Tuesday, August 23, 2022

மறுக்கவோ மறக்கவோ முடியாத நம்பி நாராயணன்: கவிஞர் தணிகை

 மறுக்கவோ மறக்கவோ முடியாத நம்பி நாராயணன்: கவிஞர் தணிகை



1994 முதல்  1996 வாக்கில் வழக்கு முடிந்து இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் குற்றமற்றவர் என்று நிரூபணமான வழக்கின் பின்னணிக் கதையை 2022ல் அலசிப் பிழிந்து காண்பித்துள்ளார் மாதவன் தமது ராக்கெட்ரி என்னும் பல மொழிப் படத்தின் வாயிலாக.


எல்லாமே ஒரு தாமதமாகவே நடைபெற்றுள்ளது. 2019ல் இவருக்கு பத்மபூஷன் வழங்கப்பட்டுள்ளது.உச்ச நீதிமன்றமும், கேரள அரசும் 50 இலட்சம், 1.3 கோடி இழப்பீட்டுத் தொகையும் வழங்கிட இஸ்ரோவிலிருந்தும் இவர் விடுபடுகிறார் உரிய ஓய்வுக் காலம் முதிரும் முன்பே...



இவர் நான் குற்றமற்றவன், நிரபராதி அப்படியானால் யார் குற்றவாளி? அவருக்கு என்ன தண்டனை? என தமது வழக்கை விடாமல் பற்றி இருப்பதாகக் கூறியிருக்கிறார். இந்தப் படத்தை ஒட்டிய அவரது பேட்டிகள் பிரமிக்கத் தக்கவையாக சுவையாக இருக்கின்றன(Behind the Woods) பிகைன்ட் தி உட் என்ற காணொளி நிறுவனத்தின் இரு இளைஞர்கள் இவரை எடுத்த பேட்டிகள்  படத்தை மீறி இவரது வாழ்க்கையின் அனுபவங்களை இவர் பகிர்ந்து கொள்ள நமக்கு கிடைக்கிறது.+Arnab Goswamy's 1 hour 48 minutes interview.


இதைப் பற்றி நான் ஏன் குறிப்பிட்டு பதிவிட வேண்டியிருக்கிறது எனில் 1994 முதல் 1996 வாக்கில் நடைபெற்ற அந்த தனி மனித யுத்தத்தில் அவர் வென்றபோதே  " தி இந்து " ஆங்கில நாளிதழை தொடர்ந்து தினமும் படித்து வந்த வாய்ப்பு இருந்ததால் அனைவரிடமும் அது பற்றி பேசி இருக்கிறேன். பல முறை இந்த சட்ட சதி, பொய் வழக்கு பற்றியும் அதனால் இந்த மனிதர்க்கு நேர்ந்த அவமதிப்பு, அவமானம், வேதனை, இழிவு,பற்றியும் நிறைய அன்பர்களிடம் பகிர்ந்து கொண்டிருந்தேன். அந்த காசுக்கு விலை போன கருந்துரோகிகளை இன்னும் அடையளப்படுத்தி கண்டு கொள்ளாதிருப்பது இந்தியாவின் இயல்பான சாபக்கேடு...



ஆனால் இப்போது மாதவனின் இந்தப் படத்தால் மிகவும் ஒளிமயமாகி விட்டது ஒரு உண்மைச் சரித்திரம்.அவரின் ரெடி டூ ப்ளை போன்ற புத்தகங்களைக் காட்டிலும் இந்த படம் இவரை சிகரத்தின் கொண்டு நிறுத்தி அவர் செய்த தியாகச் சிகரத்தை உலகுக்கு வெளிப் படுத்திக் காட்டி விட்டது. மாதவனை பஞ்சாங்கம் என்ற வார்த்தையை தேர்வு செய்யாமல் பயனபடுத்தியமைக்காக கேவலாமக எழுதிக் கழுவி ஊற்றிய ஊடகங்களும் சமூக நெட்டிஜன்களும் அந்தப் படம் பற்றிய பதிவின் உன்னத நோக்கத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்


படத்தின் நாயகனான உண்மை நம்பி நாராயணன் சொல்வது போல படம் 4 மணி எடுக்கப் பட்டு அவரே வாதாடிய நீதிமன்றக் காட்சிகள் சுமார் 2 மணி நேரம் வந்த காரணத்தால் இடம் பெறாமை என்ற குறை நீக்கப் பட்டு மாதவன் நம்பி நாரயணன் ராக்கெட்ரி 2 என்ற இரண்டாம் பாகம் கூட வெளியிடலாம். அவ்வளவு சரக்கு இருக்கிறது இந்தப் படத்தில் இந்த வாழ்க்கையில்.


ஓரளவு படித்தவர் மட்டுமே புரிந்து கொள்ளுமளவு எடுக்கப் பட்டு இருக்கும்  படம் என்ற ஒரு குறை தவிர வேறு குறைகள் இடம்பெறாமல் இருப்பது இந்த படத்தில் மாதவனுக்கு கிடைத்த வெற்றி. மனிதர் சளைக்காமல் போராடி வென்றிருப்பது அவரது இயக்கத்தில், நடிப்பில் தயாரிப்பில் எல்லாப் பக்ககங்களிலும் தெரிகிறது. தமிழில் இது போன்று படங்கள் வரத் துவங்கி இருப்பது ஒரு நல்ல ஆரோக்யமான நிகழ்வுகள்



ஜெய்பீம் படத்தின் வழி உறங்கிப் போன உண்மையை விழிக்க வைத்த முன்னால் நீதியரசர் சந்துருவின் அனுபவத்தை சூரியா கொண்டு வந்து சேர்த்தார்


விழித்தபடியே இன்னும் இருக்கும் ஒரு நம்பி நாராயணன் என்னும் உண்மைச் சுவாசத்தை மாதவன் அனைவர்க்கும் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்.


சட்டம் நீதி  நேர்மை உண்மை வாய்மை நியாயம் தர்மம் எல்லாமே ஒன்றுக்கொன்று சிறிதளவே மாறுபடினும் ஒன்றுக்கொன்று பெரிதும் தொடர்புடையவை அவற்றை நிர்வாகம் என்னும் கருவி அரசின் வழி அமல்படுத்தவே ஆட்சி ,அரசியல் என்பதெல்லாம் இருக்க வேண்டும்... அல்லாமல்



அவற்றிலிருந்து மாறுபடும்போது இப்படிப்பட்ட தனிமனிதர்கள் எப்பாடுபட்டாவது தம்மை நிரூபித்துக் கொள்ள வேண்டி இருக்கிறது அதற்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டு 80 வயதுடன் வாழ்ந்து வரும் முதிய நம்பி நாராயணன் என்னும் இந்த அற்புத மனிதர்.


நிறைய உண்மைகள் வெளி வராமலே புதைந்து போய் விடுவதும் உண்டு. நமது சுதந்திரக் களத்தின் விடுதலை விதைகள் போல...


வெற்றி பெற்றதால் நமக்கு தெரிந்திருப்பதால் இந்த மனிதரின் வாழ்வை நாமும் போற்றுகிறோம். அதைப் பற்றி வெளியே அதிகம் பரவ விட்ட ஒளி இழைகளுக்காக மாதவனையும் பாராட்டுகிறோம். இவர் ஒரு தமிழர் என்பதும் திருநெல்வேலியில் இவரது தந்தையின் ஊர்: ஏர்வாடி, தாயின் ஊர் களக்காடு என்பதையும் இவரது வாய் மொழி மூலமே  அறிந்தது முதல் மேலும் பெருமை கொண்டோம். ஏன் எனில் திருவனந்தபுரம், இஸ்ரோ ;கலாம் காலத்து தொழில் தோழர் என்றெல்லாம் தெரிந்த போதும் இவர் ஒரு கேரளத்து அன்பர் என்றே முன்பு காலம் வரை எண்ணி இருந்தோம். இப்போதைய இந்த தகவல் மேலும் பெருமை சேர்த்து விட்டது. மேலும் இந்த மனிதர் அசராமல் இன்னும் திருவனந்தபுரத்திலேயே வசித்து வருகிறார் என்பது மேலும் ஆணி அடித்தது போன்ற ஒரு அபாரமான வாழ்வின் வழிச் செய்தி. 



கடைசியாக ஒன்று: 

 Engineering Graduates are Super human beings....Nambi Narayanan Former ISRO Scientist


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை



No comments:

Post a Comment