Saturday, November 5, 2016

உயரம் தாண்டி, சிகரம் எட்டி...கவிஞர் தணிகை

உயரம் தாண்டி, சிகரம் எட்டி...கவிஞர் தணிகை



இது உங்களுக்கு பழைய செய்திதான் ஆனால் எமது கல்லூரி சார்ந்த உடற்கல்வி இயக்குனர் மற்றும் மாணவர்கள் அனைவரும் சேர்ந்து சென்று மாரிமுத்து தங்கவேலுவை நாச்சியாம்பட்டி வீட்டில் சந்தித்து வந்தது புதியது. உடன் கபாடிப் போட்டி உலக சாம்பியன்சிப்பை 8 வது முறை வென்ற வீரர்களுக்கு ஆளுக்கு தலா 10 இலட்சம் பரிசு...இவை பற்றி...

கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் செந்தில் குமார், கிரன், சௌந்தர்ராஜன், ஜான் பால் ஆகியோர் மாரியப்பன் தங்கவேலு வீட்டிற்கு சென்று பாராட்டி வந்தனர். தாய் சரோஜாவுடன் மாரியப்பன் தங்கவேலு இவர்களிடம் நல்ல முறையில் கலந்தளாவி இருக்கிறார்.

தமிழக முதல்வர் நோய்வாய்ப் பட்டு மருத்துவ மனையில் இருப்பதால் தமிழக அரசு கொடுப்பதாக சொன்ன 2 கோடி ரூபாய் இன்னும் வந்து சேரவில்லை

இவர்கள் இருந்த பெரிய வடகம்பட்டியில் இருந்து காடையாம்பட்டி அருகில் இவர்கள் குடி பெயர்ந்து தற்போது நாச்சியாம்பட்டி என்னும் கிராமத்திற்கு வந்து சற்று வசதியான வீட்டை வாடகைக்கு குடியமர்த்தி வருவோர் போவோரை சந்தித்து மகிழ்ந்து வருகின்றனர்.

ஏற்கெனவே இருந்த சொந்த ஊரில் இவர்களிடம் பல வாறான நன்கொடை கேட்டு வந்ததாகவும் இவர்கள் தரும் நிலையில் இல்லை என்பதையும் குடும்ப உறவுகளே இவர்களை துன்பப்படுத்தி எப்படி உதாசீனப்படுத்தினர் என்றும், கொட்டாங்குச்சியில் இவர்களுக்கு தேநீர் அளிக்கப்பட்ட வேதனைக் கதையையும் இவரின் தாய் பகிர்ந்து கொண்டிருக்கிறார். மாரியப்பனுக்கு இன்னும் 2 சகோதரர்கள் இருக்கின்றனர். படித்து வருகின்றனர்.

விபத்தில் பறிபோன கால் ஊனத்துடன் மிக உயரம் தாண்டி சிகரம் தொட்ட இந்த வயதில் சிறிய மாமனிதம் இன்னும் தாம் எட்டிய உயரம் பற்றியோ சிகரத்தில் இருப்பது பற்றியோ போதை தலைக்கேறாமல் இருப்பது பெரும் சிறப்பு.

பள்ளி, கல்லூரி உடற்கல்வி ஆசிரியர்களும், பெங்களூரின் இவருடைய பயிற்சியாளரும் இவரை இந்த அளவு உயரம் செல்ல உறுதுணையாகி ஊக்கம் அளித்திருக்கின்றனர்.



இவர் தற்போது நிறைய நிகழ்வுகளில் கலந்து கொண்டு வருகிறார் ஓய்வு இன்றி. வாழ்க மேலும் மேலும் வளர்க.

அடுத்து நமது கபடி அணி நமது தமிழகத்தின் சேரலாதன் உட்பட இந்திய வீரர்களின் அபாரமான திறமையால் எட்டாவது உலகக் கோப்பையை பெற்று ஆளுக்கு 10 இலட்சம் அரசு தரும் ஊக்கப் பணத்தைப் பெற்றிருப்பதாக செய்திகள். ஒரு கோடியாவது கொடுக்க வேண்டுமல்லவா? ஆக பேட்மிண்டன், உயரம் தாண்டல், கபடி இன்னும் இது போன்ற நிறைய விளையாட்டுகள் இன்னும் இந்தியாவில் இருப்பதை கிரிக்கெட் என்ற விளையாட்டு மேகம் மறைக்காதிருப்பதை இந்த அண்மைக்கால விளையாட்டு சாதனைகள் நமக்கு உணர்த்துகின்றன.
Image result for indian kabaddi team


கையால் எவ்வளவு நேரம்தான் சூரியனை மறைத்து விட முடியும்?

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, October 30, 2016

கொடி : கவிஞர் தணிகை

கொடி : கவிஞர் தணிகை

Image result for kodi


அரசியல் படம் என்றாலே அலர்ஜி ஆகிடும் நிலையில் துணிந்து இந்தப்படம் அரசியல் களங்களை மட்டுமே மையமாக வைத்து எடுக்கப் பட்டிருக்கிறது.சிறுவராக இருக்கும்போதே எதிர் எதிர் மேடைகளில் ருத்ராவும் கொடியும் பேச்சாளர்களாகிவிடுகிறார்கள். கொடி மற்றும் அன்பின் ஊமையான அப்பா கர்ணாஸ் தீக்குளித்து விடுகிறார் கட்சிக்காகவும் கட்சித் தலைமைக்காகவும்...

எனவே அடிப்படையில் வெறுப்புடனே பார்க்க ஆரம்பிக்கிறோம். அதில் பாதி நேரம் இடைவேளை வரை கற்பனையில் விளையாட்டுத்தனமாகவே கதை நகர்கிறது. பிடிப்பில்லாமல்.

ருத்ரா எனப்படும் நயவஞ்சகத் தனமான மேடைப் பேச்சாளராய் இருக்கும் பெண், சொந்தக் காதலை, காதலனை கத்தியில் குத்தி கொலை செய்து விட்டு கட்சித் தலைமை, பதவிச் சுவையை அனுபவிக்கத் துடிக்கும் கதாபாத்திரம் (ருத்ரா என்னும்) த்ரிஷா ஏற்றிருக்கும் பாத்திரம். அவர் உண்மையாகவே காதலித்து பதவியை அதன் போதையை.புகழை என்பது கதை சொல்ல முனைகிறது.


வெள்ளைக்கோழி முட்டைக்கு சாயம் ஏற்றி அதை நாட்டுக்கோழி முட்டையாக விற்கும் அனுபமா என்னும் நடிகை மாலதி முட்டைகளை கொடி தள்ளி விட்டுப் போனதால் அதன் விளைவுகளுடன் அவர்கள் குடும்பத்தோடு ஒன்ற நினைக்கிறார். ஆனால் கொடிக்குப் பதிலாக அன்பு எம்.எல்.ஏ வாக மாறிய பிறகு அவனுடன் சேர ஏங்குகிறார் அது என்னவாயிற்று என கதை சொல்லவில்லை.

ருத்ராவின் துரோகத்தை அன்புவின் உண்மை வீழ்த்தி விடுவதாகவும், கொடி தனது காதலியே தன்னை குத்தி விட்டதால் வெதும்பி வாழ விரும்பாமல் இறந்து விடுவதாகவும் கொடி,அன்பின் தாய் விளக்கி முடிக்கிறார்கள் . அதிகம் ஒட்டியும் ஒட்டாமலும் இந்தப் படம் நகர்ந்து கொண்டிருக்கிறது.

எஸ்.ஏ .சந்திரசேகருக்கு கட்சித் தலைவர் பாத்திரம். சரண்யாவுக்கு கொடி, அன்பு ஆகியோரின் தாயாக,இப்படி நிறைய பாத்திரங்கள் இருந்தாலும் படம் நிறைவாக இல்லை.

இரு வேடங்களில் தனுஷ் தோன்றி இருக்கிற போதிலும் இரண்டிலுமே பெரிதாக கொடி நாட்டவில்லை.திரிஷாவுக்கு வில்லி ரோல். எல்லா கதாநாயகிகளுமே தமது நடிப்புலக வாழ்வு முடிந்து போகும் நேரத்தில் வில்லியாக, ஜோதிகா, ரம்யா கிருஷ்ணன், இப்படி நடித்திருப்பது போல திரிஷாவும். இதன் பிறகு குணச் சித்திர நடிகையாக எதிர்பார்க்கலாம். என்ன இருந்தாலும் நடிகைகளுக்கு வயது கூடினாலே மதிப்பு குறைந்து விடுவது என்பது புதிதல்லவே.

இன்றைய அரசியல் களத்தைப் பற்றி விளக்கினாலும் ஒன்றும் லயிக்கும்படி இல்லை. ஏன் எனில் அரசியல் களமே அப்படித்தான். வெளியில் கட்சிகள் நாட்டை ஆள்வதாக முக்கிய முடிவுகள் எடுப்பதாகத் தோன்றினாலும் அதில் ஈடுபடும் தனி நபர்களின் ஆசா பாசங்களையும் தனி மனித வேட்கைகளையும் பொறுத்தே ஒரு நாட்டின் அரசியல் தீர்மானிக்கப்படுகிறது என்று சொல்ல முனைந்துள்ளார்கள். ஆனால் அது எத்தனை பேருக்கு சென்றடைந்திருக்குமோ? சென்று சேருமோ?

மிகவும் ரஸமல்லாத வறட்சியான தயாரிப்பு. ஆனால் இது போன்ற தயாரிப்புகள் செய்ய துணிச்சல் வேண்டும். நூற்றுக்கு 40 மதிப்பெண் கூட எட்ட முடியாது ஏன் எனில் படம் நிதர்சனமான உண்மைகளை அப்படியே தருவதால் அதிக மதிப்பெண் தரத் தோன்றவில்லை. எந்த வித கவர்ச்சியும் இல்லை.

காற்றில்லாததால் கொடி பட்டொளி வீசி பறக்கவில்லை. தொங்கிக் கிடக்கிறது. பார்ப்பதும் பார்க்காததும் உங்கள் விருப்பம். பார்க்காததால் நஷ்டமில்லை. பார்த்தால் கஷ்டம் இருக்கிறது. இப்படித்தான் நாட்டின் நடப்பும், கட்சிக்காரர்களும் இருக்கிறார்கள் என்ற  வேதனை தொற்றிக் கொள்கிறது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Saturday, October 29, 2016

காஷ்மோரா தீபாவளிக்கு பம்பர் பரிசு: கவிஞர் தணிகை

காஷ்மோரா தீபாவளிக்கு பம்பர் பரிசு: கவிஞர் தணிகை

Image result for kashmora

காசு இருப்போர் அவசியம் சினிமாத் தியேட்டரில் சென்று பார்க்க வேண்டிய பார்த்து அனுபவித்து மகிழ வேண்டிய  பிரும்மாண்டமான படம்..இதைப் பற்றி நிறைய பேச வேண்டி உள்ளது. டெட்லி ஸ்பிரிட் என்ற ஆங்கிலப் படத்தை தமிழில் எடுத்து தெலுங்கிலும் வெளியிட்டு வெற்றிக் கொடி நாட்டியிருக்கிறார்கள், தீபாவளியன்று காலை எழுந்தவுடன் முதல் விருந்தாக பார்த்து முடித்து விட்டேன். இந்த இணையதளங்கள் தான் எவ்வளவு வசதி ஏற்படுத்தி தருகின்றன எங்கும் நகராமல் வீட்டுக்குள்ளேயே இருந்து கொண்டுவிரும்பிய படங்களை பார்க்க‌. .

தெலுங்குப் படங்களில் விட்டலாச்சாரியார் என்ற ஒரு மறைந்த இயக்குனர் ஆவி சம்பந்தமான படங்களை எடுத்து புகழ் பெற்றவர். ஜகன்மோகினி போன்ற படங்கள் தமிழிலும் பேர் பெற்றவை. ஆனால் அவை எல்லாம் மிகவும் கீழ்த் தரமான சிந்தனையுடன் இருக்கும்.இந்தப் படம் ஆங்கிலப் படத்துக்கு இணையாக ரிச்சாக வந்திருக்கிறது. கொஞ்சம் மம்மியை நினைவு படுத்துகிறது உருவம் கலைந்து போவதெல்லாம்... எனவே தமிழ், தெலுங்கு இரசிகர்களை கவர்ந்திழுக்க நல்ல கதையை கற்பனையை உலவ விட்டிருக்கிறார்கள்.
Image result for kashmora


இன்றைய காலக் கட்டத்தில் ஆவி தொடர்பான நிறைய படங்கள் தமிழில் வந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக‌ சிகரம் தொட்டிருக்கிறது இந்தப் படம் இரு மொழிகளில் இறங்கி இருக்கிறது ஆவி உலக ஆராய்ச்சி ‍ விச் கிராப்டிஷம் எனப்படும் துறையில் பொய் சொல்லி பிழைப்பு நடத்தும் ஒரு குடும்பம் எப்படி ஆவி உலகத்துள் போய் அனுபவிக்கிறது என்று மிகவும் இரசிக்கத் தக்க வகையில் கொடுத்திருக்கிறார்கள். அதில் வழக்கப்படியான ராஜா கதை, பழி வாங்கல் கதை சுருக்கமாக ஆனால் தெளிவாக, கம்பீரமாக செய்திருக்கிறார் கார்த்தி. கொஞ்சம் சந்திரமுகி வேட்டையன், பாஹூபலியை நினைவு படுத்தினாலும் படம் சூப்பர்ப்.

Image result for kashmora


ஆனால் 164 நிமிடங்கள் ஓடக்கூடிய 60 கோடி ரூபாய் செலவு செய்து எடுத்த‌ தமிழ் படத்தை இயக்குனர் கோகுல் நயம்பட ஒரு துளி நேரம் கூட நேரம் போவது தெரியாமல் தீபாவளி விருந்தாக்கியுள்ளார். very very interesting and time passing thriller.

கார்த்திக்கு இந்தப் படம் ஒரு மைல் கல். காமெடி, வில்லன், கதாநாயகன் என முப்பரிமான ரோல். பின்னி எடுத்து விட்டார். அதனால்தான் தெலுங்கு இரசிகர்கள் தமிழ் இரசிகர்களை விட ஒரு படி அதிகம் என்று ஒரு பேட்டியில் சொன்னார் போலும் தெலுங்கு சினிமா விசுவாசிகள் இந்தப் படத்தை லேசில் விடமாட்டார்கள்.

கலவையான வியாபார நோக்கில் எடுக்கப்பட்ட படம். பட்டிமண்டபத்தில் பெரும்பாலும் முன்பெல்லாம் இருபக்கமும் வாதங்களைக் கேட்டு முடித்து விட்டு எந்தப் பக்கமும் ஒருமித்த தீர்ப்பை தராமல் பொதுவாக சொல்லி முடிப்பது போல... ஆவி உலக ஆராய்ச்சி செய்யும் ஸ்ரீதிவ்யா ஆவி இருக்கிறதா இல்லையா என தடுமாறுவது போல எந்த தீர்வும் தராமல் இருக்கிற இந்த படத்தில் சினிமாத்தனமான நிறைய இருந்தாலும் என் ஜாய் பண்ண நிறைய இருக்கிறது.

https://youtu.be/rQUj5Mf6iiA
http://deccanreport.com/karthi-kashmora-trailer/

பிலாக் மேஜிக் என்று சொல்லப்படும் பில்லி சூனியம், மந்திரம் மாந்திரீகம், ஆவி உலக ஆராய்ச்சி, ஆவி உலகம், ராஜ் நாயக் மன்னர் ஆட்சிக் காலம் ரத்னா தேவி, பலஹீனம் பெண்கள் இப்படி சொல்லப்படுவது ஒரு புறம், விவேக் அப்பாவாக‌, சந்தானத்தோடு நகைச்சுவையில் ஈடு கொடுத்த ஜாங்ரி மதுமிதா தங்கையாக நடிக்க  கார்த்தி படு அமர்க்களப் படுத்துகிறார். பல நடிகர்களை பின்னுக்குத் தள்ளுகிறார் நல்ல மாடுலேஷன் டையலாக் டெலிவரி. முற்றிலும் வித்தியாசமான 3 வேடம், பாஹுபலி நிறைய சிரமப்பட்டு எடுக்க ஆனால் காஷ்மோராவாக‌ சுலபமாக  கார்த்தி ஊதித் தள்ளி இருக்கிறார்.

நயன் தாரா கொஞ்ச நேரமே வந்தாலும் அவரது ரோலை அவர் சரியாகவே செய்திருப்பதாகச் சொல்லலாம். கிராபிக்ஸ், விசூவல் கம்யூனிகேஷனில் பின்னி இருக்கிறார்கள் முண்டமாக தலை தனியாக ஆவியாக வரும் ராஜ் நாயக், வாழும்போது மொட்டைத் தலை ராஜ் நாயக் எல்லாமே குறை காண முடியாமல் கார்த்தி அசத்தி இதில் நடித்த எல்லாரையுமே ஓவர் டேக் செய்து சினிமாப் பட‌ உலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து தக்க வைத்துக் கொண்டுள்ளார்
Image result for kashmora


கொஞ்சம் அசந்தால் நம்மையும் கார்த்தி இரசிகராக மாற்றி விடுவது போன்ற அசத்தலான நடிப்பு. சும்மா புகுந்து விளையாடி இருக்கிறார் பயத்தை போலியை வெளிப்படுத்தும் காஷ்மோராவாக உள்ளீடற்ற வெறும் ஏமாற்றுப் பேர்வழியாய் இருந்தபடியே எப்படி மக்களை கவர்ந்து அவஸ்தைப் பட்டு பேரும் புகழும் அடைகிறார்.

ஒரு பக்கம் பார்த்தால் நகைச்சுவையாய் அந்த பில்லி சூனிய தந்திரங்களை போலி என கேலி செய்கிறார்கள். மறுபக்கம் ஆவி உலக கதை செய்து படத்தை நன்கு நகர்த்துகிறார்கள்.

மொத்தத்தில் தீபாவளிக்கு வந்த படங்களில் இது முதலிடம் பெறுகிறது நல்ல பொழுது போக்குப் படம். தாரளமாக நூற்றுக்கு 55 கொடுக்கலாம். பார்க்கும் மக்களை மகிழ்வித்து இருக்கிறார்கள். எல்லாம் மறந்து சிரிக்கலாம். சிந்திக்க நினைப்பவர்களும் ஆவி உலக வாழ்வு பற்றி சிந்தித்து கேள்வி கேட்டுக் கொள்ளலாம்.


Image result for kashmora

எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற அளவில் படம் நன்றாக உள்ளே சென்று ஊறி விடுகிறது. கதை நல்ல நிலை. சிறந்த ஒப்பனை.நிறைய பொருட் செலவு அருமையான வசனம் சிரிக்குமளவு. நல்ல தயாரிப்பு, நல்ல பிசிறில்லாத இயக்கம், நல்ல எடிட்டிங், மேலும் விசூவல் எபக்ட்ஸ், கிராபிக்ஸ் எல்லாமே பாராட்டும்படியாக இருக்கிறது. பாடல்கள் தேவையில்லாத படம். இசை நன்றாகவே இருக்கிறது. கேலிக்கு அளவே இல்லை மெல்லிய நகைச்சுவை படமெங்குமே இழையோடியபடியே இருக்கிறது பெரும் சிறப்பு.சண்டைக் காட்சிகள் எல்லாம் இரசிக்கும்படியாகவே இருக்கிறது

சினிமாவில் நாயகன் வில்லன் என்பதெல்லாம் எம்.ஜி.ஆர், நம்பியார், சிவாஜி என்ற காலத்தில் இருந்ததோடு சரி. சத்யராஜ், கமல், ரஜினி, கார்த்தி, இன்றைய நடிகர்கள் எல்லாமே அந்த உண்மை என்ற நிழலாடும் நிலையை மாயையை கிழித்து எல்லாம் நடிப்புதான் என்பதை வெளிப்படுத்தி சிறப்புப் பெறுகிறார்கள். அந்த வகையில் இந்தப் படத்தில் கார்த்தி வில்லனாக, நாயகனாக, ஆவியாக பிசிறில்லாத கதையில் அசத்தி உள்ளார். எடிட்டிங் குழப்பமில்லாமல் 3 கதையை ஒரே கதையில் பிணைத்துள்ளது. நன்றாக புரிகிறது.

பாஹூபலிக்கு கிடைத்த அளவு நிதி இவர்களிடம் கொடுத்தால் அதை விட ஒரு நல்ல கதையில் அதை விட இந்த அணி சிறந்த சினிமாவைத் தர முடியும் என்று சவால் விட்டிருக்கிறது. முகமது அலி சொல்லி அடிப்பாராம் ஜெயித்துக் கொண்டே இருப்பேன் என குத்துச் சண்டையில் இத்தனாவது ரவுண்டில் எதிரியை வீழ்த்துவேன் என்பது போல கார்த்திக்கு இந்தப் படம் ஒரு பேர் சொல்லும் ஒரு ஹிட் படம்.

Image result for kashmora

காலை 9 மணிக்கே பார்த்து முடித்தாலும் இப்போதுதான் உங்களிடம் எடுத்து பதிவு செய்ய முடிந்திருக்கிறது. நன்றி வணக்கம்.

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

Friday, October 28, 2016

பாலகுமாரனின் புத்தி மாறாட்டம்/ஜீன்ஸ்: கவிஞர் தணிகை

பாலகுமாரனின் புத்தி மாறாட்டம்/ஜீன்ஸ்: கவிஞர் தணிகை


Image result for balakumaran

150 நாவல்,100 சிறுகதைகள், 14 படங்கள் 2 மனைவி வயது 70 தாடி மீசை முனிவர் போன்ற தோற்றம் தினமலர் தீபாவளி மலரில் ஒரு மனந்திறந்த வக்கிரம். எதையாவது எழுத வேண்டுமே என்ன எழுத என உள் சென்று கடைசியில் தன்மேல் தானே போட்டுக் கொண்ட பிணமாலை. புத்தி தடுமாற்றம் இந்த எழுத்தாளருக்கு போதாத காலம் அல்லது இறுதிக் காலம் ஏற்பட்டு விட்டதன் அறிகுறியும் அடையாளமும்.

காவிரி மைந்தனின் ஒரு பதிவு இந்த பதிவுக்கு ஒரு அடித்தளமாகிறது.எனது நண்பர் ஒருவர் கேட்டார், பாலகுமாரனைப் படித்திருக்கிறீர்களா என படித்திருக்கிறேன் என ஆரம்பித்த அந்த பதில் எல்லா இலக்கிய‌ உலகையும் சுற்றி வந்தது அப்போது. இப்போது இவரை சுற்றிவருகிறது.

 இவரது எழுத்துகளை கல்கி, ஆனந்த விகடன். குமுதம் போன்றவற்றில் தொடராகவும், புத்தகமாகவும் நிறைய படித்தேன். சில புத்தகங்கள் எனது தனி நூலகத்திலும் உண்டு.படங்களும் பார்த்துள்ளேன். ஆனால் தினமலரில் இவர் இப்போது எழுதியுள்ள அவரது சொந்த வாழ்வு இலக்கியத்தில் சேர்க்கப் படக்கூடாதது.Image result for balakumaran



இவரது எழுத்துகளில் ஒரு மீறல் இருக்கும் ஆனால் அது ஜெயகாந்தனின் சமூக அக்கறையுடனான எழுத்து போன்றது அல்ல பாலுறவு மீறல் அதிகம் தொனிக்கும் நெடி. அதையே பெண் விடுதலை எனச் சொல்லி கருதி எழுதி இருப்பார் போலும். காவிரி மைந்தன் தொடாத பகுதியை நான் தொடுகிறேன். தி.ஜ.ரா கூட கள்ள உறவுகள் பற்றி எல்லாம் எழுதி இருக்கிறார் ஆனாலும் அதில் அவருக்குண்டான ஒரு மென்மையான ஸ்டைல் முத்திரை இருக்கும். ஆனால் பாலகுமாரனில் ஒரு கர்வம், ஒரு ஆணவம், ஒரு திமிர் இருந்து கொண்டே அந்த கள்ள உறவுகள் செய்வது சரி எனச் சொல்லும். இது போன்ற உறவுகள் சில தற்கொலைகளில் முடிந்து போயிருக்கின்றன என்பதை நான் நடைமுறையில் பார்த்திருக்கிறேன். ஆனால் இவருடைய எழுத்துகள் அது போன்றவற்றிற்கு ஊக்கப்படுத்துவதாக சில கதைகள் அமைந்துள்ளன. 

கிடைக்கும் காசு என்ற ஆசை இன்னும் இவரை எல்லாம் எழுதும் தேவையை உண்டு பண்ண வைத்திருப்பதை இவரின் எழுத்துப் பஞ்சத்தைப் போக்க இவர் தன்னையே தான் சொறிந்து கொண்டு இவரது உண்மை வாழ்வை தாயுடன் தந்தை நடந்து கொண்ட விதத்தை எழுதி கொச்சைப் படுத்திக் கொண்டு விட்டார்.

தினமலர் நாளேடு சர்ச்சைக்குரியது அதிலும் இந்த தீபாவளிமலரின் பாலகுமாரனின் பதிவு மிகுந்த கேள்விக்குரியது. இவரது எழுத்துகளில் ஏன் அவ்வளவு பாலியல் கலப்பு ஏன் வந்தது என்ற கேள்விக்கு இவரின் தாய் தந்தையரின் வேரைக் காண்பித்து இவர் பதில் அளித்து விட்டார்.

அவரே அவர் தந்தையைப் பற்றி சொல்கிறார்: குடி இல்லை சீட்டாடுவதில்லை, வெற்றிலை போடுவதில்லை, பொம்மனாட்டி சகவாசம் இல்லை என்று அவரின் தந்தையை அவரின் தாய் கொண்டாடுவாராம், ஆனால் அதில் ஏதாவது ஒன்று இருந்திருந்தாலும் பரவாயில்லை இவரின் வக்ரம் குறைந்திருக்கும் என இவர் சொல்கிறார். தந்தையின் கோபம், அவர் வன்முறை,அவரின் பயம், அவரின் கோழைத்தனம் பற்றி தந்தையை சாடுகிறார். மனிதரே அல்ல மனிதனே அல்ல என்றும் வெறும் உண்டு, கழித்து, உயிர் வாழ்ந்த மிருகம் என்கிறார்.

தந்தையை அடிக்க முனைந்ததை பறை சாற்றுகிறார். மேலும் தாயை அவமானப்படுத்தி மற்றவரை இழிவு படுத்த எப்போதும் தயாராய் துடித்துக் கொண்டிருக்கும் ஒரு பைத்தியக்காரன் என்கிறார்.மேலும்  அதை விட அதிகமாய்: அடுத்த வீட்டுப் போர்ஷன் பெண்மணியை நாணி, திகைக்க வைக்க, அவமானப்படுத்த நள்ளிரவில்  பாலகுமாரனின் அம்மாவை எழுப்பி, பிள்ளைகள் பார்க்கிறார்கள் என்பதையும் கூட கவனத்தில் கொள்ளாது இவரது தந்தை தாயை கட்டி அணைத்து,முத்தமிட்டு, கண்ட இடங்களில்  கை வைத்து , காம சரசங்களை, கெட்ட வார்த்தைகளை உரக்க நடத்தியவன், பிள்ளைகள் எழுந்து உட்கார்ந்து கவனிக்கின்றனர் என்று தெரிந்தும் தொடர்ந்து நடத்தியவன் மொத்தத்தில் அந்த இழிமகனிடம் எப்படி நீ குடும்பம் நடத்தி மீண்டாயோ? என்று தமது இறந்து போய் பல வருடங்கள் ஆன தாய்க்கு கடிதம் எழுதுகிறாராம் அது எதற்கு என்றால் தற்கால பெண்கள் அப்படிப்பட்ட கணவரோடு வாழ்ந்தால் மீட்டுக் கொள்ளத் தானாம், மீண்டு வரத்தானாம்...என்னே ஒரு இலக்கியம்,,,புல்லரிக்குது பாலகுமாரன்.இவரது தந்தை செய்தது இழி செயல் என்றால் இவர் செய்வதும் செய்ததும் இழி செயல்தான். அந்த விந்தில் இருந்து முளைத்ததுதானே? விதை ஒன்னு போட்டா சுரை ஒன்னா முளைக்கும்?

எந்தவிதத்திலும் கம்பீரம் இல்லாத மனிதனாம், மொழியறிவோ , சந்தியாவந்தனமோ, பூஜையோ புனஸ்காரங்களோ செய்யாதவனாம், காய்கறி, துணிமணி ஏதும் வாங்கத்தெரியாதவனாம்..இப்படி எவ்வளவோ தாயை தந்தையைப் பற்றி எழுதும்போது தந்தையை சாடி எழுதி தமது புத்தி மாறாட்டத்தை எழுதி தனது எழுத்து வறட்சியை புலபடுத்திக் கொண்டுள்ளார். இந்த அரைவேக்காடு.

இப்போது தான் புரிகிறது இவரது ஜீன் அப்படி. எனவேதான் அப்படி எல்லாம் இவரால் எழுத முடிந்திருக்கிற்து என்று.எழுத்தாளர் சுஜாதா ரங்கராஜனின் மனைவி சுஜாதா அவர்கள் ஒரு முறை சுஜாதா எழுத்தாளரைப்பற்றி தமது கணவரைப்பற்றி தமது எழுத்து அத்தனைக்கும், தம் பேரை விட தமது மனைவியின் பேரே இருக்கட்டும் என தாம் உயர்ந்து வெளித் தெரிந்த பிறகும் கூட கடைப்பிடித்த அறிவியலாளர் பற்றி குறைவு பட எழுதி அசிங்கப்பட்டுப் போனார். அதற்கும் நாம் மறுப்புப் பதிவு இட்டோம். அது போல இந்த பாலகுமாரனும் தாய் தந்தை பற்றி எழுதி தாயை உயர்த்துவதாக எழுதி தந்தையை தோலுரித்துக் காண்பித்து தாம் அந்த வழி வந்தவர்தான் என தம்மை அடையாளப்படுத்தி வெளிப்படுத்திக் கொண்டு விட்டார்.

பொதுவாகவே அடியேனாகிய நான் எந்த சாதி ஆச்சாரம் பற்றியும் உள் புகுந்து எழுதுபவனல்ல என்றாலும் இந்த பார்ப்பனர்கள் எதைப்பற்றியுமே வெட்கம் இல்லாதவர்கள். எதற்கும் தயாரானவர்கள் தாம் என்பது இது போன்ற பாலகுமாரனின் பதிவு மூலம் நன்கு தெரிந்து கொள்ளலாம். மற்றொரு நண்பர் ஒருவர் மற்றொரு பார்ப்பனர் வீட்டில் நிகழ்ந்ததாக சொன்ன வக்கிரமான சம்பவங்களும் இப்போது எனக்குள் நிழலாடுகிறது. அது வேண்டாம் விடுங்கள்\\\

2000 ஆண்டில் தாரமங்கலத்தில் எனக்கு ஒரு அரட்டை அரங்கத்தில் பேச வாய்ப்பு வந்தது அதில் பேசும்போது எனக்கு எனது குடும்பத்தின் ஏழ்மை குறித்து பேச பேச்சுகள் கருவுற்றன..ஆனால் அந்த ஆற்றோட்டப் பேச்சை  flow   அப்படியே முழுக்கி விட்டேன் ஏன் எனில் எமது குடும்பத்தின் நிலையை பிறருக்கு ஏன் வெளிப்படுத்த வேண்டும் . ஆனால் அப்படி வெளிப்படுத்தி இருந்தால் அது சபைக்கு நல்ல சுவையாய் இருந்திருக்கும் என விசு கருதினார். ஆனால் நமது வேர்களை நாமே காயப்படுத்தி அப்படி என்ன புகழ் வேண்டிக் கிடக்கிறது நமக்கு?

இந்த பாலகுமாரன் ஒரு யோகி போலவும் தவவாசி போலவும் வேடம் அணிந்து வருகிறார் என்பதற்கு இவரது உண்மைப் பேச்சு அதுவும் பிரசுரமான எழுத்துகள் சான்றாகிவிட்டன.

நதி மூலம், ரிஷி மூலம் காண்பது கூடாது என்பதெல்லாம் இதற்குத்தான். இதைத்தான் பைபிளில் ஏசு சொந்த ஊரிலும் வீட்டிலும் தவிர வேறெங்கும் இறைவாக்கினர் மதிப்பு பெறுவர் என்று.

பொதுவாகவே இறுதிக் காலத்தில் மனிதர்க்கு ஒரு புத்தி மாறாட்டம் என்று ஒன்று நிகழ்வதுண்டு. இந்த தினமலரின் தீபாவளி மலரின் ப்ரியமுடன் பாலகுமாரன் எழுதிய பதிவு இவருக்கு அந்தக் காலக் கட்டம் நெருங்கி விட்டது என்று சொல்லத் தோன்றுகிறது. வேறென்ன சொல்ல....புகழடைந்த மனிதர்கள் கூட மேலும் மேலும் புகழுகும் பொருளுக்கும் ஆசைப்படுகிறார்கள். ஆசையை யாரால் அறுக்க முடிகிறது? அது ஒவ்வொருவருக்கும் ஒரு வகையில் .பெரியார் தாசனுக்கு ஒரு வழியில், சசிபெருமாளுக்கு ஒரு வகையில், பாலகுமாரனுக்கு இவ்வழியில்.

இவர் எழுதிய வசனத்தில் உருவான ஜீன்ஸ் என்னும் சங்கரின் படம் மிகவும் ஆர்ப்பாட்டமாக வாயைத் திறந்து கொண்டு பார்ப்பது போல அமெரிக்காவிலிருது உலக நாடுகள், உலக அதிசயங்கள் யாவற்றுக்கும் நம்மை அழைத்துச் செல்லும் கடைசியில் ராதிகாவும், நாசரும் ஊத்தையாக புலை நாற்றமெடுக்கும் கதையை கட்டவிழ்ப்பார்கள் தரம் தாழ...அது போல இந்த பாலகுமாரனின் கம்பீரமும் இங்கு குடை சாய்ந்து மண்ணில் வீழ்ந்து நாசப்பட்டு விட்டது.


எல்லாவற்றுக்கும் மேலாக விறகுக் கட்டையால் கையைக் காலை உடைத்து, மண்டையைப் பிளந்து இருக்க வேண்டும். , சுத்தியல் வைத்து பற்களைத் தட்டியிருக்க வேண்டும்,முதுகெலும்பை முறித்திருக்க வேண்டும், கால்கள் நடக்க இயலாதபடி வெட்டுக்காயங்கள் ஏற்படுத்தி இருக்க வேண்டும்,,,அப்படீன்னா இன்னும் எவ்வளவு வன்மம் இருக்கிறது பாருங்கள் அம்மா இறந்து 16 ஆண்டு ஆன பின், அவரின் 40 ஆண்டுகால மணவாழ்வில் ஒரு மனநோயாளியான தந்தையுடன் வாழ்ந்ததாக சொல்கிறார். தந்தை இறந்த பின் 12 ஆண்டுகள் இந்த அம்மா புருஷன் இல்லாத காலம் பொற்காலம் என்று வாழ்ந்ததாக சொல்கிறார். அவரைக் கேட்டால் தெரியும் அவர்தான் போய் 16 ஆண்டு ஆகிவிட்டதே...ஆக இவர் தந்தை இறந்து 28 ஆண்டுகள் ஆன பின்னும் இவரிடம் இவ்வளவு வெறி, வன்மம் புதைந்து கிடக்கிறது எனில் இவரின் தாடி மீசை எல்லாம் வெறும் ஆஷாடபூதித்தனம் தானே? ஜீன் சரியாக வேலை செய்திருக்கிறது....

Image result for balakumaran


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

பட்டாசு வெடிக்காத தீபாவளித் திருநாளில் வாழ்வில் வழி காட்ட ஒளி கூட்ட வாழ்த்துகள்: கவிஞர் தணிகை.

பட்டாசு வெடிக்காத தீபாவளித் திருநாளில் வாழ்வில் வழி காட்ட ஒளி கூட்ட வாழ்த்துகள்: கவிஞர் தணிகை.
Image result for deepavali


சிவகாசி குட்டி ஜப்பான், பட்டாசு தொழிலை மட்டுமே நம்பி வாழவில்லை, அங்கே அச்சு,காலண்டர்,தீப்பெட்டித் தொழில், மெஷின் மேக்கிங்,இப்படி பல தொழில்கள் உண்டு. இந்த பட்டாசுத் தொழில் தம்மையும் அழித்து பிறரையும் அழிக்கும் இரசாயனப் பொருள் வேடிக்கையால் விளைகிறது.பொருள் அவாவினால் நடப்பது. அதிலும் பல நூறு சதம் இலாபமாக இடைத் தரகர்களுக்குத்தான் போய்ச் சேர்கிறது. அரசு, மற்றும் அறிவார்ந்தார் கடன் இதை மடைமாற்றம் செய்து இதில் உடல் நலத்தை இழந்து சொற்ப வருவாய் ஈட்டிவரும் மனித குலத்தை காக்க வேண்டும் என்பதே.

சீனத்துப் பட்டாசும், சீனப் பொருள்களும் கூட பயன்படுத்துவதிலிருந்து விலக்கப் பட வேண்டியதே. சீனத்து தொழில்நுட்பம் நமது ஏ.டி.எம்.கார்டுகளின் இரகசியக் காப்பில் எப்படி ஊடுருவல்கள் நடத்துகின்றன என ஊடகங்கள் வழி காண முடிந்தது.

 தீபாவளி என்ற திருநாள் கிருஷ்ணன் நரகாசுரன் (சூரன்) வதம் என்ற அடிப்படை இல்லாத கதையின் மூலம் படிக்காத படிக்கத் தெரியாத படிப்பதைப் புரிந்து கொண்டு ஏன் எதற்கு எப்படி என்று பார்க்கத் தெரியாத முட்டாள்களை ஏமாற்றி மூடர்களால்  காலம் தொட்டு வியாபாரிகளுக்கு ஆதரவாக கட்டி புனையப்பட்டிருப்பது என்பதால் அதைப் பற்றி முற்றிலும் அக்கறை கொள்ளத் தேவையில்லை.

நமது முகநூல் தோழர்கள் வேடிக்கையாகச் சொன்னார்கள், மற்றவர்கள் வென்றால் அவர்கள் எதிரிகள் சூது செய்தால் அவர்கள் சகுனிகள், அதுவே நமக்கு ஆதரவானால் அவர் கிருஷ்ணர். கடவுள்

உள் கட உள் கட உள் கட என்ற சொற் பிரயோகமே கடவுள் என்றும் தமிழ் மொழியில் மட்டுமே இந்த உயர்ந்த சொல்வடை இருக்கிறது என்பதை அறியலாம். நாம் கூட 1983 வாக்கில் திண்டுக்கல் இளம் வர்த்தகர்களின் ஒரு கூடலில் : புறம் கட உள் பார்க்க, புறம் கட ; கடவுள் பார்க்க என்று faith in God   என்ற தலைப்பில் ஒரு கவிதை சமர்ப்பித்தோம். அது என்றும் நிலையாக நிற்கிறது காலத்தை விஞ்சி அல்லது காலத்தைக் கடந்து என்றும் சொல்லலாம்.

இப்போது ஐப்பசி அடைமழைக்காலம் எல்லாம் காணாமல் ஓடி மறைந்தது. இன்னும் குளிரவே ஆரம்பிக்கவில்லை நவம்பர் மாதத்துள் நாம் நுழைவில் இருந்தும் .அமெரிக்காவின் விண்வெளியின் அதிக காலம் இருந்த பெருமையுடைய விண்வெளி வீரர் ஒருவர் சொல்கிறார்  இந்தியாவும் சீனாவும் பெரும் காற்று மாசடைவில் இருக்கிறது. இதை விண்வெளியில் இருந்து நன்கு காண முடிகிறது எனச் சொல்லி இருக்கிறார். மக்கள் தொகையும் அதிகம் மாசடைதலும் அதிகம் என்கிறார் மணியம் பொறியாளர் படிப்பை படிக்க ஆரம்பித்திருப்பவர்.

ஐக்கிய நாடுகள் சபை சொல்கிறது இன்றைய உலகு 90 சதவீதம் மாசடைந்து விட்டது. மனிதர்கள் வாழ்வதே பெரும் சோதனையாய் இருக்கும் இந்தக் காலக் கட்டத்தில் மேலும் மேலும் நமது இயற்கைக்கு ஒவ்வாத செயல்பாடுகள் செய்யாமல் நாம் இருப்பதே இந்த பூமிப் பந்துக்கு நாம் செய்யும் நம்மால் முடிந்த புண்ணியம். பறவைக்கு, விலங்குகளுக்கு, நோயாளிக்கு, முடியாதவர்க்கு, முதியவர்களுக்கு எல்லாம் வேண்டாம் முதலில் உங்களுக்கு நீங்களே நன்மை செய்து கொள்ள முயற்சி செய்வது இதிலிருந்தே இப்படிப்பட்ட சிறிய காரியங்களில் இருந்தே ஆரம்பிக்கிறது. பட்டாசை தவிர்ப்போம் தீபாவளித் திருநாளில் வாழ்விற்கு ஒளி கூட்டுவோம், மாசைக் குறைப்போம் என உறுதி எடுப்போம்.

ஆண்டுக்கு ஆண்டு இந்த பட்டாசு வெடிக்கும் அவா குறைந்து வருவது ஆரோக்யமான செயல்பாடு.நாளை தீபாவளியானாலும் இன்று இந்த 3 மணி மதியம் வரை கூட பட்டாசு வேட்டு சத்தம் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே கேட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் ஒரு காலத்தில் இந்த சத்தம் கார்த்திகைத் தீபத்திலிருந்தே கேட்க ஆரம்பித்து விடும் என்பதையும் மறந்து விட முடியாது.காரணம் பட்டாசு விலை என்பதும் ஒன்றாக இருக்கலாம்.மக்களிடம் உள்ள பொருளாதார நிலைகளும், மதுபானமும், காசை இப்படி விரயம் செய்யக் கூடாது என்பதாகவும் பல காரணங்கள்.


தீபாவளித் திருநாள்: என்பது தீபங்களின் அணிவரிசையில் அழகு ஒளி பெறும் ஒரு நாள் என்பதே. எனவே காசை விரயம் செய்யாமல் ,நோய்வாய்களை உருவாக்கும் இரசாயன பொட்டாஷ், கந்தகம், நைட்ரேட் போன்ற பொருள்களின் காற்றுக் கலப்பினால் உருவாகும் மாசிலிருந்தும்  சுவாசக் கெடுதல்களிலிருந்தும் தப்பியுங்கள். மேலும் இனிப்பு, உடலுக்கு அதிகம் நன்மை பயப்பதல்ல என்பதால் அதையும் அளவுடன் சுவையுங்கள். மற்றவை எல்லாம் திருநாளுக்கு ஏற்றவைதான். உறவின் கலத்தல், நட்பின் இருத்தல், குடும்பம் சுவைத்தல், மகிழ்தல் யாவுமே நமது கால பாரம்பரியத்தாலும் எந்தக் காலத்திலும் ஏற்றுக் கொள்ளப் பட வேண்டியவையே என்று கூறி இந்த தீபாவளித் திருநாளில் அனைவருடைய வாழ்விலும் இயற்கை நல் ஒளிக் கீற்றுகள் சிந்தட்டும் ....என வாழ்த்தி மகிழும்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

ஒரே இடத்தில் இரு வேறு நேரில் கண்ட சாலை விபத்தும் பால் குட விளைவுகளும்: கவிஞர் தணிகை

 ஒரே இடத்தில் இரு வேறு நேரில் கண்ட சாலை விபத்தும் பால் குட விளைவுகளும்: கவிஞர் தணிகை

Image result for yesterday accident in front of vinayaka bike and car on highway


வேம்படிதாளம் மருத்துவ மனை முகாம் பணி முடித்து சுமார் 12 மணிக்கு எங்களது வாகனம் கல்லூரி வளாகத்துள் நுழைய முனைகையில் இடி இடித்தது போன்ற ஒரு பெரும் சத்தம்.வண்டியை அப்படியே நிறுத்தி விட்டு பின் சென்று பார்த்தோம்.ஒரு ஆடி கார் சாலையில் முன்புறம் சேதமாகி கண்ணாடி எல்லாம் உடைந்து, இரு சக்கர வாகனம் முன்னால் பறக்க, பின்னால் அந்த வண்டியில் வந்த இருவரும் பின்னால் சாலை செடிகளிடை வீழ்ந்து கிடக்க...

விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த இந்த 7 மாதத்தில் பல விபத்துகளை கல்லூரியின் எதிரே வீரபாண்டி நெடுஞ்சாலையில் கண்டு விட்டேன். விநாயகா தலைமை அலுவலகத்தின் எதிரே என்றும் சொல்லலாம். ஆனால் இன்று பார்த்தது மிகவும் சினிமா பாணியில் வண்டியும் விபத்தில் சிக்கிய பைக்கின் 2 நபர்களும் சுமார் 10 அடி உயரே எழும்பி சாலையின் வலப்புறம் உள்ள செடிகள் நிரம்பியிருக்கும் குழிப்பகுதியில் விழுந்துள்ளனர். இவர்களின் பைக் முன்னால் சென்று விழுந்து கிடந்தது.இருவருக்குமே மண்டையில் நல்ல அடி காயம், இரத்தம் வழிந்து ஓட... வேகம் , வேகம் , ஒரே வேகம். தடையில்லா வேகம். பெரும் சோகம்.

Image result for ariyanoor highway at vinayaga dental college

ஒருவர் காலமாகிவிட்டார் மற்றொருவர் நிலையோ கவலைக்கிடம்.கேரளாவிலிருந்து மாண்ட் போர்ட் ஏற்காடு பள்ளிக்கு வந்து தமது பிள்ளைகளை தீபாவளி விடுமுறைக்கு அழைத்து செல்ல வந்த ஆடி கார் வெகு வேகமாக வர, குறுக்கே பாய்ந்த இந்த பைக் தூக்கி விசிறி எறியப்பட்டது.

காரில் இருந்தவர்களுக்கு ஒரு சேதமும் இல்லை. ஆனால் அந்த பைக்கில் வந்தவர்கள் இனி வாழ்வதே கூட அரிதுதான். முன்பே சொன்னபடி ஒருவர் அங்கேயே...மற்றொருவர் மிகவும் மோசமான நிலையில்..

108ஐ அழைத்தோம். முதல் உதவி இல்லாத வண்டி வந்து சேர்ந்து , அதில் இரு நபரையும் தூக்கி சென்று போட்டோம்.

அதை வேடிக்கை பார்த்த கூட்டம் சேரச் சேர ஒரு கார் திடீரென்று பிரேக் போட ஒரு இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த கர்ப்பிணிப் பெண் அந்த வண்டியில் மோதி கீழ் விழுந்து இரத்தக் கசிவு...
Image result for yesterday accident in front of vinayaka bike and car on highway


நிலை இப்படி எல்லாம் இருக்க நெய்காரப்பட்டியில் உள்ள ஒரு கோயிலில் இதன் முதல் நாளில் அம்மாவுக்காக பால்குடம் ஏந்திய கூட்டத்தில் ஒரு 55 வயது மதிக்கத் தக்க மனிதர் ஒருவர் கீழே விழுந்து இறந்து விட்டார்.

அந்த இடத்திலும் நாங்கள் அன்று சென்றபடியும் வந்தபடியும் இருந்தோம். நவம்பர் 14 குழந்தைகள் தினவிழாவிற்கு பள்ளிகளுக்கு அழைப்பிதசழ் கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது.கேள்விப்பட்டது வேறு. . ஒரு குடம், சேலை,ஒரு மதிய உணவு, 200 ரூபாய் என கூட்டம் சேர்த்தி டெம்போவில் பிற பகுதிகளில் இருந்தும் ஆள் அழைத்து வரப்பட்டனர் அப்படி வந்தவருள் ஒருவரே அப்போது இறந்தவர்.ஒரு நாளைக்கு ஆசைப்பட்டு இறப்பை அடைந்தவர் இது போல் எத்தனையோ?

இந்த 2 சம்பவங்களுமே தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில் விளைந்த விபத்துகள். ஆபத்து தவிர்க்க எச்சரிக்கை அவசியம், ஒரு மயிரிழையில், ஒரு சிறுக் கீற்றுப் பொழுதில் மரணத்தை தழுவிடும் ஆபத்துகள் இருப்பதால் தேசிய நெடுஞ்சாலையில் மட்டுமல்ல சாலையில் சென்றாலே நல்ல கவனத்துடன் சென்று செல்ல வேண்டிய ஊருக்கு சென்றடைவீராக.

சில நாளுக்கும் முன் எமது ஊர் இளைஞர் ஒருவர் கூட இரு சக்கர வாகனத்தில் சென்றவர் புளிய மரத்தில் அடித்து கண்கள் வெளித் தெறித்து ஓட மாண்டது...மற்றொரு விபத்தில் பாதை இருளில் புலப்படாமல் வண்டி மரத்தில் அடித்து வண்டி ஒரு புறமும், ஓட்டிச் சென்ற இளைஞர் மறுபக்கமும் விழுந்து கிடந்து அப்பாவுக்கு விபத்தாகிவிட்டது என செல்பேசியில் சொல்லி விட்டு யாருமற்ற ஆளரவமற்ற புதரில் அரை மணிக்கும் மேல் கிடந்து உயிர் இழந்த மனிதர் இப்படி நிறைய விபத்தாய் கேள்விப்படுகிறோம். பார்க்கிறோம்.

சாலையை கவனத்துடன் கையாளவும். நமது உயிர் நமது கையில். காலனின் பையில் அல்ல.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Thursday, October 27, 2016

வேள்வித் தவம்.

துளித் துளியாய்

வாசனைத் திரவியம்

தீர்ந்து கொண்டிருக்கிறது

தணிகை வாழ்வு(ம்)



Image result for life shortens day by day





மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

Image result for life shortens day by day


Image result for life shortens day by day