நன்றி: இந்து தமிழ் திசை
நடிகர் கமல்ஹாசனை ‘தக் லைஃப்’ பட விவகாரத்தில் மன்னிப்பு கேட்கும்படி கட்டாயப்படுத்த முடியாது. அதே நேரம் படத்தை கர்நாடகாவில் வெளியிட தேவையான பாதுகாப்பை அம்மாநில அரசு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதையடுத்து, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டிய கட்டாய சூழ்நிலை கர்நாடக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார், கன்னட அமைப்புகளைக் கண்டித்துப் பேசியுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
“யாரும் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ள கூடாது. உச்ச நீதிமன்ற உத்தரவை மதித்து கன்னட அமைப்புகள் அமைதி காக்க வேண்டும். பெங்களூரு நகரம் அனைத்து சாதி, மொழி மற்றும் கலாச்சாரத்தை ஏற்றுக் கொண்டுள்ள நகரம். அதில் சமரசம் செய்து கொள்ளக் கூடாது. பெங்களூரு ஒரு சர்வதேச நகரம். கர்நாடக மாநிலம் எப்போதும் அமைதியை விரும்பும் மாநிலம். கர்நாடக மக்கள் அனைவரும் பரந்த மனப்பான்மை கொண்டவர்களாக இருக்க வேண்டும்” என்று தேன் சொட்டும் வார்த்தைகளில் அவர் பேசியிருப்பது அனைத்து தரப்பினரையும் குறிப்பாக தமிழக மக்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
அவர் தெரிவித்திருப்பது போல, மென்பொருள் துறையின் அபார வளர்ச்சிக்குப் பின் பெங்களூரு நகரம் கர்நாடக மாநிலத்தின் ஒரு நகரம் என்ற குறுகிய வட்டத்தில் இருந்து வெளியில் வந்து சர்வதேச நகரமாகிவிட்டது. நாட்டின் பல மாநிலங்களைச் சேர்ந்த மக்கள், பல கலாச்சாரத்தைப் பின்பற்றுபவர்கள் பெங்களூரு நகரில் தங்கி பணியாற்றி வருகின்றனர். அவர்களது மொழி, இனம் வெவ்வேறாக இருந்தாலும் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக உழைத்து வருகின்றனர்.
அத்தகைய பன்முகத்தன்மையை ஏற்றுக் கொள்ளாமல் குறுகிய மனப்பான்மையுடன் எங்கள் ஊரில் வேலைபார்த்தால் எங்கள் மொழியை பேச வேண்டும், கன்னடர்களுக்கு முதலிடம் மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு அடுத்த இடம் என்றெல்லாம் பிற்போக்குத்தனமாக பேசுவது நாட்டின் வளர்ச்சிக்கு நல்லதல்ல. இன்றைய காலகட்டத்திற்கும் உகந்ததல்ல. நாட்டின் முன்னேற்றத்தில் பெரும் பங்களிக்கும் முக்கிய நகரங்களில் ஒன்றாக திகழும் பெங்களூரு நகரம் கன்னட மக்களுக்கு பெருமை சேர்க்கும் விஷயம் என்பதில் சந்தேகமில்லை.
அதே நேரம் வளர்ச்சிக்கு துணை நிற்கும் பல்வேறு பிராந்தியங்களைச் சேர்ந்த மக்களின் உணர்வுகளையும் மதித்து பரந்த மனப்பான்மையுடன் நடந்து கொள்வது முக்கியம். கர்நாடக துணை முதல்வரின் வார்த்தைகள் அத்தகைய உயர்ந்த எண்ணம் கொண்டவையாக அமைந்துள்ளது பாராட்டுக்குரியது. இப்படிப்பட்ட உயர்ந்த சிந்தனையும் அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்லும் பாங்கும் இன்றைய காலகட்டத்தில் கர்நாடகம் உள்ளிட்ட அனைத்து மாநில மக்களுக்கும் தேவையான ஒன்றாகும்.
No comments:
Post a Comment