Monday, February 2, 2026

A.P . RAAJA .A.P. ராஜா : கவிஞர் தணிகை

 A.P. ராஜா : கவிஞர் தணிகை



ஒவ்வொருவருள்ளும் ஒரு நாயகன், நாயகி இருக்கிறார். அதை கண்டு கொண்டால் அவர் வீழ்வதில்லை.கடந்த 40 ஆண்டுக்கும் மேலாக மாலையில் நடைப் பயிற்சியில் 7 கி.மீ கிராமப் புறத்தில் நடந்து வருபவனான எனக்கு ஒரு புது நபர் அறிமுகமானார். அவர் கடந்த கோவிட் 2019 முதல் தமது நடைப் பயிற்சியை துவக்கி உள்ளதாகவும்,காலையிலும் சுமார் 5 கி.மீ செல்வதாகவும் அறிந்தேன். நமது தெரிதல், அறிதல், புரிதல்,உணர்தல் தத்துவம் இவருடன் பயணம் செய்வதாக அமைந்து விட்டது நாளடைவில்.


யார்ரா இது?, நமக்கே சவால் விடுகிற மாதிரி ஒட்டுப் பள்ளம் வந்து திரும்புகிறாரே,தினமும் நமக்கு முன்னரே வந்து செல்கிறாரே நம்மை விட வயது மூத்தவராகவும் இருக்கிறாரே எனப் பார்த்தால் அவரைப் பற்றி பகிர்ந்து கொள்ள நிறைய இருக்கிறது. சற்று பொறுமையாக உற்று கவனித்து படித்துப் பாருங்கள்.


இந்த A.P.ராஜா அப்பாண்ட ராஜா, முதல் முதலாக இந்தப் பேரைக் கேள்விப்பட்ட உடன் தமிழ் அகராதியில் பேருக்கு என்ன பொருள் பார்த்தால் அப்பு நீர் அதை ஆண்ட ராஜா என்றால் பாற்கடலில் பள்ளி கொண்ட திருமால் அல்லது பெருமாள் என்ற பெயர்க் காரணம் வருகிறது என்பதை பகிர்ந்து கொண்டேன் இவ்வளவு நாளும் அதை எல்லாம் அறியாதிருந்தேன் என்றார். தெரிந்தது தெரியாதது என அப்பட்டமாக சொல்லிக் கொள்ளும் ஒரு சிறு குழந்தை இந்த 71 வயது மனிதர்.எல்லாரிடமும் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதை விரும்புகிறார்,ஏதோ ஒரு பேச்சை மூலமாக வைத்து அனைவரையும் சுற்றமாக அமைத்துக் கொள்ள விரும்புகிறார், உங்களால் தாம் அனைவரிடமும் பேசி வருகிறேன், முன்பெல்லாம் எவரிடமும் பேசவே மாட்டேன் என்பார். யாரிடமாவது பேசி விட்டால் போதும் அவர் யார், இவர் யார், எப்படி என விவரம் அறியாமல் விடமாட்டார்.


சரி விடயத்துக்கு வருவோம், பீடிகை முன்னுரை போதும்.இந்த மனிதர் ஒரு ஓய்வு பெற்ற இராணுவ வீரர் , மெட்ராஸ் ரெஜிமென்ட் என்று பெருமையாகச் சொல்வார்,ஆந்திரா வெள்ளத்தின் போது பல நாட்கள் சாப்பிடவே முடியாது அவ்வளவு கொடுமை ரயிலில் ரயிலுடன் மூழ்கியிருந்த பிணங்களை மீட்டோம், மீட்பு பணி எல்லாம் நிறைய செய்தோம் , இப்படி ஆரம்பிக்கும் இவருடைய கதை இந்திய‌ இலங்கை அமைதிப் படையில் 2 ஆண்டுகள் பணி புரிந்து உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு மீண்ட கதை, நாயை விரும்பி உண்ணும் நாகாலாந்து கதை,ஹைதராபாத் பணிக்காலம், பனிச்சிகரமான லே ...லடாக் பனிக் காலம், மூச்சு விடவே சிரமமான காலம், குளிக்காத காலம், சூடான தேநீர் உறை காலம் இப்படி இந்தியாவெங்கும் பயணம்.


 இவரை இலங்கையில் ஒரு முறை மொழிபெயர்ப்பாளர் என்பதற்காக ஒரு மொழி பெயர்ப்பு வேண்டி தனியாக ஹெலிகாப்டரில் வந்து அழைத்துச் சென்ற இராணுவப் பெருமை, அப்போது மொழிபெயர்க்கும் போது சிக்கிக் கொண்ட மனிதரைப் பார்த்து சிரித்துவிட்டால் நாமும் மாட்டிக் கொள்ள வேண்டியதுதான் என்ற விவரம்...


இந்தக் கதைக்கெல்லாம் மயங்குவோம் என்றா நினைத்தீர்கள்? இது போல வரலாறுதாம் நமக்குத் தெரியுமே, என்றால் அங்கு தான் வருகிறார் சிறுவன் அப்பாண்ட ராஜா. நிறைய பேர் அடங்கிய பெரிய‌ குடும்பத்தில் ஒரு கீழ் நிலை அரசுப் பணியில் இருந்த இவரது தந்தை எப்போதும் காரணமின்றியே இவரை தினமும் நையப் புடைத்து விட்ட கதையில் நமக்கும் இவரது தந்தை மேல் கோபம் வரும் அந்த சிறு குழந்தையை எதற்கய்யா அப்படி அடித்தீர் என,இதில் இராமலிங்க வள்ளலார் பக்தர் வேறாம், என்ன பண்றது அப்பன் குடுத்த மூஞ்சி என குணாவில் குணா பாத்திரம் சொல்லி சொல்லி சுற்றி வருமே அப்படி...ஆனால் கேட்காவிட்டாலும் அந்த உடல் நிறம் எல்லாம் அங்கிருந்து இவருக்கு வந்ததுதானே. அது மட்டுமல்ல சரியான துணி மணிகள் செருப்பு கூட இல்லாமல் அந்தச் சிறுவன் மேச்சேரி அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதி வரைப் படித்து தேறி, அதன் பின் மளிகைக் கடையில் பொட்டலம் மடித்துத் தரும் பணியைச் செய்து வந்திருக்கிறார்  சில ஆண்டுகள்... 


இதெல்லாம் கூட கிளைமாக்ஸ் இல்லை, நம்ம கதையில்...மனிதர் மதுவுக்கு அடிமையாக இருந்து உடல் நலம் கெட்டு அதன் பின் அதன் தீமையை நமது தத்துவப் படி தாமே தானே தெரிந்து, அறிந்து, புரிந்து , உணர்ந்து அதிலிருந்து மீண்டு ஒரு துளிகூட நுகராமல் மீண்டு பல ஆண்டுகளாக வாழ்ந்து வருவதுடன் அசைவை உணவைக் கூடத் தவிர்த்து விட்டார் மேலும் உடற்பயிற்சியின் மூலம் சிறு மெல் ஓட்டம் மூலம் ஊதிப் பருத்து வந்த தனது உடலையும் கட்டுக்குக் கொண்டு வந்துள்ளார்...இந்தப் படிதான் எனை இவருடன் சேர்த்துள்ளது.


இந்த சில பல ஆண்டுகளாகவே  நன்றாக அனுபவித்து வாழ்ந்து வருகிறேன் எங்கு பார்த்தாலும் என்னை அடித்து நொறுக்கினார்கள், சிறுவயதில் அப்பா,அதன் பின் இராணுவத்தில், அதன் பின் குடும்ப நிகழ்வுக்கான பிரச்சனையில் சமூகம் இப்படி இந்த உடல் வாங்காத அடி இவ்வளவு அவ்வளவு என்று இல்லை என தமது துன்பியலை படம் பிடித்துக் காட்டுவார்.

மொத்தத்தில் மனிதர் இப்போ ரொம்ப ஜாலி இல்லாத சிறு அப்பியிருக்கும் பின் மண்டை முடிக்கும், நரை விழுந்த மீசைக்கும் டை அடித்துக் கொண்டு தினமும் முகச் சவரம் மற்றும் அடிக்கடி முடித் திருத்தம் செய்து கொண்டு விதவிதமான ஆடை அணிகலன்கள் நிறைய காலணிகள் என மாற்றி மாற்றி தினமும் ஒன்றை அணிந்து கொண்டு நடைப் பயிற்சியே ஒரு தவமாக‌ உண்மையிலேயே ராஜாவாக , நான் அவருக்கு அனுப்பும் செய்திகளை பிறர்க்கு அனுப்பும் பார்வேட் Forward Raajaa  ராஜாவாக,அனைவர்க்கும் தம்மால் ஆன உதவிகளைச் செய்யும் மூத்தவராக, ஜோதிடக் கலை எனை 60 வயதுகளிலேயே இறந்து விடுவேன் என்றது ஆனால் நானோ 71 வயதில் 12 கி.மீ தினமும் நடைப் பயிற்சி செய்து வருகிறேன் என்கிறார்.


இரு சக்கர வாகனத்தில் தமது அரசு ஆசிரியரான துணைவியாரை தினமும் பேருந்து நிறுத்தத்திற்கு அழைத்துச் செல்வதிலிருந்து நிறைய குடும்ப பொறுப்புகள்,மகனையும், மகளையும் நல்நிலையில் நிலை நிறுத்த பாடுபட்ட கதைகளையும் சொல்வார், தாம் இராணுவ ஓய்வு பெற்றவுடன் ஒசூரில் டி.வி.எஸ் பணி புரிந்த  கதை இப்படி இவரைப் பற்றிச் சொல்லச் சொல்ல கதை விரியும் .

 ஒரு பதிவு செய்து பகிர வேண்டிய ஒரு தாமே ஒரு தீய பழக்கத்திலிருந்து மீண்டு பாடுபட்டு அனைவர்க்கும் வாழ்வின் முன் மாதிரியான ஒரு மனிதர் அவரை எனது நடைப்பயிற்சியில் தோழமையாக பெற்றமை இயற்கை செய்த லீலை, மேலும் நடைப் பயிற்சியில் சரியான நேரம் காப்பாளராக இருக்கிறார், மேலும் வராமல் போகும் போது அன்று வரமாட்டேன் என பள்ளிகளில் லீவ் லெட்டர் கொடுப்பது போல (ஐம் சவ்வ்ரிங் ப்ரம் பீவர் சோ ஐ அம் அனேபிள் டு அட்டன்ட் தி வாக்கிங்...என்று தவறாமல் தகவல் கொடுத்தும் விடுவார்),


எப்போது வேண்டுமானலும் திமிறிச் செல்லும் ஒரு அடங்காத கரைக்கடங்காத நதியாய் இருந்த எனக்கு ஒரு வரம்புக்குள் வர, உங்களுடையதும் உடல் தாம் , நேரம் காலம் பாதுகாப்பு அனைவர்க்கும் வேண்டிய காலம் இது எனச் சொல்லாமல் சொல்லி என்னுடன் பயணம் வந்து கொண்டிருக்கும் இந்த மனிதரை உங்களுக்கும் இன்று அறிமுகப் படுத்தி விட்டேன். நன்றி வணக்கம்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.




No comments:

Post a Comment