Sunday, June 28, 2026

குருவிகளின் நேசம் மயில்களின் வாசம்: கவிஞர் தணிகை

 குருவிகளின் நேசம் மயில்களின் வாசம்: கவிஞர் தணிகை



புதிய வீட்டின் சாளர வழியே வந்து அலமாரியில் இருக்கும் மின் சலவைப் பெட்டியில் கிண்ணக் கூட்டைக் கட்டி முட்டை இட்டிருந்தது ஒரு குருவி.அடை காத்தது காற்று, மழை, மனிதர்கள், பூனை குறுக்கீடு ஏதுமில்லை. ஏன் எனில் அது எமது வீட்டின் கணினியுடனான‌ காலியாக இருக்கும் படுக்கை அறை.என்னையெல்லாம் ஒரு மனிதனாக அது மதிக்கவே இல்லை. அது பாட்டுக்கு எப்போதும் திறந்தபடியே இருக்கும் சாளரங்கள் வழியே வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருந்தன நான் அந்த அறையிலேயே அமர்ந்து கணினி வழியே செய்திகளைப் படித்துக் கொண்டிருந்த போதும் ஏதாவது தட்டச்சு செய்து கொண்டிருந்தாலும்...


அது ஒரு கலப்புத் திருமணத் தம்பதிக் குருவிகள்.

கருங்குருவி ஆண்

நமது ஊர்க்குருவி பெண்.


அதற்கு ஒரு குஞ்சும் வந்திருந்தது அந்த முட்டையில் இருந்து.

சில நாட்களிலேயே அதன் பெற்றோர் கொடுத்த புழு பூச்சிகளின் கவனிப்பால் குஞ்சுக் குருவி பெரிதாகி இருந்ததோடு மட்டுமல்ல பறக்கவும் ஆரம்பித்தது.



அந்த தம்பதி குருவிகள் ஓசைகள் எனக்கு புதிதாக இருந்தன.ஒரு புறம் கீச்சென்ற ஒலி, மற்றொரு முறை கர் கர் கர்ர் எனக் கிறீச்சிடல்...முதலில் எட்டி எட்டிப் பார்த்தேன் வெவ்வேறு குருவிகள் ஆக இருக்கும் என... ஊன்றிப்பார்க்க ஒரே குருவியின் வழியேதான் இந்த மாறுபட்ட குரல்கள். ஆச்சரியமானதாக இருந்தது.


வாழை மரத்தில் இளைப்பாற வந்த செம்போத்துப் பறவைகளைக் கூட இவை விரட்டிக் கொண்டிருந்ததாக துணை சொல்லியது...


 ஒரு நாள் காலை அதாவது இன்று காலைதான்,திடீரென ஆண், பெண் இரண்டு குருவிகளும் எங்களிடம் நிறைய புகார்களைச் சொல்லிக் குற்றம் சாட்டியது, என்னவென்று பார்த்தால் அந்தப் பெட்டியில் இருந்த குஞ்சைக் காணோம். தேடல் நடத்தும் முன் நான் அதை மேலோட்டமாக பார்க்க, பெரிய குருவியாக இருக்கும் என நினைத்து பீரோ சந்தில் இருந்ததை அதுவும் சிறிய குருவியைத் தேடிக் கொண்டிருக்கிறது என நினைத்து விட்டேன்.



ஆனால் அந்த பெற்றோர் குருவிகளின் ஆர்ப்பாட்டம் தாங்காமல் சமையல் கட்டிலிருந்து வந்து பார்த்தேன் அதுதான் பீரோ சந்தில் இருந்த அந்தக் குருவிதான் அந்த முட்டையிலிருந்து வந்த புது சிறு குருவி, துணையை அழைத்து அதை பெற்றோர் குருவிகளுடன் விட்டு விடச் சொன்னேன். செய்தாயிற்று.


சலவைப் பெட்டி இருக்கும் அட்டைப் பெட்டியை எடுத்து  பால்கனியின் தூண் அருகே வைத்து விட்டேன். இனி கண்ணாடி ஜன்னல்களையும் தேவைப்படும் போது சாத்தி விடலாம் எனத் தீர்மானித்து விட்டோம்.கோவிட் பேரமைதி இந்த சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கையைப் பெருக்கி இருந்ததை நாம் மறந்து விடக் கூடாது. 


பழனியில் மட்டுமே சிறுவயதில் கண்ட மயில்கள், இப்போது எங்கள் பகுதியில் பல நூறுகளாக பெருகி சுற்றித்திரிகின்றன, எவரும் அவற்றை துன்புறுத்தாததால் அவை பாட்டுக்கு காடுகளில், தோட்டங்களில் , மலைகளில், மலைக்குன்றுகளில் இரையெடுத்து இளைப்பாறி மனமகிழ்வுடன் வாழ்ந்து வருகின்றன. கல்லூரி பணிக்குச் சென்ற காலைகளில் எமது கல்லூரி வளாகத்தில் பார்த்தோம். அதன் பின் எங்கள் ஊரிலேயே இவ்வளவு மயில்களைப் பார்ப்போம் என கனவிலும் கருதவில்லை.


தினமும் எங்கள் நடைப்பயிற்சியில் தவறாத‌ மயில்களின் தரிசனம், அவ்வப்போது தோகை விரித்தபடியும்...


மறுபடியும் பூக்கும் வரை


கவிஞர் தணிகை.


No comments:

Post a Comment