தேவி ரெமோ றெக்க: கவிஞர் தணிகை
7 ஆம் தேதி வெளியான இந்த 3 படங்களையும் 8 அல்லது 9 ஆம் தேதிக்குள் பார்த்து முடித்து விட்டேன் உங்களுக்காக. ஆனால் அதை எழுதி பதிவிடத் தான் இன்று தான் நேரம் கிடைத்தது. இந்த 3 படங்களிலுமே முன் வரிசையில் சொன்னபடி தேவி முதலாம் இடம், ரெமோ இரண்டாம் இடம் றெக்க மூன்றாம் இடம் எனத் தெளிவாகச் சொல்லலாம்.
தேவி:
ஜென்டில்மேன் சிக்கு புக்கு ரயிலே பாடல் நினைவூட்ட அதே போல் ரயில் காடி, சல்மார் எனப் பாடல்கள் இன்றைய கல்லூரி மாணவர்கள் பாடித்திரிகிறார்கள்.
நல்ல மாடர்னான மனைவி வேண்டும் என்னும் மும்பையில் பணிபுரியும் கிருஷ்ணாவுக்கு தந்தை சொல்லை மீற தைரியம் எப்போதும் இல்லாததுடன் நிரம்ப மரியாதை வேறு . விளைவு. கிராமத்துப் பெண்ணை தேவியை மணந்து ஆவிப் பெண்ணான ரூபியுடன் இணைந்து நன்றாக ஆடுகிறார். இரு ரோலும் தமன்னாவுக்கு நன்றாகவே இருக்கிறது.
படம் படு லைட்டாக இருப்பதாலும் இப்படி ஆவி அறைகளில் , வீடுகளில்,விடுதிகளில் இருப்பதை எல்லாம் மறுக்க முடியாத கருத்துகள் உள்ளதாலும் எதையும் போலி,பொய் என்று சொல்ல முடியாமல் சினிமாடிக்காக விளையாடி இருக்கிறார்கள். நடிகர்கள் நமக்கு இயல்பான பாத்திரங்களாக மாறாமலே.ஆமாம் ஆனாலும் இரசிக்க முடிகிறது.
நகைச்சுவையுடன் தமன்னாவும் பிரபுதேவாவும் நன்றாக செய்துள்ளார்கள் தமிழ், தெலுங்கு, இந்தி என மும்மொழித் தயாரிப்பு.ஆவிகள் நல்லதும் செய்யும் அதைப் பேய், பிசாசு என ஒதுக்கத் தேவையில்லை. பிரபு தேவா கிருஷ்ணா ரூபி ஆவியுடன் செய்து கொள்ளும் ஒப்பந்தம், உறுதி மொழி நன்றாக உள்ளது. ஆனால் பொதுவாகவே ஆவிகள் நிறைய ஏமாற்றம் இயல்பு கொண்டவை. நல்ல ஆத்மாக்கள் சிலவே நன்மை செய்து மனிதர்க்கு வழிகாட்டுபவை. அப்படிப் பார்த்தால் ரூபி தனது இச்சையை தேவியை வைத்து நிறைவேற்றியும் கொள்கிறார் யாருக்கும் பெரிதான தீமை செய்யாமலே.
ஜாலியாக என்டர்டெய்ன்மென்டுக்காக பார்க்கலாம் வேறு சில பழைய படங்களை நினைவூட்டினாலும். பழைய கள் புதிய மொந்தையில்.
ரெமோ: ரெஜினா மோத்வானி:
அடிப்படையில் எந்த வாழ்க்கை ஏணிகளையும் எட்டாத ஒரு இளைஞராக இருக்கும் எஸ்கே, ரெமோவாக , முதியவராக எல்லாம் செய்து டாக்டர் காவ்யாவை மணமுடிக்கத் தீர்மானிக்கும் கதை. காதல் அஸ்திரம் பயன்படுத்தி. இந்த டாக்டர் காவ்யாவுக்கு ஏற்கெனவே மணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்ட நிலையில் இல்லாத தகிடுதத்தம் எல்லாம் செய்து கடைசியில் குறிக்கோளை எட்டுவதாக கதை. நன்றாக வசூல் செய்வதாகவும் செய்தி. ஆனால் போலித்தனமான நம்பிக்கை ஏற்படுத்தும் சினிமா.
இது போன்ற சினிமாக்கள் இன்றைய இளைஞர்களை தவறான பாதைக்கே வழிகாட்டும். எதுவுமே இல்லாமலே எதுவுமே செய்யாமலே எந்தப் பெண்ணை வேண்டுமானாலும் அடைந்து விடலாம் வேஷம் போட்டு என்பதான கதை. அதற்கு குரல் மாற்றிப் பேசுவதை வேண்டுமானால் உழைப்பு என்று சொல்லிக் கொள்ளலாமா? பொருளாதார பலத்தில் படு வீக்காக இருக்கும் இந்த ரெமோவுக்கு காதலிக்கு பிறந்த நாளுக்கு மட்டும் செலவு செய்து ஊரே வியப்படைய வைக்குமளவு வாண வேடிக்கை வான வேடிக்கையாக செய்ய முடிவதும் , குழந்தைகளுக்கு பெரிய மருத்துவ ஆறுதலாக இருப்பதும், நர்ஸ் பயிற்சி இல்லாமலே பிரதாப் போத்தன் என்னும் மருத்துவ மனையின் நிர்வாகியை ஏமாற்றி வேலைக்கு சேர்வதும் எல்லாமே அபத்தமாக இந்தக் கால இளைஞர்களை தவறான வழிக்கு இட்டுச் செல்வதான தவறான நம்பிக்கை ஏமாற்றம் கொடுக்கும் என்ற சிற்றறிவுக்கு கூட எட்டாமல் பொழுது போக்கு என்ற பேரில் அவ்வை சண்முகி, (அதுவே ஆங்கில படத்தின் தழுவல் அது போல இது ஒன்று)
டாக்டர் காவ்யா எப்படி இந்த ரெமோ நர்ஸின் பேச்சைக் கேட்டு தமது வாழ்க்கையில் தடுமாறுகிறார். பேசி முடிக்கப் பட்ட திருமணத்திலிருந்து வெளியே வந்து காதல் என்ற ஒரே பிடிப்பல்லாத மரக்கலம் ஏறுகிறார் என்பதை நகைச்சுவையாக பொழுது போக்காக சொல்லி இருக்கின்றனர். சினிமாவாக பார்க்கலாம். துளியும் வாழ்க்கைக்கு அருகே வர முடியாத படம்.
பெண் வேடம் ரெமோவாக சிவகார்த்திகேயனுக்கு பொருத்தப்பட்டுள்ளது. இதே போல எல்லா நடிகர்களும் பெண்ணாக நடிப்பதும், எல்லா நடிகைகளும் ஆணாக நடிப்பதும், பேய்க்கதைகள் தொடர்ந்து வருவதும் தமிழ் சினிமாவின் சுழற்சி முறையை காட்டுகிறது.
றெக்க:
விஜய் சேதுபதியை மக்கள் நாயகனாக ரஜினிகாந்தாக பார்க்க மக்கள் ஆவலாக இருப்பதாக எண்ணி எடுக்கப் பட்ட சண்டைப்படம். காதலன் காதலியை சேர்த்து வைக்க திருமணத்தை நிறுத்தி கூட எதிர்ப்பை ஏற்றுக் கொள்ளும் பாத்திரம் சிவா என்னும் விஜய் சேதுபதிக்கு. அது அவருக்கு பெரும் எதிரிகளையும் பெரும் எதிர்ப்பையும் ஏற்படுத்தி கடைசியில் மந்திரி மகள் பாரதி என்னும் லெட்சுமி மேனனையும் தூக்கி வரச் செய்து விடுகிறது. வழக்கம் போல நிறைய உள் கதைகள் தனித் தனிக் கதைகளாக பல படங்கள் எடுக்குமளவு.
செல்வமாக கிஷோர், சிஜா ரோஸ் என்னும் சினேகாவாக ஒரு நடிகை,சிவாவின் இளம்பருவ பள்ளிப் பருவத்தின் கதை,கண்ணம்மா என்னும் பாடல் 2 இடங்களில் இமான் இசையில் நெஞ்சுருக வைக்கிறது.நன்றாக இருக்கிறது.
கடைசியில் ஒரு கிரிக்கெட் பேட்டுடன் நூற்றுக்கணக்கானவர்களை இந்த சிவா அடித்து வீழ்த்த வருவதுடன் படம் நிறைகிறது. அதற்கும் முன்பே....எவ்வளவோ சொல்ல முடியாத சண்டைக்காட்சிகள். இதில் இருந்து நடிகர்களும் தமிழ் சினிமாவும் என்று வெளிவருவார்களோ என்று தர்ம சங்கடத்தை ஏற்படுத்துமளவு.
இலட்சுமி மேனன் அதாங்க நம்ம கும்கி நாயகி உடல் எடையில் கவனிக்க வில்லை. நன்றாக புசு புசு வென ஊதி இருக்கிறார். அதில் வேறு இவருக்கு நவீன உடை எல்லாம் பொருத்தமே இல்லாமல் ஏற்கெனவே நமது சினிமா உலகு இவரை நாட்டுப்புற அழகியாகவே வெளிக்காட்டி விட்டதால் எடுபடவில்லை.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
In our tamil Cinema industry Diwali films releases are waiting for that moment on 28th.Oct.