார். காத்திருந்தார். கற்றுக் கொண்டார்.தியானம் என்பதை கற்றுக் கொடுக்க முடியாதது கற்றுக் கொள்வது, என்றும் தியானத்துக்கு முன் தி.மு, தி.பி தியானத்துக்குப் பின் என வாழ்வை பிரித்துக் கொள்ளலாம்.


ஏன் என்னிடம் கேட்டதற்கு: கட உள் என்ற வாக்கியமே காரணம், இதை எழுதியவர் ஞானி என்றார்.கட்டணம் ரூ2000 கட்டினார், குரு காணிக்கை என பழம் பூ என ஒரே ஏக‌ தடபுடல் அன்பின் ஆரவாரம். பிறரிடமிருந்து எதுவும் ஏற்றுக் கொள்ளாதிருத்தல் என்ற தியான கொள்கையில் 5 ஆம் கொள்கை வேறு இடித்தது.


எல்லா தடைகளையும் தாண்டி, இடர்பாடுகளையும் தாண்டி, அவரது பணிச்சுமையையும் தாண்டி மனிதர் சரியாக 10  புகு முக வகுப்புகளுக்கும் வந்து கற்றுக் கொண்டார், இடையில் அவரது மைத்துனர் மணம் வேறு வந்திருந்தது. மகனுக்கு "குருதேவ்" எனப் பெயர் சூட்டி அழகு பார்த்து வருகிறார்.


என்ன சொல்வது மேலும் மேலும் எப்படி சொல்வது எனக்கு கிடைத்த அரிய மனிதர்களுள் இவரும் ஒருவர் இப்போது அந்தியூர் அரசு மருத்துவமனை, அப்போது மேட்டூர் அரசு மருத்துவமனை, துணைவியாரும் மருத்துவர் அவர் அம்மாப் பேட்டையில்  சொந்தமாக ஒரு மருத்துவ ஆலோசனை மையத்தை நடத்தி வருகிறார். இவரை என்ன பாராட்டினாலும் எப்படி பாராட்டினாலும் தகும். சிறந்த தேசப் பற்று.மக்கள் பற்று. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் இருந்து வந்த எனக்கு கிடைத்த‌ ஒரு நல் மணிமுத்து. அலட்டல் இல்லை காரம் இல்லை கசப்பு இல்லை இது ஒரு நல்ல எண்ணம்.மனிதர்  ஒரு மருத்துவர் என்ற பந்தா எல்லாம் இல்லாமல் காட்டிக் கொள்ளாமல் மிக எளிமையாக‌ இருப்பவர். ஆடை அணிகலன் பற்றி எல்லாம் கூட அலட்டிக் கொள்ளாமல்...


அவர் என் குடும்பத்தில் இப்போது ஒருவராக இருக்கிறார். அவர் மூலம் இப்போது கோம்பூரான்காடு ஆரம்ப சுகாதார  மையத்தின் மருத்துவர் திவ்யாவும் எனது மனதில் இடம் கொள்பவராக சேர்ந்திருக்கிறார். அவரிடமும் மக்களுக்கான உண்மையான சேவையாற்றும் நட்பை கவனித்ததால் இந்த வார்த்தை.


மறுபடியும் சில அரிய மனிதர்களுடன்


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


Thursday, January 29, 2026

இருவர்: மருத்துவர் மற்றும் முனைவர் சரவணன்கள்: கவிஞர் தணிகை

 இருவர்: மருத்துவர் மற்றும் முனைவர் சரவணன்கள்: கவிஞர் தணிகை



நீண்ட காலமாகவே ஒரு கரையான் கூட்ட எண்ண அலைகள் எனை அரித்து வருவதை எடுத்தெறிய இந்தப் பதிவு.

1. 2016 முதல் சமூக பல் மேம்பாட்டுத் துறைத் தலைவராக தனியார் கல்லூரியில் பணியாற்றி வரும் பல் மருத்துவர் மற்றும் முனைவர் சரவணன் அவர்களை அறிவேன். அந்தக் கல்லூரியிலிருந்து நான் வெளிவந்து 4 ஆண்டுகள் ஆகி விட்டது.நான் மறவாத நபர்களுள் இவரும் ஒருவர். ஏன் கடந்த இந்த ஆண்டுகளில் எனக்கும் இவருக்கும் எந்த தொடர்பும் கூட இல்லை என்றாலும் இவரைப் பற்றி இந்த அதிகாலை உங்களுக்குள் பகிர நினைக்கிறேன் எனில் அந்தளவு திறம் உள்ள மனிதர். 


எனது பிறந்த நாளை கொண்டாட நினைத்த மனது இவருடையது. நான் அது போன்ற பழக்கங்களை எல்லாம் விரும்புவன் அல்ல என்ற போதும் அந்த நல்ல உள்ளம் அந்தக் கல்லூரியின் கலாச்சார முறைக்குட்பட்டு எனது நாளையும் சிறப்பு செய்ததை நினைத்துப் பார்க்கிறேன் இன்றும்.


ஒரு முறை  எனக்கு மிகக் கடுமையான வேலைப் பளு. முடித்து மதிய உணவு அருந்தி விட்டு அல்லது அதற்கு முன் அவருடைய துறையில் இருந்து அழைப்பு. அவர் நிலை (என்னிலை) உணராமல் ஏதோ பேச, நான் மிகக் கடுமையாக அவரை அன்று மற்றவர் முன்னிலையிலும் பேசி விட்டேன் என்றாலும் கூட பொறுத்துக் கொண்டார் பெரிய மனது.


இருவரும் வேடிக்கையாக  அந்த அந்த கால( தற்கால) அரசியலை ஏட்டிக்குப் போட்டியாக பேசியபடி இன்பம் அடைவோம். அவரை நண்பர் என்று சொல்வதை விட அவர் எனக்கு ஒரு சகோதரராகவே அந்தக் கல்லூரி வாழ்வில் இருந்தார்.அவருக்கு என்றும் எனது அன்பு உரித்தாகும்.


எத்தனையோ முறை இவர் தமது வாகனத்தில் வாய்ப்பு இருக்கும்போதெல்லாம் எனை எங்கு செல்ல வேண்டுமோ அங்கு செல்லத் துணை புரிந்தார்.சொல்லாமல் பிரிவது நட்புக்கழகு என்பார். அப்படித்தான் பிரிந்தேன் அங்கிருந்து ஆனால் நான் எப்போதும் எவரிடமிருந்தும் பிரிவதில்லை.


2. முனைவர் முதல்வர் சரவணன்:

ஒரு தனியார் கலை அறிவியல் கல்லூரியில் பணி புரிகிறார். மிக்க கடின உழைப்பாளி. எனது எழுத்துகளைப் பார்த்து நுகர்ந்து தமது கல்லூரிகளில் பாடம் நடத்தியதாக இவருடைய முகாம்களில் வெளிப்படையாகச் சொல்லி வருவார். நல்ல மனிதர். நல்ல ஆசிரியர். பொறுப்பான அமைதியான அடக்கமான உருவத்துக்கு சொந்தக்காரர்.தற்காலத்தில் பேசி கூட காலம் வெகுவாக ஓடி விட்ட போதிலும் நாங்கள் என்றும் நண்பர்களாகவே இருக்க பல காரணங்கள்  உள்ளன.


தாமறிந்ததை பிறர்க்கு பயனாவதை பகிர்ந்து கொள்ள இவர் என்றுமே தயங்கியதில்லை. நல்ல படிப்பாளி முனைவர் பட்டம் பெற்று வெகு காலம் ஆன பிறகே இவருக்கு முதல்வர் பொறுப்பு கிடைத்தது. நல்ல பொறுப்பான மனிதர் மேலும் மேலும் வளர்வார் வாழ்த்துகள்


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


இருவர்: கிருஷ்ணனும் தணிகையும்: கவிஞர் தணிகை

 இருவர்: கிருஷ்ணனும் தணிகையும்: கவிஞர் தணிகை



முட்டைக்கார கிருஷ்ணனை மேல் மேட்டூரில் தெரியாதார் சிலரே இருக்கக் கூடும். எனக்கும் இந்த நபருக்கும் சுமார் 14 ஆண்டுகள் தொடர்பு இருக்க வாய்ப்பு இருக்கிறது. அது தொடர்கிறது.எப்படி எனில் சகோதரர்கள் போல‌ பங்காளிகள் போல.ஆன்மீகத்தால் அரசியலையும் வென்று எடுக்கும் நோக்கம் அவருடையது. சேவை வழி இதயம் தொடு என்பது எனது.காலம் ஒரு பற் சக்கரத்தின் பற்களாக மேலும் கீழும் பதிந்து சுழற்றியபடியே எங்களையும்  கடத்தி வந்து கொண்டிருக்கிறது.


என்னை விட அவரை எவருமே விவாதப் பொருளுடன் தாக்கி விமர்சித்து இருக்க முடியாது நேருக்கு நேர் நாங்கள் கீரியும் பாம்பும் போல்.மற்றபடி ஒரே நேர்க்கோட்டில் இணையான வழிகளில் பயண‌ம் செய்யும் செயல் கர்ம வான்கள். அவரும் நானும் இரவில் சரியாகத் தூங்காதவரே.ஏன் எனில் இந்த உலகு உய்ய ஏதாவது நம்மால் ஆனதை செய்ய வேண்டுமே என்ற அப்துல் கலாம் போன்றோரின் ஏக்கத்தால்.


இப்போது என்ன இந்த‌ அங்கலாய்ப்பு என்கிறீர்களா? மனிதன் தனியாகவே நின்று எல்லா எதிர்ப்புகளையும் ஊதித் தள்ளி கோம்பூரான் காட்டில் நாங்கள் எல்லாம் சேர்ந்து 2012ல் கட்டி குடமுழுக்கு செய்த‌ அருள் மிகு புவனேஸ்வரி உடனமர் கபாலீஸ்வரர் ஆலயத்துக்கு குடமுழுக்கு நன்னீராட்டு விழாவை வருகிற மாசி 10 தமிழ் அல்லது ஆங்கிலத் தேதி 22.02.2026 ஞாயிறு அன்று நடக்க எடுத்து வரும் அசாத்திய முயற்சி பற்றித் தான். ஈடு இணையிலா உழைப்பு.


மனிதர் எப்படி வேண்டுமானாலும் இரசாயனத் தொழில் நடத்தி வந்த தொழில் அதிபராக இருக்கலாம். ஆனல் இப்போது ஞானம் பெற தமது ஆத்மாவை அலைக்கழித்து வரும் ஒரு நல்ல ஜீவனாக மாற முயற்சித்துக் கொண்டிருக்கிறார். துறவு நிலை கூட.


இதென்ன பெரிய சாதனையா? என்று பலரும் கேட்க வாய்ப்பு இருக்கிறது, செய்து பார்த்தால் தாம் அதில் உள்ள வாய்ப்புகளும், நுட்பங்களும், நுணுக்கங்களும், சிரமங்களும் தெரியும் அனுபவம் மலரும்.


ஒரு தனி ஆளாக நின்று எல்லாப் பொறுப்புக்ளையும் தமது தோளிலேயே தாங்கிக் கொண்டு செய்து வருகிறார்.இந்த குடமுழுக்கு நன்னீராட்டு விழாவிற்குப் பின் செயல் நடவடிக்கை எல்லாம் துறந்து ஓய்வு பெறப் போவதாகவும் சொல்கிறார். ஆனால் இந்த மனித ஆத்மா சுழலும் வரை அந்தக் கோவிலை விட்டுப் பிரிய மாட்டார் , ஏன் உடல் எனும் கருவியை விட்ட பிறகும் கூட அந்தக் கோவிலிலேயே சமாப்தி ஆகி விடுவார் என்றே வெளிப்பாடு எல்லாம் இருக்கிறது.


ஒரு வேளை அப்படித்தான் எல்லாம் புகழ் சொல்லுமோ? அட இந்த மனிதரிடம் நாம் இத்தனை கறாராக உரத்த தொனியில் கருத்து மோதல் செய்திருக்கக் கூடாதோ என்ற எண்ணமெல்லாம் அந்த காலம் கொடுக்குமோ?

சமூக அமைப்பில் எல்லாருக்கும் ஏதோ செய்ய நினைக்கிறார் அது இந்த வழியில் இருக்கிறது.பேர் விளங்கட்டும்.


அனைவரையும் ஒருங்கிணைக்க எல்லா வித்தைகளையும் காட்டி வருகிறார் இந்த கிருஷ்ணனும். எனவே அனைவரும் வந்து புதுசாம்பள்ளி இடுகாட்டருகே உள்ள கோம்பூரான் காட்டில் உள்ள அருள் மிகு கபாலீஸ்வரர் ஆலய குடமுழுக்கு விழாவில் பேதமின்றி கலந்து கொண்டு சிறப்பு செய்வீராக. நன்றி . வணக்கம் .என்றும் அன்புடன் உங்கள் நண்பனாக எனது அழைப்பும். 


இவருடைய செயல்பாடுகளுக்கு மக்கள் ஆதரவும் வெகுவாக இருக்கிறது என்பதை மக்கள் தமது உழைப்பால் கிடைத்த செல்வத்தை நிதியாக, நன்கொடையாக இந்த கோவிலின் வளர்ச்சிக்கும், இந்த நிகழ்வின் வெளிச்சத்துக்கும் வாரி வழங்கி வருவது இவரது வெற்றியையும் இவருக்கான அங்கீகாரத்தையும் மக்களுக்கு கடவுள் பக்தியில் இன்னும் நம்பிக்கையும் நாட்டமும் இருப்பதைக் காட்டுகிறது.


முட்டை முதலா கோழி முதலா என்ற அறிவியல் ஆய்வில் கோழிதான் பரிணாம வளர்ச்சியில் முதலில் என்று தற்கால அறிவியல் விடை சொல்லிய அறிக்கைகள் உள்ளன.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


Saturday, January 17, 2026

பொங்கல் திருவிழா( 2026) கருப்பு ரெட்டியூர் பேச்சுப் போட்டி: கவிஞர் தணிகை

 பொங்கல் திருவிழா கருப்பு ரெட்டியூர் பேச்சுப் போட்டி: கவிஞர் தணிகை

கருப்பு ரெட்டியூர் பொங்கல் திருவிழாவில் பேச்சுப் போட்டி.



எங்கு பார்த்தாலும் பொங்கல் திருவிழா மகத்தாக இந்த ஆண்டு 2026ல். அவரவர் வேட்கைக்கேற்ப. பூக்களுடன் பொங்கல் விழாக்கால பூத்திடும் வாழ்த்துகள் என எமது சுவர் எழுத்துகளில் வித்திட்டிருந்தோம்.


ஒரு உற்ற சகோதரியின் வீட்டில் நாங்கள் இருந்த போது "தமிழ் பசங்க" என்னும் கருப்பு ரெட்டியூர் இளைஞர் கதிரவனிடமிருந்து அழைப்பு. ஒரு உதவி அய்யா, பேச்சுப் போட்டி நடத்துகிறோம் நடத்தித் தர வேண்டும் என.உங்களைக் கேட்காமலேயே அறிவிப்பு செய்து விட்டோம் நீங்கள் தாம் நடத்தி தருவதாக என்றார். உங்களுக்கு உரிமை இருக்கிறது அது பற்றி ஒன்றும் தடையில்லை. நடைப்பயிற்சி முடித்து அப்படியே வந்து விடுகிறேன் எனக்காக எந்த முயற்சியும் வருவதற்கும் போவதற்கும் செய்ய வேண்டாம் என மறுதலித்து விட்டேன். அந்த மண்ணில் தாம் பன்னெடுங்காலமாக மக்கள் தொடர்புடன் நடைப் பயிற்சி செய்து வருகிறோம் அவர்களுக்கு இல்லாமலா?


கரும்பு தின்ன கூலியா? இல்லை . தலைப்பு இல்லாமலேயே சும்மாவே இரண்டு முதல் 3 மணி வரை கூட உரைவீச்சு செய்யத் தெரிந்த நமக்கு அது ஒரு இன்பமான சேவைப் பணி.அனைவர் பாராட்டும் அறிமுகமும் கிடைத்திட்ட வாய்ப்பு.


தமிழ் இளைஞர்கள் என்று சொல்லலாம்...இனி ஏன் தமிழ் பசங்க என்றே சொல்லி வருகிறீர்கள் எனக் கேட்டேன் அவர்கள்தாம் அந்த நிகழ்வை உள்ளூர் ஆளும் கட்சி பிரமுகர் திரு. பன்னீர் செல்வம் அவர்கள் உதவியுடன் செய்து வருவதாகச் சொன்னார்.


முதல் வகுப்பு முதல் ஐந்தாம் நிலை வரை ஒரு பிரிவாகவும், 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை அடுத்த 2 ஆம் பிரிவும், மேனிலைப் பள்ளி முதல் மூன்றாம் பிரிவாகவும் குழந்தை மாணவர்களனைவரையும் பிரித்தோம். 19 பள்ளிப் பிள்ளைகள் கலந்து கொண்டனர். ஊர் முழுதும் திரண்டு ஆதரவு கொடுத்து பாராட்டி மகிழ்ந்தனர்


பரிசளிப்பு விழா மிக இனிதாக நடந்தேறியது. மகிழத் தக்க விழாவாக அது இருந்தது இனி ஆண்டு தவறாமல் அதை நடத்துவதாக நடத்த இருப்பதாக அந்த பதிவு இருந்தது. அடுத்த முறையில் இருந்து தலைப்பு தந்து அதன் வழிச் செல்ல ஆலோசனை வழங்கப் பட்டது.இம்முறை உடனடி ஏற்பாடு என்றதால் கலந்திருந்த குழந்தைகள் அவரவரே தலைப்புகளை முடிவு செய்து பேசினர். காமராசர், திருப்பூர் குமரன், பொங்கல் திருநாள், இராமாயணம், போன்ற தலைப்புகள் பெரும்பாலும் இருந்தன.


ஜித்தேஷ் மாரி என்ற ஒரு சிறுவன் மிகச் சிறப்பாக பேசி அனைவரின் பாராட்டுதலையும் ஒருங்கே பெற்றார். அவர் ஒரு 3 ஆம் வகுப்பு மாணவர் என்றே நினைவுக்கு (இப்போது இந்தப் பதிவு எழுதும் போது நினைக்கிறேன்)


எனது 3 புத்தகம் கூட‌  முன்னணி பரிசு பெற்ற மாணவர்க்கு ஊக்கமளிக்க அளித்தேன். ஊர் பொது மக்கள் நல்ல ஊக்கமளித்தனர். ஒரு சிறு குழந்தை வந்து பொங்கல் வாழ்த்துகள் என்ற தம் மழலையில் அறிவித்து அனைவரையும் மகிழ வைத்தது நெஞ்சுக்கு நிறைவான நிகழ்வை மேலும் நெகிழ வைத்தது மனம் மகிழ வைத்தது.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


Sunday, January 11, 2026

உங்க கனவைச் சொல்லுங்க: கவிஞர் தணிகை

 உங்க கனவைச் சொல்லுங்க: கவிஞர் தணிகை



1. ஊழல் இல்லா இந்திய தேசம்

2. இலஞ்சமில்லா தமிழகம்

3. தரகு இல்லா ஒப்பந்தப் பணிகளும் பொது அதிகார அமைப்புகளின் பணிகளும்

4. குறைந்த பட்சம் புகை மது போதை இல்லா  தமிழகம்

5. அதிகபட்சம்  புகை மது போதை இல்லா உலகு

6.எல்லைகளில்லா உலகமெலாம் ஒரே தேசம் இராணுவமிலா மக்கள் தன்னொழுக்க பாதுகாப்பு. மற்றும் நதி நீர் இணைப்பு தேசிய அளவில் மட்டுமல்ல உலக அளவிலும்

7.நாடுகளின் கூட்டமைப்பின் ஆட்சியில் வரும் உலகெலாம் ஒரே தேசத்தின் தலைவராக நான்(ஹா ஹா ஹா)

8.உலகெலாம் உள்ள அனைத்து உயிர்களுக்கும் உணவு, உடை, உறையுள்,குடிநீர், மருத்துவ(ம்) உத்தரவாதம்

9.வாக்குகள் விகிதாச்சார அடிப்படையில் எல்லாக் கட்சிகளும் பிரதிநிதிகளும் சேர்ந்த ஆட்சி அமைப்பு

10. பணமி(ல்)லா தேர்தல்

11. சரியாக செயல்படாத மக்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைக்கும் உரிமை

12.( குறந்த பட்சம்)1999 முதல் பத்திரப் பதிவுடன் இருக்கும் எனது காமராஜர் நகர் 35/68 A சேலம் கேம்ப் மேட்டூர் நகராட்சியில் (Salem Dt.,)TN, -இருக்கும் இல்லத்திற்கு தமிழக முதல்வர் அவர்களுக்கு 2022ல் மனு செய்தும்,கோட்டாட்சியர் வந்து பார்த்து சென்றும்,மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் எனது இல்லத்திற்கான இது வரை கிடைக்கும் கிடைக்கிறது எனச் சொல்லிக் கொண்டே சென்று கொண்டிருக்கும் பிரச்சனைக்குத் தீர்வாக பட்டா கிடைத்தல்.

இப்போதைக்கு இவைதான் பிரதானமாக முக்கியமாக எனக்கு சொல்லத் தோன்றுகிறது.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


Monday, January 5, 2026

தமிழ் நாடு அரசின் பொங்கல் 2026: கவிஞர் தணிகை

 தமிழ் நாடு அரசின் பொங்கல் 2026: கவிஞர் தணிகை



அரசியல் என்பதும், ஆட்சி என்பதும், கட்சி என்பதும் வாக்கு வங்கியைப் பற்றியதுதான், சுற்றியதுதான்.அதில் பெரிதான விவாதம் நடத்துமளவு  பொருளில்லை இக்காலத்தில். என்றாலும் மக்களுக்குச் செய்வதற்கு மனம் வேண்டும்.


அரசுக்கும் ஆட்சிக்கும் அதிகாரத்துக்கும் மக்களுக்கும் உள்ள இடைவெளியைத் தெரிந்த தலைமைகள் நேரடியாக மக்களுக்கு பலன் பயன் சென்றடையட்டுமே என்ற முடிவில் சில திட்டங்களை செயல்படுத்துகிறார்கள்.


அப்படி வந்ததுதான் காமராசரின் மதிய உணவு, எம்.ஜி.ஆர் செய்த சத்துணவு, அதன் பின் வந்த அனைவரின் எண்ணங்களின் செயல்பாடுகளும். இப்போதைய முதல்வர் ஸ்டாலின் அவர்களும் அதன் நீட்சியாகவே ரொக்கம் ரூபாய் 3000 அத்துடன் சேலை வேட்டி, பொங்கல் பரிசுப் பொருட்களை நியாயவிலைக் கார்டுதாரர்களுக்கு சுமார் 2,23,92,000 +(புள்ளி விவரத்தில் மாற்றம் இருக்கலாம். சொல்லப் பட்டது ஏறத் தாழ ஒரு கணக்கிற்காக மட்டுமே). கொடுக்கும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளார்.


இவர் மேலும் இதே போன்று மகளிர் விடியல் பேருந்து  பயணம், உரிமைத் தொகை, அரசுப் பள்ளியில் படித்த உயர்கல்லூரி மாணவர்க்கான உதவித் தொகை போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருவதும் யாவரும் அறிந்ததே அதன் பட்டியலை அடுக்குகளை அவர் கட்சி சார்ந்த கொள்கை பரப்பு செயலாளர்கள் சொல்வது போல சொல்வது நமது நோக்கமல்ல, அரசின் பொது உறவு அலுவலர்களும் சொல்லிக் கொள்ளட்டும்.


நிறைய பேர்களில்/(with Name and Schemes) நிறையத் திட்டங்கள் ஏழை எளிய மக்கள் நோக்கி....


அய்யோ கடனை சுமத்துகிறார்களே, தேர்தல் தோல்வி பயத்தில் செய்கிறார்களே என்றெல்லாம் பிதற்றுவதும், ஒப்பாரிச் சத்தங்களும் கேட்கவே செய்கின்றன.


எமது தந்தை ஒரு மில் தொழிலாளியாக இருந்தவர், எமது என்பது 8 பேர் பிள்ளைகளின் தந்தை என்பதற்காக.80களில் அல்லது அதற்கு முன் பொங்கல் வைக்க காசு இருக்காது,சூரியன் பொங்கலை வேறு ஞாயிற்றுக் கிழமைகளில் மாற்றி வைத்துக் கொள்வோம், அது சர்க்கரைப் பொங்கல், நாகர் பொங்கல் புற்றுக்கு வைப்பதை கோழி அறுத்து விருப்பப் படி வைத்துக் கொள்வார்கள்,விநாயகர் கோவிலில் பெரும் பொங்கல் அன்று ஒரு வெண்பொங்கல் வைத்து அதற்கு பூசணி அவரை போன்றவற்றை வைத்து ஒரு குழம்பு செய்து நெய்விட்டு பிசைந்து உண்ணச் செய்வார்கள். போகிப் பண்டிகை அன்று மொச்சை, அவரை, என்று வேக வைத்து சங்கராந்தி என்று படைத்து அந்த பயறுகளை வேக வைத்து தாளித்து பிள்ளைகளுக்கு உண்ணக் கொடுப்பார்கள். இது தான் எங்கள் வீட்டு பாரம்பரிய பொங்கல் விழா. காடு கழனி எல்லாம் இல்லாததால்.


அப்போது ஒரு கவிதை எழுதினேன்: அதில் கோவில் பொங்கல் கூட குருக்கள் வீடு செல்ல, குறுந்துண்டு கரும்புக்காக குறு குறுத்து காத்திருக்கிறான் ஒரு சிறுவன், அதில் இனிப்பே தெரியவில்லை, கோந்தாலை என்பதால் ஒரே உவர்ப்பு...என்பதாக...


இந்தக் குடும்பத்தை விட இன்னும் கீழ் தங்கிய குடும்பங்கள் இலட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் அன்று பொங்கலைக் கொண்டாட காசு இல்லாமல் இருந்திருக்கின்றன தமிழ் நாட்டிலும்...


ஆனால் கடந்த பல ஆண்டுகளாக இந்தப் போட்டிகளால்...மக்களுக்கு நன்மை கிடைத்து வருகிறது என்பதை மறுப்பதற்கில்லை.


 முன்பெல்லாம் நியாய விலைக் கடைகளில் போட்டி, பொறாமை, சண்டை , சச்சரவு, காவலர் வந்து ஒழுங்கு செய்தல் இப்படி எல்லாக் கடைகளிலும் ஒரு நியாயமின்மை அரங்கேறிக் கொண்டே இருக்கும்...ஆனால் பல ஆண்டுகளாக‌ எம்மால் கண்கூடாக காணமுடிகிறது சத்தமின்றி குறைவின்றி விநியோகம் நடந்து முடிகிறது...அரசு இத்திட்டத்தை நன்கு செய்து வருகிறது...


எனவே ஒவ்வொரு குடும்பத்திலும் நிகழும் இந்தப் பொங்கல் உண்மையிலேயே தமிழ் நாடு அரசின் பொங்கல் என ஒவ்வொரு வீட்டிலும் நடக்கிறது என்பது உண்மைதான்....


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை








Friday, December 26, 2025

FACEBOOK:முக நூலில் ஒரு நல்ல செய்தி கண்டேன்: கவிஞர் தணிகை

 அனைத்துலக விண்வெளி நிலையத்தில் (International Space Station) 178 நாட்கள் செலவிட்ட பிறகு, விண்வெளி வீரர் ரான் காரன் பூமிக்குத் திரும்பினார். அவர் கொண்டு வந்தது விண்வெளி உபகரணங்கள் அல்லது பணி தரவுகளைவிட மிகவும் கனமான ஒன்று — மனிதகுலம் பற்றிய மாற்றப்பட்ட புரிதல்.





சுற்றுப்பாதையிலிருந்து, பூமி நாடுகள், எல்லைகள் அல்லது போட்டி நலன்களின் தொகுப்பாகத் தோன்றவில்லை. அது இருளில் தொங்கும் ஒரே ஒரு பிரகாசமான நீலக்கோளமாகத் தெரிகிறது. கண்டங்களைப் பிரிக்கும் எந்தக் கோடுகளும் இல்லை. எந்தக் கொடிகளும் பிரதேசத்தைக் குறிக்கவில்லை. பூமியின் மேற்பரப்பிலிருந்து 250 மைல்கள் உயரத்தில், ஒவ்வொரு மனித மோதலும் திடீரென சிறிதாகத் தோன்றுகிறது — மேலும் ஒவ்வொரு மனித இணைப்பும் தவிர்க்க முடியாததாகத் தெரிகிறது.
காரன் மின்னல் புயல்கள் முழு கண்டங்களிலும் வெடிப்பதைப் பார்த்தார், அரோராக்கள் துருவங்களில் வாழும் திரைச்சீலைகளைப் போல அலைவீசுவதைப் பார்த்தார், நகர விளக்குகள் பூமியின் இரவுப் பக்கத்தில் மென்மையாகப் பிரகாசிப்பதைப் பார்த்தார். அவரை அதிகம் தாக்கியது பூமியின் சக்தி அல்ல — அது அதன் பலவீனம். உயிர் அனைத்தையும் பாதுகாக்கும் வளிமண்டலம் காகிதம் போன்ற மெல்லிய நீல வளையமாகத் தெரிந்தது, கிட்டத்தட்ட தெரியாதது, ஆனால் சுவாசிக்கும், வளரும், உயிர் பிழைக்கும் அனைத்துக்கும் பொறுப்பானது.
அந்தக் காட்சி விண்வெளியிலிருந்து பூமியைப் பார்க்கும் பலரால் அறிவிக்கப்பட்ட “மேலோட்ட விளைவு” (overview effect) எனப்படும் ஆழமான அறிவாற்றல் மாற்றத்தைத் தூண்டியது. அது மனிதகுலம் ஒரே ஒரு மூடிய அமைப்பைப் பகிர்ந்து கொள்கிறது என்பதன் திடீர் உணர்தல். காப்புப் பிரதி இல்லை. தப்பிக்கும் வழி இல்லை. இரண்டாவது வீடு இல்லை.
காரன் மனிதகுலத்தின் முன்னுரிமைகளை கேள்விக்குள்ளாக்கத் தொடங்கினார். பூமியில், பொருளாதார வளர்ச்சி அடிக்கடி இறுதி இலக்காகக் கருதப்படுகிறது. விண்வெளியிலிருந்து, அந்த அடுக்குமுறை சரிந்துவிடுகிறது.
அவர் வாதிடுவது: சரியான வரிசை புவிக்கிரகம் முதலில், சமூகம் இரண்டாவதாக, பொருளாதாரம் கடைசியாக — ஏனெனில் ஆரோக்கியமான கிரகம் இல்லாமல், சமூகமோ பொருளாதாரமோ இருக்க முடியாது.
அவர் பூமியை ஒரு விண்கலத்துடன் அடிக்கடி ஒப்பிடுகிறார். பில்லியன் கணக்கான பயணிகளைக் கொண்ட ஒரு கப்பல், அனைவரும் ஒரே உயிர் ஆதரவு அமைப்புகளைச் சார்ந்திருப்பவர்கள். ஆனால் பலர் பயணிகளாகவே நடந்துகொள்கிறார்கள், பராமரிப்பாளர்களாக அல்ல, விஷயங்கள் இயங்குவதற்கு வேறு யாரோ பொறுப்பு என்று கருதுகிறார்கள்.
சுற்றுப்பாதையிலிருந்து, மாசுபாட்டுக்கு தேசியம் இல்லை. காலநிலை அமைப்புகள் எல்லைகளைப் புறக்கணிக்கின்றன. ஒரு பகுதியில் ஏற்படும் சுற்றுச்சூழல் சேதம் முழு உலகிலும் பரவுகிறது. நாம் பூமியில் இவ்வளவு உறுதியாகப் பாதுகாக்கும் பிரிவுகள் மேலிருந்து வெறுமனே இல்லை.
காரனின் செய்தி இலட்சியவாதமானது அல்ல. அது நடைமுறையானது. மனிதகுலம் பூமியை வரம்பற்ற வளமாகவே தொடர்ந்து நடத்தினால், பகிரப்பட்ட அமைப்பாக அல்லாமல், விளைவுகள் உலகளாவியதாக இருக்கும்.
விண்வெளியிலிருந்து பூமியைப் பார்ப்பது அவரை சிறிதாக உணரச் செய்யவில்லை. அது அவரை பொறுப்புள்ளவராக உணரச் செய்தது.
ஏனெனில் நாம் அனைவரும் பிரபஞ்சத்தில் ஒரே பலவீனமான இயற்கை விண்கலத்தில் (பூமி) பயணிப்பதை நீங்கள் உண்மையாகப் புரிந்துகொண்டால், “நாம் எதிராக அவர்கள்” என்ற கருத்து அமைதியாக மறைந்துவிடும் — அதற்குப் பதிலாக ஒரே ஒரு தவிர்க்க முடியாத உண்மை வரும்:
"நாம்" மட்டுமே உள்ளோம்".
பிகு: என்னைப்பொருத்தவரை எலான் மஸ்க், மார்க், ஜெப் பெசோஸ் போன்றவர்களால் இந்த உலகம் சிதைக்கப்படுமேயொழிய வளமடையாது. பல ஆண்டுகளாகச் சொல்லிவருகிறேன்.. பொறுப்பற்ற இயற்கையின் அருமையுணராத அறிவியல் முன்னேற்றங்கள் மனிதகுலத்தை ஒரு முட்டுச்சந்தில் கொண்டுபோய்விட்டு விடும் என்று. - ஓசை செல்லா


மறுபடியும் பூக்கும் வரை கவிஞர் தணிகை

நன்றி: ஓசை செல்லா