Sunday, November 5, 2017

இப்படியும் இன்னும் சிலர் இருக்கிறார்கள்: கவிஞர் தணிகை

 இப்படியும் இன்னும் சிலர் இருக்கிறார்கள்: கவிஞர் தணிகை

Image result for long way to go

சேலம் குகை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆங்கில தமிழ் வழிக் கல்வி முறைகளில் சுமார் 4200 மாணவர்கள் படிக்கிறார்கள். சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழக சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியின் சார்பாக பல் பரிசோதனை முகாம் ஒன்றை நடத்த முதல்வர் ஜா.பேபிஜான் அனுமதியுடன் சமுதாயத்துறைத் தலைவர் என்.சரவணன் வழிகாட்டுதலுடன் பொது உறவு அலுவலர் என்ற முறையில் பணிக்கப்பட்டேன்.

மருத்துவர் பரத் எம்.டி.எஸ், சூரஜ் எ.டி.எஸ் , ராஜேஜ் பி.டி.எஸ் ஆகியோர் கொண்ட குழுவினர் சுமார் 15 மருத்துவர்கள் என்னுடன் வந்திருந்தனர்.

மிகவும் அருமையான டீம். சலிக்காமல் தமது சேவைப்பணியை மனங்கோணாமல் செய்தனர்.

காலை 9.30 மணி சுமாருக்கு  பிரார்த்தனை நேரத்திலேயே சென்று சேர்ந்து விட்டோம். அத்தனை மாணவர்களும் ஒருங்கிணைந்து நின்று ப்ரேயரில் பங்கெடுத்ததைப் பார்க்கும் ஒரு அரிய காட்சி.

அது ஒரு சிற்றுரைதான். ஆனாலும் அத்தனை பேரையும் கவர்ந்தது என்று அதன் பின்னோட்டத்தைப் பார்த்து புரிந்து கொள்ள முடிந்தது. ஆசிரியர்களும் மாணவர்களும் மிகவும் அகமகிழ்ந்து பாராட்டினர்.

ஆசிரியர் ஒருவர் உங்களின் உரை எங்களது மாணவர்கள் அனைவரையும் மிகவும் ரீச் ஆகிவிட்டது என்று பாராட்டினார்.

பல மாணவர்கள் வந்து கை  குலுக்க‌ ஆரம்பித்தனர். சில மாணவர்கள் கையை விடாது குலுக்கி கை உண்மையாகவே வலி எடுத்துக் கொண்டது.விடப்பா விடு என சிறுவர்களைக் கேட்டுக் கொண்டேன். ஒரு சிறுவன் அது என்ன பேசினீங்க, பேசுங்க, பேசிக் காண்பிங்க என்றான், ஏன் நீ பிரேயருக்கு வரவில்லையா என்றேன் , இல்லை சார் பேசுங்கள் சார் என்றான் இங்கு பேச்சைக் கேட்டவரைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியதுதானே என்றேன்.

ஏன் எனில் அது ரெடிமேட் பேச்சாக இல்லை, மனப்பாடம் செய்து ஒப்பித்ததாகவும் இல்லை. அதை எப்படி அந்த சிறுவனிடம் சொல்லிப் புரியவைப்பது...?

ஹுசேன் போல்ட் பற்றி சொல்ல வேண்டும் என நினைத்திருந்ததை விட்டிருந்தேன் அது ஒரு மாபெரும் சபை, ஒரே இடத்தில் 4200 மாணவர்கள் மிகவும் அமைதியாக இருந்து அந்தப் பேச்சை உள்வாங்கியது எனக்குக் கிடைத்த பாக்கியம்.

தமிழ் மாணவர் மன்றத்திற்கு அழைப்போம் மேலும் வந்து அதிகமாக பேச வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர் ஆசிரியர்கள்.

எல்லா மாணவர்களுக்கும் அதாவது முதல் நாளில் 9 ஆம் வகுப்பு வரை பார்த்து வந்தது போக மீதமிருந்த, விடுபட்டுப் போன அனைத்து மாணவர்களையும் பல் பரிசோதனை செய்துப் பார்த்தோம். மேலும் டாக்டர் சூரஜ் தலைமையிலான குழு அவர்கள் கடிப்பது எவ்வளவு வலுவானது என மின் மீட்டார் மானியை வைத்து அளந்து கொண்டிருந்தனர். அவர்கள் ஆய்வு அங்கு ஒரு இறுதி வடிவத்துக்கு வந்தது.

இத்தனைக்கும் காரணம் ஒரு தலைமை ஆசிரியர் பனி மேதாஸ் என்பார். இவர் 30 ஆண்டுகளாக இங்கு தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் வந்து சேரும்போது இந்தப் பள்ளியின் மாணவர் தொகை 1000 இருந்ததாம் அதை இந்த அளவு மாற்றியிருப்பது இவரது ஆத்மார்த்தமான ஈடுபாடு மாணவர்கள் மேல் பள்ளியின் பால் இருக்கும் பற்று.

இவருக்கு உதவியாக 3 தலைமை ஆசிரியர்களும் நூற்றுக்கு மேலான ஆசிரியர்களும் பணி புரிந்திட, ஆசிரியர் செல்வம் என்பார் உடற்கல்வி ஆசிரியராகவும் தேசிய சேவைத் திட்டத்தின் அலுவலராகவும் இருந்து எங்களைப் போன்று அந்தப் பள்ளியை நாடுவார்க்கு உறுதுணையாக இருந்து நிகழ்வை நடத்த பேருதவி பெறுகிறார்.

நம்மால் எப்படி அவர்களை பாராட்டினால் தகும்? நன்றிக்கடனாக நம்மால் இந்த ஒரு பதிவை இடுவதன்றி...

ஒரு அரசினர் பள்ளியை இந்த அளவு சிறப்பாக கொண்டு செலுத்துவதும் அதில் படிக்கும் மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி பெற்றவர்களாக மாற்ற முயன்று வெற்றி ஈட்டி வருவதும் சாதாரண பணியல்லவே...

இவர் நல்லாசிரியர் விருது பெற்றவரா என்பதெல்லாம் கேட்க மறந்து விட்டேன்.

யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இவர் போலும் இன்னும் இப்படியும் சிலர் இருக்கிறார்கள் நம் புவியில்...எனவே எனக்கு அவை பார்க்கும்போது அகமகிழ்வு ஏற்பட்டு புளகாங்கிதமடைகிறேன். நன்றி உங்களுக்கு எல்லாம் எமது வணக்கங்கள் உரித்தாகட்டும்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

இந்தப் பள்ளியின் ஆக்கத்துக்கு சேலம் குகைப் பகுதியை சார்ந்த தேவாங்கர் குல செட்டியார் இனம் நிறைய செய்திருக்கிறது என்பதை அந்த பள்ளிக் கட்டடங்கள் பறை சாற்றுகின்றன. இதை சாதிய அடிப்படையில் தெரிவிக்காமல் உண்மையை பறை சாற்ற மட்டுமே தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன் என்பதை எனைப் பற்றித் தெரிந்தோர் எல்லாம் புரிந்து கொள்வார் என்ற நம்பிக்கையில் மட்டுமே இதைக் குறிப்பிடுகிறேன். உணர்ந்து கொள்க, தெரிக.புரிக,.தெளிக... நன்றி வணக்கம்.

கவிஞர் தணிகை.


8 comments:

  1. மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. ஹுசேன் போல்ட் பற்றி சொல்ல வேண்டும் என நினைத்திருந்ததை விட்டிருந்தேன்? எழுதுங்க வாசிக்கிறோம்

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு நொடியையும் மில்லி செகன்ட்,மைக்ரோ செகன்ட், நானோ செகன்ட், பைகோ செகன்ட் என்று அறிவியல் பிரிக்கிறது, இளமை இருக்கும்போதே சாதித்துவிட வேண்டும் ஹுசேன் போல்ட் போல அதன்பின் முடியாது, அவரின் தொடமுடியாத வெற்றியும், அவரே தோல்வியைத்தழுவியதையும் போல எதற்கும் ஒரு வயதுண்டு... அவருக்குத்தான் தெரியும் ஒவ்வொரு செகண்டும், ஏன் மில்லி செகண்டும் எவ்வளவு பயன்படும், மதிப்பு மிக்கது என்பதெல்லாம் மனித குலத்தில் உச்சமாக அவரை அன்றி வேறு எவருக்கும் அவ்வளவு உச்சத்தில் இருந்து உணர முடிந்திருக்காது...எனவே கல்வி கரையில...கற்பவர் நாள் சில, மெல்ல நினைக்கின் பிணி பல என்ற நாலடியார் பாடலை தமிழாசிரியர்கள் கற்பித்திருப்பார்கள்...எனவே நீங்கள் இது உரிய தருணம் பயன்படுத்திக் கொள்வீர் என்று அந்தப் பள்ளியின் மேடையில் மாணவர்களுக்காக பேசியதில் ஹுசேன் போல்ட் பற்றி குறிப்பிட மறந்து விட்டு விட்டேன். ஏன் எனில் அது காலை ப்ரேயர் டைம் என்பதால் அதிகம் விவரமாக பேச முடியாத நேரம் எடுத்துக் கொள்ள முடியாத நேரம் என்பதால் ...அதையே குறிப்பிட்டுள்ளேன்...

      Delete
  3. சந்தோஷம்...பாராட்டுக்கள்... தொடருங்கள் உங்கள் பணியை

    ReplyDelete
    Replies
    1. thanks Avargal Unmaigal. to your feedback of this post. vanakkam. please keep contact

      Delete