ஐந்தில் வளைந்தது ஐம்பதுக்கும் மேலும் விளைகிறது: கவிஞர் தணிகை
நன்றாக துரு துருவென விளையாட்டுப் பருவம் வயது ஐந்து, ஆறு ஏழு எட்டு இருக்கும்.எப்போதிருந்து ஆரம்பித்து இருக்கும் என உறுதியாக சொல்ல முடியாது. எங்கும் ஓடிக் கொண்டிருக்க விடாமல் இழுத்துப் பிடித்து சனிக்கிழமைகளில் எண்ணெய்க் குளியல் அவசியம் இருக்கும். அதற்கென குறைந்த பட்சம் ஒரு மணி நேரமாவது தேவைப்படும். எண்ணெய்க் குளியல் வெந்நீரால் மட்டுமே செய்ய வேண்டும் அதற்கு அடுப்பு வேறு எரிக்க வேண்டும்.
காதுகளில், கண்களில், தேங்காய் எண்ணெய்,மற்ற இடங்களில் எங்கெங்கு உடல் துவாரங்கள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் நல்லெண்ணெய் விட்டு விட்டு நல்லெண்ணெய் கொண்டு உடல் முழுக்க தடவி, தலை உச்சியில் வைத்து அரக்கி...மொத்தத்தில் உடல் முழுதும் எண்ணெய் பிசு பிசுவென வழ வழவென அந்த சிறுவனுக்கு பிடிக்கவே பிடிக்காது, எங்கும் ஓடி ஆட விடாமல் இப்படி படுத்துகிறார்களே என, ஏன் எனில் அந்த சிறுவன் படு சுறுசுறுப்பு, மரங்களில் ஏறுவது, வீட்டுச் சுவர் மேல் ஏறுவது, குதிப்பது( கை, கால் முறிவு பற்றி எல்லாம் அப்போது எந்த கவலையுமே பட்டதில்லை) சிட்டாள் வேலைகள் செய்வது, ஓடுவது, ஓடி ஆடி விளையாடுவது, சண்டையிடுவது இப்படி எல்லாமே... எனவே ஒரு இடத்தில் இறுத்தி வைத்து விடுகிறார்களே இப்படி எண்ணெய் தேய்த்து விடுகிறார்களே என...
அது பெரிய குடும்பம், பற்றாக்குறை உள்ள குடும்பம் தான், ஆனாலும் இந்தப் பணி சீராக வாரம் ஒரு முறை நடந்தே தீரும். வயது 60ஐ தாண்டி விரைந்த போதும்...அந்தப் பழக்கத்தின் ஆளுமை சிறப்பு இன்னும் மேலோங்கி நிற்கிறது காலமாற்றத்தால் அந்தப் பெற்றோரை இழந்த போதும்...
சொல்ல வந்தது: கண்களில், காதுகளில் எண்ணெய் விட வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுரை. ஆனால் அது பொருந்தா அறிவுரையானது, அதை தற்காலிகமாக அவர்கள் அறிவுரைப் படி பார்க்கலாம் என்ன நடக்கிறது பார்க்கலாம் என நிறுத்தி விட்டு மேலும் தொடர்ந்த போது..கண்டு கொண்டேன், கண்டு கொண்டேன் என்று பதிவானது.
எடுத்துக் காட்டாக: காதுகளில் பஞ்சு மொட்டுகள் வைத்து தூய்மை செய்யும் வேலை நடந்து ஒரு முறை சரியான காது வலி, ஏன் என்று தெரியாமலே... (சரியான காது மடல் வெண்பஞ்சு மொட்டுகள் சரியான தயாரிப்பின்றி காதுள் சென்று நின்று விட வாய்ப்புண்டு என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது)சொட்டு மருந்துகள் எல்லாம் விட்டாகி விட்டது. காதுக் குருமி கெட்டிப் பட்டுப் போவதும் உண்டு.
அதன் பின் பழைய கால முறைப்படி காதுகளுக்கு சனிக்கிழமைகளில் எண்ணெய்க் குளியல் செய்யும் போது காதுகளிலும் எண்ணெய் சில துளிகள் விட்டுப் பார்த்தால் அந்த காதுக் குருமி எனும் அழுக்கு தாமாகவே கரைந்து வெளி வந்து நின்று விடுகிறது, எந்த உபகரணமுமின்றி கை விரல் கொண்டே எடுத்து விட முடிகிறது.
எல்லாம் பெற்றோர் செய்த தவம்.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
No comments:
Post a Comment