Friday, January 24, 2025

sir/madam: post:(வைரஸ்) வைரல் விஷக் கிருமியாகப் பரவுகிறதுஇணையத்தின் வழி: கவிஞர் தணிகை

 (வைரஸ்) வைரல் விஷக் கிருமியாகப் பரவுகிறதுஇணையத்தின் வழி: கவிஞர் தணிகை



1. கேரளத்து பள்ளி மாணவன் செல்பேசியைத் திரும்ப கொடுக்கச் சொல்லி அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியரை கொன்று விடுவதாக மிரட்டுவது


2. ஆந்திரத்து ஹைத்ராபாத்தில்: ஓய்வு பெற்ற இராணுவ வீரர் தமது அன்பு மனைவியை துண்டுகளாக வெட்டி குக்கரில் வைத்து இரண்டு நாளாக வேக வைத்து சாட்சியங்களை அழிக்க முயன்றது, வேகாத எலும்புகளையும் நொறுக்கி எடுத்து அதையும் வேக வைத்து அடையாளமின்றி மூட்டையாக்கி நீர் நிலையில் வீசியதை அவரே வாக்கு மூலமாக தந்தது


3.  வட மாநிலம் ஒன்றில் மகளே தந்தையை மணந்து கொண்டு எனக்கு எவர் என்ன சொன்னாலும் அதைப் பற்றி கவலை ஏதும் இல்லை என்பது மேலும் கேள்விப்பட்ட ஒரு செய்தியில் மகன் தாயை மணந்து கொள்வது என்பதான ஆண் ஆணை ,பெண் பெண்ணை இப்படி மணம் செய்து கொண்டதாக செய்திகள் வருவது...


4. மதம் என்ற பேரில் காட்டுமிராண்டித் தனத்தின் உச்சமாக‌ ஆண்குறியில் தூரியாக எதை எதையோ கட்டி இழுத்து ஆட்டியபடி முழு நிர்வணமாக திருநீறு மேனியில் பூசியபடி பக்தர்கள் தலையில் (ஆண்/பெண்கள்) தூரிகை கொண்டு ஆசி வழங்கு காசு வாங்குவது, அவர்களையும் வணங்கி காணிக்கை வழங்கி ஆசி பெறுவது பால் வேறுபாடின்றி பெண்களும் கூட...


5. + என்ற குறியுடன் எந்த நாடு என்றே அதன் அடையாள கோட் நெம்பர் தெரியாமல் 11 இலக்க எண்களுடன் செல்பேசிக்கு அழைப்பு வந்து மற்றவர்க்கு தொல்லை அளிப்பது...


6. ஈராக் நாட்டில் பெண்களின் திருமண வயதை ஷியா பிரிவுக்கு 9 சன்னி பிரிவுக்கு 13 என்று ஆக்கி உள்ளது...குழந்தை திருமண அங்கீகாரத்தை அரசே ஆதரிப்பது...மதப் புனிதம் என்ற பேரில்...


7. தமிழகத்தின் நாகரீகத்தில்தாம் 5300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பை அறிந்த, பயன்பாட்டிற்கான தொல்லியல் ஆய்வு உலகுக்கு தமிழர்தம் பாரம்பரியத்தை பறை சாற்றுவது...(அப்பாடா ஒரு நேர்மறையான செய்திக்கு வந்து சேர்ந்து விட்டோம்)

8. ட்ரம்ப் பதவியேற்றவுடனேயே அமெரிக்காவை உலகுக்கே தலைமை நாடாக நினைத்து உலகையே ஆட்டிப் படைக்க நினைப்பது போன்ற செய்திகளாக: கிரீன்லாந்தை வாங்குவோம், கனடாவைக் சேர்த்துக் கொள்ள நினைப்பது,ரசியாவை பொருளாதாரத் தடை விதிப்பதாகச் சொல்லி பேச்சு வார்த்தைக்கு அழைப்பது இன்னும் சுனிதா வில்லியம்ஸை  சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து புவிக்கு திரும்ப அழைத்து வராதது...இப்படியாக...


இவை யாவும் புவி நடப்புகளாக மனிதத்துக்கு வரும் செய்திகள் வைரலாக வைரஸாக... இவற்றின் பாதிப்புகளில் இருந்து எல்லம் நீந்தி வெளிவந்து அவரவர் பிள்ளைகளை அவரவர் தலைமையில் அவரவர் தலைமுறைகளை காத்துக் கொள்ள வேண்டியது அந்த அந்த தனி மனிதர்களின் கடமையாகும். இனி சமூக வழியில் பயணம் போனால் விவேகனந்தர் சொல்லியபடி நல்மாந்தரின் மூன்றாம் தலைமுறையில் சந்ததி  வளர வாய்ப்பே இல்லை


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.




Tuesday, January 21, 2025

திருமண வாழ்த்து மடல்

                                         திருமண வாழ்த்து மடல்

     மண மகன்: சு.ஹரிசங்கர் B.E.,              மணமகள்: மு.தீபலட்சுமி B.E,

           மண நாள்: 10.02.2025   திங்கள் கிழமை   S.M திருமண மஹால் 



                        இரு மன இணைப்பிற்கு ஒரு திருமண வாழ்த்து 


மானிடம் என்பதே மகிழ் மகிமை அதில் மண்டிய யாவுமே பெருமை

மங்கை மலர்களே அருமை அவர் அறநெறி ஆபரணமே பொறுமை!


வாழ்க்கை என்பதோர் வசந்தமதில் வஞ்சிக் கொடி படர்வதே சுகந்தம்

சேர்க்கை என்பதோ அனந்தம் அதில் சேர்ந்தே இருப்பதே புனிதம்!


தாம்பத்யம் என்ப‌தோர் சுரங்கம் அதில் சம்பவங்களாய் சதுரங்கம்

தர்மபத்தினியின் அங்கம் அதில் பத்தரை மாற்றுத் தங்கம்

தங்க மகுடத் தலையங்கம்!


நாளெல்லாமே சொர்க்கம் அதை உணர்வதால் மேலிடும் வெட்கம்

இனியிவர் காலையெலாம் அரும்பும் பூக்கள் காதல் காற்றும்

இவர்கள் பக்கம்!


வாலிபம் என்பதே பூவின் முகம் அதை வாடாமல் வளர்ப்பதே

வயதின் இதம்.

சாந்தம் என்பதே தெய்வீகமதை சார்ந்து நிற்பதே மனித நேயம்!


சந்திர ஒளியின் சேகரமிதோ சுந்திரவ‌டிவிற்கோர் சாகரமிவர்

எந்திர வாழ்வில் சாந்தி வர மந்திர வடிவினில் காந்த மணம்!


ஹரிசங்கர் தீபலட்சுமி வாழ்க்கை வண்ண மலர்களின் சேர்க்கை

நேர்ந்த இணைப்போ வெகு நேர்த்தி வாழ்ந்து சொல்வார் சிறப்பு சேர்த்து!

அமுதா சுப்ரமணியின் நல்முத்து நான் பெயர் வைத்த கோப்பெருந்தேவன் 

அமைதிக்கு ஓர் அடையாளம் அதிகம் பேசாத செயல் வீரம் இவர் தம் நாளில் 


பூப்பது திங்கள் புலருமிக்காலை சேர்வது மாலை சேர்ப்பது மணவேளை

முப்பது பத்து நாளை  பின் தள்ளி இப்பூந்தளிர் சாலைகள் பூக்கட்டும்

பைந்தளிர் சோலையை என்ற வாழ்த்து ஓலையைக் கோர்க்கும்


                                      அன்பு நெஞ்சங்கள்

                                       கவிஞர் தணிகை

த.சண்முக வடிவு& T.G.R.S.மணியம் B.E.,M.B.A pursuing

                       




அப்பாவின் திருமண வாழ்த்து பிள்ளைக்கு

                                   


                          அப்பாவின் திருமண வாழ்த்து பிள்ளைக்கு


க.அருண்பாரதி  B.E, L.L.B(Hons)                                 நா.பார்கவி B.B.A, L.L.B(Hons)

திருமண வரவேற்பு இடம்: நாமக்கல் கோஸ்டல் ரெசிடென்சி சிந்து மஹால்‍ 

நாள்: 02.03. 2025 ஞாயிற்றுக் கிழமை நேரம்:மாலை:6மணி முதல் இரவு 9மணி



கருணாநிதி வழி சரஸ்வதி வழி அருண் பாரதி வழி பார்கவி அறிந்தோம்

             ஒலி,மொழி இலா உணர்வலை எம்முள் திகழும் பரவும்


           தகதகவென தகதகவென சுழன்றாடும்  கதிரொளியில்

                            காலைப் பனிப்புல்லும் மலர்ந்தாடும்

           கலகலவென கலகலவென நீரோடும் காற்றும் தீயும்

                           கலந்தொரு சுடர் உருவாகும்!


        கணகணகணவென கணகணவென கனவொடு மணியாடும்

                    காதுகளே கண்களாகிட உயிர் ஒளியாகும்

            பளபளவென பளபளவென முகமாகும் பலப்பல‌

          நிறங்களும் குணங்களும் மணங்களும் உள்ளாடும்!


     பாரெலாம் கவி விளைந்தாடும் இடமெலாம் கலையாகும்

         அருண் பாரதியின் வாழ்வுமதனால் சுவையாகும்

       கல்வியும் செல்வமும் சேர்வதென்பது அரிதாகும்

          கலந்தொருமித்தது அதனாலிங்கு பெரிதாகும்!


          கருத்தொருமித்து வாழ்வதென்பதே நெறியாகும்

      கணக்கிரு பிள்ளைகள் பெறுவதின்றைய அறமாகும்

          அளவறிந்தபடி வாழச் சொல்வதே தமிழாகும்

         அதிகம் போனால் அமிழ்தும் கூட நஞ்சாகும்.


என்று(ம்) வாழ்த்துவது சுடர் தணிகையின் நெஞ்சாகும்


                                         கவிஞர் தணிகை

                  த.சண்முக வடிவுடன் த.க.ரா.சு.மணியம்.