Wednesday, April 30, 2025

எல்லாமே பாவந்தான்: கவிஞர் தணிகை

 எல்லாமே பாவந்தான்: கவிஞர் தணிகை




ஒட்டடை அடிப்பது/ சிலந்தி வலையை, சிலந்திக் கூட்டை வீட்டில் ஒதுக்கி எடுப்பதும்

எறும்பு குழிகளுக்கு மருந்திடுவதும், இரசாயன சாக்கட்டி கொண்டு கோடு இடுவதும்

செடி கொடிகளை , களைகளை, பதர்களை, முட்புதர்களை அகற்றி எடுப்பதும்

களைக் கொல்லி அடிப்பதும்

குருவி முட்டைகளை அப்புறப் படுத்த நினைப்பதும்,

வீட்டின் சுவற்றைப் பறித்து(வீட்டுள், சுவற்றுள் பதுங்கி பறிக்கும்) மண் குவியலைக் குவிக்கும் பெருச்சாளி, எலிகளைக் கொல்வதும்

தீண்ட வரும் பாம்பை அடித்துக் கொல்வதும், அடித்துக் கொல்ல‌ நினைப்பதும்

கொசுக்களை கொல்வதும்(மலேரியா, டெங்கு  ஏடிஸ் போன்ற(வற்றை) நோய் பரப்பும் வல்லமையுள்ளதான)

மனிதர்க்குத் துன்பம் தர விழையும் புழு, பூச்சிகள்,( தேனி உட்பட) , பூரான் போன்றவற்றை தப்பிக்க விடாமல் கொல்வதும் ( தேனி கடித்து இறப்புகளும் நிகழ்கின்றன)


மரங்களை வெட்டி இரசாயன ஆலைகளில் எரிப்பதும்,

ஏன்

உணவை உட்கொள்வதும், பயிரழித்து செய்வதால் வரும் இலாபம் பர்க்கும் உழவும் பாவந்தான்

எனவே


உயிராய் இருப்பதும்

அதற்காக உயிரை விட நினைத்து தற்கொலை செய்து கொண்டு பேய், பிசாசாக அலைவதும்,

ஆக எல்லாமே பாவந்தான்.

வாழ்வதென்பதே பாவந்தான்

அதில் இச்சைகளை தீர்த்தபடி உயிரென உழன்று வருவதென்பதும்...


எனவே என்ன செய்யலாம்?

எப்படி சுழலிலிருந்து விடுபடலாம்?


பாஹுபலி போல் அசைவற்று நின்று விடலாமா?

புத்தரைப் போல் நித்திரை நேரத்தில் சென்று விடலாமா?

சென்று பின் மீண்டு வந்து உண்டு, உறங்கி உணர்வலைகளிலிருந்து மீண்டு

இருப்பதும் இல்லாதிருப்பதாக வென்று விடலாமா?


சமணச் சாமி போல ஆடை களைந்து அம்மணமாகத் திரியலாமா?

மூச்சுக் காற்று கூட மூலக்கூறு அழித்து விடுவதை தடுக்க முனையலாமா?

வாய்க்கு,நாசிக்கு, ஏன் முகத்துக்கே கவசம் இட்டுக் கொள்ளலாமா? அடையாளமின்றித் திரியலாமா? அலையலாமா?

நடக்கும் பாதை எங்கும் பதாகை ஏந்தி பாத யாத்திரையில் எறும்புக்கும் ஊறின்றி மெல்லிறகால்

பெருக்கிச் செல்லலாமா?

ஒவ்வொரு தலைமயிராய் பிடுங்கி எடுத்து மொட்டையாகலாமா? (தலை மயிர் மட்டுமின்றி...)


பிறர்க்காக வாழ்ந்து பார்க்கும் உயிர் உறையும் உடலுக்கும் தாகம், பசி எடுக்கிறது, உடலுக்குள் இருந்து

வரும் எச்சம் இருக்கிறது

எச்சரிக்கையாக இல்லாவிடில் உயிர் போகும் அவசிய(ம்) அவசரம் இருக்கிறது


ஆக எல்லாமே பாவந்தான் ...


அட்சய திருதியையாம்...தங்கம்  வாங்க வேண்டுமாம்...


ஹலோ குட்மார்னிங்.,GOOD MORNING காலை நினைவலைகளுடன்


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


Saturday, April 26, 2025

ஈ பி(E.B) காரங்க மட்டுந்தான் இளிச்சவாயங்களா? :கவிஞர் தணிகை

 ஈ பி(T.N.E.B) காரங்க மட்டுந்தான் இளிச்சவாயங்களா? கவிஞர் தணிகை



எதை எல்லாமோ ஆன் லைன்ல போடறாங்க, இதையும் போட வேண்டியதுதானே? என்றார் அந்த சீமைக் கருவேல  முட்களை, மின் கம்பி மேல் அழுந்திக் கிடந்ததை வெட்டிக் கொண்டிருந்த இரு பணியாளர்களுள் ஒருவர்.எத்தனையோ தரம் சொல்லி விட்டோம் இந்த முதலாளிகிட்ட வெட்டச் சொல்லி கேட்டாதானே?


பொது நலம் கருதாத மக்களும் மாக்களே!


போறவங்க வர்ரவங்கள்ளாம் பார்த்துக் கொண்டே போய்க் கொண்டிருந்தார்கள்.


அன்றாடம் நடைப் பயிற்சியின் திரும்புகையில் மாலை சுமார் 6 மணிக்கும் மேல் ஆகிவிடும், வழியில் உள்ள தெரு அல்லது சாலை விளக்குகளை எல்லாம் ஏற்றி விட்டு வருவது வழக்கம். அது இப்போது எமது நடைப் பயிற்சி தோழர்களையும் தொற்றிக் கொண்ட நல்ல வழக்கமாகி இருக்கிறது என்பதையும் குறிப்பிட வேண்டி உள்ளது.


தவிர்க்க முடியாக் காரணங்களால் அன்று தனிமையில் நடைப் பயிற்சி முடித்து திரும்புகையில் மாலை 6.30 மணிக்கும் மேல் இருக்கும்.  வழ‌க்கப் படி சாலையோர முக்கிய விளக்கை அல்ல விளக்குகளை ஏற்றினேன், யாரது, நிறுத்துங்கள் என குரல்.....


அந்த இரசாயன ஆலை சுற்றுச் சுவர் மேல்: முட்கள் மேலும், கீழும் ஒரே முட்கள், மின் கம்பி வடங்களை அழுத்தியபடி. அந்த சீமைக் கருவேல மர முட்களை அந்நேரத்தில் வெட்டிக் கொண்டிருந்தனர் இரு மின் பணியாளர்கள். அபாயகரமன பணி. பார்க்கும் போதே தெரிந்தது.


சாரிப்பா, நீங்கள் பணி புரிவது தெரியாமல் வழக்கப்படி போட்டு விட்டேன் எனச் சொல்லி அவர்களுடன் இருந்து அந்தப் பணி நிறைவடையும் வரை காத்திருந்து, அதன் பின் அவர்கள் போடச் சொன்ன பின் போட்டுவிட்டும் வந்தேன்.


அதன் தொடர்பான எண்ண அலைகள் உறங்க மறுத்தன.

எவ்வளவு இடர்பாடுகள், எவ்வளவு விபத்துகள், எவ்வளவு கடினமான பணி உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு.


மின்சாரம் போனவுடன் திட்டுகிறோம். ஏன் எதற்கு, எப்படி என்றெல்லாம் யோசிக்காமலே. ஒருவர் கூட காரணம் சார்ந்து சிந்திப்பதில்லை.


மின் கம்பிகள் அறுந்து விழுவதும், வீழ்ந்து கிடப்பதும், காற்றிலும் மழையிலும் ஆபத்தை விளைவிப்பதும், வீடு ஒரு மரம் என்பதெல்லாம் சரி...ஆனால் அது அதன் கிளை மின் கம்பி மேல் மோதவிடாமல் பார்க்கவும் வேண்டுமே...


எல்லோருக்குமே அக்கறை அந்த அளவு இருக்க வேண்டுமே, அவர்கள் வந்தால் மட்டுமே அப்புறப்படுத்த வேண்டும் என்ற மனப்பான்மை முதலாளித்துவ சிந்தனை ஆயிற்றே...அதல்லவா அனைவரிடமும் தேங்கிக் கிடக்கிறது...


சட்டம் நீதி அனைவர்க்கும் சமம், எல்லாம் ரூல்ஸ்படிதான் நடக்கும் என்றால் அது பணக் கற்றை புகுந்த பின்பா  , முன்பா என்பதுதான் உலகளாவிய அளவிலான கேள்விக்குறி. எல்லாமே தனி மனித ஒழுக்கம் சார்ந்ததே. சுயநலம் வேண்டும்போது எல்லாவற்றையும் மீறிக் கொண்டு மீறி விட்டு ஊருக்குத் தான் உபதேசம் உனக்கில்லை என்றபடியான வாழும் அனைவர்க்கும் இந்த அற நெறி உறுத்தும்


இந்தப் பதிவு பராமரிப்பு மின் பணியாளர்கள் அனைவர்க்கும் சமர்ப்பணம்.

ஆன்லைனில் போட்டுவிட்டேன்பா, அதனால் என்ன விளைவு என்று அதைப் பின் தொடர்வதில்லை நண்பர்களே. சீமைக் கருவேல முட்செடிகளை மரங்களை எல்லாம் மாநிலத்தில் இருந்தே அகற்றப் போவதாக ஒரு காலத்தில் சில செய்திகள் வந்ததாகவும் சில சேவையாளர்கள் அந்தப் பணிகளி முன் எடுத்ததாகவும் நினைவு. கொசுக்களை ஒழிக்கவே முடிவதில்லை.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

P.S.:பாரமரிப்பு பணிகள் சரிவரச் செய்யாத காரணத்தால் மின் கம்பத்திலும் மின்சாரம் பாய்ந்து ஆபத்தை விளைவித்த செய்திகளும் உள்ளன.





Wednesday, April 23, 2025

காஷ்மீரின் பஹல்காம் 28 மனித உயிர்கள்: கவிஞர் தணிகை

 காஷ்மீரின் பஹல்காம் 28 மனித உயிர்கள்: கவிஞர் தணிகை



மதத்தின் பேரால் இன்னும் எத்தனை கோடி ஆண்டுகள் இந்த மனிதம் வெறி கொண்டு அலைந்து உயிர்களை எடுக்கப் போகிறது? அதுவும் அப்பாவி உயிர்களை? நேற்றுதான் புதிய தலைமுறை காணொளி வாயிலாக மதங்களிலிருந்து விடுபடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கும் பல புள்ளி விவரங்களைக் கண்டேன்.


M4 carbine என்ற அமெரிக்காவின் நவீன ரகத் துப்பாக்கி இவர்களின் கைகளில் எப்படி கிடைத்தது?  இப்படி கேள்விகள் நிறைய, பதில் ஆராய முற்படின் நீங்களும் அடியேனும் முட்டாள்களும் மடையர்களுமாக்கப் படுவோம் இந்த மூடர் கூடத்தில்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை