Thursday, September 6, 2018

பயணம் செய்த சக்திகளாக விளங்க முடியும்...மறுபடியும் பூக்கும் வரை கவிஞர் தணிகை.

 ஒரு நல்ல தலைமையும் ஒரு நல்ல மக்களுக்கான ஆட்சியும் இருந்தால் போதும் அந்த நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படும். அல்லல்கள் தீரும் என்பதை வரலாறுகள் சொல்கின்றனவே...

Related image

முதலில் இங்கிருக்கும் எல்லாத் துறைகளையும் அரசின் கட்டுப்பாட்டுடன் எல்லோருக்குமான பொது உடமையாக்கப்பட வேண்டும்.

 போக்குவரத்து, கல்வி, மருத்துவம், பெட்ரோலியப் பொருட்கள் ,குடி நீர் அடங்கிய மண்ணை பூமியை எல்லாவற்றையுமே அரசுடமை பொதுவுடமை ஆக்க வேண்டும்...அது பெரிய நாடு என்றிருந்தாலும் இருக்கட்டுமே..ஓரிரவில் பண‌த்தை செல்லாக்காசாக்கி சொந்தக் காசைப் பெற இரவிலும் பகலிலும் சாலையோர வங்கிகளில் வரிசையில் நின்றே ஏழை மாந்தர் ஏமாந்த கதையும் அதிலும் வங்கி ஊழியர் இடைத்தரகராய் இருந்ததும், அந்த நேரத்திலும் எந்த பிரபல அரசியல் பிர‌முகரும், எந்த பணமுதலைகளும் அந்த வரிசைக்கு வந்து நின்றதாக நாம் பார்க்கவில்லையே...அதெல்லாம் செய்யும்போது ஓரிரவில் இவ்வளவு பெரிய நாட்டில் நல்லதுக்கு செயல் திட்டம் தீட்ட முடியாதா வழி இல்லையா? அதற்கான சட்ட திட்டம் செய்ய முடியாதா?

புகைக்காதே என்று சொல்லும் முன் பீடி சிகெரெட் ஆலைகளை தடை செய்வது, குடிக்காதே என்று சொல்லும் முன் மதுபான ஆலைகளுக்கு நிரந்தர சீல் வைப்பது, விற்காதே என்று சொல்லும் முன் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் ஆலைகளை இழுத்து மூடுவது இதெல்லாம் செய்ய முடியாதா அல்லது செய்யும் அரசுகள் வர முடியாதா...

ஏதாவது ஒரு முன் மாதிரி பற்றிச் சொல்லப்போனால் அது சிங்கப்பூர், அது ரஷ்யா, அது வியட்நாம், அது கியூபா இது இந்தியா என்ற எதிர்வாதம் செய்வதில் என்ன இருக்கிறது...

இங்கிருக்கும் நிலையில் இங்கிருக்கும் சுரண்டல் பேர்வழிக்கெதிராக இயங்கிய இயக்கத்தை சொல்ல ஆரம்பிக்கும்போதே செவி சாய்க்காமல் வேறு வேறு வாதம் புரிந்து பேச்சை மடைமாற்றம், திசைதிருப்பினால் என்னதான் யார்தான் சொல்ல முடியும்?

மக்கள் சரியாக வெகு காலம் ஆகும்...ஆனால் அவர்களால் மட்டுமே ஒரு நல்லாட்சிக்கு வித்திட முடியும் என்பது உண்மைதான்...ஆனால் அப்படிப்பட்ட மக்களை மக்கள் சிந்தனை உடைய ஒரு நல்லாட்சி நல்லரசுதான் உருவாக்கவும் முடியும்...

கோழி முதலிலா, முட்டை முதலிலா , காற்று வந்ததும் கொடி அசைந்ததா? கொடி இலை தழைகள் மரம் எல்லாம் அசைந்ததால் காற்று வந்ததா என்ற கேள்விகள் தொன்று தொட்டே உண்டு...

கலைஞர் கருணாநிதி போன்ற அதிமேதாவிகள் கோழி விற்பனை செய்வார்க்கு கோழி முதலில், முட்டை விற்பனை செய்வார்க்கு முட்டை முதலில் என்ற சிலேடையில் பதில் பேசிக்கொண்டே கட்சியை தமது குடும்பத்தின் போக்கிலும் நாட்டை குட்டிச்சுவராக்கிய வழிகாட்டுதலுக்கு உள்ளாக்கிய பெருமையும் உண்டு...

ஆனால் சிறு சிறு குழுக்கள் கூட எழுச்சி பெற்று எழுந்து மக்களுக்கு ஆதரவாக நாட்டின் ஆட்சியைப் பிடித்து நல்லாட்சி தந்த வரலாறுகள் உண்டு.அதை சொல்லப்போனால் உடனே அது அந்நிய வரலாறு என்று ஏற்க் மறுப்பதுவும், அதற்கு எதிர்வாதமாக எதை எதையோ பேசுவதும் எந்த பயனையும் அளிக்கும் தீர்வைத் தராது...

பிடல் சே இருவரும் தமது நண்பர்கள் அடங்கிய குழுவினருடன் தோல்விமேல்  தோல்வியுடன் தாம் அந்த கியூபா நாட்டின் வரலாறை எழுதி இன்று உலகின் சர்க்கரைக் கிண்ணமான நாட்டில் அனைத்து மக்களுக்கும் கல்வி, மருத்துவம் ஆகியவற்றை உயர் தரத்துடன் இலவசமாக வழங்கிடும் ஆட்சிக்கு வித்திட்டனர். மேலும் உடல் ஆரோகியம் சிறந்துற உலக விளையாட்டரங்கில் அந்த வீரர்களும் வெற்றி வாகை சூடுகின்றனரே...ஆம் அதுசிறிய நாடுதான்.

சிங்கப்பூரில் ஒரு ஆழ்துளைக் கிணறு கூட எவரும் அரசுக்குத் தெரியாமல் தோண்டி விட முடியாது...வீடுகளுள் கூட ஒரு சிறு மாற்றம் கூட அரசுக்கு தெரியாமல் நடத்தி விட முடியாது...

ஹோசிமின் என்ற ஒரு சர்வ சாதாரண மனிதர் பாறை மேல் படுத்துறங்கி எதிரிக்கு பயந்து இரவில் காடு மேடுகளில் திரிந்து எச்சில் தட்டை உணவகங்களில் கழுவி தொழில் செய்தவர் அந்த வியட்நாம் நாட்டின் தலைவிதியை மாற்றினார் என சரித்திரம் சொல்கிறது.

மாபெரும் நிலப்பரப்புடன் இருந்த சோவியத் சோசலிஸ்ட் ரிபப்ளிக் லெனின் மூலம் மார்க்ஸ் கொள்கைப்படி மலர்ந்த வரலாற்றை உலகு என்றுமே மறந்து விட முடியாது...

அந்த லெனின் தான் சொல்வார்  கோடிக்கணக்கான மக்கள்  இனியும் ஒரு நொடி கூட பொறுக்க முடியாது என வெகுண்டு எழும்போது வருவதுதான் புரட்சி என்பார்.

அப்படி கோடிக்கணக்கான மக்கள் வெகுண்டெழுவது கட்டுப்பாட்டுடன் இயக்கரீதியாக மலருமா  மலராதா என்பதெல்லாம் விவாதத்திற்கு அப்பாற்பட்டவை

ஏன் எனில் அதற்கு உறுதியான பதிலை இதுதான் இப்படித்தான் என்றெல்லாம் சொல்லில் விட முடியாது.

விதை உடனே விருட்சமாகிவிட முடியாது என்று சொல்வதையும் காது கொடுத்து கேட்கவில்லையெனில் அங்கே எப்படி ஆரோக்யமான விவாதம் நடைபெற முடியும்?

சீனா இன்னும் அந்த கொள்கைப்பிடிப்புடனான ஆட்சியுடன் தானே உலகின் முதல் நிலை வல்லரசாய் மாறி வளர்ந்து வருகிறது.

முதலாளித்துவ முதல் நிலை நாடான அமெரிக்க ஐக்கியக் குடியரசில் கூட சமூக சமுதாயப் பணியில் பேர் வாங்கிய பராக் ஒபாமா இரு முறை ஆட்சிக் கட்டில் அமரவைக்கப்பட்டாரே...

Related image


இங்கு தேவையெல்லாம் ஒரு நல்ல தலைமைதான். அது அமைந்து விட்டால் நநி நீரைக்கூட இணைத்து விடலாம். இந்தியாவின் பொருளாதார வளத்தை முன்னேற்றினார்கள் என்றாலே பாதி தொல்லை துயர் எல்லாம் தீருமே...இடைவெளிகள் குறையுமே... இங்கும் கல்வி, மருத்துவம், குடிநீர் எல்லாம் இலவசமாகவே தரமுடியுமே...குடிநீரை விற்பனைக்கு என விற்கும் கயவர் கூட்டத்துக்கு எவர் அனுமதி தந்தது குடிமக்களுக்கு கொடுக்காமல் அவர்கள் ஆலை நடத்த எவர் அனுமதித்தது... குடிநீர் விற்பனையைத் தடுக்க முதலில் இந்த ஆலைகள் எல்லாம் அனுமதியின்றி இரத்து செய்யப்பட வேண்டியது அவசியமானதல்லவா...அதை செய்யும் ஆட்சி அதை செய்யும் மக்கள் தாமே நாட்டை மேம்படுத்தும் வழியில் பயணம் செய்த சக்திகளாக விளங்க முடியும்...

டென்மார்க் ஆட்சியில் பல வருடம் ஆகியும் பொருட்களின் விலை அப்படியே இருக்கிறது...இங்கே உரூபாவின் மதிப்பு வீழ்ந்து கொண்டே போய் டாலருக்கு 100 என்றும் வந்து நிற்கலாம்...பெட்ரோல் விலை 100 என்றும் ஆகலாம்...

முதலில் மனிதரை நல்லது செய்ய முனையும் மனிதரை சமூகத்துக்கு விதைகளை விதைக்க விரும்பும் மனிதர்களை இதெல்லாம் முடியாது அதெல்லாம் முடியாது அதை  ஏன் செய்கிறீர் இதை ஏன் செய்கிறீர் என்பதை நிறுத்தி விடுங்கள் அப்படி எல்லாம் சொல்வதிலிருந்து விடுபடுங்கள்... விட்டுவிடுங்கள்


இந்திய பூமியும் அப்படி ஒன்றும் சாதரண பூமியல்ல, இதுவும் ஒரு தியாக பூமிதான் இங்கும் தியாகத்தலைவர்கள் எண்ணற்று மலர்ந்திருக்கின்றனர். தளராமல் முயன்றிருக்கின்றனர். எனவே அவர்கள் உழைப்பெல்லாம் வீணாகிடக் கூடாது...நம்மால் ஆனதை செய்வோம்..செய்து கொண்டே இருப்போம்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

2 comments:

  1. சிறப்பான கட்டுரை. மக்கள் உணர்ந்து புரிந்து நடந்து கொள்ள வேண்டும். தொடருங்கள், தொடர்வோம். உங்கள் பதிவு எங்கள் தளத்தில். மறுபடியும் பூக்கும் | கட்டுரை | பயணம் செய்த சக்திகளாக விளங்க முடியும்... மறுபடியும்... : சிகரம்

    ReplyDelete
  2. thanks for your feedback on this post sigaram barathi...vanakkam. please keep conatact.

    ReplyDelete