Friday, November 24, 2023

பேரன்பு ஹச்சிக்கோ: கவிஞர் தணிகை

 பேரன்பு ஹச்சிக்கோ: கவிஞர் தணிகை



படத்தை எனக்கு பரிந்துரை செய்த ஒரு பொறியாளர் இதைப் பார்த்து அழுதீர்களா? என்று கேட்டார். ஆம் என்ற ஒற்றை எழுத்துச் சொல்லை ஆங்கிலத்தில் S  என்றே என்னால் சொல்ல முடிந்தது.



ஒன்பது ஆண்டுகள் ஒன்பது மாதம் ஒரு தொடர்வண்டி நிலையத்தில் தனது மானிட நண்பர்க்காக காத்திருந்த, சரியாக மாலை 5 மணி வாக்கில் வந்து சேரும் தொடர் வண்டியில்  அவர் பணி முடிந்து திரும்பவும் வருவார் வருவார் எனக் காத்திருந்து ஏமாந்து அதன் பின் அங்கேயே உயிர்விட்ட ஒரு நாயின் கதை. அதன் கடைசி மூச்சு கூட பேரன்பின் விளைந்த சிறு துளியாக மறைந்த ஒரு காவியத்துக்காக அதே இடத்தில் அந்த நாய்க்கு ஒரு வெண்கலச் சிலையை ஜப்பானில் நிறுவி இருப்பது அதன் பெருமையை பறை சாற்றுகிறது.


ராம நாராயணன், தேவர் போன்றோர் விலங்குகளை வைத்து தமிழ், இந்தி போன்ற இந்தியப் படங்களில் எல்லாம் தாய்மார்களை நெகிழ வைத்தார்கள்.


நேற்று ஹச்சிக்கோ என்னும் ஜப்பான் மூலம் உருவான உண்மை வாழ்க்கையை 2009/10 வாக்கில் எடுக்கப்பட்ட ஆங்கில படத்தை சுமார் 97 நிமிடம் பார்க்க நேர்ந்தது.



நெக்குருகி கண்ணீர் சிந்தாமல் இந்த திரைப்படத்தை எவருமே காணமுடியாது. அதுவே பேரன்பின் வெற்றி.

மற்றபடி இந்த திரைப்படத்துக்கு வசனம் ஏதுமே அவசியமில்லை என்றே எனக்குப் பட்டது. மேலும் இதில் வில்லத்தனம் செய்யும் எந்த பாதிப்புகளும் இல்லை. மிகவும் இயல்பான வாழ்வின் நகல்.


பொதுவாக ஜப்பான் என்றாலே துல்லியமான நேரம் கடைப்பிடிப்பாளர்கள்,பெருமுயற்சியாளர்கள்,மிகுந்த தேசப்பற்றுள்ளார் என்றுதான் நாம் கேள்விப்பட்டிருப்போம் அத்துடன் இந்த பேரன்பு பாராட்டுவார் என்பதையும் நாம் சேர்த்துக் கொள்ளத்தான் வேண்டும்.


அவசியம் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு பாருங்கள். பேரன்பின் மழையில் நனைய...


ஹச்சிக்கோ என்றால் 8 என்ற எண்ணைக் குறிக்கும் என்றும்,மேலும் இந்த வகையான நாய் இனத்தை பயிற்சி அளித்து பயிற்றுவித்து மனித இனம் பயன்படுத்த முடியாது என்பதெல்லாம் தெரியவரும் செய்திகள்



மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

பி.கு: நாய், பூனை, மாடு மற்றும் வீட்டு விலங்குகள் ஏன் காட்டு விலங்குகள் கூட நேசிப்பாரிடம் தவறாத அன்பு காட்டும் எங்கு சென்று விட்டாலும் தமது இடத்துக்கு திரும்பும் என்ற நிகழ்வுகள் நம்மிடமும் உண்டு என்றாலும் இந்த 9 ஆண்டுகள் 9 மாதம் காத்திருந்த ஹச்சிகோ நாயின்  நம்பிக்கை மனிதரிடம் காண முடியாதது. இதில் கொஞ்சம் மனிதரிடம் இருந்தாலும் மனிதமும் உலகும் செழிக்குமே..

No comments:

Post a Comment