Sunday, December 29, 2024

மறுபடியும் ஒரு பத்து:10 :கவிஞர் தணிகை

 பசியும் கொசுவும் தியானத்துக்குத் தடைகள்



மேடும் பள்ளமும் தான் வாழ்வு


வளிமண்டல நதிகள் புவி வரலாற்றில் புதிது


உண்மை ஒரு நாள் பேசும்,

சத்யம் சுனாமியாகும் நாள் புவி தாங்காது...


 புவிக்கு மேற்கே சூரியன் உதித்து வந்ததாகவும் நிலவின் இயக்கம் அதை

மாற்றியதாகவும் ஒரு விந்தை செய்தி கடந்தேன்...


யமம் ஐந்து ஒரு கை விரல்கள் ஐந்து


விழுங்கிய கோழிக் குஞ்சு உயிருடன் இருக்க‌

விழுங்கியவர் இறந்த செய்தி இந்நாட்டில்...


நிறைய உயிரினங்களைக் காணோம் என்கிறது புவியியல்


நிறைய அழிவின் போக்கு நிகழ்கிறது என்கிறது அறிவியல்


விளையாட்டிலும் உண்பதிலும் கூட‌ வரி முன் வந்து நிற்கிறது.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

Saturday, December 28, 2024

புதுசாம்பள்ளி சுடுகாட்டில் நவீன தகன‌ எரிவாயு மேடை: கவிஞர் தணிகை

 புதுசாம்பள்ளி சுடுகாட்டில் நவீன தகன‌ எரிவாயு மேடை: கவிஞர் தணிகை



கடந்த 21.12.2024 முதல் புதுசாம்பள்ளி சுடுகாட்டில் வீரக்கல் புதூர் பேரூராட்சி சார்பாக நவீன  தகன எரிவாயு  மேடை செயல்பட்டு வருகிறது.


 இந்த சுடுகாட்டில் எல்லா இடங்களும் சமாதிகளால் நிறைந்திருக்க இடப் பற்றாக்குறை நீக்க‌ இதெல்லாம் காலத்தின் கட்டாயம். அவசியத் தேவையும் கூட.


எல்லா சமாதிகளையும்  இடித்து நிரவி விட்டு மறுபடியும் கூட சில பிரபலமான நாடுகளில்  இடங்களில் சமாதி அமைவதாக அமைப்பதாக‌ படித்திருக்கிறேன்.


எனவே மனித வாழ்வில் நிலையாமை அலையாமை கருத்து செறிவுடன் இந்த நவீன தகன எரிவாயு மேடை அமைக்கப் பட்டு செயல்பட்டு வருவது வரவேற்கத் தக்கதாகவே கருதுகிறேன்.அரசுக்கு நன்றி செலுத்தலாம். அதன் கட்டணம் மற்றும் விவரங்களுக்கு:

தொடர்பு எண்கள்

98945 99297

82488 08824

என்ற எண்களும் விளம்பரப் பதாகைக‌ள் மூலம் தெரிவிக்கப் பட்டுள்ளன.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

P.S:

முன்பெல்லாம் இதற்காக நவீன முறைக்காக‌ இந்தப் பகுதியில் இருந்து கீழ் மேட்டூருக்கு சுமார் 10 கி.மீ தொலைவுக்கு சென்று இந்த தேவையை நிறைவு செய்ய வேண்டி இருந்தது. இப்போது இங்கேயே செயல்பட ஆரம்பித்துள்ளதை அறிந்து கொள்ள வேண்டுகிறோம்.

இது பொருட் செலவையும் குறைக்கும் என்றே நம்புகிறேன்


Friday, December 27, 2024

2024 ஆம் ஆண்டின் கடைசிப் பதிவுடன் உயிருடன் இருக்கிறேன்: கவிஞர் தணிகை

 2024 ஆம் ஆண்டின் கடைசிப் பதிவுடன் உயிருடன் இருக்கிறேன்: கவிஞர் தணிகை



...எல்லாந்தான் படிச்சீங்க என்ன பண்ணிக் கிழிச்சீங்க...பட்டுக் கோட்டை. இப்ப யாரும் படிப்பதாகக் கூட காணோம்.நண்பர் ஒருவர் தமிழ் எழுதத் தெரியா அளவில் சிறுத்து வருவதாகவும் அதற்கு பணிச் சேவை செய்து வளர்க்க வேண்டிய நிலையும் உள்ளது என்கிறார்.அவர் முயற்சி வெல்லட்டும்


கடந்த சில மாதங்களுக்கும் முன்  3 மாதம் கபாலீஸ்வரர் கோவிலில் பணிச் சேவை புரிந்தேன். மாதம் ரூபாய் பத்தாயிரம் ஊதியத்துடன் தாம். பின் எப்படி பணிச்சேவை என்கிறீர்...அதைப் பற்றி சுருக்கமான இந்தப் பதிவு விளக்காது.


சாவின் விளிம்பை வெள்ளம் வழியாக,பாம்பின் வழியாக , நோய்களின் வழியாக பல முறை தொட்டு வந்திருக்கிறேன் இந்த முறை கபாலீஸ்வரர் கோவில் பணிச்சேவை மூலம்.


எனைப் பற்றி அறிந்தார்க்கு இந்தக் கோவில் உருவாக 18 மாத ஊதியமற்ற எனது சேவை எவ்வாறு 2014 செப்டம்பர் 08ல் குடமுழுக்கு வரை ஒருங்கிணைப்பாளராக , பொருளாளராக பயன்பட்டது அதன் பின் கணக்கு சமர்ப்பிக்கப் பட்ட பின் வினாயகா மிஷன் பல் மருத்துவக் கல்லூரிக்கு மக்கள் தொடர்பு அலுவலராக 6 ஆண்டு பணி புரிந்து அதன் பின் 60 வயது நிறைவுக்குப் பின் வெளி வந்தது இதெல்லாம் தெரியும்.


மீண்டும் கோம்பூரான் காட்டில் உள்ள இந்தக் கோவிலின் பிரதான பங்கெடுப்பாளர் எனை அழைத்து தமது நிலையை விளக்கி உதவி கோர, நானும் இணங்க...


முதல் மாதம் சென்றவுடனேயே காலை 12 மணி வரை கோவில் நடை திறந்திருக்க வேண்டும் மாலை இரவு 08 மணி வரை இருக்க வேண்டும் என்ற உத்தரவை அமல் படுத்தியபோதே...அப்போதிருந்த ஒரு அர்ச்சகர் ஜகா வாங்கி விட்டார். கல்தா...


உடனே  அர்ச்சகர் தமிழ் முறை ஓதுவார் பயிற்சி பெற்ற சிவனடியார்  இராமசாமி ஒரு மாதம் அர்ச்சகராக பணி புரிய நமது பிரதான பங்கெடுப்பாளர் அவரை தினமும் விடியல் காலம் 04 மணிக்கு அதிகாலை எழுப்பி தொந்தரவு தர அவரும் குடும்ப சூழல் காரணமாக பணியை புறந்தள்ளி விட்டார்.


இதன் காரணமாக எல்லாப் பணியும் குருவித் தலையின் பனங்காயாக...என்னிடம்.உடன் பணிக்கு ஆலயத் தூய்மைக்காக இரு பெண்டிரை நியமித்தேன். கோவில் மூலவர் கர்ப்பக் குடில் முதல் வெளி வாசல் கோலம் வரை தூய்மையாக மாறியது அதன் இடையே சொல்ல வேண்டாத நிறைய முரண்களை  வெளித் தள்ள வேண்டியதிருந்தது.


எமது பிரதான பங்கெடுப்பாளர் போடும் நிபந்தனைக்கு தற்கால எந்த அர்ச்சகருமே இணைந்து வரவில்லை.ஜலகண்டாபுரம், நங்கவள்ளி, மேச்சேரி இப்படி பல பகுதிகளில் இருந்தும் வந்த எந்த அர்ச்சகரும் பணியை ஏற்கவில்லை.


கோவில் பொறுப்பை என்னிடம் ஒப்படைப்பதாகச் சொல்லி அதை முழுமையாக விடமுடியாத பிரதான பங்கெடுப்பாளர் அவ்வப்போது அவரின் நிர்பந்தங்களையும் நிபந்தனைகளுடன் என்னிடம் திணிக்க முற்பட்டார். அவர் விருப்பத்திற்கேற்ப மட்டுமே அனைவராலும் குழுவாக அணியாக தொண்டுள்ளங்களுடன் கட்டப் பட்ட கோவில் நிர்வாகம் நடப்பதாகவே செல்வதாகவே இருந்தது, அதை அவர் வேறு எவரிடமுமே எந்நாளுமே அவர் இருக்கும் வரை கொடுக்கவும் மாட்டார் எனவும் தெரிந்ததே.


கோவில் நிரவாகம், பூஜை, அத்துடன் இணைந்த அன்னதானக் கூடம் எனச் சொல்லப் படும் சிறு மண்டப நிர்வாகம் யாவும் பணிப் பட்டியலில் மேலும் பூக்கள் மரங்கள் நீர் செலுத்தல் உட்பட, நீர் விநியோகம் யாவும் பல நிலைகளுடன், தோட்டம், கோவில், மண்டபம் ஏன் சொல்லப் போனால் அவரின் கம்பெனி வரை என்று கூட சொல்லலாம்.


எனக்கு எப்படி ஏன் உடல் நிலை கெட ஆரம்பித்தது என்பதே தெரியாமல், 1.நடைப்பயிற்சி விடப்பட்டது, 2. சாப்பிடும் நேரம் முறையில்லாமல் போனது, விடிய‌ற்காலம் 3 மணிக்கே எழுந்து 4 மணி அளவில் சென்று சுமார் 15 திருமணங்களை நடத்தி வைத்தது, இப்படி எல்லாம் சேர்ந்து செரிமானமின்றி வயிற்றுப் போக்கு 10 நாட்களில் முதல் 3 நாட்கள் அப்புறம் தேறி 3 நாட்கள் அதன் பின் மீண்டும் 4 நாட்கள் என 10 நாளில்  7 நாள் உணவின்றி நீரை விட மோசமான திரவ நிலையில் வயிறோட்டம்.


மருத்துவம் ஆங்கிலம், கேட்க வில்லை, சப்போட்டாப் பிஞ்சுகள் அரைத்து தயிரில் அதுவும் கேட்க வில்லை. எதுவும் கேட்கவில்லை. வாய், வயிறு, நாக்கு யாவும் புண்...உள்ளே குடல் புண் வேறு இன்னும் பல நிலைகளில் எனக்கு பல நோய்கள் உண்டு என்பதை எனை அறிந்தார் அறிவார்.


நண்பர் சொல்வார் , ஏன் நீங்கள் கோவில் தலத்திலேயே வந்து தியானம் செய்யுங்களேன், யார் வருகிறார் என விழித்துப் பார்த்துக் கொண்டு,கோவில் உள்ளேயே சுற்றுப் பிரஹாரத்திலேயே நடைப் பயிற்சி செய்யலாமே என்றதும்... (என்று) அவர் கடந்த 9 ஆண்டுகளாக பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றி வழிபடுவதால் 3 மணியில் அதிகாலையில் இருந்தே கோவில் திறந்திருக்க வேண்டும் என்பார். 


நீங்கள் 9 ஆண்டு பழக்கத்தை விட மறுப்பதை நான் ஏற்கிறேன். அடியேன் 41 ஆண்டாக தியானம் செய்வதை எப்படி விழித்து விழித்துப் பார்த்துக் கொண்டு தியானம் செய்ய கோவில் வளாகத்துக்கே வர வேண்டும் என்கிறீர் எனக் கேட்டேன். எல்லாம் சுயநலம்.


மொத்தத்தில் சுருக்கமாக: அதுவும் ஒரு அடைமழைக்காலம் கையில் இருந்த பல ஆயிரங்களை கொண்டு சென்று அதே மனிதரிடம்  டேபிள் மீது கணக்குடன் வைத்து விட்டு திரும்பினேன், அவரின் கருத்துக்கு மாறாக.

அன்றுடன் உடல் நலம் காண ஆரம்பித்தது. வாந்தி என்றால் பெரும் வாந்தி அத்துடன் விடிய ஆரம்பித்தது.நண்பர் சொன்னார், பயணப்படும் பெருமாள் கோவிலில் உள்ள அவர் நண்பர் சொன்னதாக, தூய நல்லெண்ணெய், நெய் மட்டுமே ஏற்ற வேண்டும், கர்ப்பக் குடிலில். அதைத் தவிர வேறு உபயோகம் உட‌லுக்குத் தீங்கே...எண்ணெய், கற்பூர தீபம், ஊது வத்திகள் எல்லாம் சேர்ந்துதான் எனக்கு வினை விதைத்தன,மேலும் நண்பர் அடித்த பூச்சிக் கொல்லி மருந்து....உலகுக்கும் தீங்கே!


அன்று முதல் சுமார் 3 மாத காலம் நல்ல சோறு தின்ன வேண்டியதிருந்தது. தினமும் சுரைக்காய் இரசம் காய் என நீர்ச்சத்து வேண்டி.. மீண்டும் உடல் நலம் ஓரளவு பெற.

இன்னும் அதன் பாதிப்புகள் விலகியதாகக் காணோம்...பசி ஒரே பசி நேரம் வரும் போது உடலை குடலைக் கிள்ளும் சுருட்டும், வயிற்றில் புரட்டும் பசி...


அட நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன்...


உடல் வளர்த்தோம் உயிர் வளர்த்தோமே...திருமூலர்


உள்ளம் பெருங்கோவில்...ஊனுடம்பு ஆலயம்...

வள்ளல் பிரானார்க்கு வாயதுவே கோபுர வாசல்

தெள்ளத் தெளிந்தார்க்கு சீவனே சிவலிங்கம்

கள்ளப் புலனைந்தும் காளா மணி விளக்கே!...திருமூலர்


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


வாசி: உள் செல்லும் காற்று கற்று...சுவாசம்...வாசிவாசிவாசி...





Monday, December 16, 2024

மேட்டூரில் திப்பு சுல்தான் கோட்டை கார்த்திகை தீபம்: கவிஞர் தணிகை

 மேட்டூரில் கார்த்திகை தீபம்: கவிஞர் தணிகை



கார் திகைவது, மேகம் கலைவது இது முதல் என்பதெல்லாம் காலம் மாறிப் போச்சு. இயற்கை மாறுதல்கள் மட்டுமே நிரந்தரம் என்று உரைப்பதே வாடிக்கையாய்ப் போச்சு.


மழை, புயல்  வளிமண்டல நதிகள், பனிக்கட்டி கரைதல், உருகுதல், பனி மழை யாவும் காலம் மாறி மாறி உயிர்களை வாட்டிக் கொண்டிருக்க வழக்கம் போல அல்ல புதிதான கார்த்திகை தீபம்  இந்த ஆண்டு மேட்டூரில் அது நிறைய பேருக்குத் தெரியாது எனவே இந்தப் பதிவு அவசியமாகிறது சரித்திரமும் ஆகும் இது ஒவ்வொரு ஆண்டும் தொடரும் போது , தொடருமானால்...


எந்தப் புண்ணியவான்களோ, காவிரி ஆற்றங்கரையில் உள்ள தேசாய், நகர் பகுதி அல்லது வைத்தீஸ்வரா பள்ளிக்கு பின் புறமுள்ள தேங்கல்வாரை திப்பு சுல்தான் கோட்டை , அது மிகவும் சரிசம விகித முக்கோணமாக உச்சியுடன் காட்சி அளிக்கும் குன்று அது.மேட்டூரின் மிக உயர்ந்த பகுத் உச்சி அதுவே.அதன் மேல் கார்த்திகை தீபம் ஏற்றி பட்டாசையும் வெடித்துக் கொண்டாடினர். அதை வழக்கம் போல நடைப் பயிற்சியில் இருந்தபோதே சில பல கிலோமீட்டர் தொலைவில் இருந்தபோதும் நானும் நண்பர் ஒருவரும் கண்டு மகிழ்ந்தோம்.


சில ஆண்டுகளுக்கும் முன் இந்தச் செயலை முன்னிறுத்தி ஒரு பதிவை ஒரு நாயகன் முயன்று பார்த்து செய்ய முடியாமையை தன்னைப் பற்ற வைத்து தீபமாக எரிந்து அந்த மலைக் குன்றின் மேல் இருந்து விழுவதாக எழுதிப் பதிவிட்டிருந்தேன் ஒரு இலக்கிய நண்பர்கூட அந்தப் பதிவு சிறப்பாக வந்திருந்ததை பாராட்டி இருந்தார்.


மேலும் அந்த திப்பு சுல்தான் கோட்டை மேட்டூர் நீர்த் தேக்கத்திலிருந்து படிகள் உள் ஓடி மைசூருக்கு செல்வதாக எல்லாம் செய்திகள் உண்டு. அங்கே ஒரு கோட்டைக் கொத்தளத்துக்கு உண்டான எல்லா தகுதிகளும் இருந்ததை சிலமுறை நாங்கள் சென்று கவனித்தது உண்டு. கவாத்து திடல் உட்பட....


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

இந்தியன் 2 உள் தொடு வர்மம்: கவிஞர் தணிகை

 இந்தியன் 2 உள் தொடு வர்மம்: கவிஞர் தணிகை



உடலை முற்றிலும் அறிந்தால் உலகையே அறிந்ததாகி விடும்.அந்த அடிப்படையில் அந்நியன் போல எவருக்கு எந்த தண்டனை என்று இந்தியன் சேனாபதி தேர்வு செய்து உடல் மூலம் கொடுப்பதை உறுதியாகச் சொல்லி உள்ள படம்.


இரத்தினச் சுருக்கமாக: அநிருத்துக்கு பதிலாக ஏ.ஆர்.ஆர் , இன்னும் சிறிது கூடுதல் கவனம் மேக் அப்பில், ஒருங்கிணைப்பில் இயக்கத்தில் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்க வேண்டிய படம். 


சமூக ஊடகங்கள், ஊடகங்கள் நல்லதை, தீயதாகவும், தீயதை நல்லதாகவும், உண்மையை பொய்களாகவும், பொய்யை உண்மைகளாகவும் மாற்றுகின்ற காலத்தில் நாம்.புஷ்பா மரக் கடத்தல்காரன் கதையை 1000 கோடிக்கும் மேல் சில நாட்களுக்குள் பணம் கொடுத்து பார்த்துக் கொடுக்கும் கூட்டம் இந்தியன் 2 பாகத்தை புறம் தள்ளியதை கவனிக்க முடிகிறது.


அனைவரும் தலைவர்கள் வருவதை நல்ல தலைமைகள் வேண்டுமென்பதை நம்மை பாதிக்காமல் வரவேண்டும் என எதிர்பார்க்கிறோம்.இது குடும்பத்தையும் சீர்படுத்தினால்தாம் உலகு உய்யும் என அடி நரம்பை தொட்டு இழுத்து சரி செய்ய முயற்சித்த படம் எனவே தாம் இவ்வளவு பெரிய இடி இந்த படத்துக்கும்.


அடியேன் எந்திரன் படத்தை விமர்சித்து அந்தப் படம் வந்த புதிதில் எழுதிய போது முதல் அரை மணிக்குள்ளாகவே உலகெங்கும் இரண்டாயிரம் வாசகர்களுக்கும் மேல் அந்தப் பதிவை படித்தார்கள். அப்படி இருந்த எனது சமூக ஊடகப் பதிவைக் கூட நாளடைவில் மிகவும் சுருக்கிக் கொண்டது இவை யாவும் பயனற்றவையாகவே போய்விடுகிறது என்பதால்தாம்.


இலஞ்சம்,போதை, மது இவை யாவும் சர்வ தேசியம்.இவை பற்றி மதங்கள் என்ன சொன்னாலும் எவரும் கேட்க மாட்டார்கள் ஏன் எனில் வசதிக்கேற்ப சுயநலத்துக்கேற்ப அனைத்தையும் இவர்கள்/ அல்லது மக்கள் அனைத்தையும் மாற்றிக் கொண்டு வாழ்கிறார்கள்.


ஒவ்வொருவரும் நெஞ்சைத் தொட்டுப் பார்த்துக் கொள்ளட்டும்,அப்படிப் பார்க்கும் போது பொது நல வாதி, வெகுஜனவிரோதி என்ற சமத்துவ கம்யூனிசப் பார்வை குடும்பத்தைக் கூட சீர்குலைத்து ஒவ்வொரு தனி மனிதரும் சமூக மேம்பாட்டின் அங்கமே அனைவருமே சேர்ந்து தூக்கிப் பிடித்தால் தாம் சமூகம் மேம்படும் அதில் ஒவ்வொரு தனி மனிதரின் பங்கும் அவசியமானது என்று வலீயுறுத்திய ஒரே காரணத்தை எவரும் தாங்கிக் கொள்ள முடியாததே உண்மை சுடும் என்பதை, மற்றும் மூன்றும் விரல்கள் அவரவர்களை நோக்கியே சுட்டுகிறது என்ற ஒரே காரணத்தால் மட்டுமே இந்தப் படம் வணிகமுறையில் தோல்வியுற்று பெட்டிக்கு சென்று விட்டது என்பது என்னுடைய அசைக்க முடியாத கருத்து


எச்சார்புமின்றி பார்த்தால் இந்தப் படம் மிகவும் மனசாட்சியை உலுக்கும், சுயநலத்தை விட பொதுநலமே உலகை உருவாக்கும் என்ற மாமனிதர்கள் கொண்ட கருத்தே சிறந்தது எனச் சொல்லும் படம்.அதற்காக குடும்பத்தைக் கூட சுதந்திரப் போராட்டத்தில் இழந்தது போல இழக்க வேண்டி இருக்கும் அதையும் தாக்குப் பிடித்தால் மட்டுமே போராட இயலும் என்பதை நன்றாக சொல்லி இருப்பதாக படம் தேவையானது நன்றாக இருக்கிறது என்பதையே சொல்லி விடைபெறுகிறேன்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை



Thursday, December 12, 2024

கனவு மெய்ப்படும்: கவிஞர் தணிகை

 கனவு மெய்ப்படும்: கவிஞர் தணிகை



1. தேர்தல் : மக்களுக்கு அறுவடை

              வென்றார்க்கு மகசூல்


2. உண்மையில்லா இடத்தில் ஒளி இல்லை


3. கனவு மெய்ப்படும் பூ மலர்தல் போல‌


4.பல இழப்புகளுக்குப் பின் தான் வெற்றி


5. விருப்பம்: நிரப்ப முடியாத் தீ


6. ஒருவரின் விருந்து மற்றொருவரின் நஞ்சு


 7. பிறப்பும் இறப்பும் தெளிவில்லை

    வாழ்வே தெளிவுடையது இதில் துயரம் ஏன்?


8. பருவங்கள் மாறுகின்றன புதிய முகங்களுடன்


9. புத்திசாலிகள் உரிய இடத்தில் தான்

   குப்பைகளை சேர்ப்பார்கள்


10. உன் வீடு, வீதி, ஊர், நாடு, பூமி, காற்றுடன் வான்

    யாவும் சுத்தமாக இருப்பது உன் கையில்.


     மறுபடியும் பூக்கும் வரை

       கவிஞர் தணிகை


பி.கு: முன்னோரின் முன் மொழிகளும்

        தணிகையின் மொழிகளும்... தொகுப்பில் இருந்து.

Wednesday, December 11, 2024

திரு ஆசான் ஜி : கவிஞர் தணிகை

 திரு ஆசான் ஜி : கவிஞர் தணிகை



ஆசான் ஜி என்னும் இந்த மக்கள் வழிகாட்டியின் சில உரைகளை அடியேன் கேட்டிருக்கிறேன். மிகவும் துணிச்சலாக விடயங்களை அலசி பிழிந்து காய வைத்து தெளிவு படுத்தி விடுகிறார். மேலும் கேட்பார்க்கு அல்லது இவரை நாடி வருவார்க்கு நல் நம்பிக்கையை அளிக்கும் விதமாக தெம்பைத் தரும் சொற்பொழிவை வழங்குகிறார். வாழ்க.


சில சந்தேகங்கள்: கோள்களை விட மாந்தர் பெரியவரே என்றும் சந்திரனில் மனித முயற்சியில் சந்திராயனை இறக்கி விட்டதும் உண்மைதானே அது தலையில் இறங்கியதா, உடலில் இறங்கியதா, அல்லது தொடையில் இறங்கியதா என்றெல்லாம் கேட்க முடியுமா? என்கிறார்.


 தேகம் உடல் என்னும் சந்திரன் என்று சொல்லப் படுவதால்.


சோதிடக் கலையில் தேகம்  உடல்:சந்திரன்...தாய், ஆன்மா அல்லது உயிர், சூரியன் தந்தை என்கிறார்கள்.


இவருடன் பல கருத்துகளில் ஒத்த தன்மை ஏற்படுகிறது.கடவுள் உலகை நம்மை படைத்ததாகத்தான் இவரும் சொல்கிறார். (அடியேன்  இவரது உரையை புரிந்த வரையில்)


ஆனால் சோதிடக் கலை இல்லை அல்லது தேவை இல்லை, அல்லது பொய் என்கிறாரா? 


வாஸ்து பொய் என்று சொல்லி இருக்கிறார். புவியின் அமைப்பை உருவை பார்க்கும் போது அவர் கூறுவது சரிதான் என முடிவுக்கு வர முடிகிறது.


அல்லது நாட்டை ஒரு சமத்துவ சமுதாயம் சார்ந்த ஆட்சி முறைக்குள் கொண்டு வரும் போது எந்த வாஸ்தை பார்க்க முடியும் நிலம் யாவும் அரசின் பால் பொதுவுடமை என்னும் போது? அல்லது வாடகைக்கு இருப்பார் அல்லது வீடே இல்லாதார் எந்த வாஸ்தை பார்க்க முடியும்? எல்லாவற்றிலும் வியாபாரக் கலப்பு. 


பூமியே ஒரு உருண்டைதானே அதுவும் சிறிது சாய்ந்து சுழன்றபடி ஓடிக் கொண்டிருப்பதுதானே, அதிலும் அத்துடன் நாம் விண்வெளி யாவற்றையும் சற்று உற்று நோக்க கற்றுக் கொண்டால்...திசை என்பது கூட ஒரு கற்பனைதானே....சூரியோதயம், மறைவு என்பதெல்லாம் கூட ஒரு காட்சி வடிவம் தானே...ஆனால் அதனால் பாதிப்புகள் எண்ணிறந்தன....


நிலா ஒரு துணைக்கோள்தான், ஆனால் அது தோற்ற மாறுதல் புவியில் இருப்பார்க்கு ஏற்படுத்தும் போது கடலில் ஓத ஏற்றம், ஓத இறக்கம், கடலில், அலைகளில் எல்லாம் மாற்றம் நிகழ்கிறது என்பதை அறிவியலும் சொல்கிறதே...மேலும் அவ்வப்போது இந்த மாற்றங்கள் யாவும் உயிர்களில் சிறப்பாக அமாவாசை, பௌர்ணமி போன்றவை நெருங்குகையில் மனித உயிரிகளிடம் உடல் மாற்றங்கள் நோய்கள், மரணங்கள் கூட நிகழ்வதாக மருத்துவம் கூட தெரிவிக்கிறதே...இதில் எல்லாம் தெளிவு தேவை அல்லவா? பாதிப்புகள் இருப்பதை ஏற்படுவதை, நடப்பதை முற்றிலும் மறுக்கவும் முடியவில்லையே!


மனித உடலும் ஒரு சிறு கூறு...இயற்கையில். எனவே இயற்கையின் கால நிலை நிகழ்வுகள் யாவும் இந்த உடலையும் பாதிக்கிறதே வெயில், குளிர், மழை போன்ற எல்லா இயற்கை பாதிப்புகளில் இருந்தும், அதில் இருந்தெல்லாம் எப்படி விலகுவது?  விலக முடியாதே....கோள்களின் ஆட்சி அந்த வாழ்வின் ஆயுளில் இருப்பதாக சித்தர்கள் கூட மொழிந்ததாக இருக்கிறதே...அதே நேரம் சிலரை கோளென்ன செய்யும் நாளென்ன செய்யும் என்பதையும் சொல்கிறார்களே?


பிரபஞ்ச வெளி, அண்டப் பெரு வெளி ஆகியவை பற்றி அறியும் போது கோள்கள் இவர் கருதுவது போல அறிவியல்  சொல்வது போல சிறு பிசிறுகள் தாம்... ஆனால் அந்தப் பிசிறுகள் பிறந்த சிசு முதல் இறக்கும் மனிதம் வரை பாதிக்கிறதா இல்லையா அதில் தெளிவு வேண்டும்.


புவி நில நடுக்கம், எரிமலைச் சீற்றம், சுனாமி, பிரபஞ்ச வெளி  வளி மண்டல நதிகள் இறக்கம்  போன்ற இயற்கை மாற்றங்கள் சீற்றங்கள் எல்லா உயிர்களையும் அழிப்பது போல மனித உயிரையும் அழிக்கும் போது சோதிடக் கலை அங்கு பயனற்றதாகவே போய்விடுகிறதே...


எம்.ஜி.ஆர் கை ரேகை பார்த்த பானுமதியின் கூற்று,சிவகுமாரின் தந்தையின் சோதிடக் கணிப்பு, (பிரபலங்களைச் சொன்னால் புரியும் என்பதற்காகவே குறிப்பிட்டுள்ளேன்)எல்லாம் பலித்து விட்டதே...



இப்படி எல்லாம் இருக்க மார்க்ஸ், லெனின், மாவோ, ஸ்டாலின்,பிடல், ஹோசிமின்,  போன்றோர் எப்படி மக்கள் சக்தியை மகத்துவமாக மாற்ற முடிந்தது...நல்லகண்ணுவால் அல்லது நம்மால் ஏன் அந்த அளவு முடியவில்லை?


நிறைய கேள்விகள், புதிர்கள், ஆர்வமுள்ளோர் அறிவு சார்புடன் கலந்துரையாடலாம்


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


பி.கு:  முகூர்த்த நேரம்,நல்ல நேரம், கெட்ட நேரம், இராகு, குளிகை, எமகண்டம் கரிநாள், சூலம் வடக்கு தெற்கு இப்படியே பஞ்ச அங்க வழிகாட்டுதல், சகுனங்கள், பல்லி சொல்லல், மேல் விழுதல்...இன்ன பிற‌


Tuesday, December 10, 2024

நிற்காத இயக்கம்:கவிஞர் தணிகை

 புயல் பறவை



இறகசைக்கும் புயல்பறவை

காற்று(ம்) கலங்கி விடும்


கடல்கள் பொங்கி எழும்

அலைகள் அழும்


புயலின் பாடலுக்கு

தாவரங்கள் தலையாட்டும்

பூ மரங்கள் மலர் சொரியும்

கிளை ஒடிந்து தாளமிடும்

அடி பெயர்ந்து தண்டனிடும்


திகட்டும் நீர் நிலையும்

தரை கசிந்து பாய் நனையும்

தாழ்வாரம் நெக்குவிடும்


விளக்கணைந்து ஓலமிடும்

ஈ....ஈரப்ப்சை பற்காட்டும்

குளிர் சுரந்து கண் சிமிட்டி

உடல் சுருட்டும்

நிழல் விழாது

ஆனாலும் 


நிற்காது திருமணங்கள்


போர்வை கனம் தாங்காது

பூமி கொஞ்சமும் தாங்காது தூங்காது


கால் பாவும் இடமெல்லாம்

கல் பதிந்த இடமெல்லாம்

கனத்த எச்ச(ரிக்கை)ப் பதிவுகள்


சோதித்து 

நிலையாமை சேதி சொன்ன 

புயல் பறவை குரல் அடங்கி

கூடு திரும்ப‌

சி(ன்)னங்களுடன் கப்பல்கள் சுவாசிக்கும்


ஓடங்கள் தாய்வீடு திரும்பி விடும்


புழுங்கும் 

திரிசங்கு நிலைமாறி மன‌ம் புழுங்கும்

நுனி வேர்க்கும் மூக்கு

தியேட்டர்கள் முதுகொடியும்

ஹோட்ட‌ல்கள் வாய் கிழியும்


உயிரின‌ங்கள்

ஈனங்கள்....

தினவு பெறும்

தீ தாக தேடல் எழும்


     1990களில் இடம் பெற்ற மறுபடியும் பூக்கும் கவிதைத் தொகுப்பிலிருந்து


மறுபடியும் பூக்கும் வரை

 கவிஞர் தணிகை