Saturday, January 31, 2026

S.N.ராஜன்: கவிஞர் தணிகை

 நான‌றிந்த‌ எஸ்.என். ராஜன்: கவிஞர் தணிகை



ஜனவரி 30 காந்தி அமரத்துவ தினம் என்று தினசரி நாட்காட்டிகள் குறிப்பிட்டிருந்தன, சிரிப்புதான் வந்தது, ஏன் எனில் இயல்பாக அமரராகவேண்டிய வயதான ஒருவரை சுட்டுக் கொன்று போட்டு விட்டு இப்போது வணங்கிக் கொண்டு அமரத்துவ தினம் என்கிறார்களே என்று.


இந்த எஸ்.என் ராஜன் போன்ற சிலர் இன்னும் இருக்கிறார்கள், காந்தி மற்றும் காமராசர் பேர்களை உண்மையாகவே மறவாமல் காங்கிரஸ் கட்சியில், இரண்டு பேர் சேர்ந்தாலும் சரி, இருபது, இருநூறு, இரண்டாயிரம் பேர் ஆனாலும் சரி கொடியைக் கையில் பிடித்துக் கொண்டு பொது இடத்தில் அதற்குரிய அஞ்சலிகளை செய்தபடி...


வருடம் பிறந்தவுடன் தினசரி நாட்காட்டியை எடுத்துக் கொண்டு வீடு வீடாக சென்று கொடுத்து வருகிறார். இவர் பற்றி பதிவு செய்ய வேண்டிய அவசியம் ஏன் எனில், மிதமாக அமைதியாகப் பேசிடும் ஒரு செயல்வீரர் இயல்பில் நல்லவர்.


ஒரு காரியத்தை எடுத்துக் கொண்டால் அதை முடிக்காமல் விடக் கூடாது என்ற வீரியம் மிக்க காந்தியவாதி.இவரது முயற்சி புதுசாம்பள்ளி ஊரில் இடம்பெற்ற உதவி மின்பொறியாளர் அலுவலகம் அமைந்ததில் பெரும் பங்கு இருப்பதை எவருமே மறுப்பதற்கில்லாமல். அதற்காக இவர் அடி கூட வாங்கியது எல்லாம் மறக்க முடியாதது.


சில முறை வார்டு பிரதிநிதியாக மக்களால் தேர்வு பெற்று இருந்திருக்கிறார், இம்முறை வென்றிருந்தால் உதவிப் பெரும் தலைவராகவும் வந்திருக்கலாம் என்ற வாய்ப்பில் இருந்தவர்.நல்லதுக்கும் நல்லவர்களுக்கு எல்லாம் காலம் இல்லை என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 


இவரது துணைவியார் ஆசிரியராக இருந்தவர், எனது நூலை விரும்பி வாங்கிப் படித்து அது  அது பற்றி பேசுவதில் நாட்டமுடையவராக இருந்தவர். உண்மையிலேயே ஒரு நல் ஆசிரியராக ஒரு அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் பணி செய்தார். இப்போது இல்லை. பல ஆண்டுகள் ஓடிவிட்டன. கோவிலுக்கு சென்றபோது விஷப் பாம்பு தீண்டிவிட அரசு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் இறந்து விடுவோம் எனத் தோன்றியதும் காரை நிறுத்தி விட்டு வெளியில் இறங்கி நின்று இவரது(கணவரது) பாதங்களைத் தொட்டு வணங்கி விட்டு உயிர் விட்ட பதி விரதை. ஊரே அது பற்றி வியந்து பேசியது. அது முதல் சில ஆண்டுகள் மனிதர் அடித்து நொறுக்கப் பட்டது போல வீழ்ந்து கிடந்தார்.


அப்போது ஒரு முறை எனை எங்கள் ஊரின் ஆரம்பத்தில் ஊரின் துவக்க முதலே இருந்து  வரும் வடக்கு பார்த்த காளியம்மன் கோவிலில் , நான் அந்தப் பக்கம் போய் வருகையில் அதன் முகம் பார்த்து செல்வது வழக்கம், ஏன் எனில் கண்டவர்கள் பேச்சு, பார்வை எல்லாம் நினைவில் இருந்து போய் ஒரு நல் நினைவு வர அதன் முகத்தைப் பார்த்து செல்வது என்றிருப்பேன், அவர் இதை எல்லாம் ஏன் சார் கும்பிடுகிறீர்கள் என்றெல்லாம் விரக்தியால் பேசினார் அவ்வளவு இயற்கை மேல் கூட பற்றில்லாமல் இருந்தார். காளி என்றால் காற்று. யாதுமாகி நின்றாய் காளி....


அதன் பின் தேறி அனைவர்க்கும் மீண்டும் தமது சேவைகளை  தொடர்ந்து செய்து வாழ்க்கையை செம்மைப் படுத்தி வருகிறார்.


இவருக்கும் எங்கள் குடும்பத்துக்கும் ஒரு நெருக்கம். ஏதாவது ஒன்று என்றால் தேடி வருவார்.அப்படித்தான் ஒரு டிஜிட்டல் சுவர்க்கடிகாரக் கதை(இலக்க முறை நேரம் காட்டி மட்டுமல்ல அதில் வெப்ப நிலை, நாள் , கிழமை பெயர்,காலையா மாலையா என்பது  மாதம், தேதி மணி, நிமிடம், நொடிக் கணக்கு) இப்படி எல்லாம் மின் விளக்கு மூலம் காட்டி வந்தது .அதை எங்களுக்கு அன்பளிப்பு செய்திருந்தார்.அதன் பணி செய்யும் உத்தரவாத அட்டையை ஓராண்டுக்குரியதை எங்கோ வைத்து மறந்து விட்டேன். ஒரு சிறு பல்லி உட் புகுந்து மின் இயக்கத்தில் கோளாறு செய்து இறந்திருக்க‌ அந்தக் கடிகாரம் ஓடாமல் நின்று போக அந்த உத்தரவாத‌ அட்டை கிடைக்கவே இல்லை தேடும் போது.


மனிதர் சலித்துக் கொள்ளாமல், சளைக்காமல் பல முறை அந்த மின் இலக்க சுவர் கடிகாரத்தை எடுத்து சென்று சரி செய்து கொடுத்து இப்போது அவரது நினைவுகளுடன் ஒவ்வொரு நொடியும் நகர எங்கள் வீட்டில் அவரது விடாமுயற்சி பற்றி எடுத்துக் காட்டிக் கொண்டு ஓடிக் கொண்டே இருக்கிறது. அது எங்களுக்கு நினைவில் என்றும் மறக்க முடியாமல்.

 வழக்கம் போல அந்தப் பணி நிறைவு பெற்றது அந்த உத்தரவாத அட்டை கிடைத்து விட்டது வரும் மே மாதம் வரை உத்தரவாத காலம் இருக்கிறது என்பதைக் காட்டிக் கொண்டு.அட அப்போது நமது மாநிலத்துக்கு புது மந்திரிசபை வந்திருக்குமே..மே...மே... (எல்லா ஆடுகளும் மே மே என்றுதான் கத்துகிறது) அதற்கு அந்த ஒரே சொல் தான் தெரிகிறதாம் கத்துமாம். பசு மட்டுமே அம்மா என்று தெளிவாகக் கத்துகிறது.

அடச் சே! இப்படித்தான் எழுதும்போதெல்லாம் கூட எண்ணம் மாற்றம், ஏமாற்றம் எல்லாம் ஏற்பட்டு மடை மாற்றம் நடந்து விடுகிறாது. எங்கே விட்டேன் ஆமாம் மனிதர், புனிதர் எஸ்.என் ராஜன் பற்றி பேசிக் கொண்டிருந்தேன் இல்லையா மறந்து விட்டேன் பாருங்கள்... தொடர்பு அறுந்து விட்டது....

 அவர் பற்றி சுருங்கச் சொல்ல வேண்டுமெனில்... . 


எப்போதும் ஒரு தூய வெண்ணிற கதர் ஆடை மதிப்பு மிக்க தோற்றம், எந்தப் பணியானாலும் அதை சேவையாகக் கருதி விடாமல் செய்து முடிக்கும் ஆற்றல், வயது 70ஐக் கடந்த பின்னும் அவருக்குள் சுடர் விடுவதை பாராட்ட மொழி இல்லை.


மனிதர் நீடூழி வாழ என்றும் வாழ்த்துகளுடனும் நன்றிகளுடனும்


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை




Friday, January 30, 2026

DR.ARAVINDASAMY M.B.B.S.,D.C.H., மரு.அரவிந்தசாமி:கவிஞர் தணிகை

 டாக்டர் அரவிந்தசாமி: கவிஞர் தணிகை



ஒரு நல்ல மருத்துவரைக் கண்டால் என்ன செய்யத் தோன்றும்? வணங்கத் தோன்றும். அவர்கள் கடவுளின் மறு உருவங்களாகவும் பார்க்கிறார்கள் பயன் தெரிந்தார் பயன் பெற்றார். ஏன் எனில் அவர்கள் உயிரை மீட்டுத் தருகிறார்கள், உடல் நலத்தை மீட்டுத் தருகிறார்கள், ஏன் நல் உணர்வை ஏற்படுத்தி விடுகிறார்கள், உலகை இனியதாக மாற்றி விடுகிறார்கள்.


அதிகமாக ஆங்கில மருத்துவம் பக்கம் நான் திரும்புவதேயில்லை அதன் பக்க விளைவு காரணமாக. ஆனால் அத்தியாவசியத்துக்கு செல்லத் தவறியதேயில்லை. ஆங்கில மருத்துவம் பயின்ற (அல்லோபதி) மருத்துவர்கள் எல்லாம் தேவர்கள் போலவும் மற்ற மனிதர்கள் எல்லாம் விலங்குகள் போலவும் அவர்கள் பார்ப்பதை அதிகம் கண்ட எனக்கு இந்த மருத்துவரின்  தீவிரத் தேடல் வித்தியாசமாகப் பட்டது. என்னைத் தேடி வருவார் அரிதானவர்களே.இவர் வசூல் ராஜா எல்லாம் இல்லை உண்மையான(ஆ)சாமி.


ஒரு மருத்துவர் எனை எனது சுவர் எழுத்துகளைப் பார்த்து விட்டு 2 முறை சந்தித்து தியான வகுப்புக்கு வர முயற்சி செய்து முடியாமல் 3 ஆம் முறை எனை சந்தித்து விட்டு தனது கோரிக்கையை வைத்தார்.அவர் ஒரு ஆங்கில இளநிலை மருத்துவம் மற்றும் குழந்தைகள் நலம் படித்து அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவுக்கான மருத்துவராக பணி செய்து வருகிறேன் என்றும் பணி நேரம் தவிர மற்ற நேரங்களிலும் தமது சேவையத் தொடரும் நிலையில் இந்த எழுத்துகளைப் படித்து விட்டு "உங்களிடம் மட்டுமே தியானம் கற்றுக் கொள்ள வேண்டும்" என்ற அவாவை வெளிப்படுத்தினார்.


அப்போது கோவில் பணி காரணமாக உடல் நலம் குன்றி இருந்தது. 2 மாதம் ஆகட்டும் அப்போதுதான் முடியும் என்றேன். அதற்கும் சரி என்றார். காத்திருந்தார். கற்றுக் கொண்டார்.தியானம் என்பதை கற்றுக் கொடுக்க முடியாதது கற்றுக் கொள்வது, என்றும் தியானத்துக்கு முன் தி.மு, தி.பி தியானத்துக்குப் பின் என வாழ்வை பிரித்துக் கொள்ளலாம்.


ஏன் என்னிடம் கேட்டதற்கு: கட உள் என்ற வாக்கியமே காரணம், இதை எழுதியவர் ஞானி என்றார்.கட்டணம் ரூ2000 கட்டினார், குரு காணிக்கை என பழம் பூ என ஒரே ஏக‌ தடபுடல் அன்பின் ஆரவாரம். பிறரிடமிருந்து எதுவும் ஏற்றுக் கொள்ளாதிருத்தல் என்ற தியான கொள்கையில் 5 ஆம் கொள்கை வேறு இடித்தது.


எல்லா தடைகளையும் தாண்டி, இடர்பாடுகளையும் தாண்டி, அவரது பணிச்சுமையையும் தாண்டி மனிதர் சரியாக 10  புகு முக வகுப்புகளுக்கும் வந்து கற்றுக் கொண்டார், இடையில் அவரது மைத்துனர் மணம் வேறு வந்திருந்தது. மகனுக்கு "குருதேவ்" எனப் பெயர் சூட்டி அழகு பார்த்து வருகிறார்.


என்ன சொல்வது மேலும் மேலும் எப்படி சொல்வது எனக்கு கிடைத்த அரிய மனிதர்களுள் இவரும் ஒருவர் இப்போது அந்தியூர் அரசு மருத்துவமனை, அப்போது மேட்டூர் அரசு மருத்துவமனை, துணைவியாரும் மருத்துவர் அவர் அம்மாப் பேட்டையில்  சொந்தமாக ஒரு மருத்துவ ஆலோசனை மையத்தை நடத்தி வருகிறார். இவரை என்ன பாராட்டினாலும் எப்படி பாராட்டினாலும் தகும். சிறந்த தேசப் பற்று.மக்கள் பற்று. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் இருந்து வந்த எனக்கு கிடைத்த‌ ஒரு நல் மணிமுத்து. அலட்டல் இல்லை காரம் இல்லை கசப்பு இல்லை இது ஒரு நல்ல எண்ணம்.மனிதர்  ஒரு மருத்துவர் என்ற பந்தா எல்லாம் இல்லாமல் காட்டிக் கொள்ளாமல் மிக எளிமையாக‌ இருப்பவர். ஆடை அணிகலன் பற்றி எல்லாம் கூட அலட்டிக் கொள்ளாமல்...


அவர் என் குடும்பத்தில் இப்போது ஒருவராக இருக்கிறார். அவர் மூலம் இப்போது கோம்பூரான்காடு ஆரம்ப சுகாதார  மையத்தின் மருத்துவர் திவ்யாவும் எனது மனதில் இடம் கொள்பவராக சேர்ந்திருக்கிறார். அவரிடமும் மக்களுக்கான உண்மையான சேவையாற்றும் நட்பை கவனித்ததால் இந்த வார்த்தை.


மறுபடியும் சில அரிய மனிதர்களுடன்


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


Thursday, January 29, 2026

இருவர்: மருத்துவர் மற்றும் முனைவர் சரவணன்கள்: கவிஞர் தணிகை

 இருவர்: மருத்துவர் மற்றும் முனைவர் சரவணன்கள்: கவிஞர் தணிகை



நீண்ட காலமாகவே ஒரு கரையான் கூட்ட எண்ண அலைகள் எனை அரித்து வருவதை எடுத்தெறிய இந்தப் பதிவு.

1. 2016 முதல் சமூக பல் மேம்பாட்டுத் துறைத் தலைவராக தனியார் கல்லூரியில் பணியாற்றி வரும் பல் மருத்துவர் மற்றும் முனைவர் சரவணன் அவர்களை அறிவேன். அந்தக் கல்லூரியிலிருந்து நான் வெளிவந்து 4 ஆண்டுகள் ஆகி விட்டது.நான் மறவாத நபர்களுள் இவரும் ஒருவர். ஏன் கடந்த இந்த ஆண்டுகளில் எனக்கும் இவருக்கும் எந்த தொடர்பும் கூட இல்லை என்றாலும் இவரைப் பற்றி இந்த அதிகாலை உங்களுக்குள் பகிர நினைக்கிறேன் எனில் அந்தளவு திறம் உள்ள மனிதர். 


எனது பிறந்த நாளை கொண்டாட நினைத்த மனது இவருடையது. நான் அது போன்ற பழக்கங்களை எல்லாம் விரும்புவன் அல்ல என்ற போதும் அந்த நல்ல உள்ளம் அந்தக் கல்லூரியின் கலாச்சார முறைக்குட்பட்டு எனது நாளையும் சிறப்பு செய்ததை நினைத்துப் பார்க்கிறேன் இன்றும்.


ஒரு முறை  எனக்கு மிகக் கடுமையான வேலைப் பளு. முடித்து மதிய உணவு அருந்தி விட்டு அல்லது அதற்கு முன் அவருடைய துறையில் இருந்து அழைப்பு. அவர் நிலை (என்னிலை) உணராமல் ஏதோ பேச, நான் மிகக் கடுமையாக அவரை அன்று மற்றவர் முன்னிலையிலும் பேசி விட்டேன் என்றாலும் கூட பொறுத்துக் கொண்டார் பெரிய மனது.


இருவரும் வேடிக்கையாக  அந்த அந்த கால( தற்கால) அரசியலை ஏட்டிக்குப் போட்டியாக பேசியபடி இன்பம் அடைவோம். அவரை நண்பர் என்று சொல்வதை விட அவர் எனக்கு ஒரு சகோதரராகவே அந்தக் கல்லூரி வாழ்வில் இருந்தார்.அவருக்கு என்றும் எனது அன்பு உரித்தாகும்.


எத்தனையோ முறை இவர் தமது வாகனத்தில் வாய்ப்பு இருக்கும்போதெல்லாம் எனை எங்கு செல்ல வேண்டுமோ அங்கு செல்லத் துணை புரிந்தார்.சொல்லாமல் பிரிவது நட்புக்கழகு என்பார். அப்படித்தான் பிரிந்தேன் அங்கிருந்து ஆனால் நான் எப்போதும் எவரிடமிருந்தும் பிரிவதில்லை.


2. முனைவர் முதல்வர் சரவணன்:

ஒரு தனியார் கலை அறிவியல் கல்லூரியில் பணி புரிகிறார். மிக்க கடின உழைப்பாளி. எனது எழுத்துகளைப் பார்த்து நுகர்ந்து தமது கல்லூரிகளில் பாடம் நடத்தியதாக இவருடைய முகாம்களில் வெளிப்படையாகச் சொல்லி வருவார். நல்ல மனிதர். நல்ல ஆசிரியர். பொறுப்பான அமைதியான அடக்கமான உருவத்துக்கு சொந்தக்காரர்.தற்காலத்தில் பேசி கூட காலம் வெகுவாக ஓடி விட்ட போதிலும் நாங்கள் என்றும் நண்பர்களாகவே இருக்க பல காரணங்கள்  உள்ளன.


தாமறிந்ததை பிறர்க்கு பயனாவதை பகிர்ந்து கொள்ள இவர் என்றுமே தயங்கியதில்லை. நல்ல படிப்பாளி முனைவர் பட்டம் பெற்று வெகு காலம் ஆன பிறகே இவருக்கு முதல்வர் பொறுப்பு கிடைத்தது. நல்ல பொறுப்பான மனிதர் மேலும் மேலும் வளர்வார் வாழ்த்துகள்


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


இருவர்: கிருஷ்ணனும் தணிகையும்: கவிஞர் தணிகை

 இருவர்: கிருஷ்ணனும் தணிகையும்: கவிஞர் தணிகை



முட்டைக்கார கிருஷ்ணனை மேல் மேட்டூரில் தெரியாதார் சிலரே இருக்கக் கூடும். எனக்கும் இந்த நபருக்கும் சுமார் 14 ஆண்டுகள் தொடர்பு இருக்க வாய்ப்பு இருக்கிறது. அது தொடர்கிறது.எப்படி எனில் சகோதரர்கள் போல‌ பங்காளிகள் போல.ஆன்மீகத்தால் அரசியலையும் வென்று எடுக்கும் நோக்கம் அவருடையது. சேவை வழி இதயம் தொடு என்பது எனது.காலம் ஒரு பற் சக்கரத்தின் பற்களாக மேலும் கீழும் பதிந்து சுழற்றியபடியே எங்களையும்  கடத்தி வந்து கொண்டிருக்கிறது.


என்னை விட அவரை எவருமே விவாதப் பொருளுடன் தாக்கி விமர்சித்து இருக்க முடியாது நேருக்கு நேர் நாங்கள் கீரியும் பாம்பும் போல்.மற்றபடி ஒரே நேர்க்கோட்டில் இணையான வழிகளில் பயண‌ம் செய்யும் செயல் கர்ம வான்கள். அவரும் நானும் இரவில் சரியாகத் தூங்காதவரே.ஏன் எனில் இந்த உலகு உய்ய ஏதாவது நம்மால் ஆனதை செய்ய வேண்டுமே என்ற அப்துல் கலாம் போன்றோரின் ஏக்கத்தால்.


இப்போது என்ன இந்த‌ அங்கலாய்ப்பு என்கிறீர்களா? மனிதன் தனியாகவே நின்று எல்லா எதிர்ப்புகளையும் ஊதித் தள்ளி கோம்பூரான் காட்டில் நாங்கள் எல்லாம் சேர்ந்து 2012ல் கட்டி குடமுழுக்கு செய்த‌ அருள் மிகு புவனேஸ்வரி உடனமர் கபாலீஸ்வரர் ஆலயத்துக்கு குடமுழுக்கு நன்னீராட்டு விழாவை வருகிற மாசி 10 தமிழ் அல்லது ஆங்கிலத் தேதி 22.02.2026 ஞாயிறு அன்று நடக்க எடுத்து வரும் அசாத்திய முயற்சி பற்றித் தான். ஈடு இணையிலா உழைப்பு.


மனிதர் எப்படி வேண்டுமானாலும் இரசாயனத் தொழில் நடத்தி வந்த தொழில் அதிபராக இருக்கலாம். ஆனல் இப்போது ஞானம் பெற தமது ஆத்மாவை அலைக்கழித்து வரும் ஒரு நல்ல ஜீவனாக மாற முயற்சித்துக் கொண்டிருக்கிறார். துறவு நிலை கூட.


இதென்ன பெரிய சாதனையா? என்று பலரும் கேட்க வாய்ப்பு இருக்கிறது, செய்து பார்த்தால் தாம் அதில் உள்ள வாய்ப்புகளும், நுட்பங்களும், நுணுக்கங்களும், சிரமங்களும் தெரியும் அனுபவம் மலரும்.


ஒரு தனி ஆளாக நின்று எல்லாப் பொறுப்புக்ளையும் தமது தோளிலேயே தாங்கிக் கொண்டு செய்து வருகிறார்.இந்த குடமுழுக்கு நன்னீராட்டு விழாவிற்குப் பின் செயல் நடவடிக்கை எல்லாம் துறந்து ஓய்வு பெறப் போவதாகவும் சொல்கிறார். ஆனால் இந்த மனித ஆத்மா சுழலும் வரை அந்தக் கோவிலை விட்டுப் பிரிய மாட்டார் , ஏன் உடல் எனும் கருவியை விட்ட பிறகும் கூட அந்தக் கோவிலிலேயே சமாப்தி ஆகி விடுவார் என்றே வெளிப்பாடு எல்லாம் இருக்கிறது.


ஒரு வேளை அப்படித்தான் எல்லாம் புகழ் சொல்லுமோ? அட இந்த மனிதரிடம் நாம் இத்தனை கறாராக உரத்த தொனியில் கருத்து மோதல் செய்திருக்கக் கூடாதோ என்ற எண்ணமெல்லாம் அந்த காலம் கொடுக்குமோ?

சமூக அமைப்பில் எல்லாருக்கும் ஏதோ செய்ய நினைக்கிறார் அது இந்த வழியில் இருக்கிறது.பேர் விளங்கட்டும்.


அனைவரையும் ஒருங்கிணைக்க எல்லா வித்தைகளையும் காட்டி வருகிறார் இந்த கிருஷ்ணனும். எனவே அனைவரும் வந்து புதுசாம்பள்ளி இடுகாட்டருகே உள்ள கோம்பூரான் காட்டில் உள்ள அருள் மிகு கபாலீஸ்வரர் ஆலய குடமுழுக்கு விழாவில் பேதமின்றி கலந்து கொண்டு சிறப்பு செய்வீராக. நன்றி . வணக்கம் .என்றும் அன்புடன் உங்கள் நண்பனாக எனது அழைப்பும். 


இவருடைய செயல்பாடுகளுக்கு மக்கள் ஆதரவும் வெகுவாக இருக்கிறது என்பதை மக்கள் தமது உழைப்பால் கிடைத்த செல்வத்தை நிதியாக, நன்கொடையாக இந்த கோவிலின் வளர்ச்சிக்கும், இந்த நிகழ்வின் வெளிச்சத்துக்கும் வாரி வழங்கி வருவது இவரது வெற்றியையும் இவருக்கான அங்கீகாரத்தையும் மக்களுக்கு கடவுள் பக்தியில் இன்னும் நம்பிக்கையும் நாட்டமும் இருப்பதைக் காட்டுகிறது.


முட்டை முதலா கோழி முதலா என்ற அறிவியல் ஆய்வில் கோழிதான் பரிணாம வளர்ச்சியில் முதலில் என்று தற்கால அறிவியல் விடை சொல்லிய அறிக்கைகள் உள்ளன.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


Saturday, January 17, 2026

பொங்கல் திருவிழா( 2026) கருப்பு ரெட்டியூர் பேச்சுப் போட்டி: கவிஞர் தணிகை

 பொங்கல் திருவிழா கருப்பு ரெட்டியூர் பேச்சுப் போட்டி: கவிஞர் தணிகை

கருப்பு ரெட்டியூர் பொங்கல் திருவிழாவில் பேச்சுப் போட்டி.



எங்கு பார்த்தாலும் பொங்கல் திருவிழா மகத்தாக இந்த ஆண்டு 2026ல். அவரவர் வேட்கைக்கேற்ப. பூக்களுடன் பொங்கல் விழாக்கால பூத்திடும் வாழ்த்துகள் என எமது சுவர் எழுத்துகளில் வித்திட்டிருந்தோம்.


ஒரு உற்ற சகோதரியின் வீட்டில் நாங்கள் இருந்த போது "தமிழ் பசங்க" என்னும் கருப்பு ரெட்டியூர் இளைஞர் கதிரவனிடமிருந்து அழைப்பு. ஒரு உதவி அய்யா, பேச்சுப் போட்டி நடத்துகிறோம் நடத்தித் தர வேண்டும் என.உங்களைக் கேட்காமலேயே அறிவிப்பு செய்து விட்டோம் நீங்கள் தாம் நடத்தி தருவதாக என்றார். உங்களுக்கு உரிமை இருக்கிறது அது பற்றி ஒன்றும் தடையில்லை. நடைப்பயிற்சி முடித்து அப்படியே வந்து விடுகிறேன் எனக்காக எந்த முயற்சியும் வருவதற்கும் போவதற்கும் செய்ய வேண்டாம் என மறுதலித்து விட்டேன். அந்த மண்ணில் தாம் பன்னெடுங்காலமாக மக்கள் தொடர்புடன் நடைப் பயிற்சி செய்து வருகிறோம் அவர்களுக்கு இல்லாமலா?


கரும்பு தின்ன கூலியா? இல்லை . தலைப்பு இல்லாமலேயே சும்மாவே இரண்டு முதல் 3 மணி வரை கூட உரைவீச்சு செய்யத் தெரிந்த நமக்கு அது ஒரு இன்பமான சேவைப் பணி.அனைவர் பாராட்டும் அறிமுகமும் கிடைத்திட்ட வாய்ப்பு.


தமிழ் இளைஞர்கள் என்று சொல்லலாம்...இனி ஏன் தமிழ் பசங்க என்றே சொல்லி வருகிறீர்கள் எனக் கேட்டேன் அவர்கள்தாம் அந்த நிகழ்வை உள்ளூர் ஆளும் கட்சி பிரமுகர் திரு. பன்னீர் செல்வம் அவர்கள் உதவியுடன் செய்து வருவதாகச் சொன்னார்.


முதல் வகுப்பு முதல் ஐந்தாம் நிலை வரை ஒரு பிரிவாகவும், 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை அடுத்த 2 ஆம் பிரிவும், மேனிலைப் பள்ளி முதல் மூன்றாம் பிரிவாகவும் குழந்தை மாணவர்களனைவரையும் பிரித்தோம். 19 பள்ளிப் பிள்ளைகள் கலந்து கொண்டனர். ஊர் முழுதும் திரண்டு ஆதரவு கொடுத்து பாராட்டி மகிழ்ந்தனர்


பரிசளிப்பு விழா மிக இனிதாக நடந்தேறியது. மகிழத் தக்க விழாவாக அது இருந்தது இனி ஆண்டு தவறாமல் அதை நடத்துவதாக நடத்த இருப்பதாக அந்த பதிவு இருந்தது. அடுத்த முறையில் இருந்து தலைப்பு தந்து அதன் வழிச் செல்ல ஆலோசனை வழங்கப் பட்டது.இம்முறை உடனடி ஏற்பாடு என்றதால் கலந்திருந்த குழந்தைகள் அவரவரே தலைப்புகளை முடிவு செய்து பேசினர். காமராசர், திருப்பூர் குமரன், பொங்கல் திருநாள், இராமாயணம், போன்ற தலைப்புகள் பெரும்பாலும் இருந்தன.


ஜித்தேஷ் மாரி என்ற ஒரு சிறுவன் மிகச் சிறப்பாக பேசி அனைவரின் பாராட்டுதலையும் ஒருங்கே பெற்றார். அவர் ஒரு 3 ஆம் வகுப்பு மாணவர் என்றே நினைவுக்கு (இப்போது இந்தப் பதிவு எழுதும் போது நினைக்கிறேன்)


எனது 3 புத்தகம் கூட‌  முன்னணி பரிசு பெற்ற மாணவர்க்கு ஊக்கமளிக்க அளித்தேன். ஊர் பொது மக்கள் நல்ல ஊக்கமளித்தனர். ஒரு சிறு குழந்தை வந்து பொங்கல் வாழ்த்துகள் என்ற தம் மழலையில் அறிவித்து அனைவரையும் மகிழ வைத்தது நெஞ்சுக்கு நிறைவான நிகழ்வை மேலும் நெகிழ வைத்தது மனம் மகிழ வைத்தது.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


Sunday, January 11, 2026

உங்க கனவைச் சொல்லுங்க: கவிஞர் தணிகை

 உங்க கனவைச் சொல்லுங்க: கவிஞர் தணிகை



1. ஊழல் இல்லா இந்திய தேசம்

2. இலஞ்சமில்லா தமிழகம்

3. தரகு இல்லா ஒப்பந்தப் பணிகளும் பொது அதிகார அமைப்புகளின் பணிகளும்

4. குறைந்த பட்சம் புகை மது போதை இல்லா  தமிழகம்

5. அதிகபட்சம்  புகை மது போதை இல்லா உலகு

6.எல்லைகளில்லா உலகமெலாம் ஒரே தேசம் இராணுவமிலா மக்கள் தன்னொழுக்க பாதுகாப்பு. மற்றும் நதி நீர் இணைப்பு தேசிய அளவில் மட்டுமல்ல உலக அளவிலும்

7.நாடுகளின் கூட்டமைப்பின் ஆட்சியில் வரும் உலகெலாம் ஒரே தேசத்தின் தலைவராக நான்(ஹா ஹா ஹா)

8.உலகெலாம் உள்ள அனைத்து உயிர்களுக்கும் உணவு, உடை, உறையுள்,குடிநீர், மருத்துவ(ம்) உத்தரவாதம்

9.வாக்குகள் விகிதாச்சார அடிப்படையில் எல்லாக் கட்சிகளும் பிரதிநிதிகளும் சேர்ந்த ஆட்சி அமைப்பு

10. பணமி(ல்)லா தேர்தல்

11. சரியாக செயல்படாத மக்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைக்கும் உரிமை

12.( குறந்த பட்சம்)1999 முதல் பத்திரப் பதிவுடன் இருக்கும் எனது காமராஜர் நகர் 35/68 A சேலம் கேம்ப் மேட்டூர் நகராட்சியில் (Salem Dt.,)TN, -இருக்கும் இல்லத்திற்கு தமிழக முதல்வர் அவர்களுக்கு 2022ல் மனு செய்தும்,கோட்டாட்சியர் வந்து பார்த்து சென்றும்,மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் எனது இல்லத்திற்கான இது வரை கிடைக்கும் கிடைக்கிறது எனச் சொல்லிக் கொண்டே சென்று கொண்டிருக்கும் பிரச்சனைக்குத் தீர்வாக பட்டா கிடைத்தல்.

இப்போதைக்கு இவைதான் பிரதானமாக முக்கியமாக எனக்கு சொல்லத் தோன்றுகிறது.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


Monday, January 5, 2026

தமிழ் நாடு அரசின் பொங்கல் 2026: கவிஞர் தணிகை

 தமிழ் நாடு அரசின் பொங்கல் 2026: கவிஞர் தணிகை



அரசியல் என்பதும், ஆட்சி என்பதும், கட்சி என்பதும் வாக்கு வங்கியைப் பற்றியதுதான், சுற்றியதுதான்.அதில் பெரிதான விவாதம் நடத்துமளவு  பொருளில்லை இக்காலத்தில். என்றாலும் மக்களுக்குச் செய்வதற்கு மனம் வேண்டும்.


அரசுக்கும் ஆட்சிக்கும் அதிகாரத்துக்கும் மக்களுக்கும் உள்ள இடைவெளியைத் தெரிந்த தலைமைகள் நேரடியாக மக்களுக்கு பலன் பயன் சென்றடையட்டுமே என்ற முடிவில் சில திட்டங்களை செயல்படுத்துகிறார்கள்.


அப்படி வந்ததுதான் காமராசரின் மதிய உணவு, எம்.ஜி.ஆர் செய்த சத்துணவு, அதன் பின் வந்த அனைவரின் எண்ணங்களின் செயல்பாடுகளும். இப்போதைய முதல்வர் ஸ்டாலின் அவர்களும் அதன் நீட்சியாகவே ரொக்கம் ரூபாய் 3000 அத்துடன் சேலை வேட்டி, பொங்கல் பரிசுப் பொருட்களை நியாயவிலைக் கார்டுதாரர்களுக்கு சுமார் 2,23,92,000 +(புள்ளி விவரத்தில் மாற்றம் இருக்கலாம். சொல்லப் பட்டது ஏறத் தாழ ஒரு கணக்கிற்காக மட்டுமே). கொடுக்கும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளார்.


இவர் மேலும் இதே போன்று மகளிர் விடியல் பேருந்து  பயணம், உரிமைத் தொகை, அரசுப் பள்ளியில் படித்த உயர்கல்லூரி மாணவர்க்கான உதவித் தொகை போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருவதும் யாவரும் அறிந்ததே அதன் பட்டியலை அடுக்குகளை அவர் கட்சி சார்ந்த கொள்கை பரப்பு செயலாளர்கள் சொல்வது போல சொல்வது நமது நோக்கமல்ல, அரசின் பொது உறவு அலுவலர்களும் சொல்லிக் கொள்ளட்டும்.


நிறைய பேர்களில்/(with Name and Schemes) நிறையத் திட்டங்கள் ஏழை எளிய மக்கள் நோக்கி....


அய்யோ கடனை சுமத்துகிறார்களே, தேர்தல் தோல்வி பயத்தில் செய்கிறார்களே என்றெல்லாம் பிதற்றுவதும், ஒப்பாரிச் சத்தங்களும் கேட்கவே செய்கின்றன.


எமது தந்தை ஒரு மில் தொழிலாளியாக இருந்தவர், எமது என்பது 8 பேர் பிள்ளைகளின் தந்தை என்பதற்காக.80களில் அல்லது அதற்கு முன் பொங்கல் வைக்க காசு இருக்காது,சூரியன் பொங்கலை வேறு ஞாயிற்றுக் கிழமைகளில் மாற்றி வைத்துக் கொள்வோம், அது சர்க்கரைப் பொங்கல், நாகர் பொங்கல் புற்றுக்கு வைப்பதை கோழி அறுத்து விருப்பப் படி வைத்துக் கொள்வார்கள்,விநாயகர் கோவிலில் பெரும் பொங்கல் அன்று ஒரு வெண்பொங்கல் வைத்து அதற்கு பூசணி அவரை போன்றவற்றை வைத்து ஒரு குழம்பு செய்து நெய்விட்டு பிசைந்து உண்ணச் செய்வார்கள். போகிப் பண்டிகை அன்று மொச்சை, அவரை, என்று வேக வைத்து சங்கராந்தி என்று படைத்து அந்த பயறுகளை வேக வைத்து தாளித்து பிள்ளைகளுக்கு உண்ணக் கொடுப்பார்கள். இது தான் எங்கள் வீட்டு பாரம்பரிய பொங்கல் விழா. காடு கழனி எல்லாம் இல்லாததால்.


அப்போது ஒரு கவிதை எழுதினேன்: அதில் கோவில் பொங்கல் கூட குருக்கள் வீடு செல்ல, குறுந்துண்டு கரும்புக்காக குறு குறுத்து காத்திருக்கிறான் ஒரு சிறுவன், அதில் இனிப்பே தெரியவில்லை, கோந்தாலை என்பதால் ஒரே உவர்ப்பு...என்பதாக...


இந்தக் குடும்பத்தை விட இன்னும் கீழ் தங்கிய குடும்பங்கள் இலட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் அன்று பொங்கலைக் கொண்டாட காசு இல்லாமல் இருந்திருக்கின்றன தமிழ் நாட்டிலும்...


ஆனால் கடந்த பல ஆண்டுகளாக இந்தப் போட்டிகளால்...மக்களுக்கு நன்மை கிடைத்து வருகிறது என்பதை மறுப்பதற்கில்லை.


 முன்பெல்லாம் நியாய விலைக் கடைகளில் போட்டி, பொறாமை, சண்டை , சச்சரவு, காவலர் வந்து ஒழுங்கு செய்தல் இப்படி எல்லாக் கடைகளிலும் ஒரு நியாயமின்மை அரங்கேறிக் கொண்டே இருக்கும்...ஆனால் பல ஆண்டுகளாக‌ எம்மால் கண்கூடாக காணமுடிகிறது சத்தமின்றி குறைவின்றி விநியோகம் நடந்து முடிகிறது...அரசு இத்திட்டத்தை நன்கு செய்து வருகிறது...


எனவே ஒவ்வொரு குடும்பத்திலும் நிகழும் இந்தப் பொங்கல் உண்மையிலேயே தமிழ் நாடு அரசின் பொங்கல் என ஒவ்வொரு வீட்டிலும் நடக்கிறது என்பது உண்மைதான்....


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை