Sunday, February 1, 2026

வேணு வேலாயுதம்: கவிஞர் தணிகை

 வேணு வேலாயுதம்: கவிஞர் தணிகை



என் தம்பி வேலாயுதம்


வாணியம்பாடி, திருப்பத்தூர் பக்கம் இருந்து மின்சார அலுவலகத்தில் பணி புரிய பிட்டர் (பொருத்துநர்) வேணு மாறுதலாகி வந்து பக்கத்து வீடுகளில் பல ஆண்டுகளாக குடி இருந்தார். அரைக்கால் சட்டையுடன் வெற்றிலை பாக்கு போட்டுக் கொண்டு வாயில் குதப்பியபடியே இருக்கும் நெடிய ஒடிசலான சற்று கூன் விழுந்த உருவம்  4 பெண்கள், ஒரு ஆண்.அந்த ஆண் குழந்தைதான் வேலாயுதம்.


குழந்தை முதலே அவனைப் பார்த்திருக்கிறேன். அந்தப் பிள்ளைகளிடம் சென்று எங்கே அம்மா அல்லது அப்பா? என்று கேட்டால்  "டாக்டர்கட்டிக்கிட்ட" போய் இருக்காங்க என்று மழலையில் சரியாகத் தமிழே தெரியாமல் சொல்வார்கள் அதைக் கேட்டு சிரிக்கவே நாங்கள் கேட்டுப் பார்த்தது இன்றும் என் நினைவில்.


தாயகரம் ஆடுவோம் சளைக்காமல்,ஒரு முறை அவர்(வேணு) தவறாக ஆடிவிட்டு நான் சிறுவனாக இருந்தாலும் எப்போதும் நியாயத்தை பறை சாற்றி வருபவன் என்பதால் அதை சுட்டிக் காட்டி அவர் ஏமாற்றி ஆடுகிறார் என்பதை வெளிப்படுத்தி விட்ட  காரணத்தால் ‍ஆதலால் வேணு எனை சிறுவனான என்னை அடித்துவிட்டார், அப்போதிருந்து நான் அந்த ம‌னித‌ரிடம் பேசவேயில்லை அவர் வாழ்நாள் இறுதி வரை. ஆனால் அந்தக் குடும்பம் எமக்கு மிக நெருக்கம்.


அப்போதெல்லாம் பள்ளி இறுதித் தேர்வுக்கு கட்டணம் உண்டு. எங்க வீட்டு பெரிய புடுங்கிக்கு கட்டணம் கட்ட வழி இல்லாமல் என் தாய் அவருடைய  கொழுத்த கொழுந்த‌ நாறிடம் சென்று கடன் கேட்க அப்போது பிள்ளையில்லாத அவரோ  ஊரறிந்த அடகு கடை நடத்தியவர் பெரிய குடும்பத்துக்குத் தாயான அண்ணிக்கு பணம் தர மறுக்கும் காரணத்துடன் "அடகுக்கு ஏதாவது பொருள் இருக்கிறதா? என்று கேட்க வெறுத்துப் போன எங்கள் தாயிடம் ஆறுதலாக வேணு "அம்மா இதுக்கு ஏம்மா கவலைப் படறீங்க? என்னிடம் 3 பவுனில் செயின் இருக்கிறது (அப்போதெல்லாம் தங்கம் பெரிய விலை எல்லாம் இல்லை ஆனால் அதற்குண்டான மதிப்பு இருந்தது) அதை அடகு வைத்து எனக்கும் கொஞ்சம் பணத் தேவை இருக்கிறது இருவரும் வாங்கிக் கொள்ளலாம் பின்னால் மீட்டுக் கொள்ளலாம் " என்று சொல்லி வாங்கிக் கொடுத்து எங்க வீட்டு சிக்கலைத் தீர்த்து முதல் ஏர் முன் ஏர் தேர்வு எழுத வழி காட்டிய சம்பவம் உண்டு.


இதை ஏன் குறிப்பிடுகிறேன் எனில், இயல்பாகவே அவன் இரத்தத்தில் பிறர்க்கு உதவும் குணம் உண்டு. அவன் எனச் சொல்லும் நிலை கடந்து ஊர் உலகுக்கு இப்போது அவர் ஆகிவிட்டார். எனவே நாமும் அவர் என்றே இந்தப் பதிவில் குறிப்பிட்டாக வேண்டும் இனி அந்த வயது வந்து விட்டது...நிறைய பேருக்கு நிறைய உதவிகள் அதை எல்லாம் சொல்ல இந்தப் பதிவு இடம் கொடுக்காது. சுருங்கச் சொல்ல வேண்டி: பரந்த மனது உதவிடும் ஈர நிலம்.


 வேலாயுதத்துக்கு இரண்டு பெண்கள் சிறந்த அறிவு ஆற்றலோடு படித்து பட்டம் பெற்று பணி, படிப்பு என்று பெருமை பெற வைத்துள்ள இவர் இந்த வட்டார தொழிற்சங்க செயலராகவும் இருந்து பல ஆண்டுகளாக அனைவர்க்கும் நல்லுதவி புரிந்திருக்கிறார்.


இப்போதும் பணியில் பல உயர்வுகள் பெற்று சேவையில் தொடர்கிறார் ஒரு கட்சிப் பிரமுகராகவும் விளங்கி வருகிறார்.அனைவரிடமும் பண்புடன் பாசத்துடனும் நடந்து கொள்பவர். வெகு ஜனத் தொடர்பு அதிகம். நான் ஏதாவது விவரம்  வேண்டுமெனில் இவரிடம் எப்போதும் உரிமையுடன் எங்கிருந்தாலும் அழைத்து கேட்பதுண்டு.இப்போது பெரிய பொறுப்பான மின் ஊழியராக இருந்த போதும் எப்போதும் ஒரே மாதிரியான குணத்தை வெளிப்படுத்தும் நல்ல மனிதர் மேலும் நாம் உயர்ந்து விட்டிருக்கிறோம் என்ற வெட்டி பந்தா எப்போதும் இவருக்குள் வருவதே இல்லை. அலட்டிக் கொள்ள மாட்டார்.


பொருளாதாரத்தில் எத்தனை ஏற்றத் தாழ்வுகள் கண்ட போதும் வந்த போதும் மனிதம் மனிதாபிமானம் அதற்கும் மேல் என்று வாழ்ந்து காட்டி வரும்  நல் மனிதத்தின் அடையாளம். பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ இந்த சகோதரனை இந்தப் பதிவின் மூலம் வாழ்த்து சொல்லிப் பெருமைப் படுகிறேன். நன்றி என்றும் உரித்தாகட்டும்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை